Showing posts with label நேரு பரம்பரை ஊழல். Show all posts
Showing posts with label நேரு பரம்பரை ஊழல். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்!

முதலில் ஒரு பாசிட்டிவ் செய்தி! இந்த வீடியோவைப் பார்த்த பிறகு மூளை வளர்ச்சி 2% தான், கருவைக் கலைத்துவிடுங்கள் என்று டாக்டர்கள் பரிந்துரைத்ததையும் மீறி, மூளைவளர்ச்சி இல்லாத பார்க்கும் கேட்கும் திறனில்லாத குழந்தையைப்  பெற்றெடுத்ததுடன் நம்பிக்கை, மருத்துவர்கள் துணையுடன்  ஆளாக்கி வளர்த்திருப்பதில் தாய்மையின் கருணை எப்படிப்பட்டது என்று வெளிப்பட்டதில் உருகி மெய் சிலிர்த்தேன்!பொய்யில்லை!

நல்ல செய்தியாக ஒன்றைப் பார்த்துவிட்டு, அடுத்து அரசியல் நாராசங்களையும் பார்க்க வேண்டிவருவதில் வெட்கம் தான்! என்ன செய்வது? அரசியல்வியாதிகள் அவரவர் சௌகரியத்துக்கும் சுயநலத்துக்கும் விஷக்கருத்தை விதைத்துக் கொண்டே போவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட முடிகிறதா? 

ஒரு மரத்தின் தன்மை இன்னதென்று அது கொடுக்கும் கனிகளால் அறியப்படும் என்கிறது விவிலியம்! நேரு, இந்திரா, சஞ்சய், ராஜீவ் அடுத்து சோனியா, ராகுல், பிரியங்கா அப்புறம் ராபர்ட் வாத்ரா என்று விரியும் அரசியலின் வேர் எது? உண்மையில் நேரு பாரம்பரியம் எப்படிப்பட்டது? முகநூலில் ஸ்ரீதர் சுப்பிரமணியம் என்பவர் ஆகஸ்ட் 6, 2014 இல் எழுதிய இந்தப் பகிர்வு கொஞ்சம் விவரங்களை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ளச் சொல்கிறது. 


