அண்மையில் படித்தது! டான் பிரவுன் எழுதிய தி லாஸ்ட் சிம்பல்!




டான் பிரவுன் எழுதி, சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகம், தி லாஸ்ட் சிம்பல். எஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ், டாவின்சி கோட், வரிசையில் மூன்றாவது. குறியீடுகளில் வல்லுனரான ராபர்ட் லாங்டன் பாத்திரத்தை மையமாக வைத்து வந்திருக்கும் இந்தப் புதினம் கைக்குக் கிடைத்துச் சில நாட்களாகிறது. ஆனாலும், வெறும் அறுபது பக்கங்களைக் கூடத் தாண்டி தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை, என்னென்னவோ வேலைகள்!


இந்த நிலையில் "மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்" என்ற வெண்பூவின் வலைப்பதிவைப் படித்த போது, ச்சே அப்படியெல்லாம் இருக்காது, கதைக்களத்தை திறம்படச் செய்கிற கலையில் வல்லுனரான கதாசிரியர் அந்த அளவுக்கெல்லாம் மோசம் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில், இப்படி ஒரு பின்னூட்டமும் போட்டாயிற்று!


"ஏமாற்றம் டான் பிரவுன் எழுதினதில் இல்லை.முந்தைய கதைகளை வைத்து, எக்கச்சக்கமாக எதிர்பார்த்துப் படிக்க ஆரம்பிப்பதில் வரும் கோளாறு இது!"



வெண்பூ கொஞ்சம் பொறுமையாகவே பதிலும் சொன்னார். அப்போதாவது சுதாரித்திருக்க வேண்டும்!


"வாங்க கிருஷ்ணமூர்த்தி.. நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆனா அந்த எதிர்பார்ப்பை கிளப்புறது அவங்களேதானே. டாவின்சி கோடுக்கு அடுத்ததா வர்ற புத்தகத்துல இது மாதிரி எதிர்பார்ப்புகள் தவறில்லையே. அந்த எதிர்பார்ப்பு இருந்ததாலதானே முதல் பிரிண்டே 6.5 மில்லியன் ஆகுது. நம்ம எதிர்பார்ப்பை அவங்க காசாக்கும்போது, அதை பூர்த்தி செய்யுற கடமையும் அவங்களுக்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி."


மருதைக்காரங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம், எப்பவுமே முன் வச்ச காலைப் பின் வைக்க மாட்டோம்லன்னு கொஞ்சம் அலட்டலாகவே சொல்லிக்கிறது! நானும் அப்படித் தான் கொஞ்சம் அலட்டலா, மறுபடியும் ஒரு பின்னூட்டம் எழுதினேன்.


"/நம்ம எதிர்பார்ப்பை அவங்க காசாக்கும்போது, அதை பூர்த்தி செய்யுற கடமையும்/


இந்த இடத்துல தான் பிரச்சினையே வருது. ஏற்கெனெவே நாம் ஒரு மாதிரி கற்பனை செய்து வைத்திருக்கும் எதிர்பார்ப்பின்படி இல்லையென்றால், உடனே வருவது ஏமாற்றம் தான் இல்லையா?



இந்தப் புத்தகம் கைக்கு வந்தாயிற்று. ஆனால், படிக்க ஆரம்பிக்கவில்லை. இவரது புத்தகங்கள்,மற்ற எல்லாவற்றையும் படித்த அனுபவத்தில் தான் சொல்கிறேன், எதையும் கொஞ்சம் திறந்த மனதோடு,
கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்கிற விதத்தில் படிக்க ஆரம்பித்தால் இத்தனை ஏமாற்றம் இருக்காது.


எடுத்துக் கொண்ட கதைக் களத்தை, ஏகப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களின் அடிப்படையில், ஒரு புதினமாகச் சொல்ல முனைந்திருக்கிறார். அடுத்தடுத்து ஒரே மாதிரிப் பார்க்க, படிக்க நேரிடும்போது இந்த மாதிரி சலிப்பு ஏற்படுவது இயற்கைதான்.


கொஞ்ச நாள் கழித்து நிதானமாக இன்னொருதரம் படித்துப்பாருங்கள், நிச்சயமாக, வேறு விதமாக உணர்வீர்கள்!" இது நான் சொன்னது.


