மாயாவாதமும்--கற்பனாவாதமும்!


ஒரு வலைப்பதிவு, அத்வைதத்தை தமிழில் கொஞ்சம் எளிமையாகச் சொல்கிற மாதிரி, திரட்டிகளின் துணை ஏதுமில்லாமல், படிப்பவர்கள் ஆசைப்பட்டுத் தங்கள் நண்பருக்கும் உதவக் கூடும் என்ற வகையில் அறிமுகம் வேண்டுமானால் உரலியைக் கொடுங்கள் என்ற அறிவிப்புடன் நீண்ட நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. பெயருமே கூட கொஞ்சம் வித்தியாசமாக, http://anmikam4dumbme.blogspot.com இதைப் பற்றி ஏற்கெனெவே, படித்ததும் பிடித்ததும் என்ற தலைப்பில் இந்தப்பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.

நான் அறிமுகம் செய்துதான் பிரபலமாக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர் அல்ல அவர். நிறைய கூகிள் வலைக் குழுமங்களில், லினக்ஸ் பயன்பாட்டுக் குழுக்களில், மருத்துவராகவும் இருந்துகொண்டே முழுமையான ஈடுபாட்டோடு, தன்னுடைய நேரத்தைச் செலவு செய்துகொண்டிருப்பவர் டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன்!

"நாம யார்ன்னு மறந்து போனதுதான் மாயை." என்ற அவரது சமீபத்திய இடுகையில், பின்னூட்ட விவாதங்களில் ஒரு கதையை எடுத்து வைத்து என்னுடைய கருத்தையும் சொல்லியிருந்தேன்.

அதில் ஒரு நண்பர், போணி செய்து ஆரம்பித்த பின்னூட்டத்தில், "ஒருவர் தன்னுடைய மகன்அல்லது மகளை நம்முடைய மகன் என்று பார்க்காமல் இருக்க முடியுமா? அப்படி பார்த்தால், நாம் மாயைக்குள் சிக்கிக் கொள்வோமே" என்று சொல்லிவிட்டு, இதைப் பற்றி நாம் ஏராளமாகப் பேசலாம் ஆனால்படிக்க வருகிறவர்கள் செரிமானம்[புரிந்துகொள்வது] செய்ய முடியாது என்றும் எழுதியிருந்தார்.
மாயாவாதத்தில் உள்ள பெரிய குறையே இதுதான்! இடம்பொருள் ஏவல் தெரியாமல் பேசினால், நேரே கீழ்ப்பாக்கத்துக்கு ரீடைரக்ட் ஆகி விடுகிற அபாயம் நிறையவே உண்டு. ராமகிருஷ்ண கதாம்ருதத்தில், இதை ஒரு சுவாரசியமான கதையில் சொல்வார்: யானை ஒன்று மதம் பிடித்து, வீதியில் தறிகெட்டு ஒபட ஆரம்பித்தது. யானைப் பாகன், முன்னாள் ஓடி, "யானைக்கு மதம் பிடித்திருக்கிறது, விலகுங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்" என்று எச்சரித்துக் கொண்டே வந்தான். எல்லாமே பிரம்மம்.பிரம்மத்தைத் தவிர வேறொன்றும் கிடையாதுன்னு பாடம் படிச்ச ஒருத்தன் தெருவில் வந்து கொண்டிருந்தான். பாகனுடைய எச்சரிக்கையைக் கேட்டு ஆச்சரியத்தோடு, யானையும் பிரம்மம், நானும் பிரம்மம் அப்படியிருக்க ஏன் இவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள் என்று, வாளாவிருந்தான். யானை வந்து இவனைத் தூக்கிக் கடாசி எறிந்து விட்டு,அடுத்த த்வம்சத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பலத்த அடிபட்டு, வலியோடு முனகிக் கொண்டிருந்தவனை, அவனோட குரு வந்து பார்த்து ஆதூரத்தோடு கேட்டாராம்,"யானையும் பிரம்மம், நீயும் பிரம்மம் என்பதெல்லாம் சரிதான்! விலகிப்போ என்று எச்சரித்தானே, யானைப் பாகன், அவனையும் பிரம்மம் என்று அறிந்து அவன் சொன்னபடிக்கு ஒதுங்கிப்போயிருந்தால், இப்படி ஆகியிருக்குமா?" மகனை, மகனென்றோ, இல்லையென்றோ பார்ப்பது போன்ற கேள்வியெல்லாம், வேறுபக்கம் திசைதிருப்பி விடும்!
பதிவருடைய பதில் முதலில்,
திவா said...
:-)) உண்மைதான்!
ஆகஸ்ட் 13, 2009 12:40 PM
கிருஷ்ணமூர்த்தி said...
திரு பாலு சொல்வது: /3. i accept krishnamoorthy words. if we talk more on maya - that also maya trap.and we go other way./ தினசரி சாலைகளில் விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, சரி, அதனால் நான் வீட்டுக்குள்ளேயே இருந்து விடுகிறேன் என்று சொல்கிற மாதிரி இல்லை? மாயை என்று நினைத்து மயங்குவதும், பிரம்மம் என்று மலைத்து நிற்பதும் ஒன்றே தான்! அத்வைத வாதத்தில், பிரம்மம் ஒன்றே நிலையானது, மற்ற எல்லாம் உடான்சு என்று ஒரேயடியாக இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பை நிராகரித்து விடுகிற தவறைத்தான் நான் சொன்ன கதை சொல்லும் பாடம்.
அப்புறம் வேறோருவரிடத்திலிருந்து ஒரு பின்னூட்டம் வருகிறது,
 
