ஆச்சரியப்படுத்திய பதிவுகளில் கொஞ்சம் ....பார்ப்போமா?

வால்பையன் என்னுடைய பதிவில் அடிக்கடி சொல்லும் கமென்ட். பதிவு நீளமாக இருக்கிறது-இதையே மூன்று அல்லது ஐந்து பதிவுகளாகப் போடலாம்-உண்மைத் தமிழனுக்குப் போட்டியாக வர நினைக்காதீர்கள். இதையே, கௌதமன் சார் அவர் அசோக் லேலன்ட் நிறுவனத்தில் பணியாற்றிய போது கற்றுக் கொண்ட பாடம் One Presentation at a  time- எனக்கும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்து, அப்புறம் விட்டு விட்டார்!

அது என்னவோ, வார்த்தைகளைச் சுருக்குகிற கலை எனக்கு வரவே மாட்டேன் என்கிறது!  "சுருக்கமாக எழுதறது ரொம்பவே கஷ்டம் போல" என்று ஒரு பின்னூட்டத்தில் வால் பையன் சொல்லிவிட்டுப் போனார். நிஜமாகவே அனுதாபப் பட்டுச் சொன்னாரா, அல்லது தன மீதே பரிதாபப் பட்டுக் கொண்டு சொன்னாரா என்பது இன்றைக்கு வரை  எனக்குத் தெரியாத  ரகசியம்!

மாவு ராகவன்களிடம் 'நறுக்'குவதைப் பற்றி பாடம் கேட்டுக்கொள்ள எனக்குப் பொறுமை இல்லை. நானே கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை! படிக்க வருகிறவர்களுக்கும் தான்!
சேத் கோடின் நான் படிக்கும் ஆங்கில வலைப்பதிவர்களில் ஒருவர்!
அவருடைய சமீபத்திய பதிவு . ஒரே வாக்கியத்தை இரண்டாக உடைத்து, முதல்பாதி தலைப்பு! அடுத்த பாதி பதிவு!

The reason they want you to fit in...

is that once you do, then they can ignore you.


இந்த மாதிரி எழுத முயன்றால்.......

.........

ஓட்டிக்கொண்டிருந்தான்!

இப்படித்தான்இருக்கும் 
இங்கே புதுக்கவிதை எழுதிப்பழக வரவில்லை! பதிவுகள்! 
பதிவது, அந்த நேரத்து மன ஓட்டத்தைப் பொறுத்தது!


சில நேரங்களில், யார் என்ன செய்வார்கள், என்ன எழுதுவார்கள் என்பதை அவர்களாலுமே கூட ஊகிக்கவே முடியாது! என்னையும் சேர்த்துத்  தான் சொல்கிறேன்!

தமிழ் வலைப்பதிவுகளில்,வைரஸ் காய்ச்சல் போல் பரவிக் கொண்டிருக்கும் அல்லது அவ்வப்போது வந்து போகும் சங்கிலிப்பதிவு சுரத்தையும் மீறி,சில பதிவுகள் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுப்பவைகளாக இருக்கும். இந்த ஊகிக்க முடியாத விளையாட்டில் சமீப காலமாக நான் சில சுவாரசியமான பதிவுகளை படிக்க நேர்ந்தது. என்னை ஆச்சரியப்படுத்திய பதிவுகளில் கொஞ்சம் பார்ப்போமா?
முதலாவதாகநாலு வரியோ, நாற்பது வரியோ, சொல்ல வரும் விஷயத்தை நச்சென்று சொல்லக் கூடிய  திறமை உள்ள ஒரே பதிவர் என்னைப்பொருத்த வரை  தமிழில் R P ராஜநாயகம் தான் ! பெயருக்குத் தகுந்தாற்போல, அவர் ராஜநாயகம் தான்!


சாம்பிளுக்கு இங்கே மற்றும் இங்கே!
பச்சையாக எழுதுகிறார் என்று சிலபேர் நினைக்கக் கூடும். வெண்டைக்காய் மாதிரி என்ன சொல்ல வருகிறோம் என்பதையே சொல்லாமல் வழவழவென்று எழுதிக் கொண்டிருப்பவர்களை விட, நேருக்கு நேரான  வார்த்தைகளில் உயிரோட்டத்தைச் சொல்ல முடிந்த ஒரே எழுத்தாளர் ராஜநாயகம் மட்டும் தான் என்பது என்னுடையகருத்து.

