ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஏப்ரல் 24!



இங்கே மதுரையிலே மாதமெல்லாம், ஏதாவது ஒரு விசேஷம் திருவிழா நடந்து கொண்டே இருப்பதால் தான் இதைக் கோயில் மாநகரம் என்று கொண்டாடுகிறார்கள்.

அது போல, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம், திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

இதற்கு முந்தைய பதிவில், ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்த நூறாவது ஆண்டு, இந்த ஏப்ரல் 4 அன்று துவங்கியது என்று பார்த்தோம் அல்லவா? ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழிபெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவத ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.

இதே சந்தேகம், கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனாவைப் பற்றி, இனி வரும் பதிவுகளில் பார்க்கப் போகிறோம்!

ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:

1.Fixing the consciousness in the heart and concentrating there

on the idea, imge or name of the Divine Mother, whichever comes easiest to you.

2.A gradual and progressive quieting of the mind by this concentration

3.An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action.

But to quiet the mind and get the spiritual experience it is necessary

first to purify and prepare the nature.


Sri Aurobindo


மலைப்பாதை, எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?


கபாலி சாஸ்திரியார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்ததை, சித்திரைப் பிறப்பன்று ஒரு தனிப்பதிவாக வெளியிடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், சின்ன நாயனா ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்ததைப் பற்றி எழுத முனைந்த போதெல்லாம், திரு.சங்கரநாராயணன், கபாலி சாஸ்திரியார் நூற்றாண்டு விழா சிறப்புத் தொகுதியாக வெளிவந்த புத்தகத்தில் எழுதியிருந்தது முன் வந்து நிற்கும். திரு சங்கர நாராயணன் சொல்கிறார்:

ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும்போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"

"ஆமாம், உனக்குக் கிடைக்கும்" என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.

இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்தது. இந்தப் புண்ணிய புருஷர்கள், ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில், நான் பிறக்கவில்லை. நேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கிருந்ததில்லை. எழுதியவர் எத்தனை பாகியம் செய்திருக்க வேணும் என்கிற நினைப்பிலேயே எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது. கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போது, சங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், மூன்று ஆன்மீக வெள்ளப் பெருக்குகள், வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் என்று மூவருடைய தத்துவ தரிசனமும் ஒரே இடத்தில், கபாலி சாஸ்திரியாரிடத்தில் சங்கமித்ததைப் புரிந்து கொண்ட பிறகே, விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டுமென்று திருவுள்ளம் போலும்!

தந்தை விஸ்வேஸ்வர சாஸ்திரி, மகனுக்கு சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுக்கிறார். சாம வேத அத்யயனத்தையும் சொல்லி வைக்கிறார். ஸ்ரீ வித்யா உபாசனையில் ஈடுபடுத்துகிறார். இதெல்லாம் பூர்வாங்கமே. தொடர்ந்த மந்த்ர ஜப சாதனையில் தன்னுடைய குருவாக, வாசிஷ்ட கணபதியைக் கண்டு கொள்கிறார், கபாலி சாஸ்திரி. வேதம், உபநிஷத்துக்களின் நுட்பத்தை எல்லாம் கணபதி முனிவரிடமிருந்து கற்றுக்கொண்ட பிறகு, அவருக்கும் குருவான ஸ்ரீ ரமண மகரிஷியின், தரிசனமும் கையால் நெஞ்சத்தைத் தொட்டு, தகராகாசமாகிய இதயக் குகை இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஹஸ்த தீக்ஷையும் கிடைக்கிறது.

பகவான் ரமணரிடத்திலிருந்து கிடைத்த தத்துவ தரிசனமே, பின்னாளில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் சரணடைந்து, திரிவேணி சங்கமமாக, அற்புத ஒளி வெள்ளமாக சாஸ்திரியாருடைய யோக சாதனை பரிணமிக்கிறது.

" ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது. ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை"

இப்படிச் சென்ற பதிவில், எழுதியிருந்தது, சரிதானா என்கிற விசாரமே இத்தனை நாள் மேலோங்கியிருந்தது. ரமணருடைய பாதையை, 'மலைப் பாதை' என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த மலைப்பாதை, எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?

இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும், எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும், வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே அனுபவத்தில் நாம் காணும் உண்மை அல்லவோ?

சின்ன நாயனா கபாலி சாஸ்திரியார் கண்டெடுத்த வைரம், திரு மாதவ் பண்டிட், ஸ்ரீ அரவிந்தருடனான முதல் சந்திப்பைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

பாரதி அறிமுகத்துடன், மாலை ஆறுமணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடாகிறது. ஒரு எலுமிச்சம் பழத்தைக் கைகளிலேந்தி ஸ்ரீ அரவிந்தரை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, கற்றறிந்த இரு பண்டிதர்களுக்கிடையிலான மாதிரி வடமொழியில் உரையாட ஆரம்பமாகிறது. ஆங்கிலம் தெரியுமா என்று ஸ்ரீ அரவிந்தர் கேட்க, உரையாடல், பிறகு ஆங்கிலத்திலேயே தொடருகிறது.

இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள், அதன் விடுதலை சாத்தியத்தைப் பற்றி உரையாடல் திரும்புகிறது. "சாத்தியமென்ன, அது சர்வ நிச்சயம்" என்று உறுதிபடக் கூறுகிறார் ஸ்ரீ அரவிந்தர். இது நடந்தது 1917 இல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 1942 இல் 'வெள்ளையனே, வெளியேறு' என்று காந்தி இயக்கம் தொடங்கிய பிறகு தான், முழுமையான சுதந்திரத்திற்கான சுதந்திரப் போராட்டம் தொடங்கின மாதிரி ஒரு மாயை, இருக்கிறது. அதற்கும் முன்னாலேயே. வங்காளத்தில், ஸ்ரீ அரவிந்தர், நேதாஜி முதலானோர், முழு சுதந்திரத்திற்கான குரல் எழுப்பி இருப்பதை நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.

