எங்களுக்கும் கவுஜ எழுதத் தெரியுமில்லே .....?!


இது சத்தியமா இதுக்கு எதிர்க்கவுஜ இல்ல.... தற்செயலா அமைஞ்சது! நம்புங்க!

அட எங்களுக்கும் கவுஜ எளுத வரும்ல......மருதேய்ய்ய்ய்ய்ன்னு ஒருக்காச் சொல்லிப் பாருங்க! மருதையும் கவுஜையும் சேர்ந்தே இருப்பது தெரிய வரும்!

கிளர்ந்தெழும் உணர்வுகள் அடங்கின பிறகு
வளர்ந்திடும் அமைதியின் பாசக் கரங்களிலே
அழிந்தது முடிந்தது எனப் புலம்பாமல்
இழிந்ததன் காரணம் நம்மிடம் தான்
என்பதை உணரும் வேளை வரும்
கண்ணீர் விடுவதை நிறுத்திக் காரியமாற்றும்
உறுதியும் அங்கே கூட வரும்
விடுதலை எவரோ தருவதல்ல
கும்பல்கள் கூச்சலில் விளைவதல்ல
நடந்ததை மாற்றும் வல்லமை இல்லை
நடப்பதைச் சரியாய்ச் செய்யும் வரை
நேற்றைய கதையைப் பேசுதல் பயனில்லை.

இந்தத் தருணம் செய்கிற காரியம்
எந்தவோர் இழுக்கையும் அகற்றிவிடும்
நொந்ததைப் பேசும் நிலைவிடுத்து
வந்ததும் இனி வருவதும் எதிர்கொள்ளும்
இலக்கினைக் கொள்க! இனிது வாழ்க!

இலங்கை மாநகரம் என்ற பதிவில் நண்பர் ராதாகிருஷ்ணன் ஆற்றாமையோடு எழுதியிருந்ததற்கு, வாசித்த எதிர்க்கவுஜ தான் மேலே இருப்பது.

அம்மன் பாட்டு, அம்மாவைப் பாடுவதாக இருக்கும்இந்தப் பக்கங்களில் அவ்வப்போது கவிநயா எழுதும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு எழுதுவது வாடிக்கையாகி விட்டது. அங்கே இருந்து கவிநயா பக்கங்களில் நான் படிச்ச முதல் கவுஜ இதுதான்னு நினைக்கிறேன்! கல், செங்கல் இப்படி எதுவும் வராத தைரியத்தில் கவுஜ அடுத்தடுத்து எழுத ஆரம்பிச்சேன்.

சிறுகுருவிக்கு ஏக்கத்தைத் தந்ததும் நான்
சிறுதுளிக்குள் இருந்துன் தாகத்தைத் தீர்ப்பதும் நான்
சிறுதுளிதான் பெருங்கடலாய் ஆனதை நீ அறியாயோ
சிறுகுருவி நீ சொல்லு! ஏக்கம் எதுக்கென்று!
கன்றும் மறந்து விடும் விளையாட்டு ஆசையிலே
கன்றை மறக்காமல் தாய்ப்பசு கதறுது பார்!
புவனங்கள் படைத்தாலும், தாய்மை போய்விடுமோ?
கன்றுக்குக் குரல்கொடுத்து தாயிங்கு அழைப்பதைப் பார்!

என் அன்னைநீயே இது அவங்க பாட்டு. அதுக்கு எதிர்ப்பாட்டு நம்மோடது.
ஒரேயொரு வார்த்தை சொல்வாய்ன்னு தான் ஆரம்பிச்சாங்க! நமக்கு ஒரே வார்த்தையில், ஒரே எழுத்தில் பதில் சொல்லிப் பழக்கம் இல்லீங்களா, அதான்..?

சரியென்று ஒரு வார்த்தை சொன்னால் சரியாகப்போய் விடுமா?
கதைமுடிவைத் தெரிந்து கொண்டு
கதை படித்தால் சரிவருமா?

