ஒரு புதன் கிழமை! உ போ ஒ இல்லை!


இவரு பிரெஞ்சுக்காரராம்! தாடி வளர்க்கிறது கஷ்டமாய் இருந்திருக்கும் போல! மீசையிலேயே தோட்டம் வளர்த்திருக்கிறார்.

இவரு இத்தாலிக்காரரு! மீசையோட தாடியும் சேத்துப் பாத்தி கட்டி வளத்திருக்காரு!
முகம் தெரியுதுன்றதால, இவருக்கு ஒண்ணுமே கிடைக்கலையாம்!

இது என்ன கொடுமை சரவணான்றீங்களா? கொடுமையெல்லாம் கெடையாது! நாலு நாளைக்கு முன்னாலஜெர்மனியில்  பிராங்க்பர்ட் நகரத்துக்குப் பக்கத்துல தாடி, மீசை வளர்க்கறதுல கில்லாடிங்களுக்கான உலக அளவிலான போட்டி ஒண்ணு நடந்துச்சாம்.

ஒலக  மகா மீசை அழகன், தாடி அழகன் யார்னு தெரிஞ்சுக்கப் போட்டி நடந்ததாம். மீசை, தாடியை  முறுக்கிக்கிட்டுச் சும்மா  நூத்து அறுபது பேர் கலந்துகிட்டாங்களாம். அதுல இருந்து ரெண்டு, அதிகமில்லை ஜென்டில்மென், ரெண்டே சாம்பிள் தான்!

மீசைக்கு மட்டும்னு ஒண்ணு! மீசை தாடியோட ஒண்ணுன்னு! சரி நம்ம ஊர் மீசை,தாடி எதுவும் போச்சான்னு தெரியல!

ஏனாம்?

உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு விமரிசனம் கிறுக்கி எழுதித் தள்ளுற பதிவுலகக் கடமையிலே கண்ணாயிருந்துட்டாங்கன்னு, நடேசன் பூங்காப் பக்கம் திரியற பட்சி வந்து சொல்லிச்சு.

நாமும் பதிவுலகத்துல, குப்பை கொட்ட வந்திருக்கிற படியால, கடமைய வுட்ற முடியுமா?அதுக்காக, உ போ ஒவுக்கெல்லாம், உலகத் தர ரேஞ்சுக்கா   விமரிசனம் எழுத முடியும்?

அதனால,ரீமேக்  படத்துக்கு ஒரு ரெடிமேட் விமரிசனம், அதான், ஏற்கெனெவே யாரோ கொஞ்சம் நல்லாவே எளுதின  விமரிசனம், அத்தைப் போட்டு, நம்மோட பதிவுலகக் கடமையைக் கும்மியடித்துச் செஞ்சிடுவோம்!


from அம்மாஞ்சி by அம்பி 
திஸ்கி ஒண்ணு! --ஒரு புதன்கிழமைன்னு சரியாப் புரிஞ்சுக்கணும்.
விவகாரமா "ஏ " தரமான புதன் கிழமையான்னெல்லாம் கேட்டுறாதீங்க! வேறொண்ணுமில்லை ....பதில் தெரியாது!  இப்ப விமரிசனத்தைப் பாக்கலாமா?


"சில படங்கள் தான் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது நம் நினைவை விட்டு அகலாமல் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லை, நான் குருவி வகையறாக்களை பற்றி இங்கு பேசவில்லை. அந்த வகையில் வெட்னெஸ் டே குறிப்பிடதகுந்த படம். என் பதிவுக்கு தவறாமல் வரும் நிவி அக்கா சிபாரிசு செய்திருந்ததாலும், பல ஊடகங்களில் பாரட்டபெற்றதால் ஒரு வித எதிர்பார்ப்போடு இந்த படத்தை அணுகினேன்.

