"எலே வாத்திச்சி! இதான் அ'னா,,,!


திரைப் படத்துக்கு மட்டும் தான் ட்ரைலர் இருக்க வேண்டுமா? பதிவுக்கும் கூட ட்ரைலர் ஓட்டிப் பார்க்கலாமே!

கிழம்பூ என்று ஒரு படம்! AVM ராஜன், புஷ்பலதா நடித்த படம் என்ற நினைவு. அதில் சோ ஒரு படிக்காத பண்ணையாராக வருவார். புஷ்பலதா, படிக்காத முட்டாள் என்று அவரைத் திட்டி விடுவார். பண்ணையாருக்கு ரோஷம் வந்து, பாடம் படிக்கக் கிளம்புவார். வாத்திச்சியாக ஆச்சி மனோரமா! ஆனா ஆவன்னா சொல்லிக்  கொடுக்க ஆரம்பிப்பார். கரும் பலகையில் ஆனா என்று எழுதிக் காண்பிப்பார். சோவும் தன் முட்டைக் கண்களை உருட்டி விழித்து  அ'னா என்று சொல்லிக் கொண்டே  எதையோ கிறுக்குவார். வாத்தியாரம்மா பதறி, அப்படியில்லீங்க அ'னா, இப்படி எழுதணும் என்று அ'னா எழுதிக் காண்பிப்பார்! சோ தன் முட்டைக் கண்களை இன்னமும் அகல உருட்டி மறுபடியும் எதையோ கிறுக்கி அ'னா என்பார். நாலைந்து தரம் இப்படி வாத்திச்சி திருத்தவும், பண்ணையார் முழிகளை உருட்டி மிரட்டவும், கடைசியாக "எலே வாத்திச்சி! இதான் அ'னா என்பார். வாத்திச்சியும் நடுநடுங்கி, ஆமாங்க இது தான்  அ'னா என்று ஒத்துப் பாடுவார்!


செப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும் பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்து விட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

டாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமையே மலர் தூவி வணங்கி விட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம்.


ஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக் கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லி விடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுத பூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட! 
கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.

இப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே! எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும்!  
தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக் கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதே கூடத் தவறல்லவா?

இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா?' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை வேண்டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல் பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)!

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, "ஃபிரண்ட்சை  மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல!

இதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை மின்வாரியம், தொலைத் தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல் கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால்  மட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.

இதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான்  வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை.  சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.

ஞாயிற்றுக் கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும்! இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற அசட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.

நமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம்..

ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து!


இது இன்றைய தினமணி நாளிதழின் தலையங்கம்! அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், காதலர் தினம், ஆட்டுக் குட்டி தினம், இப்படி ஏதேதோ தினங்களை அன்றைக்கு ஒரு நாள் மட்டும் நினைத்துப் பார்த்தால் மட்டும் போதுமா? வெறும் சாங்கியமாக, மூடத் தனமாக மாறிவிடாதா என்ற ஆதங்கத்தைத் தான் ஆசிரியர் தினப் பதிவில் கொட்டி இருந்தேன்.

ஆசிரியனை வணங்குவதென்பது, அந்த ஒரு நாளில் மட்டும் தானா? இந்தக் கேள்வி ஒரு புறம்! ஆசிரியன் என்று சொல்லிக் கொள்வதனால் மட்டுமே ஒருவர் ஆசிரியனாகி விட முடியுமா? வணங்கப் படும் தகுதி தானே வந்து விடுமா? அப்படி வணங்கப் பெறும் நிலைக்கும் ஒரு வரையறை, தகுதி வேண்டாமா என்ற கேள்வியிலேயே, இன்றைய ஆசிரியர்கள் பெரும்பாலானோர், தங்கள் பணிக்குத் தகுதியானவர்களாக இல்லை என்பதும், தகுதி உள்ள சிலரும், பணியில் சாதி, அரசியல் குறுக்கீடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், ஆசிரியப் பணியில் இருந்து விலகி வேறு துறைக்குச் செல்லவே விரும்புகிறார்கள் என்று சமீபத்தில் படித்த ஒரு புள்ளி விவரமும் வெளிப்படுத்துகிற பதில் இருக்கிறதே!

ஆசிரியர்கள், நாளைய குடிமகன்களை உருவாக்கும் உன்னதமான பணியைச் செய்பவர்கள் என்ற வேலைவிவரணம் எல்லாம் சரிதான்!  கேள்வி அந்த விவரணத்தைப் பற்றியதல்ல, எத்தனை பேர் அந்த வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள் என்பது தான்!

இன்றைக்கு எத்தனை ஆசிரியர்கள் ட்ரைலரில் பார்த்தோமே, அதில்  வரும் வாத்திச்சி மாதிரி இல்லாமல், சுய சிந்தனையுடன், நேர்மையுடன், நெஞ்சில் உரத்துடன் தங்கள் தொழிலை செய்து வருகிறார்கள்? கல்வி அறத்தினால் சோபிக்கிறது என்பதைக் கற்றுணர்ந்தது மட்டுமல்ல செயலிலும் காட்டிய மண் இது! அதை அறிந்து வைத்திருக்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர்?

இப்போது சொல்லுங்கள் இப்போதைய கல்வி அறத்தினால் சோபிக்கிறதா? அல்லது எல்லா மட்டங்களிலும் "காசே தான் கடவுளடா" என்றிருக்கிறதா?  


"ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது."



சென்ற வருடம் வெளியான பதிவுதான்! ஆனாலும், இப்போதும் உரத்த சிந்தனையாக, நல்லாசிரியரை எதிர்பார்த்து எழுதப்பட்ட நல்ல பதிவாக நான் நினைப்பது இந்தப் பதிவைத் தான்!


 

 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!