Showing posts with label பிராண்ட் இமேஜ். Show all posts
Showing posts with label பிராண்ட் இமேஜ். Show all posts

பழசேதான் புதுசு! சும்மா ஒரு வெளம்பரந்தான்!

இதெல்லாம் லுலுளாயிக்குத்தான் 

இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன் படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
 
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
 
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
 
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
 
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது! என்று இந்தப் பக்கங்களில்  எழுதி நான்கு வருடங்களுக்கும் மேலாகிறது. தேடித் தேடி வாசிப்பதும் வலைப் பதிவுகள் எழுதுவதும் சுவாசிப்பது போல என்னுடைய இருப்பின் வெளிப்பாடாக இருந்த தருணங்கள் அவை.

ஆனால் கடந்த இரண்டுவருடங்களில் என்னுடைய செயல்பாடுகளை அதிக சர்க்கரை, டிஸ்க் ப்ரோலாப்ஸ் கோளாறுகள் அனேகமாக முடக்கி வைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும். உடல் உபாதைகள் அப்படியே இருந்தாலும் அவைகளை ஒதுக்கி வைத்து விட்டு என்னுடைய கவனத்தை மறுபடியும் வாசிப்பில், அதைத்தொட்டு எழுதுவதில் இப்போதுதான் செலுத்த முடிந்திருக்கிறது. இந்தப்பக்கங்களில் இந்த ஆண்டில் எழுதும் மூன்றாவது பதிவு இது. எழுதத்தூண்டுதலாகக இருந்தது #திஇந்து நாளிதழில் இன்று படித்த இந்தக் கட்டுரை  

சர்ஃப்  கொடுத்த பதிலடி  என்ற தலைப்பில் மகிக மேலோட்டமாக எழுதப் பட்ட கட்டுரையாகத் தோன்றினாலும் வாசித்ததைத்தாண்டி யோசிக்க வைக்கிற விஷயம் இது. கட்டுரையாளர் நிர்மா வாஷிங் பவுடர் கொடுத்த கடுமையான போட்டியை எப்படி சர்ஃப் சமாளித்தது என்று சொல்லிப் போவதில் மிகவும் முக்கியமானது brand positioning என்ற அம்சம். அதைக் கொஞ்சம் பார்ப்பதற்கு முன்னால் பதிலடி கொடுப்பது எப்படி  என்பதை கோல்கேட் - பெப்சொடெனட் இடையில் நடந்த விளம்பர யுத்தம் ஒன்றை விரிவாகவே பேசியிருப்பதை முடிந்தால் ஒருதரம் வாசித்து விடுங்கள். 

 

சுருக்கமாகச் சொன்னால் கூட்டத்தில் தனித்துத் தெரிகிற வித்தைக்குப் பெயர்தான் brand positioning. தனித்துத் தெரிய வேண்டியது விளம்பரப் படுத்தப்படுகிற பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. விளம்பரத்தைப் பார்க்கிற உங்களுடைய மனதில் போட்டியாளர் தரும் பொருளைப் பற்றி ஒரு சின்ன சந்தேகத்தை ஏற்படுத்த முடிவதில் கூட உங்களுடைய தயாரிப்பைக் குறித்து ஒரு உயர்வான பிம்பத்தை ஏற்படுத்துவது தான் brand positioning.

According to Jack Trout and Al Ries in their bestseller from 1981 “Positioning: The Battle for your mind”, brand positioning is a battle for “the minds of your customers”.
”Positioning starts with a product. A piece of merchandise, a service, a company an institution, or even a person. Perhaps yourself. But positioning is not what you do to a product. Positioning is what you do to the mind of the prospect. That is, you position the product in the mind of the prospect”.
In other words it’s not what you do to a product, it’s how ,you position that product in the mind of your customers.
பழைய திரைப்பட?ங்களைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொண்டு கொஞ்!சம் யோசித்துப் பாருங்கள். கதாநாயகனை மிகவும் உத்தமனாகக் காட்டிக் கொண்டே இருக்க  வேண்டிய அவசியமே இல்லை. மற்றக் கதா பாத்திரங்களை குறிப்பாக வில்லன் மற்றும் கோஷ்டியைகொஞ்சம் கெட்டவர்களாக, கேணையார்களாகச் சித்தரிக்க முடிந்தாலே போதுமானது.
ரொம்பவுமே பழைய  டெக்னிக்காக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

பழசுதான்! ஆனால் புதுசை எல்லாம் தூக்கிச்சாப்பிட்டு விடுகிற டெக்னிக். என்ன சொல்கிறீர்கள்? மேலும் பேசுவோம்!  
  

பத்து இல்லைன்னா பத்தாது! சரி எவ்வளவு இருந்தால் பத்தும்?

ஒரு பிராண்ட் என்றால் என்ன?


ஒரு பிராண்ட் என்பது எப்படி உருவாகிறது?


பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஒரே மாதிரியான தயாரிப்புக்களில் தன்னைத் தனித்துக் காட்ட உதவுகிற விதமாக என்று ஆரம்பித்த பிராண்ட், இப்போது அந்த வரையறைகளைஎல்லாம் தாண்டி, தயாரிப்பாளர் கொடுக்கும் தர உத்தரவாதம், வாக்குறுதி என்ற அளவுக்கு வந்திருக்கிறது. ஒரு நகல் எடுக்க வேண்டும், கடைக்குப் போய் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வா என்று சொல்கிறோம். ஜெராக்ஸ் என்பது போடோகாபியர்களைத் தயாரிக்கும் ஒரு முன்னோடி நிறுவனம். ஜெராக்ஸ் எடுப்பது என்றாலே, நகலெடுப்பது தான் என்ற அளவுக்கு இந்தப் பெயர் வழக்குச் சொல்லாக மாறிப்போனதை, அந்த நிறுவனம் தன்னுடைய ட்ரேட் மார்க் உரிமைகளை மீறுவது போல எண்ணி எவ்வளவோ விளம்பரம் செய்தும் கூட அப்படிப் பயன் படுத்துவது குறையவில்லை!

"உங்களுடைய டாகுமெண்டை ஜெராக்ஸ் செய்ய முடியாது; ஆனால் ஜெராக்ஸ் பிராண்ட் காபியிங் மெஷினில் அதை நகல் எடுக்க முடியும்!" இப்படி ஜெராக்ஸ் நிறுவனம் செய்த விளம்பரம், எடுபடவில்லை என்பது, ஒரு பிராண்ட் தன்னைப் பற்றிய தாக்கத்தை பயன்படுத்துகிறவர்களிடையில் எப்படி நிலை நிறுத்திக் கொள்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்!


ஆரம்பத்தில், ராஜா சோப், அல்லது ஆண்டி சோப் என்று ஒரு பிராண்டை உருவாக்கச் செய்யப்படும் ஆரம்பிக்கும் விளம்பரம், மெல்ல மெல்ல, இது ரொம்ப ரொம்ப நல்ல சோப் என்று ஆரம்பித்து, உங்கள் காசைக் கரைக்காமல், அழுக்கைக் கரைக்கும் சோப் என்றெல்லாம் வர்ணித்து வளர்ந்து, கடைசியில் தயாரிப்பைப் பற்றிய  ஒரு குறைந்தபட்ச உத்தரவாதமாக,தரத்தைக் குறித்த வாக்குறுதியாக இன்றைக்கு ஆகியிருக்கிறது. ஆக ஒரு சோப்பாக இருக்கட்டும் அல்லது வேறெந்தப் பொருளாக, சேவையாக இருக்கட்டும், ஒரு பிராண்ட் என்பது, அது அளிக்கும் வசதிகள், தரம் குறித்த உத்தரவாதமாக இன்றைக்கு இருக்கிறது. 

" A brand is the set of expectations, memories, stories and relationships that, taken together, account for a consumer’s decision to choose one product or service over another."

