போராட வேண்டிய விஷயங்களுக்கு நிச்சயமாகப் போராடத் தான் வேண்டும்! தவறு இல்லை!
சுதந்திரமான அடிமைகள் என்று ஜெயகாந்தன் பேசியதைத் தொட்டு, சில பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாக சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் 11 இழையில் படித்தேன் என்று சொல்லியிருந்தேன் இல்லையா?
போர்க்கோடி தூக்குகிற அளவுக்குத் தவறாக என்ன சொல்லி விட்டார் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை. திருமதி சீதாலட்சுமியின் இழையில் முதல் நான்கு வரிகளும், கடைசியாக ஜேகே சொன்னதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு, சொல்கிறேன் என்றும் முடித்திருந்ததையும் சொல்லி இருந்தேன். சீதம்மா எழுதிய நான்கு வரிகளுக்கு அதிகமாக இன்னும் ஒரு பத்துப் பன்னிரண்டு வரிகள், இணையத்தில் தேட இன்று தான் தெனாலிடாட்காம் என்ற தளத்தில், இது பற்றி வெளியாகியிருந்த செய்தி, கிடைத்தது.
நன்றியுடன் மீள் பதிவு செய்யப் படுகிறது

பொருள், போகம்,புகழுக்கு அடிமையாகும் பெண்கள்: எழுத்தாளர் ஜெயகாந்தன் |
|
செவ்வாய்க்கிழமை, 29, டிசம்பர் 2009 (11:29 IST)
சென்னை:
''முன்பு பெண்கள் கணவனுக்கு அடிமையாக இருந்தார்கள் ஆனால் தற்போது சுதந்திரம்பெற்று பொருள், போகம், புகழ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள். சுத்திரமான அடிமையாக ஆகிவிட்ட பெண்களுக்கு விடுதலையே கிடையாது"என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சென்னையில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இலக்கிய- ஆன்மிக சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் பேசிய எழுந்தாளர் ஜெயகாந்தன் மேலும் கூறியது...'' பாரதியார் கடவுளிடம் வேண்டும்போது சுதந்திரம் வேண்டும் என்றார் அவருக்காக அல்ல இந்த தேசத்துக்காக சுதந்திரம் வேண்டும் என்றார்.
கடவுள் உண்டா இல்லையா என்பது பிரசனையில்லை. கடவுள் வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் முக்கியம். ஆத்மா மனிதநாக பிறந்த அனைவருக்கும் உண்டு நாத்திகனுக்கும் உண்டு, நானும் நாத்திகனே.
நான் கோவிலுக்கு செல்வதில்லை, சடங்குகள் எல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனால் எதைச்செய்தாலும் விநாயகரை நினைக்காமல் தொடங்குவதில்லை. அந்தக்காலத்தில் படித்தவர்கள்தான் அடிமைகளாக இருந்தனர். பெண்கள் தங்களின் கணவருக்கு அடிமைகளாக இருந்தார்கள்.
ஆனால் கணவர்களோ வேறு பல விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்தனர். இப்போது பெண்கள் சுதந்திரம் பெற்று கணவர்களைபோன்றே அதற்கெல்லாம் அடிமைகளாக மாறிவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையாக இல்லை.
பெண்கள் பொருள், போகம், புகழ் என பல்வேறு விஷயங்களுக்கு அடிமைகளாகிவிட்டனர். அதுவும் சுதந்திரமான அடிமைகளாக மாறுவதுதான கொடுமை, அவர்களுக்கு அதிலிருந்து விடுதலையே கிடையாது"என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

|
இதைப் படித்த பிறகும் கூட அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டார், என்ன புள்ளி விவரத்துடன் நிரூபிக்கவேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. புள்ளிவிவரத்தோடு பேச முனைந்தாலே முதலில் வருவது குழப்பமும், அடிதடியும் தான்!
மின்தமிழில் திருமதி சீதாலட்சுமி எழுதிய முந்தைய பகுதிகளைப் படிக்க, தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கி பக்கங்களில் பார்க்கலாம்!
தமிழ் எழுத்துலகம் சாரு-- ஜெமோ மாதிரியானவர்களிடம் சிக்கிக் கொண்டு ஒரு புறம், திறனாய்வு செய்கிறேன், விமரிசனம் செய்கிறேன் என்று கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிற இடிமன்னர்கள்
ஒரு புறமுமாக, இப்படி தமிழ் எழுத்துலகமும் வாசகர்களும் பிரிந்து கிடக்கிறார்கள். நல்ல வாசகனை உருவாக்கத் தெரியாதவர்கள் எல்லாம் தங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டு, எழுத்தாளுமை நிறைந்த படைப்பாளியை குறை கூறுவதிலேயே, தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் கேவலமான காலம் இது என்று தான் சொல்ல வேண்டும்!
இவர்கள் வழியாக நல்ல எழுத்தை, அடையாளம் கண்டு கொள்ள முடியாது! வாசகன் தானே, தனது வாசிக்கும் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டு தானே தான் எது நல்ல எழுத்து என்பதைத் தீர்மானித்தாக வேண்டும்! தன சுயபுராணத்தை பொடியே சொரிந்து கொண்டிருப்பபவர்களிடமிருந்து அல்ல!
கனிமொழியோடு, ஜெயகாந்தனின் எழுத்தாளுமை என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டதற்காக ஒரு விமரிசனம்!
கனிமொழியின் அரசியல் சார்பு வேண்டுமானால், ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம், அதற்காக, இலக்கிய ரசனையே இல்லாதவர், பாராட்டுவதற்குக் கூடத் தகுதியற்றவர் என்று எப்படி இவர்கள் ஒரு அவசர முடிவுக்கு வருகிறார்கள்?
உடல் நலம் சரியில்லாத தருணத்தில், கலைஞருடைய உதவியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று வாதாடுகிறார்கள்! அங்கே ஜேகே பிரதானமான காரணம் இல்லை, கருணாநிதி மீதான வெறுப்பு மட்டுமே!
ஆக,நல்ல எழுத்தை அங்கீகரிக்கப் பழகுகிற வாசிப்புத் தளம் இன்னமும் விரிவடைய வேண்டும் என்று தான் தோன்றுகிறது!
இலக்கியம் என்பது வெறும் வார்த்தை அலங்காரத்தில் இல்லை, முனைவர் நா.கண்ணன் தனது பதிவில் சொல்கிற மாதிரி நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறைகள் தெரியாது! நெஞ்சம் நிறைய நேசம் வைத்துப் படிக்க வருபவருக்கும் இதமாகப் பரிமாறத் தெரிந்தவனே நல்ல எழுத்தாளன்!
அவன் எழுதுவது மட்டும் தான் எழுத்து! கூழாங்கல்லை ஒதுக்கி விட்டு மாணிக்கத்தை மட்டும் தேடுகிற தேடல் உருவானால், வெட்டிக் கூளங்கள் தானே ஒழிந்து போகும்!
இருள் விலகி ஒளி பிறக்கட்டும்!