ஆடின காலும், டிவிட்டிய கையும் சும்மா இருக்குமா என்ன..?!

Special: Five reasons why Tharoor had to resign

                           

மன்மோகன் சிங் பார்த்துத் தேர்வுசெய்து அரசியலுக்குத் தெரிவு செய்யப் பட்டவர் சசி தரூர்!

இவ்வளவு கூத்து நடந்து முடிந்தபிறகும் மனிதர் இந்திய அரசியலின் பால பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது! சசிதரூருக்கு ஆதரவு தெரிவிக்கும்  வலைத் தளம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது! இந்தப் பதிவை எழுதும் இந்தத் தருணம் வரை 13693 பேர் சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்து இந்தத் தளத்தில் எழுதியிருக்கிறார்கள்.


சசி தரூரை ஆதரிக்கும் இந்த வலைத்தளம், வருகிறவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கிளிப் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவது மாதிரி, இப்படி ஒரு முகவுரையைத்  தலைப்பாக்க, ஒரே அஜெண்டாவாக  வைத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்! ஓவர்டைம் வேலை செய்கிறார்கள் போல இருக்கிறது! ஒரே இரவில் ஆதரித்துச் சேர்ந்து எழுதியவர்கள் எண்ணிக்கை பதினையாயிரத்து நூற்று நாற்பதைத் தாண்டி  விட்டது!

We are here to say, "we support you Shashi Tharoor. Don't let them pull you down for you will take our hopes and dreams for a better and brighter India with you. You bring to India everything we had ever hoped would change, and we stand by you".


சசிதரூர் ! மத்திய அமைச்சரவையில், வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர்! மிக மிக சுவாரசியமான, விவரம் தெரிந்த மனிதர்! எதைச் சொன்னாலும் அவரது கட்சிக்காரர்களே விவகாரமாக்கி விடுவார்கள்! டிவிட்டரில் சசி தரூர் என்ன சொன்னாலும் அதை ஊதிப் பெரிதாக்குவது சில காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு! முழுநேரத் தொழிலும் கூட !

சமீபத்தில் டிவிட்டரில் காந்தியைப் பற்றி ஜார்ஜ் ஆர்வெல் சொன்ன ஒரு அரிதான லிங்கை டிவிட்டியிருக்கிறார்! ஒரிஜினல் காந்தியை பற்றி நினைக்கக் கூட, ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே கொஞ்சம் ஆச்சரியம் தான்!அகில்ரானா என்பவருக்கு ரீட்வீட் செய்த ஒரு குறுஞ்செய்தியில் அரசியல்வாதிகள் மக்களுடைய நண்பர்களாக இருக்க முடியாது என்று  சொல்கிற அளவுக்கு மனிதர் தொடர்ந்து ஆச்சரியப் படுத்திக் கொண்டு இருக்கும் அதே நேரம் காங்கிரசின் காலை வாரும் கலாசாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு, மனிதர் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்வதாக இன்னொரு டிவிட்டிய செய்தி இருந்தது!

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருந்த செய்தியில் சசி தரூர்  சொன்னதாக இப்படி இருந்தது. "இந்திய அரசியல் கலாசாரத்தை மாற்றவே விரும்பினேன். ஆனால் என்னைக் கீழே தள்ளி விட்டார்கள்!"

ஒன்று, ஏற்கெனெவே கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதர் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்  அதே நேரம் "நான் அப்படிச் சொல்லவே இல்லை, பத்திரிகைகள்தான் திரித்துப் போட்டு விட்டன" என்கிற மாதிரி அரசியல்வாதிகள் அடிக்கடி அடிக்கிற பல்டி மாதிரியும் இல்லாமல், எவ்வளவு நாசூக்காக நழுவியிருக்கிறார் பாருங்கள்! டிவிட்டரில் பார்த்தது, ரசித்தது!

Times of India falsely claims I said I tried to change Ind's pol culture.Am not that foolish!
 
Despite TOI's misleading lead,I am not grandiose enough to claim I can change India's political culture. Just trying to be myself&do my work

மனிகண்ட்ரோல்டாட்காமில், சசி தரூர் கொடுத்த பேட்டியை  வைத்துத் தான் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திய வெளியிட்டது. அதை மூன்று பகுதிகளாக இங்கே பார்க்கலாம்!  


இப்படி எழுதிப் பதினெட்டு நாட்கள் தான் ஆகிறது! மனிதர் தன் தலையைத் தானே வெட்டி, அரசியல் காளிக்குப் பலி கொடுக்காமல் ஓய மாட்டார் போல இருக்கிறது!

