இருளில் இருந்து வெளிச்சத்திற்கு ....!


பழக்கங்களின் அடிமையாகவே இருக்கும் போது, மாற்றம் என்கிற சொல் காதில் விழுந்தாலே நமக்கு அடிவயிற்றைப் பிசைய ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் பிரபஞ்ச சக்தி நம்மைச் சும்மா விடுவதில்லை. கன்றுக்குட்டி வரமாட்டேனென்று நான்கு கால்களையும் விறைத்துக் கொண்டு முரண்டு பிடிக்கும் போது, உடையவன் ஒரு குச்சியினால் கொஞ்சம் அடி, கொஞ்சம் கொஞ்சல் இப்படி தாஜாபண்ணுகிறார் போலேயும், செம அடி கிடைக்கும் என்று பயம் காட்டுகிறார் போலேயும், கூட்டிச் செல்வது போல, நம்முடைய பகுத்தறிவு, விதண்டாவாதங்கள். கோழைத்தனங்கள், வீர தீர சாகசங்கள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒரு செல் என்கிற நிலையிலிருந்து, இன்றைக்கு ஆறறிவு படைத்த, பகுத்தறியும் தன்மை உடையதாய் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நிகழ்கிற மாற்றத்தில் நாம் ஒரு அங்கமாக இருக்கிறோமே தவிர, நாமே மாற்றத்திற்கான பிரதானமான காரணமாக இருப்பதில்லை! Every Truth awaits its time! ஒவ்வொரு உண்மையும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்று சொல்வதைப் போலவே, ஒவ்வொரு மாற்றமும், அதன் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது என்று சொல்வது கூட சரிதான்!

அடுத்து பழக்கங்களின் பிடியில் சிக்கி ஒரு மாதிரி அடிமைத்தனத்திற்குப் பழக்கப் பட்டு விட்ட நிலையில், நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்கிற மாதிரி சோம்பேறித்தனம், முதலில் தீனமான கெஞ்சலாக ஆரம்பித்து, நான் ஏன் மாற வேண்டும் நான் மாறவே மாட்டேன் என்கிற பிடிவாதமாக மாறுகிற நிலைக்கு முற்றிப் போவதையும் பார்த்திருக்கிறோம்.. அப்படி முற்றிப் போனதைக் கால ஓட்டம்  கொஞ்சம் கூட தயவில்லாமல் அடித்துக் கொண்டு போய்விடுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்கும் அடுத்து, மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், அதை எதிர்த்தே தீருவேன் என்கிற பிடிவாதத்தின் உச்சகட்டம்.இடையில் எத்தனை எத்தனையோ படி நிலைகள்.அத்தனைக்குள்ளிருந்தும், பிரபஞ்ச சக்தி நம்மை ஒரு உறுதியான  மாற்றத்திற்குத் தயார் செய்து கொண்டே இருக்கிறது.

முப்பது வருடங்கள் ஒரு பொதுத்துறை வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஏகப்பட்ட முரண்பாடுகளை, மாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாத மன நிலைகளை, நிர்வாகத்தின் தலை முதல் கால் வரையில் பார்த்து சலித்து, ஒரு கட்டத்தில் இங்கே வேலை செய்வதை விட மாடு மேய்க்கிற வேலை கிடைத்தாலும் அதுவே சொர்க்கம் என்று முடிவெடுத்து வெளியே வந்தாயிற்று.

வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கையில் தான், மாற்றம் என்பது இருமுனையிலும் கூர்மையான கத்தி, எவரெவரோ,எது எதுவோ மாறவில்லை என்று போராடிக் கொண்டிருந்த போது,தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞையை இழந்து நிராயுதபாணியாய் நின்றது புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது போல, வெற்றிகளை விட தோல்விகளே மாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும்.இப்படிச் சொல்லும் பொது, தோல்வியே வெற்றிக்குத் தானாக அழைத்துக் கொண்டுபோகும் என்பதல்ல. தோல்வி தந்த பாடத்தைச் சரியாகக் கற்றுக் கொண்டால், அந்தப் படிப்பினையே வெற்றிக்கான ஆதாரமாக, படியாக இருப்பதென்னவோ உண்மை.

ஒரு வலைக் குழுமத்தில் ஸ்ரீ அரவிந்தரின் இந்த செய்தியைப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. படித்ததும் ஒரு தெளிவான சிந்தனைக்கு வழியும் பிறந்ததை உணர்ந்தேன் என்று சொன்னால் மிகையானது இல்லை.

WORK AS A TEST

Yes, obviously, that is one great utility of work that it tests the nature and puts the sadhak in front of the defects of his outer being which might otherwise escape him.