over to ஸ்ரீதர் சுப்பிரமணியம்
இந்திரா காந்தியை சிலாகித்து நண்பர் ஒருவர் பதிவிட அவர் பதிவுக்கு நிறையப் பேர் 'Iron Lady' என்றெல்லாம் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். யோசித்ததில் நம்மில் நிறையப் பேர் இந்திராவை அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று தோன்றியது. ஒரு தீரமான, வீரமான, 'தேசப் பெருமையை' காப்பாற்றிய பெண்மணி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் உண்மையில் எப்படிப்பட்ட பிரதமர்?
இந்திரா காந்தி
=============
இந்திரா காந்திக்கு இப்போதுதான் இரும்புப் பெண்மணி பட்டம் கிடைத்திருக்கிறது. அறுபதுகளில் அவருக்கு இருந்த பட்டப் பெயர் ‘கூங்கி குடியா’, அதாவது ‘ஊமைப் பொம்மை’ என்பதுதான். படிப்புக்கும் அறிவுக்கும் பெயர் போன நேரு குடும்பத்திலே பிறந்த ஒரே மக்குப் பெண். நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்-டால் ரொம்பவும் கிண்டல் செய்யப்பட்டு மனம் நொந்தவர். அந்தக் குடும்பத்திலேயே பட்டப் படிப்பை முடிக்காமல் திரும்பி வந்த முதல் ஆள் (அவரைப் பின்பற்றி அவருக்குப் பின் யாருமே பட்டம் வாங்கவில்லை என்பது வேறு விஷயம்.) இந்தியாவில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் அறுபதுகளில் குழந்தைகளோடு லண்டனில் போய் செட்டில் ஆகி விடலாமா என்று தன் ஆங்கிலேய நண்பி ஒருத்திக்கு கடிதம் எழுதி பதிலுக்குக் காத்திருந்தவர். சாஸ்திரி அகாலமாக இறந்ததும் ஆளாளுக்கு பிரதமர் நீயா நானா என்று போட்டி போட அதை சமாளிக்க முடியாமல் காமராஜால் பிரதமருக்கு முன் மொழியப்பட்டவர். ஒரே காரணம் அவர் ஒரு கூங்கி குடியா, ஆகையால் சொன்ன பேச்சை கேட்பார் என்பதுதான். என்ன, பதவிக்குப் பின் இந்திரா அப்படி ஒரு அவதாரம் எடுப்பார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் செய்த மறைமுக வேலைகளால் காங்கிரஸ் பிளவுற்றது. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்றானது. சுதந்திரத்துக்குப் போராடிய ‘உண்மையான காங்கிரஸ்காரர்கள் எல்லோருமே, காமராஜர் உள்பட, ஸ்தாபன காங்கிரசுக்குப் போனார்கள். அந்தக் கோபத்தில் திமுக உடன் கூட்டு சேர்ந்து காமராஜரை தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஆம், இன்று காமாராஜர் ஆட்சி கொண்டு வருவோம் என்று நொடிக்கு நூறு தடவை முழங்கும் காங்கிரசார் அன்று திமுக-வோடு கை கோர்த்து கர்ம-வீரரை தோற்கடித்தனர்.
இன்று தமிழ்நாடு உள்பட நிறைய மாநிலங்களில் காங்கிரசுக்கு சரியான தலைவர் இல்லை என்று நாம் வருந்துகிறோம். அதற்குக் காரணம் இந்திரா காந்தி. இங்கு காமராஜர், கர்நாடகாவில் நிஜலிங்கப்பா, வீரேந்திர படில் ஆந்திராவில் சஞ்சீவ ரெட்டி, குஜராத்தில் சிமன்பாய் படேல் என்று பெரும் தலைவர்கள் மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை ஒவ்வொருவராக பின்னுக்குத் தள்ளி ஜால்ரா கோஷ்டிகளை மட்டுமே தலைவர்களாக ‘நியமித்து’ பிரதேச காங்கிரசை பலவீனப்படுத்தியவர். வாரிசு அரசியலை முதல் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி எதற்கும் பிரயோசனப்படாத தன் மகன் சஞ்சய் காந்தியை இந்தியாவின் மேல் திணித்தவர். சஞ்சயின் அகால மறைவுக்குப் பின் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ராஜீவ் காந்தியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்துக் கொண்டுவந்தவர். Kitchen Cabinet என்று புகழ் பெற்ற ஒரு சிறிய ‘ஆமாம் சாமி’ கூட்டத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தியவர்.
சோஷலிசம் என்றால் நாம் நிறைய நேரம் நேருவைத்தான் குற்றம் சொல்கிறோம். நேரு காலத்தில் உண்மையில் தனியார் தொழில் முனைவோருக்கு நிறைய சுதந்திரங்கள் இருந்ததன. அதை எல்லாம் நீக்கி அவர்களை எவ்வளவு படுத்த முடியுமோ படுத்தி entrepreneurship என்கிற தொழில் முனைப்பையே நாசம் பண்ணியவர் இந்திரா! . ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகள் கொண்டு வந்து ‘கள்ள மார்க்கெட்’-டை இந்தியாவில் பரவச் செய்தவர். எழுபதுகளில் இந்தி, தமிழ், தெலுங்கு என்று எல்லாப் படங்களிலும் கோட்டு போட்டுக் கொண்டு வந்த ‘கடத்தல்கார’ வில்லன்கள் எல்லாருமே இந்திரா காந்திக்கு கடமைப் பட்டவர்கள். Pricing-control, production-control அதாவது தனியார் தயாரிக்கும் ஒரு பொருளுக்குக் கூட அரசுதான் விலை நிர்ணயம் செய்தது. அவர்களுக்கு ஒரு வருடத்துக்கு தயாரிப்பு எண்ணிக்கை உச்ச வரம்பையும் அரசே நிர்ணயம் செய்தது. பஜாஜ் ஸ்கூட்டருக்கு புக் செய்து விட்டு மக்கள் வருடக் கணக்கில் காத்திருந்தது நினைவிருக்கிறதா? தொழில் வருமான வரி நிறைய நேரம் 80% வரை கூடப் போய் நியாயமான தொழில் செய்பவர்கள் கூட கறுப்புப் பணம் பதுக்க வேண்டிய நிலையை கொண்டு வந்தவர். பிர்லா மேல் கோபம் கொண்டு அவருக்கு இல்லாத தொல்லைகள் கொடுத்து அவர் பாதிக்கு மேல் தொழிலை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக் காரணமாக இருந்தவர்.