நயந்தாராவின் அபரிதமான நடிப்பால் தான் தமிழில் கஜினி கன்னாபின்னாவென ஓடியதாக்கும்! என்று அள்ளிவிட்டு என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் வெட்னெஸ் டே டிவிடியை பண்டமாற்றம் செய்து விட்டேன்.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு ஒற்றை பையுடன் தனி கிளைடர் விமானத்தில் ஜெய்பூர் அரண்மனை முன் வந்திறங்கி, உச்சா போக கூட ரீட் அண்ட் டெய்லர் சூட் மட்டும் அணிந்து காக்ரா சோளி, சராரா, பாந்தினி சில்க்ஸ் புடவைக்கு கை இல்லாத ரவிக்கையுடன், கார்னியர் லிப்ஸ்டிக் மின்ன "ஓ ஷப்பா, ஹை குடியே" என ஐநூறு பில்ஸ்பெர்ரி சக்கிப்ரேஷ் மைதாமாவு பெண்களுடன் ஆட்டம் போட்டு அதில் வரும் அடுத்தவன் பெண்டாட்டியை டாவடித்து, பின் அவள் தங்கச்சிக்கு தாலி கட்ட குதிரையேறி, முந்தின காதலிக்கு கண்ணீருடன் அல்விதா சொல்லும் ஷாரூக், சல்மான்களுக்கு மட்டுமே கதை பண்ணுவோம் நாங்கள் என்ற அடிப்படை நியூட்டன் விதிகளை தவிடுபொடி ஆக்கி விட்டார் இந்த படத்தின் டைரக்டர் நீரஜ் பாண்டே.

இந்தியாவின் நிர்வாக உள்கட்டமைப்பு, முக்ய முடிவுகள் எடுக்கும் திறன், தீவிரவாத தடுப்பு மற்றும் நீதி விசாரணை, தண்டனைகளின் தாக்கம் இவற்றை கொஞ்சம் கூட தயவுதாட்சண்யமின்றி உள்ளது உள்ளபடி காட்சிகளாக்கிய இயக்குனரின் தைரியத்தை எண்ணி நான் பிரமித்து நிற்கிறேன்.


ஒரு இந்தி படத்தில் ஸ்கர்ட் அணிந்த நாயகி கிடையாது, டைட் பனியனும், ரேபான் கிளாஸ் அணிந்த நாயகனும் இல்லை, ஏ.கே 56 ரக துப்பாக்கி, சாட்டிலைட் போன் வசதி கொண்ட வில்லனும் இல்லை.


பின்ன என்ன தான்யா இருக்கு இந்த படத்துல?


கதை இருக்கு, திரைக்கதை இருக்கு, உண்மைகளை டமால்னு போட்டுடைக்கும் தைரியம் மட்டும் இருக்கு.

ஒரு சாமான்யன் மனதில் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படி இருக்கும்? அதை அவன் எப்படி எதிர்கொள்வான்? என்பதை இதைவிட சிறப்பாக யாரும் காட்டமுடியாது. வசனங்கள் பல இடங்களில் பச்ச மிளகாய் ரகம்.
ஒரு மைக், வோடோபோன் நாய்குட்டி போல பின் தொடரும் கேமிராமேன் சகிதம் இன்று இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் பேட்டி எடுக்கும் அரை டிக்கெட்டு ஜர்னலிஸ்ட்டுகளை செமையா கலாசி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் மும்பை குண்டுவெடிப்பில் இந்த அரை டிக்கட்டுகளின் அட்டகாசத்தை நாடு நன்கு அறியும்.

Spoofing என்று சொல்லபடும் பகடி பண்ணுதல் எப்படி? என்பதை இந்த படத்தை பார்த்து உதவி இயக்குனர்கள் கற்று கொள்ளலாம்.

ஒரு வளர்ந்து வரும் ஹீரோ தமக்கு வரும் கொலை மிரட்டலுக்கு பயந்து போலிஸ் கமிஷனரிடன் உதவி கேட்கும் போது தான் ஒரு மைனாரிட்டி, எனவே தனக்கு பாதுகாப்பு வேணும்! என சொல்லும் காட்சி தூள்.

ஒரு வலுவான, துரிதமான திரைகதை எப்படி இருக்க வேண்டும்? எனபதற்க்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. படத்தில் நஸ்ரூதீன் ஷாவும், அனுபம் கேரும் மிக இயல்பாக நடித்து உள்ளனர். "ஏய்ய்ய், நான் பாக்கத் தான் சுள்ளான், சூடானா சூரியன்" என கத்தும் நம்மூர் பஞ்ச் பரமசிவன்கள் அவசியம் இந்த இருவரின் நடிப்பையும் பார்க்க வேணும்.

எனக்கிருக்கும் ஒரே கவலையெல்லாம் எக்காரணம் கொண்டும் இந்த படத்தின் தமிழ் உரிமையை நம்மூர் ரீமேக் ராஜாக்களான காப்பி-பேஸ்ட் ரவியோ, விஜய்யோ வாங்கி விட கூடாது. :)

மொத்தத்தில் 'ஏ வெட்னெஸ் டே' இந்தியாவின் மெத்தன போக்குக்கு ஒரு சவுக்கடி."

