Showing posts with label மோகனத் தமிழ். Show all posts
Showing posts with label மோகனத் தமிழ். Show all posts

சண்டேன்னா மூணு! ஸ்ரீ அரவிந்தர்! அன்னை! மோகனத் தமிழ்!

டிசம்பர் மாதம் முதல்நாள் இன்று! புதுச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும், அங்கேயே தங்கியிருந்து  ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தைப் பயிலும் சாதகர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களுடைய மாதாந்தரத் தேவைகளை வழங்குகிற  நாளாக Prosperity Day என்று அழைக்கப்பட்டது. 1926 இல்  ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டது என்பதை நவம்பர் 24 தரிசனநாள் செய்தியிலேயே இப்படிப் பார்த்திருக்கிறோம்.

தங்களுடைய சகலத்தையும் ஸ்ரீ அரவிந்தரிடத்தில் ஒப்படைத்துவிட்டு அவருடனேயே தங்கியிருந்து அவரது யோகத்தைப் பயில முன்வந்தவர்களே சாதகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுடைய மாதாந்திரத் தேவைகள், சோப்பு, எண்ணெய், முதலான நடைமுறைத் தேவைகளை ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களுக்கு வழங்குகிற நாளாக மாதத்தின் முதல் நாள் இருந்தது.       



அது தவிர ஸ்ரீ அரவிந்தர் தனது தபசு, யோகத்தில் கண்டுணர்ந்த  பொன்னொளி (Supramental Light)  இந்தப் பூமியில் தங்குவதற்காக தன்னுடலையே அர்ப்பணித்து மகா சமாதிக்கு ஏகிய நாளும் டிசம்பர் மாதத்தில் தான் (டிசம்பர் 5) வருகிறது. 24000 வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் ஆங்கிலத்தில் இயற்றிய சாவித்ரி மஹா காவியம், அவருடைய தவத்தில் கண்டுணர்ந்த அனுபவங்களை அதிமானச ஒளி / அருட்பெருஞ்சோதியாக மண்ணில் இறங்கி வரக் காத்திருப்பதை விவரிக்கிறது. 

மஹாபாரதத்தில், போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர். இந்தக் கதை, வேதங்களின் திரண்ட உட்பொருளை, சிருஷ்டியின் ரகசியத்தை ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார். அதன் விளைவாக, சாவித்திரி மகாகாவியம் சற்றேறக் குறைய 24000 வரிகளில்  உருவானது. ஸ்ரீ அரவிந்தர் , 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும்,யோக சாதனையாகவும் ஆனது. ஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரி" ஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது. 1930 களில் "சாவித்திரி- ஒரு கதையும் அதன் தரிசனமும் " என்று வெளியானது,தொடர்ந்து மெருகேறி, SAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

சாவித்ரியை படிப்பதே பலவிதமான அனுபவங்களைத் தர வல்லது என்பதை முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே எழுதியிருந்ததை வாசிக்கலாம்.

ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீ அரவிந்த அன்னையையும் வணங்குகிறேன்! திருவடிகளை சரண் அடைகிறேன் .
  ******

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுத மாட்டேனென்கிற தன்னுடைய பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் முகநூலில் மோகனத்தமிழைப் பொழிய ஆரம்பித்திருக்கிறார் .