பிறவிதொறும் தொடரும் சொந்தம்
மறந்தேதான் போய் விடுமா?
மறந்தால் அது சொந்தமென ஆகிடுமா?
பிறந்ததற்கொரு பொருள் வேண்டாமா?

மாறிமாறிப் பிறப்பதுவும் ஓர் விளையாட்டே!
விளையாட்டை அறிந்துகொண்டால்
வினைஎதுவும் தொடர்வதில்லை!
துயரென்று ஒன்றுமில்லை! என்றுமில்லை!

/சரின்னு சொல்ல வேணாம்; ஏதேனும் சொன்னா போதும் :)/
அப்படீன்னு அவங்க பதில் வேற சொன்னாங்களா, அதனால, நடுவுல கொஞ்சம் வசனம், வசன கவுஜயின்னே வச்சுக்கோங்களேன்!

அதுக்குத்தான்
'கதைமுடிவைத் தெரிந்து கொண்டு
கதை படித்தால் சரிவருமா?'ன்னு ஏற்கெனெவே சொல்லியாச்சே:-)

நாம் இது வரை பார்த்திருக்கும் கேட்டிருக்கும் மகான்களில்,சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அவர்கள் இருவருமே அழுத்தம் திருத்தமாகச் சொல்வது, கடவுள் இந்த ஸ்ருஷ்டியைத் தொடங்கும் போது விளையாட்டாகவே, விளையாடுவதற்காகவே தொடங்கினானாம்!அவனுடன் விளையாட்டில் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்வது தான் படைப்பின் ஒரே வேலை!

வள்ளலார் கூட இதைக் கொஞ்சம் சீரியசான வார்த்தைகளில்,
"முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்,
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்"
என்று சொல்கிறார்.

விளையாடும் போது விளையாட்டிலேயே லயிக்கப் பழக்கினால், விளையாடும் போது ஏற்படுகிற வலி தெரியாது. வலியை மட்டும் பார்க்கப் போனால் விளையாட்டு ருசிக்காது! அப்படி விளையாட்டு ருசிக்காமல் போகிறவர்கள் மட்டுமே எனக்கு இதிலிருந்து விடுதலை-பிறவா வரம் தாரும் என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று உத்தேசம்?!

முன்னால் ஒரு பாட்டுக்கு எசப் பட்டா எழுதினது தான்! இங்கே ராமனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ராவணனும் வேண்டியிருக்கிறது.

நடப்பதெல்லாமோர் நாடகமே
நடிப்பதுதான் இங்கே நம்வேலை!
நடப்பதை அவன் செயல் என்றே
நடக்கட்டும் அவன் செயல் என்றே
நடிக்கச் சொல்லிக் கொடுத்தபடி
நடிப்பது மட்டும் நம் வேலை
திரைக்குப் பின்னால் பார்க்கையிலே
ராமனோடு ராவணனும் ஒன்றே என்று தெரியவரும்

நீ எந்தன் உயிரிலேன்னு அவங்க பாட்டெழுதவும், எதிர்க்கவுஜயும் வந்தாச்சு!

உறவென்று சொன்ன பொழுதில் ஓம்காரமாகி வருவாள்
வரமென்று நாடுபவர் சிந்தை குளிரத் தருவாள்
பவமென்னும் பிணியகற்றிச் சுக ஆனந்தம் நிறைப்பாள்
புவனங்கள் காக்கின்ற நாயகி என்னையும் மறப்பாளோ?

மறவாத வரம் வேண்டும்னு அவங்க அம்மாகிட்ட தான் கேட்டாங்க! எதிர்ப்பாட்டு நம்மோடது மறக்காம வந்தது!

