சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!



துக்ளக் அட்டைப்படங்களில் இரண்டு கழுதைகள்  பேசிக் கொள்கிற மாதிரி வருபவை முத்திரை பதிப்பவை என்பது துக்ளக் இதழின் வாசகர்களுக்குத்  தெரியும்! இந்த அட்டைப்படக் கார்டூனில் திமுகவின் தோல்விக்கான காரணங்களை திமுக தலைவரே கூட ஆராய விரும்பா விட்டாலும், சொல்கிறார்கள். விடுபட்டுப் போன, ஆனால் மிக முக்கியமான ஒரு காரணம், கேடி பிரதர்ஸ் என்று (இனிஷியலை வைத்து மட்டுமல்ல, செய்திருக்கிற உட்டாலக்கடி வேலைகளை வைத்தும் தான்!) அழைக்கப்படும் மாறன் சகோதரர்கள்!

 நாலே வருடங்கள்! சரிவு கலைஞர் டீவீக்கு மட்டுமல்ல....இங்கே 

சரிந்து விழுந்த செல்வாக்கை, கட்சியைத்தூக்கி நிறுத்த கருணா நிதியால் முடியுமா, ஸ்டாலினால் கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடியுமா என்பதெல்லாம் ஒன்பதுரூபாய் நோட்டு மாதிரித் தான்! செலாவணியானால் தான் உண்டு!
கருணாநிதி பிறந்த நாள் வருகிற ஜூன் மாதம் மூன்றாம் தேதி வருவதை ஒட்டி, கட்சியை முடுக்கிவிட கோபாலபுரத்தில் இருந்து முயற்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஜெயலலிதா கூட ஜூன்  மூன்றாம் தேதி, கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசாக சில அதிரடி அறிவிப்புக்களைத் தருவார் என்றும் சொல்கிறார்கள்!
சன் குழுமத்துக்கு கொஞ்சம் விசேஷமான கவனிப்பு இருக்கும் ன்றும் ஒரு தகவல். வீராப்பெல்லாம் ஒடுங்கி, தேர்தல் trend தெரிய ஆரம்பித்த உடனேயே சன் தொலைகாட்சி திடீர் நடுநிலைமை வகிக்க ஆரம்பித்திருப்பது. பார்க்க வடிவேலு காமெடி மாதிரியே இருக்கிறது!

மே முப்பதன்று, டில்லி உயர்நீதி மன்றத்தில் கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது, ஆனால் ஜாமீன் கிடைப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மாறாக,சிபிஐ  இந்த மனுவின் மீது தன்னுடைய பதிலை சொல்வதோடு  விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது. மொரிஷியஸ் நாட்டுக்கு விசாரிக்கப் போன சிபிஐ உருப்படியான தகவலோடு திரும்பி இருக்கிறதா அல்லது எப்போதும் போல வெறும் கையை வீசிக் கொண்டுதான் திரும்பியிருக்கிறதா என்பதைக் கொஞ்சமாவது அன்றைக்குச் சொல்ல வேண்டுமே!

போதாக்குறைக்கு, மூன்றாவது, நான்காவது துணைக் குற்றப் பத்திரிகைகளில் இன்னும் கொஞ்சம் பெயர்களையும் சேர்த்து, திஹாருக்கு விருந்தாளிகளாக அனுப்புகிற வரை,இப்போதிருக்கும் நிலையில், கனிமொழி உட்பட 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியவர்கள் எவரும் ஜாமீனில் வெளிவருவது சாத்தியமில்லை என்று தான் தெரிகிறது. அதனால், குற்றப்பத்திரிகை மிகவும் வலுவாக இருக்கிறது என்றோ, விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுக் குற்றவாளிகள் அத்தனைபேரும் தண்டனை அனுபவிப்பார்கள் என்றோ முடிவுக்கு வந்தீர்களானால்,அதன் பொறுப்பு உங்களுடையது!

கனிமொழிக்கு ஆதரவாக அடுத்து திஹார் சிறைக்குள் யார் யார் போகப் போகிறார்கள் என்பது தான் இப்போதைய பரபரப்பு! தயாளு? தயாநிதி? அல்லது தயாநிதி காங்கிரசில் சேர்ந்து திமுகவின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்க்கிற மாதிரி  இன்னொரு சுற்று ஆட்டத்தை,ஆரம்பிப்பாரா?