அடுத்து, ஹிந்து முஸ்லிம் பிரச்சினை பற்றிக் கேள்வி திரும்புகிறது. ஒரு பரந்த மனத்தோடு கூடிய இந்துத்வமே தீர்வாக முடியும் என்று பதில் அளிக்கிறார் ஸ்ரீ அரவிந்தர். இன்றைக்கும் கூட, இந்த பதில் எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். முஸ்லிம்கள் என்றாலே, பாபரின் நேரடித் தோன்றல்களாக, அன்றைய காட்டுமிராண்டித்தனத்தை இன்றும் கைக்கொண்டிருப்பவர்களாகச் சித்தரித்து, பேதங்களை, பிரிவினையை, சச்சரவை வளர்த்துக் கொண்டிருக்கும் போக்கு, என்ன தீர்வைத் தந்திருக்கிறது?

இப்படி ஸ்ரீ அரவிந்தருடனான முதல் சந்திப்பு, பரவலாக நாடு அன்று எதிர்கொண்டிருந்த விஷயங்களைத் தொட்டுப் பேசி முடிகிறது. இன்னொன்றின் தொடக்கமாக, இந்த சந்திப்பு அச்சாரம் போட்டு வைக்கிறது!


சற்று விரிவாகவே, பார்ப்போம்!



சம்பக்லால் எனும் அடியவரை ஸ்ரீ அரவிந்தர் மார்புறத் தழுவும் ஓவியம்

முயற்சி செய்வது உன் வேலை! மலையை நகர்த்துவது என் வேலை!


ஒரு எளிய மனிதன். தேவைகளை அதிகம் வளர்த்துக் கொள்ளவில்லை, அதனால் எளிய, நிம்மதியான வாழ்க்கை. ஒரு கிராமத்தின் ஓரத்தில், சின்ன வீட்டில் வசித்து வந்தான்.

ஒரு நாள் இரவு-கனவு என்று தள்ளிவிட முடியாதபடி, அவனது வீடு முழுவதும் ஒளிவெள்ளம். இறைவன் அவனிடத்தில் நேரே பேசுவதற்காகவே வந்தமாதிரி இருந்தது.

"உனக்கு ஒரு வேலை, செய்கிறாயா?" கேட்கிறான் இறைவன்.

"நிச்சயம் செய்கிறேன், பிரபு!"

"உன் வீட்டின் எதிரே ஒரு கல்பாறை தெரிகிறதல்லவா? உன்னுடைய முழு வலிமையைக் கொண்டு, நீ அதை நகர்த்த வேண்டும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் சரி, பாறை நகர்கிற வரை அதுதான் உன் வேலை. புரிந்ததா?"

மறுநாள் பொழுது விடிந்தது முதல், அந்த மனிதனுக்கு அந்தப்பாறையை நகர்த்துவதே முழுநேர ஊழியமாயிற்று. நாட்கள், வாரங்கள், மாதங்கள் வருடங்கள் என்று கழிந்த பிறகும், பாறை கொஞ்சம் கூட நகர்ந்து கொடுக்கவில்லை.நாட்கள் இப்படியே ஓடிப்போனதில், அந்த மனதில் சிறு சலனம் உண்டாயிற்று.

'நாமும் இத்தனை காலமாக, அந்தப் பாறையை நகர்த்துவதற்காகப் படாத பாடு பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். அந்தப் பாறையோ, கொஞ்சம் கூட அசைந்து கொடுப்பதாக இல்லை. நம்முடைய உழைப்பு, நேரம் எல்லாம் இப்படியே விரயமாகிக் கொண்டிருக்கிறதோ?'

சலனத்திற்கு இடம் கொடுக்காதிருந்த வரை உள்ளே நுழைய முடியாத எதிர்மறையான எண்ணங்கள், அவனுள் புகுந்து குழப்ப ஆரம்பித்தாயிற்று.

"நீயும் எத்தனை நாள் தான் பாவம் இப்படியே கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பாய்? அந்தப் பாறை கொஞ்சம் கூட நகர்வதாயில்லை. அதை நகர்த்த முடியாது."
உள்ளே புகுந்த எதிர்மறையான சக்திகள், அவனுள் அவநம்பிக்கையை வளர்க்க சாமர்த்தியமாகக் காய் நகர்த்தின.

"முடியாத ஒன்றிற்காக, இவ்வளவு பாடு படுவானேன்? ஏதோ, ஒப்புக்கு நகர்த்த முயற்சிப்பது மாதிரி இருந்து விட்டுப் போக வேண்டியது தானே!" நல்லது சொல்கிற மாதிரி, அவனை அவநம்பிக்கைக்குள் தள்ள முயற்சி ஜோராகவே நடந்தது.

அலுப்பும் சலிப்பும் ஆதிகமாகவே, அந்த மனிதனும், கிட்டத்தட்ட அதே முடிவுக்குத்தான் வந்திருந்தான். ஆனால்,ஆசைகளின் அலைக்கழிப்புக்கு உள்ளாகாமலேயே வாழ்ந்து வந்த படியால், இறைவனிடம் பிரார்த்தனை செய்து என்ன செய்வது என்று கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.

