Showing posts with label பொழுதுபோக்கு நாத்திகம். Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு நாத்திகம். Show all posts

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்..! பீர்பால் கதைகள் 9,10


பீர்பால் கதை ஒன்றைச் சொல்லி நாளாகி விட்டதே, என்ன கதையைச் சொல்லலாம்  என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான், அக்பரும், பீர்பாலாக மாறுவதற்கு முன்னால் மகேஷ் தாஸ் என்ற சூடிகையான இளைஞனாக இருந்தவனுக்குமிடையிலான  அறிமுகம் எப்படி ஆரம்பித்தது என்பதைச் சொல்லாமலேயே இதுவரை எட்டுக் கதைகளைச் சொல்லியிருக்கிறோமே என்ற நினைப்பு வந்தது.

Flashback முறைதான் நமக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாயிற்றே!  அதனால் அக்பர் பீர்பால் முதல் சந்திப்பைக் கொஞ்சம் பின்னோக்கிச் சொல்லலாம் என்று நினைத்த போதுதான், இதே கதை பல்வேறு தருணங்களில் பல்வேறு வடிவங்களில் சொல்லப் பட்டிருப்பதையும் கவனித்தேன்!

ரு சமயம் அக்பர் தனது படைவீரர்களுடன் வேட்டையாடப் போனார். போன சமயத்தில், கூடவந்தவர்கள் பலர் வழியைத் தவற விட்டு விட்டார்கள். அக்பரும் ஒன்றிரண்டு வீரர்களும் கொஞ்ச தூரம் பயணம் செய்து பாதைகள் மூன்றாகப் பிரிவதைப் பார்த்தார்கள். அதில் எந்தப்பாதை தான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய பாதை என்பது புரியாமல், அங்கே வழியில் கண்ட ஒரு இளைஞனை நிறுத்தி எந்தப்பாதை தில்லிக்குப் போகிறது என்று விசாரித்தார் அக்பர்.

"பாதைகள் எதுவும் டில்லிக்குப் போகாது! அவை அங்கேயே தான் இருக்கும்!" என்றான் அந்த இளைஞன். அக்பருக்கு அவன் தன்னைக் கேலி செய்கிறானா என்ற சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி வெளிப்படையாகக் கேட்பது? கண்களில் குறும்பு மின்ன, அந்த வாலிபன் மேலும் சொன்னான்."பாதைகள் தான் டில்லிக்குப் போகாது என்று சொன்னேன்! ஆனால் நீங்கள் அதில் பயணம் செய்தால் டில்லிக்குப் போய்ச் சேரலாம்!"

ப்படிச் சொன்னவுடன், அக்பருக்கு உச்சி குளிர்ந்து விட்டது! 

ந்த நாட்களில் கூந்தல் க
றுப்பு, குங்குமம் சிவப்பு என்று ஒரு எம்ஜியார் படப் பாடல் ஒன்று உண்டு அதைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த ரசிகக் கண்மணிகள் தலைவர்  என்னமா உண்மையை  உடைச்சுச் சொல்கிறார் என்று வியந்த மாதிரி, அக்பரும் குளிர்ந்து போனாராம்! ஆமாம்! பாதை எப்படி டில்லிக்குப் போகும்? நாம் தான் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற உண்மை பாதுஷாவுக்கும்  உறைத்துப் புளகாங்கிதம் அடைந்ததில், அந்த வாலிபனின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாராம்!

ப்புறம் என்ன! மகேஷ் தாஸ், அக்பரின் அரசவையில், பாதுஷாவுக்குப்  பிரியமான சேக்காளியாக பீர் பால் என்ற கௌரவப் பட்டத்தோடு மாறினார்  என்பது தெரிந்தது தானே!

ந்தக்கதையை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில்  வேறு வடிவத்தில் பார்த்திருக்கிறோம்! இந்தக் கதையில் பீர்பால், அந்தக் கதையில் ஒரு துறவி! எப்படியானாலும்,. பீர்பாலோ அல்லது துறவியோ அரசனிடம் இந்த மாதிரிக் கேள்வி கேட்க முடியுமா, தலை தப்புமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.


ந்த ஒரு கேள்விக்கும், இரண்டு நேரெதிர் கோணங்களில் இருந்து பதிலைப் பெற முடியும் என்பதை மட்டுமே கதையில் இருந்து பெற வேண்டிய கருத்தே தவிர, ஆஹா! நல்ல கதை என்றோ, கதை சொல்லியே நம்மை பல நூற்றாண்டுகளாக முட்டாளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொதிக்கவோ வேண்டாம் என்பது தான் முதலும், முக்கியமானதுமான பாடம்!

தைகள், ஒரு உருவகம், ஒரு உதாரணம் அவ்வளவுதான்!

ண்மைக்குக் கொஞ்சம் இப்போதிருப்பதைவிட இன்னம் அருகாமையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவியே தவிர, கதையே முழுமையானதும், உண்மையானதும் அல்ல! அப்படி எடுத்துக் கொள்ளும் போது தான் கற்பிக்கப்படாத விபரீதமான அர்த்தங்கள், அனர்த்தங்கள் என்று தொடர்கின்றன.

ப்படி அதற்கு முந்தைய பதிவில் சொன்னதற்கு வந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து அவைகளுக்குப் பதிலாக

/நாத்திகர்கள் கடவுளை வெறுப்பவர்கள் அல்ல, மறுப்பவர்கள்/ *

டைமுறை நாத்திகம் என்பது, எது உண்மை அல்லது பொய் எனத் தேட முற்படுவதே இல்லை. நம்புகிறவனுடைய நம்பிக்கையை கேள்விக்குரியதாக ஆக்கி விடை சொல்ல முற்படுவது அதன் வேலையாகவும் இருந்ததில்லை. வெறும் கேலி, ஏச்சு, விதண்டாவாதம், வெறுப்பை உமிழ்வது, பிணக்குகளை வளர்ப்பதுமே அதன் பணியாக இருக்கிறது.

ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப் படும் நாத்திகர்களும், உள்ளூர் நாத்திகர்களும் இந்த ஒரு விஷயத்தில் ஒன்று படுகிறார்கள்.

சார்வாகம், சாங்கியம், என்று இறை மறுப்பை முன்னிலைப்படுத்தும் தத்துவ மரபுகளுமே இந்தியத் தத்துவ தரிசனத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. சமணம் பேசும் அறநெறிகள் இந்த வகையில் வருபவையே. சடங்குகளையும், புரோகிதனையும் மறுத்து, அறிவொன்றே தெய்வம் எனக் காண்பித்தவை.

/இது தான் ஆத்திக நாத்திகத்திற்கு நான் கொடுக்கும் சிறிய விளக்கம்/

ரணியனின் கதையிலேயே அது இருக்கிறது. நாராயணன் இல்லை, அவன் பெயரை எவருமே சொல்லக் கூடாது என்கிறான். நாராயணனை மறுக்கிறான். ஆனால், அவனுக்கு, நாராயணன் இருப்பது தெரியும், தன்னுடைய உடன்பிறந்தவனைக் கொன்றான் என்ற ஒரே காரணம், பகையாக, வெறுப்பாக, மறுப்பாகவும் வெளிப்படுகிறது.

த்திக நாத்திகமே வேறு.உதாரணத்திற்கு, இங்கே வலைப்பக்கங்களில் ஒரு பெண்மணி,மிகவும் கற்றவராக, எல்லாம் தெரிந்தவராகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார். கோபிகா கீதம் என்று ஒன்று உண்டு. பக்தியின் உச்ச நிலையை, பரம்பொருளிடம், நாங்கள் மிகச் சிறியவர்கள், எங்களிடம் உன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டாம் என்று உருகுகிறார்கள். பிரேம பாவம் என்பதன் உச்சம் அது. ஆனால் இந்தப் பெண்மணியோ  சர்வ சாதாரணமாக, அதைப் படித்தால், காணாமல் போன பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கை என அதைப் பற்றி எழுதுகிறார். ராம நாமமே துதி செய் என்று எழுதி விட்டு, பெரியவா சொன்னதுனால நாங்க ஏத்துக்கறோம், என்ற ரீதியில் தொடர்ந்து எழுவதைப் பார்க்கும் போது, ஒரு பக்கம் சிரிப்பாக வருகிறது. இவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான்! கிளிப்பிள்ளைகள் போல இருப்பதே தத்துவத்தைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் பாருங்கள், இது தான் ஆத்திக நாத்திகம். இவர்களை விட, நேரடியாகவே, கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.

/கடவுள் இருக்கிறது என்று நம்ப வைப்பது தான் ஆத்திகரின் வேலையா ?/

நிச்சயமாக இல்லை.நம்பிக்கையைச் சிதைப்பது, மதம் மாற்றுவது, இதை உண்மையான ஆத்திகன் செய்வதில்லை. அவசியமும் இல்லை.

ங்கே ஒரு கருத்துப் பரிமாற்றம் மட்டுமே நிகழ்வதாக நான் கருதுகிறேன். என் நிலையை நீங்கள் ஏற்றுக் கொண்டு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நப்பாசை எதுவுமே இல்லை.உங்களுடைய கருத்தை நீங்கள் முன்வைக்கிற அதே விதத்தில், அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், அது சரிதானா, எனக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பரிமாறிக் கொள்வதைத் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. "

ன்று சொல்லியிருந்த பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிற வாய்ப்பும் கிடைத்தது.(சிவப்பு எழுத்தில் அடைப்புக்குள் இருப்பதெல்லாம் ஒரு பதிவர் எழுப்பியிருந்த கேள்விகள்) பிழைப்புக்காக நடத்துகிற தொழில்முறை நாத்திகம் தவிர, பொழுது போக்கு நாத்திகமாக இங்கே பலர் பதிவுகளில் பேசிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது.


oooOooo

பீர்பால் அக்பருக்கு அறிமுகமான கதை கொஞ்சம் சுமாராகத் தான் இருக்கிறதென்று வாசகர்கள் கோபப்படுவதற்கு முன்னாலேயே, சமாதானமும் சாந்தியும் நிலவுவதற்காக வழக்கம் போல இன்னொரு பீர்பால் கதை! போனசாக, ஒன்றுக்கு ஒன்று ஃப்ரீ என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதர
வு இல்லாவிட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள்.

