அது அந்தக்காலம்! ஆனால் இதே தேதியில்!


சென்ற பதிவு படிக்க வந்தவர்களைக் கொஞ்சம் அதிகமாகவே மிரட்டியிருக்கிறது போல!


அல்லது புவனேஸ்வரி படம் போதுமே என்று தலைப்பில் போட்டுவிட்டு, படம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பார்களோ?


ஏற்கெனெவே உண்மைத் தமிழனுக்குப் போட்டியாக நீளமான பதிவுகளைப் போடுகிறீர்களா என்ற கேள்வியும் வந்து விட்டது. உண்மைத்தமிழனுக்குப் போட்டியாக என்னால் மட்டுமல்ல, வேறு எவராலும் இங்கே முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்! நீளமாக அல்ல என்பதை அடிக் கோடிட்டுக் கவனிக்கவும்!!


அதனால், இந்தப்பக்கத்துக்கு வந்து படித்து, அல்லது படிக்காமலேயே களைப்படைந்து விட்ட என்னுடைய 'செல்லக் குட்டி' வாசகர்களுக்கு ஆறுதலாக, இந்தப் பதிவு நீளம் குறைக்கப்படுகிறது. குட்டிக் குட்டிச் செய்திகளாகக் கொஞ்சம்!


இன்றைக்கு ஹிந்துவில் பத்திவிளம்பரங்கள் பகுதியில், விளம்பரமில்லாத இடைவெளியை சுவாரசியமான மேற்கோள்களோடு நிரப்புவார்கள். செய்திகளைவிட சமயத்தில் விளம்பரங்களே, நடுநடுவே இந்த மாதிரி வரும் நிரவல்களுமே படிக்க சுவாரசியமாக இருக்கும்! மாதிரிக்கு ஒன்று.


"Histories make men wise, poets, witty,

the mathematics, subtle,


natural philosophy,deep, moral, grave,


logic and rhetoric, able to contend."





--Sir Francis Bacon

ஃபிரான்சிஸ் பேகன் என்ற இந்த ஆங்கிலேயே தத்துவ அறிஞர், ஒரு சகலகலா வல்லவராகவும் இருந்திருக்கிறார். ராஜதந்திரியாகவும், விஞ்ஞானியாகவும், வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும், எல்லாவற்றிற்கும் மேலே எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார்.

இங்கே கூத்தடிக்கிறவனுக்கெல்லாம் கூவிக் கூவி டாக்டர் பட்டம் வழங்குவதுபோலவோ,
சரக்கு கொஞ்சம் இருந்தாலே போதும், சகலகலா டாக்டர்களாகி விடுவது மாதிரியோ, அந்த நாட்களில் இல்லை. மேலே சொன்ன ஒவ்வொரு துறையிலும் பேகனுக்கு நிஜமாகவே விஷய ஞானம் இருந்திருக்கிறது!

Knowledge is Power என்று ஒரு சொற்றொடரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா, அது ஃபிரான்சிஸ் பேகனுடைய வார்த்தைகள் தான்!

ஃப்ரீமேசன்ஸ் என்று ஒரு குழுவைப்பற்றிய விவரணங்கள் டான் பிரவுன் நாவல்களில் வருமே! நினைவுக்கு வருகிறதா? பேகன் ஐயாவும் அப்படிப்பட்ட குழுவின் அங்கத்தவர்தான்!

சரித்திரம் மனிதர்களை புத்தியுள்ளவர்களாகச் செய்கிறது என்கிறார்! எல்லோரையுமா?
அதன் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களை மட்டுமே என்பது வெளிப்படை!
நாத்திகத்தைப் பற்றிய கட்டுரைகள் என்ற தலைப்பிலான கட்டுரை வரிசை ஒன்றில் பேகன் முத்தாய்ப்பாக இப்படிச் சொல்கிறார்: "கொஞ்சம்போல தத்துவத்தைப் படிக்கும்போது (அல்லது மேம்போக்காக மேய்ந்து விட்டுப் போகும்போது) மனித மனம் நாத்திகத்தைக் கண்டடைகிறது;அதுவே ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது மதங்களின் உள்ளார்ந்த உண்மைக்கு கொண்டு வந்து சேர்க்கிறது."

"a little philosophy inclineth man’s mind to atheism; but depth in philosophy bringeth men’s minds about to religion." 