நமது குருநாதர்
"ஐயய்ய....என்னிடம் அதெல்லாம் சொல்லாதீர்கள்...அதெல்லாம் நான் ஒருகாலும் செய்ய மாட்டேன்" என்றார் நரேன் என்ற இளைஞர்.
"காலம் வரும் பொழுது நீயே என்னதான் முடியாது என்று மறுத்தாலும் உன் எலும்புகள் தாமே போதிக்கத் தொடங்கிவிடும்." என்று இளநகை தவழ பதிலளித்தார் குரு ஸ்ரீராமகிருஷ்ணர்.
காலமும் கனிந்தது. அதுவரை வாழ்வின் பண்பாடாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே பெரும்பாலும் உள்கலந்து விரவியிருந்த ஹிந்து மதம் என்ற திட்ட வட்டமான வடிவம் ஓர் இந்திய இளைஞனின் சுய அனுபவத்தில் கனிந்து ஆங்கில மொழியில் அகில உலகும் மாணாக்கர்களாக அமர்ந்து கேட்க, சிகாகோ சபையில் வெளிப்பட்டது.
ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.
ஹிந்து மதத்தின் உண்மையான பெரும் சிறப்புகள் எல்லாம் வெறுமனே புராணங்களாகவும், பொழுது போவதற்காக மாலை வேளையில் அமர்ந்து சொல்லப்படும் கதைகளாகவும் போய்விடாமல், அந்த அத்தனை சிறப்புகளையும், காலம் காலமாக வந்த ஹிந்து மதப் பெருமைகள் அனைத்தையும் ஒருங்கே தன் உன்னத வாழ்வால் மெய்ப்பித்துக் காட்டிய தக்ஷிணேஸ்வரத்து முனிபுங்கவன் பேசினான்.
"குழந்தாய்! நான் சொன்னேன் என்று எதையும் நம்பிவிடாதே! வியாபாரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போல், நான் கூறுவனவற்றை அறிவால் நன்கு ஆராய்ந்து சோதனையிட்டுப் பின் உடன்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்' என்று கூறிய வினோதமான குருநாதன் பேசினான்.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை உள்ளபடி எடுத்துக்காட்ட ஒரு வாழ்வு பூண்டதைப் போன்று வந்த பரமஹம்ஸரிடம் தான் கண்ட ஹிந்து மதத்தைப் பற்றிய நேரடிக் காட்சிக்குப் பின், காலகதியில் என்னென்ன தீங்குகளும், நோய்களும், சமுதாயக் கொடுமைகளும் ஹிந்து மதத்தில் புகுந்து நிலவுகின்றன என்பதை நேரடியாகக் காணவேண்டியோ என்னவோ பாரத தேசம் அனைத்தும் பரிவ்ராஜகனாக அலைந்த பாரதத் துறவி பேசினான்.
ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் மூலம் பெற்ற கல்வி;
ஸ்ரீராமகிருஷ்ணரின் உதாரண வாழ்வால் பெற்ற உணர்வு ரீதியான கல்வி;
பாரத தேசத்தை இண்டு இடுக்கெல்லாம் நேரடியாகக் கண்டு தான் பெற்ற அனுபவக் கல்வி --
ஆகிய இந்த மூன்று கல்விகளும் சேர்ந்த வெளிப்பாடுதான் விவேகாநந்தர் என்கிறார் சகோதரி நிவேதிதா.
சிகாகோ சொற்பொழிவுகள் என்னும் சிறு நூலின் பெரும் விளக்க உரையாகத்தான் விரிந்து கிடக்கின்றன ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தின் மொத்த நூல் உலகமே. விவேகாநந்தர் தன்னியல்பாகப் பேசிச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நெடிய கல்வியும், ஆழ்ந்த அனுபவமும் இருப்பதை நாளுக்கு நாள் வளரும் அதிசய விளக்கமாய் வியந்து கொண்டிருக்கிறேன். நான் விவேகாநந்தரை வெறுமனே வழிபாடு செய்பவன் அல்லன். அவர் கூறுவனவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் எனக்கு இல்லை. ஆனால் ஹிந்து மத சம்பிரதாயங்களின் மூல நூல்கள், ஹிந்து மத வரலாறு இவற்றில் ஆழ்ந்து போகப்போக எத்தனை பெரிய வேலை! எப்படி அந்த மனிதனால் செய்ய முடிந்தது! -- இந்தப் புதிருக்கு என்னிடம் விடையில்லை.
இப்படி ஒரு மனிதன் எழுவதற்கான முன் காரணங்கள் அன்றைய சமுதாயத்திலும் இருந்திருக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவ்வாறே. அவர் தோன்றுவதற்கான கருத்தியல் காரணங்கள் எதுவும் அன்று இல்லை. அப்படி இருந்தால் சொல்லிவிடலாம் -- இந்தக் காரணங்களால் இவர்களது தோற்றம் பொருத்தம் என்று.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார்.
ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்.
ஜூலை 4, 1907ல் நான்கு தொகுதிகளாக விவேகாநந்தரின் நூல்கள் அன்று கிடைத்தவை வரையில் வந்த போது, அதற்கு முன்னுரை எழுதியவர் சகோதரி நிவேதிதா அவர்கள். அதில் அவர்கள் கூறுவது :
In the ... volumes of the works of the Swami Vivekananda which are to compose the present edition, we have what is not only a gospel to the world at large, but also to its own children, the Charter of the Hindu Faith.
What Hinduism needed, amidst the general disintegration of the modern era, was a rock where she could lie at anchor, an authoritative utterance in which she might recognise her self. And this was given to her, in these words and writings of the Swami Vivekananda. For the first time in history, as has been said elsewhere, Hinduism itself forms here the subject of generalisation of a Hindu mind of the highest order. For ages to come the Hindu man who would verify, the Hindu mother who would teach her children, what was the faith of their ancestors will turn to the pages of these books for assurance and light. Long after the English language has disappeared from India, the gift that has here been made, through that language, to the world, will remain and bear its fruit in East and West alike.
What Hinduism had needed, was the organising and consolidating of its own idea. What the world had needed was a faith that had no fear of truth. Both these are found here.
சுவாமி விவேகாநந்தரின் முழுநூல் தொகுதியும் தமக்கு சௌகரியமான எந்த மொழியிலோ, ஒவ்வொரு ஹிந்துவின், ஆணோ, பெண்ணோ, இளம்வயதோ, முதியவரோ, ஒவ்வொருவரின் படிப்பிலும், ஆழ்ந்த சிந்தனையிலும் திகழும் காலத்தைக் காலமே அருள்வாயாக!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! ஸ்ரீரங்கம் மோகனரங்கனின் மோகனத்தமிழ் தங்கு தடையின்றிப் பெருகிவர அருள் செய்வாய்! 

திருத்தாளச் சதி! இது கவிதை நேரம்!




ராபர்ட் ஃபிராஸ்டின் ஒரு கவிதையை இங்கே அனுபவித்தது நினைவுக்கு வருகிறதா?
Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

என்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டை வீட்டுக் காரனை உருவாக்கும்!

மேற்கத்தியக் கவிஞன் இந்தக் கவிதையில் எழுப்புகிற கேள்விக்குத் தெளிவான பதில் கவிதையிலும் இல்லை, அதை விமரிசனம் செய்தவர்களுடைய  விமரிசனங்களிலும் கிடைப்பதில்லை என்பதை ஏற்கெனெவே இந்தப்பதிவில் பார்த்திருக்கிறோம். ஆனால், கீழைய மரபுகளில் ஊறியவர்களுக்கு இந்தக் கேள்விக்கு  பதில் காண்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. கேள்வியைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டு, அதற்கு மிகவும் தெளிவான விடையைக் காட்டுகிற லாவகத்தை, ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கனுடைய கவிதை ஒன்றை தமிழ் வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் மீள்வாசிப்பு செய்து கொண்டிருந்த தருணத்தில் சுகமாக அனுபவித்தேன் என்று தான் சொல்லவேண்டும்!  

இங்கே அந்தக் கவிதை ஜாலம்....!


ஒரு காலும் தாண்டிவிட முடியாத
சுவர்களின் பின்னே நின்றபடிதான்
ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம்
கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள்
அல்லது கண்களைத் தடை செய்யாது
வெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர்.

மிகமிக நேரிடையான சுருக்கு வழியும்
சுற்றிவளைத்த சுழல்வழி என
சார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்
இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும்
இணையும் கைகளுக்கு நடுவிலும்
அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர்.
சுவர் சமயத்தில் பல உடுப்புகளும்
வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு.
 
ஆண் பெண் கிழவர் குழந்தை
அந்நியள், நம்மவள், எவனோ, இவளோ
இவரோ, அதுவோ,
அவர்களோ, இவர்களோ, உவர்களோ
எனப்பல எனப்பல எனப்பல
நினைப்பினில், நடப்பினில்,
நனவினில் நடைமுறை நிஜத்தினில்
கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில்
தடைச்சுவர் கண் மறைக்காமல்
எண் மறைக்காமல்
எங்கோ எப்படியோ எவ்விதமோ
தட்டுப்படும் தடைச்சுவர்
தோன்றாமல் தோன்றி.
நீயும் நானும் வேறிலாது நிற்க
 
நயந்தாலும் நளினமான விலகல்
பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவு
அயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம்
கடக்க முனைந்த கால்
தூரப்பட்டுப் பின்னடையும் மாயம்
இத்தனைக்கும் நீயும் நானும்
பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம்.
 
