எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா?




இன்றைக்கு ஜெயலலிதாவைக் கேலி செய்கிறார்களே! அன்றைக்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது, இந்திரா எதிரே உட்கார தைரியம் இருந்ததா?
 
INDIRA Gandhi suspended constitutional guarantees and imposed Emergency at midnight on June 25, 1975. This will be discussed yet again on Saturday in seminar halls across India. However, the equally important international context of the landmark event is not viewed as seriously.

Seen from the perspective of India’s internal dynamics, the day marks the 36th year since she put many of her opponents in jail. To heighten the irony or to perhaps flaunt feigned even handedness, she also incarcerated members of smuggling and assorted underworld syndicates.

Some newspapers held their ground for a while by leaving yawning white spaces instead of accepting censored news. But by large the media “crawled when they were asked to bend”. Mrs Gandhi’s political targets included ideologues of the Hindu, Sikh, Muslim right as well as Gandhian socialists. Some communists were jailed but several others supported her short-lived and miscalculated authoritarianism.

இப்படி சொல்லியிருப்பது டான் என்ற பாகிஸ்தான் நாளிதழின் டில்லி நிருபர்! ஜாவேத் நக்வி என்று பெயர்.

இந்திரா காண்டி 1975 ஆம் வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவு, நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி,அரசியல் சாசனம் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகளை ரத்து செய்தார். அவரை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பவர்கள் என்று கைகாட்டப் பட்டவர்களும் சேர்ந்தே நள்ளிரவுக் கைது  நடவடிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
 
வேடிக்கை என்ன என்றால், இங்கே மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் என்று ஒரு ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்! திமுகவில் இருந்து ஸ்தாபன காங்கிரசுக்கு வந்த, கொச்சையாக, ஆபாசமாக அரசியல் மேடைகளில் பேசுகிறவர். திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியே வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆபாசப் பேச்சாளர்களைச் சார்ந்தே இன்றைக்கும் இருந்து வருகிறது.(நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலு என்று ஒருத்தர், இந்த மாதிரி வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொண்ட கதையாகிப் போனாரே, நினைவுக்கு வருகிறதா?)

மதுரையைச் சேர்ந்த ஆர் வி சாமிநாதன் என்று ஒரு மத்திய இணை அமைச்சர்! அவரிடம் எவரோ போட்டுக் கொடுத்தார்கள், ஐயா, இந்த மாதிரி ஒருத்தர் அன்னை இந்திராவை ஆபாசமாகப் பேசுகிறார்....என்று! அவ்வளவுதான்! உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்ட  மிசாவின் (Maintenance of Internal Security Act)  கீழ் தீப்பொறி ஆறுமுகத்தைப் பிடித்து உள்ளே போட்டார்கள். தீப்பொறி ஆறுமுகத்தோடு கூடவே, திமுகவில் இன்னொருத்தர்! பாண்டியன் என்கிற தெருச் சண்டியர்!அவரையும் மிசாவில் பிடித்துப் போட்டார்கள், வெளியே வந்ததும் அவர் "மிசா" பாண்டியனாகிப் போனார்! 

ஆக, மிசா, எஸ்மா, அது  இது என்று ஏகதடபுடல்களுடன் தம்பட்டம் டிக்கப்பட்ட சட்டங்கள் கேணத்தனமாகத்தான் பயன் படுத்தப் பட்டன. கேவலம் தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆசாமிகளால் உள்நாட்டுப் பாதுகாப்பு குலைந்துவிடும் பிடித்துப் போடு உள்ளே என்று ஒரு அரசு செயல்படுமானால், அது ஒன்று கோழையிலும் கேடுகெட்ட கோழைத்தனம் உள்ளதாக இருக்க வேண்டும்!

அல்லது கேணைகள், கிறுக்கு மாய்க்கான்களால் நடத்தப் படுவதாக இருக்க வேண்டும்! எமெர்ஜென்சியில் இரண்டு விதமாகவும் இருந்தது என்பதுதான் வரலாறு!

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்! நேரு குடும்பம் பல்கலைக் கழகமல்ல! பலவிதக் குழப்பம்! கலப்படம்!
 
திமுக என்னமோ மிசாவை எதிர்த்துப் பெரிதாகக் கிளர்ச்சி நடத்தியதாகக் கதை சொல்லுவார்கள். சென்னையில் முக ஸ்டாலின், சிட்டி பாபு இருவர் மீதும் அடக்குமுறை மிகக் கடுமையாக இருந்தது. மற்றப்படி எமெர்ஜென்சியின் முழு வீச்சையும், வெறித் தனமான ஆட்டத்தையும் தமிழ்நாடு முழுமையாகத்தெரிந்து கொள்கிற மாதிரி பெரிதாக இல்லை. பத்திரிகைகளின் வாய்க்குப் பெரிதாகப் பூட்டுப் போடப்பட்டது. தணிக்கை அதிகாரிகள், அரசையும் இந்திராவையும் எவராவது விமரிசிக்கத் துணிகிறார்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தணிக்கை செய்தார்கள். 