பிராண்ட் என்றால் என்னவென்று  இப்படித் தன்னுடைய  கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்!


இந்த அம்சத்தை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சேத் கோடினுடைய இந்தப்பதிவு, பிராண்ட், பிராண்ட் இமேஜ், அப்புறம் சந்தைப் படுத்தும் உத்திகள் குறித்து கொஞ்சம் யோசனைகளைக் கிளப்பி விட்டது.

சேத் கோடின் இந்தப் பதிவில் சுருக்கமாக சொல்வது இது தான்! மார்கெடிங் உத்தியில், நம்மிடம் ஏற்கெனெவே இருப்பதைப் பற்றி, அல்லது உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிய அதிருப்தியை எழுப்புவதன் மூலம் தங்களுடைய பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள்! நாம் உபயோகித்துக் கொண்டிருப்பதில், நாம் சந்தோஷப் படக் கூடியது அனேகமாக இல்லை என்று சொல்லும் போது, மறைமுகமாகத் தங்களுடைய தயாரிப்பு அப்படி சந்தோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விளம்பரங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? 


வாடிக்கையாளருடைய திருப்தி என்பது இங்கே, பெயருக்கு மட்டுமே என்பது தான் உண்மை!

சந்தை
ப் படுத்தும் போது மார்கெடிங் உத்திகள் ஒரு பிராண்டை உருவாக்குவது மட்டும் இல்லை, ஏற்கெனெவே இருப்பதைக் கேள்விக்குள்ளாக்குவது, அதன் மீது ஒரு சந்தேகம், அதிருப்தியைத் தோற்றுவித்துத் தன்னுடைய தயாரிப்பை விற்பனை செய்வது என்பதாகவும் இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு டூத் பேஸ்டையே எடுத்துக் கொள்வோம்! அது எந்த பிராண்டாக இருந்தாலும், அடிப்படை அம்சங்கள் பொதுவாகத் தான் இருக்கும். 

தனித்துக் காட்டுவதற்காக, இது ஸ்பெஷல் பார்முலா, கிராம்பு, புதினா போன்ற மூலப் பொருட்களைக் கொண்டது என்று கொஞ்சம் வித்தியாசப் படுத்திக் காட்டுகிற முயற்சி ஒருவிதம்! அப்புறம் இது அதைச் செய்யும், அது இதைச் செய்யும் என்றமாதிரியான எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் இன்னொரு விதம்!

இது போக,ஏற்கெனெவே மார்க்கெட்டில் வலுவாகக் காலூன்றிக் கொண்டிருக்கிற ஒரு பிராண்
டைக் கொஞ்சம் அதிருப்தி சந்தேகம் ஏற்படுகிற மாதிரி செய்யப்படும்  விளம்பர உத்திகள்......!
 


கொஞ்ச காலத்துக்கு முன்னால், தொலைகாட்சி விளம்பரங்களில் பெப்சோடென்ட்  பற்பசைக்காக, இரண்டு சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட கமெர்ஷியல்  "பத்து இல்லைன்னா பத்தாது!" நினைவு வருகிறதா? அதில் பெப்சொடென்ட் உபயோகிக்கும் ஒரு சிறுவன், மற்றவனைப் பார்த்து "என்னோடது பத்து வேலைகளை செய்யும், உன்னோடது..?" என்று கேட்க, அவன் தயங்கித் தயங்கி ஒன்று இரண்டு என்று என்ன ஆரம்பித்து ஆறு வரை எண்ண, முதல் பையன் பத்து இல்லைன்னா பத்தாது என்று ஒரு பன்ச் லைன் வைத்துச் சொல்லி முடிக்கும் அந்த விளம்பரம் நினைவுக்கு வருகிறதா?

கோல்கேட் தயாரிப்பைக் குறிவைத்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரம், நன்றாகவே வேலை செய்தது! தனக்குப் போட்டியே இல்லை என்று இருந்த கோல்கேட் நிறுவனம், இந்த மாதிரி விளம்பர உத்திகளால், பற்பசை செக்மெண்டில் தன்னுடைய பங்கில் கணிசமான பகுதியை இழக்க வேண்டி வந்தது. 


இந்த பத்து இல்லைன்னா பத்தாது விளம்பரத்தை எப்படி சமாளித்தார்கள்? என்ன செய்தார்கள்?

பத்து இல்லைன்னா பத்தாது என்பதற்குப் பதிலாக, கோல்கேட் டோடல் 12 என்ற பற்பசையை அறிமுகம் செய்தது! பத்தை விடப் பன்னிரண்டு பெரிது என்று சொன்ன மாதிரியும் ஆயிற்று, போட்டியாளரை விட இன்னும் அதிகமாக இரண்டு கூடுதல் அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறோம் என்ற மாதிரியும் ஆயிற்று.  

இப்படிச் செய்ததனால், சரிந்துபோன அல்லது இழந்த மார்க்கெட்டை மறுபடியும் முள்ளுமுனை நொறுங்காமல் பிடித்துவிட்டார்கள் என்று அர்த்தமில்லை! அது சாத்தியமும் இல்லை! 

என்ன, இப்போது பத்து இல்லைன்னா பத்தாது என்ற பன்ச் லைன் காலாவதியாகிப் போய்விட்டது, அவ்வளவு தான்! அவர்கள் பன்னிரண்டு என்று வந்துவிட்டதனால் இவர்கள் பதினாலு, பதினாறு என்று கூட்டிக் கொண்டே போவது மார்கெடிங் அபத்தமாக இருக்கும்.

இப்போதைக்கு ஓய்ந்து விட்ட மாதிரித் தோன்றுகிற இந்த விளம்பர யுத்தம், அதாவது தங்கள் பொருளை விற்பனை செய்வதற்குப் போட்டியாளரின் தயாரிப்பில் அதிருப்தி அல்லது சந்தேகத்தை எழுப்புகிற உத்தி, வேறு ஒரு வடிவத்தில் இன்னும் கொஞ்ச காலம் கழித்து நிச்சயம் வரும்!

இதைச் சொல்லும்போது,இதற்கு முன்னால் 1980களில்
கோக கோலாவுக்கும் பெப்சி கோலாவுக்கும் நடந்த சந்தையைப் பிடிக்க நடந்த விளம்பர யுத்தம், அதில் புதுமையைச் செய்கிறேன் என்ற பெயரில் கோக கோலா செய்த ஒரு சிறு சறுக்கலை பெப்சி நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட விதம், அப்போது சறுக்கிக் கீழே விழுந்ததில் இருந்து எழுந்து நிற்பதற்குள், பெப்சி சந்தையின் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டதோடு, வலுவாகக் காலை ஊன்றிக் கொள்ளவும் வழி செய்தது. இந்த கோலா யுத்தத்தில் இருந்து  பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்த பல நிறுவனங்கள் அதே தவறைத் தாங்களும் செய்யாமல் இருக்க ரொம்பவே பிரயாசைப் பட வேண்டி வந்தது. சந்தைப் படுத்துதல், மார்கெடிங், விளம்பர உத்திகள் என்று பார்க்கும் போது கோலா யுத்தம் அவசிய தெரிந்து கொள்ள வேண்டிய அதே நேரம் சுவாரசியமானதுமான ஒன்று.

இப்போது பெப்சி விளம்பரங்களைக் கவனித்துப் பார்த்தால், தங்களை இளமையாகப் பிரகடனடப் படுத்திக்  கொள்வதில், இளைஞர்களைக் குறிவைத்து மட்டுமே விளம்பரம் செய்வதில் குறியாக இருப்பது தெரிய வரும்!


பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி வாசகர்களுடைய கருத்தை முந்தைய பதிவுகளில் வேண்டியிருந்தேன்! இங்கே வந்து வாசிப்பவர்கள் கவனமாக அதைத் தவிர்க்கிற மாதிரி தெரிகிறதே!! 