இங்கே அரசியல், நேரு, தலைமைப் பண்பு, விமரிசனம் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்துப் பழைய பதிவுகளைப் படித்துப் பார்த்தால், காங்கிரஸ் பதவி வெறி பிடித்தவர்களின் கும்பலாக மாறி விட்டதையும், எல்லா ஜனநாயகஅமைப்புக்களையும், பண்பையும் சீரழித்து தனது குறுகிய அரசியல் லாபத்துக்காக மட்டும் பயன்படுத்துகிற போக்கு ஒன்றினாலேயே
ஒரு அரக்கத் தன்மை கொண்ட கட்சியாக மாறியிருப்பதைச் சொல்லி இருப்பது புரியும்.

தரூருக்குப் போதாத காலம் இன்னும் நிறைய இருக்கிறது போல! 


ஆதரவாளர்கள், இவரை மையமாக வைத்து, இந்திய அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை இவர்தான் கொண்டு வருகிறமாதிரி ஒரு தம்பட்டம்! 

இந்திய அரசியல்  டிவிட்டரில் பின்தொடர்பவர்கள்,  ரீட்வீட் செய்பவர்கள், பேஸ் புக்கில் ஆதரவாளர்களாக அறிவித்துக் கொள்பவர்களால் தீர்மானிக்கப் படுவதில்லை. ஒபாமா பாணியில், இணையத்தில் ஆதரவைத் திரட்டுவது கேரள வாக்காளர்கள், குறைந்தபட்சம் அவரது தொகுதி வாக்காளர்களுடைய மனதில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை!

டிவிட்டரில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்கள்! நிறையப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்! ஒரு புத்தக ஆசிரியராக ஜெயித்திருக்கிறார். ஐ நா சபையில் பணியாற்றிய தருணங்களில் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அண்ணனுடைய நம்பிக்கை உரியவராக இருந்திருக்கிறார்!கோஃபி அண்ணனுடைய பதவிக் காலம் முடிகிற நேரம், அண்ணனுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாமல் போயிற்று! பொதுச் செயலாளர் வேட்பாளராகக் களமிறக்கப் பட்டவர் சசி தரூர். களத்தில் இறங்கினால் மட்டும் ஆதரவு கிடைத்து விடுமா
என்ன 
அமெரிக்கா, தனக்கு ஒத்து ஊதுகிறவராக, ஆளைத் தேடிக் கொண்டிருந்தது. ஒத்து ஊதினாலும் இந்தியா வேண்டாம் என்ற நிலையை அமெரிக்க அரசு நிறையத் தருணங்களில் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆக, சசி தரூர், தோற்றதில் பெரிய ஆச்சரியம் எதுவுமில்லை!

சர்வதேச அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மன்மோகன் சிங் தான் சசிதரூரைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார். மன்மோகன் சிங்கின் கதியே, இன்னொருவருக்கு முகமூடி, டம்மிப் பீஸ் தான் என்ற நிலையில், சசி தரூர் மாதிரி, உள்ளூர் அரசியலில் காலூன்ற முடியாதவர்களால் என்ன செய்து விட முடியும்? போதாக்குறைக்கு, ஐநா சபையில் ஒரு அதிகார வளையத்தில் சுற்றி வந்த அதே பழைய நினைப்பில் இங்கே இந்தியாவிலும் நடந்து கொண்டபோது, ட்விட்டர் மாதிரி அரட்டை அரங்கத்தில் வேடிக்கை பார்க்கிற கூட்டம் பின்தொடர்பவர்களாக நிறையக் குவிந்தது. 


கொஞ்சம் மனம் விட்டுப் பேசுகிற மாதிரி ட்விட்டர் செய்திகள் இருந்தாலும், ஆளை எப்போது காலை வாரலாம் என்று காத்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கலாசாரம், சசி தரூருக்கு உடனடியாகப் பிடிபடவில்லை! போன வருடம், அரசியல் ஸ்டான்ட் என்று சொன்னாலும் சரி, நிஜமாகவே சிக்கனத்தைக் கடைப் பிடிக்கத் தான் அன்னை சோனியா சொன்னார் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக, இங்கே சில பொடிசுகள் வாலாட்டிக்  கொண்டிருந்த மாதிரியானாலும் சரி, அமைச்சர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும், விமானத்தில் எக்கானமி வகுப்பில் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற சோனியாவின் அறிவிப்பைக் கிண்டல் செய்கிற மாதிரி காட்டில் கிளாஸ், புனிதப் பசுக்களோடு ஒற்றுமை என்ற மாதிரி டிவிட்டியது பெரிய கூச்சலை கிளப்பியது! 

(காங்கிரஸ் காரர்களால் அது மட்டும் தான் முடியும்!)