க்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர் பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

ல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை,
புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

ரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார்.

"எனக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார். 


சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

"இன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை.

பையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்னபோதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!

க்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

"பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

"அப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!

"எங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

"நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

"முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

"ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

ங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை!

கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார்   என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

ன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா!

வேறென்ன செய்ய முடியும்!

 


 

நான் ஏன் நாத்திகனாக அல்லது ஆத்திகனாக ஆக்கப் பட்டேன்....?!


"அந்த நாட்களில், தி க ஆதரவாளரான ஒரு வழக்கறிஞர், அவருடைய இளவல்கள், எங்களைப்போல இடதுசாரிச் சிந்தனை உடையவர்களோடு, நன்கு பழகிக் கொண்டிருந்தார்கள், அல்லது அப்படிக் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்றும் கூட சொல்லலாம். வாரத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட, வழக்கறிஞருடைய வீட்டில், பேசப்போவோம். கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் நடந்த அந்தக் கூத்தை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும், கொஞ்சம் வேடிக்கையான அனுபவமாகவே இருக்கிறது.


மனிதன் சினிமாவில் வருகிற கோர்ட் சீனில் காண்பிப்பதுபோலவே, தன்னுடைய வாதத் திறமை இருப்பதாக எங்களை நம்பச் செய்யப் படாத பாடு படுவார். கருத்துப் பரிமாற்றம் என்று சொன்னேன் அல்லவா, அது வெறும் வார்த்தை தான்! அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார், எதிராளி என்ன தான் சொல்கிறார் என்று ஒரு பொழுதும் கவனித்ததில்லை. நாங்களும், அவரை மாதிரி என்று சொல்ல முடியாது, அவர் அந்தக் கலையில் சகல கலா டாக்டர் பட்டம் வாங்கியவர், எங்களுடைய கருத்தை எடுத்து வைத்து விட்டதாக ரெகார்ட் பண்ணி விட்டு ஜமா கலைந்து விடும், அடுத்த வாய்தா வருகிறவரை
 
இந்த வழக்கறிஞரோடு என்னுடைய உறவும் நட்பும் கொஞ்சம் அதிக நாள் நீடித்தது என்று சொன்னால், மேலே சொன்னது மாதிரி கருத்துக் களம், பரிமாற்றம் என்று சொன்னேனே, அந்த மாதிரி வார்த்தை அலம்பல்களினால் அல்ல. எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஒரு வெறித்தனமான காதலும், நேரமும் இருந்த நாட்கள் அவை. அவரிடம் நிறைய நூல்கள் இருந்தன. எந்தப் புத்தகம் கடைக்கு வந்தாலும், உடனே வாங்கி விடுவார்.பல்வேறு தலைப்புக்களில் அவரிடம் இருக்கும் நூல் சேகரம் கொஞ்சம் பெரிதுதான். இப்படி ஒரு புத்தகப் புதையல் இருக்கும் இடத்தை யாராவது தவற விடுவார்களா என்ன!

எனக்குத் தேவைப்படுகிற புத்தகங்களை, நான் தேடிப்போக வேண்டிய அவசியம் கூட இல்லாமல், அனுப்பி வைப்பார். அவரிடம் இல்லை என்றால், உடனே வாங்கியும் வைத்து விடுவார். பெரியாரைப் பற்றி, இவரிடமிருந்து தான், கொஞ்சம் ஆதாரங்களோடு கூடிய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறேன். அதே மாதிரி, மார்க்சீயச் சிந்தனைகள், மதக் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகள் என்று நூற்றுக்கணக்கான புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார். எங்கே தகராறு வருமென்றால், திடீரென்று சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இதோ பாருங்கள் லெனின் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சில பத்திகளை அடிக்கோடிட்டு வைத்துக் காண்பிப்பார். அதை ஆதாரமாக வைத்துக் கொண்டே தான் பேசுவதையும் ஒருமாதிரி முடிச்சுப் போட்டுத் தன்னுடைய கருத்துப் "பரிமாற்றத்தை" வலுவாக ஊன்றி வைப்பார்!

இப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று வழக்கறிஞர், புத்தகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டும் போது எங்களுக்கு முதலில் கொஞ்சம் மயக்கம் வந்ததென்னவோ உண்மை! அப்புறம் கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்தது, குதிரையல்ல கழுதைதான் என்று தெரிந்தது என்று ஒரு கதை சொல்வார்கள் இல்லையா, அதே மாதிரி, வழக்கறிஞரும் மேற்கோளில் எப்படிப் புரட்டுகிறார் என்பது சீக்கிரமாகவே தெரிந்துபோய் விட்டது.  
 
எப்படியென்றால் அந்தப் புத்தகத்தையே, எனக்குப் படிப்பதற்காகக் கொடுத்து அனுப்புவார் என்று சொன்னேன் இல்லையா, புத்தகத்தை முழுமையாகப் படிக்கும் போதே குட்டு உடைந்த தருணங்கள் வந்தது.

உதாரணத்திற்கு லெனின் எழுதிய புத்தகங்கள் பெரும்பாலானவை, அந்த காலகட்டத்தில் பரவலாக இருந்த அல்லது பரப்பப்பட்டு வந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களாகவே எழுதப்பட்டவை. லெனினுக்கு ஒரு பழக்கம், தன்னுடைய எதிராளி சொல்லும் ஒவ்வொரு கருத்தையும், முழுதாக எடுத்துச் சொல்லி, அதற்கு அப்புறம் எதிராளி எப்படி அதைத் தப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறார், தப்பாக வாதங்களைஎப்படி எடுத்து வைக்கிறார் என்பதை, ஒவ்வொன்றாக, ஆணித்தரமாக மறுக்கும் வகையிலேயே எழுதுவது. ஆக, லெனின் எழுதிய ஒரு நூலை நீங்கள் வாசிக்கப் புகும் போது, எதிர்க்கருத்தாக எவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு விட முடியும்.  
நம்முடைய பகுத்தறிவு வழக்கறிஞர், அப்படி லெனின் எடுத்து வைக்கிற எதிராளியின் கருத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, பாருங்கள் லெனின் இங்கே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதம் செய்வது தொடரும்போது, நாங்கள் ஐயா, அதற்கு அப்புறம் லெனின் இதை எப்படி மறுத்திருக்கிறார் என்பதையும் பாருங்கள், தொடர்ந்து தவறாகவே லெனினை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னபிறகும் கூட, அவர் தன்னுடைய வாதத் திறமையை, பாணியைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

அவர் மட்டுமல்ல
, பகுத்தறிவு வாதம் பேசுகிற நிறையப் பேரும் அதே பாணியைக் கடைபிடித்து வருவதும் புரிந்தது.பகுத்தறிவை அவர்கள் புரிந்து கொண்டிருக்கும் விதமும் புரிந்தது!

கொஞ்சம் ஒன்றைக் கவனித்துப் பாருங்கள், பெரியாரை மேற்கோள் காட்டுகிறவர்களாகட்டும், அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகம் பேசுபவர்கள் ஆகட்டும், தாங்கள் மேற்கோள் காட்டும் விஷயம் உண்மை தானா, அதில் சொல்லப் பட்டிருப்பவை, இங்கே இப்படி அங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது என்று எடுத்துக் காட்டப் படும் இடங்களைத் தாங்களே ஒரு தரம் சோதித்துப் பார்த்து, அங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வதில்லை. 

 யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது!

இவர்கள் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் மீது 'ஆன்மிகம்' பேசுபவர்களுமே கூட இந்தத் தவறைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.


இதுவும் ஒரு மீள்பதிவு தான்! பழைய நினைவுகளின் ஒரு பகுதிதான்! நான் ஏன் நாத்தியனாக இருக்கிறேன் என்று வால் பையன் சொல்வதற்கு எதிர்வினையாக எழுதப்பட்டதில்லை! 




கொம்பேறித் தாவும் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்! வால்பையன் பேசும் பரிணாமம்!

அதானே! நம்பிக்கையே இல்லைன்னு பிரசாரம் பண்ணும் பிரசுரம் கூட ஒண்ணுமே இல்லாமல் எம்ப்டியாத் தான் இருக்கோணும்!
 

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்!கொம்பேறித் தாவும்   
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்! 

தூக்குத் தூக்கி படத்தில் வரும் இந்தப் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டு, இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்!

சென்னைப் பதிவர்கள் குழுமமா, தமிழ் இணைய எழுத்தாளர்கள்  சங்கமா என்ற கேள்வி ஒரு வழியாக அடங்கி, தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்ற வலைப் பதிவோடு, ஒரு வழியாக "இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம்"  என்ற முடிவோடு ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. 



 
ஆனால், சனிக்கிழமை நடந்த கூட்டத்தின் அதிர்வலைகள் அங்கங்கே பதிவுகளாக, பின்னூட்டக் கும்மிகளாக கன ஜோராக நடந்து கொண்டே இருக்கிறது.

பதிவுலகம் இப்படிப் போய்க் கொண்டிருந்தால் வால்பையன் என்னதான் செய்வார், பாவம்! சேக்காளி  ராஜன் வேறு உண்மைத் தமிழன்,
டோண்டு ராகவன் பதிவுகளில் தொடர் பின்னூட்டச் சரங்களை வெடிக்கப் போய்விட்டார்!