அம்பி எழுதின விமரிசனத்தைத் தேடியெடுத்துப் படிச்சப்புறம்  தான் தோணிச்சு!அப்படியே ரீமேக் ராஜா பட்டியலோடு சொதப்பல் ராஜா கமலையும் சேர்த்துக் கொண்டிருக்கக் கூடாதா?

ஆவநாழி, நளதமயந்தி தயாரிச்சப்பல்லாம், அதுல தான் நடிக்காம, சத்யராஜையும், மாதவனையும் நடிக்க வச்சதனாலதான்  படத்தையே பாக்க முடிஞ்சது! கமலுக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை வந்ததுன்னு தான் தெரியல!

கேபிள் காரர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுன்னு சொல்றார். இன்னொருத்தர், சென்னையில மட்டும் தான் கொஞ்சம் ஓடுது, இன்னமும் மத்த இடங்களில் பிக் அப் ஆகலேங்கிறார்.

பதிவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து, பதிவுலக யுத்தத்தின் அடுத்த சீசன் களை கட்ட ஆரம்பித்தாகி விட்டது!

நல்லா  அடிச்சுக்குங்க  ராசா!  நல்லா இருங்க! வேறென்னத்தைச் சொல்றது?

உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு

 உண்மைத்தமிழன் சரவணன் சார்! பதிவுலகக் கடமையைச் செஞ்சாச்சு!குறிச்சு வச்சுக்கங்க!

8 comments:

  1. // இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து, பதிவுலக யுத்தத்தின் அடுத்த சீசன் களை கட்ட ஆரம்பித்தாகி விட்டது!

    நல்ல அடிச்சுக்குங்க ராசா! நல்லா இருங்க! வேறென்னத்தைச் சொல்றது? //


    என்னங்க இதுக்கே இப்படி சொன்னா, உலகத்தமிழ் மா நாடு வருதுல்ல அதுல பாருங்க விமர்சங்கள் தூள் பறக்கும்.

    ReplyDelete
  2. தமிழ்மணம் திரட்டியில் சங்கமித்துவிட்டீர்கள், பார்த்தேன். புதிதாக சேர்ந்திருக்கும் பட்டியலில் இருந்தது.

    வெட்னஸ்டே விமர்சனம் - ஏற்கனவே நீங்கள் பலபதிவுகளில் பின்னூட்டங்களில் சொல்லி இருந்ததன் தொகுப்பாகப் பார்க்கிறேன்.

    அப்பறம் மீசைகள், நம்மூறு மா.பொ.சி மீசைக்கு ஈடாகுமா ? கட்டபொம்மன் படத்தில் சிவாஜி வைத்திருந்த மீசைக்கு ஈடாகுமா ?

    மீசை கூட மயிர்தான், அது இருக்கும் இடத்தைப் பொருத்தும், நபரைப் பொருத்தும் தான் அதில் கம்பீரம் ஏற்படுகிறது. ஆட்டுக்கு தாடி இருந்தாலும் சிங்கத்து தாடியை பிடறின்னு சொல்வது போல் சொல்ல முடியாது இல்லையா ?
    :)

    ReplyDelete
  3. A Wednesday படத்திற்கான விமரிசனம் நான் எழுதினது இல்லை. வேறொருவர் பதிவில் இருந்ததை அப்படியே எடுத்துக் கொண்டது. தலைப்பின் மீது சொடுக்கினாலே லிங்க் கிடைக்கும்.

    இங்கே கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான பதிவர்கள், அதில் நீங்களே மூன்று தடவை பதிவு எழுதியிருக்கிறீர்கள், வேறு சிலபேர், இரண்டு தடவை, குறைந்தபட்சம் இந்தப்படத்தைப் பற்றி முன்னூறு பதிவுகளுக்கும் மேல் வந்திருக்கிறதென்றே தெரிகிறது.

    கமலைக் கிழிப்பது, அல்லது காப்பாற்றுவது ஒருபக்கம் கிடக்கட்டும், இந்தப் படம் வசூலில் வெற்றியா, இல்லை ஊத்திக்கொண்டதா என்ற ஆராய்ச்சி செய்த அளவுக்கு, தங்களைச் சுற்றி நடக்கும் அவலங்களுக்குத் தாங்கள் வாய் மூடி மௌனிகளாக இருப்பதே முக்கியமான காரணம் என்று யோசிக்கத் தோன்றுகிறதா?

    சென்ஷியின் பதிவில், மதத்தின் பெயரால் அவமானப்படுத்தப்பட்டது உங்களுக்கு நடந்திருக்கிறதா என்ற கேள்வி, இங்கே மதுரைப் பதிவர் ஸ்ரீ, ஒரு கவிதை பாப்பாரத் தா.......என்று வசவு நாறுவதை, ஒரு கவிதையாக!

