நம்பிக்கையோடு இரு, ...எல்லாம் கை கூடும்!

ஸ்ரீ அன்னை சாரதாமணி தேவியுடன் சகோதரி நிவேதிதை


"
நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, தீயவர்கள் என்று கருதப் படுகிறவர்களுக்கும், நான் தாயாக இருக்கிறேன்.



உனக்கு ஏதாவது இடைஞ்சல், பிரச்சினை என்று வரும் போது, என் அன்னை இருக்கிறாள், அவள் பார்த்துக் கொள்வாள் என்று நம்பிக்கையோடு இரு."

"I am the mother of the wicked,
as I am the mother of the virtuous.
Whenever you are in distress,
just say to yourself, 'I have a mother'

இருபத்திரண்டு  வருடங்களுக்கு முன்னால், கன்யாகுமரி ஸ்ரீ விவேகானந்தர் நினைவுப் பாறைக்குச் சென்று திரும்புகையில், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அன்னை சாரதாமணி இவர்களுடைய அமுத மொழிகளை மிக நேர்த்தியாக அலுமினியத் தகட்டில் படங்களுடன் பொறித்த சிலவற்றை வாங்கி வைத்திருந்தேன்.  

அதில் மேலே கண்டது ஸ்ரீ அன்னை சாரதாமணியினுடைய அமுத மொழி.

ஸ்ரீ அரவிந்தராலும், பிறகு எல்லோராலும் அன்னை என்று அழைக்கப் பட்ட அற்புதப் பேரொளியைக் கண்டு கொள்கிற தருணம் நம்மில் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் தான், தேடி வருகிற இறையருளை உணராமல் இருக்கிறோம். அறியாமை, ஆர்வமின்மை, நானே எனதே என்று பழக்கங்களின் பிடியில் சிக்கி புலன்களுடைய அடிமையாகவே இருப்பது இப்படி, நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இறையருள், நம்மை விட்டு விலகுவதே இல்லை; அதே நேரம், நம் மீது நம் விருப்பத்திற்கு மாறாகத் தன்னை திணித்துக் கொள்வதும் இல்லை. நாமாக, விரும்பி அழைப்பதற்காக, ஏற்றுக் கொள்வதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் முடிவெடுக்கிற சுதந்திரத்தை நமக்களித்து விட்டு, அந்தந்த முடிவுக்குத் தகுந்த பலனையும் அனுபவத்தையும் தந்து கொண்டே, அதிலிருந்தே, உள்ளார்ந்த ஒரு ஆன்மீக அனுபவத்திற்கான பாதையையும் திறந்து வைக்கிறது. நம்மை அறியாமலேயே, அல்லதே அறிந்தே கூடக் கிணற்றுக்குள் தான் விழுவேன் என்று பிடிவாதமாக விழுந்தாலும் கூட,கிணற்றில் விழுந்த பிறகு அதிலிருந்தே வேறொரு பாதையில் இறையருள் வழிநடத்துகிறது.

நல்லவை என்பன மட்டும் அல்ல, மிகத் தீயவை என்று சொல்லப் படுபவையும், தெய்வ சித்தத்தின் படி இயங்கும் கருவிகளாகவே இருப்பதை அப்போது தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. "வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்று அனுபவித்துப் பாடிய வரிகளின் பொருள் அப்போது தான் அவரவர் பக்குவத்துக்கேற்றபடி புரிகிறது.

இப்படித்தான் 1965-66 களிலேயே ஸ்ரீ அரவிந்த அன்னை, என்னுடைய அன்னையாகவே தோன்றித் தன்னை அறிவித்துக் கொண்டாலும், என் ஈர்ப்பு, கவனமெல்லாம் வேறு எதில் எதிலேயோ இருந்ததால், தேடி வந்த அன்னையை அறியவில்லை. ஸ்ரீ அரவிந்தரோடு அணுக்கமாக இருந்த நண்பர்களே `ஆரம்ப காலங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையை 'அன்னையாக' அறிந்திருக்கவில்லை. அவரும் ஏதோ தங்களைப் போலவே, ஸ்ரீ அரவிந்தருடைய இன்னொரு சீடர் என்ற அளவிலே தான் நினைத்திருந்தார்கள்.