அதனால் வால்பையன் பழையபடி, பரிணாமம், கடவுளை நோண்டக் கிளம்பிவிட்டார்!ஏதாவது புதிதாகச் சொல்லியிருக்கிறாரா, அல்லது புதிதாக எதையாவது கற்றுக் கொண்டு வந்திருக்கிறாரா  என்று பார்த்தால், ஒன்றையும் காணோம்!வால்பையன் ஆரம்பிக்கிறார்-
"பரிணாம வாத கொள்கையில் நம்பிக்கையற்றவர்களின் முதல் கேள்வி “குரங்கு ஏன் குரங்காகவே இருக்கு” என்பது தான், ஆனாலும் நட்புக்கூட்டங்கள் அதே கேள்வியை மீண்டும் பின்னூட்டத்தில் கேட்டு அவர்கள் அறிவுமுதிர்ச்சியை உலகுக்கு காட்டி அசரடித்தார்கள்!"

வால்பையன் ஏன் வால்பையனாகவே இருக்கிறார் என்று நான் கேட்கப் போவதில்லை!காரணம், அவர் வால்பையனாக இருப்பதனால் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அதற்காக பரிணாமம் பற்றிக் கிளாஸ் எடுக்க வந்தால் சும்மா இருந்து விட முடியுமா என்ன?

யாரோ கடவுள் நம்பிக்கையாளர்  எப்போதோ கேட்டாராம்! (எப்போது? எங்கே? யாரிடம்?) குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்று  டார்வின் சொன்னது உண்மையானால், இன்னமும் குரங்குகள் இருக்கின்றனவே, அது எப்படி? அதனால் டார்வின் கொள்கையே தப்பு என்றாராம்! வால்பையன் மேலும்  சொல்கிறார், அது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை திசை திருப்பும் பதிவல்ல, அனைத்தையுமே கேள்வி கேட்கும் பதிவு!

அனைத்தையுமே கேள்வி கேட்பது  எப்படி இருந்ததென்றால், கீழே உள்ள படத்தில்  கேள்வியும் பதிலுமாக  இருக்கிற மாதிரி!


மனிதக் குரங்கு, வெறும் குரங்கல்ல! இரண்டும்  பக்கத்தில் பக்கத்தில் தலைக்குக் கைகளை அண்டக் கொடுத்து, மல்லாக்கப்  படுத்துக் கொண்டிருந்தன. சின்ன மனிதக் குரங்கு,  பெரிய  மனிதக் குரங்கிடம்கேட்டது. "வாழ்க்கையின் நோக்கம் என்ன?"

பெரிசு பதில் சொன்னதாம்! "அதற்கு ஒரு விடை இருக்கிறது! ஒரு தக்காளியின் வர்க்க மூலம் என்ன? அதற்கான விடை தான் இதற்கும்!"

சிறிசு சொன்னது, "தக்காளியின் வர்கமூலம்! என்னவொரு முட்டாள்தனமான கேள்வி!"

பெரிசு சொன்னதாம், " அதே! அதே!"

அந்த மாதிரித் தான் இருக்கிறது வால்பையன் எடுத்துக் கொண்டிருக்கும் பரிணாம நிரூபண வாதம்!


குரங்குகள் அனைத்துமே மனிதனாக மாறிவிட்டனவா  என்று யாரும் கேட்கவில்லை. தவிர, டார்வின் சொல்வது, மனிதனுக்கும் மனிதக் குரங்கிற்கும் பொதுவான மூதாதையர் இருந்தார்கள் என்று தான்! மனிதக் குரங்கே மனிதனாக மாறிவிட்டதாக அவரும் சொல்லவில்லை, அப்படி அர்த்தப் படுத்திக் கொண்டு எவரும் கேள்வி கேட்கவும் இல்லை. உயிர்களின் தோற்றம் என்ற தனது ஆராய்ச்சிக் குறிப்பில் டார்வின், நதியின் மூலம் இன்னது என்பதைத் தான் ஆராய்ந்திருக்கிறார். நதி எங்கெங்கெல்லாம் ஓடிக் கடைசியில் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறது என்பதைப் பேசவில்லை.

டார்வினை மறுக்க வேண்டிய அவசியம் அன்றைக்குக் கிறித்தவத்திற்கு மட்டுமே இருந்தது.  ஏனென்றால், அவர்கள் தான் பழைய ஏற்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கடவுள் இந்த உலகை ஆறே நாட்களில் படைத்தார், படைத்த களைப்புத் தீர ஏழாம் நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். டார்வின் சொல்லும் விஷயம் கடவுளை மறுத்ததோ இல்லையோ, இந்த பூமி, இதில் உள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் தேவன் ஆறே நாட்களில் உருவாக்கினார் என்ற கோட் பாடு அடிபட்டு சிதைந்து போனது. மத குருமார்கள் கோவில்களைக் கொடியவர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார்கள் என்று இயேசு கலகம் செய்ததாகப் புதிய ஏற்பாடு சொன்னதோடு சரி! யூத  குருமார்களுக்குப் பதிலாக, சிலுவையை பிராண்டாக வைத்து அதே கூடாரத்தை நவீனமயமாக்கினது இயேசுவின் பெயரால் பிற்பாடுதான்  நடந்தது. ஏசுவுக்கும் திருச்சபைக்கும் எப்போதுமே சம்பந்தம்  இருந்ததில்லை!

அவர்களுடைய வேதாகமம் சொல்வதை விட இந்த சிருஷ்டி பழமையானது, பல்வேறு படித்தரங்களைக் கொண்டதாக இருந்தது என்றபோது, டார்வினை முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் நிராகரிக்கிற அவசியம் ஆப்ரஹாமைட் மதங்களுக்கு மட்டுமே இருந்தது. அதுவும் கூட ஆரம்ப நிலையில் தான்! நிலவுடைமைச் சமுதாயமாக இருந்தபோது தான்! 
நிலவுடைமைச் சமுதாயத்தின் மிக அடிப்படையான கூறே, அதன் மரபு சார்ந்த நம்பிக்கைகள், பழமை வாதம் தான் என்பது சமூக விஞ்ஞானத்தை அறிந்தவர்களுக்கு ஆச்சரியமூட்டும் செய்தி ஒன்றுமல்ல!  மாற்றத்திற்குத் தயாராக இல்லாத, மாற்றத்தை எதிர்க்கும் தன்மை நிலவுடைமைச் சமுதாயத்தின் அடிப்படை இயல்பு.

வளர்ந்து வந்த வணிகத்தின் தேவை, மதத்தை இரண்டாகப் பிளந்து, தொழிற்புரட்சிக்கு வழி வகுத்தது. , விஞ்ஞானத்தை எள்ளிநகையாடிய திருச்சபை, விஞ்ஞானத்தை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு மாறியது. திருச்சபையின் முக்கியமான விசுவாசிகளில் நிறையப்பேர்  பெரும் விஞ்ஞானிகளாகவும், கண்டுபிடிப்பாளர்களாக இருந்ததும் மிக இயல்பாகவே நடந்தது. அறிவியல் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலேயே இது தெரிய வரும்.

வால்ஸ், அல்லது அவருக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர்கள், அல்லது இந்தக் கருத்தை இவர்களுக்கு இரவல் கொடுத்த ரிச்சர்ட் டாகின்ஸ்  மாதிரி இன்றைய நாத்திக வாதிகளாக இருந்தாலும் சரி, நான் ஏன் நாத்திகனானேன் என்று தன்னுடைய நாத்திகத் தன்மையைப் பிரகடனம் செய்த பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் போன்ற தத்துவ வாதிகளும் சரி, அவர்களுக்குத் தெரிந்த கிறித்தவப் போலித்தனத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு இறை மறுப்பைச்  செய்து கொண்டிருக்கிறார்கள்.  

இதை எல்லாம் ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய கடவுள் என்றொரு மாயை புத்தகத்தின் மீதான விவாதங்களை இந்தப் பக்கங்களில் பேசிய தருணங்களில் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.

ஒளி என்றால் என்ன? இருள் இல்லாத நிலையே ஒளி இந்த நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால், இதிலேயே உண்டு, இல்லை என்ற ஒரு இரட்டைத் தன்மை இருப்பதைப் பார்க்க முடியும். இந்த இரட்டைத் தன்மை, ஒன்றுக்கொன்று நேரெதிரான முடிவுகளை உண்டு எனவும், இல்லை எனவும்  சொல்வதற்கு இடம் கொடுப்பதாக இருப்பதைப் பார்க்கிறோமல்லவா! எப்படி வேண்டுமானாலும் புரட்டிச் சொல்வதற்கு உலக விஷயங்களில் நாம் பார்க்கிற இந்த இரட்டைத் தன்மை இடம் கொடுக்கிறது. அது ஒன்றினாலேயே, கடவுள் கோட்பாடும் உண்டு எனவும் இல்லை எனவும் ஒரே விஷயத்தினால் தீர்மானிக்கப் படுவதாக ஆகிவிடுகிற தன்மையை முதலில் புரிந்து கொண்டால் ஒழிய, செக்கு மாடுகள் மாதிரித் திரும்பத் திரும்பச்சுற்றி வந்த இடத்திலேயே தான்  சுற்றிக் கொண்டிருப்போம்.  இந்த விஷயத்தையும் கூட, மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பின் கீழ் ஒரு சுற்று பார்த்திருக்கிறோம்!

இப்போது வால்பையன் பேசும் பரிணாமம், அதை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்த்திருக்கிறார்கள் என்ற வாதத்திற்கு, சுருக்கமான பதிலாக....!


"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!"


முழுதாகப் பொருளோடு, பதம் பிரித்துத் தெரிந்து கொள்ள,
படிக்க இங்கே!

மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்! அதில் சிவபுராணத்தில் வரும் வரிகள் இவை! பரிணாம வளர்ச்சியை, இங்கே இந்திய ஞான மரபு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னாலேயே அறிந்திருந்தது, படைப்பின் பல்வேறு படிநிலைகள், படித்தரங்களை அறிந்திருந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். தசாவதாரம் என்று சொல்லப் படுவதிலேயும் கூட, இந்தப் பரிணாமம் படிப்படியாக உயர்வதைப் பார்க்க முடியும். டார்வின் என்பவர் பிறந்தது, இருநூறு வருடங்களுக்கு முன்னால் தான், அவர் தன்னுடைய உயிர்களின் தோற்றம் என்ற ஆராய்ச்சிக் குறிப்பை எழுதி நூற்றைம்பதே வருடங்கள் தான் ஆகின்றன என்பதை மனதில் வைத்துக் கொண்டு யோசித்தால் , கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் கூட, டார்வினின் பரிணாம இயலை அடிப்படையாக வைத்து, கடவுள் மறுப்பு அல்லது கடவுள் இருப்பை தீர்மானித்து விட முடியாது என்று தெரிந்து வைத்திருப்பாரே!

கட + உள் என்று எல்லாவற்றையும் கடந்து  உள்ளே பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றை டார்வினைப் பற்றிப் பேசி, புரிந்து கொள்ளவோ, தெரிந்து கொண்டு விடவோ முடியாது! வெறுமனே கும்மியடித்துப் பொழுது போக்கும் விஷயமும் இல்லை இது!

அப்புறமாக, நீண்ட நாட்களுக்கு முன்னாலேயே, ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகத்தை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பேசுவதற்குப் பதிலாக, தமிழிலேயே கிடைக்கும் எழுத்தாளர் சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா புத்தகத்தைப் படித்தாலேயே கொஞ்சம் அறிவியலோடு கூடிய  கேள்விகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்று எழுதியிருந்ததை மறுபடி நினைவு படுத்துகிறேன்!

அறிவியல் பேசுவதானாலும், ஆன்மிகம் பேசுவதானாலும், பொழுது போக்கு நாத்திகமாகப் பரிணாமத்தைத் தொட்டு, டார்வினைத் தொட்டுப் பேசினாலும், சுஜாதா எழுதிய புத்தகம் கொஞ்சம் சுவாரசியமான தொடக்கமாக இருக்கும்! வேறு நல்ல புத்தகம் உங்களுக்குத் தெரிந்து, நீங்கள் படித்துப் புரிந்துகொண்டதை சுருக்கமாகவோ, அல்லது புத்தகத்தைப் பற்றிய முழு விவரங்களோடு தெரிவித்தாலும் சரி, அதை வைத்துக் கொண்டே பேசலாம்!

என்ன வால்ஸ், தயாரா?!



டியர் மிஸ்டர் வாசகரே, அழைப்பு உங்களுக்கும் தான்!


பொழுதுபோக்க சில நல்ல விஷயங்கள்!


சுற்றுச் சூழலை நாசப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதிலாகட்டும், அமெரிக்க சண்டியர்களை தேக்கி நிறுத்துவதிலாகட்டும், சீனாவிடமிருந்து நாம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது! 

பொழுது போகவேண்டுமென்றால் நாத்திகம் பேசி, பார்ப்பனீயத்தைத் திட்டுவது ஒன்று தான் வழி என்று நினைக்கிறீர்களா? பொழுதுபோக்க நாத்திகம் பேசாமல், பார்ப்பனீயத்தைப் பேசியே வீணாய்ப் போகாமல், பயனுள்ள வழிகளும் நிறைய இருக்கிறதே, கொஞ்சம் பார்க்கலாமா?

சீனப் பூச்சாண்டி,சீனப் பெருமிதம், சீனா அறுபது, என்ற தலைப்புக்களிலும், தலைமைப் பண்பைப் பற்றிப் பேசும்போது, நேருவிடம் இல்லாத, அதே நேரம்  லால்பஹதூர் சாஸ்திரியிடம் இருந்த நிர்வாகத் திறனைப் பற்றியும் இங்கே பல பதிவுகளாகப் பார்த்திருக்கிறோம். சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதையும் கொஞ்சம் பேசியிருக்கிறோம். அப்படி என்ன சீனாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்திருந்து பார்த்தது தான் மிச்சம்!

சீனப் பூச்சாண்டி எப்படிப் பட்டது என்பதை இந்த ஒரு நிமிட வீடியோவில் இருந்து கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்! சும்மா வேடிக்கைக்கு!
கொஞ்சம் சீரியசாய் விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இங்கே ஒரு செய்தி.



இந்த வீடியோ கொஞ்சம் தமாஷாகச் சொன்னாலும், சீனர்கள் விடும் வெட்டி உதார், அவர்களுடைய நிஜமான வலிமையைப் போல பல்லாயிரம் மடங்கு அதிகமானது! வீடியோவின் கடைசியில் ஒருவர் செய்கிறார் பாருங்கள், நாமும் அதைச் செய்யத் தயாரானால், உதார் விடும் சண்டியர் என்ன ஆவார் என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே!

இங்கேயானால், சப்பைப் படங்களை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள்! நித்தி-ரஞ்சி லீலைகளை, சீடி கிடைக்குமானால் ஐநூறு முதல் எண்ணூறு ரூபாய் வரை கொடுத்துத் தெரிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்! இப்படி விவகாரம் சிக்காத தருணங்களில் பகுத்தறிவைப் பற்றி, பார்ப்பனீயத்தை எழுத்துக்களிலேயே குத்திக் குதறிஎடுத்து எழுதப்படும் பதிவுகளைப் படிக்கிறார்கள். பிடித்ததா, ஆதரவு ஓட்டுக் குத்துகிறார்கள்! பதில் சொல்லப் பிடிக்காத பதிவுகளுக்கு நெகடிவ் ஓட்டுக் குத்தி, அந்த மட்டிலாவது குத்த முடிந்ததே என்று திருப்திப் படுவதுடன் பதிவுலகக் கடமை, யோசனை, சிந்தனையின் விரிவு, பகுத்தறிவு எல்லாமே முடிந்தும் போய் விடுகிறது!

பக்திமான்களுக்கோ வேறு கவலை! நம்பிக்கையை நித்தி மாதிரி ஆசாமிகள்தான் தாங்கிப் பிடிக்கிற மாதிரிப் பின்னாலேயே திரிவார்கள்! மாட்டிக் கொண்டு  ரஞ்சிதாவோடு அல்லது வேறு கோடம்பாக்கம் எக்ஸ்ட்ராவோடு வீடியோ  வெளியே வந்து விட்டால், நம்பிக்கையைக் கெடுத்தவனைக் கைது செய், சொத்துக்களைப் பறிமுதல் செய் என்று கூச்சல், கோஷம், வேலை வெட்டி இல்லாத நேரங்களில், கேசும் போடுவார்கள்!

இப்படி அக்கப்போர்களில் கவனம் செலுத்துகிற அளவுக்கு, நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிற விஷயங்களையும்
கொஞ்சமாவது கவனிக்கிறோமா?

அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால்,  வெளிநாட்டு நிறுவனங்கள் நஷ்டஈடு தருவதைச் சுருக்க இந்திய அரசு வலிய வந்து ஒரு சட்ட முன்வரைவை மசோதாவாகத் தாக்கல் செய்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இழப்பீடு தருவதற்கு உச்சவரம்பு வைத்து, மிச்சத்தை இந்திய மக்களின் மீதே, அவர்களின் வரிப்பணத்தில் இருந்தே, தலையில் கட்டுகிற அயோக்கியத்தனத்தைப் பற்றிப் பதிவர்களோ, பதிவைப் படிக்க வருபவர்களோ கவலை கொள்ளக் காணோம்!
இந்த அசமந்தப் போக்கு நல்லது தானா?

இது  விஷயமாக, இங்கே ஒரு சின்னக்  கணக்கை, ஒரு வழக்கறிஞருடைய பார்வையில்  பார்க்க.

அமெரிக்க பகாசுர நிறுவனங்களிடம் இங்கே இந்திய அரசியல்வாதிகளும், இந்திய அரசும் மண்டியிட்டு, ஐயா நீங்கள் நீட்டிய இடத்தில் கச் சாத்துப் போட்டுவிட்டுக் கையையும் வாயையும் பொத்திக் கொண்டு நிற்கிறேன் ஐயா என்று நிற்கிற போது, சீனா எப்படி அமெரிக்க மிரட்டல்களை, அமெரிக்காவின் சண்டியர்த்தனத்தை வெற்றிகரமாக இதுவரை சமாளித்து வந்திருக்கிறது, சமாளித்து நிற்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதிலிருந்து கொஞ்சம் பாடம் கற்றுக் கொள்ளவும் வேண்டாமா? சீனா அறுபது, சீனப் பெருமிதம் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, சில பதிவுகளில் டெங் சியாவோ பிங் மாதிரி சீன அரசியல் தலைவர்களால் எப்படி நவீன சீனத்தை நிறுவ முடிந்தது என்பதை அங்கே உள்ள சுட்டிகளில் இருந்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும்!


ஜெயிப்பதற்கு முதலில் அரசியல் நிலை எடுப்பதில் உறுதி வேண்டும்! அதற்கு முதுகெலும்பு வேண்டும்! காங்கிரஸ் கட்சியிடம், காங்கிரஸ் தலைவர்களிடம் எப்போதுமே இவை இருந்ததில்லை!

சுருக்கமாகவோ, அல்லது நீளமாகவோ எப்படி இருந்தாலும், நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விஷயங்களைத் தொட்டு எழுதுவது என்பது இந்தப் பக்கங்களின் உள்ளடக்கமாக இருந்து வருகிறது. கொஞ்சம் துணுக்குச் செய்தி மாதிரியோ, அல்லது அந்தந்த நேரத்துத் தலைப்புச் செய்திகளைத் தொட்டு, நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கும், அல்லது நிர்ணயிக்கப் போகும் நிகழ்வுகளையும் தொட்டு எழுதுவது மட்டுமே எனக்குப் பிடித்தமான பணியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களுடைய கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்.