நண்பர் மாணிக்கம், பின்னூட்டத்தில்  மார்கெடிங் துறையையும், பிராண்ட் இமேஜ் கான்செப்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொண்ட மாதிரித் தோன்றுகிறது.சந்தைப் படுத்துகிற உத்தி, மார்கெடிங் என்பது, உங்களுக்குத் தேவையே இல்லாத ஒன்றைக் கூட உங்களுக்கு மிக மிக அவசியமானது  என்று நம்பவைத்து, ஒரு பொருளை அல்லது சேவையை உங்கள் தலையில் கட்டிவிடுவது! 



உதாரணத்துக்கு, எச் சி எல் கம்பனியைச் சேர்ந்த நிர்வாகி  வினீத் நாயர் என்பவர், employees first, customers second என்ற அடிப்படையில் அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பார். ஆனால் நடைமுறையில் எப்படி இருக்கிறது, என்பது எச் சி எல் கம்ப்யூட்டரை வாங்கிவிட்டு , அதன் தரக் குறைவு, சேவைக் குறைவுக்காக  நான் போராடிக் கொண்டிருப்பதில் நேரடியாகவே பார்த்து விட்டேன். அஞ்சு பில்லியன் டாலர் கம்பனி என்று அவர்கள் பீற்றிக் கொள்வதில், வாடிக்கையாளருக்கு என்ன பலன்? தங்களுடைய டீலர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதையுமே, ஸ்டாப் அண்ட் கோ தாமோதரனுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்! கம்பனி சரியாக இருந்தால் டீலர்கள் மோசடி செய்ய முடியாது. வினீத் நாயருடைய கூற்றுப்படி எச் சி எல்லில் வாடிக்கையாளர்கள் இரண்டாம் மூன்றாம், அல்லது கடைசிப் பட்சம் தான்!

மார்கெடிங் உத்தி வேறு, பிராண்ட், பிராண்ட் இமேஜ் என்பது வேறு!

ஒரு பொருள் அல்லது சேவையைத் தரம், உத்தரவாதம் என்ற அடிப்படையில் தனித்துத் தெரிகிற மாதிரி உறுதிப்படுத்தும் விதத்தில் தான் பிராண்ட், பிராண்ட் இமேஜ் உருவாகிறது. எதற்கும் ஹார்வர்ட் பிசினெஸ் ரெவ்யூ தளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான இந்தக் கட்டுரையை ஒரு தரம் வாசித்துப் பார்த்து விடுங்கள்! மார்கெடிங் துறையில் செய்யப்படும் கோளாறுகள் எப்படி ஒரு பிராண்ட் அல்லது அதன் இமேஜைப் பல சமயங்களில் பதம்பார்த்து விடுகின்றன என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்!







சண்டேன்னா மூணு! மூணில் இது ஒண்ணு !

பிராண்ட், பிராண்ட் இமேஜ், இதெல்லாம் தெரிந்த பெயர்கள் தான்! ஆனால் ஒரு பிராண்ட் என்பது என்ன?   

இந்த பிராண்ட், பிராண்ட் இமேஜைப்பற்றி முன்னம் கொஞ்சம் பேசியிருக்கிறோம்! இப்போது மறுபடியும்....!

ஒரு பிராண்ட் என்பது நேற்றைக்கு அறியப்பட்ட விதத்தில் இருந்து ரொம்பவுமே வித்தியாசப்பட்டு,  பிராண்ட் என்பது ஒருதயாரிப்பாளர் அல்லது சேவையை  வழங்குகிறவர் கொடுக்கும் உத்தரவாதம், அதை நம்புகிற வாடிக்கையாளர் என்று தெளிவாக வரையறை செய்து கொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.

பிராண்ட் இமேஜ் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப்பதிவில் தேடுங்கள்! இதற்கு முன்னால் இந்த சப்ஜெக்டை எடுத்துப் பேசிய பதிவுகள் கிடைக்கும். அதற்கு முன்னோட்டமாக......

ஒரு பிராண்ட் எப்படி இருக்கக் கூடாது என்பதை ஒரு சின்னப் படமாக......
 
இங்கே பிராண்டுகள் வளரும் லட்சணம் எப்படி என்பதை இடதுபக்கம் இருக்கும் எச் சி எல் கம்ப்யூட்டரும், சர்வீஸ் படுத்தல்களும் என்ற பத்தியில் கொஞ்சம், லிங்கில் விரிவாகவும் பார்க்கலாம்.

கொஞ்சம் யோசித்துவிட்டு எனக்கும் சொல்லுங்கள்! பேசுவோம்!





 

ஒரு பிராண்ட் உருவாகும் விதம்........!


ஒரு புது விஷயத்தைப் பார்க்கிறோம். அது ஒரு பிராண்டாக மாறுவதற்கு என்னென்ன அவசியம்?

எல்லோருக்கும் அது ஏற்கத் தகுந்ததாக அல்லது ஒத்து வரக்கூடியதாக எடுத்த எடுப்பிலேயே அமைவது மிகவும் அபூர்வம். உண்மையைச் சொல்லப் போனால் அது  அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த ஒரு புதுமையையும் மிகக் குறைந்த சதவீத மக்கள் மட்டுமே உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரு பிராண்ட் அல்லது சேவையை அறிமுகப் படுத்தும் போதே அது அத்தனை பேராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கூட ஒரு விதமான தவறான கண்ணோட்டம் அல்லது அடிப்படை உண்மையை.புரிந்துகொள்ளத் தவறுவதால் தான். உண்மையில் அப்படி நிகழ்வதே இல்லை!

அப்படியானால், பெரும்பான்மையான ஜனங்களைக் குறிவைத்து எந்த பிராண்டும் செயல்படுவது இல்லையா? பெரும்பான்மையான ஜனங்களின் ஆதரவு இருந்தால் அல்லவா ஒரு பிராண்ட் நீடித்து நிற்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஒரு பிராண்டாக உரு மாறுவது என்பது, பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப் படுவதில் தான் போய் முடிகிறது.

உண்மையைச் சொல்வதென்றால், ஒரு வெற்றிகரமான புது பிராண்டை சந்தைப் படுத்துகிறவர்கள், விளம்பரம் செய்பவர்கள் பெரும்பான்மையினர் கவனத்தை ஈர்ப்பதற்கு உடனடியாக எந்த முயற்சியையும் செய்வதில்லை. புதுமையை விரும்புகிற, ஏற்றுக் கொள்கிற ஒரு சிறு சதவீத மக்களை மட்டுமே குறி வைக்கிறார்கள். அவர்களிடம் தங்களுடைய ப்ராண்டைக் கொண்டு சேர்ப்பதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள்.

அப்படியானால், அந்த பெரும்பான்மை...?

அவர்கள் தானாகவே தேடி வருவார்கள்!

அதை விட்டு விட்டு, எல்லோரையும் ஒரே நேரத்தில் குறிவைத்து செய்யப் படுகிற முயற்சி, நம்மூர் சோஷலிசம் மாதிரி நீர்த்துப் போனதாக அல்லது நீர் மேல் எழுதி வைத்த எழுத்துப் போலத் தான் இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!



பீர்பால் கதைகள்-5! ஏமாந்த சோணகிரியாகவே எப்போதும்!


டில்லி பாதுஷா அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் குளிக்க வேண்டும் என்ற விபரீத ஆசை வந்து விட்டது.

வாரிசுகளையும் கூட்டிக் கொண்டு, பீர்பாலுடன் யமுனை ஆற்றங்கரைக்குப் போனார். எல்லாத் துணிகளையும் அவிழ்த்துப் போட்டு விட்டு, பாதுஷா வாரிசுகளோடு ஆற்றில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார். கரையில், பீர் பால், பாதுஷா, வாரிசு நம்பர் ஒன் வாரிசு நம்பர் டூ மூன்று பேருடைய துணிகளையும் தோளில் சுமந்து கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், பாதுஷாவுக்கு பீர்பாலை நக்கல் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

"
பீர்பால்! உன்னைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது தெரியுமா?" என்று மெதுவாக ஆரம்பித்தார் அக்பர்.