"ஆண்டவனே! நீ எனக்களித்த பணியை இத்தனை நாட்களாக முழு முயற்சியுடன் தான் செய்து வருகிறேன். ஆனாலும், இந்தப் பாறை, கொஞ்சம் கூட அசைந்து கொடுப்பதாய் இல்லை. ஒரு இம்மியளவு கூட என்னால் நகர்த்த முடியவில்லை.

எங்கே தவறாகிப் போனது என்பது தெரியவில்லை. ஏன் இப்படித் தோற்றுப்போனேன் என்பதும் எனக்கு விளங்கவில்லை. என்ன செய்யக் கருதியிருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?"

இறைவன், கருணையோடு பதில் சொன்னான்:
"உனக்கு இந்த வேலையை செய்யும்படி சொன்னேன், முழு மனதோடு, முழு பலத்தோடு இந்த வேலையை செய் என்று தானே சொன்னேன்! நீயும், இத்தனை நாள் முழு நம்பிக்கையோடு இந்த வேலையைச் செய்தாய் அல்லவா! உன்னுடைய பலத்தால் இந்தப் பாறையை நகர்த்திவிட முடியும் என்று நான் சொல்லவில்லையே?

உனக்கிடப்பட்ட வேலை, பாறையை முழு முயற்சியோடு தள்ளுவது. நீயும் உன்னுடைய பலத்தை எல்லாம் இத்தனை நாள் செலவழித்து விட்டு, தோற்றுபோனதாக நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டு, என்னிடம் முறையிட வந்திருக்கிறாய். உண்மையில் நீ தோற்றுப் போனாயா, என்ன?

உனக்கிடப்பட்ட வேலையை முழுமனதோடு செய்து வந்திருக்கிறாய். எதிர்ப்புக்கள், உன்னுடைய சக்தி எல்லாவற்றையும் மீறி, எவ்வளவு வளர்ந்திருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.

முழுநம்பிக்கையுடன், முழு மனதோடு செய்வது மட்டுமே உன்னுடைய வேலை. மலையை நகர்த்துவது என் வேலை."

இப்படித்தான், உள்ளுணர்வாக நம்முள் இறைவன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுகிற தருணங்கள் வாழ்க்கையில் நிறையவே உண்டு. எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வது மட்டுமே நம் வேலை. அவனது சித்தப்படியே ஆகட்டும் என்கிற உறுதியும், நம்பிக்கையும் மட்டுமே அவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.

மலையை நகர்த்துவது அவன் வேலை.
நாம் அங்கே, சும்மா கருவிகள் மட்டுமே!



ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுதமொழியை படித்தபோது, நினைவிற்கு வந்த கதை

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct. Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity. The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”
- The Mother

"ஜயமுண்டு பயமில்லை மனமே !"



கபாலி சாஸ்திரியார், பிறந்தது சென்னையில், 1886 ஆம் வருடம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி. திருமயிலை கபாலீஸ்வரனுடைய பெயரையே, மகனுக்குச் சூட்டி மகிழ்கிறார் விஸ்வேஸ்வர சாஸ்திரிகள். கன்னிமாரா நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஐந்து வயதிலேயே மகனுக்கு ஸ்ரீ வித்யா மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். சம்ஸ்க்ருதம்,பூஜை பாராயணம், ஜபம் எல்லாவற்றையும் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட கபாலி சாஸ்திரி, பன்னிரண்டு வயது நிறைவதற்கு உள்ளாகவே, வால்மீகி ராமாயணம் முழுவதையும் பன்னிரண்டு தடவை பாராயணம் செய்து முடித்து விட்டார்.

மயிலாப்பூர் ஹிந்து ஹை ஸ்கூலில் தான் கல்வி. ரைட் ஹானரபில் V S ஸ்ரீனிவாச சாஸ்திரியார் தலைமை ஆசிரியர். அந்த நாட்களில், ஸ்ரீனிவாச சாஸ்திரியாரது ஆங்கில மொழியின் ஆளுமை ரொம்ப பிரசித்தம். அப்படிப்பட்டவரது மாணவர், ஆங்கில வழிக் கல்வியிலும் சிறந்து விளங்கியதில், வியப்பு ஒன்றுமில்லை தான்.

காவ்ய கண்ட கணபதி முனி என்றும், வாசிஷ்ட கணபதி முனி என்றும் "நாயனா" என்று அன்போடு ரமணர் அழைத்த மாதிரியே, அன்பர்களால் அழைக்கப் பட்ட மகா தபஸ்வி, இளம் கபாலி சாஸ்திரிக்கு, வேதம், உபநிஷத்துக்களின் உட்பொருளை விளங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ரமண மகரிஷியின் தரிசனமும், ஹஸ்த தீக்ஷயும் கிடைக்கிறது. ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது.

ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை. அந்த நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் "ஆர்யா" என்ற பத்திரிகையில் The Secret of Veda, Life Divine என்ற தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். ஆர்யா பத்திரிகையில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வந்ததைப் படித்த கபாலி சாஸ்திரியாருக்குப் புதிய தரிசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அது வரை வேதத்தின் உட்பொருளாக, மரபு ரீதியாகக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதற்கும் அப்பால், புதிய சிந்தனை இழை ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து தொடங்குவதைத் தன்னை அறியாமலேயே, கபாலி சாஸ்திரியார் உணர்ந்த தருணங்கள் அவை.

ஸ்ரீ அரவிந்தர், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்பது தெரியும். அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக சாதனையில் தீவீரமாக இருக்கிறார் என்பதும் தெரியும். அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம். எப்படி, எப்போது என்பது தான் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கும் ஒருசரியான தருணத்தை, இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்!