ஊகம் உங்களுடையது!

2005 இலிருந்தே தயாநிதியின் மந்திரி பதவியை வைத்து, சன்குழுமம் தன்னுடைய வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும், எவருடன் வேண்டுமானாலும் கூட்டு சேரும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்! மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டதருணத்தில்  கலாநிதி மாறன் அழகிரியைக் குறிப்பிட்டே குற்றம் சாட்டியது அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடக் கூடியதுதானா?இப்போது திமுக தலைவர் குடும்பம் சந்தித்து வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் தயாநிதிதான் என்பதும் கூடக் கரைவேட்டிகளுக்குத் தெரிந்ததுதான்!

தயாநிதி மாறன் வியாழக்கிழமை சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்! குலாம் நபி ஆசாத்தும் கூட இருந்திருக்கிறார்! சோனியாவை சந்திப்பதற்கு முன்னால், செவ்வாய்க்கிழமை  தயாநிதி மாறன் செய்திருக்கிற இன்னொரு ஆச்சரியப் படுத்துகிற வேலை, மு.க அழகிரியுடன் திஹார் சிறைக்குப்போய்க் கனிமொழியை சந்தித்தது தான்! 'இதயம் கனத்தது; கண்கள் பனித்தன' கதை வசனம் நினைவுக்கு வந்தாலும் சரி! கூட இருந்து குழிபறிப்பது,'உடனிருந்தே கொல்லும் வியாதி' என்ற சொலவடைகள்  நினைவுக்கு வந்தாலும் சரி! அது உங்கள் பாடு.


கோபாலபுரம் , சி ஐ டி நகர் இரண்டு குடும்பங்களும்,பெங்களூரில் இருந்து செல்வி உட்பட மிக ஒற்றுமையாக, கனிமொழிக்குப் பக்க பலமாகத் தங்கள் ஒற்றுமையை திஹார் சிறைக்குப்போய் சந்தித்துக் காண்பித்திருக்கிறார்கள். நவக்கிரகங்கள் மாதிரி எதிரும்புதிருமாய் நேற்றுவரை இருந்தவர்களைக் கனிமொழி கைது விவகாரம் ஒற்றுமைப் படுத்தியிருக்கிறதா? அல்லது, "இன்று நீ! நாளை நான்"  "உன்னாலே நான்-- என்னாலே நீ கெட்டாய்!" ரகம் தானா?கொசுக்கடி தாங்காமல் கனி மொழி அவதிப்பட்டார் என்றெல்லாம் அனுதாபத்தை உச்சுக் கொட்டின ஊடகங்கள் கூட,இந்தக் குடும்ப ஒற்றுமை அதிசயத்தைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்கிற மாதிரி, இந்தத் திடீர் ஒற்றுமை எங்கே போய் எதிலே முடியும் என்பதை ஊகிக்க முடியாததுதான் காரணம் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்!

இவ்வளவு சொல்லிவிட்டு, காங்கிரஸ் சமாசாரத்தைக் கொஞ்சம் தொடவில்லையானால், கூட்டணி தர்மம் என்னாகிறது?
சுரேஷ் கல்மாதிக்குத் துணையாக சில அதிகாரிகள் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதோடு விவகாரம் முடிந்து விடவில்லை. பிரதமர் Shunglu Committee அறிக்கை மீது காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறார். டில்லி அரசு, அந்தக் கமிட்டியின் அறிக்கையை நிராகரித்து, தவறுகள் எதுவுமே நடக்கவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறது. சீக்கிரமே சுரேஷ் கல்மாடிக்குத் துணையாக, சில காங்கிரஸ் புள்ளிகளும் திஹாருக்குப் போக வேண்டியிருக்கும் என்று சில தகவல்கள் நமட்டுச் சிரிப்புடன் கசிய விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் மாட்டிக் கொண்டு உள்ளே போக வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில், திமுகவை மாட்டிவிட்டு, தங்கள் கட்சி அம்மணமாய்த்திரிவது ஜனங்களுடைய கண்ணுக்குத்  தெரிய விடாமல் திசை திருப்புவது, காங்கிரஸ் கட்சிக்குக் கைவந்த கலைதான்! சௌகரியமும் கூட இல்லையா!!