ஸ்ரீ அரவிந்தர் ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில் அன்னையைப் பற்றி, அவருடைய அவதார நோக்கங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். 'மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்காதே, அந்த பராசக்தியே தான் இங்கே மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாள்' என்று உறுதியாகச் சொல்கிறார். ஆசிரமத்தில் இருக்கும் இந்த அன்னையைப் பற்றியா சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்று உறுதிபடச் சொல்கிறார்.

"அன்னை" என்ற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதங்களின் [மொத்தம் ஆறு] தொகுப்பு, அதையொட்டி சாதகர்களுக்கு எழுந்த கேள்விகளுக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பதில்கள், இவைகளைத் தமிழில் தொடர்ந்து தரவும் விருப்பம். ஸ்ரீ அன்னை திருவுள்ளம் உகந்தால் அதுவும் கை கூடும்.

இருபது, இருபத்திரண்டு வருடங்களுக்குப் பின்னால், வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்கள் தானாகவே, ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அழைத்துச் செல்வதாக அமைந்தன. அப்போதும் கூட, ஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் அன்னையிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன் என்று சொல்ல முடியாது.

அப்போது மட்டுமில்லை, இப்போதும் கூடத்தான் என்று உள்ளேயிருந்து ஒரு மூலையில் ஒரு குரல் ஒலிக்கிறது அதைப் பொருட்படுத்தாதே அன்னையிடம் உன்னை முழுமையாக சமர்ப்பணம் செய்து கொள்ளத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இரு, ஆக வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள் என்றும் ஒரு நம்பிக்கைக் கீற்று அவநம்பிக்கையை, என்னை அன்னை ஏற்றுக் கொள்வாளா, எனக்கு அருள் புரிவாளா என்ற சந்தேகங்களை விரட்டி அடித்துக் கொண்டும் இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை தன்னை ஒரு போதும் ஒரு குருவாக அறிவித்துக் கொண்டதில்லை. மாறாக, தன்னிடம் வருபவர்களுக்குச் சொன்னதெல்லாம், இது தான்:  

"என்னிடம் வரும் போது, அன்னையிடத்திலே தானாகவே ஆர்வத்தோடு ஓடி வருகிற குழந்தையின் மனப்பாங்கோடு வா. அப்படி வருவது, எண்ணற்ற தடைகள், கஷ்டங்களில் இருந்து உன்னைக் காப்பாற்றும்"


"Try to be spontaneous and simple like a child in your relation with me- it will save you from many difficulties.”- The Mother

"Never forget that you are not alone.
The Divine is with you helping and guiding you.
He is the companion who never fails, the friend whose love comforts and strengthens.
The more you feel lonely, the more you are ready to perceive His luminous Presence.
Have faith and He will do everything for you."
-The Mother
27 September 1951

தனித்து விடப்பட்டதாகவோ, கைவிடப்பட்டதாகவோ, ஒருபோதும் எண்ணாதே; ஏனெனில் தெய்வீக அருள் உன்னோடு எப்போதும் பிரியாமல் இருக்கிறது. உன்னை வழி நடத்துகிறது,துணையாக வருகிறது. உன்னை விட்டு ஒருபோதும் பிரியாத துணையாக, உற்ற நண்பனின் இதமான துணையாக, உன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.  

தனித்துவிடப்பட்டதாக, அல்லது தனியாக இருப்பதாக நீ கருதும் நேரம், தெய்வீக அருளின் ஒளியைப் பெறுவதற்குச் சித்தமாய் இருக்கிறாய். நம்பிக்கையோடு இரு, எல்லாம் கை கூடும் என்கிறார் ஸ்ரீ அன்னை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம், ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். பஞ்சதந்திரக்கதைகளில் வருகிற அந்தணன், கதை சொல்லியே முட்டாள் ராஜ குமாரர்களைப் படிப்பிக்க வைத்தது போலவே, எனக்கும் என்னுடைய சொந்த முட்டாள்தனங்களில் இருந்தே ஸ்ரீ அன்னை பாடம் நடத்திக் கொண்டிருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
நன்றியோடு வணங்குகிறேன்.