.........திரு கிருஷ்ணமூர்த்தி சொல்லி இருப்பதை மட்டும் ஏத்துக்க முடியலையே?
//அத்வைத வாதத்தில், பிரம்மம் ஒன்றே நிலையானது, மற்ற எல்லாம் உடான்சு என்று ஒரேயடியாக இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பை நிராகரித்து விடுகிற தவறைத்தான் //
யானையைக் கண்டும் எச்சரிக்கைக்குப் பின்னும் ஒதுங்காத ஆளின் அத்வைதம் சரியான புரிதலில் இல்லை அல்லவோ?? புரிதல் சரியா இல்லாமல் அத்வைதத்தைக் குறை கூட முடியுமா தெரியலை! :))))))))

முதலில் உண்மைதான் என்று சொன்னது , இந்தப் பின்னூட்டம் வந்த உடனேயே மாயை ஆகிப் போனது!

"......அபிமானம்ன்னு இல்லை. நபரின் புரிதல் சரி இல்லாததால் பிலாசபி தப்புன்னு சொல்ல முடியாது என்கிறாங்க. இது சரியாதான் படுது!
த்வைத நிலை அத்வைத நிலையை விட ஏத்துக்கிறது சுலபம்தான்."


உடனேயே பதிலும் எழுதியாச்சு!
இங்க யார் சொன்னது சரி, தப்புன்னு பார்த்து, மார்க் போடறதுக்கு நான் வரலை! அதே மாதிரி நான் த்வைதமும் பேச வரவில்லை. ஸ்ரீ அரவிந்தர்,சங்கரர் பேசுகிற அத்வைதத்தை விட மாத்வர் பேசும் த்வைதம் இன்னும் குழப்பமானது என்று சொல்வார். தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நாங்கள்தான் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதை நான் எப்போதுமே ஆதரித்ததில்லை. அப்படி ஒரு நிலை வரும் போது, அந்த மாதிரி பேசும் குழுக்கள், தனிநபர் எதுவானாலும் விட்டு விலகியே இருக்கிறேன். இதைப் பற்றி, இன்று அல்ல, மே மாதத்திலேயே, உங்களுடைய பதிவு http://anmikam4dumbme.blogspot.com/2009/05/blog-post_12.html இதற்குப் பதிலாக இங்கே எழுதியிருக்கிறேன். http://consenttobenothing.blogspot.com/2009/05/4.html
இங்கே தத்துவம் பேசுவது என்பது உண்மையைக் கண்டறிவதற்கான வழியாக இல்லாமல், ஒருபக்கச் சார்பாக, அது என்ன நோக்கத்தோடு வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஒருதலைப் பட்சமாக, ஊனமாக, கண்மூடித்தனமாகத் தான் ஆகிப்போயிருக்கிறது.

