அது அந்தக்காலம்! ஆனால் இதே தேதியில்!


சென்ற பதிவு படிக்க வந்தவர்களைக் கொஞ்சம் அதிகமாகவே மிரட்டியிருக்கிறது போல!


அல்லது புவனேஸ்வரி படம் போதுமே என்று தலைப்பில் போட்டுவிட்டு, படம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பார்களோ?


ஏற்கெனெவே உண்மைத் தமிழனுக்குப் போட்டியாக நீளமான பதிவுகளைப் போடுகிறீர்களா என்ற கேள்வியும் வந்து விட்டது. உண்மைத்தமிழனுக்குப் போட்டியாக என்னால் மட்டுமல்ல, வேறு எவராலும் இங்கே முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்! நீளமாக அல்ல என்பதை அடிக் கோடிட்டுக் கவனிக்கவும்!!


அதனால், இந்தப்பக்கத்துக்கு வந்து படித்து, அல்லது படிக்காமலேயே களைப்படைந்து விட்ட என்னுடைய 'செல்லக் குட்டி' வாசகர்களுக்கு ஆறுதலாக, இந்தப் பதிவு நீளம் குறைக்கப்படுகிறது. குட்டிக் குட்டிச் செய்திகளாகக் கொஞ்சம்!


இன்றைக்கு ஹிந்துவில் பத்திவிளம்பரங்கள் பகுதியில், விளம்பரமில்லாத இடைவெளியை சுவாரசியமான மேற்கோள்களோடு நிரப்புவார்கள். செய்திகளைவிட சமயத்தில் விளம்பரங்களே, நடுநடுவே இந்த மாதிரி வரும் நிரவல்களுமே படிக்க சுவாரசியமாக இருக்கும்! மாதிரிக்கு ஒன்று.


"Histories make men wise, poets, witty,

the mathematics, subtle,


natural philosophy,deep, moral, grave,


logic and rhetoric, able to contend."





--Sir Francis Bacon

ஃபிரான்சிஸ் பேகன் என்ற இந்த ஆங்கிலேயே தத்துவ அறிஞர், ஒரு சகலகலா வல்லவராகவும் இருந்திருக்கிறார். ராஜதந்திரியாகவும், விஞ்ஞானியாகவும், வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும், எல்லாவற்றிற்கும் மேலே எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார்.

இங்கே கூத்தடிக்கிறவனுக்கெல்லாம் கூவிக் கூவி டாக்டர் பட்டம் வழங்குவதுபோலவோ,
சரக்கு கொஞ்சம் இருந்தாலே போதும், சகலகலா டாக்டர்களாகி விடுவது மாதிரியோ, அந்த நாட்களில் இல்லை. மேலே சொன்ன ஒவ்வொரு துறையிலும் பேகனுக்கு நிஜமாகவே விஷய ஞானம் இருந்திருக்கிறது!

Knowledge is Power என்று ஒரு சொற்றொடரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா, அது ஃபிரான்சிஸ் பேகனுடைய வார்த்தைகள் தான்!

ஃப்ரீமேசன்ஸ் என்று ஒரு குழுவைப்பற்றிய விவரணங்கள் டான் பிரவுன் நாவல்களில் வருமே! நினைவுக்கு வருகிறதா? பேகன் ஐயாவும் அப்படிப்பட்ட குழுவின் அங்கத்தவர்தான்!

சரித்திரம் மனிதர்களை புத்தியுள்ளவர்களாகச் செய்கிறது என்கிறார்! எல்லோரையுமா?
அதன் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களை மட்டுமே என்பது வெளிப்படை!
நாத்திகத்தைப் பற்றிய கட்டுரைகள் என்ற தலைப்பிலான கட்டுரை வரிசை ஒன்றில் பேகன் முத்தாய்ப்பாக இப்படிச் சொல்கிறார்: "கொஞ்சம்போல தத்துவத்தைப் படிக்கும்போது (அல்லது மேம்போக்காக மேய்ந்து விட்டுப் போகும்போது) மனித மனம் நாத்திகத்தைக் கண்டடைகிறது;அதுவே ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது மதங்களின் உள்ளார்ந்த உண்மைக்கு கொண்டு வந்து சேர்க்கிறது."

"a little philosophy inclineth man’s mind to atheism; but depth in philosophy bringeth men’s minds about to religion." 

இங்கே சமயங்கள் என்று சொல்லப்படுவது, அவைகளின் உண்மையான அடிநாதத்தை மட்டுமே, மதங்கள் என்று இன்றைக்குக் கொச்சையாகப் புரிந்துகொள்ளப்படுவது போல அல்ல!
ooOoo


30 அக்டோபர் 1959 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் இருந்து:

"The split in the Indian Communist Party over the attitude to be adopted to Chinese aggression on our border areas, is likely to go very deep and may decide the future of the party in this country. While leaders like Mr. Ranadive have consistently held China up as the model and accepted Peking’s leadership for Asia, Mr. Dange has openly criticised Chinese moves, both in Tibet and on the Indian border."


கம்யூனிஸ்ட் எனப்படுபவர் யாரெனில் மாஸ்கோவில் மழை பெய்தால் இங்கே குடை பிடிப்பவர்கள் என்று சொல்வார்கள். சீனாவில் பெய்தாலும் இங்கே குடைபிடித்துக் கொண்டே சண்டையும் போட்டுக் கொள்வார்கள் என்பது தெரியுமோ?


சீனாவுடனான பிரச்சினை கொதி நிலையிலேயே கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது! இதை விட வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி விட முடியுமா என்ன?


சுருக்கத் தெரிந்தவர்கள் மட்டும், காதோடு வந்து சொல்லுங்கள்!  
வால் பையன்களுக்கு 'நறுக்'கென்று நாலே வார்த்தைகளில் சரித்திரத்தைச் சொல்ல வேண்டுமாம்!

ooOoo
ஹிந்துவுக்கு அவ்வப்போது இடதுசாரிகளின் மீது கரிசனமும் பாசமும் பொங்கி வரும்.இன்றைக்குப் பேப்பரில் கூட, சுரேந்தர் வரைந்த கார்டூன் அப்படிக் கரிசனமாகத் தான் தெரிகிறதே தவிர, உண்மை தெரியவில்லை!

ரயிலை மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருப்பதாக, ரயில்வே ஊழியர்கள் மாநிலக் காவல்துறையிடம் புகார் செய்யப் போனால், மாவோயிஸ்டுகள் எவருமே இல்லை, குரங்குகளாகத் தான் இருக்கும் என்று நக்கலாக எதிர்வினை வந்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த விஷயத்தில், முதல் தகவல் அறிக்கையில் கூட மாவோயிஸ்டுகளை பற்றிய தகவல் எதுவுமில்லையாம்.ஆனால், மம்தாவை மாவோயிஸ்டுகளுடன் சம்பந்தப்படுத்தி மட்டும் தாறுமாறாகப் பேசுவார்களாம்!



சீனா தொடர்ந்து, மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்களும், ராணுவப் பயிற்சியும் வழங்கி வருவது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட்டிருக்கிற நிலையில், மத்திய அரசின் "எங்கோ மழை பெய்கிறது எனக்கென்ன" என்றிருக்கும் எருமைமாட்டு பாவனை தொடர்வது நாட்டு நலனுக்கு நல்லது அல்ல!


சம்பவம் என்பது தனியாக நடக்கிற ஒற்றை நிகழ்வு. சரித்திரம் என்பது ஒரு குணாதிசயத்தை, பொது இயல்பைச் சொல்வது-சம்பவங்களால் ஆனது சரித்திரம். என்றாலும், ஒரு நதி ஓடுவது போல, ஒரு சமூகத்தின் தனி இயல்புகள் என்னென்ன மாற்றங்களை, திருப்பத்தைச் சந்தித்தன என்பதன் தொகுப்பே சரித்திரம்.

இங்கே வரலாறு எவ்வாறெல்லாம் திரிக்கப் பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டு, அல்லது அடிப்படையான விஷயங்களே தெரியாமல் தான் எழுதினது தான் சரித்திரம் என்றமாதிரி வந்துகொண்டிருக்கும் அரைவேக்காட்டுப் பதிவு ஒன்று சாம்பிளுக்கு!

