ஊழலில் கருத்தொற்றுமை, கூட்டணி தர்மம்! காங்கிரஸ் இஷ்டைல்!


ஒருவழியாகக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்து விட்டது! ஐமு கூட்டணிக் குழப்ப வேட்பாளர், பிரணாப் முகர்ஜியின் வெற்றி அனேகமாக வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் உறுதிதான்!
ஆனால், மன சாட்சிப்படி ஓட்டுப் போட்டு யாராவது குழப்படி,சில்மிஷங்கள் செய்திருக்கிறார்களா என்பது இனி மேல்தான் தெரிய வேண்டும்.
 
போதாக்குறைக்கு, பிரணாபின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதே செல்லாது என்ற சங்மா, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுக்கள்--உச்சநீதி மன்றத்துக்கு இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படலாம்.உச்சநீதிமன்றம் இதில் என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது ஒருபக்கமிருக்க, ஐமுகூட்டணிக் குழப்பம் பிரணாப் விஷயத்தில் கருத்தொற்றுமையுடன் நின்றது எந்த லட்சணத்தில் என்பது சரத் பவார் முறுக்கிக் கொள்ள ஆரம்பித்ததில் நன்றாகவே வெளிப் பட்டிருக்கிறது.  வேறுவழியின்றி  காங்கிரஸ் அதற்கான விலையையும் கொடுத்து, சமாளித்திருக்கிறது!

முலாயம் சிங் யாதவ்சங்மாவுக்கு வாக்களித்து, அதை மறுபடி பிரணாபுக்கு மாற்றிப் போட்டதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாமல்செல்லாத ஒட்டாக்கி  நிராகரித்திருக்கிறது. அதனாலென்ன? முலாயம் தான் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவே சொல்லி விட்டார்!.காங்கிரஸ் கொடுத்த கூலிக்கு சரியாகவே கூவியாயிற்று! இதற்குமேலும் ஆதரித்துக் கூவ வேண்டும் என்றால்,அதற்குத் தனி ரேட் என்பது தான்!

சரத் பவார் ராஜினாமா விவகாரமும் அப்படித்தான்!டம்மிப் பீஸ் மண்ணுமோஹனுக்கு அடுத்த நம்பர் டூ டம்மி யார் என்பதில் தான் பிரச்சினை என்றார்கள்! அதெல்லாம் காங்கிரசில் இருக்கும் சொந்த முகமற்ற, ஜனங்களிடம் தனித்துப் போய்முகம்  காட்ட முடியாத  தலையில்லாததுகளுக்கு! பவார் மாதிரி ஊறித்திளைத்த பழம் பெருச்சாளிகளுடைய கணக்கெல்லாம் வேறு என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.ஐமு கூட்டணிக் குழப்பத்தில் தொடர்ந்து இருக்கப்போவதாக, பவார்  அறிவித்திருப்பதில், காங்கிரசின் கையறு நிலையைப் பயன்படுத்தித் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டு விட்டார் என்று தான் தோன்றுகிறது!

வேறென்ன? பவாருடைய மகள் சுப்ரியா சுலேவுக்கு விரைவில் மத்தியில் கேபினெட் அந்தஸ்துள்ள மந்திரிப் பதவி! அப்புறம் வேறு சிலபல  விஷயங்கள்! தென்னகத் தோழி கனிமொழி வேடிக்கை பார்த்துக் கொண்டு வெறும் கையைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா என்ற கேள்வியை கடந்த மூன்று மாதங்களாகவே இந்தப்பக்கங்களில் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்!

சரத்பவார், முலாயம் சிங் யாதவ், மம்தா பானெர்ஜி, இடதுசாரிகள், மாயாவதி, ஜெயலலிதா,நிதிஷ்குமார், பட்நாயக்  போன்றவர்கள்  இந்த மாதிரி அரசியல் மாற்றத்தை நிகழ விடுவார்களா தடையாக இருப்பார்களா என்பது கேள்வியின் உட்கிடையாகவே இருக்கிறது. ஆனால் இவர்களையும் மீறி, காங்கிரஸ் வேகமாகச் சிதைந்து கொண்டிருப்பதில், அரசியல் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பது நன்றாகவே புலப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணிக் குழப்பம், பிஜேபி தலைமையிலான தேசீய ஜனநாயகக் கூட்டணிக் குழப்பம் இரண்டுமே கருத்தொற்றுமை பற்றி அவ்வப்போது பேசுகின்றன இல்லையா? முதலில் இந்தக் கருத்தொற்றுமை என்றால் என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்!