1917 ஆம் ஆண்டில் சங்கர ஜெயந்தியை ஒட்டிப் பாண்டிச்சேரிக்கு வருகிற வாய்ப்பு, கபாலி சாஸ்திரியாருக்குக் கிடைக்கிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியும் அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் தான் இருந்தார். ஏற்கெனெவே, திருவல்லிக்கேணியிலும், நண்பர்கள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவரான, பாரதியைச் சந்திக்க முடியுமோ? பாரதிக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் நெருங்கிய பழக்கம் இருக்கிறதென்று சொல்லக் கேள்வி. பாரதியார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க உதவக் கூடுமோ?

பாரதியார் புதுவையில் தங்கியிருந்த வீட்டைத் தேடி வருகிறார் கபாலி சாஸ்திரி. மாடிப் படிகளேறி வரும் போதே மகாகவி பெரும் குரலில் பாடிக் கொண்டிருந்தார்:

"ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த

ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு"

பரஸ்பர குசலம் விசாரித்துக் கொண்ட பிறகு, பாரதி சென்னை நண்பர்கள் சிலரைப் பற்றி விசாரித்து விட்டு மறுபடி பாட ஆரம்பித்தார்:

"குருவே! பரமன் மகனே

குஹையில் வளரும் கனலே!"

கபாலி சாஸ்திரிக்கு பெரிய ஆச்சரியம், குகன் என்ற சொல், தகராகாசமாகிய ஹ்ருதயமென்னும் குகையில் வளரும் கனல், குமரனான முருகனையும் குறிப்பது, வேதத்தின் மிக ஆழ்ந்த கருத்தாக இருப்பது, இதை எப்படிக் கண்டீர்கள் என்று பாரதியிடம் கேட்கிறார்.

"ஸ்ரீமான் அரவிந்த கோஷுடன் ரிக் வேத ஆராய்ச்சி சிலகாலம் பண்ணிக் கொண்டிருந்த போது கண்டது இது" என்கிறார் பாரதி.

ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய பிரஸ்தாபம் எழுந்தவுடனேயே, கபாலி சாஸ்திரியார், தான் அவரைச் சந்திக்கும் ஆர்வத்திலேயே பாண்டிச்சேரிக்கு வந்திருப்பதையும் சொல்லி, பாரதி அதற்கு உதவ முடியுமா என்று கேட்கிறார். அந்த கால கட்டங்களில், ஸ்ரீ அரவிந்தர், சாதாரணமாக எவரையும் சந்திப்பதில்லை; என்றாலும், ஸ்ரீ அரவிந்தருடன் தங்கியிருக்கும் ஒரு அன்பருக்குச் சீட்டுக் கொடுக்கிறார் பாரதி, இன்னார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்கிற மாதிரி.

அன்று மாலையே, ஆறு மணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க, அனுமதியும் அழைப்பும் கிடைக்கிறது!

கவிதையோடு படமும் இணையத்தில் கிடைத்தது நன்றி


இன்றைய த்யானத்திற்கான ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழி:
"Not to impose one's mind and vital will on the Divine but to receive the Divine's will and follow it, is the true attitude of sadhana. Not to say, "This is my right, want, claim, need, requirement, why do I not get it?" but to give oneself, to surrender and to receive with joy whatever the Divine gives, not grieving or revolting, is the better way. Then what you receive will be the right thing for you."

- Sri Aurobindo [SABCL, 23:597]

அவுட்லுக் வார இதழில் காங்கிரஸ் கட்சி மஹாத்மா காந்திக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும் தாங்களே மொத்தக் குத்தகைதாரர் என்கிற மாதிரி, ஸ்ரீ அரவிந்தர் முதலான தலைவர்களை மறந்து போன அவலத்தைப் பற்றி ஒரு சிறு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இங்கே படிக்கலாம்

நாயனா, சின்ன நாயனாவை சந்தித்த கதை!


"நாயனா"வும் ஸ்ரீ ரமணரும்


"நாயனா"

"சின்ன நாயனா"


அது 1906 ஆம் ஆண்டு.

இருபதே வயதான இளைஞன் அவர். கபாலி சாஸ்திரி என்று பெயர். அப்பா கன்னிமாரா நூலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். மகனுக்கு, திருமயிலை இறைவனது பெயரை வைத்ததுடன், ஐந்து வயதிலேயே ஸ்ரீ வித்யா மந்திரமும் சொல்லிக் கொடுத்தாயிற்று. எட்டு வயதிலேயே வால்மீகி ராமாயண மூல பாராயணம் ஆரம்பித்தாயிற்று. தினசரி, திருவொற்றியூரில் அம்பிகை சன்னதியில் ஸ்ரீ வித்யா மந்திர ஜபம் செய்கிற பழக்கம். அப்படி, அம்பாள் முன் மந்திர ஜபம் செய்து கொண்டிருந்த நேரம், இரண்டு, மூன்று பேர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவர், மெலிந்த தேகம், ஆனால் அவருடைய தோற்றப் பொலிவு இவர் சாதாரண ஆள் இல்லை,என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.

அம்பிகை சன்னதி முன் வந்து வணங்கி, கடகடவென வடமொழியில்துதிக்க ஆரம்பிக்கிறார். இதற்கு முன்னாள் கேட்ட ஸ்லோகம், ஸ்தோத்ரங்கள் மாதிரி இல்லை, அப்போது தான் அம்பாள் பெயரில் இயற்றி அவள் முன்னாலேயே அரங்கேற்றம் செய்தது மாதிரி இருக்கிறது. அவரும், கூட வந்தவர்களும், போய் விட்டார்கள். இளைஞராக இருந்த கபாலி சாஸ்திரியை, இந்த நிகழ்வு மிகவும் கவர்கிறது.