- Sri Aurobindo

ஸ்ரீ அரவிந்த அன்னை இந்த வேலை செய்வதில் உள்ள சூக்குமத்தை சுருக்கமாக எப்படிச் சொல்கிறார் என்பதையும் பாருங்கள்!


"There is no bad work - there are only bad workers. All work is good when you know how to do it in the right way. Everything. And it is a kind of communion. If you are fortunate enough to be conscious of an inner light, you will see that in your manual work, it is as if you called the Divine down into things; then the communion becomes very concrete, there is a whole world to be discovered, it is marvelous."

- The Mother

மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே
தான் இருக்கிறது.விதை முளைப்பதற்கு உதவியாக நம்முடைய  அணுகுமுறை, மன நிலை பொருந்தி வருகிறதா என்பது தான் கேள்வி.

நானே நானோ? மெல்ல மெல்ல மாறினேனோ? 
 
மாறித் தான் ஆக வேண்டும்! பழைய நினைப்பு எதுவும் நடவாது! தானாய் எல்லாம் மாறும் என்று சோம்பிக் கிடப்பதும் உதவாது.

எத்தகைய சூழ்நிலை, வேலை என்பதல்ல-அதை எப்படிப் பட்ட மனோபாவத்துடன் நாம் செய்கிறோம் என்பதே வேலையின் உண்மையான பயனை தீர்மானிக்கிறது.

குப்பை அள்ளுவதானாலும், அரசாட்சி செய்வதானாலும் மாற்றத்தின் அடிப்படை விதி இது தான். 

இந்த ஞானம் வந்த பிறகு வேறென்ன வேண்டும்?

இப்படி ஒரு தெளிவு, ஞானம் வருவதற்கே முதலில் தெய்வத்தின் கருணை இருந்தாக வேண்டும். அப்படி வருகிற ஞானம், வைகையில் வெள்ளம் வந்து அடுத்த கணமே காணாமல் போய்விடுகிற மாதிரி இல்லாமல், நிலைத்து நிற்பதற்கும் கூட தெய்வம் தான் துணை நிற்க வேண்டும்.

அதனால் தான் தமஸோ மா ஜ்யோதிர்  கமய என்று இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் என்று  இறையருளை இறைஞ்சுகிற வழக்கம் இங்கே தொன்று தொட்டு இருக்கிறது. 

அசதோ  மா சத் கமய
 
தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

ஓம் ஷாந்தி ஷாந்தி  ஷாந்தி:
 
 

3 comments:

  1. //இப்படி ஒரு தெளிவு, ஞானம் வருவதற்கே முதலில் தெய்வத்தின் கருணை இருந்தாக வேண்டும். அப்படி வருகிற ஞானம், வைகையில் வெள்ளம் வந்து அடுத்த கணமே காணாமல் போய்விடுகிற மாதிரி இல்லாமல், நிலைத்து நிற்பதற்கும் கூட தெய்வம் தான் துணை நிற்க வேண்டும்.//

    மனதை கொஞ்சம் கொஞ்சமாக எதிர்மறை விசயங்களில் இருந்து நடுநிலையாக இருக்க பழகவேண்டும். பலவிதமாக நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்..

    இதைப்பற்றியும், இந்த இடுகையின் தொடர்ச்சியாக பலவிசயங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்...!

    ReplyDelete
  2. வாருங்கள் சிவா!

    யாருமே கெட்டவனாகவே இருந்து விட விரும்புவதில்லை. ஆனாலும் கெட்டுப் போகிறார்கள், தங்களைச் சுற்றி இருப்பவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று யோசித்துப் பாருங்கள்! இந்த வாழ்க்கையில் நாம் பார்க்கிற அத்தனையும் ஒரு இரட்டைத் தன்மை கொண்டதாக இருக்கிறது. அந்த இரட்டைத் தன்மை கொண்ட நிலையில், எதிர்மறையான எண்ணங்கள், விஷயங்கள் என்று நீங்கள் சொல்கிற ஒன்று அவ்வளவு எளிதாகத் தள்ளி விட்டுப் போகிற விஷயம் இல்லை! இந்த இரட்டைத்தன்மைக்கு நடுப்பட்ட நிலைமை அல்லது நடுநிலைமை என்று ஒன்று இல்லை, அல்லது அது சரியான தீர்வு இல்லை.

    முதலில் இந்த இரட்டைத் தன்மையை நாம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்தப் பதிவுகளில் கொஞ்சம் பார்த்தவிட்டு அப்புறம் அதைத் தொடர்ந்து கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேளுங்கள், பேசுவோம்!

    கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்!
    http://consenttobenothing.blogspot.com/2009/02/blog-post_27.html

    கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!
    http://consenttobenothing.blogspot.com/2009/03/blog-post.html

    ReplyDelete
  3. ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் சுய சரிதை ஒரு தொடராக
    http://www.virutcham.com/?p=3613

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!