கூட்டணி தர்மத்துக்கு எல்லோரும் ஒரு "ஓ " போடுங்க! வேறென்ன செய்வது?!



 

5 comments:

  1. \\சரிந்து விழுந்த செல்வாக்கை, கட்சியைத்தூக்கி நிறுத்த கருணா நிதியால் முடியுமா\\என்னது, செல்வாக்கா? கருணாநிதிக்கா? ஹா.. ஹா.. ஹா... இவரு வெற்றி பெற்றதெல்லாம் இவருடைய வீர தீர பராக்கிரமங்களுக்காக இல்லை. இவரை எதிர்த்து நிற்பவர்கள் ஒருத்தரை ஒருத்தர் காலை வாரிவிட்டுக் கொண்டதால்தான். செல்வாக்கு பெருமளவுக்கு இவர் என்றும் நல்லாட்சி செய்ததில்லை. கொள்ளையடித்தல்-குடும்ப நலன்-அதற்காக மக்கள் நலனை பலிகடாவாக்குவது- இவற்றைத் தவிர ஒன்னும் தெரியாத அப்பாவி இவர்.

    ReplyDelete
  2. ஜெயதேவ் தாஸ் என்ற பெயரில் எழுதும் நண்பரே!

    தோற்றுவிட்டதால் மட்டுமே ஒருவர் முழுக்க முழுக்க செல்லாக்காசாகிவிட்டதாக நினைப்பது தவறு.சீமைக் கருவிலையை வெட்டித் தீயை வைத்து சாம்பலாக்கின கதை மாதிரித்தான்! கொஞ்ச காலம் இருக்கிற மாதரியே தெரியாது, அப்புறம் நிறையக் கன்றுகள் முளைத்து வரும்!

    இவர் முன்பு ஜெயித்ததும், இப்போது தோற்றதும் தேர்தல் முறைகளில் இருக்கும் Winner takes all என்பதனாலேயே தவிர வேறு காரணங்களினால் அல்ல என்பதை முந்தைய பதிவுகளில் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்! இது இப்போது ஜெயித்து வந்திருக்கிற அம்மாவுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  3. \\ஜெயதேவ் தாஸ் என்ற பெயரில் எழுதும் நண்பரே!\\ என் பெயரே அதுதான் நண்பரே , புனைபெயர் வைக்க வேண்டுமானால் நரி, புலி, டெர்ரர், கோடு போட்ட டவுசர் என்று எதையாவது வைத்திருப்பேன்.

    \\தோற்றுவிட்டதால் மட்டுமே ஒருவர் முழுக்க முழுக்க செல்லாக்காசாகிவிட்டதாக நினைப்பது தவறு.\\ நான் அவ்வாறு நினைக்க வில்லை, ஆகவேண்டும், அவர்கள் கொள்ளையடித்த லட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் மீண்டும் மக்களுக்கே சேர வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.

    \\சீமைக் கருவிலையை வெட்டித் தீயை வைத்து சாம்பலாக்கின கதை மாதிரித்தான்! கொஞ்ச காலம் இருக்கிற மாதரியே தெரியாது, அப்புறம் நிறையக் கன்றுகள் முளைத்து வரும்!\\ அது ரொம்ப ஆபத்து. கள்ளிச் செடி மாதிரி வளர்ந்து விட்ட கருணாநிதியின் பாம்பு, தேள் குட்டிகளிடமிருந்து மக்கள் பாதுகாக்கப் பட வேண்டுமென்று விரும்புகிறேன்.
    \\இவர் முன்பு ஜெயித்ததும், இப்போது தோற்றதும் தேர்தல் முறைகளில் இருக்கும் Winner takes all என்பதனாலேயே தவிர வேறு காரணங்களினால் அல்ல என்பதை முந்தைய பதிவுகளில் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்! இது இப்போது ஜெயித்து வந்திருக்கிற அம்மாவுக்கும் பொருந்தும். \\ நீங்கள் ஆங்கிலத்துல எழுதியிருக்கிரதுக்கு அர்த்தம் என்னனு அப்புறமா பாத்து தெரிஞ்சுக்கிறேன், ஆனால் அதே அர்த்தத்தில் தான் கருணாநிதி பதவியைப் பிடித்தார், அப்படியும் மைனாரிட்டி ஆகத்தான். எம்.ஜி.ஆர். மாதிரி எத்தனை கூட்டணியை எதிர்க்கட்சிகள் போட்டாலும் ஒன்னும் அசைக்க முடியாது என்கிற மாதிரி இல்லை.

