ஜனவரியில் ஒரு அரசியல் நவராத்திரி! ஒவ்வொரு நாளுமே அதிர்வேட்டுத்தான்!



வருகிற இந்த ஒன்பது நாட்கள்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, கூட்டணிக் கட்சிகளின் விரிசலில் அழுகிச் சிதையுமா அல்லது நீதிமன்றத்தீர்ப்புக்களில் கருகுமா என்ற கேள்விக்கு விடை தெரிய வரலாம் என்ற  பரபரப்புத் தொற்றிக் கொள்ள வைத்திருக்கும் நவ ராத்திரியாக, வருகிற ஒன்பது நாட்களும் இருக்கும்!

திருட்டுப் பூனைகளுக்கே ஒன்பது உயிர்கள் என்பார்கள்!
அப்படியானால், திருட்டு அரசியல் வியாதிகளுக்கு அதைவிடக் கூடத் தானே இருக்க வேண்டும்? அரசியல்வியாதிகள் மற்றவர்களை மாட்டி விட்டுத் தாங்கள் தப்பித்துக் கொள்கிற கலையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை! இங்கே மற்றத் துறைகள், அவர்களை மாட்டி விடுகிற அளவுக்கு நேர்மையானதாகவும், வலிமை, துணிச்சலோடு இருந்ததில்லை என்பது மட்டுமே இத்தனை நாட்கள் அவர்கள் தப்பித்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்து வந்திருக்கிறது.

கே ஜி பால கிருஷ்ணன் மாதிரி அரசுக்கு எல்லாவிதத்திலும் வளைந்து கொடுக்கிற மாதிரியான ஒரு தலைமை நீதிபதி இருந்திருந்தால், இன்றைக்கு, உச்சநீதிமன்றத்தில் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று வரிசையாக ஊழல் மந்திரிகள் என்று சிலரை மட்டும் தனிமைப்படுத்தி திஹாருக்குப் பெயரளவுக்கு அனுப்பி வைத்து மற்றவர்கள் எல்லாம் கறைபடாத கைகளுக்குச் சொந்தக் காரர்கள் என்று நாடகமாட வேண்டிய அவசியமே இருந்திருக்காது!

கூட்டணி தர்மம் என்றால் பெட்டிகளை மட்டும் பங்கு போட்டுக் கொள்வதல்ல! மாட்டிக் கொண்டால் , சிறைக்குப் போவதிலும் கூட்டாளியாக வேண்டுமே என்பது கூடத் தெரியாத மண்ணாந்தைகள் தான் நம்மை ஆள்கிற பொறுப்பில் இருக்கிறார்கள்!ஆ. ராசா, தெனாவெட்டாக, நான் என்ன குற்றம் செய்தேன்? பிரதமருக்கும், அன்றைய நிதியமைச்சருக்கும் தெரிந்தே தானே செய்தேன்? வேண்டுமானால், அவர்களையும்சாட்சிகளாக இந்த வழக்கில் விசாரித்துப் பார்க்கலாமே என்று சொல்கிற அளவுக்கு இந்தக் கூட்டணிக் குழப்பம் பப்பரப்பா என்று பல்லை இளித்துக் கொண்டு அம்மணமாக இருக்கிறது.

ஊழல் இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் அதை சட்ட ரீதியாக நிரூபிப்பது, அப்புறம் அதற்குத் தகுந்த மாதிரி தண்டனை அளிப்பது என்பது சாத்தியமே இல்லாத அளவுக்கு நம்முடைய நிர்வாகம், நீதித்துறை, அரசியல், ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று தங்களைப் பற்றி பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள் எல்லாமே சீரழிக்கப் பட்டிருக்கின்றன.  எமெர்ஜென்சி தருணத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப அன்றைய நீதிபதிகளில் வேறு எவருமே இல்லை.

ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமப்பத்திரிகைகள், ஒன்றிரண்டு, ஜனசங்கப் பத்திரிகைகள், இங்கே தமிழ்நாட்டில் துக்ளக் தவிர்த்து ஊடகங்கள் எதுவுமே எமெர்ஜென்சி காலக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவை அல்ல!


அரசு அதிகாரிகள் எவருக்குமே முதுகெலும்பு இருந்து, அமைச்சர் பெரு மக்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் இருந்ததில்லை என்பது மட்டுமில்லை, அதை விட அவர்கள் தான் ஊழல் செய்வது எப்படி என்பதை பல அமைச்சர்களுக்கும் கற்றுக் கொடுத்ததே என்பதும், ஊழலின் கூட்டாளிகளாகப் பல அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்! மீதமுள்ளவர்களில் பெரும்பாலோனோர், கோழைகளாகத் தலைவணங்கித் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நேரடியாகவோ மறை முகமாகவோ உடைந்தையாக இருந்தார்கள் என்பதை இங்கே அழுத்தமாகச் சொல்லித்தான் ஆக வேண்டும்!

இங்கே தமிழகத்தில் திமுக, அரசு இயந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிற கலையில் வேறெவரையும் விடத் தேர்ச்சி பெற்றிருந்தது கூட எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!ஆனால், அந்த சாமர்த்தியம் ஒன்று தான் கருணாநிதியை மிகப்பெரிய அரசியல் சாக்கியராகவும், வித்தகராகவும் காட்டிக் கொண்டிருக்கிறது, கட்சித் தொண்டர்களின் வலுவும் கட்டமைப்பும் எப்போதோ காணாமல் போய் விட்டது என்றால் ஒத்துக் கொள்வதற்குச் சங்கடமாகத்தான் இருக்கும்! ஆனால் அது தானே உண்மை!



பொம்மை அசைவதே விந்தையாகத் திரைப்படங்கள் இருந்த காலத்தில் அடுத்த கட்டமாக, திரையில் பொம்மைகள் வசனம் பேசியது மிகப் பெரிய விந்தையாக இருந்ததில் ஆச்சரியமில்லை!அதை விட அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, அடுக்கு மொழி வசனங்கள், உவமானங்கள் என்று நிறைய அள்ளித் தெளித்துக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடைசியில் ஒன்றுமே இல்லாத ஒன்றை வசனஜாலமாகக் காட்டி வெற்றி பெற்றவர் கருணாநிதி! அன்றைக்கு பொம்மைகள் பேசுவதே விந்தை என்றிருந்த காலத்து டெக்னிக் இன்றைக்கு எடுபடுமா? பெண்சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை என்று அடுத்தவன் காசைக் கரைத்து எடுக்கப்பட்ட படங்களில் பெருத்த ஓசை எழுப்பிக் கொண்டிருந்த உளி எந்த அளவுக்குத் துருப்பிடித்துக் காணாமலேயே போய்விட்டது என்பதைச் சொல்லுமே!

