சண்டேன்னாமூணு! கொஞ்சம் படம்! கொஞ்சம் செய்தி! கொஞ்சம் கேள்வி!




இங்கே நித்தியானந்தா விவகாரத்தில் முன்னேற்பாட்டுடன் வீடியோவெல்லாம், அதை மூன்று நான்கு நாட்கள் சலித்துப் போகிற வரை ஒளி பரப்பினமாதிரி, ஜனங்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்த்த மாதிரி அங்கே எல்லாம் இல்லை போல! 

அல்லது இதெல்லாம் சகஜமப்பா கேசு தானோ?!

 பாதிரிமார் சில்மிஷமெல்லாம் வீடியோவில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை! கிரேக்கத் தீவு ஒன்றில் நீலக் கடலின் பின்னணிக்குத் தோதாக, கிறித்தவ தேவாலயத்தின் கோபுரமும் நீல வண்ணத்தில்! 


நீலப் படம் அல்ல! அல்ல!
 
போப் பெனடிக்ட் எங்கே போனாலும், வில்லங்கம் அங்கே முன்னால் போய் ஆஜராகி விடுகிறது!

ஊனமுற்ற சிறுவர்களிடம், அனாதைகளுக்கு ஆதரவு என்ற பெயரில் அங்கே அடைக்கலம் தேடி வருகிறவர்களிடம் பாதிரிமார் சில்மிஷம், பாலியல் வன்முறை செய்துவருவதும் குறையவில்லை! தினசரி
ஏதோ ஒன்று அம்பலமாகிக் கொண்டிருப்பதும்,  உலகெங்கும் கண்டனங்கள் பெருகி வருவதும் நீண்ட தொடர்கதையாகி வருகின்றன. 

பாதிரிமார் சில்மிஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் வழக்குத் தொடருவதும் நஷ்ட ஈடாக பல நூறு கோடி டாலர்களை சர்ச்சுகள் தண்டம் அழுது வருவதுமே கூட மெகா சீரியலாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன! இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம் வழக்குகள், செய்திகள் கிளம்புமோ தெரியவில்லை!

இங்கிலாந்துக்கு இருபத்தெட்டு வருடம் கழித்து, வருகிற செப்டம்பர் மாதம்  ஒரு போப் விஜயம் செய்ய இருக்கும் தருணத்தில், கொஞ்சம் நக்கலும் நையாண்டியும் கலந்தமாதிரியான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யோசனை செய்த விவரம், அது வெளியே தெரிய வந்ததும், பிரிட்டிஷ் அரசு வாடிகனிடம் வருத்தம் தெரிவித்ததும் முழு விவரங்களுக்கு 
மேலே லின்கைச் சொடுக்கிப் பாருங்கள்!

அப்படி என்ன வில்லங்கமான நிகழ்ச்சி நிரல், யோசனை என்று கேட்கிறீர்களா?

கருச் சிதைவு, ஓரினத் திருமணம் இவற்றை கத்தோலிக்க சர்ச் கடுமையாக எதிர்த்து வருகிறது! 


போப் வரும்போது, ஓரினத் திருமணம் (ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும்) ஒன்றை ஆசீர்வதித்து நடத்துவது, 

போப்  பிராண்டுடன் கருத்தடைக்கான காண்டம்களை வெளியிடுவது, 

ஒரு மருத்துவ மனையில் கருத்தடைக்கான வார்டைத்  திறந்து வைப்பது 

உள்ளிட்ட யோசனைகளை ப்ரெயின் ஸ்டார்மிங் என்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதில், ஒரு அரசு ஊழியர் யோசனைகளாக சமர்ப்பித்த விவரம்  வெளியே கசிந்து, பிரிட்டிஷ் அரசுக்குத் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது! சண்டே டெலிகிராப் பத்திரிகையில் நேற்றைக்கு இந்த செய்தி வெளியானதும், வாடிகனில் உள்ள பிரிட்டிஷ் தூதர் போய் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தாராம்!