பொழுதுபோக்கு நாத்திகம், பொழுது போக்கப் பதிவுகள் என்று இருப்பவர்கள் அவர்கள் இயல்பிலேயே இருந்துவிட்டுப் போகட்டும்! 

அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன  சொல்கிறீர்கள்?



 

எப்படிப் பார்த்தால் என்ன தெரியும்? பொது புத்தி Vs பகுத்தறிவு !





இது நிச்சயமாக  இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை! ஆனால் சொல்ல வேண்டிய விஷயம் பொதுவாக இருக்கிறது, அவ்வளவு தான்!


இந்தக் குரங்குகளைப் பாருங்கள்! சில குரங்குகள் மேலே ஏறிய நிலையில்..........சில கீழே!



இரண்டு நிலைகளிலும் ஒரே பொருளைப் பார்க்க முடியுமா, தெரியுமா என்றால் நிச்சயமாக இல்லை!  மேலே ஏறிச் சென்ற குரங்கு பசுமை, கனிகள், சுற்றி உள்ள பரந்த உலகத்தைப் பார்க்க முடிகிறது! 

கீழ்நிலையில் உள்ளதற்கு, மேலே போன குரங்கின் இடுப்புக்குக் கீழே உள்ள  பகுதி  ஒன்று தான் தெரியும்! 

கீழ் நிலையில் நின்று விடும்போது அல்லது தேங்கிவிடும்போது, நம்பிக்கை ஜெபகோபுரங்கள் கட்டி வியாபாரமாகவும் மோசடியாகவும் உருமாற ஆரம்பிக்கிறது! இல்லை இல்லை என்று மறுத்துப் பேசிக் கொண்டே இருப்பது, பொழுதுபோக்கு நாத்திகமாகி விடுகிறது! அங்கேயும் கூட பகுத்தறிவு என்ற பிராண்டில் வியாபாரமும் விவகாரங்களும் ஆரம்பித்துவிடுகிறது.

கீழேயே தேங்கி  நின்றுவிடுவதில் நிகழ்வது இது ஒன்று மட்டும் தான்!


பொது புத்தி, நற்குடி, இப்படி வார்த்தைகள் விவரமில்லாத விவகாரங்களாகவும், ஒரு நிலையில் சகிக்க முடியாத விகாரங்களாகவும் வளர்ந்து கொண்டே போவதைத் தவிர இவற்றால் என்ன சாதிக்க முடிந்தது? என்ன சாதித்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்?


நாத்திகனாக இருப்பதோ, கடவுளை மறுப்பதோ தவறென்று நான் சொல்லவரவில்லை! ஆத்திகனாக இருப்பதும், கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்வதும் சரி என்று கூட சொல்லவரவில்லை! இந்த இரண்டு நேரெதிரான நிலைகள், தனி நபரைப் பொறுத்தது, அவரவர்க்கு வேண்டிய அனுபவத்திற்காக, அடுத்த கட்டத்திற்கு முன்னேறிப் போவதற்காக இருக்கும் படிநிலைகள்!

இரண்டு கரைகளுக்கு நடுவில் ஓடுகிற நதியைப் போல, வாழ்க்கை நேரெதிரான இரு தன்மைகளுக்கிடையில் ஓடிக் கொண்டிருப்பது! அந்த இரண்டு முரண்படுவதாக, முரணியல் தான் இயக்கம், அதுதான்  வாழ்க்கையைத் தீர்மானிப்பது போலத் தோன்றினாலும், அதையும் கடந்த நிலையில் நதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல, அதன் இலக்கை நோக்கிய பயணமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் முரண்பாடுகளைக் கண்டு எரிச்சல் கொள்ள மாட்டோம்! பயப்பட மாட்டோம்! வாக்குவாதம் செய்துகொண்டு தேங்கி நிற்க மாட்டோம்!

இதுவோ அதுவோ, எதுவாகினும் கடந்து போக வேண்டியதே! புரிந்துகொள்கிற தன்மை அங்கே வரும்போது,
ஒரு புதிய பார்வை கிடைப்பதும் தெரிய வரும்!





படித்ததும், படித்ததில் பிடித்ததும், பதிவர்களும்!


இது ஒரு மீள்பதிவுதான்!

தமிழ்ப் பதிவுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது, கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தவர்கள் திரு.டோண்டு ராகவனும்,கிழக்கு பத்ரியும். இரண்டுபேருமே, கொஞ்சம் வித்தியாசமான பாதையில் பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பவர்கள். தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தைப் பற்றி டோண்டு ராகவன் சார் எழுதி வந்ததில் போலி டோண்டு விவகாரம் குறித்தும் யோம் கிப்பூர் என்ற யூதப் பண்டிகையை, அவர் தன் சொந்த மனநிலைக்குத் தகுந்த மாதிரியும் எழுதிய அத்தனை பதிவுகளையும் படித்து வந்த நேரம்.

தனக்குச் சரி என்று படுவதை நேருக்கு நேர் சொல்கிற விதமும், யாராவது வசை பாடினால், போடா ஜாட்டான் என்று அலட்சியப்படுத்திவிட்டுத் தன்னுடைய வேலைகளைக் கவனிக்கப் போய்விடுகிற தன்மையும், போலித்தனம் இல்லாத ஒரு முகத்தைக் காட்டியது.

அதே மாதிரி எண்ணங்கள் என்ற தலைப்பில் கிழக்கு பத்ரி எழுதிவரும் பதிவுகளுமே கவனத்தை ஈர்த்தன.பத்ரியிடம்  அவருடைய தொழில்நுட்ப அறிவு, எல்லாவிஷயங்களையும் தொட்டு எழுதுவதில் இருக்கும் வல்லமை, அத்தனையையும் மீறின ஒரு செயற்கைத்தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாகவே எனக்குப் பட்டது. இந்த இருவருமே ஆரம்ப காலங்களில் இருந்தே தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்கள், தங்களுடைய ஜாதியினால் தமிழில்  இணையதள வன்முறைக்கு, வெறுப்பு உமிழும் ஆபாசக் கண்டனங்களுக்கு  ஆளானவர்கள் என்பது ஒருபக்கம். எதிர்கொண்டவிதம் இன்னொருபக்கம்.இப்படி இரண்டுவிதமான நேரெதிர் திசையில் பயணிக்கும் பதிவர்களைக் கொஞ்சம் ஆச்சரியத்தோடு படித்த்துக் கொண்டிருந்த தருணங்களில், எழுதிய பதிவு இது.

இப்போது நம்ம வால்பையன் மொக்கைப் பதிவுகளில் இருந்து அறிவியல்தனமாகவும் பதிவிட ஆரம்பித்து, கடவுள் இல்லை என்று நிரூபிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதற்குமே கூட, பதில் இங்கே இந்தப் பதிவில் ஒரு கோடி காட்டுவதாக இருக்கிறது.

பதிவர் வட்டத்தில் படித்ததும், பிடித்ததுமாக முந்தைய பதிவில் ஆரம்பித்து வைத்ததன் தொடர்ச்சியாக இதையும் எடுத்துக் கொள்ள முடியும்.

“All problems of existence are essentially problems of harmony”

-Sri Aurobindo


திரு டோண்டு ராகவன் அவர்களது வலைப் பதிவு- யோம் கிப்பூர் என்ற தலைப்பில்  எழுதிய பதிவுகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது, திரு பத்ரி சேஷாத்ரி எழுதிய இந்தப் பதிவு குறுக்கே புகுந்து சிந்தனையோட்டத்தில் ஒரு புது வரவாக இருந்தது.

இங்கே அதைப் படிக்கலாம்

இவனுடைய மூத்த சகோதரர்களில் இரண்டாமவர், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். இரவு தூங்கப் போவதற்கு முன்னால், அண்ணன் தம்பிகள் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் தான் தூங்கப் போவோம். ஒரு அண்ணன் என்று மட்டும் இல்லாமல், ஒரு ஆசானாகவும் இவனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்த நாட்கள் அவை. அப்படி ஒரு நாளில், ஒரு பிரெஞ்சு உயிரியல் பேராசிரியர் எழுதிய ஒரு ஆய்வுப் புத்தகம் ஒன்றைப் பற்றிப் பேச்சு வந்தது phénomène of man என்பது புத்தகத்தின் பெயர் என்பது நினைவுக்கு வருகிறது. இந்த நூலில், எப்படி உயிர் தோன்றியது என்பதை மிக ஆழமாகச் சொல்லியிருப்பார். ஒரு செல் என்பதாகத் தொடங்கி அது தன்னைத் தானே இரண்டாகப் பகுத்துக் கொள்வதில் இருந்து பரிணாம வளர்ச்சி எப்படி விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை ஒரு விஞ்ஞானப் பார்வையில் சொல்லியிருந்தாலும், புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு ஆன்மீகச் சிந்தனையோட்டமே வெளிப்படுவதாக இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

ஒரு விஞ்ஞானப் பார்வையில், உயிர் என்பது உருவானதே ஒரு விபத்து தான், எப்படி, நத்தைச்சிப்பிக்குள், ஏதோ ஒரு தூசு புகுந்துகொள்ள அதைச் சுற்றி அந்த நத்தை உருவாக்குவதே முத்து என்பது போல, இந்த பூமியில், ஏதோ ஒரு விபத்தாக அல்லது திட்டமிடாத, காரணமில்லாத, தற்செயலான ஒன்றாக உருவானதுதான் உயிர். இதைப் படைத்தவன் என்று ஒருவனும் இல்லை, இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று ஒரு வெற்றிடத்தைமுன்வைக்கிறது.

சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே மனிதன் இந்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். எத்தனையோ விடைகளைப் பார்த்தாயிற்று, ஆனாலும் இந்தக் கேள்விக்கு உண்மையான விடை இன்னமும் கிடைக்கவில்லை. கேள்விகள் கேள்விகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த உலகமும், உயிரும் படைக்கப் பட்டது ஒரு தற்செயலான விபத்து இல்லை. இவைகளைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். இந்தப் படைப்புகளுக்குள்ளும், வெளியிலுமாக பரந்து விரிந்திருக்கிறான். படைக்கப் பட்ட அனைத்திலும் அவனிருக்கிறான்; அது போலவே படைக்கப் பட்ட எல்லாமும் அவனது சரீரமாகவும் இருக்கின்றன. இதை உள்ளே உணர்ந்து ஆன்மீக நெறியாக, கால காலமாக மனிதனுக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது.

அறிவியல் ஒரு எல்லைக்குட்பட்ட அளவீடுகளை பயன் படுத்துகிறது,வெளிப்படையாக தெரிபவை மட்டுமே உண்மை என்று சொல்கிறது, நேற்று சரியாக இருந்த அளவீடுகள் இன்று ஏற்புடையதாக இல்லாமல் போய், மறுபடி வேறு ஒரு அளவீடுகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு புதிய முடிவைச் சொல்கிறது.

இந்த நேரத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னை, அனுபவங்களைப் பெறுவது தொடர்பாகச் சொன்ன ஒன்று இந்த விஷயத்தில் மிகப் பொருத்தமாக இருக்கும்.

"So it is a vast programme. The first steps are these: to collect oneself, try to be very quiet and see what is happening within, the relations between things, and what is happening inside, not just live only on the surface.

There. That's all?"


-The Mother, 

Collected Works of the Mother, Vol. 7, pp.77-80.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த இந்த பாசுரங்களைப் பாருங்களேன்.


இந்த வலைத்தளத்தில்  முனைவர் திரு நா.கண்ணன் இந்த பிரபஞ்சம் படைக்கப் பட்டது எப்படி, பரிணாம வளர்ச்சி இவற்றைப் பற்றி, ஆழ்வார்களுடைய அருளிசெயல்களில் இருந்து மிக அழ்காக விவரித்திருக்கிறார்.

ஆத்திகனோ, நாத்திகனோ, இரு தரப்புமே ரொம்பவும் அலட்டிக் கொள்வதில்லை. எதையும் ஏற்றுக் கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் கூடத் தங்களுடைய முயற்சி கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

யாராவது எதையாவது சொல்லி விட்டுப் போனதை, அப்படியே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தான் மிக சுலபமான வழியாக இருதரப்பினருக்குமே இருப்பது தான் விந்தையிலும் பெரிய விந்தை.

திரு M.P பண்டிட்அவர்கள் ஒரு இடத்தில், சிலர் பக்தி என்கிற பெயரில் சோம்பேறிகளாக இருப்பதைப் பற்றியும், ஸ்ரீ அரவிந்த அன்னை வேலை எதுவானாலும், அதுவே இந்த சரீரம் இறைவனுக்குச் செய்கிற மிகப் பெரிய வழிபாடு என்று சொல்லியிருப்பதையும் இன்றைய தியானத்திற்கு எடுத்துக்கொள்வோமா?

“As both Sri Aurobindo and Mother point out, repeatedly, most of us are an idle lot. Under the cover of devotional surrender, we want God to do everything for us. But God would appreciate at least a minimum enabling effort on our part. In the measure in which we apply ourselves in this direction, the real meaning of life becomes evident."

-Shri M.P.Pandit

“Let us work as we pray, for indeed work is the body's best prayer to the Divine”

-The Mother


****** 
தமிழ் வளர்த்த சுத்தானந்த பாரதிக்கு மரியாதை இல்லை! ஜெமினி கணேசனுக்குத் தபால் தலை!

இப்படி ஒரு நியாயமான மனக்குமுறலை நீண்ட நாட்களுக்கு முன்னால், என்னுடைய ஆதங்கத்தோடு சேர்த்தும் இந்தப் பக்கங்களில் பதிவு செய்திருந்தேன். காந்தியையே மறந்த தேசம்! ஏதோ ரூபாய் நோட்டில் படம் போட்டிருக்கிறார்கள் என்பதால் மட்டுமே முகமும் பெயரும் தெரிந்து வைத்திருக்கிற காலமாகிப் போனதே என்ற குமுறல் இருக்கத் தான் செய்கிறது.

கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய செய்திக் குறிப்புக்களை, அவரது பெண் வயிற்றுப் பெயரன் ஜெய.சந்திரசேகரன் மின்தமிழ் வலைக் குழுமத்தில் சிறிது சிறிதாகப் பகிர்ந்து கொண்டு வருகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப் பக்கங்களில் இன்று, சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய மூன்று ஒலிக் கோப்புக்கள் வலையேற்றம் கண்டுள்ளன.
கவியோகி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாடல்கள்:


-பகுதி 1: கவியோகியின் குரலில் விளக்கம்; கவியோகியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்திலும் தமிழிலும். இதனைக் கேட்க

-பகுதி 2: கவியோகி பாடல்கள்

-பகுதி 3: கவியோகி பாடல்கள்


இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக வழங்கியவர் கவியோகி அவர்களின் பேரன் திரு.சந்திரசேகர் அவர்கள்.

நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! சுத்தானந்தம் பெருகுது!
நல்ல தமிழ்ப் பாடல் தந்த கவியோகியின் வாழ்க்கையைக் கேட்கலாம்!
நல்லதமிழ் பாடல்களைப் பாடவும் கேட்கலாம்! சுத்தானந்தம் பெருகுது!


தமிழ் மரபு அறக்கட்டளைப் பக்கங்களில் இருந்து நன்றியுடன் எடுத்தாளப் பட்டது.



சண்டேன்னா மூணு! தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக இல்லை!

நம்பினால் நம்புங்கள்!



இங்கே இவ்வளவு விஷயம்  இருக்கிறது என்று வெவ்வேறு தலைப்புக்களைத் தொட்டு, குறியீட்டுச் சொற்களைக் குவியலாகப் பக்கத்திலேயே போட்டு வைத்திருந்தாலும், இங்கே படிக்க வந்தவர்களில் ஆறில் ஒருவர், புவனேஸ்வரியைத் தேடித்தான் வந்திருக்கிறார். இன்றைக்கும்கூடக்  குறைந்தது நான்கு அல்லது ஐந்து வருகைகள், புவனேஸ்வரிக்காகத்  தான்! திரட்டிகளின் பதிவுப்பட்டியலில் எண்பதாம் பக்கம், இருநூறாம் பக்கம் எங்கிருந்தாலும் தேடிக் கரெக்டாக வந்து விடுகிறார்கள்.

"இதில்.என்னை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்த ஒரு விஷயம் என்னவென்றால், நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்வதை விட, தன்னுடைய குடும்பம், தன்னுடைய பொருளாதாரச் சூழல் இவை எல்லாவற்றையும் விட நடிகைகளின் அந்தரங்கம் தான் தமிழக வாசகர்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்ததென்று, இரண்டாவது பதிவுக்கு ஒரே நாளில் சராசரி வருகையை விட பத்துப் பனிரண்டு மடங்கு வாசகர்களுடைய வருகை சொல்லாமல் சொன்னது. ரொம்ப சைவமாகவே தேர்ந்தெடுத்து, ஒன்றிரண்டு படங்களைப் போட்டபோதிலுமே கூட, அதையும் டவுன்லோட் செய்த மக்களைப் பார்த்தபோது "விதியே!விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?" என்று பாரதி மறுகின மாதிரி, மறுகி நிற்கவைத்த தருணங்கள்!"

இப்படி யதார்த்தத்தைப் புட்டு வைத்த பதிவில் கூட, பெண்ணீயம் பேசிக் கொண்டு ஒருவர், "நான் பெண்ணிய வாதி என்பதில்  பெருமை கொள்கிறேன்.அதனாலேயே COMMERCIAL SEX WORK ஐ சட்டபூர்வமாக்க  வேண்டுமென்பேன்"  என்று பின்னூட்டம் எழுதினார். சீதா என்பது அவர் தனக்கு வைத்துக் கொண்ட ப்ரொஃபைல் நேம்! என்ன ஒரு நகை முரண்!

"புவனேஸ்வரி என்று பதிவு போட்டால் ஹிட்ஸ் கூடக் கிடைக்கிறது. இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டுமா அல்லது என் தலைவிதியை நொந்துகொள்ள வேண்டுமா?"

என்று பின்னூட்டத்தில் பதில் எழுதிய அப்போதிலிருந்து  நான் என்னையே கேட்டுக் கொண்டிருக்கிற  கேள்விக்கு இன்னமும் விடை கிடைத்தபாடில்லை.!  திரு.கௌதமன், ஒருவர் மட்டும் தான் மிக வெளிப்படையாக இந்த வலைப்பக்கத்தின் தரம் இறங்கி விட்டதாக வருத்தப்பட்டிருந்தார். அதற்கு முன்னால், வழக்கமாக ரீடரில் படித்துக் கொண்டிருந்த  ஐந்தாறு சாத்வீகமான நண்பர்களை நான் இழந்து விட்டது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், வலைப்பக்கத்துக்கு வருபவர்கள், புதிய வாசகர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது என்பதும் அப்படி வருகிறவர்களில் ஆறு, சமயங்களில் எட்டுக்கு ஒருவர் தான் திரும்ப இந்தப்பக்கங்களைப் படிக்க வருகிறார் என்பதுமே புள்ளிவிவரங்கள் சொல்பவை.

இந்தப்பக்கங்கள் எவை குறித்தவையாக இருக்க வேண்டும் என்பதில் இன்னமும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. காரணம், என்ன வகையிலான விருப்பத் தேர்வுகளுடன் இருப்பவர்கள் இந்தப்பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பதில் சரியான புரிதல் இன்னமும் கிடைக்கவில்லை.
இது ஒரு பெரிய காரணம் இல்லை.

