இந்தியத் திரு நாட்டில் மட்டும் தான் இப்படி நடக்கும்....!

1984 ! ஜூன் மாதம்! 

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் சீக்கியப் பொற்கோவிலுக்குள் தீவீரவாதிகளைத் தேடி ராணுவத்தை இந்திரா காந்தி அனுப்புகிறார்! சீக்கிய மக்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்துகிற விதத்தில் இந்த நடவடிக்கை இருக்கிறது. பின்னால் இந்திரா காந்தி, தனது பாதுகாவலராலேயே சுட்டுக் கொல்லப் படவும், அப்புறம் நடந்தேறிய துயரங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

அதே ஜூன் மாதம், போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனம், மைனஸ் ஐந்து டிகிரி குளிர் நிலையில் வைத்துப் பாதுகாக்கப் பட வேண்டிய மெதில் ஐசோ சயனைட் என்ற விஷ வாயுசிலிண்டர்களை பாதுகாப்பான குளிர்சாதன வசதியில் வைத்திருக்க வேண்டாம் என்ற முடிவை எடுக்கிறது.

1984 நவம்பர்  30-டிசம்பர் 4
சஜ்ஜன் குமார், ராஜேஷ் பைலட் முதலானவர்கள் தலைமையில் ஒரு கும்பல் டில்லியிலும் சுற்றுப் புறங்களிலும் குண்டர்களைத் திரட்டி, சீக்கிய மக்களைக் குறிவைத்து வன்முறையில் ஈடுபடுகிறது. மூவாயிரத்துக்கும் மேல் சீக்கியர்கள் டில்லியில் மட்டும் படுகொலை செய்யப் பட்ட கொடூரம் நடக்கிறது. நாடுமுழுவதும் இந்தக் கலவர உணர்வுகள் பரப்பப் பட்டாலும், உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சீக்கிய மக்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பார்த்துக் கொண்ட ஒரே மாநிலம் மேற்கு வங்கம் தான்! இங்கே தமிழகத்தில் சீக்கியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் என்று எதுவும் இல்லையானாலும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு திருடும் கும்பல்களால் அவர்களுடைய கடைகள் சூறையாடப்பட்டது  நடந்தது.

ஒரு நாட்டின் பொறுப்பான பதவியில் ஏற்றி வைக்கப் பட்ட பிரதமராக அல்லாமல் தன்னுடைய தாயின் மரணத்துக்குக் காரணமான வர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்கிற உணர்வோடு ராஜீவ் காந்தியின் கமென்ட் இருந்தது.

"ஒரு பெரிய மரம் வீழும்போது பூமி அதிரத் தான் செய்யும்!"

சீக்கியப் படுகொலையை நியாயப் படுத்துகிற மாதிரி,"Only a person who is totally committed to the nation can make an attempt like Rajiv Gandhi did to bring murderers of his mother into the mainstream." என்று    அர்ஜுன் சிங் அளித்த பேட்டி இங்கே.



அதே டிசம்பர் 3-4!

பாதுகாப்பான  மைனஸ் ஐந்து டிகிரி என்ற பதமான சூழலில் வைக்கப் பட்டிருக்க வேண்டிய  விஷத்தன்மை கொண்ட ரசாயன சிலிண்டர்கள் மூன்றாம் தேதி இரவு வெடித்து விஷவாயு, போபால் நகரெங்கும் பரவி மக்கள் மடிந்து கொண்டே இருக்கிறார்கள்.  மத்தியப்பிரதேச முதல்வராக அன்றைக்கு இருந்த அர்ஜுன் சிங் ( வி பி சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை வைத்துப் புகழ் அடைந்த மாதிரி
ஓபிசி இட ஒதுக்கீடு செய்து அதிகாரம், புகழ் பெற விரும்பிய அதே நபர் தான்!)  இந்தியாவுக்கு வந்த யூனியன் கார்பைட் நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனைப்  பாதுகாப்பாக, திருப்பி அனுப்பி வைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து சிபிஐ வாரன் ஆண்டர்சனைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று தகவல் வந்ததாக ஒரு சிபிஐ அதிகாரி தெரிவித்திருக்கிறார். வழக்கம்போல இந்திய அரசு, இதை மறுத்திருக்கிறது.ஆண்டர்சனைத் தண்டிக்க அரசியல் உறுதி வேண்டும்! 
இப்படி இங்கே ஒரு செய்தி