 வரலாறு முக்கியம் தான்! இப்போதாவது  புரிகிறதா திரு. அருண்?


புவனேஸ்வரி படம் போதுமே! வரலாறெல்லாம் எதற்கு?





"இம்சை அரசனின் “வரலாறு முக்கியம் அமைச்சரே” இவ்விடத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது!"


சென்றபதிவில் வந்திருந்த பின்னூட்டம் இது!


வரலாறு முக்கியம் தான் வால்பையன் அவர்களே! அதைவிட முக்கியம் வரலாற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பது! கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் கூட நெய் வடியும் என்பது இந்தப்பக்கங்களில் புழக்கத்தில் இருக்கும் அனுபவச் சொலவடை.


காரணம், வரலாறு என்பதே புனைவு, வெறும் கட்டுக் கதைதானே என்ற அலட்சிய மனோபாவம் இங்கே மிகுந்திருப்பதனாலேயே, இந்த மாதிரித் தெரிந்தே திரித்து, திரிசமன் செய்கிற பேர்வழிகள் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது.


இன்னொரு புறம், வரலாற்றை ஒரு சரியான கண்ணோட்டத்தில் பார்க்கச் சொல்லிக் கொடுக்கிற எந்த உருப்படியான முயற்சியையும் இங்கே அரசும் செய்யாது, ஆசிரியர்களும் செய்ய மாட்டார்கள், தெரியவும் தெரியாது, ஏற்கெனெவே பிரபலமாக இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரை இழிவுபடுத்தி, ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ அடுக்கடுக்காக திரித்துச் சொல்வதன் மூலமே அறிவுஜீவிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு, மிகவும் எளிய வழியாக இங்கே நிறையப்பேர் கிளம்பியிருக்கிறார்கள்.


ஆக, வரலாறு என்றாலே கட்டுக்கதை, யாருடைய ஹீரோயிசத்தையோ தாங்கிப் பிடிக்கிற வெறும் புனைவு, என்று ஒட்டுமொத்தமாகத் தள்ளிவிடும் போக்கு இங்கே நிறையப் பேருக்கு இருப்பதனால் தான், வரலாற்றைத் தங்கள் மனம் போன போக்கில் திரித்தும், இழிவு படுத்தியும் எழுதுகிற அறிவுஜீவிகளின் தம்பட்டம் அவ்வப்போது நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாங்கள் சொல்வது முழுப் பொய் என்பது தெரிந்த பிறகும், நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட இந்த கனவான்கள் தங்களுடைய தவறை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள், திருத்திக் கொள்ளவும் மாட்டார்கள்.


சில காலத்துக்கு முன்னாள், பிஜேபி கட்சியின் முக்கியப் பிரமுகரான ஜஸ்வந்த் சிங், ஜின்னாவைப் பற்றிய தன்னுடைய கருத்தை சர்ச்சைக்குரிய விதத்தில் புத்தகம் எழுதி வெளியிட்டுப் பரபப்பை ஏற்படுத்தியதைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதியிருந்தேன்.


அதில் இருந்து கொஞ்சம் ........


"இந்தப் புத்தகத்தை, உள்ளூர்க் கடைகளுக்கு வந்து சேர்வதற்கு முன்னாலேயே, பரபரப்புச் செய்தியாக்கும் வழக்கமான மார்க்கெட்டிங் தவிர, ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிஎன் என் -ஐ பி என் லைவ் தொலைக் காட்சியில் கரன் தபார் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பேட்டி அளித்திருப்பதன் தொகுப்பை நேற்று மாலை தான் படித்தேன். இன்று காலையில், நேற்று புத்தக வெளியீட்டின்போது ஏழு பேர் கொண்ட குழு புத்தகத்தை அறிமுகப் படுத்தி அல்லது விமரிசனம் செய்ததைப் பற்றியும், வழக்கம் போல ஆர் எஸ் எஸ், ஜஸ்வந்த் சிங்குடைய கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்ன செய்தியையும் படித்தேன்.


பூனை இளைத்தால், எலி வந்து எங்கேயோ தட்டிஆட்டைக்கு வர்றியான்னு கேக்குமாம். அதே மாதிரி, தொடர்ந்து இரண்டு முறை தோற்றால், ஏற்கெனெவே தோற்று நொந்தவனை இன்னும் நூலாக்கும் வேலை எப்போதுமே நடக்கும். பி ஜெ பியிலும் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஜஸ்வந்த் சிங் ஒருபக்கம் புத்தகம் எழுதி, அதைப் பரபரப்புச் செய்தியாக்கிவிட்டு, கமுக்கமாகி விட்டாரென்று செய்திகள் வரும் வேளையில், வசுந்தரா ராஜேவும் அத்வானி வீட்டு வாசல் முன்னால் தனக்கிருக்கும் ஆதரவை நிரூபித்து விட்டு, கட்சியின் முடிவை மீறுகிற எண்ணமே இல்லை என்று பவ்யமாகச் சொல்லி, ராஜ்நாத் சிங்கின் மூக்கை உடைத்திருக்கிறார்.


இதைச் சொல்லும் வேளையில், பி ஜெ பி அரசியல் உள்விவகாரங்களிலோ, நடப்பு அரசியலைப் பற்றி விவாதிக்கவோ,முற்படவில்லை. வால்பையன் மாதிரி, நிறையப்பேர், இங்கே வரலாறு என்பதே கட்டுக் கதை, நம்முடைய வரலாற்றையே என்றைக்கோ எவனோ எழுதி வைத்திருப்பதில் இருந்து தான் தெரிந்துகொள்ள முடிகிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவ்வளவுதான் என்று போய்விடுகிறார்களே, அவர்களுக்காக, ரொம்ப இல்லை ஜென்டில்மேன், சும்மா ஒரு எழுபது வருடங்களுக்குள் நடந்ததையே நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே, அப்புறம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே 'வாலொடு' முன்தோன்றிய மூத்த குடி மக்களுடைய வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்வது -வெறுமனே கேட்டுவிட்டுப் போவதற்காக மட்டும் அல்ல, கொஞ்சம் யோசிப்பதற்காகவும் கூட!"


இப்படி என்னதான் விளக்கமாக, விலாவாரியாக எழுதினாலும் கூட, வரலாறு என்றாலே நிறையப்பேருக்கு பயம் வந்து விடுகிறது. நம்முடைய கல்விமுறை, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுடைய யோக்கியதை, பாடத் திட்டத்தை முடிவு செய்யும் அறிவுக் கொழுந்துகள் இப்படி நிறைய வடிவங்களில் நம்முடைய அறிவை மழுங்க அடித்திருப்பதால், சுயமாக சிந்தியுங்கள் என்று என்ன தான் கூப்பாடு போட்டாலும் இங்கே நாங்கள் தயாராக இல்லை, தொலைக் காட்சி முன்னால் உட்கார்ந்துகொண்டு மெகா சீரியல்களின் கதா பாத்திரங்களோடு மூசு மூசென்று நாங்களும் அழுது வடிந்துகொண்டே கிடந்து விட்டுப் போகிறோம் என்றோ, புவிகுட்டி வரலாறை எழுதினால் ஓடோடி வந்து படிக்கக் காத்திருக்கிறோம் என்றோ சொல்வதற்கு வெட்கப் படுவதே இல்லை!


கே நட்வர் சிங், இந்திய வெளியுறவுத் துறைப் பணியில், முப்பத்தோரு வருட காலம் பணி புரிந்து விட்டு, ஒய்வு பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர். 1956-1958 கால கட்டங்களில் சீனாவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தவர், பிறகு அமேரிக்கா, யுனிஸெஃப் என்று பல இடங்களில் பணியாற்றிய பிறகு, கடைசியாக 1984 இல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர்.


இங்கே சாகும் தருவாயில் காசி நகரில் கங்கைக்கு அருகில் ஒண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணியில் இருந்து ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் ஒண்டிக் கொள்வது எதற்காக என்பதை நான் விலாவாரியாகச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை அல்லவா!


இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், நேருவின் காலத்தில் நட்வர் சிங் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார், சீனாவிலும் பணியாற்றியிருக்கிறார், அந்த நேரத்து அதிகாரபூர்வமான நிலையை, நிலவரத்தை அறிந்தவர் என்பது தான்.மற்ற அரசியல் வியாதிகளைப் போல ஒரு தகுதியுமில்லாமலேயே, வாய்க்கு வந்ததைப் பேசி அதுவே இலக்கியம், மொழிக்கு இலக்கணம் என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிற கூட்டத்தோடு சேர்த்து விட முடியாது.


முந்தைய பதிவில் ஒரு பிழை திருத்தம்: நட்வர் சிங் தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது என்று இருந்தது தவறு. புத்தகம் இந்த வருடம் ஜனவரியிலேயே வெளியாகி விட்டது.ரூபா அண்ட் கோ வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் மீதான விவாதங்களில் பேசும்போது என்றிருந்திருக்க வேண்டும்.


திரு நட்வர் சிங் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறார். 1962 யுத்தம் ஏன் நிகழ்ந்தது? நம்முடைய தரப்பில் பிரச்சினையை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியது ஏன்?


அடுத்து நட்வர் சிங் எழுப்பும் ஒரு முக்கியமான பிரச்சினை 1960 இல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அன்று நிலவிய பலப்பரீட்சையை புரிந்து கொள்ளாமல் இந்தியா தவற விட்டு விட்டது என்பது தான்.இதைப் பற்றி மறந்து கூட இந்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ இன்றுவரை எதுவும் பேசுவது இல்லை. நட்வர் சிங்கும் இதைப் பற்றி விலாவாரியாக எதுவும் கூறாமல் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்

படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கி படிக்கலாம்
இந்திய சீன உறவில், திபெத்திய பிரச்சினை பெரும் விரிசலை ஏற்படுத்தியது போக. பிரிடிஷ்காரர்கள், இந்திய சீன எல்லைகளை நிர்ணயிப்பதில் மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டிருந்ததும் அடுத்த பிரச்சினைக்கான விதையாக வீரியத்தோடு கிளம்பியது.

1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப்பிரதமர் சூ என் லாய் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, அதாவது அக்சாய் சின் பகுதியை இந்தியா விட்டுக் கொடுப்பது, பதிலுக்கு சீனா அருணாச்சல பிரதேசம் என்று தற்போது அழைக்கப்படும் பகுதி மீது உரிமை கொண்டாடாமல் இருப்பது என்ற மாதிரி எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது, நேரு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அப்படிச் செய்தால், நான் இங்கே பிரதமராக இருக்க முடியாது என்று சொன்னதாகவும் ஒரு குறிப்பு உண்டு. நேருவின் அணுகுமுறை, தங்களை அவமதிப்பதாக சீனா கருதியதும், நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே யுத்தம் தொடங்கப்பட்டதாகவும் தகவல்கள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்தன. இதைத் தான், நட்வர்  சிங், என்னவென்று விவரித்துக் கூறாமல் 1960 வாக்கிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு வந்ததைத் தவற விட்டு விட்டது என்று மட்டும் சொல்கிறார்.


நாற்பத்தேழு ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஒரு போரில் முடிந்தது ஏன் என்பதைப் பற்றியோ, அரசு இயந்திரம் மரத்துப்போன ஜடமாக, அரசியல், ராணுவ ரீதியாக, ராஜதந்திர ரீதியாக தயாராக இல்லாமல் இருந்த கேவலத்தைப் பற்றியோ இன்றைக்கும் கூட ஒரு சரியான விமரிசன அணுகுமுறை இல்லை. இந்திய அரசும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு மூடு மந்திரமாக வைத்திருக்க முடியுமோ, அந்த அளவு மூடி வைக்கவே விரும்புவது வெளிப்படை.


எவரோ செய்த முட்டாள்தனத்துக்கு எவரையோ பலிகடா ஆக்கி விடுவது காங்கிரஸ் கட்சி அன்றையிலிருந்து இன்றைக்கும் செய்து கொண்டிருக்கும் உத்தி. சீனாவிடம் கேவலமாக அடிவாங்கியதில் மக்களிடம் எழுந்த கோபத்திற்கு பலிகடாவாக வி கே கிருஷ்ண மேனன் ஆக்கப் பட்டு, அவரும் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


நேருவுடைய பிரம்மாண்டமான சமாதானப் புறா இமேஜ் வெறும் காற்றடைத்த பலூன் தான் என்பதை ஒரு சின்ன ஊசிக் குத்திலேயே சீனா நிரூபித்த பரிதாபத்தை எடுத்துச் சொல்ல நேருவுக்குப் பக்கத்தில் எவருமே இல்லை.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்


தவறு செய்யும் பொது அதை இடித்துரைத்து, சரியான பாதையைக் காட்டுபவரைத் துணைக் கொள்ளாத அரசன், கெடுப்பதற்கென்று எவருமில்லாமலேயே கெடுவான் என்ற வள்ளுவர் கூறும் வாழ்வியல் உண்மைக்கு நேருவுடைய அன்றைய கையைப்பிசைந்துகொண்டு நின்ற நிலையே சரியான சமீப காலத்து உதாரணம். அதைவிடக் கேவலம், சீனப்போர் முடிந்து ஒரு வருடம் ஆன பின்னாலும் கூட, அவர் சரியாகப் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு "The efficacy of nonviolence is not entirely convincing" என்று ஒரு பேட்டியில் சொன்னதே சரியான நிரூபணம்.


ஆயுத பலமோ, எதிரியை இனம் கண்டுகொள்ளும் பக்குவமோ இல்லாத பாமர மக்களை, சுதந்திர வேட்கை கொள்ளச் செய்வதற்கும், அந்நியர் ஆட்சியை எதிர்த்து உறுதியாக நிற்பதற்கும், அப்பாவி ஜனங்களை ஆயுத பலம் கொண்ட மிருகத்தனமான அரசு இயந்திரத்தை செயலற்றுப்போகச் செய்ய, மகாத்மா காந்தி சாமர்த்தியமாகக் கையிலெடுத்த ஆயுதம் சாத்வீக மறுப்பு எனும் சத்தியாக்கிரகம். தடியால் அடித்து மண்டையை பிளந்து ரத்தம் கொட்டிய போதிலும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்த சத்தியாகிரகிகளைக் கண்டு தடியெடுத்தவன் பயந்தான். அந்த சூழ்நிலையே வேறு!


வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பார்த்த நினைவு வருகிறதா? பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல்! வீர வேல் என்று உணர்ச்சி கொப்பளிக்க போர் புரிய வந்த படை,நவீன ஆயுத பலம், பழக்கமில்லாத போர்முறைக்கு முன்னால்   பீரங்கி குண்டுகள் முழங்கவுமே காணாமல் போகும் காட்சி நினைவுக்கு வருகிறதா?


ஒரு அரசைத் தலைமை ஏற்று நடத்துபவன், அதே மாதிரி நின்றால், இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு போய்ச் சமாதானம் பேசும்போது தியாகு காறித் துப்புவது போலத் தான் நடக்கும். அப்படித்தான் நடந்தது!


ஆக காந்தியோடு நீண்ட காலம் இருந்தும் நேருவுக்கு காந்தியின் மிக எளிமையான, நேர்மையான உத்திகளும், காந்தீயமோ அகிம்சைப்போராட்டம் என்றால் என்ன என்பதோ புரியவில்லை. ஐரோப்பிய நாகரீகத்தில் மிகவும் ரசிகராக இருந்து, வெள்ளையர்களோடு உறவாடினபோதிலும், அவர்களிடமிருந்து தந்திரத்தையும் நவீன உத்திகளையும் கற்றுக் கொள்ளவும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில், உலக சரித்திரத்தை வெறும் ஏட்டளவில் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, அதைத் தன் மகளுக்கும் கடிதங்களில் கற்றுக் கொடுக்க முனைந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது?


இதே மாதிரி லண்டனிலேயே பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்து, ஆங்கிலம் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்க இந்திய விடுதலைக்காக ஆதரவுப் பிரசங்கங்கள் மட்டுமே நிகழ்த்துவதில் வல்லவராக இருந்த வி. கே கிருஷ்ண மேனன். இன்னொரு ஆங்கிலேய நாகரிக ரசிகர். நேருவுக்கு ஏற்றார்போல, சரியான ஜாடிக்கேற்ற மூடியாக வந்து அமைந்ததை என்னவென்று சொல்வது?


