2011 தேர்தல் களம்:மாற்றத்துக்குத் தயாராகுமா தமிழ்நாடு?


தினமணி தலையங்கம்:என்ன உறவோ, என்ன பிரிவோ!

First Published : 29 Mar 2011 04:19:48 AM IST



ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க் கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

மக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.
 

 இந்தியாவில் 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை அகற்றி சுலபமாக அந்நிய முதலீட்டுக்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தவும் முனைந்தது. அன்றுமுதல் பல விபரீதங்கள் இங்கே அரங்கேறி வருகின்றன. முறைகேடுகளுக்கும், மெகா ஊழல்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சர்வசாதாரணமாக சில நிறுவனங்களும் தனி நபர்களும் கொள்ளையடித்துக் கொள்வதற்குத்தான் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உதவி இருக்கின்றன என்கிற அச்சமும் சந்தேகமும் ஏற்படுகின்றன.

 காங்கிரஸ், ஐக்கிய கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஆட்சிகள் மாறினவே தவிர, காட்சிகள் மாறவில்லை. ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி சமீபத்திய "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வரை இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்திருக்கும் ஊழல்களின் மொத்த மதிப்பு, இந்தியாவின் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வரவை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் இங்கே நடக்கக் கூடாததெல்லாம் நடக்கிறது. எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் மக்கள் வரிப்பணமும் தேசத்தின் வளங்களும் கொள்ளை போகின்றனவோ என்கின்ற அச்சம் எழுகிறது.

அவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் ஒரு கபட நாடகம், ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படாமல், மக்கள் மன்றத்தின் கவனத்தைக் கவராமல் காதும்காதும் வைத்ததுபோல அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக எல்லாத் தளங்களிலும் நெருக்குதல் கொடுக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஒரு மிகப்பெரிய தர்ம சங்கடத்திலிருந்து அரசுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், நடந்திருப்பது அதுதான்.

சில ஆண்டுகளாகவே, குறிப்பாக, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தே எப்படியாவது ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா பிரச்னைக்கு ரியதாகத் தொடர்ந்து வருகிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது அரசு. அப்படிச் செய்தால் பல கோடி தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்காகப் பங்களிப்பாக நல்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து விளையாடிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழத்தானே செய்யும்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததும், அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்கள் போட்ட முதலை இழந்த சரித்திரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிற விபரீத யோசனை ஏற்கப்பட்டால், பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனங்களின் பங்குகளில் அது முதலீடு செய்யப்பட்டு கபளீகரம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி தவறுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கிறோம் என்று இதற்கு அரசு பதில் அளிக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் ""டிராய்'' ஒழுங்காற்று ஆணையம் இருந்தும் "ஸ்பெக்ட்ரம்' என்கிற பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லையா என்று பதில் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும்?

மசோதாவைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.

இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்!

சென்ற பதிவில் ஒரு பட்டதாரிப் பள்ளி ஆசிரியர், ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார், "நீ எழுதியிருக்கிறது ஏதாவது உனக்கே புரியுதா?" இங்கே படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிற பகுதிக்கே, சாதாரணமான விஷயங்களைக் கடப் புரிய வைக்கப் படாத பாடுபடவேண்டியிருக்கிற அவலத்தை இந்த பள்ளி வாத்தியார் மேம்போக்காக பதிவை மேய்ந்து விட்டு எழுப்பியிருந்த இந்தக் கேள்வி காட்டுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது இன்று இணையத்தில் காலையில் படித்த இன்றைய தினமணி நாளிதழ் தலையங்கமுமே கூட, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கிற விதமாக இருந்ததில் அதிக ஆச்சரியம் ஏற்படவில்லை.

நம்மில் பெரும்பாலானோர் பலவிஷயங்களில் பலதருணங்களில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்! இப்போது தினமணி தலையங்கத்தில் சொல்லியிருக்கிற விஷயம்.............!

