காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370, 35A இவைகளை நீக்கும் அரசாணைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இன்றைக்கு அரசாணையும் வெளியாகி விட்டது. அரசியல் சாசனத்தின் தற்காலிக ஏற்பாடாக மட்டுமே இருந்த இந்த சட்ட அந்தஸ்து நீக்கப்பட்டிருப்பதான அறிவிப்புக்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலே தான் இருந்தாலும், கூச்சல், அமளிகளிலேயே உள்துறை அமைச்சரைப் பேசவிடாமல் தடுத்துவிடலாம் என்று கூவிக் கொண்டிருக்கிற காட்சியை நேரலையில் பார்த்துக் கொண்டே இதை எழுதுகிறேன். திமுகவின் திருச்சி சிவா ஒரு point of order கிளப்ப கலிங்கப்பட்டி வைகோ இது ஜனநாயகப் படுகொலை என்றெல்லாம் கூச்சலிட்டு தங்களுடைய ஜனநாயகக் கடமையைச் செய்து முடித்துவிட்டார்கள்.
இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்த நடக்கப்போகிற விஷயங்களுக்கு முன்னோட்டமாக, என்ன இருந்தது என்பதை இந்த 12 நிமிட செய்தித் தொகுப்பில் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். எதுவும் புதிதல்ல என்றாலும் காஷ்மீர் விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலங்களில் ரெண்டும் கெட்டானாகவே இருந்து குழப்பிவந்ததற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, 2019 தேர்தல்களில் பிஜேபி வாக்களித்தபடியே காஷ்மீர் விவகாரங்களில் ஒரு தெளிவான முடிவை எடுத்து, செயலிலும் காட்டியிருக்கிறது. தற்காலிக நிவாரணமாக அறிவிக்கப்பட்ட ஆர்டிகிள் 370, அதற்கடுத்து, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே அரசியல் சாசனத்தில் இடைச் செருகலாக செய்யப்பட்ட பிரிவு 35A .இரண்டும் ஜனாதிபதி ஒப்புதலுடன் ரத்துசெய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது. அது தவிர லடாக் பிரதேச மக்கள் விருப்பப்படி லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருப்பதும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருப்பதும் இன்றைக்கு நடந்திருக்கிற நல்ல விஷயம்.
காங்கிரசும் அதன் ஊழல் கூட்டாளிகளும் குட்டையைக் குழப்ப என்னென்ன செய்யப் போகிறார்கள், முடியடிக்க பிஜேபி என்ன செய்யப்போகிறது என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.