இங்கே சமயங்கள் என்று சொல்லப்படுவது, அவைகளின் உண்மையான அடிநாதத்தை மட்டுமே, மதங்கள் என்று இன்றைக்குக் கொச்சையாகப் புரிந்துகொள்ளப்படுவது போல அல்ல!
ooOoo


30 அக்டோபர் 1959 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் இருந்து:

"The split in the Indian Communist Party over the attitude to be adopted to Chinese aggression on our border areas, is likely to go very deep and may decide the future of the party in this country. While leaders like Mr. Ranadive have consistently held China up as the model and accepted Peking’s leadership for Asia, Mr. Dange has openly criticised Chinese moves, both in Tibet and on the Indian border."


கம்யூனிஸ்ட் எனப்படுபவர் யாரெனில் மாஸ்கோவில் மழை பெய்தால் இங்கே குடை பிடிப்பவர்கள் என்று சொல்வார்கள். சீனாவில் பெய்தாலும் இங்கே குடைபிடித்துக் கொண்டே சண்டையும் போட்டுக் கொள்வார்கள் என்பது தெரியுமோ?


சீனாவுடனான பிரச்சினை கொதி நிலையிலேயே கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது! இதை விட வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி விட முடியுமா என்ன?


சுருக்கத் தெரிந்தவர்கள் மட்டும், காதோடு வந்து சொல்லுங்கள்!  
வால் பையன்களுக்கு 'நறுக்'கென்று நாலே வார்த்தைகளில் சரித்திரத்தைச் சொல்ல வேண்டுமாம்!

ooOoo
ஹிந்துவுக்கு அவ்வப்போது இடதுசாரிகளின் மீது கரிசனமும் பாசமும் பொங்கி வரும்.இன்றைக்குப் பேப்பரில் கூட, சுரேந்தர் வரைந்த கார்டூன் அப்படிக் கரிசனமாகத் தான் தெரிகிறதே தவிர, உண்மை தெரியவில்லை!

ரயிலை மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருப்பதாக, ரயில்வே ஊழியர்கள் மாநிலக் காவல்துறையிடம் புகார் செய்யப் போனால், மாவோயிஸ்டுகள் எவருமே இல்லை, குரங்குகளாகத் தான் இருக்கும் என்று நக்கலாக எதிர்வினை வந்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த விஷயத்தில், முதல் தகவல் அறிக்கையில் கூட மாவோயிஸ்டுகளை பற்றிய தகவல் எதுவுமில்லையாம்.ஆனால், மம்தாவை மாவோயிஸ்டுகளுடன் சம்பந்தப்படுத்தி மட்டும் தாறுமாறாகப் பேசுவார்களாம்!



சீனா தொடர்ந்து, மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்களும், ராணுவப் பயிற்சியும் வழங்கி வருவது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட்டிருக்கிற நிலையில், மத்திய அரசின் "எங்கோ மழை பெய்கிறது எனக்கென்ன" என்றிருக்கும் எருமைமாட்டு பாவனை தொடர்வது நாட்டு நலனுக்கு நல்லது அல்ல!


சம்பவம் என்பது தனியாக நடக்கிற ஒற்றை நிகழ்வு. சரித்திரம் என்பது ஒரு குணாதிசயத்தை, பொது இயல்பைச் சொல்வது-சம்பவங்களால் ஆனது சரித்திரம். என்றாலும், ஒரு நதி ஓடுவது போல, ஒரு சமூகத்தின் தனி இயல்புகள் என்னென்ன மாற்றங்களை, திருப்பத்தைச் சந்தித்தன என்பதன் தொகுப்பே சரித்திரம்.

இங்கே வரலாறு எவ்வாறெல்லாம் திரிக்கப் பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டு, அல்லது அடிப்படையான விஷயங்களே தெரியாமல் தான் எழுதினது தான் சரித்திரம் என்றமாதிரி வந்துகொண்டிருக்கும் அரைவேக்காட்டுப் பதிவு ஒன்று சாம்பிளுக்கு!

 வரலாறு முக்கியம் தான்! இப்போதாவது  புரிகிறதா திரு. அருண்?


20 comments:

  1. வரலாறு முக்கியம் அமைச்சரே...

    ReplyDelete
  2. ஆனால், அது தனக்கில்லை என்று வால்பையன் தொடர்ந்து அடம் பிடிக்கிறார்!

    ReplyDelete
  3. //சரக்கு கொஞ்சம் இருந்தாலே போதும், சகலகலா டாக்டர்களாகி விடுவது மாதிரி//

    டாக்டர் பட்டத்துக்கு கொஞ்சம் கூட சரக்கே தேவையில்லை என்பது தான் முதல் தகுதி தமிழகத்தில்!