இன்னும் சொல்லப் போனால்
என்னுள் நீயும் உன்னுள் நானும்
உயிர்த்த கணங்களும் உண்டுதானே!
ஆயினும் தொலைவு இடையிட்ட
பாடுடைப் போலிகளோ நாம்?
போயினும் வருவோம்
என்ற நம்பிக்கையில்
விலகிச் சேயிடைப்படா நிற்கும்
ஓருயிரின் பல பிம்பங்களாய்
ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த்
தனித்தனி உயிர்களின்
பிம்பங்களே மெய்மைகளாய்
அம்புவியில் வளைய வரும்
நெருக்க விழைவின் முறிவுகளாய்
உருவு சுமந்த அந்நியங்களாய்
உருக்கரந்த அந்நியோந்நியமாய்
வெருவரத் திரிதரும்
உயிர்க்குலக் கரவறப்
பயிலொளி அன்பென நின்றதும்
எதுவென அறியா முனைப்பினில்
கதுவிடும் மோனம் முகிழ்த்திடும்
சதுரது சத்தியம் என்றிடும்
குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும்
யதுகுல முரளியின் பண்களோ?

ஆயினும் ……….

உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன்
என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன்
நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன்
நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன்
நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்று
மற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன்
சுற்றமாய்க் கலந்து கலக்க
உற்றதும் உறுவதுமாய்
நிலவிடும் ஒரு பெரும் விழைவு
அகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம்
அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்?


அத்வைத நிலையிலும் தீருமோ
இந்த அணுகலால் விலகும் மாயமும்
விலகிட அணுகிடும் விழைவும்?

******

கவிதையின் வீச்சு அங்கேயே நின்றுவிடுவதில்லை! ஒரு கவிஞனுக்கு எல்லைகளே இல்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டு அது இது என்று எங்கெங்கோ தொட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது!

திருஞான சம்பந்தர் திருத்தாளச்  சதி என்ற சந்தத்தில் ஒரு பதிகம் பாடியிருக்கிறார், அவருக்குப் பின் வேறெவரும் அந்த சந்தத்தில் பாடியதில்லை என்ற தகவலைக் கேட்டதும் தானே திருவரங்கர் திருத்தாளச்சதி என்று ஒரு பதிகம் பாடியிருப்பதை இங்கே  பகிர்ந்து கொண்டிருக்கிறார்

பெருகி வரும் மோகனத்தமிழுக்கு வந்தனம் செய்வோம்!

அரங்கன் இந்த வலைப்பக்கங்களில் எழுதிவரும் "ஹிந்துமதம்: ஒரு அறிமுகத்தெளிவு" தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் தானே! 








>
பதிவு பிடித்திருந்தால் பக்கத்தில் தெரியும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

சண்டேன்னா மூணு! படித்ததும் பிடித்ததும்!ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்!


" இத்தனை எழுதித்தள்ளிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை. எழுதாவிட்டால் அத்தனை நூல்களையும் நான் உள்ளே அல்லவா வைத்திருக்க வேண்டும்!"

ஒருஎழுத்தாளர் குப்பை கொட்டுவதைப் பற்றி இப்படிப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தைகளைப்  படித்துவிட்டு, குப்பை  சுமக்கிறவர்கள் மேல் பரிதாபம் மேலிட்டு கவிதை மாதிரி ஒன்றைக் கிறுக்கித் தள்ளிய பழைய பதிவு இது!

இங்கே குப்பை கொட்டாதீர் என்று ஒவ்வொருவரும் கதறிக் கொண்டே, அடுத்தவரிடத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம்!அடுத்தவர் போடுவது குப்பை என்று உறைக்கிற அளவுக்கு, தான் போடுவதும் அதுதான் என்பது இங்கே எவருக்கும் புரிவதே இல்லை!

குப்பைகளைப் பற்றி, குப்பை கொட்டுவதைப் பற்றி ஸ்ரீரங்கம் வி.மோகன ரங்கன் தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் எழுதியிருந்த கவிதை ஒன்று இன்றைக்குக் கண்ணில் பட்டது! மனிதனைக் குப்பை கொட்டும் பிராணி என்றே உருவகப்படுத்தியிருந்தவிதம் நெற்றியில் அறைகிற மாதிரி...! 


முழுக் கவிதையும் இங்கே!


ரோடு பொறுக்குபவனின் ஸாலிலக்கி 

அப்பப்பா! எவ்வளவு குப்பைகள்! 
ஜனங்கள் சர்வ சாதாரணமாகக் 
குப்பை போடுகின்றனர். 

வேண்டாமா தூர எறி. 
விழுந்துடுத்தா விட்டுத்தள்ளு. 

என்ன வேகம்! என்ன அவசரம்! 

கண்ணாடி வளையல் கைக்குட்டை 
பொம்மை பர்ஸ் உதட்டுச் சாயம் 
அட்டைப் பெட்டி ப்ளாஸ்டிக் கூடை 
மருதாணி பாக்கட்டு மண்ணடைந்த ஊதல் 
கால் கொலுசு கலர் பென்சில் 
செய்தித்தாள் எண்ணைக் குப்பி 

காலில் மிதிபட 
கால்களுக்கிடையில் உருள்பட 
நாய் மோந்து நக்கிக் கால்தூக்கி 
கல்லடியில் நாய் குதிக்க 
உருண்டு, காலில் மிதிபட்டு, உதைபட்டு.. 

பொருள்:..பொருள்..பொருள்.. 
உருக்குலைந்து உருமாறி உருவிழந்து 

உரு இன்னும் இருந்து 
உலக நடை நெடுக மக்களைப் போலவே .. 

மூட்டை கனக்கிறது. 

மீண்டும் ஒருமுறை வரவேண்டும் 

பென்சில் பால்பாயிண்ட் பேனா 
கைகடியாரம் விழுந்தது கூட தெரியாம ஓட்டம்  

காலில் மிதிபட்டு உருள்பட்டு நசுங்கி 
அப்பப்பா! 
மனுசன் ஒரு குப்பை போடும் பிராணி 

அடடா! இது என்ன டிபன் மூட்டை 
யார் சாப்பிடப் போகிறார்கள்? 
காலில் மிதிபட்டு... 