இந்த இரண்டு நபர்கள், தங்களுடைய ஐரோப்பிய ஞானத்தைக் கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தார்கள். ஆங்கிலேயர்கள் விட்டுப்போன ஐசிஎஸ் எச்சங்களுடைய உதவியுடன், இந்தியாவைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே கொள்கைகளை வகுத்தார்கள். முதல் சோதனை 1948 இல் பாகிஸ்தானிய காஷ்மீர் ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்தது.


அங்கிருந்தாவது சரிசெய்துகொள்ளும் போக்கு தொடங்கியிருந்தால், நேரு என்ற ஷோக்குப்பேர்வழி, காந்தியின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அரசியல் வாதியும் ஆன மாதிரி, ஒரு ராஜதந்திரியாக உயர்ந்த நிலையாகவும் மாறியிருக்கும்!


1951 இல் திபெத்தை சீன ராணுவம் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது அக்கினிப் பரீட்சைக்கு, நேருவின் அயலுறவுக் கொள்கைஉள்ளானது. தலாய் லாமா தன்னுடைய ஆதரவாளர்களோடு இந்தியாவுக்கு ஓடி வருகிறார். ஒரு மதத் தலைவர் என்ற முறையில், மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக முடிவெடுத்திருந்தால் அது, சோதனையாக இல்லாமல், சாதனையாகவும் மாறியிருக்கும்!திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்று வெளிப்படையாக இந்திய அரசு ஒப்புக் கொள்வதற்கே அடுத்து பதினேழு வருடங்கள் தேவைப்பட்டன. அப்போது கூட, இரட்டை நாக்குடனேயே திபெத் பிரச்சினை அணுகப்பட்டது.


நேருவின் கண்களை அந்த கால கட்டத்தில், கண்முன்னால் தெரிந்த யதார்த்த உலகைப் பார்க்க விடாமலும், புரிந்துகொள்ள விடாமலும், வெறும் கற்பனாவாதியாகவே இருக்கச் செய்தது எது என்று இன்னமும் எனக்குப் புரியவே இல்லை. சோஷலிசக் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பித்த நேரு, விழித்துக் கொள்ளவே இல்லையோ என்றுகூட சமயங்களில் அவரைப் பற்றி அங்கேயும் இங்கேயும் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவதுண்டு.


தன்னுடைய பகல் கனவு குரூரமாக க் கலைக்கப்பட்டு, சமாதானப் புறா இமேஜும் பறிபோய், மனமுடைந்த நிலையில் நேருவின் மரணம் நேர்ந்தது.


தயிர்வடையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே தோழர் கே.வரதராஜன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீதேறி நரகத்துக்குக் கூடப் போகலாம்!" இந்த வார்த்தை நினைவுக்கு வரும் போதெல்லாம், நேருவின் கதை சொல்லும் பாடம் தான் எனக்கு நினைவுக்கு வரும்.


அப்புறமாவது காங்கிரஸ் கட்சியும், இந்திய அரசும் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால், இன்று வரை அதற்கான அறிகுறி ஒன்றுமே புலப்படவில்லை.


இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எந்த அர்த்தமுமில்லாமல் போனதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம். சுப்ரமணிய சாமி என்றாலே ஒரு கோமாளி, ரீல் மன்னன், முட்டையடி வாங்குவதற்கே பிறந்தவர் என்றமாதிரி நக்கலான எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை! ஆனாலும், சீனப் பிரச்சினையில், இங்குள்ள அரசியல்வாதிகள் எவரையும் விட அதிகம் அறிந்தவர் என்ற முறையில் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.


பிரச்சினையை இன்னமும் விரிவாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.


புவிக்குட்டிகளோடேயே கற்பனையில் மிதக்க விரும்புகிறவர்களுக்காக இதை எழுதவில்லை. வரலாறு என்றாலே அலெர்ஜி என்பவர்களுக்காகவும் இல்லை.ஒரு அரசியல் நிகழ்வை, வரலாற்றோடு பொருத்திச் சொல்வது, கற்றுக் கொள்வதற்காகவே.


தொடர்ந்து பேசுவோம்!









எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் கதை !




இந்த மாதம் பதின்மூன்றாம் தேதி, தில்லியில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் தன்னுடைய புத்தக வெளியீடு விழாவில் இந்திய சீன எல்லைப் பிரச்சினையைப் பற்றிப் பேசியது இங்கே எந்த செய்தித் தாளிலும் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை. ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றிப் பேசியது எப்படிபிஜெபிகாரர்களுக்குக் கடுப்பாகவும் காங்கிரஸ்காரர்கள் காதுக்குக் குளிர்ச்சியாகவும் இருந்ததோ, அதே அளவுக்கு இந்தச் செய்தியைப்படித்திருந்தார்களானால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்திருக்கும்!

அதெல்லாம் சூடு சொரணை இருக்கிறவர்களுக்கு! காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும், அதற்காக எவரோடும் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கும் நிலைமையில் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படநேரம் தான் ஏது!


கூட்டணியில் இருக்கும் கட்சிகளைக் குஷியான மூடில் வைத்திருப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இந்தியா டுடே பத்திரிகையில் அக்டோபர் இருபத்துமூன்றாம் தேதி இதழில் அதன் ஆசிரியர், கடந்த பதினோரு வருடங்களாக, கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்வதில் சோனியா காந்தி மிகுந்த தேர்ச்சி பெற்றுவிட்டார் என்று பெருமையாகச் சொல்கிறார். இந்த மாதிரி பெருமைகளுக்கே நேரம் சரியாகப்போய் விடும்போது, தேசத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கப் போகிறது!!


நட்வர்சிங் ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் என்ன எழுதியிருக்கிறார் என்பதையோ, அந்தப் புத்தக விமரிசனத்தையோ நான் இன்னமும் படிக்கவில்லை. புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருப்பதைப் படித்தேன். இந்த மாதம் நான் தொட்டுப் பேச விரும்பிய விஷயங்களோடு தொடர்பு இருந்ததால், அந்தச் செய்தியையும், அது தொடர்பான கருத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இது கொஞ்சம் நீளமான பதிவுதான். சரித்திரத்தின் பக்கங்களை, நாலு வரியிலோ, அல்லது நாற்பது வரிகளிலோ அடக்கி விடமுடியாது. அடுத்து சொல்லப்படும் விஷயங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவைதான், கூறு கட்டிச் சொல்ல முடியாது.




Former External Affairs Minister K Natwar Singh on Tuesday regretted that India has not yet comprehensively analysed the reasons behind the 1962 war with China, saying such an exercise was "really necessary."


Speaking at a discussion on his recent book 'My China Years -- 1956-88, he touched upon various phases of Sino-India relationship in the last 60 years and felt things would have been different had Rajiv Gandhi won the 1989 elections.


"Why 1962 happened. No serious analysis of it took place on our side," Singh said indirectly criticising Government's secretive policy in revealing details of the war.


About the war with China, he said "Mao-tse Tung decided to teach India a lesson after they felt that we were encroaching on their land."


India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister said, without elaborating on his observation.


On the border dispute, he said Tawang did not figure in the map of India in 1953.


ஜஸ்வந்த் சிங் விவகாரம் வெடித்தபோது கெக்கலி கொட்டிய காங்கிரஸ் கட்சியும், ஊடகங்களும் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி மாதிரி சூடு சொரணை இல்லாத கட்சி இந்தியாவில்வேறெதுவும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு அதனுடைய யோக்கியதை இருக்கிறது.


காந்தியுடைய போதாத காலமோ, காங்கிரஸ் கட்சியுடைய போதாத காலமோ, இந்த தேசத்துடைய போதாத காலமோ தெரியவில்லை, நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு பெற்றது மட்டுமில்லை, காந்தியின் அன்புக்குப் பாத்திரமான அரசியல் வாரிசாகவும் ஆகிப்போன விபத்துமானது.


நாடு விடுதலை அடைந்த தருணம், சுதந்திர இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தீர்மானித்தது நேருவும், அவருடைய ஆல்டர் ஈகோ என்று கூட சொல்லலாம், வி கே கிருஷ்ண மேனனும் தான்! ஆங்கிலேய அரசின் அடிச்சுவட்டை ஒட்டிப் பணி செய்யமட்டுமே தெரிந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்கு, போக வேண்டிய திசை எது என்பதை இந்த இரண்டு அதி மேதாவிக‌ள் தான் தீர்மானித்துக் கொடுத்தார்கள்.

