கனிமொழி ஜாமீன் மனு.....சுடும் உண்மைகள்....!




2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நிதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காததால் திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கப் படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இன்று தள்ளுபடி செய்தார். மேலும், கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடர்ந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 11-ம் தேதி முதல் விவாதம் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
 
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்...

கனிமொழி, சரத்குமார் உள்பட 8 பேரின் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சைனி, அம்மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களையும் அடுக்கினார். அதன் விவரம்:

++ இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

++
சிபிஐ எதிர்ப்பு இல்லை என்பது சட்டத்தின் பார்வையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

++
ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டிய அளவுக்கு கரீம் மொரானியின் உடல்நிலை மிகுந்த மோசமில்லை.

++
சமூகத்தில் மதிப்புமிக்க நிலையில் இருப்பதுடன், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார் கனிமொழி. எனவே, தாம் ஒரு பெண் என்பதால் சலுகை அளித்திட வேண்டும் என்ற நிலை அவருக்கு பொருந்தாது. அவர் எந்த விதத்தில் சிறுமைப்படுத்தப்படவில்லை.

++
குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியம் தான். ஆனால், பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உரிமையும் அவற்றுக்கு சற்றும் குறைந்தது அல்ல.

இவ்வாறு நீதிபதி ஓ.பி.சைனி விளக்கம் அளித்தார்.

கனிமொழிக்கு இன்று ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், பாட்டியாலா நீதிமன்றத்தில் முகாமிட்டிருந்த அவருடைய உறவினர்களும், திமுகவினரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். முன்னதாக, டெல்லி நீதிமன்ற வளாகத்தில் தனது கணவர், மகன் மற்றும் தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரை கனிமொழி சந்தித்துப் பேசினார்.திமுக நாடாளு மன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, நடிகை குஷ்பு ஆகியோரும் உடன் இருந்தனர்.

கனிமொழி ஜாமீன் மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப் படுவதை யொட்டி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இன்று டெல்லி வந்திருந்தார். எனினும், அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. ஒருவேளை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால், திகார் சிறையில் இருந்து அவரை அழைத்து வருவதற்கு ஸ்டாலின் செல்லவிருந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது ஜாமீன் இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், கனிமொழியை திகார் சிறையில் அவர் சந்தித்துவிட்டு திரும்புவார் எனத் தெரிகிறது.

உயர் நீதிமன்றத்தை நாட முடிவு...

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்துள்ளதால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி, கடந்த ஐந்து மாதங்களாக திகார் சிறையில் இருக்கிறார். லஞ்சம் பெற்றது, குற்றச்சதி மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இன்றைக்குக் கனிமொழி ஜாமீன் மனு மறுக்கப்பட்ட செய்திகள் கொஞ்சம் கூடுதல் அல்லது குறைவாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு மறுபடியும் அழுத்தமாகவே சொல்லப் பட்டிருக்கிறது.

வேகவேகமாய் அரசியல் காய் நகர்த்தல்களில் இன்றைக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்றே உறுதியாக நம்பி, அதை செய்திகளில் கசியவும்  விட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நீதிபதி திரு ஒ பி சைனியின் தீர்ப்பு, கொஞ்சம் கடுமையாக இருந்த மாதிரிப் பட்டதில், அதிர்ச்சி, சோகம், அழுகை வந்ததில் ஆச்சரியம் இல்லைதான்!ஜாமீன் கிடைத்தவுடன் கனிமொழியை சென்னைக்கு அழைத்து வர அழகிரி, ஸ்டாலின் இருவரும் டில்லிக்கு விரைகிறார்கள் என்ற செய்தியும் கசியவிடப் பட்டது. அதன்படி ஸ்டாலின் தன் குடும்பத்துடன் டில்லிக்குச் சென்று மௌரியா ஹோட்டலில் தங்கியிருந்தாராம்!