ராத்திரி பிடித்த எலியை அடித்து 
தெருவில் தூக்கி எறிந்ததை 
காக்கை அவசரத்தில் கொத்தியது போக 
நாய் மோந்து பூனை பார்த்து 
காலில் மிதிபட்டு நசுங்கி..... 

மனிதன் ஒரு குப்பை போடும் பிராணி. 

அட! இது என்ன? அதிசயமாய் இருக்கிறது! 
இதுவரையில் காணாத பொருள்! 
யார் இதை இங்கே போட்டது? 
என்ன வினோதம்! 
யார் காலிலும் மிதிபடாமல் 
நாய் மோக்காமல், காக்கை கொத்தாமல் 
உரு மாறாமல் மழுங்காமல் 
என்ன இது? அப்பா! யாருடையது? 

உங்களுதா?..... இல்ல 
உங்களுதா...... இல்லப்பா ஆளைவிடு. 

சார்..நீங்கள்....நகருய்யா...வழியில 
நின்னுகிட்டு 

ஐயா இது உங்களுடையதா? 


ஏனய்யா கிண்டலா 

சரி வாங்க அவன்கிட்ட என்ன பேச்சு? 

யாருதும் இல்லயா? சரி நமக்கென்ன? 
தூக்கி எறிவோம்..ஏன்? மூட்டையில போடுவோம் ...வேணாம் .. 
வினோதமா இருக்கே! 

நாமே வச்சுக்குவோம் 
வலது கால் சராய் பை ஓட்டை 
இடது பையில போட்டுக்குவோம் 
என்ன இது! ஆச்சரியமா இருக்கு? 


சரி நம்ம வேலை...பொறுக்கு...பொறுக்கு 
பொறுக்கு....போய் போட்டுவிட்டு.. 
இன்னொரு நடை?... 

இல்ல இன்னிக்கு இதோடு போதும் 
காலம் முழுக்க பொறுக்கினாலும் 
அள்ளி முடியாது மனிதன் போட்ற குப்பை 

சாமீ!... 

யாரு? என்னய்யா? யாரைப் பார்த்து 
சாமீங்கற? தள்ளு குப்பையை எடுக்கணும்.. 


ஆஹா முகத்தைப் பாருங்கள்.. 
இப்படி ஒரு முகம் இதுவரையில் கண்டதில்ல 


யோவ்! என்ன கிண்டலா? 
வழியப் பார்த்துக்கிட்டுப் போ 
சும்மா...ரோடு பொறுக்கறவன பார்த்து 
வெட்டிப் பேச்சு வேணாம் 

என்ன தத்துவம்! என்ன உபதேசம்! 

யோவ் இது என்னய்யா வம்பா போச்சு 

யாரைக் கும்பிட்றானுக? 
பின்னால யாராவது வாரானா? 
என்னடா இது எல்லாம் கிறுக்கனுகளா? 
என்னாத்துக்கு இந்தக் கவல? 
நடையைக் கட்டு...குப்பை..குப்பை 
என்ன குப்பை போட்றானுக மனுசனுக! 

அப்பாடி! தூக்கி வை ... 
மூட்டைய அந்த ஓரத்துல... 
ஒரு டீ அடிச்சிட்டு பீடி வலிப்பமா? 
டீ கிடக்கட்டும்...இப்படி..சாய்ஞ்சுக்கினு 

உட்கார்ந்து...ஒரு தம்... 

தோ ஏரோப்ளேன் போறான் 
ஆமா அங்கன போயி 
இவனுக குப்ப போடுவானுகளே 
என்ன பண்ணுவானுக? 

ஏகப்பட்ட நட்சத்திரம்! 
எல்லாம் எவன் போட்ட குப்பையோ? 

பொறுக்காம கெடக்குது... 
மொத்தமா அள்ளிப் ..போடுவானுக 
போல... ஒரு நாளைக்கு 

இந்தப் பொருள் உன்னுதான்னு கேட்டா 
அந்த ஆளு அப்படி கத்துறான்! 
அந்த அம்மாவும் சொல்லுது.... 
அவங்கிட்ட என்ன பேச்சு?.... 

அட மறந்துட்டேன் இன்னும் இருக்கா? 
என்னாப் பொருளு அதிசயம்மா? 

பொறுமையா பிரிச்சா என்னன்னு தெரியுது 

என்னது.... அட....


மன அமைதி 

அதான் அந்த கும்பிடு கும்பிட்டானுகளா? 
இதப்பார்ரா...தங்கிட்ட இருக்கறத குப்பைல போட்டு...மத்தவன்ட்ட இருக்கறத கும்பிட்டுத் திரியுறானுக.... 


மனிசன் குப்ப போடும் பிராணி... !

பீடி இன்னிக்கு நல்லாவே இருக்கு.....!!



ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கனுடைய மோகனத்தமிழைப் பற்றி இந்தப்பக்கங்களில் முன்னமேயே பார்த்திருக்கிறோம். குறிப்பாக, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் அவர் "எது பக்தி" என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்த இழையில் அப்படியே அகம் கரைந்து உருகி நின்ற தருணங்களை இங்கே   பார்த்திருக்கிறோம். இப்போது எது பக்தி புத்தகவடிவிலும் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தத் தலைப்பில் எழுதிய முதல் இருபத்தொரு பத்திகளையும், வாசகர் சந்தேகங்களுக்கு விடையளித்த ஆறேழு பதிவுகளையும் இங்கே வரிசையாகப் படிக்கலாம்.

அதன்பின்னர் வந்த பகுதிகள்  ஒன்று, இரண்டு, மூன்று

 
மோகன ரங்கனும் மின்தமிழ் கண்ணனும் 
நேற்று முன்தினம் வரை வெளியிட்ட பகுதிகள் அத்தனைக்கும் தொடுப்பு இங்கே இருக்கிறது. அடுத்து வெளிவருவதையும் இங்கே பார்க்கலாம். மோகனத்தமிழில் கொஞ்சம் தோய்ந்துதான் பாருங்களேன்! பக்தி என்பதை இத்தனை சுவையாக, தெளிவாக பி ஸ்ரீ அவர்களுக்குப் பிறகு வேறெவரும் எழுதி நான் படித்ததில்லை.

அந்தவகையில், திரு மோகனரங்கனின் மோகனத்தமிழ் படித்ததும் பிடித்ததுமாக!





ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் "அறிவும் நம்பிக்கையும்"!