என்ன மாதிரியான வாசகர்கள் எனக்கு வேண்டும் என்பதைக் குறி வைத்து நான் எழுத ஆரம்பிக்கவில்லை, என்பதே முக்கியமான காரணமாக எனக்குப் படுகிறது. அடுத்து, பதிவுகளின் நீளம்!உண்மைத் தமிழனோடு போட்டி போட்டுக் கொண்டு மிகவும் நீளமான பதிவுகளை எழுதுவதாக ஏற்கெனெவே வால் பையனும், டம்பி மேவீயும் பின்னூட்டப்பெட்டியையே புகார்ப்பெட்டியாகவும் மாற்றி விட்டார்கள்!

படிக்க வருகிறவர்கள், தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தருணங்களில் இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஃபாலொயெர்ஸ் என்று இங்கே ஒரு நட்பு வட்டம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அவர்களுடைய எண்ண ஓட்டங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய பதிவுகளிலுமே கூட அதற்குச் சரியான க்ளூ கிடைக்கவில்லை!

நான்கு மாதங்களுக்கு முன்னால், ஒரு பதிவின் கடைசிப்பகுதி இந்த வார்த்தைகளோடு முடிந்திருந்தது: "அப்புறம், என்னை ஒரு ஒளிவட்டத்தோடு ஆன்மிகம் பற்றி எழுதுகிற ஆன்மீகப் பதிவராகக் கற்பனை செய்து கொண்டிருந்த ஒன்றிரண்டு பேருக்கு, முந்தைய நான்கு பதிவுகள், ஏமாற்றத்தை, அதிர்ச்சியை அளித்திருக்கலாம். அப்படி ஒரு ஒளிவட்டத்தோடு இருப்பவனாகக் கருதும் விதத்தில், ஒருமுத்திரை, branding, அற்புதங்களை விற்பவனாகத் தவறான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள்!

எனக்கென்று எந்த ஒரு அடையாளமும் இல்லை! Simply, I consent to be.....nothing!"

 

மறுபடியும் உங்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் எண்ண நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் மனம் விட்டுத் தான் சொல்லுங்களேன்! அனானி, அதர் ஆப்ஷன் கிடையாது. கூகிள் ஐடியில் வந்து தான் சொல்ல முடியும்.


oooOooo


இந்தியத் தொலைக் காட்சிகளில், முதன்முறையாக......

திரைக்கு வந்த சில மாதங்களே ஆன/சில மணி நேரங்களே  ஆன  புத்தம் புதுத் திரைப்படம்!

நமது XXX தொலைக் காட்சியில்! காணத் தவறாதீர்கள்!

இந்தக் கிரீச்சிடும் விளம்பரக் குரலை கேட்காதவர்கள் தமிழராகவே இருக்க முடியாது!அப்படி இருந்தாலும்,  நாங்க ஒத்துக்க மாட்டோம்!! அட்லீஸ்ட் தமிழ்நாட்டில் வசிப்பவராக, ஏன் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவராகக் கூட இருக்க முடியாது! ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் முன்னூறு தரமாவது கேட்டுக் கேட்டு நமக்கே சலித்துப்போய் இருக்கும்!

அதே மாதிரி, கடவுள் என்றொரு மாயை The God Delusion என்ற புத்தகத்தை எழுதிப் பரபரப்பாகப் பேசப்பட்ட ரிச்சர்ட் டாகின்ஸ் தனது பழைய வாதங்களையே புதிதாய்ச் சொல்கிற பிரச்சாரப் பீரங்கியோடு,  The Greatest Show On Earth   என்று இன்னொரு புதுப் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். புத்தக வெளி வந்து அடுத்த வாரம் முடிந்தால் இரண்டு மாதம் ஆகிறது. புவனேஸ்வரி  விவகாரம் தீப்பற்றிக்கொண்டு எரிந்ததால்,  இங்கே அதைப் பற்றிய விமரிசனப்   பதிவை ரிலீஸ் செய்வது தான் கொஞ்சம் லேட்! புத்தகம் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. சீக்கிரமே அனுப்பிவிடுவதாக நண்பர் ஒருவர் உறுதி அளித்திருக்கிறார்.


விரைவில் வந்து விடும். அதற்கு முன்னாள், டாகின்ஸ் தன்னுடைய புதிய புத்தகத்தைப் பற்றி எண்ண சொல்லிக் கொள்கிறார் என்பதை ஒரு மூன்று நிமிட முன்னோட்டமாக இங்கே பார்க்கலாம்!



புத்தகத் தலைப்பாவது புதிதா அல்லது ஒரிஜினலா  என்று பார்த்தால், அதுவும்  கூட ரொம்ப ரொம்பப் பழசு தான்! 1952 இல் செசில் பி டிமிலி என்ற இயக்குனர் ஒரு சர்க்கஸின் பின்னணியில் இதே தலைப்பில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். சர்கஸ் வசூலை அதிகரிப்பதற்காக, அதன் நிர்வாகி, சர்கஸ் கலைஞர்களுடைய உயிருக்கே உலை வைக்கிற மாதிரி சில வேலைகளைச் செய்கிறார். ட்ரபீஸ் கலைஞர்கள், கோமாளிகளை மையமாக வைத்துப் பல திருப்பங்களுடன் எடுக்கப்பட்ட படமாக இருந்தது என்று ஒரு குறிப்பு சொல்கிறது.

இந்த இயக்குனரைப்பற்றிய இன்னொரு சுவாரசியமான தகவல். பைபிள், பத்துக் கட்டளைகள் என்று பிரம்மாண்டமான மத சம்பந்தமான படங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே ஏன் என்று ஒருவர் கேட்டாராம்!

" இந்த விஷயம் இரண்டாயிரம் வருடங்களாக மார்க்கெட்டில் நிலைத்து நிற்கிறதே! அந்த ஒரு காரணம் போதாதா?" என்றாராம், செசில்  பி டிமிலி!

டாகின்ஸ் மாதிரி நாத்திகம் பேசுகிற நாத்திகர்கள் கூட அப்படித்தான்! ஏற்கெனவே சொல்லப்பட்டதை மறுத்து, அல்லது இழிவுபடுத்திப் பரபரப்பை உண்டாக்கும் அளவுக்குப் புதிதாக ஒரு நல்ல மாற்று எதையுமே கண்டு பிடித்துச் சொல்லிவிடுவதில்லை!  
 
மார்கெட்டில் எது அதிகமாக விலை போகிறதோ அதனுடன் மட்டும் போட்டி! இங்கே பிரபல பதிவர்கள் பதிவில் பின்னூட்டம் போட அலைந்து கொண்டிருந்தவர்கள் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அப்போது தானே, சீக்கிரமாகப் பரபரப்புச் செய்தியாகவும், பிரபலமாகவும் ஆகிவிட முடியும்!



டாகின்ஸ், மெய்ப்பொருள் காண்பதறிவு, The God Delusion என்ற குறியீட்டுச் சொற்களை வைத்துத் தேடிப்பாருங்கள்! ஏற்கெனெவே இது பற்றி எழுதிய பதிவுகளைப் படிக்கலாம்!

oooOooo

படமே கதை சொல்லுமே! கூடவே கொஞ்சம் வரலாறு!


நேற்று நேருவின் பிறந்தநாள். காங்கிரஸில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு கே.நட்வர்சிங் நேருவுக்கு ஒரு வித்தியாசமான அஞ்சலி செலுத்தியிருக்கிறார்!

நேரு மறைந்து நாற்பத்தைந்து ஆண்டுகளாகியுமே கூட வரலாறு அவருக்கு நீதி வழங்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் கூடப் பரவாயில்லை! நேருவின் சாதனைகளுக்கு மதிப்பெண்களும் வழங்கியிருக்கிறார். பிரதமாராக நூற்றுக்குத் தொண்ணூறு மார்க்! வெளியுறவுத் துறையையும் நேரு தன் வசமே வைத்திருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சராக நூற்றுக்கு அறுபது மார்க்காம்!

நேருவின் மிகப்பெரிய தோல்வியே, இந்த மாதிரி ஆசாமிகளெல்லாம் மார்க் போடுகிற அளவுக்கு இருந்தது  தான்! போதாக்குறைக்கு எம் ஒ மத்தாய்  என்று ஒரு மலையாளி, நேருவின் அந்தரங்க உதவியாளராக இருந்தார். 1978 இல் விகாஸ் பப்ளிகேஷன்ஸ், தில்லி வெளியீடாக ஒரு புத்தகத்தில் நேருவுடன் கூட இருந்த அனுபவங்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். புத்தகத்தில் எழுதியிருக்கிற அத்தனையையும் உண்மை என்று நம்ப முடியாது தான்!



இந்தப் படத்தைப் பாருங்கள்!  ஒரு படமே, சரித்திரத்தின் ஒரு அழுகிப்போன பக்கத்தைச் சொல்லி விடுகிறதே!


 இந்தப் படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கிப் படியுங்கள். நேருவிடம் கென்னெடி எரிச்சல் கொண்ட ஒரு  தருணமும் சொல்லப்பட்டிருக்கிறது.

இது வரலாறு அல்ல. வரலாற்றின் பக்கங்களைக் கரையான் அரித்துச் சிதிலமாக்கின தனி நபர் பலவீனங்கள்!

எவ்வளவு பெரிய கப்பலாக இருந்தால் தான் என்ன, சிறிய ஓட்டை கூட, கவனிக்காமல் போனால் கப்பலையே மூழ்கடித்துவிடும்! காங்கிரஸ் தன்னுடைய ஓட்டைகளைக் கவனிப்பதிலோ, சரி செய்து கொள்வதிலோ எப்போதுமே அக்கறை எடுத்துக் கொண்டதோ, அதற்கான சாமர்த்தியத்துடனோ இருந்ததே இல்லை!

காங்கிரஸ் மூழ்கிப்போவதில் எவருக்கும் அக்கறை இல்லை. காங்கிரசோடு, இந்த தேசமும் மூழ்கிப் போய்விட அனுமதிக்கப் போகிறோமா என்ன?


