S M S எம்டன் 22-09-1914 ! படித்தது, பிடித்தது, விமரிசனம்!


தமிழில் சரித்திரக் கதை எழுதுவதில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஒரு கதையை, தொடர்கதையாக வாரம் ஒரு அத்தியாயம் என்று பொறுமையாக, ஆர்வம் குறையாமல் படிக்க வைத்த எழுத்து அவருடையது.

கதைக்குத் தேவையான சரித்திரச்சான்றுகளை, சந்தேகத்துக்கிடமில்லாமல், தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்வது, நிஜத்தில் வாழ்ந்த சரித்திர புருஷர்களோடு, கற்பனைக் கதாபாத்திரங்களையும் கலந்து, ஒரு கதையை உருவாக்குவது கடினம். கல்கி அதை சாதித்தார்! அதனால் தான், வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில்  அதிசயமில்லை!.

அதற்கு முன்னால் எத்தனை பேர் முயற்சித்தார்கள் என்பதை விட, அவருக்குப் பின்னால் எத்தனைபேர் முயற்சித்தார்கள் என்பதைப் பார்த்தாலே, சரித்திரக் கதை எழுதுவதில் உள்ள கஷ்டங்கள் புரிந்து விடும். சரித்திரக் கதை எழுதுவதற்கு நிறைய ஆதாரங்களைத் தேடிப் படித்திருக்க வேண்டும், குறிப்புக்களை வைத்துக் கொண்டு, முரண்படாமல் கயிற்றின் மேல் நடப்பதுபோல, கவனமாக சம்பவங்கள், கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்!அதனால் தானோ என்னவோ, நிறைய எழுத்தாளர்கள் சரித்திரத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்!

கல்கி சோழர்களையும், பல்லவர்களையும் வைத்துக் கொண்டு மூன்று அற்புதமான சித்திரங்களைப் படைத்தார் என்றால்  சாண்டில்யன், தனக்கென்று ஒரு சிருங்கார பாணியை, மொழிநடையை வைத்துக் கொண்டு, கல்கி தொடக் கூட  முயற்சி செய்யாத உயரங்களை,  இந்திய வரலாற்றின் பல பக்கங்களைத் தொட்டுக் காவியம் படைத்தார். ஆனாலும், கல்கிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம் சாண்டில்யனுக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அகிலன், நா.பார்த்த சாரதி, விக்கிரமன், கோவி.மணிசேகரன், அரு.ராமநாதன், கௌசிகன் என்று பலரும் சரித்திரப் பின்னணியில் கதை எழுதியிருக்கிறார்கள்.அவர்களுமே கூட, கல்கி, அடுத்து சாண்டில்யன், என்ற வரிசையில் அடுத்த மூன்றாவது இடத்தை நெருங்கக் கூட முடியவில்லை என்பது கொஞ்சம் நெருடலான உண்மை.

மிகச் சமீப  காலத்தில் தான்,  எழுத்தாளர்களுடைய கவனம் சரித்திரத்தின் பக்கம் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் என்னுடைய கவனத்தை சமீப காலத்தில் ஈர்த்த ஒரு புத்தகம், SMS எம்டன்! மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் விவாத இழைகளைத் தொடர்ந்து கொண்டிருந்த தருணங்களில், இந்த நூலும் , நூலாசிரியர் திரு வி.திவாகரும் அறிமுகமானார்கள். நமக்கு அடுத்த வீடான ஆந்திராவில் இருக்கிறார், தமிழ்நாட்டில் பெயரைச் சொன்னவுடன் அல்லது முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்கிற அளவுக்கு இன்னமும் அறிமுகமாகவில்லை. நான்கு சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்! SMS எம்டன் புதுவரவு!

