இந்திய அரசியல்-எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்?



"ஒவ்வொரு துறையிலும் இந்தியா சீர்படுத்த முடியாத அளவு பழுதடைந்து வருகிறது. இந்த மாபெரும் தேசத்தை வழி நடத்தக் கூடிய எந்தவொரு தலைவரோ, கட்சியோ கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை"

என்ற ஆதங்கத்தோடு வெளிவந்த வார்த்தைகள் திரு தேவனுடையது! ப்ளஸ்ஸில் நடந்த ஒரு விவாதத்தின் பின்னூட்டமாக அவர் எழுதிய வார்த்தைகளின் பின்னால் இருந்த ஏமாற்றம் இப்படியும் வெளிப்படுகிறது.

"அதனால்தான் மூழ்கும் ஓட்டைக் கப்பலில் இருந்து கொண்டு அதனை சரிசெய்ய முயற்சி செய்து சக்தியெல்லாம் விரயம் செய்வதைக் காட்டிலும் நமக்கென ஒரு ஒழுங்கான சிறு படகை தயார் செய்ய முடியும் என்ற நோக்கத்தில்தான் தனித் தமிழ்நாடு பற்றி பேசி வருகிறேன்"

இந்தக் கண்ணோட்டம், வலி, வேதனை எந்த அளவுக்கு சரி?ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் தீர்வு கிடைக்குமா இல்லையா என்பதே இருக்கிறது.

ஒரு வழக்கம், அல்லது அமைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! அதை மாற்றுவதென்பது அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவதில் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்தோம் என்றால், அப்போது வருவது சலிப்பும், சோர்வும் தோல்வி மனப்பான்மையும் தான்!

மாறாக, மாற்றம் என்பது எப்போதும் ஒரு சிறுபுள்ளியாக ஆரம்பித்து, மொத்தத்துக்கும் பரவும் என்பதைப் புரிந்து கொண்டோமானால், நாம் விரும்புகிற மாற்றத்துக்கு நாம் தான் முதலில் விதை நெல்லாக, களமாக இருக்க வேண்டும், மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும், 
இதுவரை பழகிப்போனதை, உதவாததை உதறுவோம் என்ற முடிவுக்கு வருவதிலும் தான் இருக்கிறது என்பதும் புரியும்

தினமணி  தலையங்கம்: ஏமாற்றம்!


எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் திருத்தங்களைச் செய்யாவிட்டால் - ஒவ்வொரு கட்சியும் இருபது, முப்பது திருத்தங்களை கூறியுள்ளன - மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறுவது சாத்தியமே இல்லை என்கின்ற புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாநிலங்களவையில் நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. ஆகவே மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஐந்து மாநிலஙகளின் தேர்தல் 2012 மார்ச் 4-ம் தேதிதான் முடிவடையும் என்பதால் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக லோக்பால் மசோதா விவாதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.இதைப் பார்க்கும்போது, ஏதோ திட்டமிட்டு, மிகவும் புத்திசாலித்தனமாக, ஆனால் மக்கள் மத்தியில் யாருமே எந்தக் கட்சியையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடத்தப்படும் நாடகம்தானோ இது என்று ஒரு குடிமகனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. மாநிலங்களவையில் தற்போது 243 பேர் இருக்கின்றனர். 122 பேர் ஆதரித்தால்தான் லோக்பால் மசோதா நிறைவேறும். 

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாநிலங்களவையில் 92 பேர் உள்ளனர். மீதமுள்ள 30 பேர் ஆதரவைப் பெறுவது, ஆட்சிப் பொறுப்பில் உள்ளதும், அனுபவங்கள் நிறைந்ததுமான காங்கிரஸ் கட்சிக்குக் கடினமொன்றும் அல்ல.தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ஒருவரையொருவர் காரசாரமாகத் திட்டிவிட்டு, மாநிலங்களவையில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக நின்றால், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்கு திரட்டுவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்த விவகாரத்தைத் தேர்தலுக்கு பின்பு- வெற்றியோ தோல்வியோ எதுவான போதிலும் பார்த்துக்கொள்வோம் என்கின்ற ராஜதந்திரமான முடிவால்தான் இப்போதைக்கு லோக்பால் மசோதா வாக்குவாதத்துடன், தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

லோக்பால் மசோதாவைத் தயாரித்த நிலைக்குழுத் தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லோக்பால் மசோதாவில் எதற்கு அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை கூறியிருக்கிறார். 