"
ஹூசூர்! உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை நீங்கள் சொன்னால் தானே தெரியும்? சொல்லுங்கள்!" என்று அமைதியாகப் பதில் சொன்னார் பீர்பால். அக்பருக்கு நாக்கு வரை வந்து விட்ட நக்கலை அடக்கிக் கொள்ளத் தெரியவில்லை! இப்படியெல்லாம் அறிவுஜீவித் தனமாக எல்லாம் யோசிக்கத் தெரிந்து அதற்கு அப்புறம் பேசினால் எப்படிப் பாதுஷாவாக இருக்க முடியும்?

"
வண்ணான் கழுதை பொதி சுமந்து கொண்டிருக்கிற மாதிரி, நீங்கள் துணியை சுமந்து கொண்டிருப்பது தெரிகிறது! என்ன பீர்பால், நான் சொன்னது சரிதானே!" அக்பருக்கு பீர்பாலை நக்கலாகப் பேசி விட்ட சந்தோஷம், ஹோவென்று இரைந்து சிரித்தார்! வாரிசுகளுக்கும் ஏக சந்தோஷம்! பாதுஷா எப்படியெல்லாம் பேசுகிறார்! இதற்காகவே எவரை விட்டாவது ஒரு பாராட்டு விழா எடுத்து விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

பீர்பால் பொறுமையாகப் பதில் சொன்னார்: "ஹூசூர்! முழு உண்மை! ஆனால் ஒரு சின்னத் திருத்தம்!நீங்கள் சொன்னது போல நான் சுமந்து கொண்டிருப்பது ஒரு கழுதைப் பொதி சுமை அல்ல! மூன்று கழுதைகளின் சுமையை சுமந்து கொண்டு நிற்கிறேன்!"

பாதுஷாவுக்கும், வாரிசுகளுக்கும் முகத்தில் ஈயாடவில்லை! பீர்பாலைக் கழுதையாகப் பரிகாசம் செய்யப் போய்த் தாங்களே கழுதையான சோகம், பீர்பாலுக்கு சரியான பதில் பாடம் சொல்ல முடியாத சோகத்தை யமுனையில், இன்னொரு முழுக்குப் போட்டாலாவது தீர்த்துக் கொள்ள முடியுமா என்று மறுபடி முழுக்குப் போட ஆரம்பித்தார்கள்.

இந்தக் கதையைக் கொஞ்சம் சுய கழிவிரக்கத்துடனேயே சொல்லித் தேற்றிக் கொண்டாக வேண்டியிருக்கிறது! எப்படி என்கிறீர்களா?

ஐந்து வருடங்களுக்கு முன்னால், வீடியோகானில் விற்பனை மேலாளராக இருந்த நண்பர் ஒருவர் அறிமுகத்துடன், மதுரை டவுன் ஹால் ரோடில் உள்ள வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் கடையில் சான்சுயி டிவி வாங்க முடிவு செய்தேன். வெவ்வேறு கம்பனி மாடல்களைப் பார்த்தபோதிலும் கூட அந்த நேரத்துப் புது வரவாக வந்திருந்த 29 இன்ச் திரை டீவீ  PJ29 MULTIPLEX மாடலைப் பார்த்து, அதன் சவுண்ட் எபெக்டில் மயங்கி வாங்கினேன். பிக்சர் ட்யூபிற்கு ஏழு வருட உத்தரவாதம் என்பது அந்த நேரத்தில் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியவே, இந்த டீவீ மாடலை வாங்குவதற்கு அதுவும் ஒரு காரணமாகிப் போனது.  

வீட்டுக்கு டெலிவரி கொடுக்க வந்தபோது தான், இந்த டீவீயில் உள்ள மிகப் பெரிய குறை தெரிய வந்தது. பத்துக் கழுதை சுமை எடை கொண்ட இந்த டீவீ செட்டைத் தூக்கி வைக்கக் கைலாகுவான வழி வகை எதுவுமே இல்லை! நான்கு பேர் சேர்ந்து ஒரு மாதிரியாக அதன் ஸ்டாண்டில் வைத்துவிட்டார்கள். இதை நகர்த்துவதென்றாலோ, செர்வீஸ் செய்வதென்றாலோ அந்த நாலுபேருக்கு நன்றி பாட்டுப் பாடித் தான் செய்ய முடியும் என்ற சிந்தனை அப்போதே வந்தாலும், அதுவரை இருபது இன்ச் திரையில் பார்த்த கண்றாவிகளை இன்னும் பெரிய திரையில் பார்க்க முடிந்த, சவுண்ட் எபெக்ட் தூள், கிளப்பிய த்ரில்லான அனுபவத்தில் மறந்தே போனது.

பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்னால் டீவீயில் படம் கொஞ்சம் மக்கர் செய்து கொண்டே வந்தது. ரெயின்போ எபெக்ட் மாதிரி ஒரு கூம்பு வடிவத்தில், திரையில் படம் வெற்றிகள் ஹோல்ட் இல்லாமல் அலையலையாக வருகிற தலைவலி வந்தது. வீனஸ் எலெக்ட்ரானிக்சுக்குத் தகவல் சொல்லி செர்விஸ் செய்வதை அவர்கள் பொறுப்பில் எடுத்து செய்ய முடியுமா என்று கேட்டதில், அது எப்படி சார் நாங்கள் ரிஸ்க் எடுப்பது என்ற ஒரு கேள்வியுடன், அங்கீகரிக்கப் பட்ட செர்வீஸ் செண்டர் என்று ஒரு நம்பரைத் தந்தார்கள்

க்வாலிடி என்ஜினீயரிங் செர்விஸ் என்ற பெயரில் மதுரை ஷெனாய் நகரில் இருந்து ஒரு செர்விஸ் ஆசாமி வந்து பார்த்தார். இரண்டு சர்க்யூட் போர்டுகளை எடுத்துக் கொண்டு செண்டருக்குப் போய் சரி செய்து எடுத்து வருவதாகச் சொல்லி விட்டு எடுத்துக் கொண்டு போனார். மறுநாளே தொலைபேசியில் அழைத்து, போர்டை செர்விஸ் செய்த வகையில் ஆயிரத்து அறுநூற்றைம்பது ரூபாய் ஆகும் என்று தகவல் சொன்னார்.

