Showing posts with label டாகின்ஸ். Show all posts
Showing posts with label டாகின்ஸ். Show all posts

சண்டேன்னா மூணு! தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக இல்லை!

நம்பினால் நம்புங்கள்!



இங்கே இவ்வளவு விஷயம்  இருக்கிறது என்று வெவ்வேறு தலைப்புக்களைத் தொட்டு, குறியீட்டுச் சொற்களைக் குவியலாகப் பக்கத்திலேயே போட்டு வைத்திருந்தாலும், இங்கே படிக்க வந்தவர்களில் ஆறில் ஒருவர், புவனேஸ்வரியைத் தேடித்தான் வந்திருக்கிறார். இன்றைக்கும்கூடக்  குறைந்தது நான்கு அல்லது ஐந்து வருகைகள், புவனேஸ்வரிக்காகத்  தான்! திரட்டிகளின் பதிவுப்பட்டியலில் எண்பதாம் பக்கம், இருநூறாம் பக்கம் எங்கிருந்தாலும் தேடிக் கரெக்டாக வந்து விடுகிறார்கள்.

"இதில்.என்னை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்த ஒரு விஷயம் என்னவென்றால், நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்வதை விட, தன்னுடைய குடும்பம், தன்னுடைய பொருளாதாரச் சூழல் இவை எல்லாவற்றையும் விட நடிகைகளின் அந்தரங்கம் தான் தமிழக வாசகர்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்ததென்று, இரண்டாவது பதிவுக்கு ஒரே நாளில் சராசரி வருகையை விட பத்துப் பனிரண்டு மடங்கு வாசகர்களுடைய வருகை சொல்லாமல் சொன்னது. ரொம்ப சைவமாகவே தேர்ந்தெடுத்து, ஒன்றிரண்டு படங்களைப் போட்டபோதிலுமே கூட, அதையும் டவுன்லோட் செய்த மக்களைப் பார்த்தபோது "விதியே!விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?" என்று பாரதி மறுகின மாதிரி, மறுகி நிற்கவைத்த தருணங்கள்!"

இப்படி யதார்த்தத்தைப் புட்டு வைத்த பதிவில் கூட, பெண்ணீயம் பேசிக் கொண்டு ஒருவர், "நான் பெண்ணிய வாதி என்பதில்  பெருமை கொள்கிறேன்.அதனாலேயே COMMERCIAL SEX WORK ஐ சட்டபூர்வமாக்க  வேண்டுமென்பேன்"  என்று பின்னூட்டம் எழுதினார். சீதா என்பது அவர் தனக்கு வைத்துக் கொண்ட ப்ரொஃபைல் நேம்! என்ன ஒரு நகை முரண்!

"புவனேஸ்வரி என்று பதிவு போட்டால் ஹிட்ஸ் கூடக் கிடைக்கிறது. இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டுமா அல்லது என் தலைவிதியை நொந்துகொள்ள வேண்டுமா?"

என்று பின்னூட்டத்தில் பதில் எழுதிய அப்போதிலிருந்து  நான் என்னையே கேட்டுக் கொண்டிருக்கிற  கேள்விக்கு இன்னமும் விடை கிடைத்தபாடில்லை.!  திரு.கௌதமன், ஒருவர் மட்டும் தான் மிக வெளிப்படையாக இந்த வலைப்பக்கத்தின் தரம் இறங்கி விட்டதாக வருத்தப்பட்டிருந்தார். அதற்கு முன்னால், வழக்கமாக ரீடரில் படித்துக் கொண்டிருந்த  ஐந்தாறு சாத்வீகமான நண்பர்களை நான் இழந்து விட்டது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், வலைப்பக்கத்துக்கு வருபவர்கள், புதிய வாசகர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது என்பதும் அப்படி வருகிறவர்களில் ஆறு, சமயங்களில் எட்டுக்கு ஒருவர் தான் திரும்ப இந்தப்பக்கங்களைப் படிக்க வருகிறார் என்பதுமே புள்ளிவிவரங்கள் சொல்பவை.

இந்தப்பக்கங்கள் எவை குறித்தவையாக இருக்க வேண்டும் என்பதில் இன்னமும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. காரணம், என்ன வகையிலான விருப்பத் தேர்வுகளுடன் இருப்பவர்கள் இந்தப்பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பதில் சரியான புரிதல் இன்னமும் கிடைக்கவில்லை.
இது ஒரு பெரிய காரணம் இல்லை.

என்ன மாதிரியான வாசகர்கள் எனக்கு வேண்டும் என்பதைக் குறி வைத்து நான் எழுத ஆரம்பிக்கவில்லை, என்பதே முக்கியமான காரணமாக எனக்குப் படுகிறது. அடுத்து, பதிவுகளின் நீளம்!உண்மைத் தமிழனோடு போட்டி போட்டுக் கொண்டு மிகவும் நீளமான பதிவுகளை எழுதுவதாக ஏற்கெனெவே வால் பையனும், டம்பி மேவீயும் பின்னூட்டப்பெட்டியையே புகார்ப்பெட்டியாகவும் மாற்றி விட்டார்கள்!