ஆளும் கட்சியாக இருப்பவர்களும், எதிர்க்கட்சியாக இருப்பவர்களும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைகள், கோட்பாடுகள், அரசீயல் நிலைபாடுகள் இருக்கக் கூடாது என்று ஆரம்பிக்கிற இந்தத்  தலையங்கம், அப்படி இருந்தால் மட்டுமே "தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்" என்று முத்தாய்ப்பாகச்சொல்கிறது பாருங்கள், அங்கேதான் ஒரு அடிப்படையான கோளாறு இருப்பது தெரிகிறதா?.இப்போது நாம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிற பல சீரழிவிற்குக் காரணமாகவும் இந்தக் கோளாறு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

நேரு சோஷலிசம் பேசினார். ஆனால் அது அல்நாஷர் கதையில் வருகிற வெறும் பகற்கனவாக மட்டுமே இருந்தது.அவருக்குப் பின்னால்,சொற்பகாலமே பதவியில் இருந்தாலும்,ஒரு அடிப்படை மாற்றத்தை செயலில் காண்பித்த பிரதமராக லால்பஹதூர் சாஸ்திரி இருந்தார் என்பதையே நமக்கு நினைவு படுத்திக் கொண்டாக வேண்டிய தருணம் இது. சாஸ்திரியும் காங்கிரஸ் காரர்தான்! நேரு மாதிரியே, அவரும் சோஷலிசம் என்பதை ஏற்றுக் கொண்டவர்தான்! ஆனால், நேருவிடம் இல்லாத அசாத்தியத் துணிச்சல்,முதுகெலும்பு அவரிடம் இருந்தது. வெறும் வார்த்தைகளில் சோஷலிசம் பேசிக் கொண்டிருக்காமல், நடை முறைக்கு எது உதவும் என்பதில் ஒரு தெளிவு இருந்தது.

நேருவைச் சீனப் பூச்சாண்டி பயமுறுத்தியது போல சாஸ்திரியை பயமுறுத்தவில்லை! 1965 இந்திய பாகிஸ்தானியப் போரில் ஒரு  தெளிவான துணிச்சலான அரசியல் முடிவை சாஸ்திரி எடுத்தார், ஜெயித்தார்! சீனா, போரில் தலையிடுகிறவிதத்தில் பயமுறுத்திய போது அதற்கும் பதிலடி கொடுக்கிற விதத்தில் நிமிர்ந்து நின்றார்! சீனப் பூச்சாண்டி எடுபடவில்லை! சாஸ்திரி, நேரு, தலைமைப் பண்பு  என்ற குறியீட்டுச் சொற்களில் இந்தப் பக்கங்களில் தேடிப் பாருங்கள், நேற்றைய வரலாறு கொஞ்சம் பேசப் பட்டிருப்பதைப் படிக்கலாம்.

இந்த தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தவர்கள். ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற சாஸ்திரியின் முழக்கம், பசுமைப் புரட்சிக்கு முன்னோட்டமாக இருந்தது என்பதையும் இன்றைக்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதாலேயே எப்போதுமே அடித்துக் கொள்கிற கட்சிகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையையே தினமணி தலையங்கம் மறந்துவிட்டுப் பேசுகிற மாதிரித்தான் எனக்குப் படுகிறது. ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிக்கு ஒரு பொறுப்பான இடம், அங்கம் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் சீரழித்து ஊழல்மயமாக்கிய இந்திய அரசியலில், எதிர்க்கட்சி என்றால் எதிரிக் கட்சி, கொள்ளையில் மறைமுகக் கூட்டாளி என்ற மாதிரியாகிப் போனது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்தத்தலையங்கம் பேசுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

நேருவிடம் ஆயிரம் குறைகள் காண முடிந்தாலும், சில நல்ல அரசியல்ப
ண்
பாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். உதாரணமாக, வேண்டாத மருமகன் "பெரோஸ் காண்டி" (இந்திராவின் காதல் கணவர்!) நேருவை எரிச்சலூட்டுவதற்காகவே சில விஷயங்களைப் நாடாளுமன்றத்தில் பேசினாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பிரசுரிப்பதில், விமரிசிப்பதில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர் கொண்டுவந்த திருத்தம், பெரோஸ் காண்டி திருத்தம் என்றே அழைக்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஒரு உதாரணத்துக்கு சொல்ல முடியும்.ஆனால், அரசியல் நெறிகள், நாடாளுமன்ற நடைமுறைகள், மரபுகள், பத்திரிக்கை சுதந்திரம், நீதித்துறையில் குறுக்கீடு, ஜனாதிபதி பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே பயன்படுத்தியது என்று வரிசையாக அரசியல் சீரழிவுகள், ஊழல்கனின் ஊற்றுக்கண்ணாகவே இந்திராகாந்தி இருந்தார், அவரது வாரிசுகளும்அவரை மிஞ்சுகிற விதத்தில்தான் இருக்கிறார்கள் என்பது இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற விஷயம்.