காங்கிரசைத் தொட்டுப் பதிவுகள் எழுதுவதில் எனக்கு அவ்வளவு விருப்பமில்லை என்றாலுமே கூட, ஒரு தலைமை, நிர்வாகம் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது, செயல்படக் கூடாது என்பதில், காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஒரு சிறந்த உதாரணம். அதனால் தான் காங்கிரஸ் கலாசாரத்தை வைத்து  எதை எதையெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது, எதெல்லாம் தவிர்க்கப் படவேண்டியது என்பதை இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்!
Consensus! கருத்தொற்றுமை!

டோனி மோர்கன் என்ற பதிவரை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்! இவருடைய பதிவுகள், பெரும்பாலானவை, கிறித்தவ சர்ச்சுக்களின் நிர்வாகம், நிதி, இயக்கம் சார்ந்தவை, சர்ச்சுக்களால்  ஸ்பான்சர் செய்யப் படுபவை  என்றாலுமே கூட, சில பதிவுகள், நிர்வாகம், மேலாண்மை, குறித்த விஷயங்களில் பொருந்தியும், சிந்திக்கத் தூண்டுபவையாகவும் இருக்கிறது.

இந்தக் கருத்தொற்றுமை என்ற வார்த்தையையே ரொம்பக் கெட்ட வார்த்தையாகப் பார்க்கும் விதத்தில், இவர் எழுதிய ஒரு பதிவு ஒன்றைப் படித்து விட்டு, நாட்டு நடப்பு, உலக நடப்போடு பொருந்தி வருகிறதா என்று பார்த்தபோது தான், மன்மோகன் சிங் பேசினது செம காமெடியாக இருந்தது.
எப்படி என்பதைப் பார்ப்போமா?  

டோனி மோர்கன், இந்தக் கருத்தொற்றுமை என்பது வெறும் கேலிக் கூத்து என்பதைக் குறைந்தது ஐந்து காரணங்களை வைத்தாவது சொல்லிவிட முடியும் என்கிறார். ஒவ்வொன்றாக, நம்முடைய சூழ்நிலைக்குப் பொருந்துகிற விதத்தில், அரசியலை அல்ல, நிர்வாகம், மேலாண்மை, தலைமைப் பண்பு, இந்தத் தலைப்புக்களை மையப்படுத்தி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாமல், பார்க்கலாமா?

கருத்தொற்றுமை ஏற்பட சில அடிப்படைத் தேவைகள்! விதங்கள்!

கற்றுக் கொள்வதில் இரண்டு விதம், ஒன்று நம்முடைய சொந்த அனுபவங்களில் இருந்து! இரண்டாவது, அடுத்தவருடைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்வது! இதுவும் இரண்டு விதமாகப் பிரிந்து, எப்படி சரியாகச் செய்வது என்பதாகவும், எப்படிச் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்கும் இல்லையா?!

கருத்தொற்றுமை என்பது அர்த்தமே இல்லாத வெற்று வார்த்தை! எப்படி என்றால்,
முதலாவதாக, கருத்தொற்றுமை என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு தருணத்துச் சூழ்நிலையோடு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.. மாற்றம் என்பது  ஒரு பக்குவ நிலை, அதற்குத் தயாராக இருக்கும் தைரியம் எல்லோருக்குமே இருப்பதில்லை. கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும் போதே, தேக்க நிலை வந்து விடுகிறது. Status Quo என்ற படிக்கு எப்படி இருந்ததோ அதே பழைய நிலையிலேயே நிற்றல் என்பது, கருத்தொற்றுமை என்பதன் முதல் கோணலாக, அவலட்சணமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும்போதே, அங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி சந்தைக் கடை மாதிரி இரைச்சலும், கூச்சலுமாகிப் போய் விடுகிறது. தரங்கெட்ட விஷயங்களும், எதிர்மறையான போக்குகளும், கெட்ட எண்ணம் உடையவர்களுமே கூட சம வாய்ப்பு என்ற சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, உண்மையான குறிக்கோளை எட்ட விடாமல் செய்துவிடுகிற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.