படிக்க வருகிறவர்கள், தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தருணங்களில் இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஃபாலொயெர்ஸ் என்று இங்கே ஒரு நட்பு வட்டம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அவர்களுடைய எண்ண ஓட்டங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய பதிவுகளிலுமே கூட அதற்குச் சரியான க்ளூ கிடைக்கவில்லை!

நான்கு மாதங்களுக்கு முன்னால், ஒரு பதிவின் கடைசிப்பகுதி இந்த வார்த்தைகளோடு முடிந்திருந்தது: "அப்புறம், என்னை ஒரு ஒளிவட்டத்தோடு ஆன்மிகம் பற்றி எழுதுகிற ஆன்மீகப் பதிவராகக் கற்பனை செய்து கொண்டிருந்த ஒன்றிரண்டு பேருக்கு, முந்தைய நான்கு பதிவுகள், ஏமாற்றத்தை, அதிர்ச்சியை அளித்திருக்கலாம். அப்படி ஒரு ஒளிவட்டத்தோடு இருப்பவனாகக் கருதும் விதத்தில், ஒருமுத்திரை, branding, அற்புதங்களை விற்பவனாகத் தவறான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள்!

எனக்கென்று எந்த ஒரு அடையாளமும் இல்லை! Simply, I consent to be.....nothing!"

 

மறுபடியும் உங்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் எண்ண நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் மனம் விட்டுத் தான் சொல்லுங்களேன்! அனானி, அதர் ஆப்ஷன் கிடையாது. கூகிள் ஐடியில் வந்து தான் சொல்ல முடியும்.


oooOooo


இந்தியத் தொலைக் காட்சிகளில், முதன்முறையாக......

திரைக்கு வந்த சில மாதங்களே ஆன/சில மணி நேரங்களே  ஆன  புத்தம் புதுத் திரைப்படம்!

நமது XXX தொலைக் காட்சியில்! காணத் தவறாதீர்கள்!

இந்தக் கிரீச்சிடும் விளம்பரக் குரலை கேட்காதவர்கள் தமிழராகவே இருக்க முடியாது!அப்படி இருந்தாலும்,  நாங்க ஒத்துக்க மாட்டோம்!! அட்லீஸ்ட் தமிழ்நாட்டில் வசிப்பவராக, ஏன் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவராகக் கூட இருக்க முடியாது! ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் முன்னூறு தரமாவது கேட்டுக் கேட்டு நமக்கே சலித்துப்போய் இருக்கும்!

அதே மாதிரி, கடவுள் என்றொரு மாயை The God Delusion என்ற புத்தகத்தை எழுதிப் பரபரப்பாகப் பேசப்பட்ட ரிச்சர்ட் டாகின்ஸ் தனது பழைய வாதங்களையே புதிதாய்ச் சொல்கிற பிரச்சாரப் பீரங்கியோடு,  The Greatest Show On Earth   என்று இன்னொரு புதுப் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். புத்தக வெளி வந்து அடுத்த வாரம் முடிந்தால் இரண்டு மாதம் ஆகிறது. புவனேஸ்வரி  விவகாரம் தீப்பற்றிக்கொண்டு எரிந்ததால்,  இங்கே அதைப் பற்றிய விமரிசனப்   பதிவை ரிலீஸ் செய்வது தான் கொஞ்சம் லேட்! புத்தகம் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. சீக்கிரமே அனுப்பிவிடுவதாக நண்பர் ஒருவர் உறுதி அளித்திருக்கிறார்.


விரைவில் வந்து விடும். அதற்கு முன்னாள், டாகின்ஸ் தன்னுடைய புதிய புத்தகத்தைப் பற்றி எண்ண சொல்லிக் கொள்கிறார் என்பதை ஒரு மூன்று நிமிட முன்னோட்டமாக இங்கே பார்க்கலாம்!



புத்தகத் தலைப்பாவது புதிதா அல்லது ஒரிஜினலா  என்று பார்த்தால், அதுவும்  கூட ரொம்ப ரொம்பப் பழசு தான்! 1952 இல் செசில் பி டிமிலி என்ற இயக்குனர் ஒரு சர்க்கஸின் பின்னணியில் இதே தலைப்பில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். சர்கஸ் வசூலை அதிகரிப்பதற்காக, அதன் நிர்வாகி, சர்கஸ் கலைஞர்களுடைய உயிருக்கே உலை வைக்கிற மாதிரி சில வேலைகளைச் செய்கிறார். ட்ரபீஸ் கலைஞர்கள், கோமாளிகளை மையமாக வைத்துப் பல திருப்பங்களுடன் எடுக்கப்பட்ட படமாக இருந்தது என்று ஒரு குறிப்பு சொல்கிறது.