    ReplyDelete
  4. //நாத்திகத்தைப் பற்றிய கட்டுரைகள் என்ற தலைப்பிலான கட்டுரை வரிசை ஒன்றில் பேகன் முத்தாய்ப்பாக இப்படிச் சொல்கிறார்: "கொஞ்சம்போல தத்துவத்தைப் படிக்கும்போது (அல்லது மேம்போக்காக மேய்ந்து விட்டுப் போகும்போது) மனித மனம் நாத்திகத்தைக் கண்டடைகிறது;//

    இவரு மட்டும் முங்கி முத்தெடுத்தாராக்கும்!

    எல்லோரும் ஒரு நாள் சாவத்தான போறோம்!
    ஆத்திகவாதிகள் என்ன ஆயிரம் வருஷம் உயிரோடவா இருக்கபோறாங்க!?

    ReplyDelete
  5. //இங்கே சமயங்கள் என்று சொல்லப்படுவது, அவைகளின் உண்மையான அடிநாதத்தை மட்டுமே, //

    அந்த அடிநாதம் என்ன?
    மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தானே!

    நாத்திகவாதிகள் பைத்தியகார மருத்துவமனையிலா இருக்கிறோம்! ஆன்மீகவாதிகளை விட நிம்மதியாகத்தானே இருக்கிறோம்!

    ReplyDelete
  6. //மதங்கள் என்று இன்றைக்குக் கொச்சையாகப் புரிந்துகொள்ளப்படுவது போல அல்ல!//

    கொச்சையான செயல்களை செய்யும் மதங்களை தலையில் வைத்து கொண்டா ஆடமுடியும்!?

    ReplyDelete
  7. //கம்யூனிஸ்ட் எனப்படுபவர் யாரெனில் மாஸ்கோவில் மழை பெய்தால் இங்கே குடை பிடிப்பவர்கள் என்று சொல்வார்கள். //

    திருவண்ணாமலையில கொடி கம்பம் விழுந்துருச்சுன்னு எல்லோரும் வீட்ல விளக்கு பத்த வச்சானாமாம்! இது எந்த கணக்கில் சேரும்!

    நீங்கள் சொன்னது அடிப்படை ஆதாரமில்லாது, நான் சொன்னது தமிழ்நாடே பார்த்தது!

    இப்ப சொல்லுங்க யார் முட்டாள்!?

    ReplyDelete
  8. //சீனாவுடனான பிரச்சினை கொதி நிலையிலேயே கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது! இதை விட வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி விட முடியுமா என்ன?//

    திரும்பவும் சீனாவா!?
    அவுங்க மூக்கு மேல உங்களுக்கு அப்படி என்ன கோபம்! செண்ட்ரல் ஸ்டேஷனாண்டா வரச்சொல்லுவோமா!?

    ReplyDelete
  9. //வால் பையன்களுக்கு 'நறுக்'கென்று நாலே வார்த்தைகளில் சரித்திரத்தைச் சொல்ல வேண்டுமாம்!//

    செத்த போன நேருவை பற்றியும், சாஸ்த்திரி பற்றியும் தெரிந்து நான் என்ன செய்யப்போறேன்!
    இப்ப எனக்கு என்ன பரிட்சையா நடக்குது!?

    நாலு காசு சம்பாரிக்குறதுக்கு வழி சொன்னா கிருஷ்ணமூர்த்தி சாருக்கு ஒரு ”ஓ” போடலாம்!
    வரலாறு சொல்லிகொடுத்தா!?

    ReplyDelete
  10. //சீனா தொடர்ந்து, மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்களும், ராணுவப் பயிற்சியும் வழங்கி வருவது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட்டிருக்கிற நிலையில், மத்திய அரசின் "எங்கோ மழை பெய்கிறது எனக்கென்ன" என்றிருக்கும் எருமைமாட்டு பாவனை தொடர்வது நாட்டு நலனுக்கு நல்லது அல்ல!//

    இந்தியாகூடத்தான் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது! அதெல்லாம் நமக்கு கண்ணுக்கு தெரியாதே! நமக்கு வேண்டியதெல்லாம் கம்யூனிஸ்டுங்கிற வார்த்தை காதுலயோ, கண்ணுலயோ பட்டுறக்கூடாது!