நவராத்திரி! அடுத்து வரும் இந்த ஒன்பது நாட்களுக்கும், எமெர்ஜென்சி, கருணாநிதி, உளியின் ஓசை, துருப்பிடித்துத் தேய்ந்து போன திராவிட இயக்கம் இவைகளுக்கெல்லாம் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு போன்ற மிக முக்கியமான வழக்குகளைக் கண்காணித்து வரும் உச்சநீதிமன்ற பெஞ்சில் இருக்கும் இரண்டு நீதிபதிகளில் திரு. சிங்வியும், திரு அசோக் குமார் கங்குலியும் இடம் பெற்றிருக்கிறார்கள். நீதிபதி கங்குலி, வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி ஒய்வு பெறுகிறார். அவர் ஒய்வு பெறுவதற்கு முன்னதாக, இந்த பெஞ்சின் முன்னர் இருக்கும் சில முக்கியமான வழக்குகளில் ஏற்கெனெவே தீர்ப்பு ரிசர்வ் செய்யப்பட்டு விட்டதை வருகிற ஒன்பது நாளைக்குள்  எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பது இப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்ற டாக்டர் சுப்ரமணிய சுவாமியின் மனு மீதான தீர்ப்பும் ஒன்று! இதே வழக்கு, சிபி ஐ சிறப்பு நீதிமன்றத்திலும் பாரலலாக நடந்து அதன் மீது தீர்ப்பு வருகிற நாலாம் தேதி சொல்லப் படுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடாக வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுமா என்பதும் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் முக்கியமான பரபரப்பில் ஒன்று 

இதுபோக பிரசாந்த்பூஷன், தொடுத்திருக்கும் சில மனுக்களின் மீதும் தீர்ப்பு தயாராக இருக்கிறது. இந்த தீர்ப்புக்கள் சாதாரமானவை அல்ல! குறிப்பிட்ட சிலமந்திரிகளுக்குப் பெரிய சிக்கலைக் கொடுக்கக் கூடியவை என்பதோடு, ஆளும் ஐ மு கூட்டணிக் குழப்பத்தையே தலைகீழாகக் கவிழ்த்துவிடக் கூடியவை! அதனால் தான் திரு கங்குலி ஒய்வு பெறுவதற்கு முன்னால் வழங்க இருக்கும் தீர்ப்பு விவரங்களைக் குறித்தான முக்கியத்துவம் பரபரப்பாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது.

சில தளங்களில், கங்குலி ஒய்வு பெற்ற பிறகு ஸ்பெக்ட்ரம் வழக்கைக் கண்காணிக்கும் பெஞ்சில் யார் இடம் பெறுவார்கள் என்பதை பற்றி மட்டுமே முக்கியமாக சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.

சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னால், உச்சநீதிமன்ற நீதிபதி திரு கங்குலி, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்; பேசியதில் இருந்து ஒன்றிரண்டு வரிகளைச் சொன்னால் இந்தப்பதிவில் முந்தைய பாராக்களில் சம்பந்தமில்லாத பழைய கதைகளைத்தொட்டுப் பேசிக் கொண்டிருந்தது ஏன் என்பது புரியும்!

"லஞ்சம் ஊழல் என்பது வெகு ஆழமாக வேரோடியிருக்கிறது.நம்முடைய சமூக அமைப்பில் துரதிர்ஷ்ட வசமாக ஊழல் செய்பவருக்குத்தான் வெற்றிகரமான வாழ்க்கை அந்தஸ்து கிடைத்து வருகிறது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வோம்.ஊழல் செய்பவர் சமுதாயத்துக்கு வெளியே இருந்து வருபவர் அல்ல. பெரும்பாலான தருணங்களில், அவர் ஒரு தலைவராகவோ, ஹீரோ மாதிரிக் கொண்டாடப்படுகிறவராகவோ இருக்கலாம். ஊழல் தடுப்புச் சட்டம் என்று இருக்கிறது. ஒரு நீதிபதியாக இருந்து அல்ல, என் மனதில் படுவதைச் சொல்கிறேன். அது ஊழலைப் பாதுகாக்கிற சட்டமாகவே இருக்கிறது. இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது, அதாவது ஊழல் குற்றச் சாட்டைஒருவர் மீது சுமத்த முன் அனுமதி பெறவேண்டும்!யார் இந்த முன் அனுமதியைத் தருவது? இப்படி ஒரு பாதுகாப்பு, தடுப்புச் சுவர் இல்லையானால், ஒன்றுமில்லாத குற்றச்சாட்டுக்களாக நீதிமன்றத்தில் குவியும் என்று ஒரு சாக்காகச் சொல்லப்படுகிறது. ஆக, ஊழலை அறவே அகற்றுவதில்  நாம் உண்மையானவர்களாக இல்லை."

பழைய நடப்பு, இப்போது நடந்துகொண்டிருப்பது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொஞ்சம் என்னதான் நடக்கும் என்று கொஞ்சம் ஊகிக்க முடியுமா? கொஞ்சம் முயன்று தான் பார்ப்போமே!
2010 ஆம் வருடம்,வரிசையாக மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருகிற வருடமாக இருந்தது என்றால் 2011 ஆம் ஆண்டோ, அந்த மெகா ஊழல்களுக்குப் பொறுப்பானவர்கள்  யார் என்பதை அடையாளம் காட்டியே ஆகவேண்டிய அவசியத்தை உண்டாக்கியது. வழக்கமாகப் பூசி மெழுகிவிட முடியாதபடி, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றமே  தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக் கொண்டது.

அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பின் அடையாளமாகத் தொடங்கிய இயக்கம், சிறுபொறி பெரு நெருப்பாகிவிடும் என்று ஆளும் கட்சி பயந்தது. போராட்டத்தை திசைதிருப்ப, களங்கப் படுத்த எல்லாவகையிலும் முயன்றது. ஒரு லோக்பால் மசோதாக் கூட நாற்பத்துமூன்று ஆண்டுகளாக வெறுமே பேசிக் கொண்டே இருந்து, நிறைவேற்றமுடியாத கபடம் வெளிப்பட்டது.

ஊழலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அதோ அவன், இல்லை இல்லை இதோ இவன் என்று எங்கெங்கோ கையைக் கட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது என்று, கூட்டணி தர்மத்தில் கையை வைக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது பாருங்கள், இங்கே தான், பழைய நினைப்புடா பேராண்டி என்று பராசக்தி வசனத்தை வைத்து மட்டுமே சிறந்த கதை வசனகர்த்தா வாகக் காலம் பூராவும் ஓட்ட முடியாது என்று ஆகியிருக்கிற யதார்த்தம் கண் முன்னே நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.

ஒய்வு பெறப்போகும் நீதிபதி கங்குலி என்ன தீர்ப்பு எழுதுவார், அவரிடத்தில் வேறு யார் வருவார், அப்புறம் அந்த பெஞ்ச் முன்னால் உள்ள வழக்குகள் என்னவாகும் என்பதில் எல்லாம் விஷயமே இல்லை!
மண்ணுமோகன் சிங்  மரியாதை இழந்து, ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரட்டுமே அது வரை பொறுத்திருக்கலாம் என்று நினைத்தால் கூடக் காலம் அனுமதிக்காது போலத்தான் ஒரு வெளிச்சக் கீற்று 2012 இன் துவக்கத்திலேயே தெரிகிறது!

சதிவேலை சந்தேகங்களும்...... தமிழ்நாடு அரசியலும்!



ஒரு சமுதாயப் பொறுப்புள்ள  ஊடகம், நாளிதழ்களில் வெளியாகும் தலையங்கம், செய்திகள்  மிகவும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில் இன்று தமிழில் வெளிவரும் நாளிதழ்களில் தினமணி ஒன்று தான் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து தலையங்கம், செய்திகளை வெளியிட்டு வருகிறது.மற்றவை வெறும் பரபரப்பு அல்லது வதந்திகளை  மட்டுமே செய்தியாக்குகிற திருவிளையாடல்களில் மட்டுமே குறியாக இருக்கின்றன.


முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பாராட்டப்படவேண்டிய விஷயம் ஒன்று உண்டு! அது செய்தித்தாட்களில், வார இதழ்களில் வெளி வந்திருக்கும் முக்கியமான செய்திகளைப் படித்துப் பார்ப்பது!தினமணி தலையங்கம் அவரது ஆட்சிக்காலத்தில் இப்படி வெளிவந்திருக்குமேயானால், உடனடியாக இரண்டு விஷயங்கள் நடந்திருக்கும்! முதலாவதாக, தினமணி ஆசிரியரின் ஜாதி என்ன என்று பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி சாயம் பூசுவது! அடுத்தது, தன்னுடைய ஆட்சிக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகச் சொல்லி அவதூறு வழக்குத் தொடரப்போவதாக மிரட்டுவது!அதையும் தாண்டி, ஊடகங்களில் வெளியாகிற செய்திகள், தலையங்கம் மீது வேறு என்ன உருப்படியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என்பதில் எனக்கு வேறுபட்ட கருத்து இருந்தாலுமே, கருணாநிதியிடம் பிடித்த அம்சமாக, செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்கிற இயல்பைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!


இப்போதைய முதல்வர் அப்படி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்கிற வழக்கம் உள்ளவரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. செய்திகளைத் தானே உடனுக்குடன் தெரிந்துகொள்கிற வழக்கம் உள்ளவராக இருந்திருந்தால், இந்த எட்டு மாதங்களில்,தன்னுடைய ஆட்சியில் ஏற்பட்ட சறுக்கல்களைக் கொஞ்சமாவது திருத்திக் கொள்ள முனைந்திருப்பாரோ என்னவோ! அதுவும் எனக்குத் தெரியாது.


அரசு ஊழியர்களைக் குளிர்விக்கிற மாதிரி சில விஷயங்களை முதல்வர் அறிவித்துக் கொண்டிருப்பது இருக்கட்டும்! துருப்பிடித்துப் போன அரசு இயந்திரம் இயங்குகிற முறையைக் கொஞ்சம் அல்ல- நிறையவே சரிசெய்தாகவேண்டும் என்பதை இன்றைய தினமணி தலையங்கம் அழுத்தமாகச் சொல்கிறது.
 
தினமணி தலையங்கம்: சதியா இல்லை விதியா?


சென்னை சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான கல்சா மகால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒன்று, இதன் பின்னணியில் சதிவேலைகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதும், இரண்டு, தீயணைப்புத் துறை இன்னமும் நவீனப்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதும்தான் அவை. 
 "ஸ்டவ் வெடித்துப் பெண் மரணம்" என்று எடுத்த எடுப்பில் சொல்வதைப் போல, இந்தியாவில் நேரிடும் எல்லாத் தீவிபத்துகளுக்கும் சொல்லப் படும் காரணம் - மின்கசிவு. இந்தத் தீ விபத்திலும்கூட, மின்கசிவுதான் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.   

இந்தக் கட்டடத்தில் தொழில் வணிகத் துறை மற்றும் சமூக நலத்துறை இயக்ககங்கள் செயல்பட்டு வந்தன. சமூக நலத்துறை செலவழிக்கும் துறை. இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு மிக அதிகம். தொழில் மற்றும் வணிகத் துறை அரசுக்கு வருவாய் சேர்க்கும் துறை. அரசு செலவழித்தாலும், வருவாயை ஈட்டினாலும் அங்கே அதிகார ஊழலுக்கு நிறையவே இடம் இருக்கும் என்பது பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தத் தீவிபத்தில் இத்துறை சார்ந்த முக்கிய ஆவணங்கள் சாம்பலாகியுள்ளன.  தமிழ்நாடு தேர்வாணையக் குழுவில் நடந்த ஊழல்களில் உறுப்பினர்கள் வீடுகள் மட்டுமன்றி, வேலையில் சேர்ந்த சில நபர்களின் வீடுகளிலும்கூட அண்மைக் காலமாக நடைபெற்ற அதிரடி சோதனைகளை எண்ணிப் பார்க்கும்போது, முக்கிய ஆவணங்களைத் தீக்கிரையாக்கிவிட்டு, குழப்பம் விளைவிக்கவும், இந்தத் துறைகள் சார்ந்த ஏதோ ஊழலை மறைக்கவுமான சதித்திட்டம் இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன.  
கல்சா மகால் சென்னையில் இருக்கும் மிகச் சில அரிய கட்டடங்களில் ஒன்று என்பதால் இந்தக் கட்டடத்தை அப்படியே பழைமையுடன் காத்து வந்தனர். இப்போது தீயினால் இடிந்து உருக்குலைந்துவிட்ட இந்தக் கட்டடத்தை முற்றிலுமாக அப்புறப்படுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை. மூர் மார்க்கெட், ஸ்பென்ஸர் ஆகியன தீவிபத்தில் எரிந்த பிறகு அங்கே தோன்றிய நேரு ஸ்டேடியம், ஸ்பென்சர் பிளாசா போல வேறொரு பிரம்மாண்டமான கட்டடம் இங்கேயும் வருமோ என்று சந்தேகிக்க இடமேயில்லை. ஏற்கெனவே உள்ள எழிலகத்தையும் இடித்துவிட்டுத்தான் கட்ட முடியும். அது சாத்தியமில்லை.  மேலும், ஆழிப்பேரலைத் தாக்குதலுக்குப் பின் மெரீனா பகுதியும் கடலோர ஒழுங்காற்று மண்டல வரையறைக்குள் வந்துவிட்டது. மெரீனாவுக்கு எதிரே மிகப்பெரிய கட்டடங்கள் புதிதாகக் கட்டுவதற்கு அனுமதி கிடைப்பது கடினம். 

ஆகவே, இந்தத் தீ விபத்துக்கு ஆவணங்களை எரிக்கும் உள் நோக்கத்தைத் தவிர, வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி உள்நோக்கம் இல்லாமல் போனால் இது ஓர் எதிர்பாராத விபத்தாக மட்டுமே இருக்க முடியும்.  

இரண்டாவதாக, தீயணைப்புத் துறை நவீனமயமாகவில்லை என்பதற்கு இந்தத் தீவிபத்து ஓர் எடுத்துக்காட்டு.  ஒரு தீவிபத்து நடக்கும்போது அதை வெளியிலிருந்து கட்டுப்படுத்தும் அனைத்துக் கருவிகளும் இருந்தும் அவை உடனடியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும், சில வீரர்கள் தீ எரியும் பகுதிக்குள் சென்று தீயை அணைக்க முற்பட்டபோது, மேல்தளம் தீயினால் இடிந்து விழுந்து ஒருவரது உயிரை பலிகொண்டதும் தீயணைப்புத் துறை நவீன உத்திகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.  

சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு கட்டடத்தின் தூலம் இரும்பினால் இருக்காது என்பதையும், மரங்கள்தான் தூலமாக இருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டிய தீயணைப்புத் துறை, ஏதோ கான்கிரீட் பில்டிங்கில் நுழைவதுபோல நுழைந்திருப்பதும், அவர்களை அவ்வாறு நுழையச் செய்திருப்பதும், உயர் அதிகாரிகளின் அனுபவம் ன்மையைத்தான் காட்டுகிறது.  நமது தீயணைப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் யாவும் எத்தகைய தீயை எதிர்கொள்வது, எப்படி அணைப்பது என்பதுதானே தவிர, எந்தெந்த கட்டடங்களில் தீப்பிடித்தால் அவற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் பயிற்சி இல்லை, அல்லது அத்தகைய பயிற்சி இருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்பதைத் தான் இந்நிகழ்வு காட்டுகின்றது.  

கூகுள் மேப் இணையதளம் உதவியுடன் சாதாரண மனிதர்களும்கூட எந்தவொரு நகரையும் அதன் சாலை, தெரு, வீடுகள் என பார்க்க முடிகின்ற இன்றைய கணினியுகத்தில், தீயணைப்புத் துறையினர் தங்கள் பகுதிக்கு உள்பட்ட கட்டடங்களின் முப்பரிமாண வரைகலைப் படங்களைக் கணினியில் வைத்திருக்க வேண்டாமா?  ஒரு கட்டடத்தின் அனைத்து உள்ளமைப்பு விவரங்களையும் - அதன் பயன்பாடு, அளவு, பயன்படுத்தப் பட்டுள்ள கட்டுமானப்பொருள், தோராயமாக புழங்குவோர் எண்ணிக்கை, ஒவ்வொரு கட்டடத்திலும் உள்ள அவசர வழிகள், கட்டடங்களுக்குக் கீழாக பாதாளச் சாக்கடை உள்ளதா அல்லது மெட்ரோ ரயில் செல்கிறதா என எல்லா தரவுகளையும் பதிவு செய்தால், தீ விபத்தில் மட்டுமன்றி, நிலநடுக்கம், ஆழிப் பேரலை, மழைவெள்ளம் போன்ற பேரிடர் காலத்திலும் அவர்களுக்கு உதவியாக இருக்காதா? 

தகவல்தொழில் நுட்பம் விரிக்கும் இத்தகைய நவீன வாய்ப்புகளை இன்னமும் கூட பயன்படுத்தாமல் இருக்கின்றது தீயணைப்புத் துறை.  இதன் விளைவு தான் வலுவற்ற மரச்சட்டங்கள் எரியும் இடத்துக்குச்சென்று தீயை அணைக்க, சாதாரண மக்களைப் போல முயன்றிருப்பதும், இதில் ஒருவரின் உயிரிழப்பும்! 

கட்டடத்தின் தன்மை என்ன என்பது தெரிந்திருந்தால், எச்சரிக்கையுடன் செயல்பட்டிருப்பார்கள். உயிரிழப்பு நேரிட்டிருக்காது.  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை என்பதால் பேரிடர் காலங்களிலும் இவர்கள்தான் மக்களையும் உடைமைகளையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கேற்ப இத்துறையை தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்றாற்போலத் தரம் உயர்த்த வேண்டும்.  

"அரசு இயந்திரம் செயல்படுவதுபோல" என்று சொல்வார்கள். ஏதோ மின்சார ரயில் தாம்பரத்திலிருந்து கடற்கரை, கடற்கரையிலிருந்து தாம்பரம் என்று ஓடிக்கொண்டிருப்பதுபோல குறிக்கோளில்லாமல் நமது அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும்!

தொடர்புடைய பதிவொன்று:

கோளாறுகள், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது ...!

காத்திருந்து....காத்திருந்து...கலங்கும் வாரிசுகள்! இது திமுக டைம்!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!
காத்திருக்கும் வாரிசுகள்!!

கனிமொழிக்குக் கட்சியில் வேண்டுமானால்முக்கியப் பொறுப்பு, பதவி கொடுத்துக் கொள்ளுங்கள், மந்திரி பதவியெல்லாம் தர முடியாது என்று காங்கிரஸ்காரர்கள்; திட்டவட்டமாக சொல்லி விட்டார்களோ?

கே என் நேரு நேற்று திருச்சி திமுகவினரிடையே பேசும் போது கொஞ்சம் வீராப்பாகப் பேசியதை மேலோட்டமாகப்  பார்த்தால் கூட,திமுக காங்கிரசுக்கு வேறு வழி இல்லாமல் டாட்டா  சொல்ல தயாராகி வருவது போலத்தான் இருக்கிறது.திமுகவில் தலீவரின் கண்ணசைப்பு இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பது தமிழக அரசியல் தெரிந்த எல்லோருக்குமே தெரிந்ததுதான்! பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிற கலையில் தேர்ந்தவர் கலீஞர் என்பதும் தெரிந்ததுதான்! பிப்ரவரி மூன்றாம் தேதி திமுக பொதுக்குழு செயற்குழு கூட்டுவது எதற்காக என்பதும், அதற்கு முன்னாலேயே ராசாத்தி தரப்பு சில உள்ளடி வேலைகளை வெளிப் படையாகவே செய்து வருவதும் கூடத் தெரிந்தது தான்.நேரு அப்படி என்னதான் பேசினார், அதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்பதையும் பார்த்து விடலாமே!

இப்படி அவசரப்பட்டு ஊதி ஊதியே மந்திரியாக வேண்டியவரை முதல் குடும்பத்தின் ஆதாயத்துக்காக
திஹார் சிறைக்கு அனுப்பி வைத்தது தான் மிச்சம்!!


திருச்சி மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாஜி அமைச்சர் நேரு பங்கேற்று பேசியதாவது: "தி.மு.க.,வினர்,தைத்திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதியும், முடிந்தால் புத்தாடை அணிந்தும், வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் சிறிது இறங்கி வந்தபோதும், மம்தா அதெல்லாம் முடியாது என்றுகூறி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக களம்காண தயாராகி விட்டார். அதுபோல், இங்கும் வெகுவிரைவில் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.

விஜயகாந்த் மீது தாக்கு: "நம்முடைய போதாத காலம் அ.தி. மு.க.,வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தார். அவருடைய தயவில் ஜெயித்த அ.தி.மு.க., அக்கட்சியை எட்டி உதைத்து விட்டது. தே.மு. தி.க.,வின் மேட்டூர் எம்.எல்.ஏ., மேல் வழக்கு போட்டு, அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக்கொண்டுள்ளார்,''

தி.மு.க., தோல்விக்கு காரணம்: கடந்த எம்.பி., தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டசபையில் மட்டும் தோற்று, திருச்சி எம்.பி., தொகுதியை இழந்தோம். அதுமட்டும் நடக்காமல் போயிருந்தால், ஜெயலலிதா இங்கு வந்திருக்கமாட்டார். அ.தி.மு.க., வும் ஆட்சிக்கு வந்திருக்காது. தமிழகத்தில் புதிதாக ஓட்டுரிமை பெற்ற, 30 லட்சம் இளம் வாக்காளர்களிடம் நம்மைப்பற்றி அவதூறு பரப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் கூற நாம் தவறிவிட்டோம். ஆகையால், மாற்றத்தை எதிர்பார்த்த, அந்த இளம் வாக்காளர்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர்."