மறுநாள், அதே நேரம், திருவொற்றியூர் கோவிலில், கபாலி சாஸ்திரி, மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறார். முந்தைய நாள் போலவே, அந்த மனிதர் மறுபடி வருகிறார். ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கபாலி சாஸ்திரியைக் கூப்பிட்டு, யார் எவர் என விசாரித்துத் தெரிந்து கொள்கிறார். தன்னை வாசிஷ்ட கணபதி முனி எனவும் அறிமுகம் செய்து கொள்கிறார். யார், எவர் என கணபதி முனி கேட்கும் போதே, முந்தைய நாள் தான் கேட்ட துதிகளை, ஒரு இழை பிசகாமல் திரும்பச் சொன்ன கபாலி சாஸ்திரியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

திருவண்ணாமலையில், அதுவரை பிராம்மண சாமி என்று மட்டுமே அறியப் பட்டிருந்த ஸ்ரீ ரமணரை, ஸ்ரீ ரமண மஹரிஷி எனவும், பகவான் ஸ்ரீ ரமணர் என்றும் உலகுக்கு அறிவித்த, காவ்ய கண்டர் என்றும் வாசிஷ்ட கணபதி முனி என்றறியப்பட்ட மஹான் அவர். மகா தபஸ்வி.

ரமணராலே, "நாயனா" என்று அன்புடன் அழைக்கப் பட்டவர்.

சாத்திரம் கற்றவர், கவிஞர், ஸ்ரீ வித்யா உபாசகர், அஷ்டாவதானி, ஜோதிடமும், மந்திர சித்தியும் பெற்றவர். அப்படிப் பட்டவரோடு, கபாலி சாஸ்திரிக்குத் திருவொற்றியூர் கோவிலில் ஏற்பட்ட உறவு, குரு-சிஷ்யன் உறவாக அப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அடுத்த நான்கு வருடங்களுக்குள், குரு, தானறிந்த வேதத்தின் நுட்பங்கள், உபநிஷத்துக்கள் சொல்கிற நுட்பங்கள், தந்திர சாஸ்திரத்தில் சொல்லப் பட்டவை இப்படி எல்லாவற்றையும், கபாலி சாஸ்திரிக்கு, வாத்சல்யத்துடன் சொல்லிக் கொடுத்தாயிற்று.

தன்னுடைய குருவான ரமண மகரிஷியிடம் கபாலி சாஸ்திரியை நாயனா அறிமுகம் செய்து வைக்கிறார். ஸ்ரீரமணருடனான சந்திப்பு, கபாலி சாஸ்திரிக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம், அவருடைய ஆன்மீக சாதனையில், அனாயாசமாக ஒரு பெரிய மலையைக் கடந்தது போல! சாதாரணமாக, எவரையும் தொட்டுப் பேசாத ஸ்ரீ ரமணர் கபாலி சாஸ்திரியின் நெஞ்சில் தன் அருட் கரத்தை வைத்து, யோகத்தில் சொல்லப் படுகிற ஹ்ருதய கமலம் இருக்கிற இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார். ரமணருடைய ஹஸ்த தீக்ஷை கிடைத்ததை சொன்ன போதிலும், அது அவருடைய ஆன்மீக வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதை கபாலி சாஸ்திரி வெளிப்படையாகச் சொல்லவில்லை.

வாசிஷ்ட கணபதி முனிவரை "நாயனா" என்று அன்போடு அழைத்த மாதிரியே, அவருடைய சீடப் பிள்ளை கபாலி சாஸ்திரியை "சின்ன நாயனா" என்று ஸ்ரீ ரமணர் தன் வாயாலேயே அழைத்தது ஒன்றே, ஸ்ரீ ரமணர் அவரிடத்தில் எவ்வளவு கருணையும், அன்பும் கொண்டிருந்தார் என்பதை சொல்லும். ஸ்ரீ .ரமணருடைய "நான் யார்" என்ற விசார மார்க்கத்தை, நன்றாக அறிந்து கொண்டு ரமண கீதை பிரகாசம், சத் தர்சன பாஷ்யம் என்ற நூல்களைப் பின்னால், படைக்கிறார்.

இன்றைக்குப் பங்குனி ஹஸ்தம். நாயனாவும் சின்ன நாயனாவும் சந்தித்ததை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, இன்றைக்குக் கை கூடியது.

"சின்ன நாயனா" கபாலி சாஸ்திரி, மகாகவி பாரதி யைச் சந்தித்ததை அடுத்துப் பார்க்கலாம்!

********

சாலமன் நீதிக் கதைகளைப் பற்றி கேள்விப் பட்டிருப்போமே, அதில் ஒன்று.

முடிச்சுக்கு மேல் படு முடிச்சாக ஆயிரமாயிரம் முடிச்சுக்களோடு கூடின கயிற்றால் ஒரு வழி மறிக்கப் பட்டிருந்தது. முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தவர்கள் மட்டுமே மேலே முன்னேறிச் செல்லலாம் என்ற எச்சரிக்கை வேறு. எவருக்கும் அந்த முடிச்சுக்களை எப்படி அவிழ்ப்பது என்று புரியவில்லை. அங்கேயே தயங்கி நின்று விட்டார்கள்.

அரசன் சாலொமோனுக்குத் தகவல் தெரிந்தது. வ்ந்து பார்த்தான். முடிச்சுக்களை அவிழ்த்துக் கொண்டிருப்பது வெட்டி வேலை என்பது புரிந்தது, தன்னுடைய வாளை எடுத்தான், வெட்டினான், முடிச்சுக்களால் மறிக்கப் பட்டிருந்தது இரண்டாகப் பிளக்கப் பட்டு, வழியும் தெரிந்ததாம்.

