அடுத்த ஜனாதிபதி யார்? அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா?



டுத்த ஜனாதிபதியாகத்  தனது வேட்பாளரை முடிவு செய்வதில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் அதிகமாகவே காலதாமதம் செய்து வருகிறது. அடுத்த மாதம் தான் இறுதியாக முடிவெடுப்பார்களென இந்த செய்தி சொல்கிறது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவிக்கிற வேட்பாளருக்குத் தான் வாய்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், இந்த காலதாமதம் வேறு சில விஷயங்களையும் பூடகமாக உள்ளடக்கி ருக்கிறது என்பது மேலோட்டமாகப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கலாம்!


னால், நேருகுடும்ப வாரிசுகள், இந்த வாரிசுப்பரம்பரையைத் தாங்கிப் பிடிக்கிற சில சக்திகள் எதனால் இப்படித் தயங்குகின்றன என்பதையும் சேர்த்துப் பார்த்தால், வியப்புக்கு இடமே இருக்காது. அப்பட்டமான சுயநலமும், அவநம்பிக்கையுமே பிரதான காரணமாக இருப்பதை அரசியலை மிக மேலோட்டமாகப் பார்க்கிற எவருமே புரிந்து கொள்ள முடியும். ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில், எல்லாக் கட்சிகளிடமும் கலந்து பேசிக் கருத்தொற்றுமை கண்ட பிறகே வேட்பாளரை அறிவிக்க முடியும் என்ற ஆரம்பநிலை இப்போது, கிட்டத்தட்ட பிஜேபி தவிர அனேகமாக எல்லா எதிர்க்கட்சிகளும் தங்களுடைய விருப்பைத் தெரிவித்த பிறகும் கூடக் காங்கிரஸ் இன்னும் தயங்குகிறது என்றால் காரணமில்லாமல் இல்லை.


பிரணாப் முகர்ஜியைப் பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்வதில் அனேகமாக எல்லாக் கட்சிகளுமே ஒன்று பட்டிருப்பதான ஒரு சித்திரம் இப்போது உருவாகியிருக்கிறது. இடதுசாரிகள் வெளிப்படையாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்யவில்லை என்றாலும், பிரணாபை ஏற்பதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை -இன்னும் பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால், வேறு வழியுமில்லை.

பிஜேபியின் யஷ்வந்த் சின்ஹா, நாடாளு மன்றத்தில் வெளிப்படையாகவே தனது வாழ்த்துக்களை பிரணாபுக்குத் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனெவே சுஷ்மா ஸ்வராஜ் பேசியது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய அனுபவமோ என்னவோ, பிஜேபி அதை உடனடியாக மறுத்திருக்கிறது. யாருக்கு ஆதரவு என்பதை என்டிஏ கூட்டத்தில் தான் முடிவு செய்வோம் என்று அறிவித்திருப்பதில், பிஜேபி கூட்டணி எந்த நேரத்திலும் கலைந்து விடுகிற ஒன்றாக இருப்பதைத் தான் காட்டுகிறது என்று சொல்வதை விட, காங்கிரஸ் முதுகில் சிறிய கட்சிகள் பச்சைக் குதிரை சவாரி செய்வதைப் போல, பிஜேபி மீது சவாரி செய்ய, நிதிஷ் குமார் மாதிரி கூட்டணி ஆசாமிகள் முனைப்பாக இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். ஆக, எல்லோரும் நினைப்பது போல, பிஜேபி அதன் வீரியம் முழுவதையும் இழந்து விடவில்லை.உட்கட்சி மோதல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வலுத்து வருவது, எடியூரப்பா மாதிரியான ஆசாமிகளை ஆரம்ப நிலையிலேயே எலிமினேட் செய்யத் தவறியது இப்படித் தன் தவறுகளுக்காக, பிஜேபி தேசீய அளவில் பெருத்த சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதென்னவோ இன்னமும் குறைந்தபாடில்லை.

