ஆ.ராசா ஜாமீனில் வெளிவராமல் இருக்கும் காரணம்....!


 
சென்ற பதிவின் தலைப்பாக சிதம்பரத்தில் ஒரு மல்லிகா! திகார் சிறையில் கனிமொழி! என்ன பெரிய வித்தியாசம்? என்ற கேள்வியை எழுப்பி இருந்ததை நண்பர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றே நினைத்திருந்தேன். என்டிடிவி முதற்கொண்டு ஊடகங்களில் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது தவறான முன்னுதாரணம் என்றெல்லாம் விவாதங்கள் அனல்பறக்க நடந்து கொண்டிருந்தன.ராம்ஜெத்மலானி, நீதிமன்றம் ஜாமீனை மறுத்தது தவறானது என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைக் கொஞ்சம் கருத்தில் கொண்டு யோசிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே நேற்றைக்கு தினமணியில் ஒரே அடிப்படையில் வெளியாகி இருந்த இருவேறு செய்திகளைக் கொடுத்திருந்தது.பின்னூட்டங்கள், பார்வையாளர்களுடைய எண்ணிக்கை இரண்டுமே, நண்பர்கள் புரிந்து கொண்டது என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை என்றே தோன்றியது. நேற்றைய செய்திகள் முழுவதும் கனிமொழி-- ராசாத்தி இருவரும் 'உன்னைக் கண்டு நான் அழ, என்னைக் கண்டு நீ அழு' பாணியில் நமக்கு நாம் மட்டும் தான் -வேறு யாரும் இல்லை என்ற ரீதியில் செய்திகள் வந்துகொண்டிருந்தன.

கனிமொழி பத்திரிகையாளர்களிடம் கோபம் கொண்டு "நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானா? இங்கிருந்து போங்கள்" என்று கொந்தளித்ததாக சிஎன்என் ஐபிஎன் செய்தியாளர் அறிவித்தது, டிவிட்டரில் காலை பதினோரு மணி வாக்கிலேயே வந்து விட்டது. ஆனாலும், ஒரு இமேஜ் பில்டப் கொடுப்பதற்காகவோ, அல்லது தியாக சிகரமாக்கி அனுதாபம் தேடுவதற்காகவோ இப்படி ஒரு மாறுபட்ட செய்தியை வெளியிடவும் இங்கே ஆட்கள் வலிய உதவுகிறார்கள். இன்று வெளியான ஜூவி கட்டுரை, கனிமொழியை, இரக்கமற்ற பாவிகள் சிலர் திஹார் சிறையிலேயே வைத்திருக்க முடிவு செய்துவிட்டதாகவும், வாழ்க்கையின் ஓரத்துக்கே போய் 'என் வாழ்க்கை திஹார் சிறையிலேயே முடியட்டும்' என்று சொன்னதாகவும் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

செய்திகளை எப்படி எப்படியெல்லாம் திரிக்கலாம், பூசி மெழுகலாம், இல்லாத சிக்ஸ் பேக் அப் பில்டப் இருப்பது மாதிரிக் கொடுக்கலாம் என்பதற்கு இந்த ஒரு செய்தியே போதும்! கொஞ்சம் பாருங்களேன்!



னிமொழி மட்டுமல்ல தி.மு.க-வினரே பெரிதும் நம்பி இருந்தது நவம்பர் 3-ம் தேதியைத்தான்!

கருணாநிதி டெல்லி வந்து சோனியா காந்தியை சந்தித்துப் பேசியதும், 'கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர்களின் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் எண்ணம் இல்லைஎன சி.பி.ஐ. அறிவித்ததும் கனிமொழிக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. 

தி.மு.க-வின் சட்ட ஆலோசகர்களும் 'ஜாமீன் உறுதிஎன்றே, கனி மொழிக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்.அதனால், வழக்கத்திற்கு மீறி புன்னகையுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார், கனிமொழி. 