"இரண்டரை மாதங்களாக இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் விவாதத்துக்குரியவையாக 23 விஷயங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டன. அதில் இரண்டு விஷயங்களில் மட்டுமே கருத்து வேறுபாடு சற்று அதிகம் எனலாம். அவை, மத்தியப் புலனாய்வுத் துறையை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது (ஆதரவு 20, எதிர்ப்பு 10) அரசு ஊழியர்களில் சி, டி பிரிவை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது இரண்டும்தான்'' என்கிறார் அவர். 

இதை வைத்துப் பார்க்கும்போது, இப்போது மாநிலங்களவையில் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படுகின்ற லோக்ஆயுக்தா அமைப்பதைக் கட்டாயமாக்குவது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும் என்கின்ற விவகாரமே நிலைக்குழுவில் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்று கூச்சல்போடும் அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகளும் நிலைக்குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள். நிலைக்குழுவில் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் 10 பேருக்கும் குறைவு. அப்படியிருக்கையில் நிலைக்குழுவில் அதிகபட்சமாக எதிர்க்கப்பட்ட (13 பேர்) விவகாரம் அரசு ஊழியர்கள் சி, டி பிரிவு குறித்தது தான். மாநிலங்களின் உரிமை, அது இது என்று குரல் கொடுக்கும் உதிரி - எதிர்க்கட்சிகள் அனைத்தும் அறைக்குள் பேசும் போது அனுசரிப்பாக இருக்கிறார்கள். அவையில் மக்கள் அறியப் பேசும்போது, கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்து மீண்டும் கூடும்போது, ஆதரிப்பார்கள் அல்லது வெளியே சென்றுவிடுவார்கள். அவைக்குள் இருக்க மாட்டார்கள்.

தேர்தல்முடியும் வரை தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது லோக்பாலை கொண்டு வந்து விட்டதாகப் பேச வேண்டும். ஆனால், கொண்டு வந்து விட்டதாகவும் இருக்கக்கூடாது. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்த்தால் எப்படி? எதிர்க்கட்சியைக் காட்டிலும் ரொம்ப எதிரிபோல, தோழமைக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் ரொம்ப ஆவேசமாக எதிர்க்கிறது. ஆளும் காங்கிரசும் நிஜமாகவே பயப்படுவதைப்போல நடுநடுங்குகிறது.  

1968 முதல் லோக்பால் மசோதா விவாதிக்கப்படுகிறதே தவிர, நாடாளு மன்றத்தில் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளிப் போகிறது. இந்த முறை நிலைக்குழு வரை சென்று மக்களவையிலும் நிறைவேறி, மாநிலங்கள் அவையில் விவாதம்வரை சென்று முடக்கப் பட்டிருக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எந்தவொரு அரசியல் கட்சியும் வலுவான லோக்பால் அமைப்பு ஏற்படுவதை விரும்பவில்லை என்பதுதான் அது.

நமக்குக் கோபம் அரசியல்வாதிகளிடம் வரவில்லை. அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், மக்களின் பேராதரவுடன் எழுச்சியை ஏற்படுத்திய "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பும் அதன் வேகமும் தடம்புரண்டுவிட்டதே என்பது தான்! 

நமது ஆதங்கம், ஆத்திரம் எல்லாமே. அண்ணா ஹசாரே குழுவினர் ஊழலுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்தைக் காங்கிரசுக்கு எதிரான போராட்டம் ஆக்கியதன் விளைவாகத் தங்களது நம்பகத்தன்மையை இழந்து விட்டதால் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான் 

இது.லோக்பாலுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் இன்னொரு எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்? அது நிச்சயமாக அண்ணா ஹசாரேயாக இருக்க முடியாது. நமது அரசியல்கட்சிகளாகவும் இருக்க வழியில்லை. இந்த நிலையில், இந்திய மக்கள் இலவுகாத்த கிளிகளாகக் காத்திருக்க வேண்டியது தானா