2009 மார்ச் மாதம் எழுதியதன் மீள்பதிவு, சிறு மாற்றங்களுடன்.

19 comments:

  1. //நம்பிக்கையோடு இரு, ...எல்லாம் கை கூடும்!//


    பக்கத்துவீட்ல ஒருத்தர், நிச்சயம் ஆஞ்சிலினாஜூலி வந்து என்னிடம் ஐ லவ் யூ சொல்லுவாள்னு நம்பிக்கையோட இருக்காரு, அவருக்கு இந்த பதிவை டெடிக்கேட் பண்ணட்டுமா!?

    ReplyDelete
  2. //எனக்கும் என்னுடைய சொந்த முட்டாள்தனங்களில் இருந்தே ஸ்ரீ அன்னை பாடம் நடத்திக் கொண்டிருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.//

    அப்ப ரைட்டு, எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை!

    ReplyDelete
  3. எனக்குப் பிடித்த மாதிரியான பதிவுக்கு நன்றி சார் :) எனக்காக வந்த செய்தி போல இருக்கு.

    //இறையருள், நம்மை விட்டு விலகுவதே இல்லை; அதே நேரம், நம் மீது நம் விருப்பத்திற்கு மாறாகத் தன்னை திணித்துக் கொள்வதும் இல்லை. நாமாக, விரும்பி அழைப்பதற்காக, ஏற்றுக் கொள்வதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறது.//

    சரியாகச் சொன்னீர்கள். அம்மான்னா அம்மாதான்! அன்னையின் திருவடிகள் சரணம்.

    ReplyDelete
  4. ஸ்ரீ அரவிந்த அன்னையை, ஏற்றுக் கொள்கிறவர்களிடம் ஒரு பொதுவான ஆச்சரியம் அல்லது அனுபவம் இருப்பதை நான் நிறையத் தருணங்களில் அனுபவித்திருக்கிறேன் அம்மா! உங்களுக்காகவே சொல்லப்பட்டது போல நீங்கள் உணர்ந்ததில் ஆச்சரியமே இல்லை!

    என்றோ வேறு எவருக்கோ, எதோ ஒரு விஷயத்தைத் தொட்டுச் சொன்ன ஸ்ரீ அன்னையின் வார்த்தைகள், உரையாடல்கள், நாம் நமது பிரச்சினைக்காகத் தேடிக் கொண்டிருக்கும் தீர்வாக, பதிலாக அமைந்துவிடுவது தான் அது. Occult என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம் தான்! ஆனால் அதையும் தாண்டிய ஒரு நேரடித் தொடர்பாக, செய்தியாக ஒரு காரணத்தோடுதான் அவை வருவதை அனுபவித்துத் தான் தெரிந்து கொள்ள முடியும்.

    இந்தப் பதிவே மார்ச் 2009 இல் எழுதியதுதான்! இன்றைக்கு நான் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையில், கண் முன் நடந்துகொண்டிருப்பது கொஞ்சம் மனத்தளர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரம், இந்தப்பதிவு மிகத் தற்செயலாகக் கண்ணில் பட்டது. "நம்பிக்கையோடு இரு......எல்லாம் கை கூடும்" என்ற தலைப்பே என் மன உழட்டல்களுக்கு மருந்தாகவும், பதிலாகவும் இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?

    அதைத் தொடர்ந்து எழுந்த சிந்தனை, பிரார்த்தனை தனி விஷயம்! " நான் உன்னோடு இருக்கிறேன், கவலை வேண்டாம்" என்று நமக்குள் இருந்தே வரும் இறையருளின் குரல், துணையாகவும் வழியாகவும் இருப்பதை நாம் நமக்கே அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

    பூரணமான சரணாகதியை நாம் இன்னமும் செய்யவில்லை, அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும் என்று நினைவு படுத்துகிற விதமாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  5. வால்ஸ்!

    நீண்ட நாட்களுக்குப் பின்னால் இந்தப் பக்கம் வந்து கும்மியடிக்க இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கிறது!

