Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

இதுவும் கடந்து போகும்!


இதுவும் கடந்து போக வேண்டியதே! இதுவும் கடந்து போகும்!

இப்படி ஜென் ஞானமாகவும், வேதாந்த உண்மையாகவும் நமக்குக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதெல்லாம் தமிழனிடம், தமிழ் வலைப் பதிவுகள், வாசகர்களிடம்,  கொஞ்சம் மெதுவாகவே தான் வேலை செய்யும் போல இருக்கிறது. எவ்வளவு மெதுவாக என்பதைப் பார்க்கும் போது தான் கொஞ்சம் பகீரென்கிறது!

ரிப்பீட்டே, ரிபீட்டுக்கு மறுக்கா ரிப்பீட்டேய்யய்ய்ய்.....என்று தலைமுறைகளையும் தாண்டி அவ்வளவு மெதுவாக!

இதற்கே இப்படி என்றால் கண்டு கொள்வோம் கழகங்களை என்று பெரியவர் நெல்லை ஜெபமணி போன்றவர்கள் என்னதான் முழுக்க விவரங்களை அடுக்கினாலும், நாற்பத்தைந்து ஆண்டு காலமாகக் கழகங்கள் என்ற மாயையைக் கடந்துபோக இன்னும் எத்தனை காலமாகும் என்பதைக் கணக்குப் போடவே பயமாக இருக்கிறது! 


வலைப் பதிவுகளை, முகம் பார்க்கும் கண்ணாடியாக உருவகப் படுத்துவார் முனைவர் நா.கண்ணன்! நம்முடைய  அகத்தில் என்ன இருக்கிறதோ அதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் தான் இணையத்திலும் பார்க்க முடியும் என்று அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்!

போன வியாழக் கிழமை காதல்! காமம்! சார்க்கோசி! சபாஷ் சரியான போட்டி! என்று ஒரு பதிவை இந்தப் பக்கங்களில் எழுதினேன். 



இந்தப் பக்கங்களுக்கு வரும் வாசகர்களில் இன்னும் கணிசமான எண்ணிக்கை அந்தப் பதிவிலேயே தான் தேங்கி நிற்கிறார்கள், அதைத் தாண்டி வர மாட்டேன் என்கிறார்கள் என்று தளத்தின் கணக்குப் பிள்ளை சொல்கிறார்!  நித்யானந்தாவையே கட்டிக் கொண்டுஇங்கே பதிவுலகமே  மாரடித்துக் கொண்டிருந்த தருணத்தில் காங்கிரசின் அய்யம்பேட்டை வேலையைச் சொல்வதற்காக மேம்போக்காக சார்க்கோசி, ப்ருனி விவகாரத்தைத் தொட்டு எழுதினது தான் அது! 

சப்பை மாட்டர்! கொஞ்சம் சப்பைப் படம்!  அதுக்கே இப்படியா என்று ஆச்சரியப் பட்டுக் குழம்பாமல் வேறென்ன செய்வது? அதற்கப்புறம் ஏழு பதிவுகள் எழுதியாயிற்று! அவைகளுக்கு எண்பது- நூறு வரை வாசகர் வருகை இருந்தது அவ்வளவுதான், மிச்சமெல்லாம் ப்ருனி படம் பார்ப்பதற்குத்தான்! நல்லாப் பாத்துக்கோங்க சாமி!

ப்ரூனி -சார்க்கோசியைப் பத்தி முன்னால வந்த செய்தி, இன்னமும் ஊர்ஜிதமாகலை! யாரோ ஒருத்தர், இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டா என்ன ஆகும்னு டிவிட்டர்ல ட்விட்டை ஆரம்பிச்சு வச்சதா சொல்றாங்க! அதுவும் ஊகம் தான்!இப்போ பரபரப்பான செய்தி என்னவா இருக்குன்னா, அம்மணியோட முகத்தில சமீபத்துல அதிக சுருக்கம் விழுந்து வயசாளியாக் காமிக்குதாம்! பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணது  சரியில்லேங்கற மாதிரி!
 
அதை விடக் கொடுமை நேற்று எழுதிய பதிவர் குணாதிசயங்கள்! அப்புறம் உலக மகா டாக்டர் பட்டம்! தமிலிஷ் திரட்டி இந்தப் பதிவை இன்னும் நாலைந்து பதிவுகளோடு டாக்டர்,பிரகாஷ் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள் என்ற தனிப்பக்கமாக வகைப் படுத்தி வைத்திருக்கிறது. டாக்டர், பிரகாஷ் இரண்டு வார்த்தைகளுக்கு நடுவிலும் ஒரு கமா இருக்கிறதே என்கிறீர்களா? 

அந்தக் கமாவுடனோ, அல்லது இல்லாமலோ கூகுளில் தேடித் பார்த்தால் என்ன ரிசல்ட் சேர்த்து வரும் என்பது தெரியும் தானே!