அழகிரி, ஏனோ டில்லிக்கு விரையவில்லை!  மதுரையில் தன்னுடைய பண்ணை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாராம்!ஆனாலும் கனி மொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதில் அண்ணன் ஏகத்துக்கும் அப்செட் என்ற ஒரு வரி செய்திகளில் சேர்க்கப்பட்டிருந்தது. ஒருவேளை, சேர்த்துக் கொள்ளும்படி அன்பான வேண்டுகோளாகக் கூட இருந்திருக்கலாமோ?
காங்கிரஸ்காரர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம் கொஞ்சம் கொண்டாட்டம் என்று இரண்டுவிதமாகவும் எடுத்துக் கொள்கிற மாதிரித் தான் இருந்தது. காங்கிரஸ் உளறுவாயர்களில் (Spokesperson) ஒருவரான மனீஷ் திவாரி இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்கிறேன் என்று சொன்னது இது:

ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் சிறையில்தான் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.2ஜி முறைகேடு வழக்கில் திமுக எம்.பி. கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக காங்கிரஸ் இவ்வாறு கருத்து கூறியுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் சிறையில்தான் இருக்க வேண்டும். இதுதான் நடைமுறையில் உள்ள விதி. இந்தத் தீர்ப்பு தொடர்பான முழு விவரங்களையும் நாங்கள் படிக்க வேண்டும். அதன் பின்னர் வேண்டுமானால் இது தொடர்பாகக் கருத்து கூற முடியும். கீழ்நீதி மன்றம் அளிக்கும் தீர்ப்பில் இருந்து நேர்மாறான தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்க வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே பல வழக்குகளில் இதுபோன்று நடந்துள்ளது என்றார் அவர்.

திமுகவை சமாதானப்படுத்த காங்கிரஸ் அமைச்சர்கள், திஹார் சிறைக்குப் போய் கனிமொழியை சந்திக்கக் கூடும் என்ற ஊகங்கள் வெளிவந்த நிலையில், டம்மிப் பீஸ் மன்மோகன் சிங்கும் பிரணாப் முகர்ஜியும்  போய் சந்தித்தாலும் சந்திப்பார்கள் என்ற நையாண்டி டிவிட்டரில் உலா வந்துகொண்டிருந்தது.
இப்படி செய்தியை வரவழைத்தது அந்த நாட்களில்....!
ஆர் வைத்யா என்பவர் ட்வீட்டியதில்மிக சுவாரசியமாக இருந்த ஒன்று இது!

தொலைகாட்சி விவாதங்களில் இருந்து நான்கு முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். எம்கே (தாத்தா)வுக்கு மிகவும் வயதாகி விட்டது! கனிமொழி ஒரு பெண்!ராசாத்தி அவர் தாயார்! பணம், அதிகாரம் இருப்பவர்கள் தேசத்தைக் கொள்ளையடிக்கலாம்!
கனிமொழிவிவகாரத்தில் ஆரம்பத்தில் பரபரப்பாக அடிபட்ட நிரா ராடியாவை நினைவிருக்கிறதா

ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு பதவியேற்ற சமயத்தில் இந்தப் பெண்மணிதான், யார் யாருக்கு என்ன என்ன மந்திரிசபை கிடைக்கும் அல்லது வாங்கலாம் என்ற தரகுவேலையைப் பார்த்தது! இந்த அம்மணியுடன் ஆ.ராசா, கனிமொழி, ராசாத்தி இவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள், வருமான வரித்துறையால் ஒட்டுக் கேட்கப்பட்டு, செலக்டிவாக ஒரு பகுதியை மட்டும்  வெளியே கசிய விடப்பட்டன.  

அம்மணியோடு நடத்திய உரையாடல்களில் தான் கனிமொழி, தன்னுடைய சார்பில் ஆ.ராசா, தொலைதொடர்புத் துறையைப் பெறுவதில் அதிக அக்கறை காட்டினார் என்பதும், அம்மணி, ரத்தன் டாட்டாவுடன் நடத்திய உரையாடலில், கனிமொழி-ஆ.ராசா இருவருக்கிடையிலான 'உறவு' பற்றி தயாநிதி மாறன் நிறைய கிசுகிசுக்களை பரவ விட்டார் என்பதும் அவுட்லுக் வாரஇதழில் அம்பலமானது.