சரி, கொண்டு வந்து மாட்டிக் கொடுத்து விட்டு செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். நாங்கள் செக் எல்லாம் வாங்கிக் கொள்வதே இல்லை, எல்லாம் ரொக்கம் தான் என்றார்கள். வாரண்டி காலத்துக்குள் செர்விசுக்கு அனுப்பியதற்கு எனக்கு ரெகார்ட் வேண்டும், அதனால் செர்வீஸ் செண்டர் பேரில் செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்ன பொது, கொஞ்சம் இறங்கி வந்து ஜே சத்தியன் என்ற பெயரில் செக் வாங்கிக் கொள்ள சம்மதம் சொன்னார்கள். நிறுவனத்தின் பெயரில் தான் செக் என்று நான் கொஞ்சம் பிடிவாதமாக இருக்கவே, மறுமுனையில் செர்விஸ் பெர்சனிடம், போய் பிரீயாகவே மாட்டிக் கொடுத்துவிட்டு வா  என்று இரையும் சத்தத்தோடு அந்த சம்பாஷணை முடிந்தது.
மாலை அந்த செர்விஸ் நபரும், சத்தியனுமே நேரில் வந்தார்கள். பிச்சர் ட்யூபைப் பார்த்து விட்டு, ட்யூப் தான் அடி வாங்கி இருக்கிறது, செர்விஸ் சென்டருக்கு செட்டை எடுத்துக் கொண்டு வந்து (செட் பத்துக் கழுதை அல்லது அதற்கும் கூடவே கனமான சுமை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! ) அங்கே வந்து பேசுங்கள் என்று சொல்லவும், இது ஆகிற கதையாக இல்லையே என்று சந்தேகப் பட ஆரம்பித்தேன்.
என்னுடைய நண்பருக்கு தொலைபேசியில் விஷயத்தை சொன்னேன். வீடியோகான் நிறுவனத்தை விட்டு எளியே வந்து விட்டாலும் அவர் தற்போது பணிபுரிபவர்களோடு நல்ல தொடர்பில் இருப்பதால், அவர்களிடம் பேசி விட்டு இப்போதெல்லாம் எந்த கம்பனியும் நேரடியாக செர்விஸ் செண்டர், அல்லது செர்விஸ் என்ஜினீயர்களை வைத்துப் பார்ப்பது இல்லை, இது போல ஒரு தனி நபர்கள் அல்லது நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கையைக் கழுவி விடுகிறார்கள். க்வாலிடி என்ஜினீயரிங் செர்விஸ் என்று மதுரை ஷெனாய் நகர், வைத்தியநாத ஐயர் தெருவில் இருப்பது கம்பனியால் அங்கீகரிக்கப் பட்ட செண்டர் தான் என்றும் தகவல் சொன்னார். செட்டை சரி செய்வதற்கு அங்கே அனுப்புங்கள், பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொன்னார்.
ஆறு  நாட்களுக்கு முன்னாள் அந்த செர்விஸ் சென்டரில் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. இப்போது ரேட் ரூ.2500/- ஆகிவிட்டது! ஏற்கெனெவே சொன்னதும் இப்போது சொல்வதும் வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டதற்கு, உங்கள் வீட்டில் இருந்து வண்டி வைத்து எடுத்துப் போய் செர்விஸ் செய்து திரும்பக் கொண்டு வைக்கிற வாடகை ஐநூறு ரூபாய் சேர்த்து என்று சொன்னார். முதலில் பேசிய ஆயிரத்து அறுநூற்றைம்பதும் ஐநூறும் கூட்டினால் எவ்வளவு வரும், வாய்ப்பாடு தப்பாக இருக்கிறதே என்று சொன்னதும் அந்தப் பக்கம் வாடி மாப்பிளே செர்விசுக்கு மட்டும்  செட் வரட்டும் வச்சுக்கறோம் என்று கறுவிக் கொண்டது அந்த நேரத்தில் எனக்குத் தெரியவில்லை.
மறுநாள் ராஜா என்கிற செர்விஸ் பெர்சன், ஆரம்பத்தில் இருந்தே இந்த நபர் தான் இங்கே வந்துபோய்க் கொண்டிருந்தவர், வந்து செட்டை ஒரு  ட்ரை சைக்கிள் வண்டியைப் பிடித்து  எடுத்துக் கொண்டு போனார். நான்கு  நாட்களுக்கு முன்னால் காலையில் வீட்டுக்கு வந்து செட் ரெடியாகி விட்டது, அட்வான்ஸ் எதுவும் தருகிறீர்களா என்று கேட்டார். பேசியபடி செட்டைக் கொண்டு வந்து வைத்து விட்டு சரியாக வேலை செய்கிறது என்பதைக் காண்பித்து பில் தொகை மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு போகும்படி சொன்னேன். சரியென்று தலையாட்டிவிட்டுப் போனவர் தான், அப்புறம் ஆளைக் காணவில்லை! நேற்று முதல் நாள் தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது தான் மேலூரில் இருப்பதாகவும், பணத்தை சென்டருக்குக் கொண்டுவந்து கொடுத்து விட்டு செட்டை எடுத்துக் கொண்டு போகும் படி கம்பனியில் சொல்வதாகச் சொன்னார்.
இந்த நிமிடம் வரை டிவி செட் வீடு வந்து சேரவில்லை, செர்விஸ் சென்டரில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. செட்டை எடுத்துப் போனதற்கு முறையான ரசீது எதுவும் இல்லை. கம்பனி விசிடிங் கார்ட் பின்புறம் மாடல் விவரம், எடுத்துப் போன செர்விஸ் பெர்சன் ராஜா செல் நம்பர் 97881 56285  என்பதைத் தவிர வேறு விவரம் எதுவும் இல்லை. விசாரித்தால், இது வாடிக்கையாக நடப்பது தான் என்று சொல்கிறார்கள்.
சர்க்யூட் போர்டில் இரண்டு ஐசிக்களை மாற்றி இருப்பதாக மட்டும் தெரிகிறது. வேறோர் இடத்தில் விசாரித்தபோது சாதாரணமாக நூறு முதல் நூற்றைம்பது ரூபாய் வரையே அதற்கு விலை இருக்கும் என்ற தகவலும் கிடைத்தது. அங்கீகரிக்கப்பட்ட செர்விஸ் சென்டரில், இப்படி ஒரு பகல் கொள்ளை! கம்பனி அங்கீகரித்த  செர்விஸ் சென்டரிலேயே செர்வீஸ் செய்து கொள்வது கூட செல்லூர் மீட்டர் ரன் வட்டிக் காரர்கள் நடத்துகிற கட்டைப் பஞ்சாயத்து மாதிரியே ஆகிப் போனது, மதுரையில் ஏற்பட்டிருக்கிற தொழில் வளர்ச்சியாகப் பார்க்கும்போது பகீரென்கிறது.
சான்சுயி நிறுவனத்தின் வலைப்பக்கங்களுக்குப் போனால், கஸ்டமர் கேர் பகுதியைக் க்ளிக் செய்தவுடனேயே இந்தப் பக்கத்துக்குப் போகிறது. அதோடு சரி! வேறு எந்தவிதமான உதவியோ, தொடர்போ, புகாரை ஏற்றுக் கொள்கிற வசதியோ இல்லாமல் பிளான்க் பேஜாக நின்றுவிடுகிறது. இந்த லட்சணத்துக்குப் பெயர் செர்வீஸ் டிலைட் டாட் காம்! இது தான் சான்சுயி, இந்தியாவில் அதன் வணிகத்தைக் கவனித்து வரும் வீடியோகான்  நிறுவனம் வாடிக்கையாளர் சேவையை மேற்கொள்கிற லட்சணம்!  
வீடியோகான் வலைத்தளத்துக்குப் போய்ப்பார்த்தாலும் கஸ்டமர் கேர், புகாரைப் பதிவு செய்யுமிடம் என்று பார்த்தால் இதே செர்வீஸ் டிலைட் டாட் காம் தான்! அதே வெற்றுப் பக்கம், வெட்டி வேலை தான்! வீடியோகான் வலைப்பக்கத்தில் போனால் போகிறதென்று ஒரு மின்னஞ்சல் விலாசம் இருப்பதை இப்போது தான் தேடிக் கண்டுபிடித்தேன்.
சில நாட்களுக்கு முன்னால் பிராண்ட் என்றால் என்ன, பிராண்ட் இமேஜ் இப்படி சிலவிஷயங்களை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். இடது பக்கம் இருக்கும் கூகிள் தேடும் வசதியில் தமிழில் பிராண்ட் என்று கொடுத்துப் பாருங்கள், ஒரு ஐந்து பதிவாவது இந்த விஷயம் குறித்து இருக்கும்.
ஓடுகிற வரை ஒன்றுமில்லை! குதிரை படுத்துக் கொள்ளும் போது தான், குழியையும் சேர்த்தே தோண்டுகிற கதையாக ஆகிப் போனது! இந்தியச் சூழ்நிலையில் பிராண்ட், செர்வீஸ் உத்தரவாதம், தரம் எல்லாம் வெறும் பேச்சு, நடைமுறையில் ஒரு புண்ணாக்குமில்லை என்பதைத் தெரிந்து கொள்ள என்னுடைய டீவீயே ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பயன் படுத்துபவர் பார்வையில் இருந்து ப்ராண்ட் என்பது, தன்னை நாணயமான முறையில் அறிமுகப் படுத்திக் கொள்வது என்பதில்  ஆரம்பித்து-------

இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன்படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
 
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
 
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
 
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
 
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது!