அவரும், இன்னும் பொறுமையாச் சொன்னப்பவே தெரிஞ்சிருக்கணும்! அப்ப அது உறைக்கவில்லை. என்ன சொன்னாருன்னா....


"மறுவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி.. புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் சொல்லுங்கள்."


பதிவர் வெண்பூ அவர்களே! பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்! இந்தப் புத்தகம் படு மொக்கைதான்! மரண மொக்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன், நான் படித்து நொந்து நூடுல்சான ஒரே புத்தகம் ராபின் குக் எழுதிய தி ஃபீவர்! அதை விட மரண மொக்கையான ஒரு புத்தகத்தை, இன்னமும் நான் படிக்கவில்லை.


ஒப்புதல் வாக்கு மூலம் ஆயிற்று! சரி புத்தகம் எப்படியெல்லாம் ஏமாற்றியது, எதனால் மொக்கை என்று விமரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும் பார்த்து விடலாமா?


ராபர்ட் லாங்டன் கதாபாத்திரத்தை சிம்பாலாஜி துறைப் பேராசிரியராக மையப்படுத்தி, முதல் இரண்டு புதினங்கள், முதலில் ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ், ஒன்பது வருடங்களுக்கு முன்னால் வந்தது; மூன்று வருடம் கழித்து டாவின்சி கோட்! புத்தகமாக வந்த போது ஏகப்பட்ட சர்ச்சைகள்! கிறித்தவத்தை இழிவு படுத்தி விட்டார், அவர் கதையில் என்னென்னவெல்லாம் திரித்துச் சொல்லியிருக்கிறார் என்பதைக் கிறித்தவக் காவலர்கள் நிறையப் பேர் ஏராளமான வலைத் தளங்களை ஆரம்பித்து, டான் பிரவுன் சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற அளவுக்கு எதிர் பிரச்சாரம், இலவச விளம்பரம் செய்தது,  இப்போது மிஸ்ஸிங்!


டாவின்சி கோட் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது, வாடிகன் நகரில் படமெடுக்க அனுமதித்த திருச்சபை, தங்களைப் பற்றிய பிம்பம் சரிந்து விழுவதைக் கண்டு, அடுத்த படமான ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ் படத் தயாரிப்பின் போது,ரோம் டயசீஸ் சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டது. படப்பிடிப்புக்கு வழங்கியிருந்த அனுமதியை மூன்று நாட்களுக்கு முன்னால் ரத்து செய்தது. படத்தின் இயக்குனர் ரான் ஹோவார்ட், அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், ரகசிய காமெராக்கள் வழியாக அதிரடியாக சில இடங்களில் படமெடுத்ததோடு, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செட், சிமுலேஷன் என்று பலவிதங்களிலும், படப்பிடிப்பை நடத்தினார் என்பது ஒரு சுவாரசியமான தகவல். படமெடுத்த விதத்தில், திட்டமிடுவதில் இருந்த சுவாரசியம், படத்திலும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?


மறுத்துப் பேசிப்பேசியே, கவிழ்த்துவிடலாம் என்று செயல்பட்டபோது, அதுவே டான் பிரவுன் புத்தகத்திற்கும், படத்திற்கும் பெரிய விளம்பரமாகிப் போன அதிர்ச்சியில் ஏற்கெனெவே கையைச் சுட்டுக் கொண்ட வாடிகன் திருச்சபை, ஏஞ்செல்ஸ் அண்ட் டெமன்ஸ் படம் வெளியானபோது கொஞ்சம் கவனமாகவே இருந்தது.


"Church dignitaries diplomatically praised its “dynamic director,” "splendid photography" and "magnificent" studio and computer simulations of the Vatican, Sistine Chapel and St. Peter's Basilica. An Italian daily quoted the L'Osservatore Romano editor Gian Maria Vian “(it) only confirms the centuries-old fascination with our faith and our symbols,” adding a who-cares, “If only all anti-Catholic operations were like this."