அது மாதிரித் தான், மாற்றம் என்பதும். ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகளை, இன்றைய த்யானத்திற்கு எடுத்துக் கொள்வோமா?


"In the old Chaldean tradition, very often the young novices were given an image when they were invested with the white robe; they were told:

"Do not try to remove the stains one by one, the whole robe must be purified."

Do not try to correct your faults one by one, to overcome your weaknesses one by one, it does not take you very far. The entire consciousness must be changed, a reversal of consciousness must be achieved, a springing up out of the state in which one is towards a higher state from which one dominates all the weaknesses one wants to heal, and from which one has a full vision of the work to be accomplished.

I believe Sri Aurobindo has said this: things are such that it may be said that nothing is done until everything is done. One step ahead is not enough, a total conversion is necessary."

- The Mother
[CWMCE, 8:402]

ஒரு மாபெரும் தருணம் நிகழ்ந்த நூறாவது ஆண்டு !


மார்ச் 31, 1910, சந்தர் நாகூரில் இருந்து பாண்டிச்சேரிக்குப் புறப்பட்ட இடம்



ஒரு மாபெரும் தருணம் நிகழ்ந்த நூறாவது ஆண்டு இன்று பிறக்கிறது.

இறைவனது ஆணையென, உள்ளுணர்வு வழி நடத்த, ஸ்ரீ அரவிந்தர், மார்ச் 31 ஆம் தேதி, கல்கத்தாவிலிருந்து புறப்பட்டு, SS டூப்ளே கப்பல் ஏறிப் பயணம் மேற்கொண்டு, பாண்டிச்சேரி வந்தடைந்த நாள், ஏப்ரல் 4, 1910.

ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய இந்தப் பயணத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

I had accepted the rule of following the inner guidance implicitly and moving only as I was moved by the Divine.”

பெப்ரவரி மாதம், உள்ளேயிருந்து ஆணை பிறக்கிறது, 'சந்தர்நாகூருக்குப் போ' அதன்படி சந்தர் நாகூர் வந்தவருக்கு, மறுபடி பாண்டிச்சேரிக்குச் செல்லும்படி வழிகாட்டுதல் கிடைக்கிறது. பிஜாய் நாக் எனும் அந்தரங்கமான சீடர் மட்டுமே உடன் வர, ஏப்ரல் 4 ஆம் தேதி பின்மாலைப் பொழுதில், பாண்டிச்சேரி மண்ணில் காலடி எடுத்து வைக்கிறார் ஸ்ரீ அரவிந்தர். சுரேஷ் சக்கரவர்த்தி என்ற அன்பர் முன்னதாகவே புகைவண்டியில் வந்து சேர்ந்து, ஸ்ரீ அரவிந்தர் தங்குவதற்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்து காத்திருக்கிறார்.

சங்கர செட்டி என்பவர், உள்ளூரில் பெரிய பிரமுகர், ஸ்ரீ அரவிந்தர் தங்குவதற்கு வீடு அளித்ததும் இவரே.




கோமுட்டி செட்டி தெரு என்றழைக்கப்பட்ட இடத்தில், திரு சங்கர செட்டி வீடு

ஆரம்ப காலத்தில் உடனிருந்தவர்கள், நாக் பினாய், சுரேஷ் சக்கரவர்த்தி, நளினி காந்த குப்தா மற்ற இருவர் விவரம் இல்லை



ஸ்ரீ அரவிந்தர், 1911-1920 கால கட்டத்தில் எடுத்த படம்


ஸ்ரீ அரவிந்த அன்னை, [அன்று திருமதி மிரா ரிச்சர்ட்] வலது கோடியில் பால் ரிச்சர்ட், ரவீந்தரநாத் தாகூருடன், ஜப்பானில் 1916 இல் எடுத்த படம்



பிரெஞ்சு இந்தியாவிற்கு வருகை தரும் சுதந்திரப்போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவர், ஸ்ரீ அரவிந்தருக்குப் பெரிய அளவில் வரவேற்பளிக்க, அபிமானிகள் விரும்பிய போதிலும், சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீ அரவிந்தர் வருகை, இன்னமும் கொஞ்ச காலத்திற்கு, வெளியே பரவலாகத் தெரிய வேண்டாம், பிரிட்டிஷ் அரசு மும்முரமாகத் தேடிக் கொண்டிருக்கும்போது, இந்தமாதிரியான வரவேற்பெல்லாம், எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்று தடுத்து விட்டார்.

இதே நேரத்தில், பிரிட்டிஷ் அரசு, கல்கத்தாவில், ஸ்ரீ அரவிந்தரை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரியராக இருந்து நடத்திய கர்மயோகி இதழ், பிரிவினையைத் தூண்டுவதாகவும், ராஜ துரோகமாகவும் அறிவித்து அவரை சிறையிலே தள்ள, கல்கத்தாவிலும், அவரது ஆதரவாளர்கள் வீடுகளையும் வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம்.

ராம்சே மக்டோனால்ட், லேபர் கட்சியைச் சேர்ந்தவர், அன்றைக்கு எதிர் கட்சியாக இருந்து, பின்னாளில் இவர் பிரிட்டிஷ் பிரதமராகவும் ஆனார், பிரிட்டிஷ் மக்கள் அவையிலே, ஸ்ரீ அரவிந்தரது பத்திரிகையிலிருந்து, முழு கட்டுரையையும் வாசித்து காட்டி, இதில் எங்கே இருக்கிறது பிரிவினை வாதம் என்றெல்லாம் எடுத்துச் சொல்லிய பிறகு, அலிப்பூர் சதி வழக்கு எப்படிப் பிசுபிசுத்ததோ, அதே மாதிரி அரசின் முயற்சியும் தோல்வி அடைந்தது.

