துளித்துளி மழைத்துளி! கொஞ்சம் சேத் கோடின்!

2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்கு வலையெழுத்து பிடிபட்டு விட்டதா என்ன? இல்லை என்றுதான்  தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறோம், யார் வாசிப்பதற்காக எழுதுகிறோம் என்பதில் அடிக்கடி சந்தேகமாக ஒரு கேள்வி வந்து போகும். ஆனாலும் சரியான பதில் கிடைத்ததில்லை.

கொஞ்சம் இடைவெளி விட்டு இன்றைக்கு எழுத நினைத்தபோது தான் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது. தி. ஜானகி ராமன் சொன்னமாதிரி எழுத்து வாசிப்பு என்பது அவரவர் ஆத்ம திருப்திக்காக மட்டுமே! உண்மைதான் இல்லையா?!

இப்படியெல்லாம் குழப்பிக்கொள்ளாமல், மாற்றி யோசித்தால் நான் ஜெயமோகனுக்கோ அல்லது உண்மைத்தமிழனுக்கோ போட்டியாக இங்கே நான் எழுத வரவில்லை. அது என்னுடைய வேலையுமில்லை!  அடிப்படையில் நான் ஒரு வாசகன் மட்டுமே! நல்ல எழுத்தைக் கொண்டாடும் மனநிலையில் எழுதுவதற்கு ஆரம்பித்தது, இன்றைக்கு எல்லா விஷயங்களையும் தொட்டு எழுதுகிற அளவுக்கு 1250+ பதிவுகளைத் தாண்டி நிற்கிறது.

எனக்குப் பிடித்த பதிவர் சேத் கோடின் இங்கே சொல்கிற மாதிரி ஒவ்வொரு துளித்துளியாக, ஒரு கமிட்மென்ட்டுடன் எதையும் செய்யவேண்டும் என்பதைத்தாண்டி வேறென்ன விசேஷமாகச் சொல்ல இருக்கிறது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இப்போது வாசிப்பில்! 

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை  புத்தகம் வெளிவந்து நீண்ட காலமாகிறது. முக்குலத்தோர் வரலாறு எனக்குப் பரிச்சயமானதுதான் என்பதால் பதிவர் குட்டி டின் என்கிற தினேஷ் ராம் இதற்கு ஒரு விரிவான விமரிசனம் எழுதியதைப் படித்த பிறகும் கூட வாசிக்கத் தோன்றியதில்லை. இப்போது தவற விட்ட நிறைய புத்தகங்களைத் தேடியெடுத்து வாசிக்க அவகாசம் கிடைத்து இருக்கிறது.   



மீண்டும் சந்திப்போம்.