திருச்சபையின் பிரமுகர்கள் ராஜதந்திரமாகப் படத்தின் இயக்குனரை பாராட்டியதைப் படிக்கும் போது தெனாலிராமன் கதையில், பாலைப் பார்த்தவுடனேயே பயந்து ஓடும் பூனை ஒன்றின் கதை நினைவுக்கு வருகிறதா?


இப்படியெல்லாம் நிறையக் கேள்விப்பட்டு, வாசித்துப் பழகினதால், டான் பிரவுன் கொஞ்சம் விவரமாகவே எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையில் வெண் பூ வலைப்பதிவில் கொஞ்சம் அவசரப்பட்டு, என்னுடைய பின்னூட்டங்களைப் பதிவு செய்தேன்! முழுவதும் கதையைப் படித்தபிறகு அல்லவா தெரிகிறது!!


இருங்கள், நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை நான் சொல்ல வருவது!

கிறித்தவம் ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட மதம் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தாலும், நிறுவனப்படுத்தப்பட்டது எவ்வளவு தூரம் ஜோடிக்கப்பட்ட அல்லது மாற்றி எழுதப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டது என்பது ஒரு சராசரி வாசகனுக்குத் தெரியாத விஷயம்!  

அந்த ஒரு களத்தை எடுத்துக் கொண்டு இல்யூமினாடி, ஓபஸ் தேய் என்று அதிகம் வெளியில் தெரியாத விஷயங்களில் கவனத்தை ஈர்த்து, சரித்திரம் இப்படிக் கூட இருந்திருக்கலாம் என்ற ஊகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தபோது, அடுத்தடுத்த சிக்சர்களாக ஆட்டம் இருந்தது!


அடுத்த பந்தில் சிக்சரா, பவுண்டரியா இல்லை விக்கெட் போய்விடுமா என்ற எதிர்பார்ப்போடு படிக்க ஆரம்பிக்கும் வாசகனை முழுக்க முழுக்க ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்! முதலிரண்டு நாவல்களில், வாடிகனின், மறைக்கப்பட்ட அல்லது அதிகம் வெளியே தெரியாத விஷயங்களைத் தொட்டவர், மூன்றாவதில் அப்படியே ஒரு சொமெர்சால்ட் அடித்து, கிறித்தவ நம்பிக்கையை முன்னிறுத்திக் கதையை முடித்திருப்பதைப் படிக்கும்போது, முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே கதாசிரியர் டான் பிரவுன் தெரிகிறார்.


முந்தின இரண்டு நாவல்களிலும், மத நம்பிக்கைகள் சம்பந்தமான சில கேள்விகளை, அது தொடர்பான ஊகங்களை முன்வைத்தவர், இந்த மூன்றாவது புத்தகத்தில், சில முடிவுகளை முன்வைக்கிறார். அந்த முடிவுகளாவது, ஏற்கெனெவே அவர் சொல்லிப்போன விதத்தோடு பொருந்துகிறதா என்று பார்த்தால், இல்லை, இல்லவே இல்லை என்பதே விடையாக வரும்போது, படிப்பவர் தான் எமாற்றப்பட்டதாகவே உணருகிற தருணத்தில், மொக்கை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதாம்?


நிகோலஸ் கேஜ் நடித்து வெளியான "நேஷனல் ட்ரெஷர்" படத்தை ஏற்கெனெவே பார்த்திருப்பவர்களுக்கு, (நான் பார்த்து விட்டேன்) இந்தக் கதையைப் படிக்கும் போது, கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கதைக் களத்தை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோமே என்று தோன்றும் அளவுக்கு இருக்கும் இந்தக் கதையில் அப்படி என்னதான் இருக்கிறது?


ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், குறியீடுகள் குறித்த துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் கதா நாயகன் ராபர்ட் லாங்க்டனுக்குப் பழைய நண்பர் பீடர் சாலமனிடமிருந்து வாஷிங்டனுக்கு வருமாறு ஒரு அவசர அழைப்பு வருகிறது. நண்பரின் அழைப்பை ஏற்று வாஷிங்டன் வரும் கதாநாயகனுக்கு அப்புறம் தான் அந்த அழைப்பே போலியானது என்று தெரிய வருகிறது.


