வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! என்றைக்கு விடிவு வரும்?


உயிர் காக்க மருந்தா? அல்லது உயிரைப் பறிக்கும் எமனா?

போலி மருந்துகள் விவகாரத்தில்  அரசு,சுகாதாரத் துறை காட்டும் அலட்சியத்தைப் பற்றிய தினமணி தலையங்கத்தைத் தொட்டு சில நாட்களுக்கு முன்னால், ஒரு பதிவு இந்தப் பக்கங்களில் வெளியாகியிருந்தது. உபயோகிக்க வேண்டிய தேதி காலாவதியான மருந்துகளை மறுபடி, லேபில்கள், பாகிங், தேதி மாற்றுதல் முதலான மோசடிகளைச் செய்து புழக்கத்தில் விட்ட ஒரு கும்பலைக் கைது செய்த விவரம் அன்றைய தேதிக்குப் பரபரப்பாகப் பேசப் பட்ட போதிலும் கூட, ஜனங்களின் மறதி, கையாலாகாத் தனம் இவைகளின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களால் நன்றாகவே தொடர்ந்து பயன்படுத்தப் பட்டு வருகிற விவரத்தை மத்திய அரசுப் புலனாய்வுத் துறை இந்த மாதம் பன்னிரண்டாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதிவரை ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களுர் நகரங்களில் நடத்திய சோதனைகளில் கண்டு பிடித்திருக்கிறதாம்!

பரிசோதனைக்கு அனுப்பப் பட்டதில், சாதாரணமாகக் காய்ச்சல், தலைவலி, ஃப்ளூ,  சளி,  வயிற்றெரிச்சல் (அசிடிடி) இவைகளுக்காகக் கொடுக்கப் படும் மருந்துகளில் கலப்படம் செய்து போலியாகத் தயாரிக்கப் பட்டதாகத் தெரிய வந்துள்ளதாக சிபிஐ மேற்குப் பிராந்திய இணை இயக்குனர் ரிஷி ராஜ் தெரிவித்திருக்கிறார். இன்றைய ஹிந்து நாளிதழில், சென்னையிலும்  இது மாதிரி சோதனை நடத்தப் பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.



போலிகள்! போலி லேபில் தயாரித்து நூறு எம் எல் மருந்து பத்தொன்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை!  லிங்கில் முழுச் செய்தியும் இருக்கிறது!

உள்ளூர்க் கலப்படக் கும்பல்கள் போதாதென்று இதிலும் சீனப் பூச்சாண்டி திரும்பின பக்கமெல்லாம் தெரிகிறது! இணையத்தில் விவரங்களைத் தேடியபோது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் மருந்துகளின் தரம், நம்பகத் தன்மை எதுவும் தெரியாமலேயே இறக்குமதி செய்யப் பட்ட விதம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட விவரமும் தெரிய வந்தது!

இரண்டு மாதங்களுக்கு முந்தையதுதான் என்றாலும் தினமணி நாளிதழின் தலையங்கத்தின் இந்தப் பகுதிகள் இப்போதும் கூட பொருத்தமாக இருக்கின்றன. மாநில அரசின் அக்கறையின்மை அல்லது அலட்சியம்,தமிழகத்தின் சுகாதாரத் துறையைத் தொட்டு அந்தத் தலையங்கம் இருந்தாலும், இப்போது தெரிய வந்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது. மெட்குரு தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தி கொஞ்சம் விரிவாகவே, இப்படிக் காலாவதியான மருந்துகள்;, கலப்படம் செய்யப் பட்டுப் போலியாகத் தாரிக்கப் பட்ட மருந்துகள் மத்திய அரசின் சுகாதாரத் துறை நடத்தும் இருபது மருத்துவ மனைகள், மற்றும் அரசு மருத்துவ மனைகளில் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதைச் சொல்கிறது.

இன்னொரு செய்தி சொல்வது இப்படி!


The arrests were made following searches conducted by the CBI at various pharmaceutical companies and hospitals in Mumbai, Delhi, Chennai, Nagpur, Pune and Bhopal from where samples of drugs were taken and sent for analysis. The CBI has also registered four cases in Delhi and Chennai against suppliers of spurious medicines.

CBI sleuths nabbed Gurbachan Singh and Navin Gadekar, proprietors of JP Herbal Pharmacy and Nalini Ayurvedic Company, respectively. “When we tested the drugs, it was found that the medicines were adulterated and spurious,” said Rishiraj Singh, CBI joint director (western region). “The medicines collected are ones prescribed for common flu, cold, fever, headache and acidity,” he added. 