திரண்​டிருந்த கட்சிக்காரர்களைப் பார்த்து வணக்​கம் சொன்னபடியே வந்தார். அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி ஷைனியும்  அறைக்குள் நுழைந்தார். அடுத்த இரண்டாவது நிமிடம்...  'ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்என்று  நீதிபதி ஷைனி அறிவிக்க, அந்த அறையே கண்ணீர் மயமானது.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத கனிமொழி, தனது வழக்கறிஞர்களிடம் ஷைனியின் உத்தரவு குறித்து தெளிவாகக் கேட்டார். அடுத்த சில நிமிடங்​களிலேயே தன்னை சகஜமாக்கிக் கொண்டார். மகளிரணி நிர்வாகி ஒருவர் கனிமொழியின் கைகளைப் பற்றியபடி கதற, ''இது கோர்ட். இங்கே அழக் கூடாது'' என்றார் கனிமொழி. அப்போது தாங்கமாட்டாத கண்ணீருடன் ராஜாத்தி அம்மாள் அவரது அருகில் வர, கனிமொழிக்கே ஒரு மாதிரியாகி விட்டது.

''நீங்க அழுவுறதால என்னம்மா நடக்கப்​போகுது... தைரியம் சொல்ல வேண்டிய இடத்துல இருந்துகிட்டு நீங்களே அழலாமா?'' என கனி மொழி  தேற்றினாலும் ராஜாத்தியின் கண்ணீர் குறையவில்லை. ஒரு கட்டத்தில் சிறுபிள்ளை போல் தேம்பத் தொடங்கிவிட்ட ராஜாத்தியை  தோளோடு சாய்த்து கனிமொழி தேற்ற... அங்கே இருந்த கட்சிக்காரர்கள் அனைவரும் கலங்கிப் போனார்கள்.

அந்த துயரச் சூழலிலும் டெல்லி நிருபர்கள் சிலர் கனிமொழியிடம் சில கேள்விகளைக் கேட்க, ''நான் எதுவும் பேசக்கூடாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க!'' என்றார் கனிமொழி.

அதை சட்டை செய்து கொள்ளாமல் சில பெண் நிருபர்கள் கனிமொழியை சூழ்ந்து கொள்ள, ''குடும்ப ரீதியாக நான் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. இங்கே வந்தும் தொந்தரவு பண்றீங்களே...'' என கனிமொழி டென்ஷனாக, அடுத்த கணமே நிருபர்களை அப்புறப்படுத்தும் படலம் அரங்கேறியது.

குடும்ப உறவுகளும் முக்கிய கட்சிக்காரர்களும் மட்டுமே இருந்த அந்த அறையில் கனிமொழி பேசிய விஷயங்கள் ரொம்பவே உருக்கமானவை. முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், ''இப்படி ஆயிடிச்சேம்மா...'' எனக் கண்ணீரோடு சொல்ல ''ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தானே ஆகுது. எல்லா கஷ்டமும் எனக்குப் பழகிப் போயிடுச்சு. நீங்க கவலைப்படாதீங்க!'' என்றார் கனிமொழி.

''ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் என் பெயர் அடிபட ஆரம்பிச்சப்போ எனக்கு ஆச்சர்யமா இருந்தது. காரணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தப்போ நான் தீவிர அரசியலுக்கே வரலை. எம்.பி-யாகவும் ஆகலை. எதுக்கு இதில நம்ம பேரை இழுக்கிறாங்கன்னு கோபப்பட்டேன். அதிகாரி​களுக்கும் இதுபற்றி புரியும்னு நினைச்சேன். ஆனா, சாதாரண சர்ச்சையில் தொடங்கிய விஷயம் கைது, விசாரணை, ஜெயில்னு நீண்டுக்கிட்டே இருக்குது. சி.பி.ஐ. ஆட்சேபனை தெரிவிக்காத நிலையிலும் ஜாமீன் மறுக்கப்படுது. இதுக்காக யார் மேல நான் வருத்தப்பட முடியும்? என் வாழ்க்கையில நல்லது ஏதும் நடந்தாத்தான் ஆச்சர்யம். கெட்டதுதான் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கே!'' எனச் சொல்லி கனிமொழி வழக்கம் போல் சிரிக்க, அங்கிருந்த பலருக்கு கண்ணில் நீர் கோத்துக் கொண்டது.

