எல்லாம் கடந்து உள்ளே காணும் மெய்ப்பொருள்!

"இன்றைக்கு இந்து மதம் என்றும் சநாதன தருமம் என்றும் சொல்லப்படும் இந்திய சமயங்களின் தத்துவங்களின் தொகுப்பினில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி பலருக்கும் பலவிதமான தவறான புரிதல்கள் இருப்பதை சமயப்பதிவர்கள், ஆன்மிகப்பதிவர்கள் என்று அழைக்கப்படும்/புரிந்து கொள்ளப்படும் அன்பர்கள் எழுதும் பதிவுகளிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது"

கூடல் என்கிற வலைப்பதிவில் திரு.குமரன் எழுதிய இந்த வரிகளை சமீபத்தில் படித்தேன். எந்தப்பதிவரைச் சொன்னார், அவர் புரிந்து கொண்டதென்ன என்பதில் அவருக்கே ஒரு சரியான தெளிவு இல்லை என்று எனக்குப் பட்டது. ஒருவரைச் சுட்டிக் குற்றம் காணும் பொழுது, நாமே அதே தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது, பெரும்பாலான சமயங்களில் நமக்குப் புரிவதே இல்லை!

சமயங்கள், சமயநெறிகள் என்பவை ஒரு வரையறைக்குட்பட்டவையே. அவற்றால் ஒரு எல்லைக்கு மேல் சிந்தனையைச் செழுமைப்படுத்த முடியாது, ஒரு குறுகலான பார்வையிலிருந்து விடுபட்டு, ஆன்மீக நெறிக்கு உயர்வதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை பின்னூட்டமாகப் பதிவிட்ட போது
இன்னொரு மதுரைக்காரப் பதிவர், தருமி ஐயா எழுதியிருந்த ஒரு பின்னூட்டம் கண்ணில் பட்டது.


//தேஜஸ் தேஜஸ்வினம் அகம்!// என்னை மாதிரியான ஆளுகளுக்குப் புரியாத இன்னொரு விஷயம்... அப்படியும் நாலு இருக்கணும்ல ..

தருமி என்ற புனைபெயரில் எழுதிவரும் இந்த நண்பருடைய பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். மதுரை மாநகரம், மதுரை வலைப்பதிவர் சந்திப்பு இப்படிப் பல நிகழ்வுகளில் இவரைக் கவனித்திருக்கிறேன். [வலைப் பதிவில் தான்]

இவருடைய அண்மைய இடுகை, கடவுள் என்றொரு மாயை -பகுதி 7 ஐப் படித்தேன். இங்கே, நாத்திகம் பேசுகிற நண்பர்கள், தங்களுடைய சுய சிந்தனையோ அனுபவமோ இல்லாமல், திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை, அதுவும் பெரியார் பேசியதில் இருந்தே மேற்கோள் காட்டிப் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், தருமி ஐயா ரிச்சர்ட் டாகின்ஸ் என்ற பரிணாம உயிரியல் துறைப் பேராசிரியர் எழுதிய The God Delusion என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்து விட்டு, அதில் இருந்து கொஞ்சம் மேற்கோள் காட்டிப் பதிவுகள் இட்டிருக்கிறார். இவரும் ஒரு ஆசிரியர், நான் ஏன் மதம் மாறினேன் என்ற தலைப்பில் தன்னுடைய இறைமறுப்பை ஏற்கெனெவே எழுதியிருப்பவர்.

குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டி கொண்டிருக்கும் நம்ம ஊர் நாத்திகத்தில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான பதிவாக இருக்கும் என்ற நம்பிக்கையில், ஏழு பகுதிகளையும், தொடர்ந்த பின்னூட்டங்களையும் சேர்த்து வாசித்த பிறகு, கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. படித்துக் கொண்டிருந்த போதே எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது, ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களில் வரும் இந்தப் பகுதி தான்:

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.


Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”

- ஸ்ரீ அரவிந்த அன்னை

அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கைஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று இன்னொரு இடத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச்சொல்கிறார். இந்த நம்பிக்கையே, மனிதனின் பரிணாம வளர்ச்சியில் தொடர்ந்து உதவும் கருவியாகவும் துணையாகவும் இருப்பதைப் பார்க்கமறுக்கிற போக்கும் இருக்கிறது.

வேறொரு பதிவின் பின்னூட்டத்தில் தருமி ஐயா, ஆன்மிகம் என்றால் என்ன என்று தான் புரிந்து கொண்டதை இப்படிச் சொல்கிறார்:

"
மதங்களை கொஞ்சம் glorify பண்ணிட்டா ஆன்மீகம் அப்டின்னு நான் நினைக்கிறேன். சாமி, கடவுள் அப்டின்னு பேசுறதுக்குப் பதில் கொஞ்சம் தத்துவார்த்தமா பேசிட்டா ..ஆன்மீகமாயிரப் போவுது."

நிச்சயமாக இல்லை தருமி ஐயா! ஆன்மிகம் என்பது அனுபவம் கனிந்து வருகிற நிலை.

உண்மையில், ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை.

இங்கே நடக்கும் தேவனை மகிமைப்படுத்துகிற ஊழியக் கூட்டங்களைப் போல அல்ல. கூட்டமாகக் கூடி பஜனை செய்து கொண்டிருப்பதோடு முடிந்து போவதும் அல்ல. மதங்களின் தேவை முடிந்து விட்டது என்ற ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருத்தை ஒட்டியே, இதைச் சொல்கிறேன்.

ஆரம்ப வரிகளில் திரு குமரன் எழுதியிருந்ததை, மறுபடி நினைத்துப் பார்த்தேன்.

"The defenders of the truth are often worse than the enemies of the truth."


இந்தப் பதிவில் இதை விரிவாக ஏற்கெனெவே சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்!

மனிதன் தன் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு முரண்பாடும், ஒவ்வொரு துயரமும் ஒரு பெரிய ஒருமைக்கான முன்னேற்பாடாகவே அமைவது இறைவனது சித்தம். சடமாக இருந்த நிலையிலிருந்து உயிர் தோன்றியது. உயிரிலிருந்து மனம் தோன்றியது. சடமாக இருந்த நிலையில் உயிர்மை மறைக்கப்பட்டதாக இருந்தது போலவே உயிர்மை என்பது மனத்தின் மறைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. மனத்தையும் மிஞ்சிய பெருநிலையை அடைவதற்கே கேள்விகள் எழுந்தன.

ஆன்மீக அனுபவம் எதுவானாலும், அனுபவித்து தன்னுள் உணர வேண்டுமே அன்றி, அதை வேறு விதமாகப் பெற முடியாது. மேலோட்டமாகப் பார்க்கையில், பொதுவாகத் தெரிந்தாலும், ஒரே மாதிரி அனுபவம் எவருக்குமே வருவதில்லை. தன் முனைப்பாக ஒவ்வொரு உயிருக்குள் இருந்தும் செயல்படும் ஒன்று, மற்றவர் சொல்வதை பிடிவாதமாக ஏற்க மறுக்கும், ஆக எவரும் மற்றவரோடு எந்த ஒரு விஷயத்திலுமே,, ஒரே மாதிரியான பார்வை, அணுகுமுறையை பெறுவதில்லை.

அப்படி இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை!!

இப்படி முந்தையபதிவொன்றில் எழுதியிருப்பதை இங்கே படிக்கலாம்.

தொடர்ந்து பேசுவோம்!

9 comments:

  1. //தங்களுடைய சுய சிந்தனையோ அனுபவமோ இல்லாமல், திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை, அதுவும் பெரியார் பேசியதில் இருந்தே மேற்கோள் காட்டிப் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில்,//

    மதம் மற்றும் கடவுளை பேசுபவர்கள் எதை அடிப்படையாக பேசுகிறார்கள்?
    அவர்களுக்கும் புத்தகமோ அல்லது யாராவது சொன்ன தத்துவ மேற்கோள்களோ தேவைபடுகிறது!