இணையத்திலேயே ஆர்டர் செய்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்த பிறகு,சமீபகாலமாக புத்தக் கடைகளுக்குச் சென்ற புத்தகம் வாங்குகிற வழக்கம், அநேகமாகக் காணாமலேயே போய்விட்டது. 

என்னதான் இணையத்தில் சுளுவாக வாங்க முடிந்தாலும், நேரடியாகப் புத்தகக் கடைக்குச் சென்று, நூலை கொஞ்சம் புரட்டிப் பார்த்து புத்தம்புதிய காகித மணம், அச்சு நேர்த்தி, உள்ளடக்கம் இவற்றை அவதானித்து வாங்குகிற சுகத்துக்கு இணையாகுமா?

இணையத்தில் தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதில் உள்ள பெரிய சிக்கல். நாம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்குகிறோமா, அல்லது குப்பையையா என்று தெரிந்து கொள்ள முடியாது.புத்தகத்தைப் பற்றி, புத்தக ஆசிரியரைப் பற்றிப் பதிப்பகத்தாரும் சரியான தகவல்களைத்தருவதில்லை. புத்தக விமரிசனங்கள் என்பது தமிழைப் பொறுத்தவரை இன்னமும் சரியாக வளராத ஒரு துறைதான்.ஆக, இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் விமரிசனங்களை வைத்து மட்டும் ஒரு புத்தகத்தைப் பற்றி எடைபோட முடியாது என்பது தான்!

அந்தவகையில் புத்தகக் கடையில் நேரே சென்று, புத்தகங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்து, அதை எழுதியவரின் நடை, சொல்லப்படுகிற விஷயம், சொல்லப்படும் விதம் எல்லாவற்றையும் அவதானிப்பது மிகவும் அவசியமாகிறது.

சமீபத்தில் மதுரை, சர்வோதய இலக்கியப் பண்ணைக்குச் சென்று, ஒரு சிறிய போராட்டத்தை  நடத்திய பிறகு வாங்கிய நூல்களில் ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கன் எழுதிய இந்தப் புத்தகமும் ஒன்று! இந்தப்பக்கங்களில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் மோகனத்தமிழை பலமுறை மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துக்கு நன்றி சொல்லியும், பலமுறை சொல்லாமலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

இப்போது தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்துக்கு நன்றியுடன்! 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய இந்தப் புத்தகத்துக்கு விமரிசனமாகத் திருமதி பவளசங்கரி அவர்கள் ஓர் இழையில் எழுதியதை, விருந்தினர் இடுகையாக அளிப்பதில் சந்தோஷம் கொள்கிறேன். இப்போதும் கூட, தமிழ் வாசல் குழுமத்திடமோ, திருமதி பவளசங்கரியிடமோ அனுமதி கேட்கவில்லை. அவர்கள் இதைப் பகிர்ந்துகொள்வதில் எந்த ஆட்சேபமும் தெரிவிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தான்!!

தவிர ஏற்கெனெவே நீண்ட நாட்களுக்கு  முன்னால், விருந்தினர் இடுகையாக எவரேனும் எழுத முன்வந்தால் சந்தோஷத்தோடு பகிர்ந்து கொள்ளத்தயாராக இருப்பதை ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இப்படி சுட்டுப் போட்டாலாவது, எவரேனும் விருந்தினர் இடுகை எழுத முன் வருகிறார்களா என்ற நப்பாசைதான்!




அறிவும் நம்பிக்கையும்:

பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்

- ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள்.


திரு இராஜகோபாலாச்சாரி அவர்கள் கூறிய, இந்து மதத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பதையும், சுவாமிஜியின், சிகாகோ பயணச் சொற்பொழிவுகளின் மாபெரும் வெற்றியையும், உலகெங்கும் சுற்றியலைந்து, தாய்த்திரு நாட்டிற்குத் திரும்பியபோது, இந்தியாவின் ஆன்மாவே திரும்பி வந்துவிட்டதாக புளங்காகிதமடைந்த இந்திய மக்களின் மன நிலையையும், நடு நிசி நேரம் தன்னுயிர் பிரியும் வேளையில், [ஆகஸ்ட் 16, 1886]  தன் ஆன்ம சக்திகள் அனைத்தையும் தன்னுடைய மிக நெருக்கமான சீடரான நரேந்திரருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வள்ளல் வரை பல விசயங்கள் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பினும், ஆசிரியரின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் பார்க்கும் போது, பல்வேறு சிந்தனைகள் நம் மனதிலும் விரிவதையும் தடுக்க இயலவில்லை. ஒரு நல்ல நூலின் இலக்கணம் ஒரு வாசகனை கண்மூடித் தனமாக நம்பச் செய்வதை விட, சுயமாக சிந்திக்கத் தூண்டச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

சுந்தரத் தமிழ் துள்ளி விளையாடும் படைப்பு! 
“இரவும், பகலும் முடைந்து நெய்யப்பட்ட ஆடையாய்ச் செல்கின்றன நாட்கள் .............. அறிவும், அறியாமையுமாய்ச் செல்கிறது மனிதனின் முன்னேற்றப் பாதை” ................. இப்படி முன்னுரையின் முதல் வரியிலேயே வார்த்தை ஜாலங்கள் கொண்டு, வாசகர்களை சுண்டியிழுக்கும் நுண்கலை கற்றவர் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர்.

பறக்க எத்தனிக்கும் தன் குஞ்சுகளைக் காக்கும் பொருட்டு, பெற்ற காக்கைகளின் பரிதவிப்பை, ஒரு கவிதையாக மாற்றியமைத்த பாங்கு, கையில் எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகிறது.

பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..

“அந்த அனுபவங்களின் விஷத்தையெல்லாம் குடித்துக் கழுத்தில் தேக்கியபடி இந்து சமுதாயத்தின் உன்னதத்தையும், இந்து மதத்தின் ஆக்கப்பூர்வமான உயிர்வடிவத்தையும் தம் உணர்வுக் கண்னால் கண்டு, உள்ளம் கசிந்து காதலாகி வந்துற்ற தீங்கிற்கு நெஞ்சம் விதிர்த்துக் கண்ணீர் மல்கி, உயர்வையே எடுத்துரைத்த நரேந்திரனின் பக்குவம் வியத்தற்குரியது”, என்று ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

ஆசிரியர் உள்ளம் உருக, அத்துணை உணர்வுகளையும் சொல்லால் வடித்து, வாசகரை மெய்சிலிர்க்கச் செய்திருப்பதும் நிதர்சனம்.