போபார்ஸ் பீரங்கி பெற ஊழலில் காங்கிரசுக்கு இருந்த அரசியல் உறுதியைப் பற்றியும், ஆ! ராசா! ப!வார்! இப்படி எத்தனை விவகாரங்கள் வெடித்தாலுமே கூட களிமண் சுவர் மாதிரி இருக்கிற காங்கிரஸ் கட்சியிடம் இதை எதிர்பார்க்க முடியுமா?

போபார்ஸ் பீரங்கி பெற ஊழல்  வழக்கில் குவோத்ரோச்சியைத் தப்புவிக்க இதே சிபிஐ காங்கிரஸ் கட்சியால் எப்படிப் பயன்படுத்தப் பட்டது என்பதைக் கொஞ்சம் விலாவாரியாக, தேதிவாரியாகத் தெரிந்து கொள்ள.
 


இந்த வீடியோவைப் பாருங்கள்! அமெரிக்க ஊடகங்கள் ஒரு விஷயத்தை சரியாகத் தான் கேட்டிருக்கின்றன! வாரன் ஆண்டர்சனைத் தேடப்படும் குற்றவாளியாகஅறிவிக்கவும் அமெரிக்காவிடம் வேண்டிக் கொள்ளவும்  இந்திய அரசு பத்தொன்பது வருடங்கள் எடுத்துக் கொண்டது எதற்காக?

தேடப்படும்  குற்றவாளி என்று அறிவித்தபிறகும் கூட, தலை மறைவாக இருக்கும் குற்றவாளி என்று அறிவித்து அவர் மீது விசாரணையோ, சாட்சியங்களையோ நடத்தாமல் விட்டது ஏன்? 

தாயைப் பறிகொடுத்து விட்டு, புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜீவ் காந்திக்கு வேண்டுமானால் சில விஷயங்களைக் கையாள்வது எப்படி என்று தெரியாமல் இருந்திருக்கலாம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் கூட பழம் தின்று கொட்டையைக் கூட விட்டு வைக்காத சக அமைச்சர்களுக்கோ, அதிகார வர்க்கத்திற்கோ கூடவா நிலைமையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் போய் விட்டது?

3300 கோடி  டாலர்கள் நஷ்ட ஈடாக வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்த இந்திய அரசு, (கையாலாகாத, முதுகெலும்பில்லாத காங்கிரஸ் கட்சி என்று வாசித்துக் கொள்ளவும்) திடீரென்று  மூன்று வருடங்களுக்குப் பின்னால், எந்தவிதமான விளக்கத்தையும் வெளிப்படையாக இன்று வரை சொல்லாமல், நீதி மன்றத்துக்கு வெளியே வெறும் நானூற்று எழுபது கோடி ரூபாய் நஷ்ட ஈடே போதுமானது என்று சமரசத் தீர்வாக ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன?  இதில் ஆதாயம் பார்த்தவர்கள் யார்?

அப்படிக் கிடைத்த நஷ்ட ஈட்டையும், பாதிக்கப் பட்ட மக்களுக்குப் பயன்படுத்தாமல் இன்று வரை இந்திய அரசை,
(கையாலாகாத, முதுகெலும்பில்லாத காங்கிரஸ் கட்சி என்று வாசித்துக் கொள்ளவும்) சும்மா இருக்கச் செய்தது எது?

ஒரு இந்திரா காந்தி செத்தால், பூமி அதிரும்! இருபத்திரண்டாயிரம் அப்பாவி மக்கள் செத்தால் ஈவு இரக்கம் கூட வராதா?

அமெரிக்கா! தொழில் நுட்ப வளர்ச்சி, புதுமை, ரிஸ்க் எடுக்கும் தைரியம், போட்டியில் திறமை வெளிப்படுவது என்று  நிறைய விஷயங்களில் பாராட்டக் கூடிய அம்சங்கள் இருந்தாலும், குடம் பாலில் ஒருதுளி விஷம்.... அல்ல அல்ல.. மொத்தக் குடமே விஷக் குடம் தான் என்று சொல்கிற அளவுக்கு,அமெரிக்க அரசு  தனக்
கு ன்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு அவர்கள் மனம் போன போக்கில் நியாயம் என்றிருப்பதை இந்திய அரசியல்வாதிகள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்? 