நேருவுக்கு உலக சரித்திரம் அத்துப்படி! சிறையில் இருந்த நாட்களில் மகளுக்கு உலக சரித்திரத்தைக் கடிதங்க‌ளிலேயே எழுதி சொல்லிக் கொடுத்தவர்! அந்த ஒரு தகுதி போதாதா?புத்தகங்களில் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்து, தன்னுடைய மகளுக்கும் கடிதங்களில் சொல்லிக் கொடுக்க முனைந்த ஒரு நல்ல எண்ணம் படைத்த மனிதர் என்றுவேண்டுமானால் சொல்லலாம்!


கூடவே தயிர் வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே தோழர் கே வரதராஜன் சொல்லும் தத்துவத்தையும்சேர்த்துப் பாருங்கள்!


"ந‌ல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீது ஏறியே நரகத்துக்கும் கூடப் போகலாம்!"


நேரு, ஆங்கிலேயர்களுடைய நாகரீகத்தில் அவர்களை விட அதி விசுவாசமான ரசிகர்! நல்ல எண்ணம் இருந்தது, மறுக்க முடியாது! ஆனால், வெறும் கற்பனையில் மட்டுமெ சரித்திரத்தை எழுதிவிட முடியுமா என்ன?!


அன்று இருந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்கோ சுயசிந்தனை இருந்ததே இல்லை! எப்போதுமே "ஹிஸ் மாஸ்டர்'ஸ்வாய்ஸ்" மட்டும் தான்! ஆங்கிலேயர்களுடைய அரசியல் ஆதாயத்திற்குத் தகுந்தபடி மட்டுமே கொள்கை முடிவுகளை எடுக்கத் தெரிந்தவர்கள். சுய சிந்தனை இருந்த கொஞ்சப்பேருமே நேருவின் கவர்ச்சிக்கு முன்னால் செயலற்றுப் போனார்கள். இந்தியாவின் இரும்பு மனிதன் என்று வர்ணிக்கப் பட்ட வல்லபாய் படேல் கூட நேருவின் கவர்ச்சிக்கு வழி விட்டு ஒதுங்கிப்போக வேண்டிய நிலை இருந்தது.


இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், பிச்சைக்காரர்கள், எக்கச்சக்கமான குழந்தைகள், நாகரீகமில்லாதவர்கள், மகாராஜாக்கள் இவ்வளவுதான் வெளியுலகுக்குத் தெரிந்தது. டைம் பத்திரிகை கிருஷ்ண மேனன் படத்தை எவ்வளவு நக்கலுடன் வெளியிட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! 

எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு யார் சொல்லித் தர முடியும்?


சுற்றியிருந்த சூழ்நிலையைச் சரியாகக் கணிக்கத் தெரியாத இரண்டு மேதாவிகள்(நேரு, மேனன் ) கையில், ஒரு தேசத்தின் உயிர் மூச்சு ஒப்படைக்கப்பட்ட அந்த‌ சோகமான தருண‌ங்களைக் கொஞ்சம் திகிலோடுதான் திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கிறது.


உலக சரித்திரம் தெரிந்தவருக்கு உள்ளூர் சரித்திரம் சரியாகத் தெரிந்ததோ, தெரியவில்லையோ அதுவே சரியாகத் தெரியவில்லை. சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரம் பற்றி அயல்நாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடந்த நேருவுக்குத் தெரியுமோ தெரியாதோ?


அரசனுடைய முக்கியமான கடமைகளில் தன்னுடைய எல்லைகளைப் பாது காப்பதும், எல்லைப்பகுதி மக்களைச் சரியாகக் கவனித்துக் கொள்வதும் அடங்கும்! சமாதானத்தை விரும்புகிறவனுக்கு சண்டை போடவும் தெரிந்திருக்க வேண்டும், சரியான தருணத்தில் சண்டையில் இருந்து விலகவும், நேசக்கரம் நீட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.


பாகிஸ்தான் பிரிவினை ரத்தக் களரியோடு தொடங்கியதில், இன்னமும் ஒரு சுமுகமான உற‌வுக்கான சாத்தியப்பாடு இருக்கிற‌தா என்பதே தெரியாமல் இருக்கிறது. 1948 இல் வடகிழக்கு மாகாண‌த்தில் இருந்து ஆயுதம் தாங்கிய குழுவினர் உதவியோடு, சேட்டைகள் ஆரம்பித்தது.


காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்து வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அடாவடித்தனம் பண்ணிக் கொண்டிருந்த வேளையில், ராணுவத்திற்கு உறுதியான உத்தரவுகளைத் தர நேருவின் அரசு தயங்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த பகுதிகளை மீட்கும் நேரத்தில், ராணுவத்தின் கையைக் கட்டிப் போட்டு வைத்து, ஐக்கிய நாடுகள்சபைக்கு பிரச்சினையை எடுத்துக் கொண்டு போனது முதல் நேருவின் ராஜதந்திரம் தொடர்ந்து சறுக்கிக் கொண்டே போனது.தன்னை உலக சமாதானப் புறாவாகக் காட்டிக் கொள்கிற முனைப்பில் இருந்தவருக்குத் தன்னுடைய கோழைத்தனம் கடைசி வரை புரியவே இல்லை.


Excerpts from a book review: Johm W. Garver's Protracted Contest. Sino-Indian Rivalry in the Twentieth Century. University of Washington Press, 2001. ISBN- 0-295-98074-5. Price US $ 44.56. 447 pages


சீன தேசீயவாத வரலாறு, அதன் பிரதேசங்களாக காஷ்மீர், நேபாள், பூடான், சிக்கிம் ஆகிய அரசுகளையும், இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களையும், பர்மா, இந்தோசீனா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றையும் பேசுகிறது. இந்திய கலாச்சார தேசியவாதத்தின் படி, நேபாளம், திபெத், பர்மா, இந்தோசீனா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றை இந்தியாவின் கலாச்சார பேரரசின் பகுதிகளாகப் பார்க்கிறது
 
இந்த முரண்பட்ட வரலாறுகளை தீவிரப்படுத்துவது கருத்துருவப் பிரசினைகள். மாவோயிஸ சீனா, இந்திய தலைவர்களின் 'பிற்போக்கு வகுப்பு இயல்பையும் ' பிரிட்டிஷ் திட்டங்களை நேரு பாரம்பரியமாகப் பெற்ற 'எதேச்சதிகார மேலாதிக்க விரிவாக்கமாகவும் ' பார்த்து சந்தேகப்படுகிறது. இந்தியாவைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் இந்த போக்கு, டெங் காலத்திலோ, டெங்குக்குப் பின் வந்த தலைவர்கள் காலத்திலோ மாறியதாகத் தெரியவில்லை என்று கார்வர் கூறுகிறார். இந்தியாவின் மன்ரோ கொள்கை 'தென் ஆசியாவை தன்னுடைய பிரத்யேக பாதுகாப்பு பிரதேசமாகப் பார்ப்பதை ', பீஜிங் 'இந்தியாவின் சுற்றுநாடுகளோடு சீனா இறுக்கமான உறவு கொள்வதை தடுக்கும் பிராந்திய எதேச்சதிகாரமாக ' பார்க்கிறது. (பக்கம் 31)

திபெத் பிரச்னை
1951இல் திபெத் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக்கொண்டது டெல்லியில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. வரலாற்றில் முதல் தடவையாக, நிரந்தரமாக சீனாவின் ஏராளமான படைகள் இந்தியாவின் வடக்கு எல்லையில் குவிக்கப்பட இருப்பதையும், இதுவரை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 'இடைநிலப் பகுதியாக ' (buffer zone) இருந்துவந்த திபெத் விழுங்கப்பட்டதையும் கண்டு நடுக்கம் வந்தது. பல இந்தியர்கள் இந்தியாவின் பாதிப்புக்குள்ளான திபெத்திய லாமா கலாச்சாரம் அழிக்கப்படுவதையும், தொடர்ந்து திபெத்தின் தனிச்சிறப்பான கலாச்சாரம் பீஜிங்கால் அழிக்கப்படுவதையும் கண்டு முறையிட்டார்கள். (நேருவின் வார்த்தைகளில், 'திபெத், கலாச்சார ரீதியில், இந்தியாவின் ஒரு பிரிவு. ') ஆனால் சீனாவின் பார்வையில், திபெத்திய கலாச்சாரம் 'சீர்திருத்தப்பட்டு ' , தன்னுடைய 'நிலப்பிரபுத்துவ சுரண்டலிலிருந்து ' விடுதலை தரப்பட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி கனவு காண்பது போல, சீன மைய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு, சோசலிஸ சமூகமாக மாறவேண்டும்
 