ஆலகாலத்தை கண்டத்தில் தாங்கிய சிவபெருமானை முன்னிறுத்தியிருக்கும் பாங்கு அவர்தம் ஆன்மீக உணர்வையும் பிரதிபலிக்கிறது.

ஒரு சில இடங்களில் ‘ பரிவ்ராஜக வாழ்க்கை’ போன்று வடமொழிப் பயன்பாடு இருந்தாலும், அதற்கான தமிழாக்கமும் வாசகருக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கியிருப்பதும் சிறப்பு.

படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.

” அறிவு என்பது முதலில் நம்பிக்கைகளின் தளைகளை அவிழ்க்கும், சிறைப்படுத்தும் வழக்க நெறிகளினின்றும் மனிதனை புறத்தனாக்கும் “ - என்ற ஆசிரியரின் கூற்று, Bertrand Russellன் "Useless Knowledge ", என்ற கட்டுரையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.

நரேந்திரர், விவேகாநந்தராக மாறிய சந்தர்ப்பத்தை நயம்பட எடுத்து உரைத்திருக்கின்றார்.

நரேந்திரர் மதக்கல்வியை கையாண்ட விதம் பற்றிய ஆசிரியரின் பார்வை வாசகரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவே உள்ளது.

வேதாந்தம் அமைப்பியல் குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது. " வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியின் விடியலில் மகிழ்ந்து அறிவியக்கக் கதிர்களில் குளித்த நெஞ்சங்களின் சூழலை, மனோத்தத்துவ முறையில் ஆய்ந்தறிந்து விளக்கமளித்துள்ளது வரவேற்கத்தகுந்தது.
ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும் காணப்  பெறுகிறது.கடவுளின் அருகில் எளிதாகச் சென்றடையும் மார்கத்தை மேலும் எளிதாக்க முயற்சித்திருக்கிறார் ஆசிரியர்.
பிரம்மம் சத்யம், உலகம் மாயை, ஜீவன் பிரம்மமே என்ற அத்வைதத்திற்கு ஆசிரியரின் வியாக்கியானம் தேர்ந்த ஞானமுள்ளதாகவும் பல இடங்களில் ஓஷோவின் தத்துவங்களோடு ஒத்துப் போவதாகவுமே உள்ளது.

விசிஷ்டாத்வைதத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த வித்தகர். ஸ்ரீநாத முனிகள் அருளிய மறைந்து போன ‘யோக ரகஸ்யம்’, நூல் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கப் புலவர்களின் பார்வையில் காதல் மற்றும் காமத்தின் விளைவுகள், அன்பின் ஐந்திணை என்ற குறியீட்டால் அடி முதல் நுனி வரை அலசி ஆய்ந்திருக்கிறார்.

விவேகாநந்தரின் உபதேசங்களை ஊடுறுவி அதனைத் தெளிவுற தம் பாணியில் விளக்கியுள்ளார். ஒரு வேறுபட்ட கோணத்தில், ஹெர்மன் ஹெஸ்லேயின் ‘சித்தார்த்தாவில்’, சித்தார்த்தனின் தனிமையை வெகு நேர்த்தியாக விவேகாநந்தரின் தனிமையுடன் ஒப்பிட்டு , அதன் ரணம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

உணர்ச்சிச் சூழல்களும், அறிவுச் சுடர்களும் மாறி மாறி வரும் ஒரு பின்னிப் பிணைந்த ஆளுமையாக நம்மில் பதிவு பெறுகிறவர் விவேகாநந்தர் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.

விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும் ஒப்புமைப்படுத்தி, இரண்டிற்குமான பிணக்கத்தையும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருப்பதிலும் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம்.

மேலை நாட்டு மத நம்பிக்கைகள், அராபிய தத்துவ அறிஞர் அவர்ரோஸ், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அக்லினாஸ் இப்படி அனைவரின் தத்துவங்களையும் அலசி ஆயத் தவறவில்லை இந்த தத்துவ ஞானி.

சுருங்கச் சொன்னால், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான மதங்களையும்,  தத்துவ ஞானிகளையும் கலந்தாய்ந்து தம் கருத்துக்களையும் உள்ளிருத்தி ஒரு அரிய படைப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

‘பிற்றை நிலையில் சிந்திக்கும் பொழுது’, என்ற அழகிய தலைப்புடைய இறுதி அத்தியாயம், இம்முழு நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறதென்றால் அது
மிகையாகாது.மஜீம்தாரின் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய கட்டுரையை , அதன் உணர்வலைகளில் ஏதும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற உந்துதலினாலோ என்னவோ அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே அளித்துள்ளார்.

குறிப்புதவி நூல்கள் என்று 67 பெயர்கள் கொண்ட ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டும், மனம் நிறைவடையாத ஆசிரியர், “இப்படியா அப்படியா என்று தீர்ந்துவிடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்து கொண்டு தான் இந்த நூலாக்கம் வெளிவருகிறது”, என்று முடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, திரும்பவும் முதல் பக்கம் நோக்கி பார்வையைத் திருப்பவும் வைக்கிறது....................

இந்த நூல் உண்மையிலேயே மனித குலத்தின் மிகப் பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு என்பதிலும் மிகையில்லை !!

88 பக்கங்கள் கொண்ட, தமிழினி வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.55.

இதை எழுதிய திருமதி.பவள சங்கரிக்கு நன்றியுடன்!

இந்த இழையில் திருமதி பவளசங்கரியின் விமரிசனத்துக்குத் திரு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஒரு பதில் எழுதியிருந்தார். விமரிசகரின் பார்வைக்குத் தப்பிய சில விஷயங்களைத் தெளிவு படுத்தியதாக இருந்த அந்தப் பதிலையும் காணலாம்!

1)  பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..


2)படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.


--- இங்கு வெறும் படிப்பறிவற்ற வாழ்க்கையௌக் குறிக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைக் குறித்தது.


3)‘ வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.


