கட்டாய ஓய்வும் தேர்தல் முடிவுகளும்!

"தமிழ்நாட்டு மக்கள் எனக்கு ஓய்வளித்திருக்கிறார்கள்" என்று மு.கருணாநிதி கருத்து தெரிவித்திருக்கிறார்.அறுபது வயது என்பது சாதாரணமாக உழைப்பவர்களுக்கு ஒய்வு பெறும் வயதாக இருக்கையில், அரசியல்வாதிகளுக்கு மட்டும் சாகிற வரையில், அல்லது  தேர்தலில் இப்படிக் கேவலமாகத் தோற்கடிக்கப் பட்டு வீட்டுக்கனுப்பினால் தான் ஒய்வு பெறுவதைப் பற்றியே அவர்கள் யோசிக்கிறார்கள் என்பதை, ஜனங்களாகிய நாம் ஏன் யோசிப்பதே இல்லை?

இங்கே இந்தியத்  தேர்தல் முறைகளில் இருக்கும் மிகப்பெரிய கோளாறு இது!ஐந்து முறை முதல்வர், வாழ்நாள் முதல்வர், நிரந்தர முதல்வர், பிரதமர் என்பதெல்லாம் இந்தியத்  திருநாட்டில் மட்டும் தான்! ஒருவர் இருமுறைக்கு  மேல், முக்கியப் பொறுப்புக்களில் பதவி வகிக்கக் கூடாது என்று  ஏன் விதிமுறை வகுக்கக் கூடாது?

"ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 2010 ஆம் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ஊழலாக வெடித்துக் கிளம்பிக் கொண்டு, ஊழல்கள் வெளிவரும் ஆண்டாக இருந்தது, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஐந்து மாநில தேர்தல்கள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன."


இப்படி எழுதி சரியாக இரண்டு மாதங்கள் ஆகின்றன!  ஒவ்வொரு தேர்தலும் தன்னளவில் சில பொதுவான அம்சங்களையும் அதே நேரத்தில் வித்தியாசமான அம்சங்களையும் கொண்டிருப்பது தெரிந்திருந்தாலும், இரண்டையும் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்வதில் தான் சரியான அணுகுமுறை, அனுமானங்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை இன்னொரு அழுத்தமாக இப்போது  நடந்து முடிந்த ஐந்து மாத சட்டசபைத்தேர்தல்கள் சொல்லியிருக்கும் செய்தி!

தேர்தல் முடியும் வரை ஒவ்வொருநாளும் நடப்பு நிலவரங்களைக் கவனித்துக் கொண்டே, இந்தியத் தேர்தல் முறைகளில் இருக்கும் கோளாறு,சீர் திருத்தங்களுக்கான அவசியம், அரசியல்வாதிகளைக் கொஞ்சம் அடக்கியே வைத்திருப்பதில் வாக்காளரின் தொடர்ந்த விழிப்புணர்வின் அவசியம் இவைகளையும் சேர்த்தே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் சொல்ல முயற்சித்திருந்தேன்.இதில் எந்த அளவுக்கு, என்னால் சொல்ல வந்த விஷயத்தைக் குழப்பமில்லாமல் எடுத்துச்சொல்ல முடிந்தது என்பதை வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தேர்தல் முடிவுகளைப் பற்றிய அனலிசிஸ் இனிமேல்தான் ஆரம்பிக்கவேண்டும்! அனலைஸ் செய்தால் தான், இந்தத் தேர்தலில் என்ன விசேஷமான பாடம் கற்றுக் கொள்வதற்கு இருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும்.