அமெரிக்கர்களுக்கு அவர்கள் தேச நலன் முக்கியம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே மாதிரி  நமக்கு நம்முடைய தேச நலன் தான் முதல்தேவை என்று எதனால் இவர்களால் இருக்க முடிவதில்லை?

அமெரிக்காவின் இரட்டை வேடம் போபால் தீர்ப்பைப் பற்றிய அவர்களது அணுகுமுறையிலும். பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி நடுக்கடலில் கச்சா எண்ணெயைக் கசிய விட்டதில் அமெரிக்கக் கடற்கரையில் வாழும் டால்பின்கள் முதலான கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டிருக்கிற சேதத்திற்கு நஷ்ட ஈடாக  இவ்வளவு வேண்டும் என்று கேட்பார்களாம்!
ஆனால், அதே நேரம் இந்திய உயிர்கள் என்றால் இளப்பம்! மதிப்பில்லை!  இது என்ன கொடுமை? எதனால் இரண்டு விதமான அளவுகோல்கள்?

கேட்பதற்குக் காங்கிரசுக்குத் தான் யோக்கியதை இல்லை! கூட்டணிக் கட்சிகள் செய்கிற அழும்பையே தட்டிக் கேட்க முடியாத ஐ மு கூட்டணிக் குழப்ப அரசு, அமெரிக்கா மாதிரி வலிமையான ஒரு நாடு கையை முறுக்கினால் வடிவேலு மாதிரி எனக்கு வலிக்கவே இல்லையே என்று தான் உதட்டைப் பிதுக்குமோ?



அணு உலை விபத்துக்கான நஷ்ட ஈடு வரையறை செய்கிற மசோதா சட்டமாக்கப் படுவதில், இந்தத் தீர்ப்பினால் எந்த விதமான குந்தகமும் ஏற்படாது!  

அமெரிக்கா " நம்பிக்கை"  தெரிவித்திருக்கிறது!

நம்முடைய அரசியல்வாதிகளின் யோக்கியதையை நம்மை விட நன்றாகப் புரிந்து வைத்திருப்பதால் வந்த நம்பிக்கையோ?
அல்லது திரை மறைவில் கையை முறுக்கிச் செய்யப் படுகிற நிர்பந்தமோ?


இந்திய அரசியலில் எதுவானாலும் பங்குச்சந்தை ஊழல் புகழ் ஹர்ஷத் மேத்தா, அன்றைய பிரதமர்  நரசிம்ம ராவுக்குக் கொடுத்ததாகச் சொல்லப் படும் பெட்டிகளாலேயே தீர்மானிக்கப் படுவது என்பதாகத் தான் இருக்குமோ?

போபால் வழக்கின் தீர்ப்பை எழுதிய நீதிபதி என் மீது தவறில்லை, சட்டத்தில் இதற்கு மேல் தண்டிக்க வழியில்லை என்று சொல்லி
ருக்கிறார்! அமைச்சர் வீரப்ப மொய்லியோ, இன்னமும் கிரிமினல் பொறுப்பை நாம் வலியுறுத்த முடியும் என்று ஜோக்கடிக்கிறார்!

ஊமைச் சனங்களாகவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில், நம்முடைய வாழ்வும் சிரிப்பாகச் சிரிக்கப் படும் இழிநிலைக்கு நாமே தள்ளி விட்டுவிடுவோமோ?

என்ன செய்யப் போகிறோம்? எத்தனை நாளைக்கு இந்த இழிநிலையை சகித்துக் கொள்ளப் போகிறோம்? 




 

14 comments:

  1. //ஐஸ் கட்டியில் கூட நெருப்பை உண்டாக்கலாம். ஆனால்
    இந்திய மக்களிடம் உணர்வை உண்டாக்க இயலாது//
    எங்கோ எப்போது படித்தது.................................................