S M S எம்டன்! இந்த ஜெர்மானியப் போர்க்கப்பல், முதல் உலகப்போர் மூண்ட தருணத்தில், சென்னைத் துறை முகத்தின் மீது குண்டு வீசித் தாக்கிய ஒரு சம்பவம், சமீப காலத்திய வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கிறது. மிகப் பெரிய போர்க் கப்பலோ, அதிக யுத்த தளவாடங்களோ இல்லாத,ஒரு சிறிய கப்பல் தான்! நாலங்குல பீரங்கிகள் பத்து மட்டும் தான்! இந்தியப் பெருங்கடலில், மூன்றுமாதம் சுற்றித் திரிந்ததில், பிரிட்டிஷ் வர்த்தகமே படுத்துவிடுமோ, பிரிட்டனின் வலிமையான கடற்படை, ஆதிக்கம்  எல்லாம் வெறும் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய் விடுமோ என்று ஆங்கிலேயர்களுடைய அடிவயிற்றில் அமிலத்தை ஊற்றிக் கரைத்த இந்தக் கப்பல் 'கிழக்கு திசையின் அன்னம்' என்றே வர்ணிக்கப் பட்டது!

1914, செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு சென்னைத் துறைமுகப் பகுதியில் எண்ணெய்க் கிடங்குகள் இருந்த இடத்தின் மீது 125 குண்டுகளை வீசிவிட்டு எம்டன் நகர்ந்து விடுகிறது. நினைத்திருந்தால், துறைமுகத்தை மட்டுமல்ல, சென்னப்ப நாயக்கன் பட்டினத்தையே முற்றொட்டாக அழித்திருக்க முடியும்! ஆனால் அப்படி நிகழவில்லை. ஏன்?

இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டன. நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தின் தளபதியான டாக்டர் செண்பக ராமன் அந்த கப்பலில் இருந்தார் என்பது ஒன்று! அவரை பாண்டிச்சேரி துறைமுகத்தில் இறக்கிவிட்டு விட்டு, எம்டன் போய் விட்டது என்பது இன்னொன்று! ஆங்கிலேயர்களுடைய வியாபார சாம்ராஜ்யத்திற்கு எச்சரிக்கை விடுப்பதும், இந்திய விடுதலை வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்கும்  தான் இந்த குண்டு வீச்சு என்பது இன்னொரு வதந்தி!

ஆக, எம்டன் சென்னையை அழிக்காமல் விட்டு விட்டதற்கு ஒரு இந்தியர் காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு ,நடந்த  ஒரு சரித்திர சம்பவத்தை வைத்துக் கதைக்களத்தை, கதாசிரியர் ஆரம்பிக்கிறார்,. தந்தையின் மரணத்தை, வெறும் இறுதிச் சடங்காகநடத்தாமல் முக்தி  நிலை பெற்ற மகானுக்குச் செய்வதுபோல சமாதிக் கிரியைகளைச் செய்து கொண்டிருக்கும் கதாநாயகன், எம்டன் கப்பலுக்குக் கடத்திவரப்படுவதில் இருந்து, எம்டன் கப்பலை வைத்து, அதன் பயணத்தை வைத்து ஒரு கதைக்களம், எம்டன் கப்பலின் காப்டன் முல்லர், துணை அதிகாரி முக்கே என்று சரித்திரக் கதாபாத்திரங்களையும், சென்னையில் குண்டு வீசியபிறகு எம்டன் பயணம் செய்த பாதை, இடங்கள் என்று கதைக்களம் விரிகிறது.