பொழுதுபோக்கு நாத்திகம் -ஒரு கேள்வியும் பதிலும்

 படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கிப் படிக்கலாம்!

ஸ்ரீதர் நாராயணனுடைய வலைப்பதிவில் சுவாரசியமான ஒரு விஷயத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படியே நகலெடுப்பதை விட, என்னுடைய வார்த்தைகளிலேயே, அதைச் சொல்கிறேனே!

ஒரு அரசன், ஒரு துறவி. இருவரும் ஒரு சாலையில் சந்தித்துக் கொள்கிறார்கள். அரசனுக்கு அந்தப் பயணம் புதிது. பாதையைப் பற்றி விசாரிப்பதற்காக,

"இந்த சாலை எங்கே போகிறது?" என்று கேட்கிறான்.

துறவி சொல்கிறார்:"சாலை எங்கேயும் போகவில்லை, நீ தான் சாலை வழியே போயாக வேண்டும்!"

உடனே ஆஹா!ஜென் கதை என்று துள்ளிக் குதிக்கவும் வேண்டாம், இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, உண்மையிலேயே எந்த ஒரு அரசினிடமாவது, ஒரு துறவி இப்படி விட்டேற்றியாகப் பதில் சொல்லி விடத் தான் முடியுமா என்று கேட்டுத் துளைக்கவும் வேண்டாம்!

எந்த ஒரு கேள்விக்கும், இரண்டு நேரெதிர் கோணங்களில் இருந்து பதிலைப் பெற முடியும் என்பதை மட்டுமே கதையில் இருந்து பெற வேண்டிய கருத்தே தவிர, ஆஹா! நல்ல கதை என்றோ, கதை சொல்லியே நம்மை பல நூற்றாண்டுகளாக முட்டாளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொதிக்கவோ வேண்டாம் என்பது தான் முதலும், முக்கியமானதுமான பாடம்!

கதைகள், ஒரு உருவகம், ஒரு உதாரணம் அவ்வளவுதான்!


உண்மைக்குக் கொஞ்சம் இப்போதிருப்பதைவிட இன்னம் அருகாமையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவியே தவிர, கதையே முழுமையானதும், உண்மையானதும் அல்ல! அப்படி எடுத்துக் கொள்ளும் போது தான் கற்பிக்கப்படாத விபரீதமான அர்த்தங்கள், அனர்த்தங்கள் என்று தொடர்கின்றன.

முந்தைய பதிவின் பின்னூட்டமாக, திரு கோவி கண்ணன் ஒரு நல்ல கேள்வியை எழுப்பியிருந்தார். வண்ணத்தில் இருப்பது அவரது வார்த்தைகளின் பகுதி.

/கதைகளின் தன்மை அப்படி இருக்கிறது. வேறென்ன சொல்ல முடியும். /

கஜேந்திர மோட்சம் கதையைத் தொட்டு, யானையைக் காப்பாற்ற, முதலையைக் கொன்றது என்ன நியாயம், யானையும் முதலையும் கடவுள் படைப்புத்தானே ?

எறும்பென்றாலும் யானை என்றாலும் உயிர்த்தன்மை என்பது இரண்டுக்கும் ஒன்றே தான்.

ஆன்மிகம் என்கிற புனிதபூச்சை மட்டும் பாருங்க கதையை கைவிட்டுவிடுங்கன்னு சொல்றிங்க சரியா ?


ஆத்திகன் கொஞ்சமாக நாத்திகம் பேசினாலும் அது ஆன்மிகம், நாத்திகன் தத்துவம் பேசினாலும் அது நாத்திகமா ?

இப்படி ஒரு கதைக்கு, கதையின் அடிப்படையை விட்டு விட்டு, வேறு வேறு திசைகளில் கேள்விகளோடு பயணிக்கச் செய்தால், ஊர் போய்ச் சேருவது எப்படி? ஆன்மீகப் பூச்சு, பூசி மெழுகுவது என்பது தேடலில் இருக்கும் எவருக்கும் தேவையே இல்லாத சுமை, இந்தச் சுமைகளை நான் தூக்கி வரவுமில்லை, எவர் தலையிலும் கட்டிவிட முயற்சிக்கவுமில்லை!

/கோழி என்று சொன்னால் கோழி தான் எல்லோரும் சாப்பிடுவதாச்சே...அதில் என்ன பாதக செயலை குறிப்பிட முடியும் என்கிற கேள்விக்கு பதிலாக அங்கே யானை./ 

இப்படி திரு கோவி கண்ணன் பதில் கேள்வி எழுப்பியிருப்பதை மட்டும் எடுத்துக் கொண்டு கோழி மட்டும் கடவுள் படைப்பில்லையா என்று கேட்கப் போனால், ஒரு வார்த்தைக்குச் சொன்னதைப் பிடித்துக் கொண்டு தொங்குகிற வரட்டுத் தனமாக, பிடிவாதமாக ஆகி விடும் இல்லையா?அது வேண்டாம்,  

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட ஒரு விஷயம், எவ்வளவு குறைபாடுகளோடு இருந்தாலும், அந்த உதாரணத்தில் இருக்கிற ஓட்டை உடைசல்களையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல், உதாரணத்தின் வழியாக என்ன சொல்லப் படுகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தான் ஸ்ரீ அரவிந்தருடைய வாக்கிலிருந்து எடுத்துச் சொல்லியிருந்தேன். தெளிவாகச் சொல்லவில்லை என்றால், குறை என்னுடையதே!

அதற்காக, ஆங்கில மூலத்தை மறுபடி படிக்கத் தருகிறேன்.

Because thou wert given at first imperfect conceptions about God, now thou ragest and deniest Him. Man, dost thou doubt thy teacher because he gave not thee the whole of knowledge at the beginning?

Study rather that imperfect truth and put it in its place, so that thou mayst pass on safely to the wider knowledge that is now opening before thee.”

Sri Aurobindo
Thoughts and Aphorisms, Aphorism 470

இந்தக் கதையை எப்படிப் பார்க்கிறோம், என்பதில் இருந்து தான் என்ன தேடுகிறோம் என்பதும், கதை சொல்ல வந்த உட்கருத்தைப் புரிந்து கொண்டோமா, இல்லை கவனம் சிதறி போகும் திசையை மறந்து போனோமா என்பதும் தெரிய வரும். இதை, இந்தக் கதையை வைத்தே ஏற்கெனெவே இந்த இடுகையில் சொன்னது தான். கேள்விதான் மறுபடி வந்திருக்கிறது.

சேற்றில் சிக்குண்டு முதலைவாய்ப்பட்ட யானையின் கதையைச் சொல்லும் போது, முதலைக்கும், யானைக்குமாய் நடந்த இழுபறிப் போராட்டம் ஆயிரம் வருடம் நடந்ததாகக் கதை சொல்லுவார்கள். யானை தன் பலத்தில் நம்பிக்கை வைத்துப் போராடிக் கொண்டிருந்த போது, இறைவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.என் செயலாவதொன்றுமில்லை என்று உணர்ந்த பிறகு, அதே யானை "ஆதிமூலமே, நாகணையாய், வந்து என் ஆரிடறை நீக்காய்" என்று முறையிட்ட போது, இறைவன், அரை குலைய நிலை குலைய, யானையைக் காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்தானாம்.! 

 
கதையாகச் சொன்ன விஷயத்திலும், ஒரு ஆன்மீக ரகசியம் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.


நான் எனது என்கிற நிலையில் இருந்து உயர்ந்தால் ஒழிய, நம்மைப் பீடித்திருக்கிற நோவுகளில், தளைகளில் இருந்து விடுபட வழியே இல்லை.”

கடவுளைப் பற்றி பேசும்போது அல்லது மறுக்கும்போது என் இப்படித் தடுமாறுகிறோம்? எவ்வளவு பேசியும் கூட, விஷயம் இன்னதென்றே பிடிபடாமல் இந்த ஒரு விவாதம் மட்டும் ரிலே ரேஸ் மாதிரித் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது?


நான் எனது என்ற தளைகளில் இருந்து விடுபட்டு, மனம் என்பது ஒரு தடையாக இல்லாத நிலை வரும்போதுதான் இறைநிலையை அடைய முடியும், புரிந்து கொள்ள முடியும், அனுபவிக்க முடியும்! மனமற்ற நிலை, மனமிறந்த நிலை, பேதங்களைக் கடந்த நிலை என்றெல்லாம் சொல்லப் படும் நிலையை எப்படி அறிந்து கொள்வது? அதற்குரிய பண்புகள் என்ன? ஸ்ரீ அரவிந்தர் தொடர்ந்து சொல்வதைக் கேட்போம்:

I knew my mind to be conquered when it admired the beauty of the hideous, yet felt perfectly why other men shrank back or hated."

Sri Aurobindo
Thoughts and Aphorisms – Aphorism 49

கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருப்பதாலேயே கடவுளை இல்லையென்றும் வெறுக்க வேண்டுமென்றும் மனிதர்கள் சுருங்கிப்போவதை அறியும் தருணத்திலேயே, [அப்படி நானும் ஆகாமல் கண்ணாமூச்சி விளையாட்டை ரசிக்கத் தெரிந்து கொண்டதனாலேயே] மனத்தை வெற்றி கொள்ளப்பட்டதை அறிந்து கொண்டேன்!

சுத்தி சுத்தி வந்தீக'ன்னு பாடற மாதிரி, உண்மையைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டே இருக்கிறோமே தவிர, உண்மையை நெருங்க முடியவில்லையே, ஏன்? காரணமென்ன?

ஸ்ரீ அரவிந்தர் சொல்வதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்:

"The whole truth about any object is a rounded and all-embracing globe which forever circles around, but never touches the one and only subject only object of knowledge, God."

Sri Aurobindo
Thoughts and Aphorisms – Aphorism 537