முதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு! அதனைக் கழுவுங்கள்!

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்! அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!

அதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம்மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறோம். நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்ன! இவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, "என்ன! அவர் அப்படி இருக்கிறாரா? அப்படி நடந்து கொண்டாரா? அப்படிச் சொன்னாரா? அப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

" நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ? அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் " ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்! நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பதுதான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்.  
நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

இந்தமாதிரி நினைத்துப்பழகிப்பாருங்கள்! உங்களை மாற்றிக்கொள்ளப் பெரிதும் உதவியாக இருப்பதைக் காண்பீர்கள். அதே நேரம், இளங்காலைக் கதிரவன் மாதிரி, அடுத்தவர்களுடனான உறவில் ஒரு சகிப்புத் தன்மையும், புரிந்துகொள்வதில் விளையும் நல்ல எண்ணமும் ஏற்படும்போது, முழுக்க முழுக்க ஒரு உபயோகமுமில்லாத சண்டை, சச்சரவுகளுமே முடிவுக்கு வந்து விடும்!.

சண்டை சச்சரவுகளில்லாமலேயே வாழ முடியும். ! ஜனங்களுடைய பிரதானமான வேலையே, நேரடியாகவோ மறைமுகமாகவோ சண்டை போடுவது தான், அது தான் வாழ்க்கை என்று நினைப்பவர்களுக்கு, இப்படிச் சொல்வதே கூட வியப்பாகக் கூட இருக்கும்!

தடித்த வார்த்தைகளோ, அடிதடிகளோ கூட வேண்டாம்! நமக்குள் நாம் விரும்புகிற மாற்றம், அது எவ்வளவு கடினமானது என்பது நமக்கே தெரிய வருகிறபோது ஏற்படுகிற எரிச்சல்,ஆனால் அடுத்தவர்களிடம் மட்டும் அப்படிப்பட்ட மாற்றம், முழுமை இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது எளிதாகத் தான் இருக்கும், இல்லையா?

"அவர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்?" என்று நினைக்கத் தொடங்கும் போதே, நாமும் அப்படித்தானே இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது,


'
அப்படி இல்லாமல்' இருப்பதற்கு எவ்வளவு பிரயாசைப் பட வேண்டியிருக்கிறது என்பதைக் கூட மறந்து விடுகிறோம்.

முயற்சித்துப் பார்த்தால் தானே, புரிய வரும்!"
1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி, ஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்"  என்ற
ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து
, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி.

அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 



தொடர்ந்து வலைப்பதிவுகளில் வேண்டாத சிந்தனைகளும், நிகழ்வுகளையுமே தொட்டுத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பதில் இருந்து விலகி நல்ல எண்ணங்களும், நல்ல செயல்களும் தொடரப் பிரார்த்தனைகளுடன்! இது ஒரு மீள்பதிவு.


 

3 comments:

  1. பயனுள்ள விளக்கம்

    நன்றி

    ReplyDelete
  2. நம் முதுகு நமக்குத் தெரிவதில்லை என்பதுதான் குறை.
    உங்கள் எதிரிகளின் பேச்சைக் கேளுங்கள். உங்கள் குறைகளை உங்களை விட நன்றாக அறிந்தவர்கள் அவர்கள்தான் என்பார்கள்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  3. அவசியம் மீள்பதிவிடவேண்டிய இடுகை

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!