இப்படி எழுதியிருந்ததைத்  திரும்பப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இங்கே நடைமுறையில் பிராண்ட்,  பிராண்ட் இமேஜில் இருக்கும் உத்தரவாதம் என்பதெல்லாம் இந்தியச் சூழ்நிலையில் எவ்வளவு தரம் திரிந்து, பயன்படுத்துபவர்களை ஏமாளிகளாகவும்,மோசடி செய்வதாகவுமே இருக்கின்றன என்பதையும் சேர்த்துப் பார்க்கிற அனுபவம் ஒன்றை நுகர்வோர் விழிப்புணர்வு கருதி இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

பிரிடிஷ்காரர்களிடமிருந்து அரசியலைக்  காப்பியடித்து, அதை எவ்வளவு கேவலமாகச் சீரழிக்க முடியும் என்பதைக் காங்கிரஸ் தலைமையில் இங்கே ஐக்கியமாகக் கூட்டணி அமைத்து அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளுமே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு இணையாக, தொழில் நடத்திப் புதுமையை அறிமுகம் செய்து வணிகம் பெருக்கி சம்பாதிப்பதை விட இங்கே அரசியல்வாதிகளோடு ஊழல் கூட்டணி அமைத்து சம்பாதிப்பதில் தான் இந்தியத் தொழில் அதிபர்களின் அசாத்தியத் திறமை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் தயவு, பரிபூரணமான கடாட்சம் இருந்த தெனாவட்டில் அம்பாசடர் கார் தயாரிப்பு நிறுவனம் தொழில் போட்டியை சமாளிக்கக் கையாண்ட கதையை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

திருவிளையாடல் படத்தில் சேர்ந்தே இருப்பது எது என்ற நக்கீரன் கேள்விக்குப் பதிலாக புலமையும் வறுமையும் என்று வருகிறமாதிரி சேர்ந்தே இருப்பது தொழிலதிபர்களின் புரட்டும், அரசியல்வாதிகளின் கூட்டும் என்பதாகத் தான் இந்தியத் தொழில் துறை காசநோயால் பீடிக்கப் பட்டது மாதிரி இருக்கிறது.

போதாக்குறைக்கு அமெரிக்க மாடல் மார்கெடிங், செர்விஸ் உத்திகளைக் காப்பியடித்து நம்மூர் ஆசாமிகள் என்னென்ன செய்வார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் மட்டுமில்லை, இன்னும் நிறைய வாடிக்கையாளர் சேவைக் குறைபாடுகளைப் பற்றி, செர்விஸ் செய்கிறேனென்று எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களை இளிச்சவாயர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும்.

ஆளைப் பார்த்து மயங்காதே, ஊதுகாமாலை! என்று ஒரு சொலவடையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதே மாதிரித் தான் பிராண்ட், பிராண்ட் இமேஜ் என்று இந்தியச் சூழ்நிலையில் மயங்காதே! ஏமாறாதே என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

தற்போதைய நிலவரம்..அப்டேட் @ 1730 hrs   IST 15/05/2010

நேற்று நள்ளிரவு தாண்டி இந்தப் பதிவை வலையேற்றம் செய்த பிறகு  இணையத்தில் கிடைத்த வீடியோகான் கஸ்டமர் கேர்  மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு சிறு தகவலை அனுப்பிவிட்டு அதன் நகலை, என்னுடைய நண்பருக்கு அனுப்பினேன். இன்று காலை அதைப் பார்த்து விட்டு அவர், வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் திரு கதிரேசனுக்கு தகவல் அனுப்பியதோடு, வீடியோகானில் பணிபுரியும் தனது நண்பர்களுக்கும் எனது மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்.

அதற்குப் பிறகு நடந்தவை கொஞ்சம் அதிரடி தான்! எனக்கு முழுவிவரமும் சொல்லப்படவில்லை.

பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும்படி க்வாலிடி என்ஜினீயரிங் செர்விசஸ் ஆசாமிகளுக்குக் கொஞ்சம் "அழுத்தமாகவே" ஆலோசனை சொல்லப் பட்டு, இன்றைக்கு  மாலை ஐந்தரை மணிக்கு டிவி வீட்டில் டெலிவரி செய்யப் பட்டு விட்டது. அதற்கு முன்னால், நாலைந்து தொலைபேசி அழைப்புக்கள், இதை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டு போயிருக்க வேண்டாம், இனிமேல் எதுவானாலும் எங்களிடமே சொல்லுங்கள் செய்து தருகிறோம் என்ற மாதிரித் தன்மையாகப் பேசி....!

ஒரு நெருக்கடியான நிலையில் உதவிய நண்பர் திரு எம் எஸ் முரளீதரன், வீடியோகான் க்ரூப் ஹெட் திரு கோவிந்தராஜன், மற்றும் அவரது குழுவினர், வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் திரு கதிரேசன் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.



 

எழுதி எழுதி ஏட்டைக் கெடுத்து...பாடிப் பாடிப் பாட்டையும் கெடுத்த கதை!


பரிணாமம் திரும்பும் விதம்...!
 

"Bloggers, Internet users and their intelligence என்ற தலைப்பில் தான் உளவியல் துறையில்  ஆய்வு மேற் கொண்டிருப்பதாகவும், அதற்கு உதவ விருப்பமிருந்தால், மின்னஞ்சலில் கேள்விப் படிவத்தை அனுப்புவதாகவும்  முன்பின் தெரியாத ஒரு பெண்மணியிடமிருந்து பின்னூட்டத்தில் ஒரு உப்புச் சப்பில்லாத வேண்டுகோள் ஒன்று இரண்டு நாளைக்கு முன்னால் வந்தது.

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, 'இணையத்தில் புழங்குவோர், வலைப் பதிவர்களும் அவர்களது அறிவுத் திறனும்' இப்படித் தலைப்பைப் பார்த்தபோதே, இது தேறாது என்று முடிவு செய்து, பின்னூட்டத்தை நிராகரித்து விட்டேன். தவிர உதவி கோரும் வார்த்தைகளுமே கூட, நம்மூர்ப் பல்கலைக் கழகங்களுக்கே உரிய ஏனோதானோ மனோபாவத்தில் இருந்த மாதிரித் தோன்றியதால், ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை.

ஆறுவருடங்களுக்கு மேலாக, இந்தப் பதிவுலகத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பவனுக்கே, இதன் போக்கு சமயங்களில் பிடிபடுவது கடினமாக இருக்கும்போது மேலோட்டமாக ஒரு செட் கேள்விகளை வைத்துக் கொண்டு பதிவர்களை, அவர்கள் அறிவுத் திறனை எடைபோட்டு விட முடியுமா என்ன?


அடுத்த பெரிய விஷயம் என்ற தலைப்பில் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருக்கும் trendwatching.com என்ற ஒரு நிறுவனம், தன்னுடைய பெயருக்குத் தகுந்த மாதிரியே, என்னென்ன விஷயங்களில் எப்படிப் பட்ட போக்கு நிலவுகிறது என்பதை ஆராய்ந்து, அதில் சில  யூட்யூப் வீடியோக்களாக வெளி வந்திருப்பதை ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைப் பதிவு ஒன்றிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அதில் ஒன்று இங்கே! தகவல் தொழில்நுட்பம்  எப்படி நாம் சிந்திப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதில், வணிகத் தொடர்புகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாலே நிமிடங்களில் எடுத்துக் காட்டிவிடுகிறது.