அதற்கும் சுமார் தொள்ளாயிரம்  வருடங்களுக்கு முன்னால் ராஜ ராஜ சோழன், சிவபாதசேகரன் என்ற பெயருடன் சிவனடிக் கீழ் புகும்  களம் அடுத்து விரிகிறது. சித்தர் வழிபாட்டுமுறையில் என்று ஆரம்பித்து, ஒரு ஆன்மீகக் களத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் ஆசிரியர். எம்டன் கப்பலில் கதாநாயகன் எதிர்கொள்ளும் விரோதமான சூழ்நிலைகளைக் கதாநாயகன் எப்படி சாமர்த்தியமாக சமாளிக்கிறான் என்று ஒரு ட்ராக்கில் சொல்லிக் கொண்டே, ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் இந்தக் கதைக்குள் எப்படி வருகிறார்கள், அன்று நடந்தது என்ன என்பதை இன்னொரு ட்ராக்காகச் சொல்லிக் கொண்டு,  இந்த இரண்டையும் நிகழ்காலக்கதா பாத்திரங்களோடு  எப்படி ஒருங்கிணைத்து, இரண்டிற்கும்  பொதுவான களம் ஒன்றை விரிக்கிறார் என்பது தான் கதை!

இந்த வெவ்வேறு தளங்களைத் தொட்டுத் தனியாகவும், இணைத்துப் பொதுவாகவும் சொல்லும்போது  ஒரு கதையைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மறந்து, ஒரு பேருண்மையை உணருகிற அனுபவமாகவும்  படித்துப் பார்த்துத் தான் புரிந்துகொள்ள முடியும்!

371 பக்கங்களில், முப்பத்தைந்து அத்தியாயங்களில், ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தலைப்புடன், கதையை சுவாரசியமாக நகர்த்திச் செல்கிறார். இந்த மாதிரி, அத்தியாயங்களுக்குத் தலைப்பு வைக்கும் பாணி, கல்கி, சாண்டில்யன் இருவரிடமும் இருந்தது தான்  என்றாலும், இங்கே சில தலைப்புக்கள், கதைக்குள் இருக்கும் கருத்தை,நூலாசிரியர்   என்ன சொல்ல வருகிறார் என்பதை நன்றாகவே சொல்லி விடுகின்றன! உதாரணமாக, தன்னைத் தேடி வருவதும் தான் தேடி அடைவதும் என்று ஒரு அத்தியாயத் தலைப்பு! அடுத்த அத்தியாயம் அவரவர்க்கு வேண்டியதை அவரவர்க்கு அருள்வான் என்று ஆரம்பிக்கிறது!

எம்டன் கப்பல் பயணிப்பது, அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களை விவரிக்கும்போது சாண்டில்யனின் கடல்புறா ஆசிரியர் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் தெரிகிறது. கதாபாத்திரங்கள் உரையாடிக் கொள்ளும் பகுதிகளில், இரண்டு வரிகள் இலக்கணத்தமிழிலும், அடுத்த ஒன்றிரண்டு  வரிகள் வழக்குத் தமிழுமாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அத்தியாயங்களை இன்னும் கொஞ்சம் விவரங்களோடு எழுதியிருக்க முடியும் என்றாலும் கதையை ரொம்பவுமே நீட்டிக் கொண்டு போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, சுருக்கமாக முடித்திருக்கிறார். ஆகம விஷயங்கள், வாசிப்பவர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவை என்பதை மனதில் வைத்துக் கொண்டாவது, கொஞ்சம் விவரித்துச் சொல்லியிருக்கலாம் என்று எனக்குப் படுகிறது.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிக்கும்போது, ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!  முதலில், இப்படி வேறுபட்ட காலங்களைக் கதைக் களமாக எடுத்துக் கொண்டு, அதில் சமீப நிகழ்வு ஒன்றின் அடிப்படையில் பொருத்தி, ஒரு புதினத்தைப் படைப்பதற்கு ஆசிரியர் எவ்வளவு தகவல்களைத் திரட்ட வேண்டியிருந்திருக்கும் என்பது ஒன்று! அத்தனை விஷயங்களையும் அப்படியே கொட்டி விடவும் முடியாது. ஒரு மையமான சம்பவத்தை மட்டும் வைத்து, அதைச் சுற்றியே கதாபாத்திரங்கள், சம்பவங்கள்,அதற்கும் மேலாக ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் இருந்து  கதையைப் பின்னுவது!