குறிப்பாக, சைவம் பேசிக் கொண்டு அசைவமாக இருப்பதும் , வீண் விவாதங்களைத் தூண்டிவிட்டு அப்புறம் சமாதான, சமரசம் பேசிக்கொண்டிருப்பதும் இணையத்தில் சிலருக்கு வாடிக்கையாகவும் இருப்பது மறைக்கக் கூடிய உண்மை அல்ல. அதனால், சில விஷயங்களைப் பேசியே ஆக வேண்டியிருக்கிறது. பல்லக்குத் தூக்குபவர்களுடைய அதிகாரம், விரட்டல் எல்லாம் பல்லக்கில் வருபவனை விடக் கூடுதலாகவே இருக்கும் என்பது தெரிந்ததுதானே! சீடகோடிகளும் அப்படித் தான் நிறைய சமயங்களில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

அத்வைதத்தைக் குறை கூடச் சொல்ல முடியுமா என்ற ஆச்சரியம் அந்தப் பின்னூட்டத்தில் இருந்தது பாருங்கள், அங்கே தான் விஷயமே அடங்கியிருக்கிறது. முதலில் அத்வைதம் பேசுகிறவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம், அப்புறம் அவர்கள் உபதேசிக்கிற அத்வைதத்தைக் குறை கூற முடியுமா, இல்லை தலையில் வைத்துக் கொண்டாட முடியுமா என்பதையும் பார்ப்போம்!
ஒரு நண்பருடைய வலைப்பதிவில், காஞ்சி காக்ஷி அம்மன் கோவில் எப்படிப் புராதானமானது, எந்த முனிவரால் வழிபடப்பட்டது என்றெல்லாம் தொடர்பதிவுகள் வந்துகொண்டே இருக்கிறது. பரம சாது அவர், இதைப் படித்தாரானால் வேதனையோடு. என் பதிவைப் பின்பற்றுகிற பட்டியலில் இருந்து விலகிவிடவும் கூடும். ஒரு நல்ல மனிதரைப் புண்படுத்துவது என் நோக்கமில்லை என்றாலும், சில உண்மைகளைப் பேசும் போது, அதை நம்பிக் கொண்டிருக்கும் சிலர் வருந்துவார்கள் என்பதற்காகச் சொல்லாமலும் இருக்க முடியாது.

ஆனால், இப்போதைய காமாக்ஷி அம்மன் கோவில், முன்னாளில் பௌத்த மதத்தினர் வழிபட்ட தாரா தேவியின் கோவில் என்பதற்கு நிறையச் சான்றுகள் இருக்கின்றன. பவுத்தம் பலவீனப்பட்டபோது தாரா, காமாக்ஷியாகிப் போனாள்! உண்மையை, நாம் விரும்புகிறபடி, கற்பனை பண்ணுகிற விதத்தில் தான் இருக்க வேண்டும் என்று ஆக்கி வைக்க முடியாதே!

அதுபோலத்தான், கும்பகோணம் தவிர வேறெங்கும் கிளைகள் இல்லாத ஒரு சங்கரமடம், ஏதோ ஒரு நாளில் தன் தலைமையகத்தைக் காஞ்சிக்கு மாற்றிக் கொண்டதும், காமாக்ஷி கோவிலுக்குப் பரம்பரை காவலர்களாக ஆகிப் போனதும் கூட! ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மற்றைய சங்கர மடங்கள் எதுவும், காஞ்சியை சங்கரரால் ஏற்படுத்தப்பட்ட மடம் என்று இன்றுவரை ஒப்புக் கொள்வதும் இல்லை. இந்த மடத்தின் கதை மட்டும் அல்ல, செயல்பாடுகளுமே கூட அவ்வப்போது சர்ச்சைகளை தூண்டி விட்டுக் கொண்டேதான் இருப்பதாக, வெளிப்படையாகவே, சமீபத்தில் ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆதீனங்களைக் கருவறைக்குள் அனுமதிக்க மறுத்தது வரை நடந்து கொண்டே இருக்கிறது. உலக இச்சைகளைத் துறந்து, துறவியான ஒருத்தர், துறவையும் துறந்து ஓடிப்போனதும், ஓடிப்போனவரைக் கெஞ்சிக் கூத்தாடித் திரும்ப அழைத்து வந்ததும், காஞ்சிக்கே உண்டான தனி முத்திரை!