அப்படி அனலிசிஸ் செய்வதற்கு முன்னால், சி ஃபி செய்திகள் வலைத் தளத்தில் நந்தினி கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்த தொகுப்பு, தமிழகத் தேர்தல் களத்தை, இங்குள்ள தொலைகாட்சி ஊடகங்கள் எப்படிக் கையாண்டன என்பதை விலாவாரியாக சொல்லி
ருப்பதைப் படித்துப் பாருங்கள்! ஜெயா தொலைக்காட்சி தன்னுடைய தேர்தல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாஸ்து, ஜோதிடக்காரர்களைக் கொண்டு ஆரம்பித்தது, கலைஞர்  செய்திகளில் நக்கீரன் கோபால் "நடு நிலை தவறாத" தன்னுடைய கருத்துக் கணிப்புக்களோடு ஆரம்பித்து, முன்னணி நிலவரம் கலவரமானதாக வெளிப்படத் தொடங்கியதும், தேர்தலைப் பற்றிய ஒளிபரப்பை நிறுத்திவிட்டு விளம்பரங்களும் மானாட மயிலாட நிகழ்ச்சிக்குப் போனதாக நந்தினி கிருஷ்ணன் எழுதியிருக்கிற தமாஷைக் கொஞ்சம் பாருங்கள்

ஆனால், இந்தத் தேர்தல்களில், குறிப்பாகத்தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் பாராட்டப்பட வேண்டியது தேர்தல் ஆணையம் தான் என்பதில் இருவிதமான கருத்துக்களுக்கு இடமில்லை. சுவர் விளம்பரம், ஆர்ப்பாட்டமான ப்ளெக்ஸ் பானர்கள், திருட்டு மின்சாரம் எடுத்து ஒளிரும் கட் அவுட்டுகள், காதைக் கிழிக்கும் தேர்தல் பிரசாரங்கள், எதுவுமில்லாமல் நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுகளில் நடந்த முதல் தேர்தல் இது. 
திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தல்களில் கடைப்பிடித்த "தாராளத்தை"அப்படியே பின் பற்றுவதில் தேர்தல் ஆணையம் எடுத்த சில நடவடிக்கைகளே, முழுமையாகத் தடுத்து நிறுத்தாவிட்டாலும் கூட, குறைப்பதில் மிக உதவியாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன் குமாருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாளை, பிறகு வெளியாகும் புள்ளிவிவரங்களைத் தொகுத்த பிறகு, தேர்தலுக்குப் பிந்தைய கண்ணோட்டமாகக் கொஞ்சம் எழுதலாம் என்ற எண்ணமிருக்கிறது. தொடர்ந்து அரசியலைப்பற்றியே எழுதிக் கொண்டிருப்பது அலுப்பாக இருந்தாலும் கூட, அவசியம் செய்ய வேண்டிய கடமையாகவே இதை நினைக்கிறேன்!

திமுக தேர்தலில் தோற்றதோடு, அதன் பிரச்சினைகள் முடிந்துவிடவில்லை!

நாளை, கனிமொழியின் ஜாமீன் விண்ணப்பத்தின் மீது சிபிஐ நீதி மன்றம் என்ன ம்சுடிவு சொல்லப் போகிறது என்பது கேள்விக் குறியாக, பின்தொடரும் நிழலாக இருக்கிறது. பி அமிர்தம் கொடுத்த வாக்குமூலம் நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம்.

அதற்குப் பிறகு பத்துநாளில், வருகிற இருபத்து நான்காம் தேதி, தயாளு அம்மாளின் பெயரை ஏன் விட்டார்கள் என்ற ஒரு தனியார் புகார் விசாரணைக்கு வருகிறது. அதைக் கொஞ்சம் அவகாசம் கேட்டு வாதாடினாலும், சிபிஐ அடுத்த துணைக் குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படுவது அநேகமாகத் தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.

ஓய்வு பெற நினைத்தாலும் முடியுமா? 






2 comments:

  1. மரம் ஓய்வு பெற நினைத்தாலும், காற்று விடுவதில்லை.

    ReplyDelete
  2. ஆமாம்!

    சூறாவளியாய் வந்து வேரோடு சாய்த்து விடுகிறது! இப்போது கண் கெட்ட பிறகு எனக்கு மக்கள் ஓய்வளித்துவிட்டார்கள் என்ற ஞானோதயம் வந்ததைப் போல!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!