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    அவ்வளவு அவ நம்பிக்கை இருந்திருந்தால் இதைப் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்!

    காந்தி மாதிரி எல்லாத் தரப்பினருடைய நம்பிக்கையையும் பெற்ற ஒரு தலைவர் இருந்த போது , இந்த தேசம் எப்படி நிமிர்ந்து நின்றது என்பது தெரிந்த பிறகுமா இந்த அவநம்பிக்கை?

    இங்கே இன்றுள்ள தலைவர்கள், பெட்டிகளை நம்புகிற அளவுக்குப் பெற்ற மக்களையும், உடன்பிறப்புக்களையும் நம்புவதில்லை! ஜனங்களை பிரித்து வைப்பதில் தான் தங்களுடைய, வாரிசுகளுடைய பிழைப்பு ஓடும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்.

    ReplyDelete
  3. ஜனங்களிடம் 'உணர்வு ' இருந்தால் இப்படி பிரித்து வைக்க முடியுமா?
    ' தாங்கள் பிரித்து வைக்கப்பட்டே ஆளப்படுகிறோம்" என்ற உணர்வு இலலை.
    பிரித்து வைக்க இங்கு உண்டாக்கப்ட்ட காரணங்கள் ஓர் ஆயரம்.

    ReplyDelete
  4. //காந்தி மாதிரி எல்லாத் தரப்பினருடைய நம்பிக்கையையும் பெற்ற ஒரு தலைவர் இருந்த போது , இந்த தேசம் எப்படி நிமிர்ந்து நின்றது என்பது தெரிந்த பிறகுமா இந்த அவநம்பிக்கை?//
    //ஜனங்களை பிரித்து வைப்பதில் தான் தங்களுடைய, வாரிசுகளுடைய பிழைப்பு ஓடும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்.//

    நல்லா சொன்னிங்க நல்ல பதிவு

    ReplyDelete
  5. வாங்க சபரிநாதன்!

    நல்ல தலைவர்களை உருவாக்குவதில் நம்முடைய பங்கும் இருக்கிறது. அதை செய்யத் தவறியதால் தான் இத்தனை துயரமும்!

    ReplyDelete
  6. மாணிக்கம்!

    பிரிட்டிஷ் குள்ள நரிகளிடமிருந்து வேறெந்தப் பண்பைக் கற்றுக் கொண்டார்களோ இல்லையோ, நம்முடைய அரசியல் வாதிகள் ஜனங்களை நன்றாகவே பிளவுபடுத்தக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை தான்! அதனால், ஜனங்களுக்கு 'உணர்வு' இல்லாமலேயே போய்விட்டது என்ற முடிவுக்கு வருவதும் சரியல்ல!

    உணர்வு இல்லாமலா, போபாலில் இருபத்தாறு ஆண்டுகளாகியும் கூட பாதிக்கப் பட்ட ஜனங்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்?

    முதல் எட்டு எடுத்து வைப்பது எவருக்குமே நிறையத் தயக்கம் ஏற்படுத்தக் கூடியது.அச்சம் கூடக் கொஞ்சம் இருக்கலாம், முதலடி எடுத்து வைத்த பிறகு எவராலும் தடுத்து நிறுத்த முடியாது!

    அந்த முதலடி, காங்கிரசைத் தூக்கி எறிவது, காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து பெட்டிகளில் சுகம் கண்டிருக்கும் கூட்டணிக் குழப்பங்களை அறவே நிராகரிப்பது என்பதில் இருந்து ஆரம்பிக்கட்டுமே!

    ReplyDelete
  7. at present we cant able to through or punish .the congress.

    because lot of small regional parties want partner in central corruption .

    so they get good portfolio and keep mum in congress nonsense movements/ actions.

    ReplyDelete
  8. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  9. வாருங்கள் பாலு சார்!

    1967 மற்றும் 1977 தேர்தல்களில் எப்படி முடிந்தது? அதைக் கொஞ்சம் பார்த்து விட்டு அந்த முயற்சிகள் ஏன் தோற்றன என்பதையும் பார்க்க வேண்டும்.மறுபடியும் அதே மாதிரி முயற்சிப்பதற்குத் தடையாக இருப்பது எது என்பதையும் பார்க்க வேண்டாமா?