ஆனாலும், பிரிட்டிஷ் இந்திய அரசு ஸ்ரீ அரவிந்தரைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பாண்டிச்சேரி எல்லையிலிருந்து நகர்த்தி, பிரிட்டிஷ் இந்தியப்பகுதிக்குக் கொண்டு வந்து கைது செய்யத் தொடர்ந்து உளவாளிகளை அனுப்பிக் கொண்டே இருந்தது. அலிப்பூர் சதி வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்ட பின், உத்தர்பாரா என்ற இடத்தில், 1909 ஆம் ஆண்டில்,ஸ்ரீ அரவிந்தர் தனக்கு அளிக்கப் பட்ட வரவேற்பில் உரை நிகழ்த்தும் போது, இறைவனது திருவுள்ளக் குறிப்பு தனக்களிக்கப்பட்டத்தை மிக விரிவாகவே சொல்கிறார்.

உத்தர்பாராவில் ஸ்ரீ அரவிந்தர் நிகழ்த்திய உரையை, இங்கே முழுதுமாகப் படிக்கலாம்.

ஆக, பாண்டிச்சேரி வந்த பிறகு, ஸ்ரீ அரவிந்தரது வாழ்வின் இரண்டாவது பகுதி தொடங்க ஆரம்பித்தது. ஆன்மீக சாதனையைத் தங்கு தடையில்லாமல் தொடர்வதற்கு ஒரு அற்புதமான தருணமாக ஏப்ரல் 4 ஆரம்பமானது. முதல் பகுதியில், அடிமைப்பட்டுக் கிடந்த தேசத்தின் விடுதலைக்கான போராட்டம். இரண்டாவது பகுதியிலோ, மனிதகுலத்தை ஆன்மீக விழிப்பிற்கு இட்டுச் செல்லும் யோக சாதனைக் களம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி [1850-1950] இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சந்தியில், ஆன்மீக வெளிச்சத்தைப் பரப்பிய மகான்களின் வருகைக் காலம் என்றே சொல்ல வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில், ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், வடலூர் திருவருட் பிரககாச வள்ளலார், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ ரமண மஹரிஷி, இப்படி எண்ணற்ற பேரருளாளர்கள் அவதரித்து, ஒரு உன்னதம்மான ஆன்மீக எழுச்சிக்கு, இந்த தேசத்தைத் துயிலெழச் செய்த தருணமும் கூட.

" Oh, East is East and West is West, and never the twain shall meet"

என்று ருட்யார்ட் கிப்ளிங் என்ற ஆங்கிலக் கவிஞன் பாடினான். கிழக்கு கிழக்குத் தான், மேற்கு மேற்கு தான், இரண்டும் சந்திப்பதென்பது ஒருநாளும் நடவாது என்று தொடங்கும் இந்தக் கவிதை வரி ரொம்ப பிரசித்தமானது.

இந்த இரண்டும் சந்தித்து விடக்கூடாது என்பதில் இரண்டு பக்கத்திலுமே நிறைய அக்கறை இருந்ததையும் மீறி, கிழக்கும் மேற்கும் சந்திக்கும், ஆன்மீகப் பார்வையில் ஒன்றாகும் என்பதை உலகோர் அறியச் செய்த தருணங்கள் இந்த 1850-1950 கால கட்டத்தில் தான் நடந்தது. இங்கேயிருந்து ஒரு ஞான சிம்ஹம், சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரத்திலே உலக சமயப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை, மேற்கில் இருந்தவர்களது கவனத்தைக் கிழக்கின் பால் ஈர்த்தது.

சத்தமே இல்லாமல், ஒரு அற்புதப் பேரொளி, மேற்கிலிருந்து கிழக்கு வந்து, இங்கேயே நிலைகொண்டு "அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக" ஆனதும், ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த நான்காண்டுகள் கழித்து நடந்தது. 1914 மார்ச் 29 அன்று, ஸ்ரீ அரவிந்த அன்னை, பாரிசில் இருந்து புறப்பட்டு வந்து, ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து, தனது த்யானத்தில் கண்ட ஸ்ரீ கிருஷ்ணன் அவரே என்பதை அறிந்து கொண்டதும், நடந்தது.

கிழக்கும் மேற்கும் சந்திக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த அதே வேளையில், வடக்கு தெற்கு என்கிற பேதம் இல்லாமல், ஸ்ரீ அரவிந்தரைச் சுற்றி, ஞானத்தைத் தேடும் அடியவர்களும் குழும ஆரம்பித்தனர். சுதந்திரப் போராட்டத்தில், ஒன்றாய் இருந்த அறிமுகத்தில் ஆரம்பமாகி, ஆன்மீகத் தேடலில் ஒன்றுகூடியவர்களில், மகாகவி சுப்ரமணிய பாரதிக்குத் தான் முதல் இடம். இருவரும் ரிக் வேத ஆராய்ச்சி செய்த தருணமும் இந்த 1910 கள்தான்!

வள்ளல் பெருமான், ஸ்ரீ அரவிந்தரது காலத்திற்கு முந்தியவர் என்றாலும் கூட, அவருடைய திருவருட்பாவில் விளிக்கப் படுகிற அருட்பெருஞ்சோதி, அரவிந்தர் கண்ட அதிமானச ஒளி தான் என்பதை அன்றைக்கும், ஏன் இன்றைக்கும் கூட நிறையப் பேருக்குத் தெரியாத செய்தி. பின்னாட்களில், ஒரு சாதகர், வள்ளலாரது திருவருட்பா குறித்து ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் கேட்கும் போது, ஸ்ரீ அன்னையும் வள்ளலார் குறிப்பிடும் அருட்பெருஞ்சோதியும், ஸ்ரீ அரவிந்தர் சொல்கிற Supramental Light அதிமானச ஒளியும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அபிப்பிராயத்தைச் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.