1975 களில் இந்திராவால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட, அறிவிக்கப்படாத நெருக்கடி, அஜெண்டாவுடன், இத்தாலிய மம்மி, ஐமு  கூட்டணிக் குழப்பத்தைத் தலைமைதாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். 1962, 1967 பொதுத் தேர்தல்களில் காங்கிரசின் சரிவு ஆரம்பித்தது.  எனினும்,காங்கிரசுக்கு எதிரான எதிர்ப்பு ஒரே அணியில் திரள்வதற்கு 1977 வரை காத்திருக்க வேண்டி இருந்தது.

குறுகிய காலமே ஆட்சியில் இருந்தாலும், ஜனதாக் கட்சி பரிசோதனை முயற்சி நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.மிக அற்பமான காரணங்களால், அந்தக்கூட்டு முயற்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, பலரால் சிதைக்கப்பட்டது.
இந்திராவை எதிர்த்தவர்களில் பலரை சாமர்த்தியமாகக் காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. துணைப் பிரதமராக இருந்த சரண் சிங் பெயரைச் சொன்னால் இன்றைக்கு எத்தனை பேருக்கு நினைவிருக்கும்? மூன்றே ஆண்டுகளில், பதவியை இழந்த இந்திரா, 1980 இல் மறுபடி பிரதமரானார்.

ஜனதா பரிசோதனை தோல்வியில் முடிந்தாலும், ஜனசங்கம் என்று வடக்கே மட்டும் அறியப்பட்டிருந்த கட்சி, காந்தீய சோஷலிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, பாரதீய ஜனதா கட்சியாகப் பரிணமித்தது. அடுத்த பதினாறு வருடங்களுக்குப் பிறகு, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்தது உண்மைதான்!கூடவே களைகளாக, உட்கட்சிப் பிரச்சினைகளும் சேர்ந்து வளர்ந்தன. காங்கிரஸ் கட்சியில் இருந்த அதே அளவுக்குப் பதவிப்பித்து, ஊழல் எல்லாம் சேர்ந்தே வளர்ந்தன!

காங்கிரசுக்கு சரியான மாற்று என்று வளர்ந்திருக்க வேண்டிய ஒரு கட்சி, இதுவும் இன்னொரு காங்கிரஸ்தான் என்று சொல்லும்படியாக உட்கட்சித் தகராறுகளில் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறி ருக்கிறது.போதாக்குறைக்கு, பாபர் மசூதி இடிப்பு விவகாரம், நம்மூர் போலி மதச்சார்பின்மை வாதிகளால் நன்றாகவே பயன்படுத்திக்கொள்ளப் பட்டு, பிஜேபி ஒரு பயங்கரமான பூச்சாண்டியாக மதவாதக் கட்சியாக, காங்கிரஸ் உள்ளிட்டு எல்லோராலும் பிரச்சாரப் படுத்தப்பட்டிருக்கிறது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரசாரத்தில் கூவிக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தன்னுடைய கூவலில்  மயங்கி பிஜேபி காங்கிரசை விட முக்கியமான எதிரியாகப் பார்க்கப்பட்டு, காங்கிரசோடு கூட்டுச் சேருகிற அளவுக்குப் போய் முடிந்தது தான்!

.....நம்முடைய ஜனநாயகக் கூத்தை இன்னும் கொஞ்சம் தொடர்ந்து பார்ப்போம்!

காங்கிரஸ் விஷவிருட்சத்தை அகற்றுங்கள்! தேசத்தைக் காப்பாற்றுங்கள்!


முந்தைய இரண்டு பதிவுகளில் ஜனாதிபதி தேர்தல்களில் காங்கிரஸ்  செய்து வரும் தகிடுதத்தங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம் இல்லையா!


திரு.பழ.நெடுமாறனின் இந்த செய்திக்கட்டுரை, இந்திய அரசியலில் தற்சமயம் ஏற்பட்டிருக்கிற ஒரு முடக்கமான சூழலைத்  தெளிவாகக் காரணங்களோடு விளக்குகிறது.மாநிலங்களுடைய பிரத்யேகமான பிரச்சினைகளைப் புறக்கணித்து மத்திய அரசு தன்னிஷ்டம்போல முடிவுகளைத் திணிக்க முடியாது என்பதும் அப்படித்திணிக்கப்பட்ட சமயங்களில் எல்லாம் மிக மோசமான எதிர் விளைவுகளும் பிரிவினைக்குரல்களாகவும் எழுந்து வந்திருப்பதையும் பார்த்திருக்கிறோம்.


