Showing posts with label Symbol Dawn. Show all posts
Showing posts with label Symbol Dawn. Show all posts

அன்னை என்னும் அற்புதப் பேரொளி

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன் திருவடிகளை  சரணடைகிறேன்.உனது பிரியத்துக்குத் தகுதியானவனாக, உனது கருணையால் நிறைவிக்கப்படுகிறவனாக வரம் அருள்வாய்.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அனுபவம். ஒவ்வொன்றையும் உனது அருட்திறத்தை உணர்ந்து அனுபவிக்கும் பக்குவம் வருவதும் உனது சித்தப்படியே ஆகட்டும் என்ற சரணாகதி கைகூடுவதும்  உனதருளே.

என் செயலாவதொன்றில்லை.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 



“This world is her long journey through the night,
The suns and planets lamps to light her road,
Our reason is the confidante of her thoughts,
Our senses are her vibrant witnesses.
There drawing her signs from things half true, half false,
She labours to replace by realised dreams
The memory of her lost eternity.”

--Sri Aurobindo






வருகிற பாதையும், தொடர்கிற பயணமும்!





வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லை! ஒரு பதில் தரவில்லை!



சவலையழுதது! திவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்! என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்! கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயே! நீ இல்லை! நீ வெறும் பொய் தான்! அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!



நாத்திகம் பேசின காலமும் வந்தது! வாய் கூசாமல் ஏசின காலமுமானது
சாத்திரம், கோத்திரம் சொல்வது பொய்யெனத் தருக்கமும் வந்தது.
ராகுவின் பார்வையில் அப்படியிருக்கும் சோதிடம் சொல்லும் கணக்கு இது
சோதிடம் சொல்வதை நம்பவில்லை ஏளனம் செய்வதை நிறுத்தவில்லை
ஒவ்வொரு இருட்டும் பெருவெளிச்சம் வயிற்றில் சுமப்பதை அறிகிற
தருணமும் வந்தது ஒருநாள்! இருளைக் கிழித்துப் புலரும் வைகறை வந்தது!



ஒளிவரும் முன்னால் துயிலெழும் தன்மை வைகறை சொல்லும் குறியீடு!
ஒளிவர வேண்டும் மனிதர்கள் உணர்வில் விழிப்புச் சொல்லும் குறிச் சொல்லே!
தனித்திருந்த ஒருபோது! எதுநடந்தாலும் எனக்கென்ன என்று இருந்த பொழுதினிலே
என்னது என்பதைப் புரியச் சொன்னாள்! அப்போதெனக்கு ஒருசிறிதும் உறைக்கவில்லை!
பொறுத்துக்கொள்வது முதல்தேவை பொறுத்தால் அங்கே வரும் தீர்வு
பொறுமையிழந்தால் நோவும் வரும் வலிகூடும் பொறுத்திரு மகனே! என்று சொன்னாள்



அன்னை சொன்னது அப்போதெனக்கு ஒருசிறிதும் புரியவில்லை! எப்பொழுதும்போல்
ஒரு ஆர்ப்பாட்டம்! ஆடி அடங்கட்டும் என்றவள் காத்திருந்தாள். ஆடிமுடித்ததில்
சேர்ந்த வலி!தோற்றதில் விளைந்த அவமானம்! இரண்டும் சேர்ந்தால் என்ன வரும்?
திருப்புகழ் பாடத் தெரியவில்லை! குரைத்தல் தவிர்த்துத் தெருநாய்க்கு வேறென்ன வரும்?
தாயென்று நம்பியழைத்தேனே!நீயுமொரு தாய்தானோ? அடிமேலடி விழப்பார்த்திருந்தாயே! தயவில்லாதவள்நில்லாதென்முன்! போய்விடு! போய்விடு!