Samples of 23 different types of medicines from 14 manufacturing companies have been collected and sent to the laboratory for further chemical analysis. Searches were also conducted at the office of the Central Government Health Scheme (CGHS) at Sion. CGHS is the central distribution point for all 28 central government dispensaries across the city.

CBI sleuths have smelt the presence of a large-scale syndicate in the business of producing sub-standard drugs. “This needs to be probed by multiple agencies as we have raided only central government hospitals and chemists. We suspect this is a larger racket,” said Singh. 

இப்போதுதான் மோப்பம் பிடித்திருக்கிறார்களாம்!


இப்போது தினமணி நாளிதழில் இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே  எழுதிய இந்தத்  தலையங்கம் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்! தமிழக அரசு, சுகாதாரத்துறை என்று வரும் இடங்களில்தமிழகம் மட்டுமே அல்லாமல், மத்திய, மாநில அரசுகள், கூட்டணிகள், அரசு இயந்திரத்தின் பொறுப்பற்றதன்மை, கையாலாகாத் தனம் அல்லது சாதாரண மக்களின் மீது காட்டும் அலட்சியம் என்று மாற்றிப் படித்துப் பாருங்கள்! அப்படியே கச்சிதமாகப் பொருந்துகிறதா?
 

மருந்துகளின் மொத்தக் கொள்முதல் நிறுவனங்கள் அல்லது மாநில விநியோகஸ்தர்களின் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதும், அங்கே திரும்பப் பெறப்பட்ட, காலாவதியான மாத்திரை மருந்துகளின் அளவைக்  கணிப்பதும், அதை அவர்கள் மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அனுப்புகிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் சுகாதாரத் துறையும்  மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவும் செய்ய வேண்டிய வேலை.

மருந்துக்கடைகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, வாங்கப்பட்ட விற்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த மருந்து மாத்திரையின் சந்தை வரவேற்பைக் கணிக்கவும், அதற்கேற்ப சந்தை வரவேற்பின்றி காலாவதியாகும் மருந்துகளின் பெயர்களை வகைப்படுத்தவும் முடியும். இன்றைய கணினி முறையில் இவை யாவுமே சாத்தியம். ஆனால், இதைச் செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை, ஏன்?

நோவால்ஜின் என்ற உண்மை மருந்துக்கு இணையாக நோவா-ஜின் என்ற, பெயர் ஒலிப்பு முறையில் மட்டும் இசைவாக இருக்கும் மாத்திரைகளை தமிழக அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவை எப்படி மருந்துக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன?  

பல மருந்துகளுக்கு ஒரு "எழுத்துப்பிழை பிராண்டு' இருக்குமென்றால், அது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததால் வந்த பிழைதானே? இது தெரிந்தே நடக்கும் தவறுதானே?

ஓர் அட்டையில் 10 மாத்திரைகள் இருக்குமென்றால், அதன் ஓரத்தில் கத்தரிக்கோலுக்கு வெட்டுப்படும் இடத்தில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை இன்னமும் வைத்திருக்கும் சுகாதாரத் துறையைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது?

எல்லாரும் 10 அல்லது 12 மாத்திரைகள் கொண்ட முழுஅட்டையை வாங்குவதில்லை. இதனால் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதியை அறியாமல்தான் வெறும் நம்பிக்கையின் பேரில், நோயாளிகள் மாத்திரையை வாங்கி உட்கொள்கிறார்கள்.

மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப் படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே ஆதரவாகவும், எந்த நாளிலும் நோயாளிகள் மீது அக்கறை இல்லாமலும் இருக்கும் அரசுதான் இதற்கெல்லாம் முதல் குற்றவாளி.

பூனை கண்ணை மூடினால் உலகம் இருளாது. ஆனால், சுகாதாரத் துறை கண்ணை மூடினால் போலி மருந்துகள் உலவத்தான் செய்யும். குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்குக் குற்றேவல் புரிவதும், குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவதும்தானே அதிக தண்டனைக்குரிய குற்றம்?  


42,000 மருந்துக்கடைகளைச் சோதனையிடுவதற்குப் பதில் 420 மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சோதனையிடலாமே?  அதற்கு ஏன் தயங்குகிறது நமது சுகாதாரத் துறை?"
 .............
இங்கே நடக்கும் பெரும்பாலான கோளாறுகளின், ஊழலின் ஊற்றுக் கண்ணாக எது இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பெரும்பான்மை ஜனங்கள் ஊமைச் சனங்களாகவே குறுகி நின்று விடுவதில் தான் எல்லாமே ஆரம்பிக்கிறது என்பது புரிய வரும்! 