விடுதலைப்போரில் நாட்டுமக்களை ஒன்று திரட்டிய கட்சியாக மகாத்மா காந்தி காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு நிலைமைகளே தலைகீழாக மாறிப்போயின.நேருவின் நல்ல எண்ணங்களின் மீது சந்தேகம் கொள்வதற்கு காரணம் இல்லை  என்றாலும், வேப்பமரத்தின் நிழலில் வேறு செடி எதுவும் வளர முடியாது என்பதைப்போல, அவரது தலைமையின் கீழ் அடுத்த மட்டத் தலைவர்கள் உருவாக முடியவில்லை.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நேரு இருந்ததில் இந்த தேசத்தின் மாநிலங்கள், பல்வேறு இனக்குழுக்கள், பிரச்சினைகள் எதுவுமே அவருக்குப் புரிந்ததில்லை. The Discovery of India என்று மகளுக்கு இந்திய வரலாற்றை எழுதத்தெரிந்த அளவுக்கு, இந்த தேசத்தின் மக்கள், அவர்களுடைய பிரச்சினைகளைப்பற்றிய சரியான புரிதலோ தெளிவான பார்வையோ இருந்ததில்லை. அவருக்குப் பின் வந்தவர்களோ அவரை விட மிக மிக மோசம்!
பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறை, பிரிட்டிஷ் நிர்வாக அமைப்பு என்று நமக்கு கொஞ்சமும் உதவாத அமைப்புக்களை வைத்துக் கொண்டு, ஜனங்களுடைய குரலை எதிரொலிக்கும் ஒரு அரசை நம்மால் இன்று வரை அமைக்க முடியவில்லை என்பதே இந்த அறுபத்தைந்து ஆண்டு கால சரித்திரம்.இப்படி ஆகிப்போனதற்குக் காங்கிரஸ் கட்சியே முழுமுதற் காரணம்.மாநிலங்களுடைய அதிகாரம், மத்திய அரசின் அதிகாரங்களைத் தெளிவாக வரையறை செய்வதற்குப் பதிலாகக் காங்கிரஸ் எப்போதும்போல அதிகாரக் குவியலையே நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது

நாட்டு நலனில்  அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய செய்திக்கட்டுரையாக இதைப் பரிந்துரை செய்கிறேன்! 



பூனை கண்ணை மூடினால்...

இன்றைய தினமணி நாளிதழில் வெளியான திரு பழ.நெடுமாறன் செய்திக் கட்டுரை



மத்திய - மாநில உறவுகள் இப்போது சீர்கேடடைந்திருப்பதைப்போல எப்போதும் அடையவில்லை. இந்தியா விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆனபிறகும் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை.


வங்கக் கடலில் அமெரிக்க அணுசக்தி கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை நடத்தவிருக்கும் கூட்டுப் பயிற்சி தொடர்பாக தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல் இந்திய அரசு மேற் கொண்டுள்ள நடவடிக்கை கடலோர மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கண்டித்துள்ளார். அதுமட்டுமல்ல, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரோ அல்லது சென்னையில் உள்ள இந்தியக் கடற் படையின் மூத்த அதிகாரிகளோ முதலமைச்சரைச் சந்தித்து இதுகுறித்து விளக்குவதற்கும் இந்திய அரசு தடைவிதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாநில அரசுகளிடம் சிறிதளவுகூட கலந்தாலோசனை செய்யாமல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையச் சட்டம், ரயில்வே பாதுகாப்புத் திருத்தச் சட்டம், தேசிய சுகாதார மனித வள ஆணையச் சட்டம் ஆகியவற்றுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். கூட்டாட்சி முறையின் ஆணிவேரையே தாக்கும் சட்டங்களாக இவற்றை வர்ணித்து கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.