குதிரைக்குக் கண்ணைக் கட்டி வைத்திருப்பது போல, இப்படி நமது சிந்தனைகளை, செயல்களைக் குறுக்கி வைத்திருப்பது எது?


எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் என்பது தெரியாத வரை, எந்த ஓட்டை வழியாக, எந்த பலவீனத்தை வைத்து  நம்மிடமிருப்பது எல்லாம் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

பதிவர்கள்
, இணையத்தில் புழங்குவோர் ஒன்றும் தனியே எங்கிருந்தோ குதித்து வந்தவர்கள் அல்ல! அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதியே! என்ன, இணையத்தில் மின் வெளிப் பரப்பில் சுதந்திரமாக உலவுகிறோம் என்ற நினைப்பில், கொஞ்சம் கூத்தடிப்பது, மொட்டைக் கடிதாசி எழுதுகிற மாதிரியே, அனானியாக வந்து   தனிமனித வெறுப்பைக் கொட்டுவது, கொஞ்சம் ஆபாசமாக வார்த்தைகளைப் பயன்படுத்துவது எல்லாமே கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்ட விகிதத்தில் இருக்கும், அவ்வளவு தான்!

எல்லாமே வேண்டியது தான்! எதையும் ஒதுக்கி வைக்க வேண்டியதில்லைஎன்பதும்  உண்மைதான்! ஆனால், களைகளை வேரறுக்காமல் விட்டு விட்டால்,  நல்ல பயிர் தழைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையா?

மலம், மூத்திரம் இவைகளை நம்முடலில்  சுமந்து
கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை! அதற்காக  அவற்றை எடுத்து உணவு உண்ணும் இடத்தில், சேர்த்து வைத்துக் கொள்வோமா? 


சின்னச் சின்ன விஷயங்களில் கவனத்தைச் சிதற விட்டால், அப்புறம் திருடர்கள் ஏன் கழகங்கள் அமைத்துத் திருட மாட்டார்கள்?

அப்புறம், மாயாவதிகள் மாதிரிக் கோடிரூபாய் மாலைகளில் தெனாவட்டாகத்  ஏன் திரிய மாட்டார்கள்? 


ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஏழை அழுத கண்ணீர் எரிக்கும் என்பதெல்லாம் வீரியமில்லாத வார்த்தைகளாகிப் போனது ஏன் என்பது புரிகிறதா?
இதுவும் கடந்து போக வேண்டியதே! இதுவும் கடந்து போகும்!





பதிவர் குணாதிசயங்கள்! அப்புறம், உலக மகா டாக்டர் பட்டம்!




இப்போதைக்கு  இது போதும் - இன்ஸ்டால்மென்டு  இன் மீள்பதிவு இது
இப்போதைக்கு இது போதும் - இன்ஸ்டால்மெண்டு 1

இதிலேயே பதிவுகளைப் பற்றி டாக்டர் பட்ட ஆராய்ச்சியெல்லாம் பண்ணி முடிச்ச பிறகு, இப்ப வந்து, நான் ஆராய்ச்சி பண்ணப் போறேன், உதவி செய் என்றால் நக்கல் அடிக்கிற  மாதிரி  இருக்குமா, இருக்காதா?!  வால் பையன் வேறு கூட சேர்ந்து நக்கலடிக்கிறார்! நான் ஆறு வருஷமாக் கழட்ட முடியாத பாட்டில் மூடியை, அவரை மாதிரி யூத்துங்கல்லாம் ஆறு வினாடிகளிலேயே கழட்டிடராங்களாம்! அவரால பாட்டில் மூடியைக் கழட்ட முடிஞ்சது.....

வால் பையனுக்கு உலக மகா டாக்டர் பட்டம் கொடுக்கப் பரிந்துரை செய்ய, உங்கள் ஆதரவைப் பின்னூட்டங்களில் சொல்லுங்கள்!

 
................நம்மால கழட்ட முடிஞ்சது  இங்கே!!

"ஏதோ வலைப் பதிவுகளைத் திரட்டுற திரட்டிகளைப் பத்திக் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த மாதிரி இருந்ததே! அதுக்காக இரண்டு திரட்டிகளில் கூட இணைஞ்ச மாதிரி இருந்ததே? புதிதாக ஏதாவது தெரிஞ்சதா, இல்லை, எல்லோரும் பாடும் பதிவுப் பாட்டுத்தானா?"

புள்ளிராஜா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம், புள்ளி வைத்தவுடனேயோ, வைப்பதற்கு முன்னாலேயோ, புள்ளிக்கே புள்ளி வருமா, எப்பெப்போ என்னென்ன கலர்களில் வரும் என்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கும் நண்பர்,
இன்றைக்கு என்னவோ நேரடியாகவே, விஷயத்திற்கு வந்து விட்டார்.