கதை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்! ஒரு மையக் கருத்து! அதைச் சொல்வதற்காகத் தான், காரணத்தைச் சொல்வதற்காகத் தான் காரியங்கள்!  நூலாசிரியர்  அந்த வகையில், ஒரு நல்ல முயற்சியைப் படைத்திருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார்!

எம்டனுக்கு நிகர் எம்டன் தான்! SMS எம்டன் தனிக்காட்டு ராஜாவாக, இந்தியப் பெருங்கடலில் அதை நிரூபித்தது!

இந்தப் புதினத்தை எழுதியதில், சைவ ஆகமங்களைப் பற்றி, சித்தர் வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஒரு சின்ன வெளிச்சக் கீறலை, திரு திவாகர் படைத்திருக்கிறார்! படிப்பவர்கள் பகிர்ந்துகொள்ளத் தந்திருக்கிறார்!

SMS எம்டன் கப்பலைப் பற்றியும், இந்தப் புதினத்தைப் பற்றிச் சொல்ல விடுபட்டுப் போனவைகளையும்   அடுத்த பதிவில்  பகிர்ந்து கொள்வோம்!

டிஸ்கி நம்பர் ஒன்று!
புத்தகங்களை, புத்தக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக, தனிவலைப்பதிவு  (சு)வாசிக்கப் போறேங்க !
அறிமுகப் படுத்துவதற்காக, அங்கே இடும் பதிவுகள் சில காலம் வரை  இங்கேயும் வரும்!



திரு திவாகர் எழுதிய இதர சரித்திரப் புதினங்கள்






7 comments:

  1. நல்ல புத்தகம், நல்ல அறிமுகம். நன்று அய்யா.

    ReplyDelete
  2. தலைகீழாக புரட்டி எடுத்திருப்பதிலேயே தெரிகிறது இது எந்த அளவு உங்களை பாதித்திருக்கிறதென்பது. படிக்கும் ஆவலைத் தூண்டினாலும் அடுத்த மாதம் ஊருக்கு போகும்வரை பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். இங்கு இதெல்லாம் கிடைப்பதில்லை.

    ReplyDelete
  3. நவாஸுதீன்!
    கதை என்னைப் புரட்டிப் போடவில்லை! அப்படியே அது புரட்டிப் போட்டாலும், இன்னுமொரு தரம் வாசித்தால் போயிற்று! பழையபடிக்கே நேராக வந்து விடலாமே :-))

    கதைக்குள் இருக்கும் கருத்து! அது தான் நிறையத் தரம் யோசிக்க வைத்திருக்கிறது.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம்...விமர்சனத்திலிருந்து புத்தகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆர்வம் சோழர்களை எப்படி இணைக்கிறார் என்பதில்தான்... சாண்டில்யனுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை என்பது உண்மைதான்...கௌதம நீலாம்பரன் கதைகள் படித்திருக்கிறீர்களோ? மு. மேத்தாவும் சுஜாதாவும் சரித்திரக் கதை முயன்றிருக்கிறார்கள். பாலகுமாரன் அதை ஆன்மீகத்தோடு இணைத்துத் தருகிறார்.பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவு சிவகாமியின் சபதமும் அலை ஓசையும் பேசப் படுவதில்லையோ?

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம்!
    நாலாவது தூணைப் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதியபோது, பதிவர் வெண்பூ , கதையில் வரும் ஒரு காட்சியை வேறு ஒரு விஷயத்திற்காக எடுத்துக் கொண்டதைக் கூட சொல்லியிருக்கவேண்டாம்,கதை படிக்கும்போது சுவாரசியம் போய்விடும் என்று வருத்தப் பட்டிருந்தார்! இத்தனைக்கும், அது இருபது வருடங்களுக்கு முன்னால் படித்த கதை!