    ReplyDelete
  11. //ஒரு நதி ஓடுவது போல, ஒரு சமூகத்தின் தனி இயல்புகள் என்னென்ன மாற்றங்களை, திருப்பத்தைச் சந்தித்தன என்பதன் தொகுப்பே சரித்திரம்.//

    அந்த நதி இருக்குற வரைக்கும் அது சம்பவம் தான்!
    அங்கே நதி இருந்த சுவடு மட்டும் இருந்தால் அது சரித்திரம்!

    ReplyDelete
  12. அரைவேக்காட்டு பதிவு கொடுமையா இருக்கு!?

    ReplyDelete
  13. //வரலாறு முக்கியம் தான்! இப்போதாவது புரிகிறதா திரு. அருண்?//

    “பிரா”கெட்ல வால்பையன்னு போடுங்க, வேற யாருக்கோ சொல்றிங்கன்னு நினைச்சிகுவேன்!

    ReplyDelete
  14. //கிருஷ்ணமூர்த்தி said...
    October 30, 2009 4:26 PM

    ஆனால், அது தனக்கில்லை என்று வால்பையன் தொடர்ந்து அடம் பிடிக்கிறார்!//

    செந்தழல் ரவி சொன்னதின் உள்ளர்த்தம் புரியாத (மங்குணி) அமைச்சரா நீங்கள்!?

    =மங்குணி என்றால் எனக்கு என்னானே தெரியாது! அந்த படத்தில் வரும், பயன்படுத்தி கொண்டேன்!

    ReplyDelete
  15. இந்தப் பன்னிரண்டு பின்னூட்டங்களுக்கும் எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி பதில் சொல்ல முனைந்தால், உண்மையான வால் யார் என்பதில் குழப்பம் வந்து விடும் என்பதால் முதலிலேயே பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துவிடுகிறேன்:-))

    ஆனாலும் கொள்கை ரீதியாக சில விஷயங்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், சம்மதம் என்று எடுத்துக் கொல்லப்பட்டுவிடும்.

    /இவரு மட்டும் முங்கி முத்தெடுத்தாராக்கும்!/
    பேகனும் மூழ்கி முத்தெடுக்க முயற்சி செய்திருக்கிறார். தான் எடுத்ததெல்லாம், முத்தா, நத்தைக் கூடா என்று தனக்குத் தானே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ளவில்லை.

    /நாத்திகவாதிகள் பைத்தியகார மருத்துவமனையிலா இருக்கிறோம்?/
    அது எனக்குத் தெரியாது. மற்றவர்களைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பாமல் இருந்தால் சரி!

    /கொச்சையான செயல்களை செய்யும் மதங்களை../
    தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட வேண்டாம், செருப்பால் அடித்துத் துரத்துங்கள். அங்கே செய்து கொள்ள வேண்டிய ஒரே திருத்தம், மதங்கள் என்றிருக்கும் இடத்தில் மதத்தின் பெயரால் கொச்சையான செயல்களைச் செய்யும் நபர்களை, அவர்கள் எவராயினும் சரி..என்று!

    /நீங்கள் சொன்னது அடிப்படை ஆதாரமில்லாது, நான் சொன்னது தமிழ்நாடே பார்த்தது!/
    குடைபிடிப்பதைப் பற்றிச் சொன்னது, பொதுவாக இங்கே பொதுவுடைமைக் கட்சியைப் பற்றி செய்யப்படும் விமரிசனம்தான்! அது என்னுடையதுமில்லை.

    அடுத்து தமிழ்நாடே பார்த்ததாகச் சொல்லப்படும் வதந்தியைக் கிளப்பியவர்களுக்கு, தக்கபடி மண்டகப்படி நடத்த வேண்டியதுதானே? யார் தடுத்தது? கொஞ்ச நாளைக்கு முன்னால் இதே மாதிரி, ஜவுளி வியாபாரம் செய்பவர்கள், உண்டன்பிறந்த சகோதரிக்குப் பச்சைக் கலர் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் என்னென்னமோ ஆகி விடும் என்று பீதியைக் கிளப்பியதில், குறிப்பிட்ட கலர் சேலை வியாபாரம் சூடு பிடித்தது நினைவிருக்கிறதா?

    கேட்கிறவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய்யும் வடியும்! நமீதா வந்து நடனமாடுவதும் தெரியும்!

    /திரும்பவும் சீனாவா!?/
    என்ன செய்வது? பாடத்தைக் கற்றுக்கொள்ளும் வரை, மஞ்சள்நிறமும் சப்பை மூக்கும் விடமாட்டேன் என்கிறதே!