"அது என்ன பதிவுப் பாட்டு? பதியாதபாட்டு??"
என்றேன் நான். வந்ததும் வராததுமாக புள்ளிவிவரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. எதற்கு வம்பு?

"எந்த ஒலகத்துல இருக்கே நீ? சினிமாவெல்லாம்பாக்குறதே இல்லையா?"
 

நண்பர் கொஞ்சம் அதிர்ச்சியுடனேயே கேட்ட மாதிரி இருந்தது. அவர் நினைத்த உலகத்தில் இல்லாமல் போய்விட்டால், அப்புறம் யாரிடம் புள்ளிவிவர மூட்டையை அவிழ்த்து விடுவது என்று பயத்துடனேயே கேட்ட மாதிரியும் இருந்தது.

"அதுதான் நிறைய சினிமாவுல கதாநாயகன் குடும்பத்துக்கு மட்டும்னு ஒரு குடும்பப் பாட்டு இருக்கும், காணாமப் போனவுங்க,
இங்க ஒத்தர் அண்ணா சாலையில அந்தப் பாட்டபடிச்சாருன்னா, அமெரிக்காவுல இருக்குற இன்னொருத்தர் அதைக் கேட்டு "அண்ணா"ன்னு ஓடிவந்து கட்டிப் புடிச்சுச் சேந்துக்குவாங்களே ....அந்தமாதிரி, ஏதோ ஒரு திரட்டியில, ஒருத்தரோட பதிவுக்கு முக்கியத்துவம் கிடைக்கலைன்னாலும், அல்லது வேறு யாரோட பதிவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கிடைச்சாலும், தன்னோட பதிவுல ஒரு பாட்டுப் படிப்பாங்களே, அது தான் பதிவுப் பாட்டு! 

இதுகூடத் தெரியாம, நீங்க எல்லாம் என்ன பதிவு போடறீங்க, என்னத்த எழுதறீங்க?"

நண்பரை மேலும் பேச விட்டால் நக்கல் கொஞ்சம் அதிகமாகி விடும் என்பது தெரியும், இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? விதி வலியது என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம் என்றால், நண்பர் விடுவதாகவே இல்லை.


லாப்டாப்பை எடுத்துக் கொண்டார். கணக்குப் போட ஆரம்பித்தார். சரி இன்னைக்கும் கிளிஞ்சது கிருஷ்ணகிரின்னு வாயை மூடிக் கொண்டு நண்பர் உதிர்க்கப் போகும் புள்ளி விவரத்தை பயபக்தியுடன் கேட்பது போல பாவனை செய்யக் கஷ்டப்பட்டு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.


"அது ஏன் எப்பவுமே கிருஷ்ணகிரியே கிளிஞ்சிட்டிருக்கனும்னு தானே நினைக்கிறே? வேற ஊர் எதுவும் மாட்டலையானும் நினைக்கிற இல்லே?"


எதுவோ முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்னு சொல்வாங்க இல்லையா?அதேமாதிரித் தான், இந்தப் புள்ளி விவர ஆசாமிங்களும்னு தெரியும்


வெளியில சொல்லிற முடியுமா? பாருங்க! ஏறின விலைவாசி அப்படியே ஏறினபடிக்கே இருக்கும், ஆனாக்க நம்ம அரசாங்கம் வெளியிடுற புள்ளிவிவரம் பாத்தாக்க, பண வீக்கம் கொறஞ்சுகிட்டே இருக்கும், ஆனாக்க விலைவாசிப் புள்ளி கூடுற மாதிரிக் கூடி, அப்புறம் கொறயும்!
 
எல்லாம் அந்தப் புள்ளிவிவரத்தோட மகிமை அது! 

புள்ளிவிவரமும் கூடக் கடவுள் மாதிரி! மணியாட்டிக் கற்பூரம் காட்டி இருக்குங்கிற மாதிரியும் காட்டலாம்! இல்லேன்னாக்கப் பகுத்தறிவுப் பகலவனாகி, கிளிப்பிள்ளை மாதிரி இல்லை இல்லைன்னு சொல்லிக் கிட்டே இருந்தாக்க, இல்லைன்னும் ஆக்கிப்புடலாம்!!

இதுனாலதான், புள்ளிராஜா வங்கியில, தினப்படி, வாராந்திர, மாதாந்திர, அப்புறம் நிமிஷத்துக்கொரு தரம் ஸ்டேட்மென்ட் போடற வேலையை அவ்வளவு பயபக்தியோட, எவ்வளவு தப்பாச் செய்ய முடியுமோ அவ்வளவு தப்போட இன்னிக்கும் செஞ்சு கிட்டே இருக்காங்க  போல!


நண்பர் நல்ல மூடில் இருந்தார் என்பது, ஜோசியம் பார்க்கிற மாதிரிக் கை விரல்களை நீட்டி மடக்கிக் கணக்குப் போடுவது போல ஒரு பாவனையில் சுகமாக இருப்பதிலேயே தெரிந்தது.