இது ஆசிரியரின் தீர்ப்பு அன்று. வேதாந்தத்தின் தீர்ப்பு. அதைத்தான் வியந்து ஆசிரியரும் விளக்கியிருக்கிறார். மிகப் பழஙகாலத்திலேயே இவ்வாறு அறிவின்  கறார்தனங்களை மிகக் கச்சிதமாக வேதாந்தம் அறுதியிட்டு உரைத்துவிட்டது என்பதும் அதை மழுங்க அடித்துப் பல இயக்கங்கள் மீதூர்ந்ததும் ஆசிரியரால் கவனப் படுத்தப் படுகிறது. பரவாயில்லை அடுத்த அடுத்த ரீடிங்குகளில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.


4)ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும்
காணப்பெறுகிறது


இது நவீன வேதாந்தப் போக்கு அன்று. தமிழ் கூறும் நல்லுலகத்துச் சான்றோரும், தமிழ் நாட்டு வேதாந்திகளும் ஆயிரத்தி ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னமேயே கூட்டிணைந்து இயற்றிய பக்தி இயக்கங்களான ஆழ்வார்களின் சங்க அகத்திணைக் காதல் கெழுமிய பக்தி சாதித்த உன்னதம். அதைத்தான் நூல் விளக்க அரும்பாடு படுகிறது.


5)விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும்..


இருவேறு உயிர்கள் அன்று அம்மா, இரு வேறு ஆளுமைகள் என்பது பொருத்தம்.  எனினும் இது மைனர் பாயிண்ட்.


ஒரு நல்ல சஹ்ருதயரை (ஒத்த உள்ளத்தர்) உங்களுக்குள் காணக் கொடுத்தமைக்கு நன்றி.

என்ன இது! கட் அண்ட்பேஸ்ட் வேலைகளைக் குறித்துப் பல இடங்களில் கிண்டல் செய்த இவனும் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டானா என்று ஆச்சரியப்பட வேண்டாம்! 

கொஞ்சம் ஆழ்ந்து படித்து, சொல்லப்பட்டதைக் கவனமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டிய புத்தகம் இது. வெறும் கதையைப் போல மேலோட்டமாக வாசித்து முடித்துவிடுகிற ரகமல்ல.அதனால் இதைப் பற்றி எழுதுவதற்கே, நான் நிறைய உழைத்தாக வேண்டும்!இப்போது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பார்வையில், இதன்மீதான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்னால்..........!


அதற்கு முன்னால் இந்த நம்பிக்கை, அறிவு என்று இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது இல்லையா, அதில் நம்பிக்கை என்பது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்!

அறிவு என்பது தேடலில் கிடைப்பது! அதே சமயம் நம்பிக்கையோ தேடலுக்குத் தூண்டுதலாக இருப்பது! தேடியது இதைத்தானா என்பதைத் தெளிவு படுத்தக் கூடியதாகவும் இருப்பதும் நம்பிக்கைதான்!  

"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "


அறியாமையும்
, இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கை ஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச் சொல்கிறார். 

இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,
 
“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அன்னை 

டிஸ்கி 1: இந்தப்பதிவு இரண்டுமூன்று நாட்களுக்கு முன்னாலேயே வந்திருக்க வேண்டியது! ப்ளாக்கரில் என்ன தகராறு என்று தெரியவில்லை, பப்ளிஷ் ஆனபிறகும் உரலியை அணுக முடியவில்லை. திரட்டிகளில் இணைக்கவும் முடியவில்லை. இரண்டு மூன்று தரம் டெலிட் செய்துபார்த்தும் பயனில்லாமல் போனது . ரீடரில் வாசிப்பவர்களுக்கு மட்டும் மூன்று முறை வந்திருக்கும்! பொறுத்துக் கொள்ளவும்!

டிஸ்கி 2இந்தப் புத்தகம், பதிவர் வால்பையன் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக சிபாரிசு செய்கிறேன்! போனபதிவிற்கு முந்தைய பதிவில், அவர் சரவெடியாக வெடித்த கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் இன்னொரு பரிமாணத்தில் இருந்து விடை சொல்வதாக இருப்பதால், நண்பர் வால்பையனுக்காக இந்தப் புத்தகம் என்னுடைய பரிசாக ரெடியாக இருக்கிறது!



வெள்ளிக் கிழமை வித்தியாசங்கள்....!

ஆங்கில வருடப் பிறப்புக்கு எப்போதும்போல சில தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, அப்புறமாக மறந்து போய்விடுகிற தன்மையை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் ஒன்று, இரண்டு என்று இரண்டு பகுதிகளாகப் பார்த்திருக்கிறோம்!

ஒன்றோ இரண்டோ
, அல்லது பத்தோ, உண்மையான சாரம் என்னுடைய தீர்மானங்களில் மட்டும் இல்லை, வெறும்  எண்ணிக்கையில் மட்டும் இல்லைஒவ்வொரு அனுபவத்திலும் நான் என்ன கற்றுக்கொண்டு வருகிறேன் என்பதே ஒரே மையக் கருத்து
.
இதை வைத்து மட்டுமே என்னுடைய தீர்மானங்களும், தொடர்ந்து வரும் செயல்களும், விளைவுகளும் இருக்கும் !
இப்படி ஜம்பமாக வேறு சொல்லிக் கொண்டாயிற்று! அவ்வளவு தானா?
அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு ஒரு சராசரிக்கும் கீழே போய் விடுகிற உத்தேசமில்லை!தமிழ்ப் புத்தாண்டிலிருந்தாவது அவற்றில் சிலவற்றைக் கறாராகக் கடைப்பிடிக்க உத்தேசம்! ஆரம்பித்தாயிற்று!
.
கிடைத்திருக்கும் நேரத்தின் அருமை தெரிந்து பயன்படுத்துவது, எளிதாகக் கைவராது, சிரமப்பட்டுத் தான் கைவசமாகும்  என்பது நன்றாகவே உறைத்திருக்கிறது. நான் ஒரு மனிதனாக இருக்கிறேன் என்பது, சிந்தித்துக் கொண்டே இருப்பதில் தான்!