ஜூன் முப்பதன்று வால்பையன் என்னிடம் சாட்டிங்கில் வருத்தப்பட்டுச் சொன்னது-"இன்றைக்குப் புதுமைப்பித்தனுடைய பிறந்தநாள்! அவரைப் பின் பற்றித்தான் எழுதவே வந்தோம் என்று சொல்லிக் கொள்கிற எவருக்கும் புதுமைப் பித்தனைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லை!” - இப்போது எதற்காக இதைச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?

இன்றைக்கு தி. ஜானகி ராமனுடைய பிறந்த நாள்!
நினைவு வைத்துக் கொண்டு எழுதிய ஒரே பதிவர் ராஜநாயகம்! தான் வாசித்ததில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் லயித்துப் போய், அதில் இருந்து தெறிக்கும் சின்னச் சின்ன எண்ணச் சிதறல்களை அப்படியே பதிவுகளில் வார்க்கும் வித்தை தெரிந்த ஒரே வலைப்பதிவரும் ராஜநாயகம் தான்!
oooOooo


அடுத்து இரண்டாவதாக ,பாவன்னா ராகவனைக் கூட, தன்னுடைய வம்புப் பின்னூட்டங்களினால் கொஞ்சம் பயமுறுத்தியே வைத்திருக்கும் நம்ம வால்பையன் அருண்! மூடு கிளம்பி விட்டால், ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா மாதிரிப் பின்னூட்டம் சரவெடியாக வரும். படித்த (அல்லது பிடித்த?)).பதிவுகளில் தனக்கு சௌகரியப்படுகிற சில வார்த்தைகளை மட்டும் உருவி எடுத்து, அதையே சர வெடிகளாகப் பின்னூட்டத்தில் தாளிப்பதில் வல்லவர்! ஆகஸ்ட் மாதம், ஆன்மீகத்துக்கு ஒரு எதிர்வினைன்னு பதிவுபோடுவார்! அப்புறம் திடீரென்று கவிதையெல்லாம்(?) எழுத ஆரம்பிப்பார்!. ஆன்மீகம்! எதிர்வினை 2.. என்று அடுத்து வந்தது!


சிறுகதைப்பட்டறைக்குப் போய்விட்டு வந்த பிறகு, சிறுகதை எழுத அட்லீஸ்ட் ஒரு ஆரம்பமாவது செய்திருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள்? அது தான் இல்லை!பட்டறைக்குப்போய் வந்த மற்றவர்கள் எல்லாம் சிறுகதைகள் எழுதிக் குவித்துவிட்டார்களா என்று மட்டும் என்னைக் கேட்காதீர்கள்! அப்புறம் ஏன்  நினைவுபடுத்தித் தொலைத்தாய் என்று கண்டனக் கணைகளாக வந்து குவிந்துவிடப்போகிறது!
செத்த கடவுள் என்று தலைப்பு வைத்து மறுபடியும் ஒரு சர வெடி! மனிதர் தன்னுடைய பலம், சரவெடியாகப் பின்னூட்டம் இடுவதும், அதற்குத் தோதாக உசுப்பி விடுகிற சில பதிவுகளை எழுதுவதும் தான் என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்! திடீரென்று சினிமா விமரிசனம் வரும்! அந்த அந்த நேரத்து மூடுக்குத் தகுந்த மாதிரி எழுதி வந்ததில், பொதுவாக ரசிகர் மன்றம் அது இது என்று எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்த என்னையுமே வால்பையன் ரசிகர் மன்றத்து ஆளாகவும், வால்பையன் நற்பணி இயக்கத்துத் தொண்டனாகவும் ஆக்கி விட்டார்!