இங்கே எந்தவொரு தனி நபரைப் பற்றியோ, அவர் என்ன மாதிரியான துறவி என்பதை ஆராய்வதிலோ, எனக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை. ஆனால், சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு, சிலபேர் தாங்கள் எழுதுவது மட்டுமே முடிவான தத்துவம் என்று பேச வரும் போது, கேள்விகள் கேட்கத் தான் வேண்டியிருக்கிறது. அவர்கள் பேசும் போலியான சமரச வாதங்கள், 'எல்லா தெய்வமும் ஒண்ணுதான் ஆனாக்க நான் கும்பிடறது மட்டும் நிறையவே ஒசத்தி' என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது சிரிக்கத் தோன்றுகிறது! இது இன்னொரு விதமான அஞ்ஞானம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?

காஞ்சிமடம், சீடகோடிகள் என்று பேசும் போதே, நேற்றைய நாட்களில் சிருங்கேரி சந்நிதானத்தையே மதுரை மீனாக்ஷி அம்மன் கருவறை தரிசனம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்ததை மறக்க முடியுமா? ஸ்ரீரங்கம் ராஜ கோபுர கும்பாபிஷேகம் நடந்தபோது காஞ்சிமடம் செய்த அரசியலை மறந்து விட முடியுமா?

ஓம் சக்தி பிராண்ட் பங்காரு அடிகளுக்கும் காஞ்சி மடத்துக்கும் நடந்த பனிப்போர், வெய்யில்காலப்போர், ஏகப்பட்ட அக்கப்போர் பிரசித்தம், அக்கப்போரில்,ரொம்பவுமே சேதம் ஆகிக் கொண்டிருப்பதை உணர்ந்து ஓம் சக்தி பிராண்டுக்கு காஞ்சி அங்கீகாரம் கொடுக்க நேரிட்டதும், மேல்மருவத்தூருக்கே சென்று அங்கே ஆன்மிகம், அருள் பொங்குகிறது என்று சான்றிதழ் கொடுத்த கதையும், காஞ்சி சரித்திரத்தின் சில பக்கங்கள்!
இதே மாதிரி 'இம்சை அரசன் இருபத்துமூன்றாவது புலிகேசி' படத்தில் வடிவேலு, தியாகுவிடம் சமாதானம் செய்து கொள்ளும் காட்சி நினைவுக்கு வந்தால், தற்செயல் அல்ல, நியாயம் தான்!

ஸ்ரீரங்கம் ராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு, தங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதே என்று எந்தெந்த வகையில் இடைஞ்சல் , குடைச்சல் எல்லாம் கொடுத்த பின்னால், யார் வந்தாலும் வராவிட்டாலும் கும்பாபிஷேகத்தை நான் தனியாகவே நடத்துவேன் என்று அஹோபில மட ஜீயர் துணிந்து நிற்க, எம்ஜியார் அவர்கள் தலையிட்டு, கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி நடந்ததும், இப்படி ஆடிய ஆட்டம் எல்லாம் ஒருநாளில் குலைந்து போன பின்னால், இன்றைக்கு, மறுபடி ராமேஸ்வரத்தில் ஆடுவதைப் பார்த்துப் பரிதாபப் பட வேண்டியிருக்கிறது.

தத்துவம் புரிந்தது என்று குன்சா டிக் பண்ணிவிட்டு, வழக்கம்போலவே தத்துப்பித்தென்று பேசிக் கொண்டிருப்பவர்களை இதோடு விட்டு விடுவோம்!

ஜீவ-பிரம்ம ஐக்கியம் இந்தியத் தத்துவ மரபில் பல பிரிவுகளிலும் ஆதி சங்கரருக்கு முன்னாலேயே, பேசப்பட்டிருக்கிறது, ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. ஏதோ ஆதி சங்கரர் தான், அதை கண்டுபிடித்துச் சொன்னார் என்பது அல்ல. அவரும் சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான்!