அதற்கு அப்புறம் தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து இன்றைக்குக் கனிமொழி கண்ணைக் கசக்கிக் கொண்டு, நீதி மன்றத்துக்குள் இருந்த பத்திரிகையாளர்களிடம் "நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானா? இந்த இடத்தை விட்டு வெளியே போங்கள்!" என்று ஆவேசப்படுகிற அளவுக்குப் போயிருக்கிறது!

பத்துவருடமாக டாட்டாக்களுக்கும் அம்பானிகளுக்கும் ஆற்றிவந்த வெகுஜனத் தொடர்பு சேவையை நிரா ராடியா நிறுத்திக் கொண்டு விட்டாராம்! வைஷ்ணவி கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து, மன்மோகன் மந்திரிசபையில் யார் யாருக்கு என்ன இலாகா என்பதைப் பேரம் பேசுகிற அளவுக்கு வளர்ந்த அம்மணி சேவையை ரத்தன் டாட்டா ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
சும்மாவா? அம்மணியின் அளப்பரிய சேவையைப் பயன்படுத்திக் கொண்டது டாட்டா தானே! தன்னுடைய சேவைக்காக அறுபது-எழுபது கோடி ரூபாய் கட்டணம் வசூலித்தார் என்று கூட செய்திகளில் வந்த நினைவிருக்கிறது!

சத்தமே இல்லாமல், சிபிஐ தன் தரப்பு சாட்சிகளாக நிரா ராடியாவையும், வாஹன்வதி என்ற அரசு வழக்கறிஞரையும் விசாரிக்கப்போவதில்லை என்று முதலில் சொல்லி விட்டு, அப்புறம் ஏதாவது அனர்த்தம் வரலாம் என்று நினைத்தார்களோ என்னவோ, முதல் பட்டியலில் இவர்கள் இருவரும் இல்லை என்று மட்டும் முடித்துக் கொண்டு இருப்பதில்..........

நிரா ராடியா இதுவரை கைது செய்யப்படவில்லை, விசாரிக்கப் படவில்லை, சாட்சியாகவும் அழைக்கப்படப் போவதில்லை என்பதையும் சேர்த்துக் கவனியுங்கள்! நிரா ராடியாவைக் காப்பாற்றுவதில் காங்கிரஸ் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்கிறது என்பது ஒருவேளை புரிந்தாலும் புரியலாம்!

எம்பிக்களை விலைக்கு வாங்கியதில் உதவிய அமர்சிங்குக்கு ஒரு மாதியான சகாயம்! நிராராடியாவுக்கு ஒருமாதிரியான நிவாரணம்! ஆனால் கூட்டணி தர்மத்தில் கனி மொழிக்கு இதெல்லாம் கிடையாது!

காங்கிரசுடைய கூட்டணி தர்மம் ரொம்ப ரொம்ப விசேஷமானதுதான்! சந்தேகமே இல்லை!

பிஜேபி சொல்கிற ஒரு குற்றச்சாட்டில் முழு நியாயம் இருக்கிறது.
காங்கிரஸ் களவாணிகள், தங்கள் களவாணித்தனத்தை மறைப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இந்த தேசத்தின் நீதி, நிர்வாகம், அரசு அமைப்புக்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் குழப்பவும், திசைதிருப்பவும் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி தர்மம் என்று பேசிக் கொண்டே தங்களுடைய பாவ மூட்டைகளையும் கூட்டாளிகளின் தலைக்கே தீம்பு வருகிற மாதிரித் தூக்கி வைக்கிறார்கள்.

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

4 comments:

  1. ஊடகங்களின் வியாபாரங்கள் பற்றிய சென்ற பதிவையும் படித்தேன். எல்லா ஊடகங்களுமே வியாபாரம்தான் செய்கின்றன. இவர்கள் நடுநிலையுடன் செயல்படுவார்கள்/எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. இரண்டு பேர் மட்டும் சந்தித்துப் பேசிய இடத்தில் கூட அருகில் இருந்து பார்த்தது போல இவர்கள் சொல்லும் கிசுகிசுக்களைப் படித்து பரவசமடையும் மக்களுக்கும் பொழுது போக வேண்டுமே...மேலும், நடு நிலை என்பதே இங்கு ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது! அவரவர் அபிப்ராயங்கள், ஆசைகளுக்கேற்ப! செய்ததை மறந்து இப்போது 'மனிதாபிமானம் இல்லையா' என்று வேதனைப் படும் கனியின் வேதனை புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்றாலும் செய்ததற்கு அனுபவித்துதானே தீர வேண்டும்?