கட்சித் தலைமை, எரிச்சல் இருந்தாலும், கண்டுகொள்ளாமல் விட்டது. அடுத்து விசா வழங்குவதில் உள்ள முரண்பாட்டைத் தொட்டு பேசினது, நேருவின் வெளியுறவுக் கொள்கையை விமரிசிக்கிற மாதிரிக் கொஞ்சம், உழைப்பே தெய்வம் என்று சொன்ன காந்தி பிறந்த நாளை விடுமுறையாக அறிவிப்பது சரிதானா என்று இப்படி மனிதர் வாயைத் திறந்து ட்விட்டினாலே வம்பும் கூடச் சேர்ந்து வருவது வாடிக்கையும் ஆகிப் போனது!

டிவிட்டி டிவிட்டியே  பிரபலமான சசிதரூருக்கு ஆப்பும் டிவிட்டரில் தான் வந்தது!

சுனந்தாவைப் பற்றி ரொம்பவும் கிண்டிக் கிளறி விவரம் எதுவும் கேட்கவேண்டாம் என்று அமைச்சர் சொன்னதாக லலித் மோடி அவர் தனது ட்விட்டர் செய்தியில் எதிர்ப்பாட்டு ஆரம்பிக்க, அப்புறம் நடந்தது, நாறிப்போனது எல்லாம் பழங்கதையாக ஆகிவிடாமல், மனிதர் மறுபடியும் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாரோ  என்ற சந்தேகம்வருகிறது!

சசி தரூர் இப்போது ஒரு தனி மனிதர்! ஆப்பை அசைத்து, தனக்கே ஆப்படித்துக் கொள்வது அவருடைய சுதந்திரம்!

ஊழல் பெருச்சாளிகள் ஒன்றை ஒன்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றன! வருமான வரித் துறை, திடீரென்று, காங்கிரஸ் கட்சி மாதிரியே சுறு சுறுப்பாகியிருக்கிறது!




தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை, உளவுத்துறை நிறுவனங்கள், இந்திய அரசுக்குப் பயன்படுத்தப் படுவதை விட கட்சிக்கு யார் யார் தலைவலியாக இருப்பார்கள் என்பதை உளவறிய மட்டுமே பயன்படுத்தப் பட்டது இப்படி எல்லா வகையிலும்  இந்திய அரசியல் அமைப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் பலவீனப்  படுத்திக் கொண்டே வருகிறது, தானும் பலவீனப் பட்டுக் கொண்டே வருகிறது.


நாலாவது தூண் கதையை இந்தப் பக்கங்களில் பேசி
ருக்கிறோம், நினைவிருக்கிறதா?

ஜனங்களுடைய முட்டாள்தனம், மறதி, என்ன செய்ய முடியும் என்ற கோழைத்தனத்தின் மீது எவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நம்முடைய அரசியல்வியாதிகளுக்கு நிறையவே நம்பிக்கை இருக்கிறது!




 

3 comments:

  1. by gods grace - IPL showing its original face. but idiot criket fans forget this within 4 months.

    howmuch money, howmuch interlinks with each other , howmany matchfixing -- the idiot fans not understanding the real game.

    why our people like that ?

    what went wrong to my people?

    when will going to understand ?

    ReplyDelete
  2. //ஜனங்களுடைய முட்டாள்தனம், மறதி, என்ன செய்ய முடியும் என்ற கோழைத்தனத்தின் மீது எவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நம்முடைய அரசியல்வியாதிகளுக்கு நிறையவே நம்பிக்கை இருக்கிறது!//

    மிக மிக சரி

    ReplyDelete
  3. வாருங்கள் பாலு!

    ஐபிஎல்-லின் உண்மையான முகம் மட்டுமில்லை, நம்மூர்ப் பெரிய மனிதர்களுடைய சுய ரூபம் வெளியே கொஞ்ச நாற ஆரம்பித்திருக்கிறது.

    அவர்களுக்குப் பின்னால், திரைமறைவில் இருக்கும் அரசியல்வாதிகளை எப்போது அடையாளம் காணப் போகிறோம்?

    பட்டமளிப்பு கவுன் அணிவது வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற எச்சம், அதை உத்தர வேண்டும் என்று ஒரு அமைச்சர் இப்போது சமீபத்தில் பேசியதை இந்தப் பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்.

    கிரிக்கெட், அதை வைத்து பெட்டிங் என்று ஒரு புறம், சரியாகப் பரீட்சை நேரம் பார்த்து மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்புகிற மாதிரி நடத்துகிற அவலம் என்று நிறைய எச்சங்களில் இருந்து எப்போது விடுபடப் போகிறோம்?

    சபரிநாதன்!

    மிக மிக சரி வரைக்கும் சரிதான்!
    அப்[புறம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியும் முக்கியமானது தான் இல்லையா? அதைப் பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறீர்களே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!