பன்னிரண்டு மணி நேரத்திற்குள் மொத்தக் கதையும் நடப்பதாக, ஒரு விறுவிறுப்போடு கதை ஆரம்பிக்கிறது. போலியான அழைப்பை விடுக்கும் வில்லன், நண்பரைத் தான் கடத்தி வைத்திருப்பதாகவும், ஃப்ரீ மேசன்ஸ் எனப்படும் ஒரு குழுவின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் பீடர் சாலமனை விடுவிக்க வேண்டுமானால், லாங்டன் ஒரு புதிரை விடுவிக்க வேண்டும் என்று சொல்கிறான்.


அமெரிக்க உளவுத்துறையான சி ஐ ஏ வின் ஒரு பிரிவின் டைரக்டர் சாடோ லாங்டனிடம், பீடர் சாலமன் காப்பாற்றப்படுவது முக்கியமில்லை, புதிரை விடுவித்து வில்லனிடம் அவன் கேட்கிறபடி கொடுத்து விட்டால் நல்லது என்று குறுக்கே வருகிறார்.


பீடர் சாலமனின் தங்கை, காதரின் சகோதரனுடைய வழிகாட்டுதலின் பேரில் ஒரு விஞ்ஞானக் கூடத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். வில்லன் அவரிடமும், நம்பவைத்து, ஆராய்ச்சிக் கூடத்திற்குள் ஊடுருவுகிறான். வில்லனிடமிருந்து தப்பி லாங்டனுடன் சேர்வது, புதிரைச் சேர்ந்து விடுவிக்க முயல்வது, முந்தின கதைகளில் வருவது மாதிரியே ஒரு ஸ்டாண்டர்ட் பாட்டர்ன் தான்! மாறுதலுக்காக, லாங்டனையே மூழ்கடித்துச் சாகடிப்பதாக ஒரு ட்விஸ்ட் வேறு!


மலாக் என்ற அந்த வில்லனுடைய கடந்த காலம் ஃபிளாஷ் பேக் முறையில் சிறிது சிறிதாகச் சொல்லப் படுகிறது. பீடர் சாலமனுடைய அன்னையைக் கொலை செய்தது முதல், அந்தக் குடும்பத்தையே கருவறுக்கச் சூளுரைத்துச் செயல் படும் வன்மம் அங்கங்கே சொல்லப்படுகிறது. வாஷிங்டன் நகரில் காபிடல் கட்டடத்திற்குள் எங்கேயோ புதையுண்டு கிடக்கும் "அது" என்ன? வில்லனுக்கு பீடர் சாலமனுடைய குடும்பத்தையே கருவறுக்கும் அளவுக்கு வன்மம் ஏன்? எது எப்படிப்போனாலும் சரி, மறைந்து கிடக்கும் புதிரை விடுவித்து வில்லனிடம் அவன் கேட்கிறபடி கொடுத்து, வேறுபிரச்சினையில் இருந்து தேசத்தைக் காப்பாற்றவேண்டும் என்று உளவுத்துறை டைரக்டர் சாடோ முனைப்புதான் இருப்பது ஏன், அப்புறம் டான் பிரவுன் கதைகளில் வழக்கமாக வருகிற மாதிரி குறியீடுகள், அவை மேலோட்டமாகச் சொல்வது ஒன்றாகவும், உண்மையில் சொல்வது வேறாகவும் இருப்பதை கதாநாயகன் எப்படி விடுவிக்கிறார் என்பதெல்லாம், சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கின்றன.


அதையும் தாண்டி, முந்தின இரண்டு நாவல்களில், கிறித்தவத்தின் மீதே சந்தேகம் வருகிற மாதிரி, வாடிகனை மையப்படுத்திக் களம் அமைத்ததற்கு மாறாக, இந்தக் கதையில் வாடிகன், சர்ச், இல்யூமினாடி, இவைகளெல்லாம் இல்லை. சரித்திரத்தில் மறைக்கப் பட்டதாக அல்லது திரிக்கப்பட்டதாகத் தேடும் எதுவும் இல்லை. ஃப்ரீ மேசன்கள் என்று அழைக்கப்படும் குழுவினரைப் பற்றி மட்டுமே!நொயெடிக் சயன்ஸ், எண்ணங்களின் ஆற்றல் இந்த விஷயங்கள் ஏதோ புதிதாகச் சொல்லப் படும் விஷயம் போல அங்கங்கே வந்து போகிறது.