மூன்றாவதாக, தைரியமான முடிவுகளை, விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் எடுபடாமல் போய்விடுகிறது. நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைப் பேச முடியாமலேயே போய்விடுகிறது. நடுநிலை என்பது ஆகச் சிறந்தது எது என்று சீர்தூக்கிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்குப் பதிலாக, மதில் மேல் பூனை மாதிரி ரெண்டுங் கெட்டானான  நிலையை எடுப்பது தான் என்றாகிப் போய்விடுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இங்கே மதச் சார்பின்மை-செக்குலரிசம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கும் விதம்!

நான்காவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்யும் முனைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே வளர்த்துக் கொண்டிருப்பதாக மாறிப்போய் விடுகிறது. ஒரு ஆரோக்கியமான விவாதம், அழுத்தமான கருத்தைப் பேசினால், எங்கே மற்ற தரப்பு விறைத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், நடக்காமலேயே தவிர்க்கப் படுகிறது. அந்த நேரத்துக்கு, இரண்டு தரப்பையும் சமாதானமாகப் போகும்படிக்  கெஞ்சலாகவிரிசலை பெயின்ட் அடித்து மறைத்து விடலாம் என்கிற மாதிரியானதாக, நின்று விடுகிறது.

ஐந்தாவதாக,கருத்தொற்றுமை என்கிற பெயரில், இப்போதிருக்கும் நிலையை விட உயரத் தவிக்கும் கனவுகளின் சிறகுகளை முறிப்பதாக மட்டுமே நடக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக, ஆக்கபூர்வமாகச் சிந்திக்க முற்படுபவர்களை, கூட்டத்தோடு கோவிந்தா என்று போய்விடும்படி வற்புறுத்துகிறது. மறுப்பவர்களை வலுக் கட்டாயமாகப்  பேசாமல் இருக்கும்படி மிரட்டுகிற கட்டப்பஞ்சாயத்தாகவுமே பெரும்பாலான சமயங்களில் மாறிவிடுகிறது.

அரசியலாகட்டும், அல்லது பணிபுரியும் இடமாக இருக்கட்டும்! கருத்தொற்றுமை என்பது எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! தேக்கமடைந்து விடுவதை உங்கள் மீது திணிக்கிறதா? எதில் கருத்தொற்றுமை அவசியம் என்பதை விட்டு விலகி, சம்பந்தமே இல்லாமல், சந்தைக் கடையாகவும், சண்டைக் களமாகவும் ஆகி விடுகிறதா?
மிகச் சொற்பமான அளவிலேயே சொல்லப் பட்டாலும், சொல்வதன் உண்மையை ஏற்றுக் கொள்ள முடிகிறதா, அல்லது கும்பலாகக் கூச்சல் போட்டே நல்ல விஷயம் கூட அம்பலமேறாமல் போய் விடுகிறதா? கூட்டமாகச் சொல்வது தான் சரி, அது சரி அது சரி என்று தலையாட்டிப் பொம்மைகளாக்குகிறதா அல்லது, தீர்க்கமாகச் சிந்திக்க இடம் இருக்கிறதா?
இந்த ஐந்து காரணங்கள் அத்தனையும்உங்களுடைய அனுபவத்தில், யோசித்ததில்  பொருந்துகிறதா? கூடுகிறதா? குறைகிறதா?

உங்களுடைய  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கேட்போம்!

ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா அல்லது ஊமைச்சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா?

தினமணி தலையங்கம்: மரபும், திரிபும்...


ரண்டு மாதங்களுக்கு முன்னால். குடியரசுத் தேர்தலைத் தொட்டு ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா என்ற கேள்வியுடன் ஒரு பதிவை முடித்திருந்தேன்! ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஆளும் ஐமு கூட்டணிக் குழப்பம், தேமு கூட்டணிக் கலகம் இரண்டிலுமே ஒருதெளிவான முடிவை எடுக்கத் திணறிக் கொண்டிருந்த நேரம் அது!ஆளும் தரப்பு, எதிர்த் தரப்பு இரண்டுமே குழப்பத்தில் இருந்தாலும், தெளிவாக இருந்த ஒரே நபர் பிரணாப் முகர்ஜி ஒருத்தர்தான் என்பதை அடுத்தடுத்து ஏற்பட்ட  திருப்பங்கள், முறுகல்கள், பிரணாபைக் கொஞ்சமும் நம்பாத சோனியா வேறு வழி ல்லாமல், பிரணாபை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நன்றாகவே வெளிப்பட்டது!