விளையாட்டில் ஆசைவரும் விளையாடித்தான் பாரேன்
விளையாட்டு மறந்ததென்றால் பிறவாத நிலை சேரும்!
விளையாடச் சொல்லுபவள் அன்னைதான் என்கையிலே
விளையாட்டை மறுப்பது யார் மறப்பதும் யார் சொல்லேன்!
நினைவே தவமாகும் நிலை சேர்க்கும் வரமாகும்
மறவாத வரமென்றால் பிறவாத நிலைதானே?

இதைப் படிச்சுட்டு, திரு சுப்புரத்தினம் என்கிற சூரி ஐயா, "பொறுமையுடன் நீங்கள் கேட்பீர்கள் தெரியும். ஆனால், . திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேட்கவேண்டுமே !”ன்னு அங்கேயே கேட்டாருங்க!

சுப்புரத்தினம் சார் சொன்னபடி, கேட்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், சாஸ்த்ரீய இசை ஞானம் சுத்தமாக இல்லாதவன் நான். அதைக் கண்டுபிடித்ததாலோ என்னவோ, உங்களுக்கு என்னுடைய பொறுமையைப் பற்றி சரியாகக் கணிக்க முடிந்திருக்கிறது:-)

இது அங்க சொன்னது, சாஸ்த்ரீய இசை ஞானம்ன்ற இடத்துல, எல்லாத்துலேயும்னு வச்சுப் படிங்க! நான் எப்போதும் உண்மையே பேசறவன்னு தெரியுமே?!

ஓமென்றொலிக்கும் ஔஷதம் நீயே !ன்னு அவங்க எழுதினதுக்கு நம்மோட எதிரொலி!

மணியும் மந்திரம் தன்னொடு அவுடதம் ஆனவள் நீயே
பிணிஎதும் அண்டாமல் காப்பவள் நீயே !
கண்ணுள் மணி நீ! சொல்லுள் பொருள் நீ!
கவிதைப் பொருளாய்த் தமிழும் தந்தாய்!

அன்னையும் நீயே! அண்மையும் நீயே
நன்மையும் நீயே! அன்மையும் நீயே!
என்னையும் உன் மயமாக்குவள் நீயே
தன்னையும் அறிந்திடத் தருபவள் நீயே!

இதுல வர்ற ஒரு வார்த்தை, "அன்மை"ன்னா என்ன?ன்னு கேட்டுட்டாங்க! கவுஜ எழுதறத விட தான் எழுதின கவுஜைக்குத் தானே கோனார் நோட்ஸ் எழுதத் தெரிஞ்சிருக்கணும்னு அது வரைக்கும் தெரியாதுங்க!

மருதையில வளர்ந்தவனுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? ..ப்பூன்னு ஊதித் தள்ளிட மாட்டோம்?

எங்க வைகைப் புயல், வடிவேலு எத்தனை படங்கள்ல, குப்புற விழுந்து மீசையில மண் ஓட்டலையே, ஏன்னாக்க நான் விழுந்தது சிமென்ட் ரோட்டுல தானேன்னு சமாளிச்சிருப்பாரு! ஹைய்யோ! ஹைய்யோ!

அன்மை என்பது அல்லாததைக் குறிக்கும். நன்மை என்று சொல்லும் போதே நன்மை அல்லாதது என்ற பாகுபாடும் வந்து விடுகிறது. அதுவாகவும் இருப்பவள் என்ற பொருளிலேயே, அங்கே அந்தப் பிரயோகம்.

'தீது நன்மையெல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை' பாரதியின் காளிபாட்டு.

இப்படிச் சொல்லிச் சமாளிச்சாச்சு! சீத்தலைச் சாத்தனார் யாரும் அந்தப் பக்கமா வரலேங்கிறதால தப்பிச்சேன்!