இந்த நவம்பர் பதினொன்றாம் தேதி குவியலில்

"நாளையோட நான் பதிவெழுத வந்து இரண்டு வருடம் ஆகிறது!
இது எனது முதல் பதிவான அறிமுகப்பதிவு! அதன் பின் ஒரு வருடங்கள் தொடர்ச்சியான மரணமொக்கைகள் தான், இப்ப தான் கொஞ்சம் நானே திரும்ப படிக்கிற மாதிரி இருக்கு ! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், உங்களது உளியே என்னை செதுக்கியது!
நன்றி நன்றி நன்றி!"   
இப்படி எழுதின வால்பையனின் அடுத்து பதிவு "நாங்க துறை சார்ந்த மொக்கைகளும் போடுவோம்ல!" என்ற டிஸ்கியோடு அஞ்சு கேள்விகள் என்று பொருள் படும் Five Q!
வாலு எல்லாப்பக்கங்களிலுமே, எல்லாத் துறைகளிலும் கூட நீளும் என்பதை மிகவும் சுவாரசியமாக நிரூபித்திருக்கிறார்!

வால்பையன் திரு. அருணுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! வால்பையன் ரசிகர்மன்றத்தில் இருந்தும் கூட!


oooOooo



நிகழ் காலத்தில்....என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி வரும் சிவா!
அமைதியாக, எதையுமே கொஞ்சம் யோசித்து எழுதுபவர் என்று அவருடைய பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும்! அவருமே கூட, என்னை ஆச்சரியப்படும் படி ஒரு பதிவை எழுதினார். இன்னமும், எதற்காக இப்படி ஒரு பதிவை எழுதினார் என்பது புரியாமலேயே இருக்கிறது.

இந்தப்பதிவைப் படித்துப்பாருங்கள்!


நீண்ட நாட்களுக்கு முன்னால் நான் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பொதுத்துறை வங்கியில், நான் நேரடியாகவே கண்ட ஒரு அனுபவம். என்னுடைய கிளையில் Foreign Exchange பிரிவில் நானும், ஒரு அதிகாரியும்! இந்த அதிகாரி திருமணமான ஒரு ஆண். அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் ஒரு பெண்ணை, ஒரு லாட்ஜுக்குக் கூட்டிக் கொண்டு போனார்.
ஏன், எதற்கு என்று விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன?
மசையன், அதோடு  விட்டிருந்தால் பரவாயில்லை! தன்னுடைய அனுபவம், பிரமிப்பு எல்லாவற்றையும் விவரிக்க ஆரம்பித்தபோது பொங்கி எழும்படியாகி  விட்டது. கிளை மேலாளர் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அவருக்குச் சொன்னது தான் இப்போது சிவாவுக்கும் சொல்லத் தோன்றுகிறது. காமம், கலவி, கிளர்ந்தெழுதல் எல்லாம் இயற்கைதான், இல்லையென்று சொல்லவில்லை! எதுவுமே  இருக்க வேண்டிய எல்லைக்குள்தான் இருக்க வேண்டும்!அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது, வர்ணிப்பது அல்லது அந்த நினைவிலேயே மூழ்கிக் கிடப்பது ஆபாசம்! Obscenity! அருவருப்பானது! Vulgarity! முட்டாள் தனமானதும்  கூட! Idiotic!
நாம் ஒவ்வொருவருமே மலம், மூத்திரம், சளி என்று ஏகப்பட்ட கழிவுகளைச் சுமந்துகொண்டுதான் இருக்கிறோம். அவை அவை  இருக்க வேண்டிய எல்லைக்குள் இருந்தால் நாற்றமும் அசிங்கமும் அருவருப்பும் இல்லை. மாறாக அதையே, நம்முடைய உடம்பின் மேலோ, அல்லது சாப்பிடும் போது, தட்டிலோ  சேர்த்து வைத்துக் கொள்வோமா என்ன? காம உணர்வுகள் என்று மட்டும் அல்ல, வேறு சில குப்பைகளையும் வைக்க வேண்டிய இடத்தில் நமக்கு வைக்கத் தெரியவில்லை என்பதை புவனேஸ்வரி விவகாரத்தில் பார்த்தோமே!புவனேஸ்வரிக்கு முன்னாலும் உடலை விற்பவர்கள் இருக்கத் தான் செய்தார்கள், இனிமேலும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், சமூகம் அவர்களை, ஒரு எல்லைக்கு மேல் பக்கத்தில் அண்டவிடுவதில்லைஅதனால் தான் ஒட்டு மொத்த சமூகமுமே புரையோடிவிடாமல் தப்பிக்கொண்டிருக்கிறது.

ஆனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைக்கிற மாதிரிக் கூட இல்லை, நம் தலை மேலேயே வைத்துக் கொண்டாடும் வேறு சில குப்பைகள், இவற்றை என்ன செய்யப்போகிறோம்? சினிமாக்காரர்களைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய ஒரு சமூகத்துக்குக் கிடைத்தது என்ன?
கூத்தாடிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தால், தமிழ்நாடு இவ்வளவு சீரழிந்திருக்காது என்பது என்னுடைய கருத்து.

மானாடவும், மயிலாடவும் இவர்களுடைய தயவு தேவை இருப்பவர்கள் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். நீதி மன்றங்களும் கூடவா? உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பத்திரிகையாளர்- களுடைய மனு மீது, உச்ச நீதி மன்றம் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது என்பதைப் பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

அதே நேரம், நண்பர் சிவா, தன்னுடைய பதிவின் அனர்த்தங்களைப் புரிந்துகொண்டிருப்பார் என்றே நம்புகிறேன்!
இப்படிப்பதிவை நிறைவு செய்துவிடலாம் என்று பார்த்தால், சிவா இன்னமும் கேள்வி அல்லது விஷயத்தைத் தலைகீழாகப் பார்த்துக் கொண்டிருப்பது மாதிரித்தான் இன்றையப் பதிவின் இறுதி வரிகள் இருக்கின்றன.

"அன்பு மட்டுமல்ல, காமமும் பகிரப்பகிர இருவருக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மனம் நிறைவடைந்தால் அங்கு ஏது பிரச்சினை,!!"

அதெல்லாம் சரிதான் சிவா! பகிர்ந்துகொள்வது சம்பந்தப்பட்ட இருவருக்குள்ளாக மட்டுமே! ஊரோடு அல்ல! இந்த விஷயத்தை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?
OooOooo
பிடித்த பதிவர்கள்! பிடித்த பதிவுகள் !
அவ்வப்போது தொடர்ந்து வரும்!

17 comments:

  1. அந்தரங்கம் புனிதமானது அதனால்தான் யாரும் தங்கள்
    அந்தரங்களை பொதுமேடைக்குக்கொண்டுவருவதில்லை.
    நீங்கள் குறிப்பிடும் இந்த சிவா என்பவர் ஒரு Sex
    Pervert அதனால் மற்றவர் அந்தரங்களை அறிவதில்
    ஆர்வம்காண்பிக்கிறார் என்பது என் கருத்து.அவர் உங்கள் நண்பர் என்பதால் அவரை ஒரு மனநோய்
    நிபுணரைச்சந்திக்கும்படி வேண்டிக்கொள்ளவும்.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றிதிரு. தேவேஷ்!
    வலைச் சுட்டி இருந்ததே பார்க்கவில்லையா? நீங்களே உங்கள் கருத்தை அவரிடம் தெரிவித்து விடலாமே!
    அந்தரங்கம்-புதிரா புனிதமா என்ற பட்டி மன்றம் இங்கே நடக்கவில்லை. அடுத்து, என்னுடைய பதிவில், ஆரம்பத்திலேயே எதையும் அமைதியாகக் கொஞ்சம் யோசித்து எழுதுபவர் என்று அவரது பல பதிவுகளைப் படித்த பிறகு என்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். நீங்கள், அவருடைய எத்தனை பதிவுகளைப் படித்திருக்கிறீர்கள் என்பதோ, இந்த ஒரு பதிவை வைத்து மட்டும் எப்படி அவரை செக்ஸ் பெர்வெர்ட் என்ற முடிவுக்கு வந்தீர்கள் என்பதோ தெரியவில்லையே!

    எழுதியிருக்கிற வேகம், விதத்தைப் பார்த்தால், அவரை விட உங்களுக்கல்லவா முதலில் ஒரு மன நல வைத்தியருடைய உதவி தேவைப்படும் போல் இருக்கிறது? கொஞ்சம் இதமாக எழுதப் பழகிக் கொள்வதுநல்லது.

    ReplyDelete
  3. நண்பர் துவேஷ்,

    நேரில் வந்து இரண்டு அடி கொடுங்கள்,

    சொல்லால் அடிக்காதீர்கள்,

    என் பதிவில் இதே வார்த்தையைக் குறிப்பிட்டு இருந்தீர்கள், கோபப்படவே இல்லை,

    இங்கு நண்பரிடம் இதே வார்த்தையை படித்ததால் பதில் சொல்ல வேண்டியதாகிறது, கண்ணியத்துடன்..