உளைச்சலும் உருக்கமுமாக நகர்ந்த அந்த நிமிடங்களில் நாமும் கலந்திருந்தோம். நம்மை அடையாளம் கண்டு வணக்கம் தெரிவித்தவரிடம் '''ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி உயர் நீதிமன்றத்தை அணுகச் சொல்லி இருக்கிறார். ஆனால், அது சாத்தியப்படாத விஷயம் என வழக்கறிஞர்கள் சிலர் சொல்கிறார்களே?'' என நாம் வருத்தம் காட்ட, ''வழக்கு சம்பந்தமா நான் எதும் பேசக் கூடாது. அதெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும். நான் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை வரும்னு கற்பனை கூட பண்ணிப் பார்த்தது இல்லை. ஆனா, இன்னிக்கு அந்த ஜெயிலே உலகமாயிடுச்சு. எனக்குச் சாதகமாவோ பாதகமாவோ  என்ன நடந்தாலும் நான் அதைச் சட்டை பண்ற நிலையில் இல்லை. இன்னிக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதற்காக நான் கவலைப்படவில்லை. இப்படி எல்லாம் ஆகலாம்னு மனசை அதுக்குத் தயாராத்தான் வைச்சிருந்தேன். ஆனால், எனக்கு ஜாமீன் கிடைக்கும்னு இத்தனைபேர் தமிழ்நாட்டுல இருந்து இங்க வந்திருக்காங்க. அவங்களோட எதிர்பார்ப்பு பொய்யாப் போனதை நினைச்சுதான் வருத்தமா இருக்கு. ஜாமீனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் என் மொத்த வாழ்க்கையும் திகாரிலேயே முடிஞ்சாலும், அதை இன் முகத்தோட ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். இத்தனை வருஷ வாழ்க்கையில இந்தக் கடைசி அஞ்சாறு மாதங்களை என்னால மறக்கவே முடியாது."

"படவேண்டிய அடி எல்லாத்தையும் பட்டாச்சு. இனி எந்தக் கஷ்டத்தாலும் என்னை வருத்தப்படுத்த முடியாது. பரபரப்பு, குற்றச்சாட்டு, கைது, விமர்சனம், அவமானம், துரோகம், துயரம், எதிர்ப்பு, ஏமாற்றம்னு எல்லாத்தையும் கடந்தாச்சு. சாவைத் தவிர சகலத்தையும் பார்த்தாச்சு. எதையும் எதிர்கொள்கிற பக்குவத்தை ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டேன். ஆனா, அதுக்கு நான் கொடுத்த விலைதான் ரொம்பப் பெருசு!'' - விரக்தியாய் சிரிக்கிறார் கனிமொழி.


அம்மாவை ஆறுதல் படுத்தி, மகனுக்கு தைரியம் சொல்லி, கட்சிக் காரர்களை நம்பிக்கையூட்டி, வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி நிமிர்கிற கனிமொழியை ஆச்சரியமாகப் பார்க்கிறோம். வாட்சைக் காட்டி போலீஸ் அதிகாரிகள் ஏதோ சொல்ல, ''ஓ... தாராளமாகக் கிளம்பலாமே...'' என்றபடி கோர்ட்டுக்கு அருகே நிற்கும் வேனில் ஏறச் சென்றார். குழுமி இருந்த கட்சிக்காரர்களை வணங்கியபடி, மாறாத புன்னகையோடு திகாருக்கு கிளம்பினார் நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத, அந்த சக்தி!

- டெல்லியில் இருந்து இரா.சரவணன்

 ஜூவி வாசகர்கள் வேறெந்த செய்தி ஊடகங்களையும் பார்க்க மாட்டார்கள் என்று அசட்டுத் துணிச்சலா? ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அதுவே உண்மை போலாகிவிடும் என்ற கோயபல்ஸ் காலத்து நம்பிக்கையா? அல்லது அதையும் தாண்டி யாருக்கோ எச்சரிக்கை, சங்கேதமா?

இருபதை மாட்டிவிட்டு அறுபது தப்பித்துக் கொண்டது என்ற புகைச்சல் ஏற்கெனெவே இருக்கிறது.அறுபது கூட எண்பது + உம் சேர்ந்தே உள்ளே போக வேண்டியிருக்குமோ என்ற கலக்கம் கூட முன்னர் இருந்தது.இருபதை உள்ளே வைத்தால் அறுபதை சும்மா விடுவேனா என்ற மிரட்டல் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது! கேடிகளில் பெரும் கேடிகளான பேரன்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கலாகி ஒன்றரை மாதங்களாகிறது. பேரன்கள் இருக்குமிடமே தெரியாமல், அவ்வளவு அமைதி!பேரன்களுக்கு உதவி செய்கிற மேலிடத்துப் புள்ளி யார் என்பதை ஊகிக்க சிரமப்படவே வேண்டாம்! அஹமதான படேல் இருக்கக் கவலை எதற்கு?