வங்க தேசத்துடன் இந்தியா செய்துகொண்டுள்ள டீஸ்டா தண்ணீர்ப் பங்கீட்டு உடன்பாட்டிற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசை கொஞ்சமும் கலந்து கொள்ளாமல் இந்திய அரசு செய்துகொண்ட இந்த உடன்பாடு மேற்கு வங்க மக்களை மட்டுமல்ல, வங்கதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள பிற மாநில மக்களையும் பெருமளவுக்குப் பாதிக்கும் என அவர் கண்டித்துள்ளார்.


தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையம் போன்ற மிக முக்கியமான விஷயங்கள் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து லோசனை செய்யாததற்கு குஜராத் முதலமைச்சர் மோடி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ்சிங் பாதல், காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பிகாரில் மத்திய அரசு நிறுவவிருக்கும் பல்கலைக் கழகம் குறித்து மாநில அரசின் ஆலோசனையை மத்திய கல்வியமைச்சர் ஏற்கவில்லை என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கண்டித்துள்ளார்.


கயை நகரில் மத்திய பல்கலைக் கழகத்தை அமைத்தே தீருவோம் என மத்திய கல்வியமைச்சர் கபில்சிபல் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், ஏற்கெனவே அங்கு மற்றொரு பல்கலைக் கழகம் இருப்பதைச் சுட்டிக் காட்டி மிகவும் பின்தங்கிய பகுதியும், காந்தியடிகள் நடத்திய சம்பரான் போராட்டத்தோடு தொடர்புகொண்ட பகுதியுமான மோதிகரி அருகில் மத்திய பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டுமென மாநில அரசு கூறிய ஆலோசனையை கபில்சிபல் ஏற்க மறுத்துள்ளார். இதன் மூலம் பிகார் மக்களைப் பிளவுபடுத்த அவர் சதிசெய்வதாக முதல்வர் நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.


மாநில அரசுகளை மதிக்காத போக்கில் மத்திய அரசு தொடர்ந்து செயல் பட்டு வருவதன் விளைவாக, காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளாக உள்ள பல மாநிலக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளிக்க மறுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மத்திய மனிதவளத் துறை வளர்ச்சி அமைச்சகம் கொண்டுவந்துள்ள 14 கல்விச் சட்ட முன் வடிவுகள் நிறைவேற்றப்பட முடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கின்றன. அதைப்போல மத்திய உள்துறை கொண்டுவந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட சட்ட முன்வடிவுகள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்லாததால் நிறைவேற்றப்பட முடியாமல் கிடக்கின்றன.


ஏன் இந்த அவல நிலை? இந்தியாவின் அரசியல் நிலைமை அடியோடு மாறியுள்ளதை மத்திய ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க மறுப்பதன் விளைவே இதுவாகும்.


இன்று பல்வேறு மாநிலங்களிலும் மக்களின் பேராதரவைப் பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அகிலேஷ்யாதவ், பிரகாஷ் சிங் பாதல், உமர் அப்துல்லா போன்றவர்கள் முதலமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.


இவர்களைத் தவிர, ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், மராட்டிய மாநிலத்தில் சிவசேனை, அசாம் மாநிலத்தில் அசாம் கணதந்திரபரிஷத் போன்ற மாநிலக் கட்சிகளும் வலிமையுடன் திகழ்கின்றன. இவையும் சில கட்டங்களில் அந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகளாக இருந்தவை என்பதை மறந்துவிட முடியாது.


1989-ஆம் ஆண்டிற்குப் பிறகு மாநிலக் கட்சிகளின் உதவியோடுதான் மத்திய அரசை அகில இந்தியக் கட்சிகள் அமைக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்தியத் தேசியக் காங்கிரஸôக இருந்தாலும் சரி, பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி இனி எந்தக் காலத்திலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. மாநிலக் கட்சிகளின் உதவியோடுதான் மத்திய ஆட்சி அமையும்.