    காமம் குறித்தான புரிதல் எல்லா தம்பதியினரிடமும் இருக்கும் என நிச்சயமாக சொல்லமுடியாது, ஒருவேளை இருந்தாலும் அது எதிர்காலத்திலும் அப்படியே தொடரும் என உறுதி அளிக்க முடியாது.

    காமம் குறித்தான செயலை நான் முன்னிலைப்படுத்தவே இல்லை. மனநிலையைப் பற்றி ஒரு கோணம் அவ்வளவுதான்.,

    இது வருங்கால சந்ததியினருக்கு என்னால் முடிந்த சிறு குறிப்பு அவ்வளவுதான்..

    தங்களைப் போல் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு அல்ல..

    காமம் என்பது ஒரு உணர்வே, அதை எப்படி வாழ்வில் கையாளவேண்டும் என்றுதான் என் அனுபவத்தை வைத்து ஆராய்ந்து சொல்லி இருக்கிறேன்.

    தேவையானால் உங்களது மாற்றுக்கருத்தை அனுப்பி வையுங்கள், என் தளத்திலேயே வெளியிடுகிறேன்.
    அதை விடுத்து தூற்றுவது சரியல்ல..

    மரியாதை காப்பதை என் பலவீனமாக நினைக்கவேண்டாம், இதையும் கூட என் மனம் எப்படி கோபப்படுகிறது, உணர்ச்சி வசப்படுகிறது என நான் கவனித்துக் கொண்டு இருக்கிறேன்.

    என்மீது அக்கறையுடன் மருத்துவரிடம் போகச் சொன்னதிற்கு நன்றி.,

    உடல்நிலைப் பாதிப்பு வராமல் முன்னெச்சரிக்கையுடன் வாழ்க்கைமுறையை அமைத்து வாழும் எனக்கு இது போன்ற அறிவுரைகளை வழங்க வேண்டாம்.

    இன்னும் நட்புணர்வுடனே
    நிகழ்காலத்தில் சிவா..

    ReplyDelete
  4. ராஜநாயகம் அவர்களின் எழுத்தைப் படித்து பலமுறையும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். என்னை மறந்து சிரித்து இருக்கிறேன்.

    சங்கீதம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் அவர் குறிப்பிடுகிற நபர்கள், நுணுக்கங்கள் சபாஷ் போட வைக்கும்.

    அரசியல், திரைத்துறை என அவரின் வீச்சு பட்டிக்காட்டான மிட்டாய்கடையைப் பார்ப்பது போல் என்னைப் பார்க்க வைக்கும்

    ReplyDelete
  5. தலைவர் வால்பையன் அவர்கள் போட்டோ உண்மையிலேயே சூப்பர்..

    அப்படியே வாலிடம் ஒரு வேண்டுகோள். உங்களது ப்ரொபைலில் உள்ள போட்டோ என் பார்வையில்,கருத்தில் வயது கூட இருப்பதுபோல் தெரிகிறது,

    அதனால் இந்த போட்டாவை போட்டீங்கன்னு நல்லா இருக்கும் அப்படிங்கிறது என் எண்ணம்,

    உங்கள் விருப்பத்தின்படி செய்யுங்கள்

    வாலின் ரசிகர்
    நிகழ்காலத்தில் சிவா

    ReplyDelete
  6. \\தன்னுடைய பதிவின் அனர்த்தங்களைப் புரிந்துகொண்டிருப்பார் என்றே நம்புகிறேன்! \\

    என் மனம் கொஞ்சம் இடக்கு மடக்காக யோசித்து விட்டது என புரிந்தது.. எல்லோருடனுமான சிந்தனை ஓட்டத்துடன் ஒட்டாமல் சகதோழனுக்கு காமம் குறித்து இப்படியும் பார்க்கலாம் என சொல்ல முயற்சித்ததே இன்றைய இடுகை..