"எல்லாஞ்சரிதான் அண்ணாச்சி, சொல்ல வந்ததைச் சொல்லிப்புடுங்க! அதுக்கு ஏன் குடும்பப் பாட்டு, பதிவுப் பாட்டுன்னு பாட்டுப் பாடிப் பயமுறுத்தறீங்க?" என்றேன். என்னுடைய திடீர் தைரியத்தைக் கண்டு நண்பர் கொஞ்சம் அசந்துபோயிருக்க வேண்டும்!


"சமீப காலமாத் தமிழ்ப் பதிவர்கள் ஒலகத்துல, ஹிட்ஸ் பத்தின கணக்கு, அது சும்மா கள்ளக் கணக்குல்லேன்னு அதன் மேல கமென்ட், அப்புறம், இந்தத் திரட்டி இன்னாருக்குச் சார்பாவே போயிட்டிருக்கு, இல்லே எனக்கு எதிரா சதிபண்ணுது , இப்படிப் பரபரப்பா எத்தையாவது கிளப்பிக் கொண்டே இருக்கறது தான் ஃபேஷன், தெரியுமா ஒனக்கு?"


"அத்தைத் தெரிஞ்சு நான் என்ன செய்யப்போறேன் அண்ணாச்சி, நீங்க என்ன சொல்ல வாரீங்கங்கறதை மட்டும் பேசுங்க."
 

என்னுடைய தைரியத்தைக் கண்டு, இப்ப எனக்கே ஆச்சரியம் வந்திட்டது!

"இப்ப ஒன்னோட பதிவையே எடுத்துக்குவமே! போன ஜூன் மாசத்தில நடுவுல தான் ஒன்னோட பதிவத் திரட்டிகளில் இணைச்சிருக்கே இல்லையா?"


லாப்டாப்பைத் திறந்து, அண்ணாச்சி தேட ஆரம்பித்தார். நான் பேசாமல் இருந்தேன்.


"ஜூன் மாசம் திரட்டிகளில் இணைக்கிறதுக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒம்போது மாசம், அறுபது பதிவுகள்னு எழுதியிருந்தும் கூட ஹிட்ஸ் பாத்தா வெறும் மூவாயிரம் தான் இல்லியா? அதுலயும், நீ வந்து பாத்தது, கமெண்ட்ஸ் ஏதாவது இருந்தா பதில் சொல்ல வந்தது இப்படி அப்படின்னு ஒரு 25 பெர் சென்ட் கழிச்சாக் கூட, ஒரு ரெண்டாயிரம், ரெண்டாயிரத்து இருநூறுன்னுதான் தேறும் இல்லியா?"


"சரிதான். அதுக்கென்ன இப்போ?"


"
ஜூலை மாசம் 15 ஆம் தேதி வேணும்னே ஒரு தலைப்பை வச்சு விளையாட ஆரம்பிச்ச பொறவுதானே சூடு பிடிக்க ஆரம்பிச்சுது இல்லியா?"

"இப்படி இன்னும் எத்தனை தடவ இல்லியா, இல்லியான்னே கேட்டுகிட்டே இருக்கப் போறீங்க அண்ணாச்சி? புள்ளிவிவரம் இந்தச் சின்னக் கணக்குப் பாக்கிறதுக்குத் தானா? இல்ல, வேற உருப்படியான சோலி எதுனாச்சும் இருந்தாப் பாப்பமா?" என்றேன்.

உள்ளூர எனக்கு அழுகை அழுகையாக வந்தது. பிரபலப் பதிவர், பரபரப்பான பதிவர் ஆகுற யோக்கியதை, எனக்கில்லே, சொக்கா, எனக்கில்லேன்னு திருவிளையாடல் நாகேஷ் மாதிரியோ, வேற வீராவேசமான பதிவருங்க மாதிரியோ கோவில் பிரகாரம், பார்க், பீச்சுன்னு திரிய முடியுமா? 


பத்தாக் குறைக்கு, பார்க்,பீச்செல்லாம் கூடத் தமிழ் நாட்டுல இட ஒதுக்கீட்டின் கீழ் வந்து விட்டதாக பதிவர் டோண்டு ராகவன் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருக்கார்! பைனான்ஸ் கம்பனியில எமாந்தவங்களுக்குப் பனகல் பார்க், இப்படி அப்படின்னு!

நண்பருக்கு உள்ளே நான் அழ முடியாமல் அழுது கொண்டிருந்தது தெரிந்திருக்க வேண்டும். பொம்பளை அழுதா இரக்கப் படுவாங்க. ஆம்பளை அழுதா, அடச்சீ, நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா, இப்படி மூசுமூசுன்னு அழுதுகிட்டு என்று திட்டுவாங்க.