காங்கிரஸ், பா.ஜ.க. போன்றவை அகில இந்தியக் கட்சிகள் ஆனாலும் அந்தக் கட்சிகளிலும் வலுவான மாநிலத் தலைமையை ஒட்டிதான் அக்கட்சிகளின் செல்வாக்கு அந்தந்த மாநிலங்களில் அமைந்துள்ளது.
சக்திவாய்ந்த மாநிலத் தலைவர்களைப் புறக்கணித்தால் இக்கட்சிகளுக்கு அந்த மாநிலங்களில் பெரும் சரிவு ஏற்படும் என்பதை கடந்த காலத்தில் நாம் பார்த்தோம். இந்த இருகட்சிகளுமே குறிப்பிட்ட சில மாநிலங்களில்தான் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. எல்லா மாநிலங்களிலும் இக்கட்சிகளால் ஒருபோதும் வெற்றிபெறவும் முடியாது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி கற்க வேண்டிய பாடங்களைக் கொஞ்சமும் கற்கவில்லை. 1968-ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  இப்போராட்டத்தினால் சட்டம்-ஒழுங்கு கெடவில்லையென கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அறிவித்தார். அதைப்போல மேற்கு வங்காளத்தில் கூட்டணி அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ஜோதிபாசு அதைப்போன்ற நிலைப்பாடு எடுத்தார்.


ஆனால், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சவாண் இக்கருத்தை ஏற்காமல் மத்திய அரசு அலுவலகங்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை இம்மாநிலங்களுக்கு அனுப்பினார். அவ்வாறு மத்திய அரசு செய்வதற்கு உரிமை உண்டு எனவும் அதை மாநில அரசுகள் தட்டிக்கேட்க முடியாது என்றும் சவாண் கூறியதை ஒட்டி பெரும் சர்ச்சை மூண்டது.


1969-ஆம் ஆண்டு ஏப்ரலில் மேற்கு வங்காளத்தில் காசிப்பூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் சுட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாநில அரசின் ஆதரவுடன் பந்த் நடத்தப்பட்டது.


சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது முழுமையாக மாநில அரசுகளின் பொறுப்பாகும். இதில் மத்திய அரசு தலையிடுவதும் மத்திய போலீஸ் படையை மாநிலங்களுக்கு அனுப்புவதும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாநிலங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை பாதுகாக்கவே தனது படைகளை அனுப்பியதாக மத்திய அரசு கூறியதை மாநில அரசுகள் ஏற்கவில்லை.


அத்தொழிற்சாலைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசைச் சார்ந்ததே என்பதைச் சுட்டிக்காட்டினார்கள்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1939-ஆம் ஆண்டில் மன்னரின் போலீஸ் படை என்ற பெயரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. சுதேச சமஸ்தானங்களில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இப்படை பயன்பட்டதே தவிர, பிரிட்டிஷ் இந்திய மாநிலங்களில் ஒருபோதும் பயன்படுத்தவில்லை.


1949-ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து இப்படையை நிரந்தரமாக்கிற்று. எந்த மாநிலத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் படையை அனுப்புவதற்கும் நிரந்தரமாக தங்க வைப்பதற்கும் தனக்கு அதிகாரம் உண்டு என மத்திய அரசு கூறியது.


சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் மாநிலப் போலீசுக்குத் துணையாகச் செயல்படவேண்டியது மத்திய போலீஸின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அதை மீறி தன்னிச்சையாக செயல்படுவது என்பது மாநிலங்களின் உரிமைகளில் குறுக்கிடுவதாகும்.


அரசியல் சட்டப்படியும் யதார்த்தப்பூர்வமான உண்மைகளின்படியும் மாநில அரசுகளின் சம்மதமின்றி மத்திய போலீஸ் படை அந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது மிகத் தவறான அணுகுமுறையாகும். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய நிலைமை இல்லை.


1968-ஆம் ஆண்டில் மத்திய போலீஸ் படை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டபோது இரண்டு மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், 2012-ஆம் ஆண்டில் தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மைய சட்டத்திற்கு எதிராக மிகப்பெரும்பாலான மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பை அலட்சியம் செய்வது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.