1969 களில் இந்திரா மனசாட்சிப் படி ஓட்டு போடுங்கள் என்று சொல்லி, பேக்சீட் டிரைவிங் செய்ய முயன்ற முதுபெருந்தலைகளைப் புறக்கணித்துக் காங்கிரசையே இண்டிகேட், சிண்டிகேட் என்று இரண்டாக உடைத்தார். அந்த இண்டிகேட் மரபு இன்றைக்கு ஜனாதிபதிதேர்தலில் வெளிப்படையான குதிரை பேரம், சிபிஐ, மற்றும் அமலாக்கத்துறை உதவியோடு இத்தாலிய மம்மி காங்கிரஸ் ஒரு புதிய மிரட்டல் தொனியில் நடத்திக் கொண்டிருக்கிற அளவுக்கு சீரழிந்திருக்கிறது.

ந்த இரண்டு மாதங்களில், இந்த போக்கைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததில், ஒருஅரசியல் மாற்றத்துக்கு தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியே அமுங்கிப் போயிருப்பதை நன்றாகவே அனுமானிக்க முடிந்தது. 1973 ஆம் வருடம்ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையேற்று நடத்திய பீகார் இயக்கம் இந்திரா ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆரம்பத்தில் மாணவர்கள் போராட்டமாக இருந்தது, ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை தினமணியின் அந்நாள் ஆசிரியர் திரு ஏ என் சிவராமன் கணக்கன் என்ற பெயரில் எழுதிய கட்டுரைகள்,பீகார் இயக்கம் - ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமை :நிகழ்ச்சிகள், தத்துவங்கள், குறிக்கோள் என்ற புத்தகமாக தினமணி வெளியீடாக முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னால் வந்தது.

ப்போது அந்தப் புத்தகத்தை, புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தின் உதவியோடு மீண்டும் படித்துக் கொண்டிருப்பதில், Youth for Democracy ஜனநாயகத்துக்கான இளைஞர்கள் எழுச்சி ஏற்பட்டால் தவிர, இந்த தேசத்துக்கு விடிவு காலம் இல்லை என்று வார்தாவில் இருந்து  இளைஞர்களுக்கு ஜேபி விடுத்த அறைகூவல் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதை இங்கே கவனப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஆனால்,நேற்றைய தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் கொஞ்சமல்ல நிறையவே ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்பதோடு, பிரச்சினையை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில்  பார்த்து எழுதப் பட்டதாக இல்லை. இந்தத்தலையங்கம் நேரு என்னவோ மரபுகளைத் திரிக்காமல் ஜனநாயகத்தை வளர்த்த மாதிரியும், இப்போது மட்டும் தான் மரபுகள் திரிக்கப்படுவது போலவும் எழுதப்பட்டிருப்பது விந்தையாக இருக்கிறது. 

போதாக்குறைக்கு, கருணாநிதியின் "குடியரசுத் தலைவர் தேர்தலில் தெற்கு வடக்கு பார்க்கத் தேவையில்லை" வசனத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கிறது. 


காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதினான்கு ஆண்டுகளில், இத்தாலிய மம்மிக்குத் தான் இன்னும் செல்லு படியாகக் கூடிய காசுதான் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்!  

ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிற உன்னதமான தலைமை என்று தியாக சிகரமான இத்தாலிய மம்மிக்குப் பேர் இருந்தது!(!!) ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில், அந்த பிம்பம் உடைபட்டுப் போய், எத்தைத் தின்றாலாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனதுதான் காங்கிரஸ் என்ற உண்மையும், தியாக சிகரத்தின் தலைமைக்கான சோதனையும் பல்லை இளித்துக் கொண்டு இப்போது முன்வந்து நிற்கிறது.

தாங்கள் சொல்வதற்குத் தலையாட்டுகிறவர்கள் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது இந்திரா காலத்தில் இருந்தே தொட்டுத் தொடரும் காங்கிரஸ் கலாசாரக் கருமாந்திரம்! என்றெழுதிய இந்தப்பதிவையும் ஒருதரம் வாசித்துப் பார்த்துவிடுங்கள்!காட்சிகள் மாறிவிட்டமாதிரித் தோன்றினாலும் பின்னணியில் இருப்பது பிரதானமாக இது ஒன்றுதான்!