பதிவு எழுதறவன் அழுதா......நண்பர் மாதிரி ஊரே கூடி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுடாதா? அதுவும் புள்ளி விவரம்லாம் பாக்குறவங்களுக்கு இன்னும் கொஞ்சம் நக்கலாகிப்போய் விடாதா?



அழுகை கோபமாக மாறி, நண்பரைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டே, "சரி அண்ணாச்சி, உண்மைதான், பதிவ ஆரம்பிச்ச முதல் ஒம்போது மாசங்கள்ல வந்ததை விட ஜுலை 15 இற்கும் இப்பத்தைக்கும் வந்தவுங்க எண்ணிக்கை தான் அதிகம். அதுக்கு என்ன இப்போ?" என்றேன்.

என்னுடைய கோபம் நண்பருக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். சிரித்துக் கொண்டே நண்பர் சொல்ல ஆரம்பித்தார்.


"முன்னாடியே பேசினது தான் நண்பா! அப்பப் பேசினது அப்போதைக்குப் போதும்னு சொன்னேன். இப்ப மிச்சத்தையும் பாத்துடலாமில்லியா?"


"பேசவேண்டாமின்னு சொன்னாக் கேக்கவா போறீங்க அண்ணாச்சி! பேசணும்னு தானே முடிவெடுத்து வந்திருக்கீங்க, பேசிடுங்க!" என்றேன். வேறென்னத்தச் சொல்ல?


"நண்பா! இந்தப் பதிவுலக நுண்ணரசியல், நுணுக்கமான அரசியல்னு சொல்றாங்க பாரு, அது ஒண்ணுமே இல்லை! உரிக்க உரிக்கக் காணாமப் போயிடும் வெங்காயம்! அவ்ளோதான்!"


"என்ன தத்துவமா? வெங்காயமெல்லாம் உரிக்கறீங்க ?"


வெங்காயம்னு சொன்ன உடனேயே ஒரு தெம்பு வருது பாருங்க, அதை அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும்!

"கொஞ்சம் வெங்காயத் தொலிய ஓரங்கட்டி வச்சுட்டு, சொல்றதைக் கேளு! பதிவு எளுத ஆரம்பிக்கிற எல்லாருமே, தன்னை அடையாளம் காட்டிக்கத் தான் எளுதறாங்கன்னு சொன்னேன் இல்லியா? அப்படி ஆரம்பிக்கும்போது அங்கே இங்கே மத்தவுங்க எழுதறதைப் பாத்துட்டு, தன்னோட சொந்த அடையாளத்தை மறந்துடறாங்க! இது தான் ஒரிஜினல் பிரச்சினை!"


"யாருக்காகவோ எழுதணும்னு நெனைக்கிறதை விட்டுட்டு, தனக்காகவே எழுதணும்னு நெனைச்சிருந்தாங்கன்னா, திருவிழாக் கூட்டத்துல தொலஞ்சுபோற பிள்ளைமாதிரி ஆகாம இருக்கலாம். நீ கூட, திருவிழாவுல தொலைஞ்சுபோன பிள்ளை மாதிரி ஃபீல் பண்ணி ஒரு பதிவு எழுதியிருந்தே, இல்லியா?
 

தனக்காக, தான் ரசிக்கிறதுக்காகவுன்னே எளுத ஆரம்பிச்சா, உன்னையும் இந்த உலகம் தேடி வந்து ரசிக்கும்! நெசம்! தனக்குன்னு எளுதும்போது, கொஞ்சம் வக்கணையா, பொய்க் கலப்பு இல்லாம, ருசியா இருக்கணும்னு நினைப்போமில்லியா, அதுதான் சூட்சுமம்!"

என்னதான் மூச்சடக்கி, கஷ்டப்பட்டு முத்துக் குளிச்சாலும், நல்ல வெலை கெடைக்க ஒரு செட்டியார் தயவு வேணுமில்லியா?

அங்கே தான், இந்தத் திரட்டிகளுடைய அவசியமே வருது!

திரட்டிங்க பண்றதெல்லாம், ஷோக்கா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் டிஸ்ப்ளேல, சரக்குகளை வெளிச்சம் போட்டு வச்சிருப்பாங்கள்ள, அதே மாதிரித்தான்! நீ அவங்க கிட்டஇணைஞ்சப்புரம் பதிவுகளை சமர்ப்பிக்கும்போது, வாசகர் பரிந்துரைங்கற  பேர்ல கொஞ்சம் ஓட்டுக் கிடைக்கும்! யாருடா, நம்மையும் மதிச்சு ஓட்டுப் போட வந்தவுங்கன்னு பாத்தா, அதுக்குன்னே சில பேர் இருப்பாங்க. பெரும்பாலும் இவங்க அடையாளத்துக்கும், இவங்க எழுதற பதிவுக்கும் முடிச்சே இல்லாத மாதிரித் தான் மேலோட்டமாத் தெரியும்.