அம்மா எனக்கொரு வரம் வேணும்..... ன்னு அவங்க கேட்டதுக்கு வரமா வந்த கவுஜ!
உண்டென்றிருந்தாலும் இல்லையென மறுத்தாலும்
கண்ணில் வைத்துப் பார்ப்பதுவும் நானல்லவோ?
கண்ணில் வைத்துப் பார்ப்பதனால் கயற்கண்ணி ஆனவள் நான்
பெண்ணே கலங்காதே மறந்தேன் என நினையாதே!

கற்சிலையில் மட்டுமில்லை கருத்திலும் வந்திடுவேன்
கருணைக்குப் பஞ்சமில்லை வார்த்தைக்கு உருவமில்லை
மண்ணாய் இருப்பதும் நான் உயர் விண்ணாய் இருப்பதும் நான்
எல்லாம் என்செயல் எனும்போது ஏங்குவதும் எதற்காக?

ஏக்கங்கள் தவிர்த்துவிட்டு உயர் ஆக்கங்கள் உறுதிகொள்வாய்!
ஏதுமில்லை துணைஎனக்கே என ஒருபொழுதும் எண்ணாமல்
வேதனைக்கு இடமில்லை சோதனைகள் எதுவரினும்
சோதியாய்த் துணையிருக்கும் தாய் நான் அருகிருக்க!
சிறுகுருவிக்கு ஏக்கத்தைத் தந்ததும் நான்
சிறுதுளிக்குள் இருந்துன் தாகத்தைத் தீர்ப்பதும் நான்
சிறுதுளிதான் பெருங்கடலாய் ஆனதை நீ அறியாயோ
சிறுகுருவி நீ சொல்லு! ஏக்கம் எதுக்கென்று!

கன்றும் மறந்து விடும் விளையாட்டு ஆசையிலே
கன்றை மறக்காமல் தாய்ப்பசு கதறுது பார்!
புவனங்கள் படைத்தாலும், தாய்மை போய்விடுமோ?
கன்றுக்குக் குரல்கொடுத்து தாயிங்கு அழைப்பதைப் பார்!

பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கையெழுத்தில்....



20 comments:

  1. ஆஹா மிகவும் அருமை ஐயா.

    அற்புதமாக கவிதை எழுதுகிறீர்கள். நல்ல சந்தத்தோடு அமைந்து இருக்கிறது. விளையாட்டுப் பற்றிய விசயங்கள் மிகவும் சிறப்பு.

    கவுஜ என ஏன் சொல்கிறார்கள்? வலைப்பூப் பக்கம் வந்தபின்னர்தான் இந்த வார்த்தை எனக்குப் பழக்கம். கவிழ்த்துவிடு எனப் பொருள் படுமா?

    சோதியாய் துணையிருக்கும் தாய் என இறைவன் பற்றிய கவிதை வரிகள் வெகு பிரமாதம். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

    ReplyDelete
  3. /கவுஜ என ஏன் சொல்கிறார்கள்? /

    எனக்கும் இந்த இணையத் தமிழ் வார்த்தைகள் இன்னமும் பிடிபடவில்லை!

    கவுஜ படிக்கவர்றவங்களைக் கவுத்துவிடுவதால் கூட இருக்கலாம்! நீ என்னைக் கவுத்தியா நானும் உன்னைக் கவுக்கிறேன் என்று எதிர் கவுஜ பாடுகிற மாதிரி கூடத் தோன்றும்!

    ReplyDelete
  4. // கடவுள் இந்த ஸ்ருஷ்டியைத் தொடங்கும் போது விளையாட்டாகவே, விளையாடுவதற்காகவே தொடங்கினானாம்!//

    கடவுள் விளையாட நான் ஆள் கிடையாது!
    அப்படியே விளையாட வேண்டுமென்றால் என்னுடன் நேருக்கு நேர் வந்து விளையாட வேண்டும், ஒளிந்திருந்து அழுகுணி ஆட்டம் ஆடுவது எனக்கு பிடிக்காது!