    பெரியாரை பொறுத்தவரை தமிழில் நாத்திகம் பேசியவர் அவர் என்பதால் பாமர மக்களுக்கு அவர் மட்டுமே தெரிகிறார்!
    தருமி மாதிரி படித்தவர்களுக்கு டார்வினும், டாக்கின்சும்!

    ப்ளீஸ், வேர்டு வெரிபிகேஷனை தூக்குங்க!

    ReplyDelete
  2. //ஆன்மிகம் என்பது அனுபவம் கனிந்து வருகிற நிலை.//

    வெகு அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  3. THANKS FOR

    *

    *

    *

    *

    *

    *

    *

    *

    *

    WANTED

    DEAD OR ALIVE

    poster.

    *

    still i dont understand the need for my picutre here!

    ReplyDelete
  4. வால்ஸ்,
    //மதம் மற்றும் கடவுளை பேசுபவர்கள் எதை (வைத்து)அடிப்படையாக பேசுகிறார்கள்?//

    அரவிந்த அன்னை et al ...........

    ReplyDelete
  5. டாகின்ஸ் பற்றிய தொடர்பதிவுகள் மட்டுமல்ல, தருமி ஐயா இங்கே வந்து அளித்திருக்கும் பின்னூட்டம் அதை விட ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. முழுமையாகப் படித்து விட்டு, பின்னூட்டம் எழுதியிருந்தால், உண்மையிலேயே நன்றாக இருந்திருக்கும்.

    //வேறொரு பதிவின் பின்னூட்டத்தில் தருமி ஐயா, ஆன்மிகம் என்றால் என்ன என்று தான் புரிந்து கொண்டதை இப்படிச் சொல்கிறார்:

    "மதங்களை கொஞ்சம் glorify பண்ணிட்டா ஆன்மீகம் அப்டின்னு நான் நினைக்கிறேன். சாமி, கடவுள் அப்டின்னு பேசுறதுக்குப் பதில் கொஞ்சம் தத்துவார்த்தமா பேசிட்டா ..ஆன்மீகமாயிரப் போவுது."

    நிச்சயமாக இல்லை தருமி ஐயா! ஆன்மிகம் என்பது அனுபவம் கனிந்து வருகிற நிலை.

    உண்மையில், ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை.//

    கண்களை இருக்க மூடிக் கொண்டு , வெளிச்சமே இல்லை, வெளிச்சம் என்பது பொய் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதில், உங்களுக்குப் பிரியம் அதிகம் என்றால், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை!

    ReplyDelete
  6. முகம் தெரிந்த பதிவர், நம்ம மதுரைக்காரப் பதிவர் என்ற ஒரே அபிமானத்தினாலேயே, உங்களுடைய படத்தை வெளியிட்டிருந்தேன் ஐயா!
    போஸ்டர் போட்டு, Wanted ..Dead or Alive இப்படியெல்லாம் கமென்ட் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
    உங்களுக்கு விருப்பமில்லை என்பதால், படம் நீக்கப்பட்டது.

    ReplyDelete
  7. //உங்களுக்கு விருப்பமில்லை என்பதால், படம் நீக்கப்பட்டது.//

    என்னிடம் கேட்டிருந்தால் சமீபத்தில் எடுத்த படத்தை அனுப்பியிருப்பேனே ...

    ReplyDelete
  8. //உண்மையில், ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை//

    இதையெல்லாம் வாசிக்காமலேயே பதிலிட்டேன் என்றா நினைத்தீர்கள் :(

    இந்த ஒரு சொற்றொடரை வைத்தே நாம் பேச நிறைய இருக்கிறது. (இருந்துவிட்டுப் போகட்டுமே!)

    ReplyDelete
  9. //கண்களை இருக்க மூடிக் கொண்டு , வெளிச்சமே இல்லை, வெளிச்சம் என்பது பொய் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதில், உங்களுக்குப் பிரியம் அதிகம் என்றால், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை!//

    நன்றி .......

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!