ஏதோ ஒரு அளவுகோல் வச்சு, குறிப்பிட்ட சரக்குகளை மட்டும் கொஞ்சம் கூடுதலா வெளிச்சம் போட்டு, இது தான் சூடான பதிவு, அதிகம் பரிந்துரைக்கப் பட்ட பதிவுன்னு காமிப்பாங்க.
அப்படிக் காமிச்சதைப் பாத்தே, கொஞ்சம் கூட்டம் அங்கே போய் மொய்க்கும்!
ஆறிப் போன முந்தாநாள் இட்லி  மேல, கொதிக்கக் கொதிக்க சாம்பாரை ஊத்தி சூடாக் காமிக்கிற மாதிரித் தான் இதுவும்னு வச்சுக்கோயேன்!

இப்பப் புதுசு புதுசாத் திரட்டிகள் வந்துட்டதால, ஏற்கெனெவே மணம் பரப்பிக் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு திரட்டி, வலியவே போய், உங்களோட பதிவை எங்கள் திரட்டியில்
4000, 4500, 5000, 5500, 6000 ஆவது பதிவாக இணைத்திருக்கிறோம் என்று பரிவட்டம் கட்டி ஆளை இழுத்து வருகிற வேலையை ஆரம்பித்ததும் நடந்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் பின்னூட்டம் இடுகிற சந்தடி சாக்கில், உங்கள் பதிவை எங்கள் வளையத்தில், எலி வலைக்குள் சேர்த்திருக்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததில், ஒரு அறிவிக்காத யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி வெளிச்சம் போட்டுக் காமிக்கறதுல  சில பதிவுகளும், பெரும்பாலான நேரங்களில் பதிவர்களுமே பிரபலமாகிப் போவது ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட் அவ்வளவுதான்! இதுல வேறு மோடி வித்தை, சூட்சுமம் எதுவுமே இல்ல. இப்படி
அதிகம் வெளிச்சம் பட்ட பதிவர்கள் எல்லாருமே சரக்கோட எப்பவுமே எழுதறதும் இல்ல. இதையும் மனசுல வச்சுக்கோ.

உன்கிட்ட இருக்கிறது நத்தைக் கூடா, நல்ல முத்தான்னு தேடறவங்களுக்குத்  தெரியாதுல்ல! நல்ல முத்தைப் பிரிச்சுத் தாரேன்னு தான் ஒவ்வொரு திரட்டியை உருவாக்கி நடத்துறவங்களும் சொல்றாங்க. ஒரு அளவுக்கு, அதே மாதிரி பிரிச்சும் தராங்க!ஆனாக்க ஒரு அளவுக்கு மேல போனப்புறம், திரட்டிஙகறது புரட்டுன்னு ஆகிப் போவதை, அவ்வப்போது நடக்கும் சர்ச்சைகள், சூடான வம்பு, சூடான இடுகை, சூடான வாக்குவாதம், சூடான கண்ணீர்னு வரிசையாக் காட்டிக் கொடுத்துடுது!


திரட்டிகளில் சேருவது என்பது உன்னோட பதிவை வாசகருக்குக் கொண்டு சேர்ப்பதுல இருக்கிற பல வழிகளில் ஒரு வழி, அவ்வளவுதான்! இதைக் கொஞ்சம் மனசுல வச்சுக்கோ."


மூச்சு விடாமல் நண்பர் சொல்லிக் கொண்டே போனதில் நான் தான் அதிகக் களைப்பாகிப் போனேன்.


இப்போதைக்கு இது போதும்!


புள்ளிவிவரச் சிங்கமே, மனமுவந்து மிச்சத்தை அடுத்த இன்ஸ்டால்மென்டுல பாத்துக்கிடலாம்னு பெருந்தன்மையா நிறுத்திக் கொண்டார்!



சர்வே, கேள்வி-பதில் என்ற வடிவத்தில் பதில் சொல்வதை விட, ஆராய்ச்சி செய்ய முனைந்திருக்கும் அந்த மாணவிக்கு  உதவியாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன்! தமிழ்ப்பதிவர்கள், பதிவர் குணாதிசயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றால், போலி டோண்டு, குச்சிக்காரி இந்த வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினால், இன்னும் நிறையத் தகவல்கள் கிடைக்கும்! படித்துப் பார்த்த பிறகு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சா.......குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் வரும்  விசுவுடைய  இந்த வசனம் நிஜமாகிப் போனால்,  அதற்கு நான் பொறுப்பல்ல!







 

எழுதி எழுதி ஏட்டைக் கெடுத்து...பாடிப் பாடிப் பாட்டையும் கெடுத்த கதை!


பரிணாமம் திரும்பும் விதம்...!
 