    /நமக்கு வேண்டியதெல்லாம் கம்யூனிஸ்டுங்கிற வார்த்தை காதுலயோ, கண்ணுலயோ பட்டுறக்கூடாது!/
    கம்யூனிஸ்ட் கட்சி மீது இத்தனை காதலா? எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!

    /அரைவேக்காட்டு பதிவு கொடுமையா இருக்கு/
    சுட்டியில் இருக்கும் பதிவைப் படித்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்!

    ReplyDelete
  16. //பேகனும் மூழ்கி முத்தெடுக்க முயற்சி செய்திருக்கிறார். தான் எடுத்ததெல்லாம், முத்தா, நத்தைக் கூடா என்று தனக்குத் தானே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ளவில்லை.//

    ஆனால் அடுத்தவர்களை மட்டும் ”கொஞ்சம் போல் படித்தவர்கள்” உங்கள் பாஷையில் மேம்போக்காக என்று சொல்லலாமா!?

    அவர் யார் அளவிட!?

    ReplyDelete
  17. //கம்யூனிஸ்ட் கட்சி மீது இத்தனை காதலா? எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!//

    உங்களுக்கு இருக்கும் மோதலுக்கு தான் எதிர் கருத்து!

    நான் எந்த இஷத்திலும் சேர விரும்பாதவன்!
    மனிதனாக மட்டுமே வாழ ஆசைப்படுபவன்!

    ReplyDelete
  18. ///அரைவேக்காட்டு பதிவு கொடுமையா இருக்கு/
    சுட்டியில் இருக்கும் பதிவைப் படித்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்! //

    அந்த பங்காளியின் பதிவைத்தான் சொல்கிறேன்!

    ஏகாதிபத்தியத்தை எதிர்த்த காங்கிரஸ் மேட்டர்!

    ReplyDelete
  19. எனக்கு கமயூநிசமும் தெரியாது - காபிடலிசமும் தெரியாது.
    எனக்குப் பிடித்ததெல்லாம் - துனா முனா அண்ணாச்சி - துவரம்பருப்பு விலை என்னாச்சி
    மாதிரி சுறுசுறுப்பாக தமிழ் நாட்டில் செய்யப்படும் சூடான அரசியல்தான்.
    அப்பப்போ யாரு எதிர்க்கட்சியா இருக்காங்களோ அவுகளுக்கு - ஒரு வோட்டு தட்டிட்டு வந்திடுவேன். நான் யாருக்கு வோட்டுப் போட்டேனோ அவர்கள் யாரும் ஜெயித்ததா சரித்திரமே இல்லை. !!

    ReplyDelete
  20. வாங்க கௌதமன் சார்!

    இங்கே வேறு எவருக்குத் தான் இந்த இசங்கள் எல்லாம் தெரிந்திருக்கும் அல்லது அத்துப்படி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    ஆனால் வரலாறு கூட உண்மையைப் போல வெகு விசித்திரமானது. சொல்லும்போது நம்புவதற்கே கஷ்டமாக இருக்கும் அளவுக்கு நாம் வெளிப்பகட்டுக்கும், போலித்தனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே பழகி விட்டோம்.

    நாடு சுதந்திரம் பெற்ற தருணங்களில் கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே மிகவும் மரியாதையும் நல்ல எண்ணமும் இருந்தது. முதல் பொதுத் தேர்தலில், இங்கே தமிழகத்தில், கம்யூனிஸ்டுகள் தனியாகவும், பல இடங்களில் சுயேச்சைகளை ஆதரித்தும் களமிறங்கிய காலத்தில், காங்கிரஸ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    கோயபெல்சைத் தோற்கடிக்கும் விதத்தில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான விஷமப் பிரச்சாரம் நடந்தது. கம்யூனிஸ்டுகள் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாத காங்கிரஸ், அன்றைக்குக் களத்தில் இருந்த அத்தனை காய்களையும் பயன்படுத்திக் கொண்டது, தனிக்கதை. காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்றால் இங்கே வெறும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுடைய வரலாறு என்று இருந்ததில்லை. விஷமத்தனத்தின், துரோகத்தின் வரலாறாகவே நிறைய இடங்களில் இருப்பதைப் பார்க்க முடியும்!

    வால் பையன்கள் எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை! வரலாற்றைக் கொஞ்சம் விரிவாகவே பேச ஆசைதான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!