    00

    உங்களுக்கு கவுஜ என்றால் என்னவென்று புரியவில்லை!
    சீரியஸாக ஒரு மேட்டரை எடுத்து கொண்டு அதை வைத்து புனைதல் கவுஜ ஆகாது!

    ReplyDelete
  5. அடக் கடவுளே! வால்பையனின் சுட்டித்தனம் ஹா ஹா! ஏனுங்க அருண், இதை நீங்க கடவுள்கிட்டவே நேரடியா சொல்லலாம்ல. தூதுவராகப் போக யாருமிங்கே தயாரில்லை!

    ReplyDelete
  6. எனக்கும் கூட,நான் ஆளா இல்லையான்னு தெரியாது. ஆனா, இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் படைப்பின் ஆரம்பத்திலேயிருந்து நடந்துகிட்டுத் தான் இருக்கு! நான் கூட, "அட, பயலே, நீ மட்டும் என் கைக்குச் சிக்கும் ஒரு நேரம் வரும்! அப்பா உன்னை,,ன்னு கறுவிக் கூடப் பாத்துட்டேன், கறுவின கதையை கண்ணன் வந்தான்னு குறியீட்டுச் சொல்லை வைத்துப் படிச்சுப் பாருங்க, அந்தப்பய என்னை எப்படி ஏமாத்திட்டுப் போயிட்டான்னு புரியும்!

    கவுஜ இலக்கணம் எனக்கு மட்டும் தான் தெரியாதுன்னு நெனைச்சேன்! லண்டன்ல அதுக்கும் ஒரு சேக்காளி இருக்கார்னு மேல பின்னூட்டத்தைப் பாத்தா பொறவு தான் நிம்மதியாச்சு:-))

    நாலு பதிவர் வட்டம், சதுரம், முக்கோணத்துல கத்துக்க மாட்டோமா என்ன!!

    ReplyDelete
  7. /இதை நீங்க கடவுள்கிட்டவே நேரடியா சொல்லலாம்ல//

    அவருகிட்டத்தான் சொல்லிகிட்டு இருக்கேன்!

    ReplyDelete
  8. மனோன்மணீயம் படித்திருக்கிறீர்களா, ராதாகிருஷ்ணன்?

    கெஞ்சினால் மிஞ்சுவன் மிஞ்சினால் கெஞ்சுவன் என்று ஒரு வரி வரும். எங்க வால்சும் அப்படித் தான் வீராப்போடு, நான் கெஞ்ச மாட்டேன் போ என்று மிஞ்சிப் பார்த்தாவது அவன் கெஞ்சி வருவானா என்று முயற்சிக்கிறார்!

    ReplyDelete
  9. //எங்க வால்சும் அப்படித் தான் வீராப்போடு, நான் கெஞ்ச மாட்டேன் போ என்று மிஞ்சிப் பார்த்தாவது அவன் கெஞ்சி வருவானா என்று முயற்சிக்கிறார்! //

    இது தான் ஞாபகம் வந்துச்சு!
    பெண்களுக்கு ஆண்கள் கெஞ்சுவது பிடிக்கும்!
    ஆண்களுக்கு பெண்கள் கொஞ்சுவது பிடிக்கும்!

    00

    பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய செய்திகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்!
    சும்மா மொட்டராசன் குட்டையில விழுந்த கணக்கா கடவுள்னு ஒண்னு இல்லைன்னு சொன்னா யாருக்கும் புரியாது, அதை இன்னும் தெளிவாக சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  10. வால்பையன் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாகச் சொன்னதில் சந்தோஷப்பட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது:

    நல்லதொரு தொடக்கம்!

    ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னு அப்ப அப்ப எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க!