போப்பின் வருத்தம் தீர்ந்ததா? அல்லது பாதிரி சில்மிஷப் பிரச்சினை தீர்ந்ததா?

oooOooo 


பரிணாமம் படும் பாடு!
இப்போதெல்லாம் வேலைக்கு ஆகாத, பொழுதுபோக்குக்கு மட்டும்  நாத்திகம் பேசுகிற மாதிரியே பரிணாமத்தைப் பற்றிப் பேசுவதுமே ஒரு ட்ரெண்டாக வளர்ந்து கொண்டிருக்கிறது! பரிணாவியலைப் புரிந்து கொண்டுதான் பேசுகிறார்களா, எழுதுகிறார்களா என்று தேடிப்பார்த்தால் விடை பூஜ்யம் தான்!


வாலுடன் பரிணாமம் பேசினால் இப்படித்தான் இருக்குமோ!

இந்தப் படத்தைப் பாருங்கள்! உங்களுக்காவது நாத்திகம், பரிணாமம், பரிணாமவியல் ஏதாவது புரிகிறதா?

oooOooo

கல்லறைக்குப் போனால் மட்டும்  சும்மா விடுவேனா ?!


 
காதலிக்காகத் தாஜ் மஹால் கட்டினான், தற்கொலை செய்து கொண்டான் என்று இங்கே எல்லாத் தியாகத்தையும் ஆண்கள் தான் செய்து கொண்டிருப்பதாக சில வெட்டி மன்றப் பேச்சாளர்கள் சொல்வதுண்டு! இது வரை எந்தப் பெண்ணுமே அந்த மாதிரி செய்தததாகக்   கேள்விப்பட்டதும் இல்லையென்பதால் நான் கூட அதை அதை நம்பினதுண்டு! ஒருவலைத் தளத்தில்  பார்த்த படம், செய்தி, கொஞ்சம் அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!




ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் மாசிடோன் என்ற கல்லறைத் தோட்டத்தில், ஒரு பெண்மணி தன்னுடைய மாளாத காதலைச் சொல்கிற மாதிரி இறந்த காதலனுடைய கல்லறை மேல் சிற்பமொன்றை வடிவமைத்திருக்கிறாராம்!

மாளாத காதலைச் சொல்வது கிடக்கட்டும்! கல்லறைக்குள் போனாலும் உன்னை விட மாட்டேன் என்று சொல்கிற மாதிரியும் இருக்கிறதே என்று புள்ளிராசா வங்கி தந்த புள்ளி விவரச் சிங்கம் அண்ணாச்சி கருத்துத் தெரிவிக்கிறார்!

உங்கள் கருத்தென்னவோ?!

oooOooo

காங்கிரஸ் காமெடி! இன்றைய கேள்வி !

வருகிற மே மாதம் முதல் தேதி, குஜராத் மாநிலம் அமைந்து ஐம்பதாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, நரேந்திர மோதி அரசு பொன் விழாக் கொண்டாட்டங்களை விரிவாக ஏற்பாடு செய்திருக்கிறது. ஜனாதிபதியை அழைத்திருந்தார்கள்! வர இயலாது என்று ஏதோ சால்ஜாப்பைச் சொல்லி நிராகரித்ததன் பின்னணியில், காங்கிரஸ் கட்சி இருப்பது பெரிய ரகசியமுமல்ல!

ஜனாதிபதிப் பதவி என்பது  வெறும்  ரப்பர் ஸ்டாம்ப் மாதிரிப் பயன்படுத்துவது, அல்லது ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்தபோது பெருமையாகச் சொல்லிக் கொண்டபடி, மேடம் உத்தரவிட்டால் காலணியைக் கூடத் துடைக்கத் தயாராக இருப்பதாக- அந்த மாதிரி  வேலைக்குத் தான் என்பது இந்திரா காந்தி காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது! மோதி குஜராத் மாநில அரசியலில்  வலுவாகக் காலை ஊன்றிக் கொண்டிருப்பதும், அடுத்த பிரதமர் பதவி வேட்பாளராகக் கூட அறிவிக்கப் படலாம் என்ற அளவுக்குத் தேசீய அளவில் வளர்ந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் கண்ணை ரொம்ப நாளாகவே உறுத்திக் கொண்டிருக்கிறது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு நரேந்திர மோதியை விசாரித்ததும், அரசியல் பின்னணியே தவிர, உண்மையில் அந்தப் பெட்டி எரிக்கப் பட்டதில் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் வழங்க அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம் தான்! 