திபெத்தின் கனிம வளமையும் (சீனாவின் கனிமங்களில் சுமார் 40 சதவீதம் திபெத்தில் இருக்கிறது) அதன் 'போருக்கு இணக்கமான இருப்பிடமும் ' (strategic ) திபெத்தை மீண்டும் 1951 நிலைக்கு திரும்பவிடக்கூடாது என்று சீனாவின் வைராக்கியத்தை உறுதி செய்தது. 1958இலிருந்து அந்தக் கோரிக்கையையே 'திபேத்திய சுயாட்சி ' என்ற பெயரில் பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசாங்கங்கள் முனைந்தன. 1962 சீனா-இந்தியா போர், மாவோசேதுங் அவர்களது வார்த்தையில், 'மக்மஹன் கோட்டைப்பற்றியதல்ல, திபெத் பிரச்னை பற்றியது ' என்று குறிப்பிட்டார். ஏனெனில், இந்தியாவும் அமெரிக்காவின் சிஐஏவும் இணைந்து திபேத்திய சுதந்திரப்போராட்டத்தை உருவாக்கி இருக்கின்றன என்று அவர் நம்பினார்

(சிஐஏவின் திபேத் ரகசியப்போர், (The CIA 's Secret War in Tibet) என்ற புத்தகம், உண்மையிலேயே இந்தியாவும் சிஐஏவும் இணைந்து பல ரகசிய வேலைகளை அப்போது செய்தன என்று உறுதிப்படுத்துகிறது.) 
 
சீனாவின் இனப் பிரச்னைகளை தீவிரப்படுத்துவதற்கும், சீனாவை இந்தியாவோடு இணக்கமாக இருக்கச்செய்வதற்கும், திபெத்திய பிரச்னையை இந்தியா பயன்படுத்திவந்தது. ஆனால், திபேத்திய பிரதேசத்தில் ஏராளமான ஹன் சீனர்களை குடியேற்றியதும், பீஜிங்குக்கும், திபெத் தலைநகர் லாசாவுக்கும் இடையே சிறந்த தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு இணைத்ததும் , 'திபெத் எதிர்காலத்தில் சுயாட்சியுடன் இருக்கும் என்பது ஒரு கனவாக மாறிவிட்டது. அது கனவென்றால், திபெத்தில் இருக்கும் இந்தியாவின் கலாச்சாரக் கூறுகள் இறுதியாக அழிக்கப்பட்டவைதான் என்பதும் பொருளாகிவிட்டது ' (பக்கம் 71)


நேருவுடைய அரசியல், ராஜ தந்திரம் எந்த அள‌வுக்கு இருந்தது என்பதை இந்திய சீன யுத்தம் முடிந்த அடுத்த வருடம் கசப்போடு சொன்ன இந்த வார்த்தைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். சீனப் போருக்குப் பிறகு அகிம்சை மட்டுமே ஒரு தேசத்தைக் காக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு மாறியதை 1963 அக்டோபரில் அளித்த பேட்டியில், "The efficacy of nonviolence is not entirely convincing" என்று சொல்லி வெளிப்படுத்தினார்.


வலிமை இருந்து, சண்டை வேண்டாம் என்று சமாதானம் பேச வந்தால் அதற்கு மரியாதை இருக்கும். வடிவேலு ரேஞ்சுக்கு ஊரெங்கும் அடி வாங்கி, அப்புறம் பேசுகிற சமாதானத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?


சமாதானப் புறா சாயம் வெளுத்து, மனம் நொந்துபோன கதை அது! ஒரு தனி மனிதனின் பலவீனத்தால், ஒரு தேசமும் கோழைகள் என்று முத்திரை குத்தப்பட்ட தருணம் அது!


1962 இல் நடந்த இந்திய சீன யுத்தம், ஆறாத காயத்தின் தழும்பாக இருந்தது என்று நாற்பது வருடம் கழித்து ஹிந்து பத்திரிகையில் வெளிவந்த செய்திக் கட்டுரை இது!  

கட்டுரையின் முன்னோட்டமே, அன்றைக்கு  எவ்வளவு அஜாக்கிரதையாகவும், முன் யோசனை இல்லாமலும் கையாளப்பட்ட தேசிய அவமானமாகவே இந்திய சீன எல்லைப் போர் ஆகிப்போனது, எப்படி இன்றைக்கும் ஆறாத வடுவை விட்டுச் சென்றிருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.  இன்னமும் படிப்பினையைக் கற்றுக்கொண்டோமா என்பது தான் தெளிவாகத் தெரியாத, பூடகமாகவே இருக்கிற அவலம்!

"India was politically, militarily and diplomatically unprepared for the Indo-China war of 1962. SUJIT DUTTA looks at how the Indo-Chini bhai-bhai suddenly dissolved into aggression and distrust and the lessons to be learnt from that encounter."


இந்திய அயலுறவுக் கொள்கையில் இருக்கும் சில குழப்பமான விஷயங்கள் ஒருபுறமிருக்க, இந்தியாவின் செல்வாக்கு வளர்வது தங்களுடைய தேச நலன்களுக்கு உகந்தது அல்ல என்பதில் பர்மா(தற்போது மியான்மர்), பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் என்று சுற்றுப்புறத்தில் உள்ள அத்தனை நாடுகளும் கருதுவதற்கு ஏற்றமாதிரி சீனா சாமர்த்தியமாகக் காய் நகர்த்திவருவதை அன்றும் சரி இன்றும் சரி இந்திய அரசு உணர்ந்து செயல் படுகிற மாதிரித் தெரியவில்லை.


இப்போது அக்டோபர் இரண்டாம் தேதியன்று எழுதிய பதிவில் இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள்!


17 செப்டம்பர் 1965, சீனா மறுபடியும் மறைமுகமாகப் பாகிஸ்தானுக்கு அதரவு தெரிவிப்பது போல இந்தியாவை மிரட்டிப் பார்த்தது. சீன எல்லைக்குள் இந்தியா ஆயுதங்களைக் குவித்திருப்பதாகவும், உடனடியாக அகற்றாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை அரசுபூர்வமான கடிதமாகவே அனுப்பியது. அவர்களுக்கும் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட்டது.  

முதல் முறையாக இந்தியாவுக்கு முதுகெலும்புள்ள, தைரியமாக முடிவெடுக்கத் தெரிந்த காங்கிரஸ் பிரதமர் பதவியில் இருக்கிறார் என்பது தான் அது!


ஆம்! சீன மிரட்டலுக்குக் கொஞ்சமும் பயமில்லாமல் சாஸ்திரி முழங்கினார்.


"சீனா வேண்டுமென்றே பொய்யான தகவலைப் பரப்பி வருகிறது. சீனா இந்தியாவைத் தாக்குமானால், உறுதியுடன் எங்களது சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எதிர்த்துப்போராடுவோம். எங்களுடைய பிரதேச இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள, சீனாவின் பலம ஒரு தடையாக இருக்காது."


சீனப் பூச்சாண்டி காட்டி, பரபரப்பாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுடைய உள்நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! பூச்சாண்டிக்கு பயந்து தொடை நடுங்கிகளாக இருந்துவிடப் போகிறோமா அல்லது இந்த மண்ணின் மைந்தர்கள் எப்படிப்பட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக இருப்பவர்கள் என்ற நிலைக்கு நம்மைத் தயார் செய்துகொள்ளப்போகிறோமா?


இந்தியா சூபர் பவர் ஆகுமா என்ற கேள்விக்கு இங்கே ஒருவர் பாயிண்டுக்கு மேல் பாயிண்டாக அடுக்கி, சாத்தியமில்லை என்று உசுப்பேத்தி விடுகிற மாதிரி எழுதியிருக்கிறார்.