இப்படி நேரு பேசியதை வைத்துப் பார்த்தால்,ஆஹா! திமுகவுக்கு வீரம், சொரணைவந்து விட்டது!மம்தா மாதிரி, காங்கிரசே! கூட்டணியை விட்டு வெளியே போ என்று சொல்லி விடப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு உடனே திமுக அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்து விலகி, ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கனவு காண ஆரம்பித்தீர்களானால் உங்களுக்கு தமிழக அரசியல், குறிப்பாகக் கழக அரசியல் கொஞ்சம் கூடப் பிடிபடவில்லை என்று மட்டுமே அர்த்தம்.

இப்படி வெறும் மலர் மகுடம் வைத்தே இத்தனை நாள் ஒட்டி விட்டார்களே! இனிமேலாவது தலைமை மகுடம் தலைக்கு வருமா?

அதே செய்திகளில் இன்னொரு பக்கம் திமுக இளைஞரணி குறித்த சில செய்திகளில், வரலாற்றில் முதல் தடவையாக, நாற்பது வயதுக்கு மேற் பட்டோரெல்லாம் இளைஞர்கள் அல்ல என்பதைத் திமுகவினர் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அணிப் பொறுப்பில் இருக்க முடியும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதை அமல்படுத்த  ஆரம்பித்திருக்கிறார்கள். அமல் படுத்தியது தலையில் இருந்தல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்! 

மாற்றங்கள் வந்து சேர்வது தலையைப் பொறுத்தவரை எப்போதுமே கடைசியில் தான்! அதுவும் வேறு வழி இல்லை என்றால் தான் என்பது அரசியல் கட்சிகளில், குறிப்பாக வாரிசு அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் கட்சிகளில் காணப்படும் விசித்திரங்களில் ஒன்று.

விழுப்புரத்தில் நடந்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வை துவக்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது: "தி.மு.க., இளைஞரணி தற்போது மந்தமான சூழலில் உள்ளது, இதில் மாற்றத்தை ஏற்படுத்தி முனைப்புடன் செயல்படுத்திட தலைவர், பொதுச்செயலர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். நகர, ஒன்றிய, பேரூர் பகுதி இளைஞரணி நிர்வாகிகளுக்கு படிவங்கள் வழங்கி தேர்தலுக்கு அழைத்துள்ளோம். ஒவ்வொரு பதவிக்கும், 10 முதல் 20 பேர் வரை பெயர் கொடுத்துள்ளனர். இளைஞரணி பொறுப்பாளர்கள், 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்சிப் பொறுப்பிற்கு செல்லுங்கள். மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதே போல் மாநில அளவிலும் வயது நிர்ணயிக்கப்பட உள்ளது. நானே கூட பொறுப்பிலிருந்து விலக வேண்டி வரும்"

அப்புறம் நடந்த தமாஷையும் பாருங்கள்!

விழுப்புரத்தில், தி.மு.க., மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். நகர, ஒன்றிய வாரியாக இளைஞர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேர்காணலின் போது வயது சான்றுகளை வாங்கி பார்த்த ஸ்டாலின், சில கேள்விகளை கேட்டார். 30 வயதை கடந்து ஒரு மாதமான நபரை கூட ஏற்க முடியாதென வெளியே அனுப்பினர். நேர்காணலின் போது, இளைஞரணி அமைப்பாளர் (ஸ்டாலின்) பெயர் தெரியாமல் விழித்தவரை, "நீங்கள் வெளியே போகலாம்" என, ஸ்டாலின் கூறினார்

இளைஞர் அணி அமைப்பாளரிடமே , யார் என்று தெரியாது என்று சொல்கிற அளவுக்குத் தான் அந்தக் கட்சியின் செயல்பாடு இருந்து வந்திருக்கிறது என்பது ஒரு புறம்! ஸ்டாலினிடம் இருந்து, ராசாத்தி வகையறா குறிப்பிட்டுப் பறிமுதல் செய்யக் கண் வைத்திருக்கும் இடமேஇளைஞர் அணி என்பதும், அதைக் காபந்து செய்து கொள்வதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக  இந்த வயது உச்சவரம்பு சீர்திருத்தம் எல்லாம் என்று சொன்னால் மிகையில்லை, தவறுமில்லை.

ஆக நேரு சொன்னதை வைத்து காங்கிரஸ் திமுக உறவு முடிந்து விட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டீர்களானால் அது சரியாக இருக்காது!

இங்கே அரசியல் வெளிப்படையாகத் தெரிகிற விஷயங்களில் இல்லை! திரைமறைவு நாடகங்களிலேயே நடந்து முடிந்து விடுகிறது!


விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! குறட்டை விட்டோரெல்லாம்....?



இன்றைய ஜூனியர் விகடனில், வைகோவை ஒரு மாற்று அரசியல் சக்தியாக அடையாளம்காட்டி, தமிழருவி மணியன் நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிய செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.மாற்று அரசியல் தீர்வாக வைகோ தமிழக முதல்வராவது ஒன்று தான் வழி என்று தமிழருவி மணியன் முழங்கியிருக்கிறார். கூட்டத்தில், மதிமுக தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும்  கலந்து கொண்டிருக்கிறார்கள்

ஜெயலலிதாவிடம் கெஞ்சிப் பார்த்து கேட்ட சீட் கிடைக்கவில்லை என்றதும் விசயகாந்திடம் ஓடிப்போய்  மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி  தமிழருவி மணியன் எந்த தைரியத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு ஒப்புக் கொண்டனவா என்பது கூட கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. ஏற்கெனெவே மதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதும் மார்க்சிஸ்டுகளின் அரசியல் கணக்கே வேறு என்பதும் கட்டுரையாளருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போகட்டும்!

வைகோ மீது ஒரு தனிமனிதராக, ஒருதிறமையான நாடாளுமன்றவாதியாக, எனக்கு மட்டுமல்ல, இங்கே நிறையப்பேருக்கு  மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்துவதில் வைகோவுக்கு சாமர்த்தியமில்லை! குறிப்பாக தனக்கு அடுத்த படியாக ஒரு நம்பிக்கையான ஆதரவாளர்களை இரண்டாவது மட்டத் தலைவர்களாக உருவாக்குவதில் கூட வெற்றி பெற முடியாதவர் அவர்.. அதுவும் கருணாநிதி விரிக்கும் வலைக்குள் சிக்குகிறவர்களாகவே அவரைச் சுற்றி ள்ளவர்கள் இருப்பது வைகோவின் தலைமை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அடையாளம்.

ஆளை மாற்றினால் அரசியல் சூழலும் மாறிவிடுமா? தனி ஒரு நபரால் இத்தனை சீரழிவையும் மாற்றி விட முடியுமா?தமிழருவி மணியன் சொல்கிற தீர்வு உண்மையிலேயே, சரியான தீர்வு தானா? நடைமுறை சாத்தியம் தானா? முதலில் அந்த செய்திக் கட்டுரையைப் படித்து விடுவோம்.

''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

தகதகக்கும் தமிழருவி மணியன்


மிழக அரசியல் வெளியில் தமிழருவி மணியனால் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி இருக்கிறது. 'மாற்று அரசியல்’ எனும் மேடையில் வேறு பட்ட அரசியல் தலைவர்கள் சிலரை ஒருசேர நிறுத்தி நெடிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார்!

தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்’ கடந்த 7-ம் தேதியன்று தனது இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம். மேடையில்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்து மணியன் அமர்த்த, மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ப்ளஸ் ஆச்சரியங்கள். '

'இது காந்தியச் சிந்தனைகளை விளக்குவதற்கான மேடை மட்டும் அல்ல. இது ஒரு போராட்டக் களம். நம்மை ஆள வேண்டியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல ஜனநாயகம். அவர்கள் தவறிழைக்கும் போது அதை எதிர்த்துப் போராடுவதும்தான் ஜனநாயகம்...'' என்று ஒரு பொறியைப் பற்றவைத்து விட்டு அமர்ந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி.

'இன உணர்வாளர்’ என்ற முறையில் இந்தக் கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டு இருந்தார் இயக்கு நர் தங்கர்பச்சான். ''தயவுசெஞ்சு என்னோட பேச்சுக்கு யாரும் கை தட்டாதீங்க. கை தட்டி, விசிலடிச்சே நாசமாப் போயிட்டிருக்கோம் நாம...'' என்று ஆவேசப்பட்டவர், ''இந்த மேடையில் அச்சப்படாமல் பேசலாம். காரணம், இங்கு அமர்ந்திருப்பவர்கள் நேர்மையானவர்களே தவிர, அரசியல் பிழைப்புவாதிகள் அல்ல. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இதுதான். ஓட்டுப் போடுற மக்கள் பிச்சைக்கார மனநிலையில் இருப்பதுதான் அரசியலைப் பிழைப்புக்குப் பயன்படுத்தும் பேர் வழிகளுக்கு வசதி யாகிவிட்டது. கொடுக்கின்ற இலவசத்தை வாங்கி இனி அவன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள். அதன் பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும்'' என்றார் குரல் உயர்த்தி.

மைக்கைப் பற்றிய தமிழருவி மணியன் ரௌத் திரமும், ஆதங்கமும் ஒரு சேர வீசிய பேச்சு தமிழக அரசியல் மேடைகளுக்கு விதிவிலக்கு.

''இந்த நிகழ்ச்சியை 'மூன்றாவது அணி’ அமைப்புக்கான வேலை என்று சிலர் மிகத்தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். இல்லை... இது, 'மாற்று அரசியல்’ அமைவுக்கான தளம். மேடையில் இருக்கும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் கருணாநிதிக்குப் பின்னும், ஜெயலலிதாவுக்குப்  பின்னும் மறைந்தே அரசியலை நடத்துவது? தேர்தல் முடியும் வரை உங்களைப் பயன் படுத்திவிட்டு, பிறகு தூக்கி எறியப்படும் நிலை எத்தனை நாளைக்கு வேண்டும்? எங்களுக்குத் தேவை ஊழலின் நிழல் படாத அரசியல். 

நேர்மையான அரசியலைத் தேடி நான் அறிவாலயமா செல்ல முடியும்?
போயஸ் தோட்டம்தான் செல்ல முடியுமா? 

ஊழலைப் பொதுப்புத்தி ஆக்கிவிட்டார் கருணாநிதி. அரசு அதிகாரிகளை சசிகலா கூட்டம் ஆட்டுவித்தபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, பொதுப் பணத்தை அந்த மன்னார்குடி குடும்பம் வாரிச் சுருட்டியபோது ஆத்திரப் படாத ஜெயலலிதா, எப்போது ஆத்திரப்பட்டார்? பெங்களூருவில் இருந்தபடி தனக்கு எதிராக அவர்கள் சதியாலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும்தானே? இந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பொது நலனை எதிர்பார்க்க முடியும்? 

காங்கிரஸும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை. அதனால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பொது நலனுக்காக உருகும் நீங்கள் கைகோக்க வேண்டும். நீங்கள் மாற்று அரசியலைக் காண்பித்தால், மக்கள் உங்களை விரும்புவார்கள். அதில் எனக்குத் தெரிந்த மாற்று வழி, வைகோ முதல்வர் ஆவதுதான். அதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்தை உருவாக்க நாங்கள் தயார். மற்றபடி உங்கள் விருப்பம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

எதிர்பார்ப்புகளுக்கிடையில் தன் உரையைத் துவங்கிய வைகோ, ''தமிழகம் கட்டுக்கடங்காத பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளை யில் இப்படி ஒரு தளத்தில் கூடியிருக்கிறோம். தமிழருவி... நீங்கள் உங்கள் விருப்பத்தை வெளியிட் டிருக்கிறீர்கள். தியாக இயக்கமாம் ம.தி.மு.க. தேர்தல் அரசியலில் இயங்குவதுதான். நாங்கள் சில கால கட்டங்களில் சிலரோடு கூட்டணி வைத்திருந் தோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் என்றுமே தமிழர்நலன் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்ததும் இல்லை, சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது பொறுத்துக்கொண்டதும் இல்லை. அதனால் பதவி, அதிகாரம் இதை எல்லாம் நாங்கள் என்றுமே எதிர்பார்த்ததும் இல்லை. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள். விஷச் சூழலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எரிமலை, அறிவித்துவிட்டு வெடிப்பது இல்லை, புயல் சொல்லிக்கொண்டு அடிப்பது இல்லை. அது போல் மக்கள் புரட்சி வரும்... கூடவே மாற்றமும் வரும்'' என்று ஒரு புள்ளி வைத்தார்.


விடை தெரியாத கேள்வியோடு கூட்டம் விடை பெற்றது!

(கட்டுரையாளர் ஒரே ஒரு உண்மையைத் தன்னையறியாமலேயே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை தான்!) 
 (அதிமுக நாடாளுமன்றத் தேர்தல்களில் மதிமுகவை அரவணைத்துக் கொள்ள தயாராகிவிட்டதாகவே இப்போதைய செய்திகள் சொல்கின்றன).


-------------------------------------------------------------------------------------------------------------

இங்கே அரசியல், நிர்வாகம் நீதித்துறை, ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் என்று எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்ட நிலையில் மாற்றம் என்பது ஒரு கட்சியை அகற்றி விட்டு இன்னொரு கட்சியைக் கொண்டுவருவதாலோ வராது.

ஒரு நபரைக் குற்றம் சொல்லி அகற்றி விட்டு, வேறொரு நபரை மாற்றுவதால் மட்டுமே இங்கே கோளாறுகளுக்குத் தீர்வாகி விடாது.

மூன்றாவது அணி, மாற்று அணி என்பதெல்லாம் இன்றைய நிலையில் வெறும் கற்பனை தான். தானே உச்சாணிக் கொம்பில்  தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மட்டுமே நிறைந்த சூழலில் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

அப்படியானால் தீர்வே இல்லையா? வேறு வழியே இல்லையா?

நிச்சயமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமை வேண்டும். விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்படும் சக்தியாக மக்களுடைய குரலை எதிரொலிக்கும் இயக்கமாக உருமாற்றம் காண்பதற்கு---

முதலில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தவேண்டும்! இப்போதிருக்கும் வெஸ்ட்மினிஸ்டர்  முறையிலான ஜெயித்தவனே எல்லாற்றையும் சுருட்டிக் கொண்டு போக அனுமதிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்கும் வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தேர்தல் முறை மாற்றப்படவேண்டும்.

ஆபீஸ் பையன் உத்தியோகத்துக்குக் கூட குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசம் அரசியல் வாதிக்குத் தகுதி கேட்கக் கூடாதா? அரசியலில் இறங்குவதற்குக் குறைந்தபட்ச வயது இருக்கிற மாதிரியே, குறைந்தபட்சக் கல்வித் தகுதி தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள்  இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்ட மன்றம், நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, நம்முடைய அரசியல் சாசன, சட்டம் இயற்றும் முறைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். அதில் ஒரு பட்டயப்படிப்பாவது பெற்றிருக்க வேண்டும்!