வலைப் பதிவுகள், இன்டர்நெட் பற்றி நியூ யார்க் நகரில் 2004 ஆம் ஆண்டு பலரிடம் கேள்வி கேட்கப் பட்டபோது, கணிசமானவர்கள் அப்படியென்றால் என்னவென்றே தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார்கள்! 2008 இல் ட்விட்டர் உலகம் முழுக்கக் கலக்க ஆரம்பித்திருந்த தருணம், எவ்வளவு தடவை ட்விட்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்று ஜனங்களிடம் கேட்ட போது ட்விட்டர் என்றால் என்ன என்று எதிர்க் கேள்வி கேட்பதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம். அடுத்து, ரிமோட் கண்ட்ரோல், எம்பி 3 ப்ளேயர் மாதிரித் தெரிகிற ஒன்றைக் காட்டி இது என்ன என்று கேட்டபோதும் கூட அதே மாதிரி பதில் தான்!

2012 இல் என்ன மாதிரி இருக்கும் என்பதை இதை வைத்து ஒரு கருத்தைச் சொல்கிறார்கள்! பயன்படுத்துபவர்கள் புதிதாக வருகிற ஒன்றை ஏற்றுக் கொள்ளாமல் (அல்லது அறிந்துகொள்ளாமல்) இருக்கலாம்! அதற்காகப் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தவில்லை என்றால், நம்முடைய கதை கந்தல் தான் என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறது!

சில நாட்களுக்கு முன்னால் பிராண்ட் என்றால் என்ன, பிராண்ட் இமேஜ் பற்றிய பதிவுகள் சில  இந்தப் பக்கங்களில் வந்தன.
 

மாதிரிக்கு ஒன்று! இன்னும் ஒன்று!


ஒரு பொருள் அல்லது தயாரிப்பு, தேவையின் நிமித்தம் தொழில் தெரிந்த எவராலோ உருவாகிறது. ஆரம்ப நிலையில், எந்த விதமான நகாசு, ஜிகினா வேலையும் இல்லாமல், எளிமையாகத் தான் அந்தப் பொருள், அல்லது தயாரிப்பு இருக்கிறது.

அடுத்து, கொஞ்சம் விவரமான ஒருவரிடம், அதே பொருள் வந்து சேரும்போது, நகாசு, ஜிகினா வேலைகள் எல்லாம் சேர்ந்து கொள்கிறது.

அப்புறம் கலை தெரிந்தவர்களிடம், சுருக்கமாகக் கலைஞர்களிடம், அந்தப் பொருள் வந்து சேருகிறது.

அவர்களிடம் இருந்து, எம்பிஏ  மாதிரி மேலாண்மையைப் பாடமாகப் படிப்பவர்கள் கையில் அகப்பட்டுக் கொள்கிறது.

அப்புறம் ஒரு அரசு,  நிர்வாகம் அல்லது ஒரு நிர்வாகியிடம் சிக்கிக் கொண்டு, படாத பாடுபட்டு, ஒன்றுக்குமே ஆகாததாகப் போய் விடுகிறது.

இந்த வரிசையில்,  முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வதையும் சேர்த்துக் கொள்ளலாமோ?









 

நெனச்சது ஒண்ணு! நடந்தது ஒண்ணு!

"What men call knowledge, is the reasoned acceptance of
false appearances. Wisdom looks behind the veil and sees"


--The Mother

திரு.R Y தேஷ்பாண்டே! ஒரு எழுத்தாளர்! ஆன்மீகச் சிந்தனையாளர். தன்னுடைய எண்ணங்களை ஆங்கிலத்தில் ஒரு மின்னிதழாக நடத்திக் கொண்டிருக்கிறார்.  தேஷ்பாண்டேயிடம் ஒருவர் உங்கள் வலைப்பதிவில் (ப்ளாக்) எழுதியது...என்று ஆரம்பித்துச் சொன்னபோது, அவருடைய பதில்: 

" இது ப்ளாக் அல்ல, மின் மடல்  ( ஜார்னல்)! "  சில மாதங்களுக்கு முன்னால் படித்த இந்த வார்த்தை, இப்போது நினைவுக்கு வந்துநிற்கிறது.

 இது  இங்கே தமிழில் கூட நேசமுடன் என்ற முயற்சி இந்த வகையைச் சேர்ந்ததுதான். ஜார்னல் என்பதை, மடல் இதழ் என்று அழகாகத் தமிழ்ப்படுத்தி அறிமுகப் படுத்திக் கொள்வதை அங்கே பார்க்க முடியும். வலைப்பதிவு என்று சொல்வதற்கும், மடல் இதழ் என்று சொல்வதற்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது? இரண்டிலும் ஒரே மாதிரியாகத் தானே எழுதப் போகிறோம் என்று நினைக்கிறீர்களா?

மிக நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. அதன் இலக்கு, பயன் என்று எதை நினைக்கிறோமோ, அதைத்  தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக்கூடிய வேறுபாடு, நிச்சயமாக இருக்கிறது. "நெனச்சது ஒண்ணு! நடந்தது ஒண்ணு! அதனால் தவிக்குது அம்மாக்கண்ணு!" என்று ஜாலியாகப் பாடிவிட்டுப் போய்விடமுடியாது!


ஜார்னல் என்ற வார்த்தை,  தினசரி என்று பொருள் படும் diumalis என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து பிரெஞ்சு மொழிக்குத் தாவி, தினசரி, குறிப்பு, நிகழ்ச்சிகளைக் குறித்த  பதிவு, கணக்குப் பதிவதில் ஒரு நடைமுறை, இப்படிப் பலவிதமான பொருளைத் தருவதாக இருந்தாலும், திரு தேஷ்பாண்டே சொன்ன பதிலில் இருந்து தான், போகிற போக்கில் கிறுக்கித் தள்ளிவிட்டுப் போகிற அல்லது அந்த நேரத்திய மன நிலையை மட்டுமே காட்டுவதாக இருக்கும் டயரிக் குறிப்புக்களாக இருக்கும் பதிவுகளுக்கும், ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு முழுமையாகப் பார்க்க முயலும் சீரியசான முயற்சிக்கும் இருந்த வித்தியாசத்தையே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்படிப் பார்க்கும் போது, நேசமுடன் பதிவுகள் கூட, கொஞ்சம் அழகாக, வகைப்படுத்தப்பட்ட டயரிக் குறிப்புக்கள் மட்டுமே என்று கூட, எனக்குப் படுகிறது. குறையாகச் சொல்லவில்லை, இப்போது அதில் படிக்கும் விஷயம் கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதாக இருந்தாலும், மறுநாளே அந்த ரேட்டிங்  மாறிப்போய் விடுகிறதே, அந்த ஒரு காரணம் தான்!

பள்ளி நாட்களில் இருந்து ரொம்ப சீரியஸாக டயரி எழுதிக் கொண்டிருந்த பழக்கம் எனக்கு இருந்தது. அனேகமாக, என்னுடைய அன்றன்றைய சரித்திரமாக நினைத்துக் கொண்டு எழுதிய நாட்கள்! ஒரு நேரத்தில், என்னுடைய டயரியை, ஒரு வேண்டப்பட்டவரிடம்,  அவரைப் பற்றி முந்தைய தருணத்தில் நான் என்ன நினைத்தேன், எழுதியிருந்தேன் என்பதைக் காண்பித்தேன்! சொந்தச் செலவில்..........வைத்துக் கொள்வது என்றால் என்ன என்பதை நேரடியாக அனுபவித்துச் சூடுபட்டுத் தெரிந்துகொண்ட தருணமாக அது இருந்தது. அதற்குப் பிறகு, டயரி எழுதுவதில் இருந்த வெறி, ஆர்வம், ஆவேசம் எல்லாம் போயி போயிந்தி....இட்ஸ் கான்! அம்புட்டுத்தேன்!