தனக்கு எதிராக எழுந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிச இயக்கத்தை முறியடிக்க ‘உன்னை விட நான் பெரிய சோஷலிசவாதி’ என்று காட்ட வரைமுறை இல்லாமல் தேசியமயமாக்கியவர். அதன் மூலம் இந்தியா எண்பதுகளின் இறுதியில் கையிருப்பே இல்லாமல் ரிசர்வ் வங்கி தங்கத்தை இங்கிலாந்தில் அடகு வைத்ததற்கு அவரின் இந்த indiscriminate தேசியமயமாக்கல் ஒரு முக்கிய காரணம்.
இன்று இந்தியாவைப் பற்றி நமக்கிருக்கும் பெருமைகளில் ஒன்று அதன் ஜனநாயகம். அந்த ஜனநாயக வரலாற்றில் இருக்கும் ஒரே கரும்புள்ளி எமெர்ஜென்சி. நீதிமன்றத்தில் கூண்டில் நின்ற முதல் (மற்றும் கடைசி) பிரதமர் இந்திராதான். அவரின் எம்பி தேர்தலில் கட்சி செய்த முறைகேடுகளை விசாரிக்க அவர் கூண்டில் ஏற்றப்பட்டார். செய்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டு, அவரின் எம்பி தேர்தலை செல்லாததாக நீதிமன்றம் அறிவித்ததும் அதைத் தாங்க முடியாமல் இந்திய ஜனநாயகத்தையே சஸ்பெண்ட் செய்து எமெர்ஜென்சி கொண்டு வந்தவர். அந்த இரண்டு வருடங்கள் இந்தியாவின் இருட்டு ஆண்டுகள். பத்திரிகை சுதந்திரம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது. தலைவர்கள், எடிட்டர்கள், மாணவர்கள் என்று கண்ட மேனிக்கு கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ், அத்வானி போன்ற தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். அந்த இரண்டு வருடங்களில் சஞ்சய் காந்தி செய்த அட்டகாசங்கள் பற்றி ஒரு தனி புத்தகமே போடலாம். (வந்திருக்கிறது Sanjay Gandhi - A Life by Vinod Mehta). தவிர 356 என்கிற மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் சட்டத்தை அவர் போல கண்டமேனிக்கு பிரயோகம் பண்ணிய பிரதமர் வேறு யாருமே கிடையாது. அது போதாதென்று எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் செய்வது, குதிரை பேரம் நடத்துவது, (உதாரணம் ஆந்திராவில் என்டிஆர் ஆட்சி கவிழ்ந்து பாஸ்கர் ராவ் வந்தது) எம்எல்ஏ-க்களை ஸ்டார் ஹோட்டல்களில் ஒளித்து வைத்து காப்பாற்றுவது போன்ற ‘ஜனநாயக’ வழிமுறைகளுக்கு முன்னோடியே அவர்தான்.
காஷ்மீர் பிரச்சனை இன்று இந்தியாவின் தலையாயப் பிரச்சனை. நம் ஜிடிபி-யில் கணிசமான பகுதி காஷ்மீரைப் ‘பாதுகாப்பதற்கே’ போகிறது. இந்தப் பிரச்சனை இப்போதிருந்தது போல அப்போது அவ்வளவு மோசமாக இல்லை. இந்தியில் ‘கஷ்மீர் கி கலி’, தமிழில் ‘தேனிலவு’ என்று படங்கள் ஷூட்டிங் நடத்தும் அளவுக்கு அமைதியாகத்தான் இருந்தது. அங்கு கன்னா-பின்னாவென்று தேர்தல் மோசடிகள், ஆட்சியை இஷ்டத்துக்கு டிஸ்மிஸ் செய்தது என்று அந்த அமைதியை நாசம் செய்தவர். பஞ்சாபில் காங்கிரசுக்கு எதிராக அகாலி தள் கட்சி வளர்வதை பொறுக்காமல் பிந்தரன்வாலே என்கிற பிரிவினைவாதியை ஊக்குவித்து அதனால் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் சாக காரணமாக இருந்து கடைசியில் பத்மாசுரன் வரம் கொடுத்த சிவன் தலை மேலேயே கை வைக்கப் போனது போல தான் உருவாக்கிய அசுரனாலேயே தன் உயிரை இழந்தவர்.
பொருளாதார நாசம், தீவிரவாதம், ஜனநாயக சீரழிவு, ஊழல், வாரிசு அரசியல், சர்வாதிகாரம், காமராஜர் மாதிரி சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அவமரியாதை செய்தது, என்று எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் இந்திரா காந்தியின் கைவரிசை இல்லாமல் இருக்காது என்ற அளவுக்கு சர்வகாரணியாய் வியாபித்த தலைவர் அவர்.
Patriots And Partisans என்கிற புத்தகத்தில் ராமச்சந்திர குஹா என்கிற வரலாற்று ஆய்வாளர் ‘இந்திரா காந்தி மட்டும் அறுபதுகளில் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று கற்பனை பண்ணி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ஹூம்!
======================================================
ஆதாரங்கள்:
* India After Gandhi - Ramachandra Guha
* India - Unbound - Gurcharan Das
* Patriots and Partisans - Ramachandra Guha
* India - A Portrait - Patrick French
* Indira - A Life - Katherine Frank
* Sanjay - A Life - Vinod Mehta
* Kashmir - A Tragedy of Errors - Tavleen Singh  
2019 நாடாளுமன்றத் தேர்தல்கள் நரேந்திரமோடி வெர்சஸ் மற்றவர்கள் என்ற மட்டத்தில் தான் நடக்கப் போகிறதா? வேறு அஜெண்டா எதுவுமில்லையா?
இப்படி நாட்டின் பிற பகுதிகள் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், 