    சோழர்களை என்ற இடத்தில் தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னால் நிகழும் ஒரு சம்பவம்,அதையொட்டிய களம் என்று மட்டும் வைத்துப் பாருங்கள்! அதே மாதிரி நிகழும் இன்னொரு சம்பவம், அதையொட்டிய களம்!

    இரண்டு வேறுபட்ட காலங்கள், அதில் பொதிந்திருக்கும் பொதுவான களம் என்று இரண்டையும் ஒருங்கிணைக்கும் போது உருவாகும் புதிய களம்!

    இது தான் ஒன் லைன்!

    கல்கிக்கு, அவருடைய பத்திரிகை பெரிய பலமாக இருந்தது. தவிர அவர் அந்தக் கதையை எழுத ஆரம்பிக்கும் போதே கல்கி என்பதே ஒரு பிராண்ட், தனி மார்கெட் எல்லாம் இருந்தது. கல்கிக்கு வேறு பொறுப்புக்களும் இருந்தன என்பதால் மூன்று சரித்திரக் கதைகளுக்கு மேல் எழுதவில்லை. மூன்றுமே வெகுவாகப் பிரபலம் தான்! பார்த்திபன் கனவு படமாகவும் வந்தது. நாவலில் இருந்த வசனங்களை அப்படியே வைத்து எடுக்கப் பட்ட ஒரே படம், நன்றாகத் தான் இருந்தது! ஆனால், அதில் நரசிம்ம பல்லவன் தான் சிவனடியார் என்ற சஸ்பென்ஸ் படத்தில் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்ட ஒரே காரணத்தால் தோல்விப் படமாக ஆனது! அலை ஓசை ஒரு பீரியட் கதை! சுதந்திரப்போராட்டம் முடிவுக்கு வந்த தருணங்களைக் கதைக் களமாக வைத்துக் கொண்டு எழுதப்பட்ட கதை. தொடராக வந்தபோது நல்ல வரவேற்பும் இருந்தது. இன்று காந்தி என்றால், ரூபாய் நோட்டில் படம் போட்டிருக்குமே அவர்தானே என்று சந்தேகம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில், வேறு வேறு ஊதுகுழல்கள் காதைச் செவிடாக்கி வைத்திருக்கும் நிலையில் அலையின் ஓசை கேட்குமோ?

    சாண்டில்யனுக்கு நிறுவன பலம் இல்லை.மாறாக, சாண்டில்யனை குமுதம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது! ஒரு அவசரத்திற்குப் பணம் தேவை பட்டபோது, கதை எழுதிக் கொடுக்க ஒப்புக் கொண்டு தான் பணத்தை சம்பாதிக்க வேண்டிய நிலைமை. இதை அவரே ஒரு நாவலின் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

    சாண்டில்யனைத் தவிர, தமிழில் வேறு எவரும், பரந்து பட்ட பாரதத்தின் சரித்திரத்தின் பல பக்கங்களையும் தொட்டு எழுத தைரியம் கொள்ளவில்லை என்பது இன்று வரை மறுக்க முடியாத உண்மை.

    இங்கே காசு பண்ணுவதற்கும், இது தான் டாப்பு, இது தான் இலக்கியத்தின் கிழக்கு என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் நிறுவனத்தின் துணையில்லாமல் எழுத்தாளன் தனித்து நிற்கமுடிவதில்லை.

    ReplyDelete
  6. என‌க்கு இந்த‌ மாதிரியான‌ வ‌ராற்று புதின‌ங்க‌ள் தான் ரொம்ப‌ பிடிக்கும். வாங்கி ப‌த்திர‌ப் ப‌டுத்தி வைத்துக் கொள்வேன்

    ReplyDelete
  7. நீங்க‌ சொன்ன‌ எல்லா புத்த‌க‌த்தையும் க‌ண்டிப்பாக‌ வாங்க‌ வேண்டும். இது போல் ப‌ய‌னுள்ள நூல்க‌ள் வேறு இருந்தாலும் கூறுங்க‌ள் ஐயா.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!