    :-))

    ஏஞ்செலினா ஜூலி என்ன, அவங்க அம்மாவுக்கே ஜொள் விட்டு, ஐ லவ் யூன்னு சொல்வாருன்னு காத்திருக்கிறவருக்கு நிச்சயமாக இந்தப்பதிவை டெடிகேட் செய்து விடுங்கள்! எனக்கென்னவோ, அது நீங்கள் தான் என்று பட்சி சொல்கிறது!

    //எனக்கும் என்னுடைய சொந்த முட்டாள்தனங்களில் இருந்தே ஸ்ரீ அன்னை பாடம் நடத்திக் கொண்டிருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.//

    அப்ப ரைட்டு, எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை!

    அது எப்படி சம்பந்தமில்லாமல் போகும் வால்ஸ்? தெரிய வேண்டியது, அதன் உரிய தருணத்தில் மட்டும் தானே தெரிய வரும்!

    ReplyDelete
  6. // நமக்குள் இருந்தே வரும் இறையருளின் குரல்,//

    உள்ளுக்குள்ளே ஒரு குரல்ன்னு ஒரு புத்தகம் இருக்கு சார், கோபிகிருஷ்ணா எழுதியது, வாங்கி படியுங்க! :)

    ReplyDelete
  7. //தெரிய வேண்டியது, அதன் உரிய தருணத்தில் மட்டும் தானே தெரிய வரும்! //


    நான் எனக்கான தருணத்தை உருவாக்குபவன், காத்திருப்பவன் அல்ல!
    தானா கிடைக்கிறதுல கிக் இல்ல சார், எதுலயும் ஒரு சேலஞ்ச் இருக்கனும் எனக்கு!

    ReplyDelete
  8. தனித்து விடப்பட்டதாகவோ, கைவிடப்பட்டதாகவோ, ஒருபோதும் எண்ணாதே; ஏனெனில் தெய்வீக அருள் உன்னோடு எப்போதும் பிரியாமல் இருக்கிறது. உன்னை வழி நடத்துகிறது,துணையாக வருகிறது.

    still today this golden words working.

    whatever mahans sayings ,that wil not waste words - once again repeated.

    ReplyDelete
  9. ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பதில்கள், இவைகளைத் தமிழில் தொடர்ந்து தரவும் விருப்பம்.

    pl do it. it will usefull to readers.

    ReplyDelete
  10. வால்ஸ்!

    உள்ளுக்குள்ளே ஒரு குரல், தனக்குத் தானே பேசிக் கொள்வது, அம்மனோ சாமியோ என்று பாடினால் ஆடுவது இதற்கெல்லாம் புத்தகம் படித்துத் தான் என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டிய நிலையைக் கடந்து வெகு காலம் ஆயிற்று. ஆழ்மனம் என்று சொல்லப் படுகிற ஒன்றில் இருந்து வருகிற குரலுக்கும், வெளியே ஆர்ப்பரிக்கிற மனக்குழப்பங்களில் இருந்து கேட்கிற மாதிரித் தோன்றுவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு!

    எதற்கெடுத்தாலும் Challenge? நானும் ஒருகாலத்தில் அப்படித் தான் கிளர்ச்சிக் காரனாக இருந்தேன்!
    சிவாஜி-வாணிஸ்ரீ நடித்த நிறைகுடம் படத்தை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும்!

    ReplyDelete
  11. வணக்கம் திரு பாலு சார்!

    நீங்கள் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய "அன்னை" புத்தகத்தைக் கட்டாயம் வாசித்துப் பார்க்க வேண்டும்.இந்தப் புத்தகத்தை ஆசிரம வெளியீடாக ஏற்கெனெவே தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.

    நான் சொல்ல வந்தது, என்னுடை அனுபவங்களில் இருந்து கண்டுகொண்டதும், அதில் சொல்லக் கூடியவற்றைப் பற்றியும் மட்டும் தான். மொழிபெயர்ப்பு நிபுணத்துவம் எனக்கு இல்லை.