இததனைகோபம் ஏதுக்கடா? இரும்பாய் இருக்க ஆசைகொண்டால்
பழுக்கக் காய்ச்சி அடிமேல் அடிதான் மாற்றம் தரும்! தங்கமாய் இருந்து
நெகிழ்ந்திருந்தால், இத்தனை வாட்டம் வேண்டாமே! உனக்கேன் இன்னமும்
புரியவில்லை?குறுநகையோடவள் சொன்னாள் எனக்கோ கோபம் குறையவில்லை!
வாட்டுதல் இங்கே எதற்காக? இந்தச் சாக்குகள், ஆறுதல் எதற்காக?
வாட்டுவதுனக்குப் பெருஞ்சுகமோ? பிள்ளையைப் படுத்தல் தாயாமோ?



அழகாய் இருக்கிறதே உன் நீதி! ஜாலம் செய்யவா இது நேரம்?
புரியவில்லை அம்மா! போய்விடு என்னைத் தனியாய் இருக்கவிட்டு!
பொறுமித் தீர்த்தவன் கண்களிலே வெள்ளத்தைப் பார்த்துப் பரிவுடனே
அருமை மகனே! எத்தனை நேரம் அழுதாலும், வருகிற அனுபவம் நில்லாது!
வளர்ச்சி என்பதுமே வலியில் தான் பிறக்கும் என்பது தெரியாதா?
இருளில் இருந்து வெளிச்சம் பெறுவதற்கு வலிதான் பாதை!அறியாயோ?
 


அழுவதும் உதவாது! ஆற்றாமை உதவாது! புரிதல் இங்கே வேண்டுமென்றால்
அழுவதை உடனே நிறுத்திவிட்டு அனுபவம் சொல்வதைக் கேட்டுப் பார்!
வலியைத் தருபவள் தான் வலியையும் தாங்குகிறேன் இடையில் நீயேன் குழப்பம் கொண்டு
இது எனது! வலி எனது! என்பதும் எதற்காக? நீஎன்பதும் நானென்பதும் வெவ்வேறா?
விளையாட்டாய்ப் பிரபஞ்சம் இயங்கும் விதி இது தான்! விளையாடப் பழகிக் கொள்!
ஒவ்வொரு இருட்டுக்குள்ளும் பெருவெளிச்சம் கருவினிலே இருப்பதைப் பார்!



ஒவ்வொரு உண்மையுமே வெளிப்படும் தருணம் எதிர்நோக்கி இருப்பதும் பார்
இவ்விதமாகப் புரிந்துகொண்டால் வலியேது? துயரேது? சொல்லிவிட்டுப்போய் விட்டாள்!
சொன்னதென்பது  புரியாமல் என்னமோ ஏதோ செய்துவிட்டு அவத்தை கூடவுமே
என்னம்மே! விரைந்து நீ வா! கதறி அழுதவன் குரல் கேட்டு ஓடிவந்தாள்
எது நடந்தாலும் எனக்கொரு அன்னை இருக்கின்றாள், அவள் அதை நலமாய்ப் பார்த்துக் கொள்வாள்
சும்மாயிருப்பதுமே பெருந்தவம்தான்! சும்மா இருக்கப் பழகிக் கொள்! ஒளியும் வரும்!



வருகிற வேளை வரும்வரை என் பெயர் சொல்லி காத்து இரு! என்று சொன்னாள்
வைகறைப் பொழுதில் இருள்விலகும்! அவள் பெயர் சொல்வது என் வேலை!
எனக்கென்று தனித்தவொரு அடையாளம் இங்கில்லை எல்லாம் இங்கே அவள் சித்தம்
வருவது எல்லாம்அவள்தரும் அனுபவம் தான்! வலியோ, வழியோ அவளே
இருப்பதனால் நான் சுமப்பதென்று எதுவுமில்லை! இதுதான் நான் வரும் பாதை
வருகிற பாதை தொடர்கிற பயணம் எல்லாம் என் அன்னை காட்டுவதே!

 இது வேறோர் பதிவில் எழுதிய பின்னூட்டக் கவிதையின் விரிவு படுத்திய பதிவு


காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர்!


"வைகறை" விடியலுக்கு ஒரு அதியற்புதமான தமிழ்ச் சொல்.
காலை எழுந்தவுடன் காப்பி பின்பு படிக்கக் கொஞ்சம் பேப்பர் என்று தொடங்கும் சராசரி பொழுதைச் சொல்வது அல்ல இது.