 

ஒரு தவறு நடக்கும்போது அதைக் கண்டிக்காமல் வாய் மூடி ஊமைகளாக நின்றுவிடுகிறவர்களுக்கு நியாயம் எப்படிக் கிடைக்கும்? பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதெல்லாம் சரி! அந்தப் பேயை விரட்டியடிக்க வேண்டாமா?

சுதந்திரம் என்பது யாரோ ஒரு காந்தித் தாத்தாவும், மாமா நேருவும்
ஏதோ பெட்டி கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்த பஞ்சு அல்லது சவ்வு மிட்டாய் அல்ல! முற்போக்குவாதிகள் வகுத்த பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களில் அப்படித்தானே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

சுதந்திரம், உரிமைகள் என்பன அவற்றின் அருமையை உணர்ந்து பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நிலைக்கக் கூடியது.




அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டவருக்குச் சுதந்திரம் என்றுமில்லை!


ஊமைச் சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா அல்லது விழித்துக் கொள்ளப் போகிறோமா?

கொஞ்சம் சொல்லுங்களேன்! 





7 comments:

  1. சினிமா காலரி என்ற ப்ளாக்ஸ்பாட் தளத்தில் இருந்து இந்தப் பதிவின் உள்ளடக்கத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் வந்த ஒரு பின்னூட்டம் நிராகரிக்கப் பட்டிருக்கிறது.மருந்தா எமனா என்ற சீரியசான ஒரு விஷயத்தில், சுருதி ஹாசனின் ஹாட்டான படங்கள் என்று தன்னுடைய பதிவை விளம்பரப் படுத்திக் கொள்ள முயற்சிப்பது எந்த அளவுக்கு சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! என்னதான் பதிவுலகத்திற்குப் புதியவர் என்றாலும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையே நண்பரே!

    இந்த தேசத்தின் சீரழிவிற்கு சினிமாவும், தற்போது சின்னத்திரையின் மெகா சீரியல்கள், மானாட மார்பாட போன்ற கூத்துக்களும் ஒரு பெரிய காரணம் என்பதையாவது யோசித்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  2. மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப் படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு//

    இது ஒருபுறமிருக்க பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப் படும் மாத்திரைகள் வெவ்வேறு பெயர்களாக இருந்தாலும் அளவு, நிறம் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்து குழப்புகின்றன. பின்னால் மட்டும் லேசாக நிறத்தை மாற்றி வித்யாசம் காட்டுகிறார்கள். படித்தவர்களுக்கு பூதக்கண்ணாடி வேண்டும்..படிக்காதவர்கள் என்ன செய்வார்கள்? எல்லாம் உயிர் காக்கும் மருந்துகள் என்று பெயர் வேறு..(உதாரணம்...அம்லோடிபின், அட்ர்வாச்டேடின்...)

    ReplyDelete
  3. we should increase our awareness .

    what we do ?

    all media under by ruling party.they interested only to promote their own film marketing

    ReplyDelete
  4. வாருங்கள் ஸ்ரீராம்!

    மருந்துகளை நிறம் வைத்தோ, மூலப் பொருட்களின் பெயர்கள் லேபிளில் இருப்பதை வைத்தோ, அதுதான் ஒரிஜினல் என்று எப்படி சொல்ல முடியும்?

    ஆனால் அப்படி லேபிளில் காட்டி ஒரு உயிர்க்கொல்லி நோய்க்கான இன்ஜெக்ஷன் பாட்டிலின் விலையைப் பத்தொன்பதாயிரத்துக்கு விற்ற படுபாதகர்களைப் பற்றிய லிங்க்-- பதிவிலேயே பாட்டில் படத்தை ஒட்டியே இருக்கிறது! அப்புறம், சாதாரணமாகச் சளி, காய்ச்சல், உடல் வலி, வாயிற்று உப்புசம் போன்ற மாத்திரைகளைக் கலப்படம் செய்து தயாரித்ததை சிபிஐ இப்போது தான் மோப்பம் பிடித்திருக்கிற சமாச்சாரமும் கூட, மெட்குரு தளத்தின் லிங்கில் இருக்கிறது. மருந்து இயலைப் பாடமாகப் படித்தவர்களையே குழப்பும் சமாசாரம் இது என்கிறபோது, மருத்துவர்கள், பெரும்பாலும், மருந்துக் கம்பனிகள் சொவதைத் தான் நம்புகிறார்கள் அல்லது காம்ப்ளிமெண்டுக்காகப் பரிந்துரை செய்கிறார்கள். மருத்துவர்கள் பரிசுப்பொருட்களை வாங்கக் கூடாது என்று கூட ஐ எம் ஏ நடைமுறைப்படுத்த முடியாத ஒரு கட்டுப் பாட்டை விதித்துப் பார்த்ததை, இதற்கு முந்தைய பதிவொன்றில் எழுதியிருக்கிறேன்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, மருந்துக் கடைக்காரர்களை, மருத்துவர்களை இன்னமும் தெய்வமாக நம்பி, அவர்கள் பரிந்துரை செய்கிற மருந்தை அப்படியே வாங்கி உபயோகிக்கிற பாமர ஜனங்கள் நிறைந்த நாடு இது! அரசும் சரி, மருந்துக் கம்பனிகளும் சரி, பாமர ஜனங்களுடைய உயிரோடு மிகவும் அலட்சியமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய பதிவிலும், இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கொஞ்சம் எழுதுவது, அப்படியே தெரிந்த சக பதிவர்களையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபடுத்துவது இந்த நேரத்தின் அவசியம் என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  5. வாருங்கள் திரு.பாலு!