    ReplyDelete
  11. மதிப்பிற்குரிய திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு,வணக்கம்.தாங்கள் என் ‘எதிர்வினை’ பற்றிய இடுகைக்கு அனுப்பிய மின் அஞ்சல் கிடைத்தது.தங்கள் மின் அஞ்சல் முகவரி அதில் கிடைக்காததால் தங்கள் வலைக்குள் வந்து இக் கடிதத்தை எழுதி விட்டமைக்கு மன்னியுங்கள்.
    தங்கள் கடிதத்தின் ஒவ்வொரு வரியும் அட்சர லட்சம் பெறும். கல்விக் களத்திலும் அதிகார உயர் மையங்களிலும் இருப்போர்...நேரடியாகக்களத்திலுள்ளோர் அலட்சியமும் பாராமுகமும் காட்டும் வரை நம்மைப் போன்றவர்கள் எழுத்தின் வழியாகத்தானே மனக் குமுறல்களை...ஆதங்கங்களை இறக்கி வைத்தாக வேண்டியுள்ளது.
    தங்கள் பார்வைக்கு மேலும் ஒரு கல்வி சார் இடுகை
    மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?http://masusila.blogspot.com/2008/11/blog-post_7413.html

    நானும் மதுரையைச் சார்ந்தவள் என்பதை என் வலை வழி அறிந்திருப்பீர்கள்.உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.தொடர்ந்து தங்கள் வலையை நானும் பார்க்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
    எம்.ஏ.சுசீலா..

    ReplyDelete
  12. கவிஜ என்றால் வருகையை மட்டும் பதித்துவிட்டு போகிறேன். :-)

    ReplyDelete
  13. உங்களுடைய வலைப்பக்கங்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வந்து படித்திருக்கிறேன் அம்மா! நீங்கள் சுட்டியிருந்த பதிவும் ஏற்கெனெவே படித்ததை, இப்போது மறுபடியும் படித்து உறுதி செய்து கொண்டேன். கல்வித் துறையில், அடிப்படையான மாற்றங்கள் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆசிரியர்களிடமிருந்து தான் அதற்கான முதல் குரல் வரவேண்டும்! ஆசிரியர்களிடமிருந்து தான் அதற்கான மாற்றம் குறித்த சிந்தனையும், மாற்று முறைகளும் இன்னமும் ஆழமாக விவாதிக்கப் படவேண்டும்.

    சுய சிந்தனையோடு கூடிய அறிமுகத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் அம்மா!

    ReplyDelete
  14. கவுஜன்னதும், கோவி கண்ணன் கொஞ்சம் மிரட்சியோடயே சொன்னது:

    /கவிஜ என்றால் வருகையை மட்டும் பதித்துவிட்டு போகிறேன். :-) /

    நீங்களும் நாலு கவுஜ எளுதி கலக்கினால், வெறும் அட்டெண்டன்ஸ் கொடுக்கறதோட மட்டும் இல்லை, உலக மகா டாக்டராகவே ஆயிடலாம்! தமிழ்நாட்டுல, டாக்டர் பட்டம் வாங்கறது ரொம்பவே ஈசி!

    ReplyDelete
  15. வால்பையன் ஞாபகம் வந்து சொன்னது:

    /பெண்களுக்கு ஆண்கள் கெஞ்சுவது பிடிக்கும்!
    ஆண்களுக்கு பெண்கள் கொஞ்சுவது பிடிக்கும்!/

    இதைத்தான் நாயக நாயிகா பாவம் என்று பக்தி மார்க்கம் சொல்லிக் கொடுக்கிறது.ஆண்டவன் ஒருவனே நாயகன். பெண்வயிற்றில் பிறந்த அனைவருமே பெண்தன்மை கொண்டவர்கள் தான், சோதியில் தோன்றிய கந்தன் ஒருவனே ஆண் என்று வாரியார் ஸ்வாமிகள் சொல்வார். அந்த வகையில்,

    வால்பையன் "வர மாட்டேன், பேச மாட்டேன் போ" என்று சொல்வது கூட, கொஞ்சலாகவே தோன்றுகிறதோ என்னவோ:-))

    ReplyDelete
  16. //பெண்வயிற்றில் பிறந்த அனைவருமே பெண்தன்மை கொண்டவர்கள் தான், சோதியில் தோன்றிய கந்தன் ஒருவனே ஆண் என்று வாரியார் ஸ்வாமிகள் சொல்வார். அந்த வகையில்,//


    நல்லாயிருக்கு கதை!
    இதை வைத்து ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் கதை எழுதலாமா!?

