"இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே"


Golden Drops of Light



There is only one thing of which I am absolutely sure, and that is who I am. Sri Aurobindo also knew it and declared it. Even the doubts of the whole of humanity would change nothing to this fact.

But another fact is not so certain - it is the usefulness of my being here in a body, doing the work I am doing. It is not out of any personal urge that I am doing it. Sri Aurobindo told me to do it and that is why I do it as a sacred duty in obedience to the dictates of the Supreme.
Time will reveal how far earth has benefited through it.


THE MOTHER
(24.5.1951)
(On Herself, Volume 13, Page 47)

Courtesy Golden Drops of Light by www.searchforlight.org

அறியாமல் இருந்த பொழுதிலும், புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் கூட ஸ்ரீ அரவிந்த அன்னையே! நீ இவனிடத்தில் காட்டிய பேரருளை என்னவென்று சொல்வது அம்மா!

பத்து அல்லது பதினோரு வயதுச் சிறுவனாக இருந்த போது, இவனது உடன்பிறந்தவன் ஒரு கல்லூரிகளுக்கிடையிலேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி ஜிப்மெர் கல்லூரிக்குப் போய் விட்டு, அப்படியே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கும் போய் விட்டு வருகிறான். வரும்போது, சில புத்தகங்களையும் வாங்கி வருகிறான். அதிலே ஒரு புத்தகம். ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள்-கரடு முரடான மொழிபெயர்ப்பு, தவிர இவனுக்கோ கையில் கிடைக்கிற எல்லாவற்றிலும் தூய தமிழில் தன் பெயரை எழுதிப் பார்ப்பது தவிர புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லை.அந்தப் புத்தகத்திலும், இன்றைய அரசியல்வாதிகள் போல, தன் பெயரை முகப்பு, மற்றும் உள்ளே இரண்டு பக்கங்களில் பொரித்தாயிற்று.

அந்தப் புத்தகத்திலே உள்பக்கத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருப்பு வெள்ளைப் புகைப்படம், அதைப் பார்க்கும் போதெல்லாம், "அட,.இவள் எங்க அம்மா போல இருக்கிறாளே" என்று தோன்றும். அடிக்கடி அந்தப் புத்தகத்தை எடுப்பதும், படத்தைப் பார்த்து, "இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே" என்று நினைப்பதும், ஒன்றிரண்டு பக்கங்களை சும்மா அப்படிப் புரட்டிப் பார்ப்பதும், இப்படியாக சில காலம்.

உண்மையில், இவனைப் பெற்ற அன்னையின் முக சாயலுக்கும், அந்தப் புகைப்படத்தில் இருந்த உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே இவனது அன்னையின் சாயலில் அடிக்கடி தோன்றி இருக்கிறார் என்பது இவனுக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆயிற்று.

இடையில், ஏகப்பட்ட சோதனைகள்.வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல், ஒரு சவலைப் பிள்ளையைப் போலத் தடுமாறி தடம் புரள இருந்த நேரத்தில் சத்குரு ஸ்ரீ சாதுராம் சுவாமிகளுடைய கருணைப்பார்வை இவன் மேல் விழ, அறுந்த பட்டம் போல இலக்கில்லாமல் காற்றடிக்கிற பக்கமெல்லாம் போய்க்கொண்டிருந்த நிலைமாறியது.

அதுவும் கொஞ்ச காலம் தான். மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொண்டு ஆட்டிப் படைக்க, ஊரைத்திருத்தப் புறப்பட்ட வெட்டிக்கூட்டத்தில் இணைந்து கொண்டு நாத்திகமும் பேச ஆரம்பித்தான் அவன். தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திக வாதம், இப்படி ஏகப்பட்ட அடைசல்கள்.

சாதிக்க முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான் என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.

உண்மைதான்.

தன்னையே ஒரு ஒழுங்கு, கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கத் தெரியாதவன், ஊரைத் திருத்தப் போகிறேன், சீர் திருத்தம் கொண்டு வரப் போகிறேன், புரட்சி செய்யப் போகிறேன் என்று சொல்லித் திரிவதை விட ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது. இப்படி அயோக்கியர்களோடு அயோக்கியனாக கொஞ்ச காலம் இருந்த பிறகு, மறுபடி ஸ்ரீ அன்னையை அறிந்து கொள்ளத் தவிக்கும் ஒரு நேரமும் வந்தது.

மாற்றத்திற்கான விதை உள்ளே விதைக்கப் பட்டிருப்பது ஒருவாறாக புரிய ஆரம்பித்தது.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன். இவை அனைத்தும் இறைவனது சித்தத்தின்படி இயங்க வேண்டிய கருவிகள். அறியாமையினால் இவை என்னுடையது என்று மயங்கி இருந்தேன்.

மயக்கம் தெளிவித்து என்னை வழி நடத்துவாய் தாயே!

மறுபடி மறுபடி உன்னைச் சரண் அடைகிறேன்.

உன்னைச் சரணாக ஏற்க மறுக்கும் இருண்ட பகுதிகள் மாற்றத்திற்குள்ளாகும் வரை இவனது சிறு முயற்சி வேண்டியிருப்பதும், கவலை கொள்ளாதே உன்னுடைய சிறு முயற்சியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அபயமளிப்பதும் இப்படி எதுவானாலும் உன்னுடைய சித்தத்தின் படியே நடந்தேறட்டும்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!