******

கனிமொழிக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்ட பிறகுதான், இங்கே நிறையப்பேருக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்ற வாளிகளாகக் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் இதுவரை ஆ.ராசா ஒருவர்தான் ஜாமீனுக்கு விண்ணப்பிக்காதவர் என்ற தகவலே கொஞ்சம் விநோதமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது!

மூன்று நான்கு விளக்கங்களைக் கண்டு பிடித்துச் சொல்லி
ருக்கிறார்கள்!  

முதலாவதாக, திமுக தலைமையிடமிருந்து கனிமொழி  வெளியே வருவதற்கு முன்னால் முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக! 

அடுத்து, நான் குற்றமற்றவன் என்று நிரூபித்துவிட்டுத் தான் வெளியே வருவேன் என்று ஆ.ராசா சூளுரைத்திருப்பதாக!

அப்புறம், திஹார் சிறைக்குள் இருப்பதுதான் தனக்கும் தனது உயிருக்கும் பாதுகாப்பு என்று ஆ.ராசாவே கருதுவதாக!

இதில் எது உண்மையாக இருக்கும்? கண்டுபிடிக்க முடிந்தால், அதை உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்! பின்னூட்டத்தில் யுரேகா என்று கண்டுபிடிப்பைச் சொல்ல வேண்டாம்!!



ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிகைகள், ஊடகங்கள் பற்றி நீதிபதி மார்கண்டேய கட்ஜு என்ன சொல்கிறார் என்பதை இந்த லிங்கில் பார்க்கலாம்!

2 comments:

  1. கரன் தப்பார் மற்றும் நீதிபதி மார்கண்டேய கட்ஜு விவாதங்கள் யேசிக்க வைத்தன. அணைதிந்திய மீடியாக்களும் நடத்தும் வியாபார நுணுக்கங்களை நாம் புரிந்து கொண்டால் அன்றி உருப்பட வழி இல்லை. அணைத்து அரசியல் கட்சிகளும்தனித்தனியே தங்களுக்கென்று சேனல்கள் வைத்துகொண்டு பண்ணும் அடாவடிகளும் தில்லுமுல்லுகளும் நம் ஊரிலும் பிரசித்தம். ஆன்மிகம் வளர்பதாக சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் பம்மாத்து வேலைகள் மகா கேவலம்.ஜாதி,வகுப்பு வாதங்கள் முப்பை விட நிறை தற்போது காணப்படுவதற்கு இந்த மீடியாக்களே முதல் காரணம்.

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    யோசிப்பதற்கு நிறையவே விஷயங்கள் இந்தப் பேட்டியில் இருக்கிறது.

    இந்தப்பதிவில் எடுத்தாண்டிருக்கும் ஜூவி செய்தியையே எடுத்துக் கொள்ளுங்கள்! செய்தியாளர் அப்பட்டமாகக் கனிமொழி இமேஜை பில்டப் செய்கிற மாதிரி, அச்சச்சோ என்று உச்சுக் கொட்டும் அனுதாபங்களைத் தேடுகிற மாதிரித் திரித்து எழுதியிருக்கிறார்.கனிமொழிதான் நாளைய திமுகவின் அசைக்க முடியாத சக்தி என்று எந்த அடிப்படையில் கட்டுரையை முடித்திருக்கிறார்?

    படிக்கும்போதே இது செட் அப் செய்து வெளியிடப்பட்டசெய்திக் கட்டுரை, ஒரு உள்நோக்கத்துடன் தான் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போதே தெரிகிறது. யாருக்காக, அல்லது எவர் இதன் பின்னணியில் இருந்து செயல்படுகிறார்கள் என்பது ஊகிக்க முடியாத ரகசியமும் அல்ல!

    ஏமாற ஜனங்கள் தயாராக இருக்கும்போது, மிளகாய் அரைப்பது கஷ்டமா என்ன! பத்திரிக்கை முதலான ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்வது உண்டு.இந்தியாவில் அது ஊழலுக்கும் ஜனங்களைப் பிளவு படுத்துவதற்குமான கோடரிக் காம்பாகவும் இருக்கிறது என்பதுதான் வேதனையே!

    இந்த செய்திக் கட்டுரையாளர் இரா.சரவணனை அம்பலப்படுத்தி சவுக்கு டாட் நெட் தளத்தில் இன்றைக்கு ஒரு கட்டுரையும் வெளியாகி இருக்கிறது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!