எனக்கென்ன மனக்கவலை! என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை?!


"இதுவும் கடந்து போகும்."

எப்போது?

ஹரிமோகனுடைய கனவைப் படிக்க ஆரம்பித்தபோது, ஏதோ என்னுடைய சொந்தக் கதையைப் படிக்கிற மாதிரியே இருந்தது. படித்து முடித்த போது, இந்த அனுபவம், இந்தக் கனவு என்னுடையதாக இருக்கக் கூடாதா என்கிற ஏக்கமே பெரிதாக இருந்தது.

"இதுவும் கடந்து போகும்" என்ற வார்த்தை மறுபடி என்னுள் எதிரொலித்தது.

ஒரு ஜென் கதை.

ஒரு ஜென் ஞானி, ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்து எதிரே தெரிகிற மலையையும், வானத்தையும் பார்த்துக் கொண்டே இருப்பார். தினமும் அவர் மௌனமாக, இப்படி பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தவர்கள், ஆவலை அடக்க மாட்டாமல் அவரிடமே கேட்டு விட்டார்கள்:

"அங்கே என்ன தான் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

"அங்கே பாருங்கள், வானத்தில் மேகத்திரள் இருக்கிறதல்லவா, ஓரிடத்தில் திரளாக, இன்னோரிடத்தில் அங்கே ஒன்று, இங்கே ஒன்று என்றிருக்கிறதல்லவா, அதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்." அந்த ஜென் துறவி அமைதியாகச் சொன்னார், மறுபடி மேகங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். கேள்வி கேட்டவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு கேள்வி கேட்டார்கள்.

"வானத்தில் மேகங்கள் காணப் படுவது இயற்கை தானே, இதில் என்ன அதிசயம் இருக்கிறது?"

"அங்கே பாருங்கள், கூட்டமாக இருந்த மேகத்திரள், காற்று வீச வீச, அப்படியே கலைந்து கடந்து போகிறதல்லவா? ஆனால், மலை அங்கேயே, அப்படியே தான் இருக்கிறது. அது போலவே, நமக்குள் எண்ணங்களும் ஒருசமயம், கூட்டமாகவும் இன்னொரு சமயம் தனியாகவும் வருகிறதல்லவா? இதுவும் அந்த மேகத்தைப் போலவே கடந்தும் போகிறதல்லவா? அதைத் தான், உள்ளேயும் பார்த்துக் கொண்டிருந்தேன்."

ஞானியின் இந்த பதில் சிலபேருக்குப் புரிந்தது. பல பேருக்குப் புரியவில்லை. மறுபடி, மறுபடி கேள்வி கேட்டார்கள். ஞானி மூன்றே வார்த்தைகளில் சொன்னார்:

"இதுவும் கடந்து போகும்."

"நான் யார்" என்று கேட்டுப் பார். இந்த உடலா, மாறிக்கொண்டே இருக்கிறமனமா, கண்போன போக்கிலே இழுத்துச் செல்கிற இந்திரியங்களா, எண்ணங்களா, என்னுடையது என்று எண்ணுகிற எதுவுமே உண்மையிலேயே என்னுடையது தானா இப்படி அமைதியாக விசாரம் செய்துகொண்டு, தன்னை அறிகிற வழியை உபதேசித்தார் பகவான் ஸ்ரீ ரமணர்.

ஸ்ரீ அரவிந்தர், இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்பிய போது, விஷ்ணு பாஸ்கர லீலே என்கிற யோகியைச் சந்திக்கிறார். லீலே, உன் மனத்தையே கவனித்துப் பார், எண்ணங்களும், ஆசைகளுமாக ஏராளமானவை உள்ளே ஓடிக்கொண்டிருப்பதைப் பார். இதில் எதுவெல்லாம் உன்னுடையது என்று அறிந்து, மற்றவற்றை வெளியே துரத்திவிடு என்றார். ஸ்ரீ அரவிந்தர், யோகி லீலே சொன்னபடியே செய்து வர, மூன்றே நாளில், எண்ணம், ஆசைகள் என்று எதுவுமே இல்லாமல் மனம் நிர்மலமாக, ஒருஸ்படிகத்தைப் போல இருப்பதைக் கண்டார். எத்தனையோ ஆண்டுகள் தவமிருந்தும், கை கூடாத இந்த நிலையை ஸ்ரீ அரவிந்தர் மூன்றே நாட்களில் சாதித்ததைப் பார்த்து வியந்தார் யோகி லீலே.

ஆனாலும், இது ஒரு ஆரம்பம் தான்.