    இப்படிப் பாருங்களேன்! எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒன்று எப்போதுமே அப்படி இருந்துவிட முடியாது என்பது இயற்கை விதி! தன்னுடைய சொந்தப் பளுவைத் தாங்க முடியாமலேயே, விரிசலும், ஆட்டமும் கண்டு வீழ்வதுமே அதன் தலைவிதி! இது வரை எல்லாவற்றையுமே தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர எண்ணியவர்களுடைய கதை அல்லது வரலாறு அப்படித் தான் சொல்கிறது.

    கொஞ்சம் நம்பிக்கையோடு, நிறையப் பிரார்த்தனைகளோடு நாம் செய்ய வேண்டியதெல்லாம், அதற்கான சிறு முயற்சிகளையாவது மேற்கொள்வது தான்!

    ReplyDelete
  6. வணக்கம் சார்,
    உங்களுடைய பதிவைப் படித்த பின்பு, உங்களுக்கு மக்களின் மீது உள்ள அன்பும், அவர்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்று தாங்கள் விரும்புவதயும், தெளிவாக புரிந்து கொண்டேன்.

    இன்றைய தினத்தில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விபரமாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.
    மேற்கொண்டு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    இந்த பதிவு அனைவராலும் படிக்கப் படவேண்டும். மேலும் அரசின் கவனத்திற்கு சென்று மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  7. அமைதியின் அப்பா!

    உங்களுடைய வலைப் பதிவுகளில் ஒரு சமூக அக்கறை இருப்பதைப் பார்த்தேன்!

    அமைதியை விரும்பும் அப்பாக்கள் என்று முகம் காட்டாமல், சொல்ல வேண்டிய கருத்தை, சொல்ல வேண்டிய இடத்தில், நேரத்தில் சொல்லாமல் ஊமைச் சனங்களாகவே இருந்து போன ஒரே காரணம் தான், நம்முடைய தேசம் அன்னியருக்கு அடிமைப் பட்டுப் போனது!

    வாராது வந்த மாமணி போல சுயநலம் கருதாத காந்தி மாதிரித் தலைவர்களைப் பின்பற்றி இந்த தேசமே சிலிர்த்தெழுந்து, உணர்வால் ஒன்று பட்டு நின்று போன தருணத்தில் அன்னியர்கள் வெளியேறினார்கள். வெள்ளைத் துரை விட்டுப் போன இடத்தை உள்ளூர்த் துரைமார்கள் நிரப்பிக் கொண்டார்கள். அப்போதும் கூட விழித்துக் கொள்ளாமல், ஊமைச் சனங்களாகவே இருந்ததன் விளைவு இங்கே கழகங்களாகவும், அங்கே மாயாவதி, முலாயம் சிங் யாதவ், பதவிக்காகவே காங்கிரசில் சேரும் கும்பல் என்று ஆகிப் போனது.

    முப்பது வருஷம் வாழ்ந்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் கெட்டவனும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் இங்கோ, அறுபத்து மூன்று வருடங்களுக்குப் பின்னாலும் வெளிச்சத்தைக் காணோம்! பதிவின் கடைசிப் பன்னிரண்டு வரிகளிலேயே, இந்தக் கோளாறுகளுக்கான அடிப்படை எங்கே இருக்கிறது என்பதைத் தெளிவாகவே சொன்ன பிறகும் கூட,

    /அரசின் கவனத்திற்கு சென்று மாற்றங்கள் நிகழ வேண்டும் /
    என்ற உங்களுடைய ஆசை நடக்கக் கூடியது தானா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!

    காரணம், வெளிச்சத்துக்கான வழி, விடுதலைக்கான வேட்கை, அதை அடைவது எல்லாமே நம்மிடம் தான் இருக்கிறது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!