தடுப்புச் சுவர்கள்! இது கவிதை நேரம்!

சில நேரங்களில், நல்ல எழுத்து, கவிதை மாதிரி ஒரு ஆறுதலான உற்ற துணை எதுவுமே இருக்க முடியாது! சோர்ந்து போன மனதுக்கு ஆறுதலாகவும், வாழ்க்கையின் நிதர்சனங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் நல்ல எழுத்து, கவிதைஅமைந்துவிடுவதுண்டு.

பரபரப்பான, அல்லது பதட்டமான மனநிலையில் இருந்து விடுபட்டுக் கொஞ்சம் ஆற அமர யோசித்து, வாழ்க்கையை உள்ளது உள்ளபடிக்கே புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவுமான தருணம் இது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு
தோழரின் காணாமல் போய், மரணமான  செய்தி,  அத்தனையையும் புரட்டிப் போட்டு விட்டது. மறந்து விட்டதாக அல்லது விலகி வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் நெஞ்சின் அலைகளாய், கடந்த ஒரு வாரமாகவே என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது உண்மை. அலைக்கழிப்பில் இருந்து விடுபட, ஒரு நல்ல கவிதை, சில சிந்தனைகளையும் விதைத்துவிட்டுப் போனதாகவும் ஆனது.

ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"சமீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று
தான் விரும்புகிறேன்."

கவிஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள்.
நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும். தப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதை இன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!


Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

என்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  



Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

கவிஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! ஏதோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,
'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது. 
கவிதையில் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அவரவர் தங்களுடைய  அனுபவங்களுக்குத் தகுந்த மாதிரி அர்த்தம் செய்து கொள்ளவேண்டியது தான்! 

சுவர் எழுப்பினால் பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனாக அமைந்து விடுவானா? சீனாவின் மிகப் பெரிய நெடுஞ்சுவர், அதற்கு பக்கத்து நாடுகளைத் தேடித் தந்ததா? சுவரைத் தாண்டியும் ஆக்கிரமிக்கிற சீனர்களுடைய குணத்தை அது மாற்றி விட்டதா?

"சுவரைக் கட்டுகிறபோது, எதை அதற்குள்ளாக, எதை அதற்கு வெளியே கட்டுகிறேன் யாரை வெறுத்து  செய்வதற்காக என்று கேட்டுக் கொள்வேன். அதற்குள், சுவர் எழும்புவதை விரும்பாத ஏதோ ஒன்று இருக்கிறது. சுவர் விழுந்துவிடுவதையே அது விரும்புகிறது."
என்று கவிஞர் சொல்லும்போதே, அண்டைவீட்டுக்காரர்  சொல்கிறார், "நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக் காரர்களை உருவாக்குகின்றன."

மேற்கு, கிழக்கு என்று இரண்டாக பெர்லின் துண்டிக்கப் பட்டிருந்த நிலையில் அமெரிக்க அதிபர் கென்னெடி, மேற்கு பெர்லின் நகரில் இந்தக் கவிதை வரிகளைக் குறிப்பிட்டுச் சொன்னபோது, மேற்கு ஜெர்மனி ஆரவாரித்தது. பெர்லின் தடுப்புச் சுவர் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை, அது விழுந்துவிட வேண்டும் என்று விரும்பியதைக் காட்டிய அதே நேரம், கிழக்குப் பகுதியிலும் கூட இந்தக் கவிதை, Something there is that doesn't love a wall  என்று ஆரம்பிக்கும் முதல் வரியை மட்டும் நீக்கப்பட்டு  பிரசுரமாகிப் பிரபலமுமானது. அங்கே Good fences make good neighbors  என்ற வரி அன்றைய மனோநிலைக்குப் பொருத்தமாக இருப்பதாகக் கொண்டாடப்பட்டது.

இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பார்க்கலாம்! அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது.

என் மகன் சிறு பையனாக இருந்த நேரம், அனேகமாக யூகேஜி அல்லது முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தருணம் ஒன்று  நினைவுக்கு வருகிறது.

என்னுடைய மகனும், அவனுடைய பள்ளித் தோழனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ட்ரெயினைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், என் மகன் கொஞ்சம் உரக்கவே குரல் கொடுக்கிறான், "அது இல்லடா ட்ரெயினு..! எங்க மாமா ஜீவவாடா போனாங்களே அதாண்டா ட்ரெயினு!"

(அப்போது, அவனுடைய தாய் மாமன் விஜயவாடாவில், அமெரிக்கன் ரெமடீஸ் மருந்துக் கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த தருணம், அவனை வழியனுப்ப மருமகன் ரயில்வே ஸ்டேஷனுக்குப்போய்ப் பார்த்த ட்ரெயின் மட்டும் தான் அய்யாவைப் பொறுத்தவரை ட்ரெய்ன்! மத்ததெல்லாம் இல்லை!) அறியாத வயசு, சின்னப் பசங்க தான் இப்படி என்று இல்லை!