தமிழ்நாட்டில் மட்டும் ..................


அராஜகம், தடித்த வார்த்தைகளால் மட்டுமே பெயர் எடுத்த ஒரு மாஜி சினிமா இயக்குனர்(என்ன படம் இயக்கியிருக்கிறார்?)  தனிக்கட்சி ஒன்றைத்துவக்கி இருக்கிறார்! சட்டசபைத் தேர்தல்களில் 25 சீ ட்டாவது ஜெயிப்போம் என்று காமெடி செய்கிறார் பாருங்கள்! தமிழேண்டா என்று தலையில் அடித்துக் கொள்வதா? அல்லது தலையில் தட்டி உட்கார வைப்பதா?  

வரவிருக்கிற தேர்தல் மக்களவைத்தேர்தல் தான்! ஆனாலும் உதிரிகள், சில்லறைகள் சத்தம் ஓங்கி ஒலிப்பதைத் தலையில் தட்டி அடக்கி வைக்க வேண்டிய நேரமும் கூட!  

என்ன சொல்கிறீர்கள்?   


கழுதை மூக்கு வெளுத்துப் போச்சு! காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சு!


எரியும் கொள்ளியுடன் திரியும் குரங்கு….!

திரு. பழ. நெடுமாறன் தினமணியில் எழுதிய செய்திக் கட்டுரை

First Published : 01 Sep 2011 12:00:00 AM IST


2001-ம் ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு பிரதமரையும் உள்ளடக்கிய புதிய லோக்பால் சட்டத்துக்கான வரைவை அளித்தது.

