போகும் திசை மறந்து போச்சு!


போகும் திசை மறந்து போச்சு-இங்கே

பொய்யே வேதமுன்னு ஆச்சு

வைரமுத்து, நீர்த்துப்போய்விடாமல் கவிதையை கவிதையாகவும், லட்சியக் கனவுகளோடும் எழுதின நாட்களில் இளைய ராஜா இசையமைப்பில் உருவான பாடல் இது. கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தில், இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்த ஸ்ரீதர்ராஜன் என்ற இளம் இயக்குனரின் படைப்புக்காக, இளையராஜா, வைரமுத்துவின் வரிகள் வெற்று வரிகளாகவே போய் விடாமல் கவிதை வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்த பாடல் இது.

ஸ்ரீதர் ராஜனுடைய நண்பர்கள் இருவர் எனக்கும் நட்பான நாட்களில், இந்தப் படத்தின் பாடல் ஒலிப்பேழையை சுடச் சுடக் கொண்டுவந்து கொடுத்த நாட்கள், அப்படியே ஸ்ரீதர் ராஜனை ஓரிருதடவை சந்திக்கிற சந்தர்ப்பமும்கிடைத்தது.......இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும். ஸ்ரீதர் ராஜன், பின்னாட்களில் ஜெமினி கணேசனுடைய மாப்பிள்ளையாகிப் போனார். அவர் பேசின லட்சியம், கம்யூனிசம் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதும் நினைவுக்கு வரும்போது சிரிப்புத் தான் வருகிறது.ஜெமினிக்கு மாப்பிள்ளை ஜெமினி மாதிரியே, பெண்ணுக்கு அடிமையாகத் தானே இருக்க முடியும்? இது என்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா?

ஜெமினி கணேசனைப் பற்றி பேசும்போது வேறொன்றும் வேடிக்கையாக நினைவுக்கு வருகிறது. மனிதனைப் பற்றிப் பெரிய காதல் மன்னன், பெண் பித்தன், இன்னும் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா? உண்மையில், ஜெமினி கணேசன் பெண்ணுக்கு அடிமையாகவே கடைசி வரை வாழ்ந்த ஒரு மனிதன்! ஜெமினியின் சரிதம் எழுத நிறையப்பேர் இருப்பதால், அந்த வேலையை அவர்களே தொடரட்டும்!

இந்த ஒரு தகுதிக்காகவே, ஜெமினிக்குத் தபால் தலையும் வெளியிட்டு, இந்திய அரசு கவுரவப் படுத்தியது போலிருக்கிறது! பெண்ணடிமைத்தனம் என்று பேசுபவர்கள், பெண்ணுக்கு அடிமைத்தனம் என்று ஒன்று இந்த நாட்டில் இருந்ததையே அறியாதவர்கள்! பாவம்!!

காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்குத் தபால் தலை, தமிழ் வளர்த்த சுத்தானந்த பாரதிக்கு இல்லையா என்று ஒருத்தர் குமுறியதையும் இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பேசியிருக்கிறோம்! சுத்தானந்த பாரதியார் என்ற தலைப்பில் தேடுங்கள், கிடைக்கும்!

ஆங்...எதற்காக இப்போது இதைப் பேச ஆரம்பித்தோம்?

போகும் திசை மறந்து போச்சு! போச்சா, இல்லியான்னு கொஞ்சம் என்னையே விசாரிச்சுக்கத் தான்!

கோவி கண்ணன், அவருடைய ஒரு பதிவின் பின்னூட்டங்களில், என்னுடைய ப்ரொபைலைப் பார்த்துவிட்டு, வயது, விவரங்களையும் பார்த்து விட்டு, கொடி பிடிப்பதைப் பற்றி எழுதினதில் ஒரு சுய பச்சாதாபம் தெரிந்ததாகச் சொல்லியிருந்தார். அதுவும்...........

இன்னொரு நண்பர் கபீரன்பன் என்ற பெயரில், கபீர்தாசருடைய ஈரடிக் கவிதைகளை எளிய தமிழில், அவருடைய அனுபவத்தில் அறிந்ததையும் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி முயற்சிகளில் தான், சிந்தனை,ஒரு குறுகிய எல்லைகளில் இருந்து விடுபட்டு, விரிந்து, பறந்து ஒரு புதிய பரிணாமத்தை அடைகிறது. என்னுடைய ஒரு பதிவை ரீடரில் படித்து விட்டு, வேறொரு பதிவுக்கு பின்னூட்டம் எழுதினார். எனக்கு ஒரு விஷயத்தை மறைமுகமாகத் தெளிவுபடுத்துகிற மாதிரி எழுதியிருந்ததிலும்.........