    போலி டோண்டு விவகாரம், செயற்கையாக அல்லது வீம்புடனேயே புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஒரு பக்கம்! கமல் பாப்பான் , இஸ்லாமியரைத் தீவீரவாதி என்று இழிவுபடுத்திவிட்டார் இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம்.

    எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? ஆற்றாமை அளவுக்கு அதிகமாகிவிடும் போது என்னையே நக்கலடித்துக் கொள்வதுதான் மிகச் சிறந்த வழியாகத் தோன்றுகிறது!

    ReplyDelete
  4. பித்தன் ஐயா! வாங்க, முதல் முறையா நம்ம பக்கத்துக்கு வந்திருக்கீங்க!

    உலகத்தமிழ் மாநாட்டில் அடித்துக் கொள்வது வேறுமாதிரி இருக்கும். ஏற்கெனெவே நடந்த மாநாடுகளில் கொஞ்சம் தேத்திக் கொள்ளத் தெரிந்த அதிகாரிகள், இப்போதும் சான்ஸ் கேட்டு அலைகிற செய்தியை நேற்று படிக்க நேரிட்டது!

    சிங்கப்பூரில் தமிழ் ஒருங்குறியைப் பொது முறையாக அரசு அறிவித்து, மாறிக் கொள்ள அரசு கொஞ்ச கால அவகாசமும் கொடுத்திருக்கும் செய்தியை அறிந்திருக்கும் எனக்குத் தமிழ் நாடு, தமிழக அரசு என்று பெயர் மட்டும் வைத்துக் கொண்டு, இன்னமும் டாப், டாம் என்ற பழைய முறைகளிலேயே ஒப்பேற்றிக் கொண்டிருக்கும் அவலம் கேவலமாகவே படுகிறது.

    கணினித் தமிழ் வளர்ப்பதில் மட்டுமல்ல, தமிழ் வளர்ப்பதிலும் உள்ளூர் நிலவரம் ரொம்ப மோசம்!

    ReplyDelete
  5. ம பொ சி என்றவுடன் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள், சென்னை நங்கநல்லூரில் ஒரு பொது நிகழ்ச்சியில், சந்தித்த நினைவு விரிகிறது. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு அவர் எழுதிய புத்தகத்தை, அதன் எளிமையைக் கண்டு ஒரு விதமான அபிமானம் என்றால், கீழ்நோக்கிக் கவிழ்ந்திருக்கும் மீசை அதுவே ஒரு அழகு என்பதும் நினைவுக்கு வராமல் இருக்குமா?

    சிறுவயதில், முறுக்குமீசையுடன் திரிந்த நாட்களில், தந்தையார் முன்பே மீசையை முறுக்கி அடிவாங்கி, அதற்குப் பின்னால், வாழ்க்கையில் மீசையை முறுக்கிக் கொண்டதே இல்லை என்பதை மிக நகைச்சுவையாகத் தன்னுடைய நினைவுகளை, அனேகமாக கல்கியில் தான் என்று நினைக்கிறேன், படித்ததும் நினைவு வருகிறது.

    காந்தீயவாதியாக, எளிமையாக நேர்மையுடன் வாழ்ந்த ஒரு நல்ல மனிதர்! கடைசி நாட்களில், எம்ஜியாரிடம், ஒரு அங்கீகாரத்துக்காக, பதவிக்காக, சேர்ந்து இருந்ததையும் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  6. நான் ரெண்டு படத்தையும் பார்க்கல!
    ஆனா இங்க வர்ற சூடான உரையாடல்களை அறிந்து கொள்ளும் பொருட்டு சீட்டு போட்டுகிறேன்!

    ReplyDelete
  7. இன்னும் இந்தப் படத்தைப் பாக்கலையா?

    இன்னொரு ஹோலி ஸ்மோக் ஆகிடாம.........
    ரொம்பவுமே நல்லது! எங்களுக்குத் தான்:-))

    ReplyDelete
  8. //அப்படியே ரீமேக் ராஜா பட்டியலோடு சொதப்பல் ராஜா கமலையும்//

    வசூல் ராஜான்னு போட்டிருந்தா, இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்...

    நல்ல பார்வை சார்..

    வால், நீங்க தமிழ் படம் பார்க்காம இருக்கிறதுதான் நல்லது... எழுத்தாளர் உங்களுக்கும், வாசகர்கள் எங்களுக்கும்... :)

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!