    இந்தியாவின் சென்சிடிவ் விஷயங்கள் எல்லாவற்றிலும் டெக்னாலஜியின் அதிமுன்னேற்றத்தால் அவர்கள் விரும்பும்/காட்டும் தோற்றத்தை மக்கள் மனதில் பதிவுகளாகப் பரவ வைத்து விடுகின்றனர். மெஸ்மரைஸ் ஆனது போல மக்கள் 'இதுவும் மறந்து போகும்' என்று கடந்த காலக் கொடுமைகளை மறந்து நிகழ்காலச் சோகங்களில் ஆழ்ந்து விடுகின்றனர்.

    நீதிகள் வழங்கப் படுவதிலும் நிறைவேற்றப் படுவதிலும் ஏற்படும் தவிர்க்கமுடியாத கால தாமதங்களும், இந்தியாவின் வாக்கு வங்கி அரசியலும், பலவீனமான தலைமையும் இதற்கெல்லாம் காரணங்கள்.

    ReplyDelete
  2. "எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்...."

    திரும்பி வர முடியாத இடத்துக்கு...!!

    "என்ன செய்யப் போகிறோம்..."

    புழுங்கிப் புலம்புவதைத் தவிர என்ன செய்ய முடியும்? நம் கையில் வாக்கு என்கிற உபயோகமில்லாத ஆயுதத்தால் ஒரே குணத்தில் வெவ்வேறு ஆட்களைத்தான் தெரிவு செய்ய முடிகிறது!

    ReplyDelete
  3. வாருங்கள் ஸ்ரீராம்!

    நாலாவது தூண் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்துத் தேடினால், விலைபோகும் ஊடகங்கள், செய்தியை விலைக்கு வாங்கும் அரசியல் புள்ளிகளைப் பற்றி முன்பே எழுதியிருக்கும் தொடர்புடைய பதிவுகளைப் பார்க்க முடியும்.கடந்த சில பதிவுகளில் தொடர்ச்சியாக, ஒரு நபர் செய்வதை எல்லாம் செய்து விட்டு, தனக்கு அனுதாபம் தேடிக் கொள்கிற மாதிரி எப்படி செய்திகளை விதைக்க முடிகிறது, ஊடகங்களும் quid pro quo ரகத்தில் எப்படி ஒத்துழைக்கின்றன என்பதைக் கொஞ்சம் படிக்கும்போதே ஊகம் செய்துகொள்கிற மாதிரித்தான் குறிப்பிட்டிருந்தேன்.

    ஊடகங்கள் செய்வது வியாபாரம் தான்! ஆனால், எல்லை,விவஸ்தை மீறிப் போன வியாபாரமாகப் போகும்போது, கொஞ்சம் கவனப்படுத்த வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக,சமீபத்தில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பேசியதை வைத்து மீடியாக்கள் கொதித்தேழுந்திருக்கின்றன என்ற செய்தியையும் சேர்த்துப் பாருங்கள்.

    செய்திகளை முந்தித்தருவது என்ற நிலை மாறி, செய்திகளை கற்பனையில் உருவாக்கித் தருவது என்ற நிலைக்கு மீடியங்கள் போய்ச் சேர்ந்திருக்கிற பரிதாபமான நிலையைத் தான் இந்தப்பதிவுகளில் தொடர்ச்சியாகப் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். சமீபத்தில், இதே மாதிரி எல்லைமீறிப்போன ஸ்டார் டிவி அதிபர் ராபர்ட் முர்டோக் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தலைகுனிய நேரிட்ட சம்பவத்தை அறிந்திருக்கிறீர்கள்தானே!

    ReplyDelete
  4. உங்கள் ஆதங்கங்களை மனதில் தாங்கிக்கொண்டிருக்கின்றோம்...

    புதிய விளிப்புணர்வு கொண்ட ஒன்று பட்ட தேசத்தை எழுத்துக்கள் மூலமாக மாற்ற முடியும்..

    வரவேற்கிறோம்.....

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!