போகும் திசை என்ன என்பதைப் பற்றி மறுபடியும் யோசிக்க வேண்டி வந்தது. முதலில் சொன்ன மாதிரி போகும் திசை நெசமாவே மறந்து போச்சா என்ன, அப்படியும் போய்விடுமா என்ன என்ற கேள்வியே, இந்தப் பாடலை நினைவுபடுத்திக் கொள்வதிலிருந்து ஆரம்பித்தது!

"தற்போது தான் உங்கள் புரொபைல் பார்த்தேன். வயது 55 என்றிருந்தது. இளையர்கள் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோபம் வரக் கூடிய வயது. வயதின் காரணமாகவே தமக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கக் கூடிய வயது."


//கொடி பிடித்த காலம் எல்லாம் எப்பவோ!அது செங்கொடி! அதுகூட லட்சிய வெறியோடு மட்டுமே இருந்தது, நபர்களின் மீது அல்ல.//

அதையும் படித்தேன். சுய பட்சாதாபம் ஓங்கி இருந்தது. 50 வயதுக்கு மேல் சில தீவிர நாத்திகர்கள் கூட தீவிர ஆத்திகர்கள் ஆகிவிடுங்க, அப்போது தான் உலகம் நிலையல்ல, உடல் நிலையல்ல என்கிற உண்மை புரியும் போல :)

இது கோவி கண்ணன் சொன்னது. காயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போல, உலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போல, அவர் சொல்கிற மாதிரி இல்லை?!


கபீரன்பன் சொல்லாமல் சொன்னது வேறு மாதிரி இருக்கிறது!

ரொம்ப போரடிக்கிறது-என்ன செய்யலாம்? என்ற பதிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இப்படிச் சொல்லியிருந்தேன்:

இப்படிப் பட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"இப்படிக் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது, அது சிலநிமிடங்களோ, சில மணி நேரமோ,உனக்குள்ளேயே சொல்லிக் கொள்: " ஒருமுகப்படுத்திக் கொள்ளவும், ஒன்று சேர்த்துக் கொள்ளவும், என்னுடைய வாழ்க்கையின் பொருளை வாழ்ந்து பார்ப்பதிலும், உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும், ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது."


கபீரன்பன் said...
August 17, 2009 9:09 AM

//உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும், ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது //

மிகவும் பொருள் பொதிந்த சத்தியம். அதை உணர்வதற்கான விவேகம் அவனருளாலேதான் கிடைக்கும்.

சிந்திக்க வேண்டிய அன்னையின் கருத்துகளை எடுத்துக் காட்டியதற்கு நன்றி

கிருஷ்ணமூர்த்தி said...
August 17, 2009 9:19 AM

ஒரு சராசரி மனிதனாக இருந்து, இதைஉணர்வதும் , கடைப்பிடிப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொந்த அனுபவத்திலேயே, அதுவும் கடந்த சில நாட்களிலேயே கண்டுகொண்டேன்.

"அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்" என்று ஆழ்வார்கள் சொன்னது ஏன் என்றும் தெரிய வர ஆரம்பித்திருக்கிறது!

வருகைக்கும், என்னுடைய இப்போதைய மனநிலையை எனக்கே காட்டி அருளியதற்கும் மிகவும் நன்றி!

கபீரன்பன் சொல்லாமல் சொன்னதென்ன என்பதை அவரவர்கள் அனுபவம், அறிவுக்குத் தகுந்தபடி தாங்களே தெரிந்துகொள்ளட்டும் என்பதை, முதலில் ஒரு தனிப்பதிவாக அன்றைக்கு எழுத ஆரம்பித்து, அப்படியே நிறுத்திக் கொண்டேன்.

Evolution என்ற குறியீட்டுச் சொல்லுடன் தேடினால்,இந்தப் பதிவில் ஆறு இடுகைகளில், மேலே சொன்ன முரண்பட்ட இரண்டு கருத்துக்களைப் பற்றி முன்னமேயே பேசியிருப்பது தான் என்பது தெரியும்.

என்னுடைய சொந்த அனுபவங்களைப்பற்றி ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தலைப்பில் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

நடைமுறை வாழ்க்கையில், பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான, 'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்கு, கொஞ்சம் சிரமப் பட்டுத் தான், வெளியே வர வேண்டியிருக்கிறது. இந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவு' என்ற சொல் எப்படி இன்றைக்கு, அதன் உண்மையான பொருளில் இல்லாமல், வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோ, அது மாதிரி ஆகி விடும்! நடைமுறை வாழ்க்கையில், இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவது, சேரிடம் அறியாமலேயே சேர்ந்து, அதிலேயே சிக்கிக் கொள்வதுதான். ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.

அடுத்து, கற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வது, ஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போல, சாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பது. உயிர்மையின் ஒரு அடையாளமே, இந்த 'இன்னும், இன்னும்' தான்!