இப்போது எதற்கு இந்த சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் என்கிறீர்களா? சேத் கோடின் வலைப்பதிவில்   பிராண்ட் என்று  எதை வைத்துச் சொல்வது  என்பது குறித்த ஒரு பதிவைப் படித்துக் கொண்டிருந்த போது, வலைப் பதிவுகளுக்குமே இந்த   brand concept ஐ  வைத்துப் பார்த்தால் எப்படியிருக்கும்  என்று கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டது!  அதனால் தான்!

Brand என்று எதைவைத்துச் சொல்வது? எப்படி சொல்வது?

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு டூத்பேஸ்ட் விளம்பரம்! இரண்டு சிறுவர்களை வைத்து, பத்து இல்லைன்னா பத்தாது என்ற பன்ச் லைன் வைத்து ஒரு குறிப்பிட்ட கம்பனி தன்னுடைய  தயாரிப்புக்கு ஒரு இமேஜ், நேரடியாக  இதில் இன்ன இன்னவெல்லாம்  இருக்கிறது என்று சொல்கிற சந்தடி சாக்கில், போட்டியாளருடைய தயாரிப்பில் அத்தனை எல்லாம் இல்லை என்பதை இன்னொரு சிறுவன் தயங்கித் தயங்கிச் சொல்கிற விளம்பரம்! நினைவு வருகிறதா? 

இரண்டு தரப்புமே  டூத்பேஸ்ட் தான் தயாரிக்கிறார்கள்!  ஒரே மாதிரியான உபயோகம் தான்! அப்படியானால், இங்கே பிராண்ட் என்பது என்ன?

நினைப்பு மட்டுமே போதாதே! நிரூபணமும் வேண்டுமே!

முதலில், தன்னுடைய தயாரிப்பை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிற உத்தி! அது மட்டுமே போதுமா? போதாது என்பதால் தானே, தயாரிப்பைப் பற்றி, அதன் குணநலன்களை பன்ச் டயலாக் எல்லாம் வைத்துச்  சொல்ல வேண்டியிருக்கிறது! வெறும் பன்ச் டயலாகை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் போதுமா? பன்ச் டயலாக் பேசியே  பஞ்சராகிப் போன விஜய் கதை மாதிரி ஆகி விடும் என்பதைத் தயாரிப்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான், சந்தையில் கிடைக்கும், இன்னொரு பிரபலமான போட்டித் தயாரிப்பைப் பெயர்சொல்லியோ, சொல்லாமலோ எடுத்துக் கொண்டு, அதை விட இது இன்ன விதத்தில் உசத்தியாக்கும் என்று உங்கள் கவனத்தை ஈர்க்கிற மாதிரிச் சொல்கிறார்கள்!

இப்படிச் சொல்லும்போதே, அங்கே ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம், வாக்குறுதியும் சேர்ந்தே இருக்கிறது! அது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை, பயன்படுத்துபவர்கள் நம்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த குறிப்பிட்ட பிராண்ட் ஜெயிப்பதோ தோற்பதோ இருக்கிறது.

இங்கே இன்னொன்றும் இருக்கிறது! அதிகத் தம்பட்டம் அடிப்பதில், நிறைய  எதிர்பார்ப்பும் சேர்ந்துகொள்கிறது அல்லவா, அதை ஈடு கொடுக்கிற மாதிரி  அந்தத் தயாரிப்பு  இருக்கிறதா, அதை வாங்கியே ஆக வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்துகிறதா என்று அடுத்தடுத்த சங்கிலித் தொடராகப் போய்க் கொண்டே இருக்கிறது.

முந்தைய நாட்கள் மாதிரி, பிராண்ட் என்றால், கவர்ச்சிகரமான ஸ்லோகன், லோகோ, பன்ச் வைத்துச் செய்யப்படுகிற விளம்பரங்கள் மட்டுமே என்ற நிலை கடந்த காலமாகிவிட்டது.

" A brand is the set of expectations, memories, stories and relationships that, taken together, account for a consumer’s decision to choose one product or service over another."

பிராண்ட் என்றால் என்னவென்று  இப்படித் தன்னுடைய  கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்!

உங்களது குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்! வெறும் வாக்குறுதிகளை மட்டுமல்ல! இப்படி, இன்றைய சூழ்நிலையில் ஒரு பிராண்டாக உருவாக என்னென்ன அவசியம் என்பதைப் பற்றிய அருமையான செய்திக்காட்டுரை இங்கே! மேலாண்மை, மார்கெடிங் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், பிடிக்கும்!

சரி, வலைப்பதிவுகள், மடல் இதழ் என்று ஆரம்பித்துவிட்டு, பிராண்ட் அது  இது என்று கதை வேறுபக்கம் போய்க் கொண்டிருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை!
 
வலைப்பதிவுகள், வெறும் கிறுக்கல்கள், நான் எனக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் குறிப்புக்கள், எனக்கு இவ்வளவு வாசகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்  இருக்கிறார்கள், தினசரி இத்தனை ஹிட்ஸ் கிடைக்கிறது என்பதெல்லாம் ஆறிப்போன பழங்கதை! வெற்றுக் கூச்சல்கள், பிரச்சாரங்கள், எதிர் பிரச்சாரங்கள் என்று இருந்து விட முடியாது!

படிக்க வருகிறவர்கள், கொஞ்சம் விஷயத்தையும் எதிர்பார்க்கிறார்கள், உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால், பதிவிடுபவரும், படிப்பவருமே பயன் பெறுகிற விதத்தில் ஒரு பிராண்ட் ஆக நினைவில் நிற்கும். இன்னும் கொஞ்சம் கவனமாகச் செதுக்கும்போது, மடல் இதழாகவும் வளரும்! மலர்ந்து தமிழ்மணம்  பரப்பும்!

காலத்துக்கும் அழியாத கோலமாக, கவிதையாக எழுத வேண்டுமென்றெல்லாம் கூட அவசியமில்லை. கொஞ்ச நேரம் கழித்துப் படித்தால், நமக்கே, இப்படி எழுதியிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிற  மாதிரி இருந்துவிடாமல் இருந்தாலே  முதல் தடையைத் தாண்டியாகிவிட்டது! அப்புறம், கொஞ்சம் நிதானித்தால், நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைத் தெளிவாகவே சொல்ல முடியும்! எல்லாமே மாறிக் கொண்டிருப்பது என்ற நிலையை மனதில் வைத்துக் கொண்டோமேயானால், இப்போது நமது கருத்தாக இருப்பது, நமக்கு இப்போது கிடைத்திருக்கிற அனுபவத்தை, அல்லது கேள்விப்பட்டதை வைத்து மட்டுமே சொல்லப்பட்டது, இதுவுமே அனுபவங்கள் கூடக் கூட, மாறக் கூடியதுதான் என்பதைப் புரிந்து கொண்டாலே, மற்றவர்கள் சொல்வதும் அப்படித்தான், அதில் அவர்களுடைய அப்போதைய  புரிதல் மட்டுமே வெளிப்படுகிறது  அதுவுமே  மாற்றத்திற்குட்பட்டது தான் என்பதும் புரிய வரும்.

வாதம் என்பது ஒருபக்கச் சார்பு நிலை! பக்கவாதம் வந்த மாதிரி முடக்கிப் போட்டு விடக் கூடிய அபாயம் அதிகம்! விவாதம் என்பது, எதிரெதிர்  கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, அடுத்த கட்டத்திற்கு உதவுகிற படி!

தமிழில் வலைப் பதிவுகள், சாலையோரப் பெட்டிக் கடைகளாக இருப்பதில் இருந்து, ஒரு பிராண்டாக உருவாக்குவதில், நமக்கு அதிகம் பொறுப்பிருக்கிறது! எழுதும் போது உங்கள் குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்! வாதங்கள், பிடிவாதங்களாக இறுகிப் போய்விடாமல், பயனுள்ள விவாதங்களாக நடக்கும்போது மட்டுமே  எழுதுபவர், வாசகர் இருவருமே ஜெயிக்கிற சூழ்நிலை உருவாகும்.

ஜெயிக்கலாம் வாங்க!