    ReplyDelete
  12. //உள்ளுக்குள்ளே ஒரு குரல், தனக்குத் தானே பேசிக் கொள்வது, //


    // ஆழ்மனம் என்று சொல்லப் படுகிற ஒன்றில் இருந்து வருகிற குரலுக்கும், வெளியே ஆர்ப்பரிக்கிற மனக்குழப்பங்களில் இருந்து கேட்கிற மாதிரித் தோன்றுவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு!//

    உங்கள் ஆழ்மனம் என்பது நீங்கள் இல்லையா?, அதை வேறு யாரோ இயக்குவது போல் நினைக்கிறீர்களா?
    குழப்பம் அனைத்தும் தீர்ந்த மனிதரா நீங்கள், நான் என்ற ஈகோவை இழந்தவரா நீங்கள்?

    ஆழ்மனதில் தோன்றுவதை அப்படியே நம்புவதற்கும், அதையும் கேள்விக்குள்ளாக்குவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? குழப்பம் என்பது உண்மையானல் தெளிவு என்பது எங்கே!?

    ReplyDelete
  13. //எதற்கெடுத்தாலும் Challenge? நானும் ஒருகாலத்தில் அப்படித் தான் கிளர்ச்சிக் காரனாக இருந்தேன்!
    சிவாஜி-வாணிஸ்ரீ நடித்த நிறைகுடம் படத்தை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும்! //


    என் வாழ்க்கையை நான் வாழ்வது தானே சரி, அது எனக்கும் என் சூழலும் அமைந்த சேலஞ்ச், இதை தான் அனைவரும் செய்து கொண்டிருக்கிறோம், நான் ஒத்து கொள்கிறேன், அனைவரும் அதையே செய்வார்கள் என நான் எதிர்பார்ப்பதில்லை.

    விந்தனுவின் சினைதேடலில் இருந்து உடல் செல்கள் அனைத்தும் சாகும் வரை அனைத்துமே சேலஞ்ச் தான், ஏன் அவ்வளவு, நான் சேலஞ்சே இல்லாமல் வாழ்வேன் என்பதும் சேலஞ்ச் தான்!

    ReplyDelete
  14. நம்முடைய மனம் என்பது போலவே பிரபஞ்ச மனம் என்றும் ஒன்று இருப்பதாக ஒரு கருத்து உண்டு வால்ஸ்!

    நான் என்று உணர்வதும், நான் இந்தப் பிரபஞ்சத்தின் கூறு என்று உணர்வதும் வெவ்வேறான நிலை. இது கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டிய விஷயம். எதுவானாலும் கேள்விக்குள்ளாக்குவதில் தவறே இல்லை, ஆனால் நான் பாட்டுக்குக் கேள்வி கேட்டுக் கொண்டு போய்க்கொண்டே இருப்பேன், பதிலைத் தேட மாட்டேன் என்பது சரிதானா?

    ஈகோ-தன்முனைப்பு என்று எதைச்சொல்கிறோம்? அதைப்பற்றி எந்த அளவுக்குப்புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதும் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டிய விஷயம் தான். உங்கள் கேள்விக்கு நேரடியான பதில், நான் ஈகோவை, அதாவது என்னுடைய சுயம் என்பதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதான ஒன்றை இழந்து விடவில்லை..

    நீங்கள் சவால் என்று சொல்வதை இருள்-வெளிச்சம், நம்பிக்கை-அவநம்பிக்கை இப்படி நேரெதிரான இரண்டுவிதப் போக்குகளுக்கிடையிலான இயக்கமாகத் தான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. அவர்களிடம் தெய்வீக தன்மை உள்ளது, அவர்கள் சொன்னால் அப்படியே கேட்கனும் போல இருக்கு என்ற நண்பரிடம், என் வீட்டு நாய் நான் சிட் என்றால் உட்காரும் என்றேன்.

    பிரபஞ்சமனம் என்பது ஒரு நம்பிக்கையா, உண்மையா!?

    கேள்வி கேட்பது மட்டுமே என் குணம் என்றில்லை, நான் உணர்ந்த பதிலுக்கும் உங்களின் பதிலுக்கும் உண்டான முரண்பாடுகளை அறியும் மற்றும் அதனை முன்வைத்து நடக்கும் விவாதம் தெளிவுறவே அன்றி முடிவு செய்ய அல்ல!