இன்றைக்கும், அப்புறம் வரலாற்றில் என்றைக்கும் காமெடிப் பீஸ் காங்கிரஸ் கட்சிதான் என்று பெயர் வாங்குவதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்! 

காங்கிரஸ்காரர்கள், காமேடிப்பீசாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு முன்னெப்போதும் இவ்வளவு கடுமையாக உழைத்தது இல்லை! கோமாளிப் பட்டமெல்லாம் இதற்கு முன்னால்தானே வந்து சேர்ந்தது தான்!

கொஞ்ச நாளைக்கு முன்னாள், மும்பை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று ராஜீவ் காந்தியின் நண்பராக இருந்து, இன்றைக்கு ஆகாமல் போனவரான அமிதாப் பச்சனை அழைத்து விட்டு, போட்டோவுக்கெல்லாம் போஸ் கொடுத்த பின்னால், ஐயா காங்கிரஸ் மேலிடத்துக்கு வேண்டாதவர் என்று உறைத்ததும், அழைப்பு அனுப்பவே இல்லை என்றுமகாராஷ்டிரா மாநில முதல்வர்  பல்டி அடித்து, அப்புறம் ஒரு அமைச்சர் நான் தான் அழைத்தேன், இது முதலமைச்சருக்குக்கும் தெரியும், அவர் ஒப்புதலோடு தான் அழைப்பே அனுப்பப் பட்டது என்று போட்டு உடைத்த கூத்து நினைவுக்கு வருகிறதா?

பி கே ஹரி பிரசாத் என்று ஒரு காங்கிரஸ்காரர்! காங்கிரஸ் பொது செயலாளர்களுள் ஒருவர்! குஜராத் மாநிலத்துக்குப் பொறுப்பானவரும் கூட!

அமிதாப் பச்சனை குஜராத் மாநில அரசு தன்னுடைய பிராண்ட் அம்பாசடராக  வைத்திருப்பது ஏன் என்று கேள்வியை எழுப்பி
ருக்கிறார்! குஜராத் மாநிலத்தின் தலை சிறந்த தொழில் அதிபரான அம்பானிகளை விட்டு விட்டு, அமிதாப் பச்சனை நல்லெண்ணத் தூதுவராக நியமிப்பானேன் என்பது அவருடைய கேள்வி!

ரொம்பவே நியாயமானது தான்!
செய்தி இங்கே!

கேள்வியைக் கேட்பதற்கு முன்னால், அது ஏன் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தான் தலைவராக இருக்க வேண்டும்? வேறு உள்ளூர்க் காரர்கள், இந்தியர்கள் எவருமே இல்லையா? நேரு குடும்பத்து வாரிசுகளைத் தவிர, காங்கிரசுக்கு வேறு நாதியே இல்லையா?  

இந்தக் கேள்விக்கு விடையைக் கண்டு பிடித்து விட்டு, அப்புறம் நரேந்திர மோதி, ஆகாமல் போன அமிதாப் பச்சனைக் கேள்வி கேட்கட்டுமே!

காங்கிரஸ் காமெடிப் பீஸ்களிடம்,
அடிப்படை நேர்மை,குறைந்த பட்ச அறிவைக் கூட எதிர்பார்க்க முடியாது என்பதால்............

உங்களைத் தான் கேட்கிறேன்! 

இன்னும் எத்தனை நாள், இந்த முதுகெலும்பே இல்லாத,  காங்கிரஸ் கட்சியை சகித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?



1 comment:

  1. படங்களுடன் அருமையான செய்திகள். மிக்க நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!