    இந்தக் கோளாறுகளின் ஊற்றுக்கண்ணாக இப்போதுள்ள தேர்தல் முறை --winner takes all என்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மெதட் என்றும் அழைக்கப் படுகிற பிரிட்டிஷ் பாராளுமன்ற நடை முறைதான்! அதையடுத்து, காலனியாக வைத்திருக்க விரும்பியவர்கள் தங்களுக்குத் தோதான அரசு அமைப்பை ஏற்படுத்தி விட்டுப் போனதையே இன்னமும் தொடர்வதுதான்!. இன்றைக்கும் கூட ஜமாபந்தி என்று ரெவின்யூ அதிகாரிகளைக் கூட்டி மாவட்ட கலெக்டர் நடத்தும் கூத்தில் கஞ்சா அபின் எத்தனை ஏக்கரில் பயிரிடப் படுகிறது என்ற கேள்வி இருக்கிறது. இதே மாதிரிக் காலாவதியாகிப் போன விஷயங்கள் நிறைய உண்டு.

    அடுத்து நீதித்துறை! சுயேச்சையான நீதித்துறை என்று ஒன்று இருந்தால் அதைக் குறை சொல்ல முடியாது. ஆனால், இன்றைய நீதிமான்கள், அரசியல்வாதிகளின் கடைக்கண்ணுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையில், அவர்களிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்க முடியாது.

    முதலில் அரசியல் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அது தேர்தல் சீர்திருத்தங்களில் ஆரம்பிக்கிறது.

    இது குறித்த சிந்தனையை சென்ற வருடம் இங்கே பகிர்ந்து கொண்டது, இப்போது உங்களுக்கு உதவக்கூடும்

    ReplyDelete
  10. link

    http://groups.google.co.in/group/mintamil/browse_thread/thread/cfdff96781ad4d78/aa8d915e123d8256?lnk=gst&q=49+o#aa8d915e123d8256

    ReplyDelete
  11. நல்லதொரு பதிவு.சரியான நேரத்தில்.நிறைய சிந்திக்க வைக்கின்றன.அரசின் கையாலாகத்தனத்த நினைச்சு கேவலமா இருக்கு....சமயத்தில் நக்சல்பாரி இயக்கங்கள் தேவைதானோங்கிற சிந்தனை கூட வருது ரொம்ப சிந்திச்சா....

    ReplyDelete
  12. thangaludia aanitharamaana karuthukku nantri

    ReplyDelete
  13. மயில்ராவணன்!

    எந்த ஒரு விஷயமும் விளைவுகளோடு தான் முடிகிறது. அந்த விளைவுகள் பலவாறாக அடுத்த ஆட்டத்திற்கு நகர்த்துவது போல, நக்சல்கள், கழகங்கள் எதுவானாலும் சரி வேனல் கொப்புளங்கள் மாதிரித் தான்! ஆக நக்சல்களைத் தேவை என்பதை விட, விளைவு என்று சொல்வது மட்டுமே சரியாக இருக்கும்.

    அசமந்தமான அரசாங்க, மெத்தனமாக இருக்கும்போது, கொஞ்சம் கோளாறுகள் இப்படித் தீவீரவாதமாகவும், கொஞ்சம் கோளாறுகள் கழகங்களாகி மானாட மயிலாடவிட்டு மக்களை இலவசங்களில் இளித்தவாயர்களாக்கி வைத்திருக்கும்.

    ReplyDelete
  14. முதல் வருகைக்கு நன்றி திரு பாரூக்!

    ஆணித்தரமாக உங்களுடைய கருத்து என்னவென்பதை சேர்த்துச் சொல்லியிருந்தால், இன்னமும் நன்றாக இருந்திருக்குமே!

    ஜவஹர்லால் என்ற பெயரில், தன்னுடைய ப்ரொபைல் விவரமோ, பதிவர் அடையாளமோ இல்லாமல் இருப்பதனால் அவருடைய இரு பின்னூட்டங்கள் நிராகரிக்கப் படுகின்றன. அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் பின்னூட்டங்களை ஏற்பதற்கில்லை.Sorry!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!