    ReplyDelete
  17. ஒ! தாரளமா எழுதலாமே!

    கொஞ்சம் தன்னைச் சோதிச்சுப் பாத்தாலே, இது உண்மைதான்னு தெரிய வரும்! சயன்ஸ் கதையாவே எழுதுங்க! ஃபிக்ஷநெல்லாம் வேணாம், தேவையும் இல்லே!

    ReplyDelete
  18. கூடலூரில் இருந்து டிஷ்நெட் சேவை ஐ பி எண் 58.68.94.183 வழியாகத் தொடர்ந்து,உலவுடாட்காம் திரட்டியில் இணைத்துக் கொள்ளச் சொல்லும் நண்பருக்கு வணக்கம்.

    மூன்று சிறிதுமல்லாத, பெரிதுமல்லாத திரட்டிகளில் இந்தப் பதிவு திரட்டப் படுகிறது. ஒன்றே ஒன்றில் இருந்து மட்டும் தான், வாசகர்கள் தேடி வருகிறார்கள். இப்படி இணைத்திருப்பதும் கூட திரட்டிகளின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமே.தேவையான விவரங்கள் இவைகளில் இருந்தே கிடைத்து விடுவதால், உங்களுடைய அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாததற்காக வருந்துகிறேன்.

    தமிழ் வலைப் பதிவுகளைத் திரட்டுவது மட்டும் தான் உங்களது நோக்கம் என்றால், நீங்களே திரட்டி கொள்ளலாமே!பிற திரட்டிகளில் கொஞ்சம் வாக்கு வாங்கும் பதிவுகளாகப் பார்த்து பார்த்து இணைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்கிறீர்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. ஏன் என்று உங்களை நான் கேட்கப் போவது இல்லை.

    புதிதாக எந்த ஒரு திரட்டியிலும், இணைத்து கொள்ள எனக்கு ஆர்வமில்லை. படிக்க வருகிறவர்கள் ஒன்றிரண்டு பேரே ஆனாலும், அவர்கள் வழியாக புது நண்பர்கள், வாசகர்கள் கிடைத்தால் போதும்! இல்லை என்றாலும், எனக்கு வருத்தமில்லை!

    ReplyDelete
  19. அதுக்குள்ளையும் இவ்வளோ கும்மியா?

    கவுஜையும், கும்மிகளும் ரொம்பவே இரசிக்கும் படி இருக்கிறது. உண்மையில், இங்கிருக்கும் பின்னூட்டங்கள் பல பதிவுகளுக்கு தலைப்பாகிடும் போலருக்கே?

    ஏற்கனவே, என் பின்னூட்டங்களுக்கு பதில் போட்டாலே, இன்னும் ஒருமாசம் எழுத வேண்டி இருக்கு.
    :)

    ம்ம். நடக்கட்டும் சபை.

    --வித்யா

    ReplyDelete
  20. விதூஷ் கொஞ்சம் போல ஆச்சரியப்பட்டுச் சொன்னது:

    /உண்மையில், இங்கிருக்கும் பின்னூட்டங்கள் பல பதிவுகளுக்கு தலைப்பாகிடும் போலருக்கே?/

    பதிவுகளுக்குத் தலைப்பு, விஷயம், அப்புறம் கவுஜ தேவைப் படுகிறவர்கள் இங்கே அணுகவும்! தொடர்பு கொள்ளவும்! அப்பப்ப கொஞ்சம் அக்கப்போரும் கிடைக்கும்!

    இது கொசுறு! இலவசம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!