குறைந்த பட்ச வயது இருப்பது போலவே போட்டியிட அதிகபட்ச வயது வரம்பும் வேண்டும். அறுபது வயது என்று வைத்துக் கொள்ளலாம். சரியான உடல் நலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அறுபத்தைந்து வயது வரை வேண்டுமானால் தளர்த்திக் கொள்ளலாம்.

கேபினெட் அமைச்சர், முதல்வர், பிரதமர்  ஜனாதிபதி பதவிகளுக்கு,ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.

மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது போலவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அரசியல் சாசனத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, மக்களுடைய பிரதிநிதிகள்  பொறுப்பேற்கத் தயாராகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆகிற வரை உச்சநீதி மன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கொம்ஞ்சம் விரிவாகவே பேசலாம்! இதெல்லாம் நடைமுறைக்கு வருகிற சாத்தியம் உண்டா என்று சந்தேகம் எழுகிறதா? தூக்கத்தில் கனவு காண்பது மட்டுமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை.

மாற்றங்களை வேண்டு
ம் மக்கள் குரல் உரத்து ஒலிக்கும் நாளில், எல்லாம் நிறைவேறும்.

மண்ணுமோகனுக்கு வந்த கவலை! கரிசனம்!




நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகில்உள்ள மூன்று  குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தையாக உள்ளது என்றும், இது இந்திய தேசத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றும் பிரதமர் இன்று கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ள்ளாராம்! ஆச்சரியம் தான்! தன்னுடைய அமைச்சரவை சகா ஒவ்வொருவருக்கும் உத்தமர் சர்டிபிகேட் கொடுத்தது போக நேரமிருந்தால்,கொஞ்சம் அரசு வேலைகளையும் பார்க்கும் ஒருவருக்கு நாட்டைப்பற்றிக் கூட கவலைப்பட நேரம் இருந்திருக்கிறது என்றால் அது அதிசயத்திலும் பெரிய அதிசயம் தான்! 
                                                                        
தேர்தல் சமயமாயிற்றே, கவலைப்படாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் விவசாய அமைச்சராக ஒருவர் இருக்கிறார்! சரத் பவார்! விவசாயிகள், மற்ற எது எப்படி எக்கேடு கேட்டுப் போனாலும் பரவாயில்லை, கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பை மட்டும் விட மாட்டார்! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாக்கள் வந்து உலக சாதனை செய்கிற வரை ஊழல் பெருச்சாளிகளில் அவர் தான் நம்பர் ஒன்! இந்தாலிய மம்மிகளை விடவுமே என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்!

இப்படி ஒரு விவசாய அமைச்சரபை வைத்துக் கொண்டு, பெட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிற மந்திரிகளை வைத்துக் கொண்டு மண்ணு மோஹன்சிங் தேசத்தைப் பற்றியும் கவலைப் படுகிறாராம்! 


எத்தனையோ பொய்களை நம்பிய நாம், இதை மட்டும் நம்ப மறுப்போமா என்ன!  

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய விவசாயிகளின் நிலைமை , கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளில், அதாவது அரசு ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்ற நாளில் இருந்தே, மிகவும் பரிதாபத்துக்கு ஆளாகி வருகிறது.

இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்தி கட்டுரையைப் படித்துப் பாருங்கள்! அதில் சொல்லப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களின் பின்னே லட்சக்கணக்கான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கண்ணீர் இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒரு அரசியல் கொடுமை இருக்கிறது!


மானியங்கள், கடன்கள் எல்லாமே இருப்பவர்களுக்குத் தான்! தேவைப்படுகிறவர்களுக்கு அல்ல! அரசு அறிவிக்கும் திட்டங்களில் உண்மையிலேயே பயன் அடைபவர்கள் யார்?  கேள்வியை உரக்கக் கேட்கவேண்டிய தருணம் இது!

தடம் மாறும் கிராமிய வங்கிகள்!

பி.எஸ்.எம். ராவ்,இன்றைய தினமணியில் எழுதி வெளியாகி இருக்கும் கட்டுரை

ஒரு குழாய் மூலமாக பத்து மணி நேரத்தில் ஒரு தொட்டியை நீரால் நிரப்ப முடியும் என்று வைத்துக் கொள்வோம். மற்றொரு குழாயைத் திறந்துவிட்டால் ஒரு மணி நேரத்தில் தொட்டி காலியாகிவிடும் என்றால்,  இரு குழாய்களும் திறந்திருக்கும்போது எவ்வளவு நேரத்தில் தொட்டி முழுமையாக நிரம்பும்?

 பள்ளிக்கூடத்தில் நாம் படித்த இந்தக் கணக்குக்கு விடை ஒரு காலத்திலும் முடியாது என்பதுதான்.

ஆனால், கிராமியக் கடன்கள் விஷயத்தில் அரசு இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் நமது அரசின் கவர்ச்சிகரமான கோஷம். இதைக் கூறித்தான் இப்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். அரசியல் பொதுக் கூட்டமானாலும் சரி, தேர்தல் பிரசாரமானாலும் சரி, நாடாளுமன்ற அவைகளில் நடக்கும் விவாதங்களானாலும் சரி எல்லாவற்றிலும் இந்த மயக்கும் வாக்கியத்தைக் கூறுவதற்கு நமது ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை!.

ஆனால், இதெல்லாம் வெற்றுப் பேச்சுதானே தவிர, நிஜத்தில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கு நேரெதிர்தான். எந்த அளவுக்கு அனைவரையும் வளர்ச்சியில் உள்ளடக்குவதற்கான முயற்சி நடக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு வேகமாக வெளியேற்றும் பணி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாவிதமான திட்டங்களிலும், நடவடிக்கைகளிலும் இதே கொள்கையைத்தான் நமது அரசு கடைப் பிடித்து வருகிறது. சொல்லில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக அரசின் பணி இதே ரீதியில் தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது சாத்தியமாகப் போவதில்லை.

 இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனாலும், தங்களது கோஷங்களை அவர்கள் நிறுத்துவதாக இல்லை. மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதை எண்ணிக்கூட வெட்கப்படாமல், ஏழைகளை முன்னேற்றுவதற்காக அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் கொல்கத்தாவில் நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்துக்கான விவசாய வங்கிக்கடன் இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதாவது நிதியாண்டுக்கு ரூ. 4.75 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதில், மார்ச் முதல் செப்டம்பர் 2011 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்பது பிரணாப் தரும் புள்ளி விவரம். இதன்படி இந்த நிதியாண்டின் முழுமையான இலக்கும் எட்டப்பட்டுவிடும்.

இதற்குச் சில நாள்களுக்கு முன்பு பிரணாப் இன்னும் உற்சாகமாக இருந்தார். நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடன்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். நபார்டு வங்கியின் தலைவரும் பிரணாபை ஆமோதித்தார். அவர் சொன்ன தொகை ரூ.5.2 லட்சம் கோடி!