    \\அதெல்லாம் சரிதான் சிவா! பகிர்ந்துகொள்வது சம்பந்தப்பட்ட இருவருக்குள்ளாக மட்டுமே! ஊரோடு அல்ல! இந்த விஷயத்தை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?\\

    இன்னும் கூட என் மனம் பிடிவாதம் பிடிக்கிறது, அறிவும் மறுக்கவில்லை,

    என் இடுகையினைப் படிக்கும் ஒருநபரேனும் தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், தன் துணையின் மகிழ்ச்சியை உறுதி செய்து கொண்டால்
    அதுவே என் முயற்சிக்கு பலன்..

    மற்றபடி என்ன பிரச்சினைகள் வரலாம் என்குடும்பத்தினருக்கு என பலமுறை யோசித்தே இந்த இடுகையினை வெளியிட்டேன்.

    நாம் தமிழனல்லவா..

    அந்த பண்பாட்டு நோக்கில் பார்த்தால் அது தவறுதான்.

    நான் மொழிகடந்து, மனிதன் தன் வாழ்வில் துணையுடன் இனிமை காக்க ஒரு சிறிய முயற்சி செய்தேன். என்னைப் பொறுத்தவரை இது சமுதாயத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகவே கருதி வெளியிட்டேன்

    மற்றபடி எனக்காக தங்களின் பதிவில் என்னைப் பாராட்டியதுடன், அக்கறையுடனும் உரிமையுடனும்
    கேள்வி எழுப்பி, பின்னூட்டத்தில் நண்பருடன் எனக்காக ஆணித்தரமாக கருத்து தெரிவித்தமைக்கு
    உளமார்ந்த நன்றிகள்

    இது ஒரு சிறந்த நட்புக்கு உதாரணமாக கொள்கிறேன்.
    வாழ்த்துக்களுடன்..

    நிகழ்காலத்தில் சிவா

    ReplyDelete
  7. //அதெல்லாம் சரிதான் சிவா! பகிர்ந்துகொள்வது சம்பந்தப்பட்ட இருவருக்குள்ளாக மட்டுமே! ஊரோடு அல்ல! இந்த விஷயத்தை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?//

    :) கலக்கல் !

    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் !

    ReplyDelete
  8. காமம், கலவி, இதைப்பற்றிப் பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்வதற்கும், "நான் மொழிகடந்து, மனிதன் தன் வாழ்வில் துணையுடன் இனிமை காக்க ஒரு சிறிய முயற்சி செய்தேன்" என்று நீங்கள் சொல்வதற்கும் கொஞ்சம் கூடப்பொருத்தமே இல்லை என்பதற்காகத் தான், நான் நேரிடையாகக் கண்ட ஒரு அனுபவத்தை சேர்த்துச் சொன்னேன். இதற்கு மேல் இது பற்றிய விவாதத்தை இங்கு நிறுத்திக் கொள்வோமே சிவா!

    தேவேஷ்! உங்களுக்குமாகத் தான் இது:
    "முனைவர் நா.கண்ணன், நல்லதே எண்ணுக என்ற தலைப்பில் ஒரு விவாத இழையைத் தொடங்கி, இப்படி எழுதுகிறார்:

    "இணையம் எனும் அவஸ்தை (reality) தோன்றிய காலத்திலிருந்து நான் கண்ட ஒன்று.மின்வெளி என்பது மனப்பரப்பே என்பது தான். மனதில் காணும் அத்தனை காட்சிகளும் மின்கதிராய் மின்வெளியில் காணக்கிடைக்கிறது. மனப்பயிற்சி அற்றோருக்கு மின்வெளிப் பயிற்சி நல்ல வைத்தியமாகும். மின்வெளியில் நல்லது சிந்தித்தால் மானுடத்திற்கு நல்லவே விளையும்.

    இதே கருத்தை முன்னிறுத்தி கொரியாவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் சொன்பில் என்பது.
    [வழக்கம் போல் ஆங்கிலத்தில் எழுதும்போது Sunfull என்று எழுதுகிறார்கள்!]

    மின் வெளிதான்! மின்னெழுத்துக்கள் தான்! எவரையும் காயப்படுத்தாமல், முடிந்தால் உற்சாகப்படுத்துகிற எழுத்துக்களைத் தொடருவோமே!