கதையை டான் பிரவுன் தான் எழுதினாரா அல்லது ஏதோ கிறித்தவ விசுவாசக் குழு, தன்னுடைய பிரச்சாரத்தை வித்தியாசமாக ஒரு கதைக்குள் வைத்துக் கொடுத்திருக்கிறதோ என்ற சந்தேகம். அப்புறம், எனக்குக் கிடைத்த புத்தகம் ஒரிஜினல் தானா இல்லை புருடாவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்!



கொஞ்சம் மொக்கைதான்அதுகூட கதைசொன்ன விதத்தில் இல்லை, முன்பு சொன்னதோடு முரண்பட்டுப்போனபோது,நம்பகத்தன்மையை இழந்து விட்டதால் தான் என்று தோன்றுகிறது.

டான் பிரவுனுக்கு இந்தப் புத்தகம் ஹாட்ரிக் இல்லை!

தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே தத்துவம் பேசும் தோழர்  கே. வரதராஜன் அடிக்கடிஆசையோடு மேற்கோள் காட்டுவது இது:

"நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டின் மீதேறிக் கூட ஒருவன் நரகத்துக்குப் போக முடியும்!"

டான் பிரவுன் இந்தக் கதையில், சில முடிவுகளுக்கும் வருகிறார் என்று சொன்னேனல்லவா!அது கூட இப்படித்தான் இருக்கிறது!!

டான் பிரவுனின் இந்தக் கதையில் வரும் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தில் கிழக்கு முகமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் கடவுளுக்குக் கீழ்ப்படிதல் உள்ள என்று பொருள் படும் வாசகம், ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவுக்காக எழுதிய பிரார்த்தனை,  இவற்றைப்பற்றிய விவரங்களை, அமெரிக்க  வரலாற்றுப் பெருமிதங்களாகக் குறிப்பிடும் இந்தப் பக்கங்களில்  இன்னும் கொஞ்சம் விரிவாகப் படிக்க முடியும்.


It is true that the words "Laus Deo" [under God] are inscribed on the east face of the Washington monument in Washington DC. It is also true that all the four sides bear some inscriptions.

4 comments:

  1. ஹா..ஹா..ஹா.. மாட்டுனீங்களா?? அருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.

    //
    கதையை டான் பிரவுன் தான் எழுதினாரா அல்லது ஏதோ கிறித்தவ விசுவாசக் குழு, தன்னுடைய பிரச்சாரத்தை வித்தியாசமாக ஒரு கதைக்குள் வைத்துக் கொடுத்திருக்கிறதோ என்ற சந்தேகம்.
    //
    அருமை. இந்த கோணத்தில நான் யோசிக்கவே இல்லை, இதுவும் சரியாத்தான் தோணுது.

    எப்படியோ இந்த மொக்கையிலும் ஒரு நன்மை, உங்களை என்னோட ரீடர்ல சேர்த்துட்டேன்.. :)

    ReplyDelete
  2. ஃப்ரீ மேசன்களைப் பற்றிய அதீதக் கற்பனை என்பதோடு, தன்னுடைய மத நம்பிக்கைகளை மட்டும் எடுத்து வைத்திருந்தால் கூட கொஞ்சம் சகித்துக் கொண்டிருக்க முடியும், கடைசி மூன்று பக்கங்களை, இன்னும் கவனமாகப் படித்தால், அமெரிக்கா கடவுளின் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட்டது என்ற அமெரிக்கப்பெருமிதம் மட்டுமே இருப்பது புரிய வரும்! கொஞ்சம் கூடுதலான விவரங்களைப் புதிதாகக் கடைசியில் சேர்த்திருக்கிறேன், அதையும் பாருங்கள்!

    ReplyDelete
  3. அப்ப இந்த புத்தகம் சினிமாவா வராது!

    ReplyDelete
  4. அப்படியெல்லாம் ரசிகர்களை நிம்மதியாக இருக்கவிடுவார்களா, என்ன?

    2012 இல்இந்தக் கதை படமாக வெளிவருகிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!