அந்தத் தணிக்கையையும் தனக்கே உரித்தான துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரே பத்திரிக்கை சோ நடத்திய துக்ளக் ஒன்று தான். அடுத்து, திரு ராம்நாத் கோயங்காவின் வழிநடத்தலில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகைக் குழுமம் எமெர்ஜென்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தது. குல்தீப் நய்யார் சொல்கிறபடி, கொஞ்சம் வளைந்துகொடு என்று இந்திரா சொன்னவுடன், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று தங்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் பத்திரிகைகள்,மண்டியிட்டுத் தவழ ஆரம்பித்த விநோதத்தை என்னவென்று சொல்வது?

நீதித்துறைக்கு மட்டும் முதுகெலும்பு  இருந்ததா? இந்திராவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள எந்த நீதிபதியுமே தயாராக இல்லை! எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர, அரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதுகிற தைரியம் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் எவருக்குமே இல்லை! அரசு அதிகாரிகள் கூழைக் கும்பிடு போட்டு, ஜனங்களை இன்னமும் கசக்கிப் பிழிந்தார்கள். முதுகெலும்போ சுயசிந்தனையோ இல்லாத அரசியல், அதிகார வர்க்கம் இந்திராவின் துதிபாடிகளாக இருப்பது மட்டுமே பிழைக்கும் வழி என்பதைக் கண்டுகொண்டார்கள். காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் கட்சியாக மாறிக் கொண்டே வந்தது. 

அன்றைக்கு தேவ காந்த பரூவா என்ற ஒருத்தர் மட்டுமே அறியப்பட்ட காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கானாக இருந்தார்! இன்றைக்குப் பரிணாம வளர்ச்சியில் திக் விஜய்சிங், அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் என்று ஒரு பெரிய பட்டாளமே உருவாகிக் குழப்பிக் கொண்டிருக்கிறது!

கேரளாவைப் பொறுத்தவரை, எமெர்ஜென்சி தருணத்தில் அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் தான்! அதையும் மீறி நடந்த ஒரே ஒரு  விஷயம் ராஜன் என்ற மாணவரை போலீசார் தீவீரவாதி என்று கைதுசெய்து சித்திரவதை செய்ததில் அந்த இளைஞன் இறந்தே போனான்.அவனுடைய தந்தை, ஈச்சர வாரியர் நடத்திய தனிமனிதப் போராட்டம், எமெர்ஜென்சி நேரத்து அத்துமீறலைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியது;கேரளாவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்த, இந்திரா காந்திக்கே சவால் விடக்கூடியவர் என்று  சொல்லப்பட்ட கருணாகரனுக்கு மட்டுமே ஏழரை பிடித்தது.
 எமெர்ஜென்சி கொடுமைகளை விசாரிக்க ஷா கமிஷன் என்று ஒரு விசாரணைக் கமிஷன்! தங்களுடைய குற்றங்களை அம்பலப்படுத்தும் ஷா கமிஷன் அறிக்கையைக் காணாமல் போகச் செய்த மாயம் காங்கிரசுடையது! கூட்டணி தர்மத்தை ஒட்டி, திமுக தலைவர் தன் மீது குற்றச்சாட்டுக்களை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையையும் காணாமல் போகச் செய்த மாயமும் இங்கே நடந்தது.

எமெர்ஜென்சியின் கடுமை ஹிந்தி பெல்டில் மட்டுமே அதிகமாக பாதித்தது என்று சொன்னால் இன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. எமெர்ஜென்சி அடக்கு முறை அதிகமாக வெளிச்சம் போடப்படாத பகுதிகளில் காங்கிரஸ் 1977 தேர்தலில் அதிக சரிவை சந்திக்கவில்லை என்பதை சேர்த்துப் பார்த்தால் நிலவரம் புரிய வரும்.

ஜாவேத் நக்வி இந்தியர்களாகிய நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்கிறார். எமெர்ஜென்சி ஆட்டங்களை நினைவு வைத்திருக்க வேண்டியவர்கள் மறந்தே போய் விட்டோம்!வழிநடத்த வேண்டியவர்கள் தடம் மாறிப் போய் விட்டார்கள்! 

ஆக, தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசே மேல் என்று இந்திரா காங்கிரஸ் என்று அறியப்பட்ட நாசகார பூதத்திடமே தலையைக் கொடுத்துவிட்டு, அதன் கருணைக்காகக் காத்திருக்கிறோம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

ஜார்ஜ் ஆர்வெல் என்பவர்  அனிமல் பார்ம் என்று ஒரு அரசியல் நையாண்டிக் கதையை எழுதினார்.  பல மிருகங்களும் கூடி வாழ்கிற ஒரு பண்ணையில், பன்றிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றன. அதிகாரத்துக்கு வந்ததும், பன்றிகள் ஒரு பிரகடனம் செய்கின்றன. "எல்லாப் பன்றிகளும் சமம்! ஆனாலும், சில பன்றிகள் மற்றவற்றை விட அதிக சமம்!" கம்யூனிஸ்ட் கட்சி மீது அதிருப்தியில் எழுதப்பட்ட இந்தக் கதை, கம்யூனிஸ்டுகளுக்குப் பொருந்தியதை விட, இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகப் பொருந்துகிறது என்பதை இந்திரா காண்டி ஆள ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இன்று வரை தொடர்கிற அவலம்.