இவர்களது கணிப்பு சரிதான். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தக் கணிப்பு பொய்த்துப் போவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. வங்கிகள் மூலம் வழங்கப்படும் விவசாயக் கடன்களை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் அரசு முடிவு செய்தது. ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இரண்டே ஆண்டில் இந்த இலக்கு எட்டப்பட்டது. அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இலக்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. சொல்லிவைத்தாற்போல ஒவ்வொரு ஆண்டிலும் இலக்கைத் தாண்டி கடன்கள் வழங்கப் பட்டதுதான் சுவாரசியமான விஷயம்.

2008-09 முதல் 2010-11 வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் முறையே ரூ.2.8 லட்சம் கோடி, ரூ.3.25 லட்சம் கோடி, ரூ.3.75 லட்சம் கோடி என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், முறையே ரூ.2.87 லட்சம் கோடி, ரூ.3.85 லட்சம் கோடி, ரூ.4.47 லட்சம் கோடி இலக்குகளைக் கடந்து கடன்கள் வழங்கப்பட்டன.

 வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான இலக்குகள் நிர்ணயிக்கப் படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயத்துறைக்கு ரூ. 40 லட்சம் கோடி தேவை என்று நபார்டு வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.கே.மித்ரா கூறியிருக்கிறார்.

இந்தப் புள்ளிவிவரங்களைப் படிப்பவர்களுக்கு சில நியாயமான சந்தேகங்கள் எழக்கூடும். அரசுதான் இவ்வளவு கடன்களை வழங்குகிறதே, பிறகும் ஏன் விவசாயிகள் தனியார் நிறுவனங்களை நாடுகிறார்கள், கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏன் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்கலாம்.

தேசிய குற்றப் பதிவு அமைப்பின் ஆவணங்களின்படி 1995 முதல் 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது சர்ச்சைக்குரிய எண்ணிக்கைதான். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தற்கொலைகள் குறைந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.

2011-ம் ஆண்டில் வெறும் 800 பேர்தான் தற்கொலை செய்து கொண்டதாக வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் பிரத்யேகமாக ஒரு புள்ளி விவரத்தைத் தருகிறார்.

எது எப்படியிருந்தாலும், கடன்தொல்லை காரணமாக அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அரசு என்னதான் விவசாயிகளுக்கு கடன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்தாலும், இலக்குகளைத் தாண்டியும் கடன்கள் வழங்கப்படுவதாகப் புள்ளிவிவரங்களை அடுக்கினாலும், தேவைப் படுவோருக்கு அந்தக் கடன்கள் சென்றடையவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அரசு கூறுவது வெறும் வாய்ஜாலம் என்பதை தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை உணர்த்திக் கொண்டிருக்கிறது. கடன் வழங்கும் முறையில் குறைபாடு இருப்பதற்கு இதுவே ஆதாரம்.

விவசாயம் செய்வோரில் 80 சதவிகிதம் பேர் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள். இவர்களுக்குக் கடன் வழங்குவதே விவசாயத்தை பாதுகாப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்குமான வழி முறை. ஆனால், இவர்களுக்குக் கடன்கள் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சாரங்கி குழு, விளிம்பு நிலை விவசாயிகளில் வெறும் 14 சதவிகிதம் பேருக்கு மட்டும் வங்கிக் கடன் போன்ற அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைப்பதாகக் கூறியிருக்கிறது.

 இந்தியாவில் 87 சதவிகித விளிம்புநிலை விவசாயிகளுக்கும் 70 சதவிகித சிறு விவசாயிகளுக்கும் வங்கிக்கடன் கிடைப்பதில்லை என்று உலக வங்கியே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களை

இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் விவசாயிகளில் 51 சதவிகிதம் பேருக்கு எந்தவிதமான கடனோ, பிற வங்கிச் சேவைகளோ கிடைப்பதில்லை என்கிற உண்மை புலனாகும்.

ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையின்படி வெறும் 27 சதவிகித விவசாயிகளுக்கே அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைக்கின்றன. இதிலும் மூன்றில் ஒரு பகுதியினர் தனியார் அமைப்புகளின் மூலம் கடன் பெறுபவர்கள். அதாவது 18 சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன. அந்த 18 சதவிகித அதிருஷ்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பணக்கார, பெரு விவசாயிகள் அல்லது அதிகாரம் படைத்தவர்கள்.
இது ஒன்றும் அறியாமலோ தெரியாமலோ நேர்ந்துவிட்டது கிடையாது. 1990-களில் அரசு கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் இது. அரசு வங்கிகள் அனைத்தும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும், கிராமப்புற ஏழைகளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் என்பவையெல்லாம் அந்தக் கொள்கை மூலமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஒருபுறம் கிராமப்புற ஏழைகளுக்கு எளிதாகக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே லட்சியம் என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருக்கும் வங்கிகள், இன்னொருபுறம் கிராமங்களில் தங்களது கிளைகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.

ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களின்படி 1991-ம் ஆண்டில் கிராமங்களில் 35,206 வங்கிக் கிளைகள் இருந்தன. 2011-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 33,602-ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் நகரங்களில் தெருவுக்குத் தெரு வங்கிகள் திறக்கப் பட்டிருக்கின்றன.
 1991-ல் வங்கிகளின் 58.46 சதவிகித கிளைகள் கிராமப்புறங்களில் இருந்தன. இப்போது அது 36.10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

அதேபோல், கிராமப்புறக் கடன்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் போன்றவையும் தங்களது நோக்கத்தை மறந்து வேறு வகைக் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிட்டன. 1993-94-ம் நிதியாண்டில் 62 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன்கள் வழங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு வங்கிகள் 2009-ம் ஆண்டில் வழங்கிய விவசாயக் கடன்களின் அளவு வெறும் 12 சதவிகிதம் மட்டுமே!

பிராந்தியக் கிராமிய வங்கிகளுக்கும் இதே நிலைதான். கிராமப் புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கிகள், இப்போது வழக்கமான வர்த்தக வங்கிகளைப் போலச் செயல்பட்டு வருகின்றன. கிராமங்களையும் ஏழ்மையையும் மறந்து, பண ஆதாயம் தேடும் வழிகளை மட்டுமே அந்த வங்கிகள் கடைப்பிடித்து வருகின்றன. கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. அரசு இதைப்பற்றி வாய்திறப்பதேயில்லை.

இப்படி எல்லா வங்கிகளும் கிராமங்களையும், விவசாயத்தையும் கைவிட்டுவிட்டதால்தான் மக்கள் தனியார்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறுங்கடன் அமைப்புகள் என்கிற பெயரில் கந்து வட்டிக்காரர்கள் பெருகி, மக்களிடமிருந்து வியர்வையையும் ரத்தத்தையும் வட்டியாக உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அரசு, இன்னமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றிப் வாய்கிழியப் பேசிக் கொண்டிருக்கிறது.

பருவமழை பொய்த்துப் போவது, பிற இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, விதைத்த பணத்தைக் கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுமானால், முதலில் கிராமிய வங்கிகளை வர்த்தக மயமாக்குவதைக் கைவிட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற மக்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்பவையாக மீண்டும் மாற வேண்டும். இவைபற்றி அரசு அக்கறை எடுத்துக்கொள்ளாதவரை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வெற்று வாக்குறுதியாகத்தான் இருக்கும்.
 களவாணி காங்கிரசைத் தூக்கி எறிவதே தேசத்தின் விடிவுகாலம்!