இதே மாதிரித் தான் புதிய ஏற்பாட்டில், பிலாத்து மன்னனிடம், உண்மையைப் பற்றிப் பேசப் போக, அவன் பரிசேயர்களிடம் ஏளனமாகவே கேட்ட கேள்வி! "உண்மை! யாருடைய உண்மை? என்னுடையதா அல்லது உன்னுடையதா?"

இப்படித் தான் ஒவ்வொரு விஷயத்திலுமே ஒரு குறுக்குச் சுவர் அல்லது திரையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம்! இருள் மூடிக் கிடக்கும் மனம் வெளுப்பதெப்போது ? குறுக்கும் சுவர்கள் விழுந்து பட்டு, உலகம் உயர்வதும் எப்போது?

Mending Wall ! இந்த லிங்கில் முழுக் கவிதையையும் படிக்கலாம்!

இந்த யூட்யூப் வீடியோவில் அனிமேஷன் படமாகக் கவிஞரே தன் கவிதையைப் படிப்பது போலப் பார்க்கலாம், கேட்கலாம்.


கொஞ்சம் கவிதையோடு, யோசிக்கவும் செய்யலாம்!

கவிஞர் சொன்ன மாதிரி, கவிதையைப் பொழிப்புரைகள், கோனார் உரைகள் தேவையில்லாமல் புரிந்து கொள்ள முடிகிறதா?






 

5 comments:

  1. The woods are lovely,dark and deep,
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep.
    -- Robert Frost

    பண்டித நேரு அவர்கள் காலமான பொழுது ஃப்ராஸ்ட்டின் மேற்கண்ட கவிதை அவரது குறிப்புப் புத்தகத்தில் அவரால் குறித்து வைக்கப்பட்டிருந்த தாக அந்நேரத்து செய்தித்தாட்களில் படித்தேன். அப்பொழுதிலிருந்து
    ராபர்ட் ஃப்ராஸ்ட்டைத் தேடிப் படிக்க லானேன். எக்காலத்துக்கும் வேண்டிய ஒரு செய்தியை ஃப்ராஸ்ட்டின் கவிதை தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும். இது தான் ஃப்ராஸ்டின் கவிதைகளின் சிறப்பு.

    அவரை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி, கிருஷ் சார்!

    ReplyDelete
  2. அவரவர் நியாயம் அவரவர்க்கு.."யாருடைய உண்மை, உங்களுடையதா, என்னுடையதா" கேள்வியும் சரிதானே...அவரவர் அடுத்தவரிடம் ஒரு எல்லையை மீறாதவரை நல்லதுதான்

    ReplyDelete
  3. ஒரு நல்ல கவிஞன், எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் கண்ணாடியாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த நேரத்தைய குறுகிய மனச் சுவர்கள், விருப்புவேருப்புக்களையும் தாண்டி, சிந்தனையில் உயர்பவனாகவும், வாசிப்பவர்களையும் சேர்த்து உயர்த்துபவனாகவும் இருக்கிறான் என்பதை எனக்குக் காட்டிக் கொடுத்த வாசிப்பு அனுபவம் இது ஜீவி சார்!

    நேருவுக்கு, இதற்கெல்லாம் கூட நேரம் இருந்ததா? இது எனக்கு, கொஞ்சம் ஆச்சரியம் தான்!

    ஸ்ரீராம்!

    கொஞ்சம் தலைகீழாகப் பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது! அல்லது, உண்மை என்பது என்ன என்பதை ஒரு தெளிவான வரையறை செய்து பார்க்கவில்லை என்றும் புரிகிறது.

    எந்த நிலையில் இருந்து பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் பொதுவாக இருக்கக் கூடியது மட்டும் தான் உண்மையாக இருக்க முடியும்!இங்கேயிருந்து பார்த்தால் யானை, அங்கிருந்து பார்த்தால் பூனை என்றிருந்தால் அதற்குப் பெயர் உண்மை இல்லை!

    பிலாத்து மன்னனிடம் உண்மையைப் பற்றிப் பேசப் போக என்ற வார்த்தைகளிலேயே ஒரு ஹைபர்லின்க் இருக்கிறது, அதில் இன்னும் கொஞ்சம் "உண்மை"யைப் பற்றிப் பேசியிருப்பதைப் படிக்கலாம்!

    ReplyDelete
  4. ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட!

    ReplyDelete
  5. ஜோதிஜி!

    என்னுடைய ப்ரொபைல் விவரத்தில் இருந்தே ஒரு பகுதியை எடுத்துப் போட்டு.......!

    என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை!!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!