ஆதி சங்கரர் வரலாறு, ஆவர் சாதித்ததாகச் சொல்லப் படுபவை, அவர் நிறுவிய மடங்கள், குறிப்பாக காஞ்சி சங்கர மடம் உட்பட, முழுமையான விவரங்களோடு இல்லை, கேள்விக்குறிகள், விடைகிடைக்காத இடைவெளிகள் ஏராளமாக இருக்கின்றன. அவருடைய காலத்தில், மிகவும் வலுவாக இருந்த பவுத்த மதத்தோடு போராடுவதில், பவுத்தம் பேசினதையே தானும் பேச வேண்டிய கட்டாயம் சங்கரருக்கு இருந்திருக்கலாம்! அவருடைய சித்தாந்தம், பவுத்தத்தோடு, நிறைய விஷயங்களில் ஒத்துப் போகிறது என்பது தான் சுவாரசியமான விஷயமே! அதனாலேயே, ஆதிசங்கரரையே, கள்ள பவுத்தன் என்று வைதீக மதத்தைப் பின்பற்றியவர்கள் சந்தேகப்பட்ட சந்தர்ப்பங்களைப் பற்றி நிறையக் குறிப்புக்களைப் படித்திருக்கிறேன்.

ஆக, ஆதிசங்கரர் பேசும் மாயா வாதம் ப்ரஹ்ம சத்யா ஜகன் மித்யா என்ற வாதம் நிறைய குறைபாடுகளோடு, வெறும் கற்பனாவாதமாக மட்டுமே இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அதை நம்பும் நண்பர்களை நான் குறை சொல்லவும் இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்றபடி, புரிந்துகொள்ளக் கூடியதன்மைக்கு ஏற்றபடி, அனுபவங்கள் வாய்க்கின்றன. பாதைகள் பலவாயினும், ஒன்றுசேரும் இடம் ஒன்றுதான் என்பதை இந்தியத் தத்துவ தரிசனம் போல மிகத் தெளிவாக, வெளிப்படையாக வேறு எந்த ஒரு தத்துவமும் பேசியது இல்லை. எல்லாவிதமான சாத்தியப்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிற, நாத்திகத்தையுமே கூட தன்னுள் ஏற்றுக்கொள்கிற பக்குவமான தத்துவ தரிசனம் இங்கே, முன்னவர்கள் நமக்கு அளித்திருக்கும் பெரும் கொடை!
ஸ்ரீ அரவிந்தர் வெகு விரிவாகவே, இதை ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். தவிர, 'the proof of the pudding is in the eating' என்று சொல்வது போல, ஒரு தத்துவம் உண்மையா என்பதை, அதை நடைமுறையில் செயல்படுத்த முடிவதே, உண்மையான நிரூபணமாக எடுத்துக் கொள்ள முடியும்.

சங்கரர் பேசும் மாயாவாதம்,அந்தவகையில் வெறும் கற்பனையே தவிர, நடைமுறையில் நிரூபிக்கக் கூடியதாக இல்லை. இதை, தத்துவ விமரிசனங்களில், தொடர்ந்து நடந்து வருகிற விவாதங்களில் நிறையவே பார்க்க முடியும்.

நான் மாயாவாதியோ, கற்பனாவாதியோ அல்ல!

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிற அமுத மொழி இது:

"படைப்பில், அதன் பரிணாம இயக்கத்தில் கலந்துகொள்ளும் உள்ளத் துணிவு கொள்வாயானால், வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த உலகம், பிரபஞ்சம் என்பது வளர்ந்துகொண்டே இருப்பது. அசைவே இல்லாத நிலையை வேண்டினாலோ, மாறுதலே இல்லாத நிலையை அடைய வேண்டுவாயானால், நீ ஸ்ருஷ்டியில் இருந்து வலிய விலக்கப் படுவாய்! ஏனெனில் இந்த லீலையில், விளையாட்டில் கலந்து கொள்ளும் உரிமையையும் இழந்து விடுகிறாய்.

அசைவே இல்லாத நிலைகூட வேண்டுவாயாகில், அப்படித்தேர்ந்தெடுத்துக் கொண்டதை உணர்ந்து போற்றும் திறனையும் சேர்த்தே இழந்துவிடுகிறாய் என்று ஸ்ரீ அரவிந்தர் அடிக்கடி சொல்வதுண்டு."

ஸ்ரீ அன்னை உரையாடல், ஸ்ரீ அரவிந்த ஆசிரம வெளியீடு, இரண்டாம் பதிப்பு 1988 பக். 100

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!