2002-ல் நீதியரசர் எம்.என். வெங்கடசுப்பையா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் 2005-ல் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப் பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் வலிமையான லோக்பால் சட்டம், மக்கள் பட்டயம், நீதித்துறை ஊழலை ஒழிக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்துப் பரிந்துரை செய்தன. ஆனால், இந்தப் பரிந்துரைகள் கிடப்பில் போடப் பட்டன.

பிரதமராக ராஜீவ் காந்தி 1985-ல் பொறுப்பேற்ற பிறகுதான் உயர்மட்ட ஊழல்கள் தலையெடுத்துப் பெருகத் தொடங்கின.

ராஜீவ் காலத்தில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரதமரான பி.வி. நரசிம்மராவ் காலத்தில் ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், தெல்கி முத்திரைத் தாள் ஊழல் போன்றவையும் மன்மோகன் சிங் பிரதமரான பிறகு, இந்த ஊழல்களுக்குச் சிகரம் போன்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் போன்றவை நாட்டையே அதிர வைத்தன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர்கள் காலத்தில்தான் இத்தகைய பெரும் ஊழல்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 64 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்களில் சம்பந்தப்பட்ட தொகை சுமார் 911 லட்சம் கோடியாகும் என குத்துமதிப்பாகக் கூறப்படுகிறது.

அயல்நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியல் வாதிகள், பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான கருப்புப் பணம் ரூ. 300 லட்சம் கோடிகளுக்கும் மேலாகும். ஏழை இந்தியாவின் கடன் தொகை 45 லட்சம் கோடி மட்டுமே. ஊழல் பணத்திலும், கருப்புப் பணத்திலும் ஒரு சிறு பகுதியைக் கொடுத்தால் ஏழை இந்தியாவின் கடன் சுமை அடியோடு நீங்கும். ஆனால், ஊழல் பணமும், கருப்புப் பணமும் பெருகிக் கொண்டிருக்கின்றனவே தவிர, குறைந்தபாடில்லை. இந்திய மக்கள் மீதான கடன் சுமையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

2ஜி, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிற கருப்புப் பணப் பிரச்னை ஆகியவை குறித்து சி.பி.ஐ. பல மாதங்களாக விசாரணை நடத்தியும் எத்தகைய முன்னேற்றமும் இல்லை என்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தலையிட்டது.

சாட்டையைத் தனது கையிலெடுத்து சொடுக்கிய பிறகுதான் சி.பி.ஐ. செயல்படத் தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் கண் காணிப்பில் சி.பி.ஐ. செயல்பட வேண்டிய நிலை உருவாயிற்று. இதன் விளைவாக, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கைது செய்யப் பட்டனர். அப்படியானால் சி.பி.ஐ. இதுவரை மத்திய அரசின் விருப்பு, வெறுப்புகளுக்குத் தக்கப்படி செயல்பட்டது என்பது அம்பலமாயிற்று.

சி.பி.ஐ.யின் பொறுப்பில் விடப்பட்ட போபர்ஸ் ஊழலில் என்ன நடந்ததோ அது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை..

இந்தப் பெரும் ஊழல்கள் நாடெங்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளைத் தொடர்ந்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் திடுக்கிட்டனர். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கொஞ்சமும் கூச்ச நாச்சம் இல்லாமலும் தங்குதடையற்ற வகையிலும், மக்கள் பணத்தைச் சூறையாடி வருவதைக் கண்டு கொதித்தெழுந்தனர். மக்களின் கொதிப்பின் அடையாளம்தான் அண்ணா ஹசாரே நடத்திய இயக்கமாகும்.

ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே அந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்த மத்திய அரசில் இருந்தவர்கள் முயன்றனர். நடைமுறை சாத்தியம் இல்லாதவற்றைக் கூறுவதாகக் குற்றம் சாட்டினர்.