    சவால்-சவாலின்மையை யிங்-யாங்காக பார்க்க முடியாது, உலகில் அனைத்தும் ரெட்டை தன்மையுள்ளது என்ற கருத்து தர்க்கரீதியாக உடைக்க முடியும்!, ஆணுக்கு பெண் என்றால், அரவாணிக்கு இணை யார்!?

    பிரபஞ்சம் செய்த பிழை என்ன!?

    ReplyDelete
  16. வால்ஸ்!

    யிங்-யாங் இரட்டைத் தன்மையைக் கருத்து ரீதியாக உடைக்க முடியுமென்றால், உடைத்துக் காட்டுங்களேன்! உடைத்துக் காட்டுவதில் உண்மை இருக்குமென்றால், நானும் உங்கள் கட்சிக்கு வந்துவிட்டுப் போகிறேன், அவ்வளவுதானே!

    Freaks விபத்து அல்லது குழப்பம் என்பது அரவாணிகளைப் போலவே இயற்கையில் தற்செயலானது, மிகச் சொற்பமான விகிதத்தை வைத்து எதை நிரூபிக்க முயல்கிறீர்கள்?

    ReplyDelete
  17. தன்னை தானே உற்பத்தி செய்யும் செல்லும் ஜோடி எங்கே!?

    பூமிக்கு இரவு பகல் உண்டு, சூரியனுக்கு என்று இரவு!?

    உலகம் ஒற்றை தன்மையில் தான் ஆரம்பித்தது, தேவைக்கு தான் ஜோடியே தவிர, இரட்டை தன்மையே ஆதாரநிலை அல்ல!

    ReplyDelete
  18. வால்ஸ்!

    பட்டாசு மாதிரிக் கேள்விகளை சரவெடிகளாக வெடிப்பதற்கு முன்னால்,கொஞ்சம் வாசிப்பதைக் கூட்டிக் கொள்ளவேண்டும்! சூரியனுக்குள்ளும் கரும்புள்ளிகள் உண்டு! நம்முடைய இரவு மாதிரியே அச்சு அசலாக இருக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது?

    தவிர நட்சத்திரங்களே இரட்டைகளாக இருப்பது அறிவியலில் ஒரு அடிப்படை உண்மை. அதாவது நம்முடைய சூரியனுக்கும் ஒரு இணை இருந்தது. எப்போதோ அது வெடித்துச் சிதறி, அதன் பகுதிகளே சூரியனைச் சுற்றிவரும் கோள்களாக (நம்முடைய பூமி உட்பட) ஆனதாக ஒரு கருத்தும் உண்டு

    ReplyDelete
  19. //பட்டாசு மாதிரிக் கேள்விகளை சரவெடிகளாக வெடிப்பதற்கு முன்னால்,கொஞ்சம் வாசிப்பதைக் கூட்டிக் கொள்ளவேண்டும்! //

    பதில்கள் புஷ்வானம் மாதிரி இல்லாமல் எதிர்பார்த்தே தான் கேள்விகள் பட்டாசாக வருகிறது!

    //தவிர நட்சத்திரங்களே
    இரட்டைகளாக இருப்பது அறிவியலில் ஒரு அடிப்படை உண்மை.//

    மனிதனில் நெட்டை குட்டை உண்டு, நான் கேட்டது அதையா அல்லது இணையா!?

    //அதாவது நம்முடைய சூரியனுக்கும் ஒரு இணை இருந்தது.//

    சூரியனுக்கும், குந்திக்கும் பிறந்த குழந்தை பேரு என்ன சார்?

    //எப்போதோ அது வெடித்துச் சிதறி, அதன் பகுதிகளே சூரியனைச் சுற்றிவரும் கோள்களாக (நம்முடைய பூமி உட்பட) ஆனதாக ஒரு கருத்தும் உண்டு //

    அப்படினா, சூரியன் இப்ப விடோயரா!?

    :)
    **

    இரட்டை தன்மையில் நேர் எதிர் குணங்கள் உடைய ஒன்று எப்படி ஒத்து போகுதுன்னு நிருப்பிப்பது தான் சார் லாஜிக். உதாரணம் யின் யான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!