விதையிலிருந்து இலை, கிளை என விரிந்து மரமாகி, மறுபடி ஒரு விதைக்குள் சுருங்கி மறுபடி முளைத்து, இந்தசிருஷ்டி மேலோட்டமாக ஒரே மாதிரி தெரிந்தாலும், பரிணாம வளர்ச்சி மென்மேலும் விரிந்து வளர்ந்து கொண்டே இருப்பதை இந்தக் கதையில் வரும் ஞானி மாதிரி அமைதியாகப் பார்க்கிற பொறுமை நம்மில் அனேகமாக எவருக்குமே இல்லை. நாம் விரும்புவதெல்லாம், திடீர்த் திருப்பங்கள், சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடியான sensationalism தான்.

ஒரு கொலை என்கிற வன்முறைச் சம்பவத்தை 'சதக்' ' சதக்' என்று பதினாறு தடவை 'சதக்' போட்டு கத்தியால் குத்தினான்..சம்பவ இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார் என்கிற மாதிரியான தினத்தந்தி டைப் விஷயங்கள் பரிணாம வளர்ச்சியில் சன் டி.வீ, ஜெயா டி.வீ, இன்னும் பிற டி.வீக் காரர்கள் புண்ணியத்தில் மெகா சீரியல் ஆக வளர்ந்து, இருக்கிற கொஞ்ச நஞ்சம் common sense ஐயும் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில்,

நான் யார்? நான் படைக்கப் பட்டது எதற்காக?

இந்தக் கேள்விகளை கேட்டுக் கொள்வதற்கே நம்மில் பலருக்குப் பல நூறு, ஆயிரம் பிறவிகள் வேண்டியிருக்கின்றன. கேள்வியைக் கேட்பதிலும் சரியான பதிலை அறிந்துகொள்வதிலும் நுட்பம் நிறைய இருக்கிறது என்பதால், இந்த ஆட்டத்திற்கே நான் வரவில்லை சாமி, ஆளை விடு என்கிற மாதிரித் தான், நம்முடைய புலன்கள், சோம்பேறித்தனமான, அது அதற்கே பழக்கப் பட்டுப் போன தளைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கின்றன.

அதனால் தான் மனமற்ற நிலை, அல்லது மனமிறந்த நிலை என்று சொல்லப் படுகிற நிலை ஒன்று இருப்பதையே நாம் அறிந்திருப்பதில்லை. அறிந்தால் அல்லவா, அதை எட்ட வேண்டும் என்கிற வேட்கையும், முயற்சியும் தொடங்கும்?

ஒளித்து, ஒளித்து வைத்து, மறந்தே போன ஆன்மீக ரகசியங்களை, கேட்கத்தயாராக இருந்த அனைவருக்கும் வாரி வாரி வழங்கினார் ஞான சிம்ஹமான சுவாமி விவேகானந்தர்.

அவருக்கும் முன்னாலே, "ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார்" என்று ரகசியமெதுவும் இல்லை, இதோ பெற்றுக்கொள் என்று பெரும் கருணையோடு கேட்டவர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினார் பகவத் ஸ்ரீ ராமானுஜர்.

சேற்றில் சிக்குண்டு முதலைவாய்ப்பட்ட யானையின் கதையைச் சொல்லும் போது, முதலைக்கும், யானைக்குமாய் நடந்த இழுபறிப் போராட்டம் ஆயிரம் வருடம் நடந்ததாகக் கதை சொல்லுவார்கள். யானை தன் பலத்தில் நம்பிக்கை வைத்துப் போராடிக் கொண்டிருந்த போது, இறைவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.என் செயலாவதொன்றுமில்லை என்று உணர்ந்த பிறகு, அதே யானை "ஆதிமூலமே, நாகணையாய், வந்து என் ஆரிடறை நீக்காய்" என்று முறையிட்ட போது, இறைவன், அரை குலைய நிலை குலைய, யானையைக் காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்தானாம். கதையாகச் சொன்ன விஷயத்திலும், ஒரு ஆன்மீக ரகசியம் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.

நான் எனது என்கிற நிலையில் இருந்து உயர்ந்தால் ஒழிய, நம்மைப் பீடித்திருக்கிற நோவுகளில், தளைகளில் இருந்து விடுபட வழியே இல்லை.

நானே, எனதே என்றிருந்த இவனையும் ஒரு பொருளாக நயந்து, இவனுக்கும் பல வெளிச்சக் கீற்றுக்களைக் காட்டி, ஒளிபொருந்திய பாதை ஒன்றிருக்கிறதே, இன்னமும் ஏன் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறாய் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லாமல் சொன்ன நிகழ்வுகளும் நடந்தன.

அம்மா, உன்னை வணங்குகிறேன்.

அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழிநடத்த வரும்போது எனக்கு என்ன கவலை?

1 comment:

  1. ஜென் கதை அருமை.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!