For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”

பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான். இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.

இறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லை. ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதை, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறது. தேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள், படிப்பினைகள் என்று நம்மை, நமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.

அன்று பார்த்த சாரதியாக வந்தவனே, நமக்கும் ஆத்ம சாரதியாக இருந்து கொண்டு நம்மையும், நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, நம்முடைய சம்மதத்துடனோ, இல்லாமலோ, வழிநடத்திக் கொண்டிருக்கிறான்.

அவனையே பற்றிக் கொள்கிற தருணமும் வரும், காலைப் பற்றிக் கொள்கிற குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்கிற தாயைப்போல அவன் நமக்காகக் காத்திருக்கிறான்!

அப்புறம் வேறென்ன வேண்டும்!



6 comments:

  1. இது எப்படி உங்களால் மட்டும் முடியிது. இரகசியத்த எங்களுக்கும் சொல்லித்தாங்களேன்.

    என்ன சொல்றேன் என்று யோசிக்காதீங்க. எப்படி எல்லாம் விளக்கம்...

    அருமை...

    ReplyDelete
  2. //இது கோவி கண்ணன் சொன்னது. காயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போல, உலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போல, அவர் சொல்கிற மாதிரி இல்லை?!//

    கிருஷ்ணமூர்த்தி ஐயா,

    உங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அவ்வாறு எழுதவில்லை. அப்படி (ஏதும்) உணர்ந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    எனது எழுத்துகளை நான் வழியுறுத்த விரும்புவதை விட தனிமனிதர்களை மதிப்பது முதன்மையானது என்கிற கருத்துக் கொண்டவன் தான். பிறரை எந்தவிதத்திலும் பாதிக்காத தனிப்பட்டவர்களின் நம்பிக்கைகளை குறைச் சொல்லும் தகுதி எவருக்குமே கிடையாது என்ற புரிந்துணர்வின் எல்லையில் இருந்தே எழுதுகிறேன்.

    நன்றி !

    ReplyDelete
  3. சந்துரு, இந்தப் பதிவில் எட்டு முந்தையபதிவுகளுடைய தொடர்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவம், பாடம், வலைப்பதிவுகளிலேயே இத்தனை என்றால், வாழ்க்கைப்பதிவில் இன்னும் எத்தனை இருக்கும்?

    அது தான் ரகசியம்! இது நம் எல்லோருக்குமே பொருந்தி வரும் ஒன்று!

    ReplyDelete
  4. இங்கே காயப்படுவது, காயப்படுத்துவது என்ற பேச்சே இல்லை. நான் நகைச்சுவையாகத் தான் அந்த வார்த்தைகளை எழுதினேன். பதிவை, இன்னமும் கவனித்துப் படித்தால் இரண்டுஎதிரெதிர் கோணங்களில் வந்த் விமரிசனங்களைச் சமன் செய்து யோசிக்கும் ஒரே ஒரு விஷயம் தான் இருக்கிறது.

    கண்ணன்கள் என்னை எப்போதுமே கோபப் படுத்துவதில்லை!

    ReplyDelete
  5. //விளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையை, அதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.//

    :)) இதை பற்றி சமீபத்தில்தான் ஒரு பதிவிட்டேன் - ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்.

    ReplyDelete
  6. உங்களுடைய பதிவைப் படித்தேன் அம்மா!

    மேலோட்டாமாக அம்மாக்காரி, குழந்தையை அதன் போக்கிலேயே விட்டு விடுகிற மாதிரித் தெரிந்தாலும், அதைத் தாஜாப் பண்ணி, உணவையோ மருந்தையோ ஊட்டி விடுகிறாள் அல்லவா, அதைப் போலத்தான் இறைநிலையும், நம்முடைய இயல்பு என்னவாக இருந்தாலும், அதற்குத் தகுந்த சூழ்நிலைகளைக் கொண்டு, நமக்கு வேண்டிய அனுபவத்தையும், அடுத்த படிக்கு ஏறுகிற தன்மையையும் அருளுகிறது.

    பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி இதை வைத்துக் கொண்டு, உண்மையிலேயே அந்த அனுபவத்தைப் பெறவும் முடியும், இல்லை, இது வெறும் கற்பனை, அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உதறி விட்டுப் போகவும் முடியும் இல்லையா?.

    ஒரே விஷயத்தை இரண்டுவிதமாகவும் பார்க்கலாம்! இந்த இரட்டைத் தன்மையைப் புரிந்துகொள்வதில் தான் சூக்ஷ்மமே அடங்கியிருக்கிறது!

    கண்ணன் வந்தான் என்ற குறியீட்டில் உள்ள இரண்டு பதிவுகளைப் படித்தால், இன்னமும் தெளிவு கிடைக்கக் கூடும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!