இந்த இயக்குனரைப்பற்றிய இன்னொரு சுவாரசியமான தகவல். பைபிள், பத்துக் கட்டளைகள் என்று பிரம்மாண்டமான மத சம்பந்தமான படங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே ஏன் என்று ஒருவர் கேட்டாராம்!

" இந்த விஷயம் இரண்டாயிரம் வருடங்களாக மார்க்கெட்டில் நிலைத்து நிற்கிறதே! அந்த ஒரு காரணம் போதாதா?" என்றாராம், செசில்  பி டிமிலி!

டாகின்ஸ் மாதிரி நாத்திகம் பேசுகிற நாத்திகர்கள் கூட அப்படித்தான்! ஏற்கெனவே சொல்லப்பட்டதை மறுத்து, அல்லது இழிவுபடுத்திப் பரபரப்பை உண்டாக்கும் அளவுக்குப் புதிதாக ஒரு நல்ல மாற்று எதையுமே கண்டு பிடித்துச் சொல்லிவிடுவதில்லை!  
 
மார்கெட்டில் எது அதிகமாக விலை போகிறதோ அதனுடன் மட்டும் போட்டி! இங்கே பிரபல பதிவர்கள் பதிவில் பின்னூட்டம் போட அலைந்து கொண்டிருந்தவர்கள் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அப்போது தானே, சீக்கிரமாகப் பரபரப்புச் செய்தியாகவும், பிரபலமாகவும் ஆகிவிட முடியும்!



டாகின்ஸ், மெய்ப்பொருள் காண்பதறிவு, The God Delusion என்ற குறியீட்டுச் சொற்களை வைத்துத் தேடிப்பாருங்கள்! ஏற்கெனெவே இது பற்றி எழுதிய பதிவுகளைப் படிக்கலாம்!

oooOooo

படமே கதை சொல்லுமே! கூடவே கொஞ்சம் வரலாறு!


நேற்று நேருவின் பிறந்தநாள். காங்கிரஸில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு கே.நட்வர்சிங் நேருவுக்கு ஒரு வித்தியாசமான அஞ்சலி செலுத்தியிருக்கிறார்!

நேரு மறைந்து நாற்பத்தைந்து ஆண்டுகளாகியுமே கூட வரலாறு அவருக்கு நீதி வழங்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் கூடப் பரவாயில்லை! நேருவின் சாதனைகளுக்கு மதிப்பெண்களும் வழங்கியிருக்கிறார். பிரதமாராக நூற்றுக்குத் தொண்ணூறு மார்க்! வெளியுறவுத் துறையையும் நேரு தன் வசமே வைத்திருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சராக நூற்றுக்கு அறுபது மார்க்காம்!

நேருவின் மிகப்பெரிய தோல்வியே, இந்த மாதிரி ஆசாமிகளெல்லாம் மார்க் போடுகிற அளவுக்கு இருந்தது  தான்! போதாக்குறைக்கு எம் ஒ மத்தாய்  என்று ஒரு மலையாளி, நேருவின் அந்தரங்க உதவியாளராக இருந்தார். 1978 இல் விகாஸ் பப்ளிகேஷன்ஸ், தில்லி வெளியீடாக ஒரு புத்தகத்தில் நேருவுடன் கூட இருந்த அனுபவங்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். புத்தகத்தில் எழுதியிருக்கிற அத்தனையையும் உண்மை என்று நம்ப முடியாது தான்!



இந்தப் படத்தைப் பாருங்கள்!  ஒரு படமே, சரித்திரத்தின் ஒரு அழுகிப்போன பக்கத்தைச் சொல்லி விடுகிறதே!


 இந்தப் படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கிப் படியுங்கள். நேருவிடம் கென்னெடி எரிச்சல் கொண்ட ஒரு  தருணமும் சொல்லப்பட்டிருக்கிறது.

இது வரலாறு அல்ல. வரலாற்றின் பக்கங்களைக் கரையான் அரித்துச் சிதிலமாக்கின தனி நபர் பலவீனங்கள்!

எவ்வளவு பெரிய கப்பலாக இருந்தால் தான் என்ன, சிறிய ஓட்டை கூட, கவனிக்காமல் போனால் கப்பலையே மூழ்கடித்துவிடும்! காங்கிரஸ் தன்னுடைய ஓட்டைகளைக் கவனிப்பதிலோ, சரி செய்து கொள்வதிலோ எப்போதுமே அக்கறை எடுத்துக் கொண்டதோ, அதற்கான சாமர்த்தியத்துடனோ இருந்ததே இல்லை!

காங்கிரஸ் மூழ்கிப்போவதில் எவருக்கும் அக்கறை இல்லை. காங்கிரசோடு, இந்த தேசமும் மூழ்கிப் போய்விட அனுமதிக்கப் போகிறோமா என்ன?