எல்லாக் கேள்விகளுக்கும் , விடை நம்மிடம் தான் இருக்கிறது!

டிஸ்கி: நேருவும் காங்கிரஸ் கட்சியும்  சறுக்கிய தருணங்களை மட்டுமே விவாதப்பொருளாக எடுத்துக் கொண்டிருப்பதால், நேருவிடம் வேறு நல்ல  விஷயங்களே இல்லை என்றோ  தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமும் குப்பை என்று வெறுப்பை உமிழும் சமீபகால விமரிசனப்போக்காகவோ, இதைப் படிக்க வருபவர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்.


உறுதிகொண்ட நெஞ்சினாய் வா! வா!



இந்தோ -சீனி பாய் பாயின்னாங்க நாப்பதேழு வருஷத்துக்கு முன்னாடி!
சமாதானப் புறாவாக டயலாகும் பேசிப்பாத்தாங்க! டயலாக் பேசினா சண்டை வராமப் போயிடுமா?

திபெத்தைச் சீனா விழுங்கியது! தலாய் லாமா இந்தியாவுக்கு ஆதரவாளர்களோடு ஓடி வந்தார். அந்நிய மண்ணில் இருந்து கொண்டு செயல்படும் திபெத்திய அரசாக அவரையும், ஆதரவாளர்களையும் இந்தியா அங்கீகாரம் கொடுத்து  அறிவிச்சதில் இருந்து ஆரம்பிச்சது பிரச்சினை.

வெவ்வேறு விஷயங்களில் விழுந்து விழுந்து சீனாவை ஆதரிச்ச போதிலும் கூட, மாசேதுங் நேருவை நம்பவில்லை. இந்தியாவின் உள்நோக்கத்தில் சந்தேகம்! தன்னுடைய எதிரிகளோடு கூடிக் குலாவிக் கொண்டே, தன்னுடன் வஞ்சகமாக உறவாடும் கபடமாகத் தான் சீனத் தலைவர்கள் நினைத்தார்கள்.

"ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்கள்" இது நேருவுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் மாசே துங் வெறுப்போடு உமிழ்ந்த அடைமொழி!

பஞ்சசீலக் கொள்கை,அது இது என்று ஒருபக்கம் நடந்து கொண்டிருந்த போதே, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நேரு உருப்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. பிரிடிஷ்காரர்கள் மாற்றி மாற்றிக் குழப்பி வைத்துவிட்டுப் போன எல்லைத் தாவா பூதாகாரமாக உருவாக, திபெத் பிரச்சினையை இந்தியா கையாண்ட விதமுமே கூட ஒரு காரணமாக ஆகிப் போனது.

1960 ஆம் ஆண்டுஅப்போதைய சீனப் பிரதமர்  சூ என்லாய், எல்லைப் பிரச்சினையை இருதரப்புமே கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்து, இந்தியாவிற்குப் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். நேரு அதில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ளாதது, சீனர்களுக்கு அவமதிக்கும் செயலாகப் பட்டது.

கதை கந்தலானது! நேருவுடைய இமேஜ்  ஊதி ஊதி பெருசாத்  தெரிஞ்ச பலூன்! பிரமாதமான அடித்தளமோ, முயற்சியோ இல்லாமல், கவர்ச்சிகரமான சினிமா ஹீரோ மாதிரி பெரிய தலைவர் ஆனவர் அவர். காந்தி மாதிரி, இந்தியா முழுவதும் பயணம் செய்து, அடித்தட்டு மக்களுடைய பிரச்சினைகள், அவர்களது கனவுகள் எதையுமே அறியாத, ஒரு கற்பனாவாதி.வெறும்  நல்ல எண்ணம் மட்டுமே இருந்து என்ன பயன்?

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது நேரு விஷயத்தில் மிகவும் உண்மையாகிப்போனது. ஐரோப்பிய சரித்திரத்தைக் கரைத்துக் குடித்தவர், ஐரோப்பிய நாகரீகம், நடை உடை பாவனைகளில் ஊறிப்போனவர் என்பதனாலேயே, ஆங்கிலேயர்களுடைய நிர்வாகத் திறமை முழுவதும் அப்படியே கைவரப் பெற்றவர் என்பது போல ஒரு தோற்றம்!

இந்திய மண்ணைச் சீனர்கள் ஆக்கிரமிச்சுட்டாங்களேன்னு கேட்டபோது பாராளுமன்றத்தில் நேரு வீராப்பாப் பேசின டயலாக் இது: "ஒரு புல் கூட முளைக்காத கட்டாந்தரை தானே அது!"

பிரதமர் நேருவும், பாதுகாப்பு அமைச்சர் வி கே கிருஷ்ண  மேனனும் வெளியுறவுக் கொள்கையை வகுத்த சிற்பிகள்! வெளியுறவுக் கொள்கையில் அவர்கள் சொதப்பிய சொதப்பல், இன்றைக்கும் தீர்க்கப்படாத பிரச்சினையாக பூதாகாரமாக இன்றைக்கும் இந்திய இறையாண்மைக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கிறது.

நாற்பத்தேழு  வருடங்கள் ஓடிவிட்டன. சீனா, ஒரு வலிமையான பொருளாதார, ராணுவ  வல்லரசாக உருவெடுத்திருக்கும் இந்தத் தருணத்தில், எதோ ஒரு உள்நோக்கத்தோடு தான் சீனப் பூச்சாண்டி, இதோ  வருகிறது யுத்தம், இதோ  வந்தே விட்டது என்றெல்லாம் பொறுப்பில்லாமல் செய்திகளை ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியப் பிரதமர் திரு மன்மோகன் சிங் சீனப் பிரதமர் வென் ஜியா போவை தாய்லாந்து  நாட்டில் இன்றைக்குச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

திரு மன்மோகன் சிங்குக்கு ஒரு விசித்திரமான பெருமை வேறு இருக்கிறது! இதுவரை இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தவர்களில், மிகவும் மென்மையானவர், மிகவும் பலவீனமானவர் என்ற புகழ் இருக்கிறது. தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் எவர் மீதும் சுட்டு விரலைக் கூட நீட்டிப் பேச அதிகாரம் இல்லாத ஒருவர், தன்னுடைய அமைச்சரவை சகாக்களின் மீதே எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்கும் நிலையில் இல்லாத பிரதமர், பிரதமர் இங்கே வெறும் டம்மிதான், அதிகார மையம் வெளியில் இருக்கிறது என்ற நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது புரியவில்லை.

குறைந்த பட்சமாக, உடனடியான மோதல் என்ற அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட்டு, அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைகள் தொடர ஆண்டவன் தான் இந்த தேசத்திற்குத் துணை நிற்க வேண்டும்!

தொடர்ந்து பேசுவோம்......! 

நேற்று, இன்று, நாளை! அளவோடு கவலைப்படு!



ஒரு எழுத்தாளனாக, அல்லது பதிவராக அடையாளம் காட்டப்படுவதை விட ஒரு வாசகனாகவே என்னை மிகவும் சந்தோஷத்தோடு உணருகிறேன். பரந்த தளங்களில், பலதரப்பட்ட எழுத்துக்களை வாசிப்பது சிறு வயதிலிருந்தே எனக்குப்பழக்கமாகி இருக்கிறது, என்னுடைய சுவாசமாகவே இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்!

ஏனென்றால், அதில் எந்தப் பொய்யும், மிகைப்படுத்துதலும் இல்லை. உண்மை மிக எளிமையாகத் தான் இருக்கும் கண் முன்னாலேயே தான் இருக்கும். ஆனால், நம்முடைய கவனம் தான் சிதறி வேறெங்கோ போய் விடுகிறது! நாம் அதைக் கவனிக்கவில்லையே என்பதற்காக, உண்மை நம்மோடு கோபித்துக் கொண்டு எங்கோ போய்விடுவதில்லை! நாம் அதை அறிந்துகொள்வதற்காக, புரிந்துகொள்வதற்காக உரிய தருணத்தை எதிர்நோக்கிப் பொறுமையோடு காத்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்!