Thesis-->Anti-Thesis-->Synthesis
சிந்திப்பதும் கூட  நேரெதிர் முரண்பாடான இரண்டின் இயக்கத்தில் ஒரு மையப் புள்ளையைக் கண்டு பிடித்து அங்கே இருந்து புதிதாகத் தொடங்குவதில் தான்! பழைய நினைப்புடா பேராண்டி என்று பழையதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில் இல்லை! இந்த முரணியக்கத்தைத் தொடர்ந்து கொண்டே போவது கூட, ஒரு எல்லை வரைதான் என்றும் தோன்றுகிறது! அந்த எல்லையை வெறும் டயலடிக்ஸ் (முரண் இயக்க வாதம்)  பேசிக்கொண்டு அறிய முடியாது என்பதும் ஒருவாறாகப் புரிய வந்திருக்கிறது.
நிஜ உலகில் நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பது கடினம்!  அரிதும் கூட!
ஆனால், இணையம் மாதிரி ஒரு மின்வெளிப் பரப்பில், அல்லது கனவுலகில்..........

ஒன்று-    உங்களுடைய நண்பர்கள் உங்களை ஒரு செயலைத் தீர்மானிக்கும் முடிவுக்குத் தள்ளாமல் இருந்தால்,

இரண்டு- உங்களுடைய இணைய வழி நண்பர்கள், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவலைப் பரவச் செய்யாமல் இருந்தால்,

மூன்று-   உங்களுடைய நண்பர்கள், நீங்கள் பத்திரமாகப் போற்றிக் காப்பாற்றிவரும் நம்பிக்கைகளைக் கண்ணியமாகக் கேள்வி கேட்காமல்           இருந்தால்,

நான்கு-    உங்களுடைய நண்பர்கள், உங்களிடமிருந்து மிகச் சிறந்ததை வலியுறுத்தாமல் இருந்தால்,

நீங்கள் இணையத்தில், அல்லது கற்பனை உலகத்தில், புதிய நண்பர்களைத் தேட வேண்டிய நேரம் வந்து விட்டது!
புதிய நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்! 


சேத் கோடினுடைய  இந்த வலைப்பதிவைத் தொட்டு  

இங்கே சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா?


********


படித்ததும் பிடித்ததும் பற்றிப் பேசி நீண்ட நாட்களாகி விட்டது இல்லையா?

இன்றைக்கு ரீடரில், சொல்வனம் இணைய இதழில் ஸ்ரீரங்கம்
மோகன ரங்கனைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரை ஒன்றும்,
தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கும் ஸ்ரீரங்கம்
மோகன ரங்கன் கவிதைகள்  தொகுப்பில் இருந்து ஐந்து கவிதைகளை எடுத்துப் போட்டிருந்ததைப் படித்தபோது, மனதுக்கு மிக நிறைவாக இருந்தது!


பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்!

"கவிதையில் வாழும் ஜீவன் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். கவிஞர் என உலகம் போற்றும் இச்சைகளும், கனவுகளும் இல்லை. கவிதைகளும் அன்றாடம் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கவும் இல்லை. தான் எதுவாக வாழ விரும்புகிறோமோ அவ்வாறு வாழ்வதிலா அல்லது வாழ்வதைப் பறையறிவிப்பதிலா அக்கறை?

எனக்குத் தெரிந்து தினம் கவிதையென எழுதிக்குவித்துக் கொண்டிருக்கும் ஒருவர். தமிழகமே அவர் வாய் முத்து உதிர்வுக்கு ஏங்கிக் கிடக்கிறது. அவரைச் சுற்றிப் பெருங்கவிஞர் கூட்டம். ஆனால் அவரைக் கவிஞர் எனச் சொல்ல அக்கூட்டத்தில் ஒருவரும் இல்லை. வியப்பென்னவெனில் அவருக்கும் சரி அவரைச் சுற்றிய கூட்டத்துக்கும் சரி, கவித்வம் இன்றளவும் கிட்டியபாடில்லை.
கவிஞர் என்று தெரியப்படாத மோகன ரங்கனின் கவிதை ஒன்று ........" 
வெங்கட் சாமிநாதனுடைய இந்த வார்த்தைகள் , மோகனத் தமிழுக்குச் சொந்தக்காரரை அடையாளம் காட்டியதைப் படித்தபோது, ஏதோ என்னையே சொல்லிவிட்ட மாதிரி அவ்வளவு சந்தோஷம்! நிறைவு!

இதே இணைய இதழில் தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கும் ஸ்ரீரங்கம்
மோகன ரங்கனுடைய கவிதைத் தொகுப்பிலிருந்து  ஐந்து கவிதைகள்!

ஸ்ரீரங்கம்
மோகன ரங்கனுடைய மோகனத் தமிழை இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே கொஞ்சம் ருசி பார்த்திருக்கிறோம்! மின்தமிழில் அவருடைய  விவாத இழைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஆனந்த அனுபவம்  ஒன்று இரண்டல்ல!   

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய "எது பக்தி" என்ற விவாத இழையைப் படித்த பிறகு, அப்படியே உறைந்துபோய், அகம் கரைந்து போய் அனுபவித்த அந்தத் தருணம் இருக்கிறதே!



சொல்வனத்தில் வெங்கட் சாமிநாதனுடைய  கட்டுரையைப் பார்த்து விட்டு மின்தமிழில் மோகனரங்கனுக்கு வாழ்த்துச் சொல்ல ஒரு தனி இழையை துவங்கியிருக்கிறார்கள்! அங்கே வெங்கட் சாமிநாதன் எடுத்தாண்ட பகுதியைப் படிக்க இங்கே! ரங்கன் மன மின் வான்!

நல்லதொரு வாசிப்பின் சுகமே தனி!


*******
 ச்சும்மா...ட்டமாஷு!




chrispychicken32  என்ற பெயரில் ஒருவர் தான் பார்த்ததிலேயே, மிகச் சிறந்த அழுகை அல்லது ஒப்பாரி என்று இருபத்தாறே செகண்டுகள் ஓடும் இந்த வீடியோவை யூட்யூபில் வலை ஏற்றம் செய்திருக்கிறார்! 
இதையும் 124624 ரசிக மகாஜனங்கள் ரசித்துப் பார்த்ததாக விவரம் கீழே இருக்கிறது!

எனக்கு ஒரு சந்தேகம்!
இந்த மொறுமொறுப்பான கோழிக்குஞ்சு 
நம்மூர் சிவாஜி கணேசன்கள், கமலஹாசன்கள்  தரையில் உருண்டு புரண்டு ஒப்பாரி வைக்கும் காட்சியைப் பார்த்திருந்தால்  என்ன செய்வார்.......?
என்ன ஆகியிருப்பார்.....?

தெரிந்தால் சொல்லுங்களேன்!