ஜாவேத் நக்வி தன்னுடைய நக்கலை மறுபடி, அனிமல் பார்ம் நாவலில், ஜார்ஜ் ஆர்வெல் சொல்கிற ஒரு வரியை வைத்தே முடிக்கிறார்.

Reminds you of the famous lines from George Orwell’s Animal Farm? 

“The creatures outside looked from pig to man, and from man to pig, and from pig to man again; but already it was impossible to say which was which.”

வெளியே இருந்து பன்றிகளிடமிருந்து மனிதனை, மனிதனிடமிருந்து பன்றிகளை,மறுபடியும் பன்றிகளிடமிருந்து மனிதன்-மனிதனிடமிருந்து பன்றிகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எது (பன்றி) எது (மனிதன்) என்று பிரித்துப் பார்க்க இயலாமலே போய் விட்டது! ஆம்! 

ஜெயப்ரகாஷ் நாராயணன் என்ற பழுத்த காந்தீயவாதி நடத்திய சம்பூர்ண கிராந்தி என்ற ஊழலுக்கெதிரான போராட்டம், இரண்டாவது விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்ததில் கவரப் பட்டு, அதில் முன்னணி வகித்த துடிப்பான இளைஞர்களாக உருவான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,ராம் விலாஸ் பாஸ்வான், நிதீஷ் குமார் இப்படி எவருமே, ஜெயப்ரகாஷ் நாராயணன் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. அது மட்டுமல்ல, ஊழலுக்கெதிரான ஜேபியின் போராட்டக் களத்தில் உருவான இவர்களே, பின்னாட்களில் பதவி சுகத்தைப் பார்த்ததும், ஊழல்வாதிகளாகவும் ஆனார்கள் என்பது கசப்பான படிப்பினை.

ஒன்று சொல்ல மறந்துபோய் விட்டேனே! எமெர்ஜென்சி தருணங்களில் ஒழுங்காக ஆபீஸ் நேரத்துக்கு வந்தவர்கள் அரசு ஊழியர்கள்! வேலை செய்தார்களா என்று மட்டும் கேட்காதீர்கள்!
எமெர்ஜென்சி தருணங்களில் நெஞ்சம் நிறைய அச்சத்தோடு வேலைக்கு வந்த ஒரே பிரிவு அரசு ஊழியர்கள் தான்!

எமெர்ஜென்சிக்கு முன்னாலும் சரி, அதற்குப் பின்னாலும் சரி,அரசு ஊழியர்கள் அப்படி பன்க்சுவலாக அலுவலகம் வந்ததும் இல்லை! ஏதோ தேறினவரைக்கும் சரி என்று  லஞ்சத்தை, இப்போது கறாராகக் கசக்கி வாங்குவது போல அல்லாமல் கொஞ்சம் தணிந்தே வாங்கினார்கள் என்பது எமெர்ஜென்சியின் ஒரே நல்ல அம்சம்.

அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தாறாவது நினைவு ஆண்டான இன்றைய தினத்தை மறக்க முடியுமா? மறந்து இருந்து விட முடியுமா?

எமெர்ஜென்சி, அதன் தழும்புகள், கற்றுக் கொள்ளத்தவறிய பாடங்கள் என்று தொடர்ந்து பேசுவோம்!

தொடர்புடைய பதிவு ஒன்று இங்கே



 

2 comments:

  1. நேரு பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். ரஷ்ய எழுத்தாளர் எழுதிய புத்தகம் இது. நீங்க என்ன வேண்டுமானாலும் நேரு, இந்திரா காந்தியை குறை சொன்னாலும் இப்போதுள்ள காங்கிரஸ் மக்கள் ஒப்பிடும் போது இவரை குறை சொல்ல என்னால் முடியவில்லை.

    ReplyDelete
  2. *இதுக்கு அதுவே தேவலைங்கிறது மாதிரி* இப்போதுள்ள காங்கிரஸ்காரனுக்கு நேரு எவ்வளவோ தேவலை என்று சொல்கிறீர்களா ஜோதிஜி? நேருவை நேரு காலகட்டத்தோடுதான் ஒப்பிட வேண்டும்.தவிர ரஷ்ய எழுத்தாளர்கள் பார்வையைவைத்து, நேரு, இந்திரா பற்றி எந்த உண்மையையுமே அறிந்து கொள்ள முடியாது.

    ஒருவகையில் காங்கிரஸ் நேரு அபிமானிதான்! என்றாலும் ராமச்சந்திர குகாவின் இந்தியா: காந்திக்குப் பின் புத்தகத்தை, ஆங்கில மூலத்திலேயே படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!