அண்ணா இயக்கத்தை அலட்சியப்படுத்துவதன் மூலம் ஒழித்து விட முயன்றார்கள். ஆனால், ஊழல் ஒழிப்பு இயக்கம் மக்கள் இயக்கமாக வளரத் தொடங்கியதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த ஆட்சியாளர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது மேலும் மக்களின் ஆத்திரத்தைத் தூண்டியது. அதைத் திசைதிருப்புவதற்காக அந்நிய வல்லரசுகளின் கையாள் என அவர் மீது பழி சுமத்தினார்கள்.

அமெரிக்காவுடன் அணு ஆயுத உடன்பாடு செய்துகொண்டு நாட்டை அமெரிக்காவுக்கு அடகு வைத்தவர்கள் தூற்றிய இந்தப் பழியைக் கண்டு மக்கள் நகைத்தார்கள். அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளைப் புறக்கணித்துச் செயல்பட அண்ணா ஹசாரே முயல்வதாக பிரதமர் மன்மோகனும் இளவரசர் ராகுலும் குற்றம் சாட்டினார்கள்.

சோனியா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஆலோசனைக் குழு பிரதமருக்கும் மேலான பிரதமராக சோனியாவையும், மத்திய அமைச்சரவைக்கு மேலான அமைச்சரவையாக இக்குழுவையும் ஆக்கியது. இத்தகைய குழு அமைப்பதற்கு அரசியல் சட்ட சம்மதம் உண்டா, நிச்சயமாக இல்லை.

நேரு, இந்திரா போன்றவர்கள் காலங்களில்கூட இத்தகைய குழுக்கள் ஒருபோதும் அமைக்கப்பட்டதில்லை. ஆனால், அவர்களைவிட பெரிய தலைவர்களாக மன்மோகனும் சோனியாவும் தங்களைக் கருதுகிறார்கள். உண்மையில் இவர்கள்தான் அரசியல் சட்டத்தை மதியாதவர்கள்.

நாடாளுமன்றத்தின் மாண்பை அண்ணா ஹசாரே இயக்கத்தினர் சீர்குலைக்க முயல்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால், நாடாளுமன்றத்தைவிட மக்களே உயர்ந்தவர்கள் என்பதையும் அந்த மக்களிடமிருந்தே நாடாளுமன்றம் அதிகாரம் பெறுகிறது என்பதையும் இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள்.

பத்திரிகைகள் பொறுப்பற்று நடந்துகொள்வதாக மன்மோகனும் அவரது சகாக்களும் சாடினார்கள். 2008 டிசம்பரில் பயனியர் ஏடு, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முதல் செய்தியை வெளியிடாமல் போயிருந்தாலோ, அதைத் தொடர்ந்து பத்திரிகைகள் யாவும் இப்பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்லாமல் போயிருந்தாலோ, ராசாவும் கனிமொழியும் பிறரும் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.

அதிகார பீடத்தில் உள்ளவர்களுக்கு மசியாமலும் யாருக்கும் அஞ்சாமலும் இந்த ஊழல்களைத் துணிவாக வெளியிட்டு மக்கள் கவனத்தை ஈர்க்காமல் போயிருந்தால் ஊழல்கள் மறைக்கப் பட்டிருக்கும்; ஊழல் பேர்வழிகள் தப்பியிருப்பார்கள்.

தனது நிழலின்கீழ் அமைச்சர்களும், கூட்டணித் தலைவர்களும் மேற் கொண்ட ஊழல்களை மன்மோகன் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். போபர்ஸ் ஊழல் பிரச்னையில் ராஜீவ் அமைச்சரவையில் இருந்து மனசாட்சியுடன் வெளியேறிய வி.பி. சிங்குக்கு இருந்த நேர்மையும் துணிவும் மன்மோகனுக்கு இல்லை.

பிரதமர் பதவியில் ஒரு பொம்மையாக அவரை உட்கார வைத்துவிட்டு ஊழல்களையெல்லாம் திரைக்குப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிற கரங்கள் யாருடைய கரங்கள் என்பது மக்களுக்குத் தெரியும். நீண்ட நாளைக்கு அதை மூடி மறைக்க முடியாது.