உஷத்காலம் என்று சொல்லப் படுகிற இந்த "வைகறை" பொழுது, வேத மரபில் ஒரு நுண்ணிய பொருளை உணர்த்துவது- ஆன்ம விழிப்பைச் சுட்டுவது- அறிவு நிலையின் விழிப்பைச் சுட்டுவது.

"வைகறை" என்கிற பெயரிலேயே ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் வெளியீடாகத் தமிழில் ஒரு காலாண்டிதழ வெளிவந்துகொண்டிருக்கிறது.அச்சு அமைப்பு, உள்ளீடுகள், மொழிபெயர்ப்பில் காணப் படும் கரடுமுரடுகள் என்று பல குறைகளுடன் இருந்ததால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சிறிது காலம் வாங்கிப் படித்ததோடு சரி. அப்புறம் இந்த இதழை மறந்தே போய் விட்டேன். தற்செயலாக, கூகிள் ஆண்டவர்உபயத்தில் மேலே படத்தில் காண்கிற வலைப் பக்கத்தைக் கண்டேன். வலைத்தளம் இன்னமும் வடிவமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற அறிவிவிப்பு அடியில் செய்தியாக ஓடிக் கொண்டே இருக்கிறது. வேறு பல மொழிகளில் காட்டிய ஆர்வத்தை, தமிழில் ஆசிரம நிர்வாகிகளோ, ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பயிலும் தமிழறிந்த அன்பர்களோ காட்டவில்லை என்ற மனக் குறை எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்த புதிதில், குள்ளச்சாமியோடு பழகிய அனுபவங்கள் [பாரதியின் கவிதைகளில், குள்ளச்சாமியைப் பற்றிப் படிக்கலாம்], பாரதியோடு ரிக் வேத ஆராய்ச்சி செய்தது இப்படிப் பல விஷயங்கள், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்த போது, ஒவ்வொரு நாளும் ஒரு பாமாலையைத் தொடுத்து, ஸ்ரீ அன்னையிடத்தில் சமர்ப்பித்தது, இப்படிப் பல தேடல்கள் இன்னமும் இவனுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருளால், இவனது தேடல்களுக்கு உதவியாக இந்த வலைத்தளம் வளர வேண்டும் என்பது வெறும் ஆசை மட்டும் அல்ல, ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பிக்கப் படும் இன்றைய பிரார்த்தனையும் கூட.

இனி "வைகறை"யைப் பற்றி - The Symbol Dawn in Savitri....

ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய நெடும்தவத்தின் பலனாக விளைந்தது "சாவித்திரி" எனும் அற்புதக் காவியம். மகாபாரதத்தில் ஒரு துணைக் கதையாக வரும் சத்தியவான் - சாவித்திரி கதையையே அதன் உள்ளார்ந்த பொருளில், தன்னுடைய யோகத்தில் கண்டதை விவரிக்கும் பெரும் காப்பியமாக ஏறத்தாழ 24000 வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுதினார். யோக சாதனையில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டு, அதற்கேற்ப சாவித்ரியையும் பலமுறை திருத்தி அமைத்திருக்கிறார். ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் கூட இவ்வளவு பெரிய கவிதையை வடித்ததில்லை. மொழி ஆங்கிலம் என்றாலும், இந்திய தத்துவ மரபின் படியே ஸ்ரீ அரவிந்தரின் "சாவித்திரி" பெரும் காப்பியம் அவர் கண்ட உண்மைகளை, ஒரு புதிய தொடக்கத்தின்வருகையை, மனிதன் தன்னுடைய விலங்கிற்கும் கடவுளுக்கும் இடைப்பட்டதான நிலையிலிருந்து இன்னொரு படி முன்னேறி, ஸ்ருஷ்டியின் அடுத்த கட்ட வளர்ச்சியை அறிவிக்கும் கட்டியமாக இருக்கிறது.