"Bloggers, Internet users and their intelligence என்ற தலைப்பில் தான் உளவியல் துறையில்  ஆய்வு மேற் கொண்டிருப்பதாகவும், அதற்கு உதவ விருப்பமிருந்தால், மின்னஞ்சலில் கேள்விப் படிவத்தை அனுப்புவதாகவும்  முன்பின் தெரியாத ஒரு பெண்மணியிடமிருந்து பின்னூட்டத்தில் ஒரு உப்புச் சப்பில்லாத வேண்டுகோள் ஒன்று இரண்டு நாளைக்கு முன்னால் வந்தது.

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, 'இணையத்தில் புழங்குவோர், வலைப் பதிவர்களும் அவர்களது அறிவுத் திறனும்' இப்படித் தலைப்பைப் பார்த்தபோதே, இது தேறாது என்று முடிவு செய்து, பின்னூட்டத்தை நிராகரித்து விட்டேன். தவிர உதவி கோரும் வார்த்தைகளுமே கூட, நம்மூர்ப் பல்கலைக் கழகங்களுக்கே உரிய ஏனோதானோ மனோபாவத்தில் இருந்த மாதிரித் தோன்றியதால், ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை.

ஆறுவருடங்களுக்கு மேலாக, இந்தப் பதிவுலகத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பவனுக்கே, இதன் போக்கு சமயங்களில் பிடிபடுவது கடினமாக இருக்கும்போது மேலோட்டமாக ஒரு செட் கேள்விகளை வைத்துக் கொண்டு பதிவர்களை, அவர்கள் அறிவுத் திறனை எடைபோட்டு விட முடியுமா என்ன?


அடுத்த பெரிய விஷயம் என்ற தலைப்பில் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருக்கும் trendwatching.com என்ற ஒரு நிறுவனம், தன்னுடைய பெயருக்குத் தகுந்த மாதிரியே, என்னென்ன விஷயங்களில் எப்படிப் பட்ட போக்கு நிலவுகிறது என்பதை ஆராய்ந்து, அதில் சில  யூட்யூப் வீடியோக்களாக வெளி வந்திருப்பதை ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைப் பதிவு ஒன்றிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அதில் ஒன்று இங்கே! தகவல் தொழில்நுட்பம்  எப்படி நாம் சிந்திப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதில், வணிகத் தொடர்புகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாலே நிமிடங்களில் எடுத்துக் காட்டிவிடுகிறது.



வலைப் பதிவுகள், இன்டர்நெட் பற்றி நியூ யார்க் நகரில் 2004 ஆம் ஆண்டு பலரிடம் கேள்வி கேட்கப் பட்டபோது, கணிசமானவர்கள் அப்படியென்றால் என்னவென்றே தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார்கள்! 2008 இல் ட்விட்டர் உலகம் முழுக்கக் கலக்க ஆரம்பித்திருந்த தருணம், எவ்வளவு தடவை ட்விட்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்று ஜனங்களிடம் கேட்ட போது ட்விட்டர் என்றால் என்ன என்று எதிர்க் கேள்வி கேட்பதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம். அடுத்து, ரிமோட் கண்ட்ரோல், எம்பி 3 ப்ளேயர் மாதிரித் தெரிகிற ஒன்றைக் காட்டி இது என்ன என்று கேட்டபோதும் கூட அதே மாதிரி பதில் தான்!

2012 இல் என்ன மாதிரி இருக்கும் என்பதை இதை வைத்து ஒரு கருத்தைச் சொல்கிறார்கள்! பயன்படுத்துபவர்கள் புதிதாக வருகிற ஒன்றை ஏற்றுக் கொள்ளாமல் (அல்லது அறிந்துகொள்ளாமல்) இருக்கலாம்! அதற்காகப் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தவில்லை என்றால், நம்முடைய கதை கந்தல் தான் என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறது!

சில நாட்களுக்கு முன்னால் பிராண்ட் என்றால் என்ன, பிராண்ட் இமேஜ் பற்றிய பதிவுகள் சில  இந்தப் பக்கங்களில் வந்தன.
 

மாதிரிக்கு ஒன்று! இன்னும் ஒன்று!


ஒரு பொருள் அல்லது தயாரிப்பு, தேவையின் நிமித்தம் தொழில் தெரிந்த எவராலோ உருவாகிறது. ஆரம்ப நிலையில், எந்த விதமான நகாசு, ஜிகினா வேலையும் இல்லாமல், எளிமையாகத் தான் அந்தப் பொருள், அல்லது தயாரிப்பு இருக்கிறது.

அடுத்து, கொஞ்சம் விவரமான ஒருவரிடம், அதே பொருள் வந்து சேரும்போது, நகாசு, ஜிகினா வேலைகள் எல்லாம் சேர்ந்து கொள்கிறது.

அப்புறம் கலை தெரிந்தவர்களிடம், சுருக்கமாகக் கலைஞர்களிடம், அந்தப் பொருள் வந்து சேருகிறது.