இந்த தேசத்தின் விடிவுகாலம், காங்கிரசைத்தூக்கி எறிவதில்தான் இருக்கிறது!அப்படியானால், அதற்கு  மாற்று, பாரதீய ஜனதா கட்சிதான் என்று சொல்வதாக அர்த்தமில்லை. காங்கிரஸ் கட்சி அறுபதாண்டுகளில் அடைந்த சீரழிவை, பிஜேபி ஒரே ஒருதரம் ஆளும் கட்சியாக இருந்தபோதே கெட்டுச் சீரழிந்துவிட்டது என்பதைத்தான், தினமணித் தலையங்கத்தில் எப்படி இவர்கள் மறைமுகமாகக் கூட்டாளிகளாகிக் கொள்வார்கள் என்று காட்டுவதாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்!

இப்போதிருக்கும் தேர்தல் முறை அயோக்கியர்களுக்குமட்டுமே சாதகமானது. இதை சொல்வதில் எந்தத்தயக்கமும் எனக்கில்லை. இப்போது, உடனடித்தேவை தேர்தல் சீர்திருத்தங்கள் தான்!ஆனால், எல்லா அமைப்புக்களையும் ஊழல்மயப் படுத்தியிருக்கும் அரசியல் கட்சிகள் விடுவார்களா என்ன? எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்கக் கூட வழியில்லை, ஆனால், ஏதோ ஒரு கொள்ளியைவைத்துத் தலையைச் சொறிந்துகொள்கிற மாதிரியான சுதந்திரம் மட்டுமே இருக்கிறது.

அதனால் தான் கொழுந்துவிட்டு எரியும் கொள்ளியை விட்டு, கொஞ்சம் குறைந்துபோன கொள்ளியாக ஒருவித சாமர்த்தியம் லாவகத்தோடு நம்மைத் தொல்லைப்படுத்தவே அவதாரம் அரிதாரம் எடுத்திருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியிருக்கிறது.


காங்கிரசையும், அதன் கூட்டாளிகளையும் வருகிற தேர்தலில் புறக்கணிப்பது முதல் வேலை!

என்ன சொல்கிறீர்கள்?கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!

 

2 comments:

  1. தே மு தி க விஜயகாந்துக்கு எதிராக வாக்களியுங்கள்..

    ReplyDelete
  2. திரு ராஜேஷ்!

    தேதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம், சரி! அப்புறம் யாருக்கு எந்த அடிப்படையில் வாக்களிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அதையும் சேர்த்துச் சொல்லியிருந்தால், உங்களுடைய பின்னூட்டம் இன்னும் தெளிவாகவும், முழுமையாகவும் இருக்குமே!

    இந்தத்தேர்தல் முறையில் இருக்கும் மிக மோசமான அம்சம் என்னவென்று பார்த்தால், இங்கே ஒருத்தருக்கு விழுகிற வாக்குகள், அவரைப் பிடித்திருக்கிறது என்பதற்காக அல்லாமல், அவனை எனக்குப் பிடிக்காது அதனால் இவனுக்குக் குத்தினேன் ரேஞ்சில் விழுகிற நெகடிவ் ஓட்டுக்கள்!தேர்தலில் ஒரு பாசிடிவான மாற்றம் வேண்டுமானால், நெகடிவ் ஓட்டுக்களைத் தவிர்க்கவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இதற்கடுத்து எழுதிய பதிவில் என்னுடைய கருத்தை இன்னும் விரிவாகப்பதிவு செய்திருக்கிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!