"உரை மனம் கடந்த ஒரு பெரு வளி- அதன் மேல்

அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதி"

என்று திருவருட் பிரகாச வள்ளலார் அறிவித்தபடி, வாக்கு, மனம் கடந்த நிலையில் அதிமானச புருஷன் வருகைக்குத் தயார் செய்யும் பணியில் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே த்யாகம் செய்தார். அதிமானசப் பொன்னொளி இந்த பூமியில் இறங்கினாலும் கூட, அதைத் தாங்குவதற்குத் தகுந்த பாத்திரம் இல்லை. தேடிவந்த பெரும் அருளை உணர்வார் இல்லை என்ற நிலையில், ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய உடலையே அது இறங்கிச் செயல் படுவதற்காகத் தந்தார். வேறு எந்த மனிதரும் தயாராக இல்லாத நிலையில், ஸ்ரீ அரவிந்த அன்னை, தன்னுடைய உடலையே ஒரு பரிசோதனைக் களமாக்கி இயற்றிய பெரும் தவம் Agenda வில் 6000 பக்கங்களில் ஓரளவுக்கு விவரிக்கப் பட்டிருக்கிறது.

"நூறு இளைஞர்களைத் தாருங்கள். ஒரு புதிய பாரதத்தை உருவாக்கித் தருகிறேன்" என்றார் சுவாமி விவேகானந்தர்.

தன்னலமில்லாத, முழுமையாக இறைவனுடைய சித்தத்திற்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் 12 பேர் போதும், புதிய தொடக்கத்தைச் சாதித்து விடலாம் என்று ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் உறுதியாக இருந்த போதிலும், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கத் தவிக்கும் இந்த உலகம், திருவுரு மாற்றத்திற்குத் தயாராகாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், இந்த உலகம், படைப்புக்கள் அனைத்தும் ஒரு திருவுருமாற்றத்திர்காகத் தயாராகிக் கொண்டு தான் இருக்கிறது. ஆர்வத்தோடு பங்கேற்கிறவர்கள் சிலரே ஆயினும், இறையருள், எதிர்மறைப் போக்குகளையே தனது கருவிகளாகக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நம்மை அறியாமலேயே, ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கு நாம் தயார் செய்யப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

சாவித்ரி மகா காவியத்தைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னார்:

“Savitri, this prophetic vision of the world's history, including the announcement of the earth's future.

The importance of Savitri is immense. Its subject is universal. Its revelation is prophetic. The time spent in its atmosphere is not wasted.”


இங்கே "வைகறை" ஒரு புதிய விடியல் என்று உருவகப்படுத்துவது வெறும் கவிதைச் சுவைக்காக இல்லை. ஒரு புதிய உலகத்தின் பிறப்பைச் சொல்ல வந்த செய்தி. வேதங்கள் எப்படி சில குறியீடுகளை, உருவகங்களைக் கொண்டிருந்தனவோ, அதே மாதிரி 23,813 வரிகளில், கவனச் சிதறல் இல்லாமல் இருந்தால், தான் கண்ட அதே அனுபவங்களையும், உண்மையையும் படிப்பவருக்கும் கொடுக்கும் மந்திர சித்தியுடன் கூடினதாய் ஸ்ரீ அரவிந்தர் நமக்கு அருளியிருக்கிறார் என்கிறார் ஸ்ரீ அன்னை.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன்னை வணங்குகிறேன். உன்னைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ அரவிந்தர் அருளமுதமான "சாவித்ரி"யைப் புரிந்து கொள்கிற உணர்வின் விழிப்புநிலையை வரமாக அருள்வாய். ஒவ்வொரு தருணத்திலும், உன்னிடத்திலிருந்து கிடைக்கிற அருளை நன்றியோடு நினைவிற்கொள்ளும் மனப்பாங்கினை வரமாக அருள்வாய்.ஒவ்வொரு செயலிலும், விளைவிலும் உனது அருளே வெளிப்படுகிறது, வழி நடத்துகிறது, என்பதை மறந்து விடாமல், உனது கருணைக்குத் தகுதியானவனாக வரம் தருவாய்.

எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

பொய்மையிலிருந்து, உண்மைக்கு வழிநடத்துவாய், தாயே!

இருட்டிலிருந்து, வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் தாயே!

அகம், புறம் இரண்டிலும் நிறைந்துகிடக்கும் பகையிலிருந்து என்னை மீட்பாய் தாயே!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!