அவர்களிடம் இருந்து, எம்பிஏ  மாதிரி மேலாண்மையைப் பாடமாகப் படிப்பவர்கள் கையில் அகப்பட்டுக் கொள்கிறது.

அப்புறம் ஒரு அரசு,  நிர்வாகம் அல்லது ஒரு நிர்வாகியிடம் சிக்கிக் கொண்டு, படாத பாடுபட்டு, ஒன்றுக்குமே ஆகாததாகப் போய் விடுகிறது.

இந்த வரிசையில்,  முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வதையும் சேர்த்துக் கொள்ளலாமோ?









 

சீத்தலைச் சாத்தனார்-பகுதி 2


சீத்தலைச் சாத்தனார் அல்லது கருத்துச் சொல்ல வாங்க! இந்தப் பதிவு, நிறையப் புதுப் பார்வையாளர்களை, இந்தப்பக்கங்களுக்கு, குறிப்பாகச் சென்னையில் இருந்து கவனிக்க வைத்திருப்பதாகத் தகவல் சொல்கிறது! சீத்தலைச் சாத்தனாரை விட, பதிவர் சந்திப்பு, இருட்டுச் சந்தில் மூக்கில் குத்து இந்த வார்த்தைகள் கூட கவனிக்கப் பட்டதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்!

சீத்தலைச் சாத்தனார் யாரென்று தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு! சங்க இலக்கியங்களில், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான  மணிமேகலையை இயற்றியவர். 


பனை ஓலைகளில் எழுத்தாணியால் எழுதும்போது ஏதேனும் தவறு நேர்ந்தால் தன் கையில் இருக்கும் எழுத்தாணியை வைத்தே தலையில் குத்திக் கொள்வாராம்! அதனால், எப்போதுமே தலையில் சீழ் வடிந்து கொண்டிருக்குமாம்! சீழ் வடியும் தலை, சீழ்த்தலையாகி அதுவே சாத்தனாருடைய பெயருக்கு அடை மொழியாகவும் ஆகிப் போனதாகவும் சொல்வார்கள்!

சே சே, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவருடைய ஊரின் பெயர் சீர்தண்டலை,  அது தான் மருவி சீழ்த்தலையாகி விட்டது என்று சப்பைக் கட்டு கட்டுவாருமுண்டு!  


எது எப்படியிருந்தாலும், தப்புக் கண்டுபிடிக்கும் தருணங்களில், எழுத்தாணி மாதிரிக் கூர்மையான ஆயுதத்தால் வார்த்தைகளால் அடுத்தவரைக் குத்தத் தயாராயிருப்பது நம்மில் பலருக்கும் பல நேரங்களில் பழக்கமாகவே இருக்கிறது. புலவரைப் போலத் தன்னைத் தானே குத்திக் கொள்வது போல அல்ல! 

அடுத்தவரிடம் ஏதாவது தப்புக் கண்டு பிடிக்க முடிந்தவுடன் போட்டி போட்டுக் கொண்டு தவறைத் திருத்த ஓடி வருகிற இந்த அடிப்படை உளவியலைத் தான், ஒரு படம் போட்டுக் கலாய்க்கலாமே என்று அந்தப் பதிவை எழுதினேன்! 

வால்பையன்  அருண் கலாய்ப்பதற்கெல்லாம் கூட, மொழிபெயர்ப்புக் கேட்கிறார்! 

இவரை மாதிரியே ஒரு பயிற்சி வகுப்பில் பாடம் எடுக்கவந்த நினன் தாமசை கேள்வி கேட்ட கதையை ஸ்தாபனம் என்றால் என்ன என்ற வார்த்தைகளைக் கொண்டு இந்தப் பதிவில் தேடினால் ஒரு பழைய அனுபவம் பதிலாகக் கிடைக்கும்!

ஆகக் கலாய்த்தல் மொழிகளுக்கு அப்பாற்பட்டது, அதற்கு மொழிபெயர்ப்பே தேவையில்லை என்று சால்ஜாப்புக்களுடன் அப்படியே அபீட் ஆகிவிட மனம் வரவில்லை. இந்தப் படத்தைப் பாருங்கள்! 


வார்த்தைகளுக்கு நடுவே கொஞ்சம் இடைவெளி ஒரு கமா அல்லது காற்புள்ளி விடாமல் சொல்லும் ஒரு வாக்கியம் எப்படி விபரீதமான அர்த்தத்தைத் தருகிறது! இந்தப் பக்கத்தில் பார்த்ததை, ஒரு நண்பர் அனுப்பியிருந்தார்.

தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்.

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்! அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
 
அதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.

நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்ன! இவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, "என்ன! அவர் அப்படி இருக்கிறாரா? அப்படி நடந்து கொண்டாரா? அப்படிச் சொன்னாரா? அப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

" நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ? அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் " ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்! நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பதுதான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான். நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி, ஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்" என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21