3 comments:

  1. காங்கிரஸ் என்ன எதிர்பார்த்ததோ அதையேஅண்ணா ஹசாரே செய்துவிட்டார். ஊழல் எதிர்ப்பு என்பது பின்னாளில் காங்கிரஸ் எதிர்ப்பாக ஆக்கியது அண்ணா ஹசாரே குழிவினரின் சறுக்கல் தான். ஆனாலும் ஒன்றும் ஓய்ந்து ஒதுக்கி போய்விட்ட நிலை இல்லை. பார்க்கலாம் கஜ்ரிவால் என்ன திருப்பம் கொண்டுவருவார் என்று. அவரின் செயல் பாடுகள் நம்மிக்கை அளிப்பதாகவே எனக்கு படுகிறது.

    ReplyDelete
  2. மற்ற நாடுகளில் உள்ள நிலைமை இங்கு இந்தியாவில் நிச்சயம் இல்லை. இருக்கப்போவதுமில்லை.
    இங்கே மொழியும், உடையும் ,உணவும் ,கும்பிடும் சாமியும் ,மதமும், ஜாதியும்,சினிமாவும், .கட்சிகளும் கணக்கற்றவை. இவைகளை மீறி இவர்களை ஒன்றாக இணைப்பது என்பது.....................இது காந்தியின் காலமும் அல்ல. யாராவது தொப்பி போட்ட இந்திக்காரர்கள் சொன்னால் கேட்பதற்கு.

    இந்த உண்மை யாருக்கு புரியுமே காங்கிரஸ் கார்களுக்கு நன்றாகவே புரியும். நம் மக்கள் அவிழ்த்து நெல்லிக்காய் மூட்டைகள் தான் என்பது.
    பழைய சோவியத்து யூனியன் கதை தான் இங்கு நிகழ அதிக வாய்ப்புள்ளது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதுதான் வருங்காலங்களில் சாத்தியமாய் இருக்கும். வேறு வழி இல்லை. அதற்கான ஆரம்பங்கள் அறிகுறிகள் தோன்றி யுள்ளன.

    ReplyDelete
  3. வாருங்கள் மாணிக்கம்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ஊழல் எதிர்ப்பு காங்கிரஸ் எதிர்ப்பாக மாறியதில் எந்தத் தவறுமில்லை. அந்த அளவுக்கு, காங்கிரசும் ஊழல் அரசியலும் பின்னிப்பிணைந்து ஒன்றிக் கிடக்கிறது. ஒரே ஒரு நேர்மையான, சுயமாக சிந்திக்கத் தெரிந்த,முதுகெலும்புள்ள காங்கிரஸ் தலைவரைக் காண்பிக்க முடியுமா? ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பதே காங்கிரசின் ஒரே லட்சணம்!

    நிறையப்பேர் நினைக்கிற மாதிரி அண்ணா ஹசாரேயோ அல்லது ஊழலுக்கெதிரான இந்திய இயக்கமோ ஜனங்களுடைய ஆதரவை இழந்துவிடவில்லை. சென்ற ஆகஸ்டில் அவருக்குக் கிடைத்த ஊடக வெளிச்சம் இப்பொது குறைந்திருக்கிறது என்பதைத் தவிரப் பெரிய வித்தியாசமில்லை. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு, தன்னார்வலர்களாக, சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் சேர்த்துப் பார்த்தால்,ஊடகங்களில் ஹசாரே இயக்கத்தைக் குறைத்து மதிப்பிட, அல்லது முன்பு செய்ததற்கு மாறாக அவரை ஆதரவிழந்தவர் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் செய்ய முயல்கிற *கை* எது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    அதுவும் போக,நாற்பத்திரண்டு ஆண்டுகளாக நம்மூர் அரசியல்வாதிகளால் வெற்றிகரமாகத் தள்ளிப்போடப்பட்ட விஷயம் இது! இப்போதும் அதையே தான் தங்களுடைய *சட்டம் இயற்றுகிற உரிமை படைத்த* சபைகளில் அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆனால்,ஊழலுக்கெதிரான இந்தியாவாக ஒரு இயக்கம், முன்பிருந்ததில்லை, இப்போது உருவாகி வருகிறது. கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!