தினமணி தலையங்கம்: First Published : 12 Jul 2012 02:29:00 AM IST


குடியரசுத் தலைவர் பதவி என்பது முதல் குடிமகன் என்கிற மரியாதைக்கு உரிய பதவியாக மட்டுமே நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கருதப் படும் என்பது உண்மை. ஆனால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்கிற அதிகாரத்தையும் எந்த ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ பெரும் பான்மை இல்லாத நேரத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கும் கடமையையும் அரசியல் சட்டம் குடியரசுத் தலைவரிடம் தான் ஒப்படைத்திருக்கிறது.

இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது முதல் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்வில் இரண்டு மரபுகள் கடைப் பிடிக்கப்பட்டன. முதலாவது மரபு, குடியரசுத் தலைவர் அல்லது துணைத் தலைவர் தென்னாட்டைச் சேர்ந்தவராக இருப்பது; இன்னொரு மரபு, இருவரில் ஒருவர் சிறுபான்மை அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிரதிநிதியாக இருப்பது என்பவைதான் அவை. இந்த இரண்டு மரபுகளும் வாக்குவங்கி அரசியலுக்காகவோ, குறுகிய கண்ணோட்டத்துடனோ ஏற்பட்டவை அல்ல.

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையோ, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையோ, அதிகாரமில்லாத குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்துவதால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று சிலர் கேட்கக்கூடும். அதன் மூலம் மதக்கலவரங்களும், சாதிக் கலவரங்களும் இல்லாமல் போய்விடாதுதான். ஆனாலும், சிறுபான்மையினராக, தாழ்த்தப்பட்டவர்கள் என்று தனிமைப்ப டுத்தப்பட்டவர்களாக இருப்பவர்களுக்கு, நீங்களும் இந்த இந்திய சமுதாயத்தின் இன்றியமையாத அங்கம் என்பதை உணர்த்தும் அடையாளம்தான் தேசத்தின் முதல் குடிமகனுக்கான அங்கீகாரத்தை வழங்கும் செயல்.

சின்ன நாடான சிங்கப்பூர் ஒரு தமிழனைக் குடியரசுத் தலைவராக்கி சிறப்பிப்பது இதனால்தான். இப்படிச் செய்ய மறுத்ததால்தான் இலங்கையின் சிறுபான்மை தமிழ்ச் சமுதாயத்தினர் அந்த தேசத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியாமல், இரண்டாம்தரக் குடிமக்களாக்கப் பட்டதாகக் குமுறத் தொடங்கினார்கள். தொலைநோக்குப் பார்வையுடன் இதை உணர்ந்துகொண்ட அன்றைய பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு எடுத்த தேர்ந்த முடிவுதான் 1952-ல் டாக்டர் ராதாகிருஷ்ணனையும், 1962-ல் ஜாகீர் ஹுசைனையும் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிகளை வடக்கின் பிரதிநிதியும், தெற்கின் பிரதிநிதியும் மாறி மாறி அலங்கரிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததும் பண்டித ஜவஹர்லால் நேருதான். 1952-ல் குடியரசின் துணைத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்வி எழுந்தது.

அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த கைலாஷ்நாத் கட்ஜு (உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜுவின் தந்தை) குடியரசின் துணைத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனைப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ஏன் தேர்வுசெய்ய விரும்பினார் என்பதைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.  இந்திய சரித்திரத்தில் ஆழ்ந்த தேர்ச்சியுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அப்படி ஒரு முடிவெடுத்ததற்கு சில சரித்திரக் காரணங்கள் இருந்தன என்று கைலாஷ்நாத் கட்ஜுவின் பதிவு தெளிவுபடுத்துகிறது.

தினமணி  தலையங்கத்தை  முழுமையாகப் படிக்க இங்கே

***** 

இப்போது கொஞ்சம் யோசித்து விட்டுசொல்லுங்கள்! நாம் ஒரு அரசியல் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறோமா? அல்லது ஊமைச் சனங்களாகவே குறுகிப் போய்க் கிடக்கப்போகிறோமா?

..