இந்தியாவின் அரசியல் சூழ்நிலை அடியோடு மாறியிருக்கிறது. மாநிலக் கட்சிகள் வலிமையாகத் திகழ்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் அகில இந்திய கட்சிகள் செல்வாக்கு இழந்துள்ளன. மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் எதிர்காலத்தில் எந்த அகில இந்தியக் கட்சியும் மத்திய ஆட்சியை அமைக்க முடியாது. நிலைமை மாறிக்கொண்டே செல்கிறது. ஒருகட்டத்தில் மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் இணைந்து மத்திய ஆட்சியை அமைக்கும் சூழ்நிலைகூட வரலாம். அதை நோக்கித்தான் நாடு இன்று சென்றுகொண்டிருக்கிறது.


மக்கள் செல்வாக்கும் அறிவாற்றலும் திறமையும் மிக்க தேசியத் தலைமை இன்றில்லை என்ற உண்மையை இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இவை நிரம்பப் பெற்றிருந்த நேரு, படேல், இந்திரா காந்தி போன்றவர்கள் இன்றில்லை. அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளில் அமர்ந்திருப்பதாலேயே அவர்கள் வகித்த அதிகாரங்களையெல்லாம் விட கூடுதலான அதிகாரங்களைத் தாங்களும் வகிக்க முடியும் என எண்ணுவது பேதமையாகும்.


ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் திகழ்ந்த நேருகூட மாநில முதல்வர்களையும், மக்கள் கருத்தையும் மதித்து நடந்தார். முக்கியப் பிரச்னைகளில் அவர்களைக் கலந்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்றே செயல்பட்டார். மொழிவழி மாநிலங்கள் அமைவதை நேரு மிகக்கடுமையாக எதிர்த்தார்.


ஆனால், ஆந்திர மாநிலம் வேண்டுமெனக் கோரி பொட்டி ஸ்ரீராமுலு செய்த உயிர்த்தியாகமும் ஆந்திர மக்களின் கொந்தளிப்பான போராட்டமும் அவரைச் சிந்திக்க வைத்தன. அவர் ஒரு ஜனநாயக வாதியாகத் திகழ்ந்ததனால் மக்களின் விருப்பத்தை ஏற்று மொழிவழி மாநிலங்கள் அமைக்க முன்வந்தார்.


இந்தியாவை ஐந்து மண்டலங்களாகப் பிரிப்பது என்ற திட்டத்தின் முதல்படியாக தட்சிணப் பிரதேசம் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் காமராஜர், கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா, கேரள முதலமைச்சர் பனம்பள்ளி கோவிந்த மேனன் ஆகியோரை அழைத்துப் பேசியபோது மற்ற இருவரும் ஓரளவு சம்மதம் தெரிவித்தபோதும் தமிழக மக்களும் கட்சிகளும் இத்திட்டத்தை ஏற்கவில்லை என காமராஜர் கூறியதற்கு மதிப்பளித்து அத்திட்டத்தையே கைவிட்டார்.
 அவர் காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்வர்களே பதவிகளில் இருந்தார்கள். நேரு பிரதமர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் அவரே தலைவர். ஆனாலும் மாநில முதல்வர்களின் விருப்பத்தை மீறி சர்வாதிகாரியாகச் செயல்பட அவர் ஒருபோதும் முயன்றதில்லை.


பிரதமர் இந்திரா அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்து சர்வாதிகாரியாக மாற முயன்றபோது மக்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் கொதித்தெழுந்து போராடி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தினார்கள். 1977 தேர்தலில் இந்திரா முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார். தனது தவறை உணர்ந்து மக்களிடம் மன்னிப்புக் கேட்கவும் செய்தார்.


நேரு போன்ற மக்கள் செல்வாக்குமிக்கத் தலைவரே மாநிலத் தலைமைகளை மதித்து நடந்துகொண்டபோது அதில் அணு அளவுகூட மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் போன்ற பெரும் பதவிகளில் உட்கார்ந்துகொண்டு மேலும் மேலும் தங்கள் கரங்களில் அதிகாரங்களைக் குவித்துக்கொள்ள முற்படுவது சரியா?


இருக்கும் அதிகாரங்களையே முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் இவ்வாறு செயல்படுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தைக்கீறி வைகுந்தத்திற்கு வழிகாட்ட முற் பட்டதைப் போலாகும்.

நன்றி : தினமணி நாளிதழ்