    ReplyDelete
  4. திரு ஜெயதேவ் தாஸ்!

    இடது பக்கத்தில் இந்தப்பதிவுகளில் தேட என்று ஒரு கூகிள் தேடும் வசதி இருக்கிறது இல்லையா, அதில் Winner takes all என்ற வரியைக் கொடுத்துப் பாருங்கள்!அப்படியென்றால் என்ன என்பதை விலாவரியாக விளக்கி இந்தப்பக்கங்களிலேயே எழுதிய முந்தைய பதிவுகள் தனி விண்டோவில் வரும்.

    தவிர, இந்தப்பதங்களை அப்படியே கூகிள் இட்டுப்பார்த்தாலேயே கூட நிறைய விவரங்கள் கிடைக்கும் இந்தக்காலத்தில் உங்கள் பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    எம்ஜியார் ரசிகர் போல இருக்கிறது! அதற்காக எம்ஜியார் அண்ணாயிசத்துக்குக் கொடுத்த விளக்கம் மாதிரி எதையாவது சொல்லி பயமுறுத்தி விடாதீர்கள்!

    :-)))))

    ReplyDelete
  5. "Winner takes all" 50% ஓட்டுக்களை பெற்றவர்கள் 90% சீட்டுகளைப் பெற்றிருக்கும் போது, 40% வாக்குகளைப் பெற்றவர்களுக்கு வெறும் 10% சீட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன, இது அநியாயம் என்று சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன். அப்படியே இருந்தாக்கூட இவரும் கூட்டணி போட்டாரு, இடைத் தேர்தல்களில் வரலாறு காணாத ஓட்டுப் பதிவு, வாக்கு வித்தியாசம் இதெல்லாம் எங்கே போச்சு? இலவசம், இலவசம், பெண்டாட்டி இலவசம்னு சொல்லாதது தான் பாக்கி. எந்த இலவசமும், கொடுத்த ஓரிரு வருடத்தில் குப்பைத் தொட்டிக்குத்தான் போகுது. இவரு கட்டித் தருவதாகச் சொன்ன வீடுகளின் தரமும் அதேதான், இவரு கமிஷனை வாங்கிகிட்டு காண்டிராக்டு கொடுத்திடுவாரு, அவன் கட்டும் லட்சணம் அடுத்த ஆறு மாதத்தில் கழுதை வந்து டைம் பாஸ் செய்ய தோதானதாகி இருக்கும்.

    \\எம்ஜியார் ரசிகர் போல இருக்கிறது! அதற்காக எம்ஜியார் அண்ணாயிசத்துக்குக் கொடுத்த விளக்கம் மாதிரி எதையாவது சொல்லி பயமுறுத்தி விடாதீர்கள்!\\நான் எம்ஜிஆரின் அசைக்க முடியாத பலத்தைப் பற்றி சொன்னது உண்மை என்று உங்களுக்கே தெரியும், அப்படியிருக்கும் போது என்னை இப்படிச் சொல்லலாமா? கழிவறைகளைத் தவிர மற்ற எல்லாத்துக்கும் அண்ணா நாமம் இட்டு மகிழ்ந்த புரட்சித் தலைவன், கஷ்டத்தில் இருந்த அண்ணாவின் குடும்பத்துக்கு கைச் செலவுக்குக் கூட நையா பைசா கொடுக்காமல் பட்டை நாமம் போட்டவர். [இப்போ நான் எம்ஜிஆரை கண்மூடித் தனமாக வெறுப்பவன் என்று சொல்வீர்களா? ஹா..ஹா..ஹா..]

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!