புவனேஸ்வரி விஷயமாக நான்கு பதிவுகளை எழுத நேர்ந்ததில் சில விஷயங்கள் என்னுடைய குருவி மண்டைக்கும் புரிய வந்திருக்கிறது. பராக்குப் பார்ப்பது என்பது, எந்த வயதிலும் மனிதனை விடுவதில்லை என்பதும் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதில் இருந்து விடுபடுவது உண்மையிலேயே மிகக் கடினமானது தான் என்பதும் ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களைத் தொட்டு பேசிய விஷயங்கள்தான்! ஞானத்தைப் பற்றி கதையளப்பதென்பதுவேறு, உண்மையிலேயே ஞானம் வாய்க்கப் பெறுவது வேறுதான் இல்லையா?

இரண்டு மாதங்களுக்கு முன்னாலும், ஏறத்தாழ இதே மாதிரி நிலைமை வந்தது. போகும் திசை மறந்து போச்சு! என்ற தலைப்பில் இதை எழுதியபோது ஒரு நண்பர் சொல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்ல முயன்றார். சென்றபதிவில் திரு கௌதமன் மிகவும் வெளிப்படையாகவே, சேற்றை எடுத்துப் பூசிக் கொண்ட கதையாக, வலைத்தரம் தாழ்ந்து விட்டது என்றும் சொல்லியிருந்தார். உண்மைதான்!

சொல்ல வந்த விஷயத்தை, வீரியம் குறையாமல், நறுக்கென்று வசிப்பவர் மனதில் தைக்கிற மாதிரியும் சுருக்கமாகவும் பதிவு எழுதும் கலை எனக்குக் கை வரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி நாலு வரியோ, நாற்பது வரியோ சொல்லவந்ததை நச்சென்று எழுதும் கலையை முழுதும் அறிந்தவராக,அதைக் கடைப்பிடிக்கும் வலைப்பதிவராக திரு.ராஜநாயகம் ஒருவரைத் தான் சொல்ல முடிகிறது!

புவனேஸ்வரி என்பது ஒரு பெயர்ச் சொல்! வினையான தொகையுமாகி கொஞ்சம் அதிகமாகவே நிறையப்பேருடைய அடிவயிற்றைக் கலக்கிவிட்டுப் போன ஒன்று! இரண்டு வருடங்களுக்கு முன்னால் கன்னட பிரசாத், இன்றைக்கு புவனேஸ்வரி,நாளை இன்னொன்று வேறு பெயரில் வரும், அவ்வளவுதான்!

இதுக்கெல்லாம் இவ்வளவு அலட்டிக் கொள்ளலாமா என்று கேட்டால், அலட்டிக் கொள்வது நல்லது என்றே இங்கே ஒருத்தர் ஒன்றரை வருடத்திற்கு முன்னாலேயே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

இங்கே கீதையில் கண்ணன் "மா ஸுச:" என்று எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான் அதனால் கவலைப்படாமல் தொலைகாட்சி முன்னால் உட்கார்ந்து கொண்டு அவர்கள் எதையெல்லாம் கொண்டாடச் சொல்கிறார்களோ அதைக் கொண்டாடிவிட்டுப் போய்விடவேண்டியது தானே என்பவர்களுக்காக, ஒரு சேதி!

கவலைப்படுங்கள்! அது மிகவும் நல்லது! என்ன, எந்த அளவுக்குக் கவலைப்படுவது என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப் படுங்கள் என்று சொல்கிறார். ராபர்ட் ரோசென் என்கிற உளவியல் மற்றும் தலைமைப் பண்பு நிபுணர்!

கவலைப்படுவதா? அது மிக மோசமாயிற்றே என்று தான் நமக்குத் தோன்றும். கவலைப் படுவதால் என்ன ஆகிவிடப்போகியாது என்று வேதாந்தமும் கூடப் பேசுவோம். கவலைப் படவேண்டிய தருணங்கள் வரும்போது அதை முரட்டுத்தனமாக எதிர்ப்பதிலோ, அல்லது அந்தச் சூழ்நிலையை விட்டு ஓடிவிடுவதிலோ தான் நம்முடைய கவனம் இருக்கும். ஆனால், இந்த மனப்பான்மை மிகவும் காலாவதியாகிப் போனது என்கிறார் ராபர்ட் ரோசென்.


தன்னுடைய  Just Enough Anxiety என்ற புத்தகத்தில், கவலைகள் நமக்குகூர்ந்து கவனிக்கும் ஆற்றலைத் தருகின்றன, கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களோடு ஒப்பீடு செய்து மாற்றிக் கொள்வதற்கும், ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதற்கும், உண்மையிலேயே சிறந்த பலனைத் தருவதாகவும் ஆன கருவியாக ஆக முடியும் என்று சொல்கிறார்.  


கவலைகள் அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதும் உண்மை  தான்! அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான்! ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும்! அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா? அதே மாதிரி, பிய்ந்து விடுகிற நிலைக்கும், அதனுடைய எலாஸ்டிசிடியைப் பயன்படுத்தாமல் இருக்கிற நிலைக்கும் மத்தியில் இருக்கும் அதிகப்பயன்பாடு  அல்லது பயன்பாட்டு உச்ச நிலையைக் கண்டுகொள்வதில் தான், கவலைகள் மிக வலி.மையான கருவிகளாக, வெற்றியைத் தருபவையாக  நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் ஆசிரியர்.


நமக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள வீணை, கிடார் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்திகள் போதுமான அளவுக்கு முறுக்கேற்றினால் தான்  தேவையான ஒலி கிடைக்கும். அளவுக்கு அதிகமாக முறுக்கினால், தந்தி அறுந்து விடும், அளவு குறைந்து போனாலோ தொய்ந்து போய் ஒளியே வராது என்பது போல, கவலைகளால் ஏற்படும் முறுக்குத் தன்மை கூட அவசியம் தான் என்பது இவருடைய வாதம்..

பாதுகாப்பின்மை, அசௌகரியம், குழப்பம், வலி இவைகளை அனுபவித்துப் புரிந்துகொள்வதில் நம்முடைய உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களாக,தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியிருந்தாலும் சரி, 'போதுமான அளவுக்குக் கவலைப்படு' என்பது ஒரு வாழும் கலையாகவே ஆகிவிடும் என்று சொல்கிறார்.

கவலைப்படுவது என்பது, அதைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்லப்பட்டபோதிலும், அதன் மோசமான விளைவுகள் உண்மையாக இருந்தபோதிலும் கூட, உண்மையான பிரச்சினை இல்லை! கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே உண்மையான பிரச்சினை என்கின்ற இந்த வலைப்பக்கங்களையும் படித்துப்பாருங்கள்!!

எவ்வளவு அருமையான உண்மை! இந்தப்பாடம் மட்டும் எனக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால்..........!

இப்போது கூட ஒன்றும் குறைந்து போய்விடவில்லை!  சுவாசம் உள்ளே இழுக்கிற ஒவ்வொரு தருணமும் பிறப்பாகவும், வெளிவிடுகிற நேரம் மரணமாகவும் இந்தியத் தத்துவ மரபு மிக அழகாக வாழ்க்கையைத் துல்லியமாக அனுபவித்து உணர்ந்திருக்கிறது. என்னுடைய தோல்விகளே எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருப்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்!

"வாழ்க்கை முழுவதுமே யோகம்" என்று ஸ்ரீ அரவிந்தரும் சொல்லியிருக்கிறார்!

ஒவ்வொரு தருணமும், ஒவ்வொரு விஷயமும் கற்றுக்கொடுப்பதாகவும், கற்றுக் கொள்வதாகவுமே அனுபவத்தில் உணர்கிறேன்!


அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி:

சீன பூதம் அல்லது டிராகன் மறுபடி பரபரப்புச் செய்திகளாக ஆகிக் கொண்டிருக்கிறது. பிரச்சினை என்னவென்றே தெரியாமல் நிறைய கருத்து கந்தசாமிகளும், ஏதோ ஒன்றைப் பூதாகாரமாக்கிக் காட்டுவதே பத்திரிகை தர்மம், தொழில் என்றிருப்பவர்களுக்குக் கொஞ்சம் தீனி கிடைத்திருக்கிறது. அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், சீனர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள உருப்படியான விஷயங்களும் இருக்கிறது. அவற்றில் ஒன்று இதோ! 



நன்றி திரு. கௌதமன்!