    ReplyDelete
  9. \\இந்த அதிகாரி திருமணமான ஒரு ஆண். அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் ஒரு\\

    இந்த அதிகாரியின் மனைவிக்காகத்தான் நான் இடுகை இட்டிருக்கிறேன். வருமுன் காக்கச் சொல்லிதான்.,

    ஒருவருக்குமே எளிமையாக புரியாதவண்ணம் என் எழுத்துக்கள் அமைந்து விட்டது

    நான் என் மனதில் தோன்றுவதை எழுத்தாக்குவதில் இன்னும் முனைப்போடு இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது

    ReplyDelete
  10. நல்ல பதிவு அய்யா. வால்ஸ் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் நச். நன்றி.

    ReplyDelete
  11. நண்பர் கிருஷ் அவர்களே.
    பிரபல வலைப்பதிவாளர்கள் இருவரின் படங்களை வெளியிட்டுள்ளீர்கள்.
    திரு ராஜநாயகம் அவர்கள் பற்றி இப்பத்தான் - இங்கேதான் தெரிஞ்சுகிட்டேன்.
    இன்றே சென்று படிக்கிறேன்.
    திரு வால் அவர்களின் எழுத்துக்கள் எப்பொழுதுமே என்னைக் கவருபவை.
    நன்றியுடன்,
    கௌதமன்.

    ReplyDelete
  12. //சிறுகதைப்பட்டறைக்குப் போய்விட்டு வந்த பிறகு, சிறுகதை எழுத அட்லீஸ்ட் ஒரு ஆரம்பமாவது செய்திருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள்?//

    நான் போனது அதுக்குன்னு நினைச்சிங்களா!?
    அது தான் இல்ல, நான் போனது புதிய நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ள, நமக்கு என்ன வருதோ அதை தானே சார் செய்யனும்!

    ReplyDelete
  13. //அப்படியே வாலிடம் ஒரு வேண்டுகோள். உங்களது ப்ரொபைலில் உள்ள போட்டோ என் பார்வையில்,கருத்தில் வயது கூட இருப்பதுபோல் தெரிகிறது, //

    அண்ணே அதெல்லாம் நம்பாதிங்க!
    அது கிராபிக்ஸ், நான் இன்னும் பத்தொன்பது வயசயே தாண்டல!

    ReplyDelete
  14. சார்,

    ரசிகர் மன்றம்னு சும்மா தான் சொல்றிங்கன்னு பார்த்தா ஒரு மாநாடே நடத்திருவிங்க போலயே!?

    ReplyDelete
  15. இந்த சிறுகதைப் பட்டறையை நெனச்சா கோவந்தான் வருது. போய் வந்த யாரும் கதை எழுதக்காணோம். :)

    கதை எழுதா வால் ரசிகர் மன்றம்.

    ReplyDelete
  16. நம்ம ஜெயஹிந்த் புறத்துக் காரர் பீர் சொன்னது:
    /போய் வந்த யாரும் கதை எழுதக்காணோம்/
    பட்டறையை ஏற்பாடு செய்தவர்கள் செய்த நல்ல காரியத்தின் மிக நல்ல விளைவு என்று எடுத்துக் கொள்ளுங்களேன்!

    /கதை எழுதா வால் ரசிகர் மன்றம்./

    அட, இது ரொம்ப ஜோராயிருக்கே! பட்டறை கிட்டறை என்று நடத்தாமலேயே, கதை எழுதாமல் பண்ணிவிட முடியும் போல இருக்கே:-)))

    ReplyDelete
  17. வால்ஸ்,
    நீங்க பட்டறைக்கு எதுக்குப் போனீங்க, என்ன பண்ணுவீங்கன்னு பதிவிலேயே 'மனிதர் தன்னுடைய பலம், சரவெடியாகப் பின்னூட்டம் இடுவதும், அதற்குத் தோதாக உசுப்பி விடுகிற சில பதிவுகளை எழுதுவதும் தான் என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்!' என்று சொல்லியாச்சே!

    /அது கிராபிக்ஸ், நான் இன்னும் பத்தொன்பது வயசயே தாண்டல!/
    இந்த டயலாகை உங்கள் வீட்டுச் சுட்டிப் பெண்ணிடம் சொல்லிப் பாருங்கள்! ஆதி மூல கிருஷ்ணன் பதிவில் இருந்த பயங்கரமான ஆயுதம் எல்லாம் வேண்டாம்!
    சும்மா, மூக்கு மேல ஒரு குத்து கூடவா கிடைக்காமல் போய்விடும்:-))

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!