திரைக்குப் பின்னிருந்து இயக்கும் இந்தச் சக்திக்கும் மேலான அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் விசுவரூபம் எடுத்து சி.பி.ஐ.யை தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டதால்தான் ஊழல் பேர்வழிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சி.பி.ஐ.யும் தவறு புரிய வழி இல்லாமல் போயிற்று.

பிரதமருக்கு ஆலோசனை கூறுபவர்களாகவும் அவர் சார்பில் பேச்சு வார்த்தைகள் நடத்துபவர்களாகவும் இருக்கக்கூடிய பிரணாப் முகர்ஜி,

ப. சிதம்பரம், கபில்சிபல் போன்றவர்களில் ஒருவர்கூட நாடறிந்த மக்கள் தலைவர் அல்லர். மேலிடத்தின் தயவால் இந்தப் பதவிக்கு வந்தவர்கள். மக்கள் மனத்துடிப்பை உணர முடியாதவர்கள் அல்லது மதிக்கத் தெரியாதவர்கள். இவர்களது தவறான ஆலோசனைகளை ஏற்றதால் பிரதமர் மக்கள்முன் தலைகுனிந்து நிற்கிறார்.

நாடெங்கும் ஊழல் காடாகிப் போனதோடு நிற்கவில்லை. மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அசாம், நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அவசரச் சட்டத்தின் மூலம் அந்த மக்களுக்கு சொல்லொண்ணாத கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன.

ஒரிசாவில் பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்திவரும் சுரண்டலை எதிர்த்து பழங்குடியினர் போராடுகிறார்கள். நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளான பழங்குடி மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்கள்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு அந்நிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. நிலம் இழந்த விவசாயிகள் பிழைப்புத்தேடி நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். பிழைக்க வழியில்லாத விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

மக்களுக்கும், நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் மின்வெட்டு. ஆனால், அந்நிய நிறுவனங்களுக்குத் தங்கு தடையில்லாத மின்சாரம் அளிக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட் மலைப் பகுதிகளில் உள்ள கனிம வளங்களை அந்நிய நிறுவனங்கள் சூறையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராகப் போராடும் மலைவாசி மக்களை மாவோயிஸ்டுகள் எனக் குற்றம்சாட்டி அவர்களுக்கு எதிராக ராணுவம் ஏவப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்கள் திட்டமிட்ட இனப் படுகொலை செய்யப்படுவதற்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப் படுவதற்கும் இந்திய அரசு துணையாக நிற்கிறது.

இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களை இந்திய அரசு அலட்சியம் செய்கிறது. மொத்தத்தில் மன்மோகன் தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டை அழிவுப் பாதையில் இழுத்துச் செல்கிறது.

கொங்குவேள் எழுதிய பெருங்கதைக் காவியத்தில் வரும் ஒரு பாடலைத்தான் இன்றைய சூழ்நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது.

குரங்கு ஒன்றை நண்டு கவ்வியது. தேள் கொட்டியது. பேயும் பற்றியது. இவை போதாதென்று அந்தக் குரங்கு மதுவைக் குடித்து, இஞ்சியைக் கடித்து, காஞ்சொறியின் பொடியைத் தூவிக்கொண்டு கையில் எரியும் கொள்ளிக்கட்டையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டது.

அந்நிலையில் அது செய்யும் கேட்டுக்கு அளவுண்டா?

அதுபோல் புல்லியர்களிடம் ஆட்சிப் பொறுப்பு சேர்ந்துவிட்டால் அவர்கள் செய்யும் கேட்டுக்கும் அளவில்லை என்பதுதான் அந்தப் பாட்டின் பொருளாகும்.

குரங்குமாய் நண்டுகட்டித் தேளும் கொட்டிக்
குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி
இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி
இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்
தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில்
தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்
கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்
காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.

இதைப் படிச்சீங்களா?

கம் செப்டெம்பர்! காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சு...!