[T R துளசிராம் என்கிற அடியவர் இரண்டு தொகுதிகளில், ஸ்ரீ அரவிந்தர்-வள்ளலார் இருவரது தத்துவங்களையும் ஒப்பீடு செய்து, பல்கலைக் கழக வெளியீடாக, வெளி வந்திருக்கிறது.]

இதே தருணத்தில், இங்கே திருவண்ணாமலையில் ஸ்ரீ ரமண மஹரிஷி, ஆன்மீக நாட்டம் கொண்ட பலரை ஈர்த்துக் கொண்டிருந்தது, அனைவரும் அறிந்த ஒன்று தான். வாசிஷ்ட கணபதி முனி என்கிற தபஸ்வி, இவர் தான் ரமணரை பகவான் என்றும், ரமண மஹரிஷி என்றும் உலகறியச் செய்தவர். அது வரைக்கும், ரமணர், சேஷாத்ரி சுவாமிகளால் அடையாளம் காட்டப்பட்ட பிராமண சாமியாகத் தான் இருந்தார். ரமணர், கணபதி முனிவரை, அன்புடன் 'நாயனா' என்று தான் அழைப்பாராம்.

"நாயனா"வால் ரமண மகரிஷியிடம் அடையாளம் காட்டப் பட்டவர், சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த கபாலி சாஸ்திரியார், ரமணராலேயே "சின்ன நாயனா" என்று அழைக்கப்பட்டவரும் கூட. நாயனாவுடனும், ரமணருடனும் நெருக்கமாக இருந்தாலும், சின்ன நாயனாவுக்குத் தேடல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது, ஸ்ரீ அரவிந்தருடைய Life Divine அப்போது "ஆர்யா"பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த நேரம். மயிலையில் பாரதியைச் சந்தித்த போது "குஹையில் வளரும் கனலே பரமன் மகனே" என்று சொல்லக் கேட்கவும் ஆர்வம் தாங்கமாட்டாமல் சின்ன நாயனா, அதை விவரிக்கக் கேட்க, பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தருடன் நடத்திய ரிக் வேத ஆராய்ச்சிகளைத் தெரிந்து கொள்கிறார்.

கபாலி சாஸ்திரியார் 1931 இல் சென்னை முத்தியால்பேட்டைப் பள்ளியில் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் உத்தியோகத்தை விட்டு விட்டு ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலேயே தங்கி, ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில் பங்கு பெறுகிறார். இதே மாதிரி, ரமண ஆஸ்ரமத்தில் சிறிது காலம் இருந்து கவியோகி சுத்தானந்த பாரதியாரும், பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தருடன், அவரது யோகத்தில் பங்கேற்கிறார்.

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு இதையெலாம் கடந்து ஸ்ரீ அரவிந்த யோகம் பூரண யோகமாகத் தொடங்கிய நாள் ஏப்ரல் 4, 1910. ஒரு நூறு வருடம், ஆன பின்னும், அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக, தேடுகின்ற கண்களுக்குத் தெரிவதாகவும், கேட்பவர்க்குக் கேட்டபடி தருவதாகவும், ஆரம்பமான நாள் இது.

விட்ட குறை தொட்ட குறை என்று சொல்வதே அறியாமையின் வெளிப்பாடு தான். தேவைப்படுகிற தருணங்களில் எல்லாம், குருவருள்திருவருட் துணையாகப் பல வடிவங்களில், பல பேர்களில், பல வழிகளிலும் வந்ததை இப்போது உணர்கிறேன்.

என்றும் விட்டு விலகாத அருளே, என்னை ஸ்ரீ ரமண வழியைத் தெரிந்து கொள்ள வைத்தது.

சத்குரு சாதுராம் சுவாமிகளுடைய அருட்பார்வைக்கு ஆளான போதே, அவரை வைஷ்ணவியின் அணுக்கத் தொண்டராக்கிக் கொண்ட சாது ஸ்ரீ பார்த்தசாரதியும், பழநியில் சிறு வயது சேதுராமன் நாவில் ஆறெழுத்தை எழுதி, அருட்கவியாக ஆக்கி அடியார்க்கு சாதுராம் சுவாமிகளாக தந்த வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளும், இவர்க்கும் குருவாகிக் கருணை செய்த அருணாச்சல ரமணனும், சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளும், இவனை ஆட்கொண்ட அற்புதமும், கண்ணுக்குத் தெரியாத, ஆனால் இடைவிடாது பிணைக்கப் பட்டிருக்கிற ஆன்மீகத் தொடர்பாகவும் அடிநீரோட்டமாகவும் இருப்பதை உணரும் போது, தக்க சமயத்தில் தக்க துணையாகவும், வழிகாட்டியாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் மறுபடி கொண்டு வந்து சேர்த்த அருட் திறத்தை வியந்து போற்றுவதையன்றி என்ன செய்ய முடியும்?

ஒரு உன்னதமான நிகழ்வு நடந்து நூறாண்டு காணும் இந்தத் தருணத்தில், அன்னை என்னும் அற்புதப் பேரொளியை வணங்குகிறேன். ஸ்ரீ அரவிந்தர் அருளிய அமுத மொழிகள் இவனுள் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.


ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!


ஸ்ரீ அரவிந்தர், 1950 இல் எடுத்த படம்