Showing posts with label கண்ணன் வந்தான். Show all posts
Showing posts with label கண்ணன் வந்தான். Show all posts

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

 

கூடாரை வெல்லும் கோவிந்தன்



27. சர்க்கரைப் பொங்கல் பாட்டு.
         
விரதத்திற்கு உரிய சங்கு பறை முதலியவற்றையும் பல்லாண்டு இசைப்பாரையும் அருளவேண்டும் என்று கேட்ட ஆய்ச்சியரை நோக்கிக் கண்ணன், 'பெண்களே! இவ்வளவு தானா உங்கள் தேவை? தருகிறேன்' என்று சொன்னதாகக் கருதலாம். அதற்குப் பெண்கள் பதில் சொல்வதுபோல், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து மேலும் தங்களுக்கு வேண்டியவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.

'எம்பெருமானே! மார்கழி நீராட்டத்தை ஒட்டி நோன்பு நோற்கத் தேவையான சாதனங்களை ஏற்கனவே குறிப்பிட்டோம். நோன்பு நோற்று முடிந்த பின் நாங்கள்  உன்னிடத்தில் பெறவேண்டிய சம்மானங்களும் உண்டு. அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள் புரிய வேணும்' என்கிறார்கள் இந்தப் பாசுரத்திலே.


சம்மானத்தை வேண்டிக் கொள்ளும்போது, 'கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!' என்று கூப்பிடுகிறார்கள் கண்ணபிரானை. அடிபணியாதவர்களை – பகைவர்களை – வெல்லும் சிறப்பை உடையவன் கண்ணன் என்பது பொருள்.  

கூடாதவர்களை (பகைவர்களை) வெல்லுகிறவன், கூடும் அவர்களுக்கு – அன்பர்களுக்கு – தோற்று நிற்கிறான் என்பது குறிப்பு.

தங்களுடைய அன்பையே, ஆசையையே, பேசி வந்தவர்கள் கண்ணனுக்குத் தங்கள் மீதுள்ள ஆசை தங்கள் ஆசையைக் காட்டிலும் எவ்வளவோ பெரிது என்று கண்டுபிடித்தார்கள் அல்லவா? அப்படியே இப்போதும் ஒரு புதுமையைக் கண்டுபிடிக்கிறார்கள். 'கண்ணனுடைய கலியாண குணங்களுக்கு நாங்கள் தோற்றோம், தோற்றோம்!' என்று இதுவரை நம்பியிருந்தார்கள்; சொல்லி வந்தார்கள். இப்போது 'கண்ணன் தோல்வி' என்ற ஒரு புதுமையைக் கண்டுபிடிக்கிறார்கள். அன்பர்கள் விஷயத்தில்  கண்ணனுக்குத் தோல்வியே வெற்றி! – என்கிறார்கள். சிறுமியர்களாகிய தங்களுடைய மழலைச் சொற்களுக்குத் தோற்றுப் பறை முதலியவற்றையும் இவர்கள் வேண்டின படியே தந்தருள இசைந்து விட்டானல்லவா?

கூடாரை (எதிரிகளை) சக்தியாலே வெல்லும் பெருமான் சௌந்தர்யத்தாலே – ரூப சௌந்தர்யத்தாலும் குண சௌந்தர்யத்தாலும் – கூடும் அன்பர்களை வெல்லுகிறான் என்பது உண்மைதான். எனினும், அம்புக்குத் தோற்காத பெருமாள் அன்பிற்குத் தோற்கிறானாம். இந்தத் 'தோல்வி'யைப் புலப்படுத்தி இறைவனது சீலத்தையும் எளிமையையும் வெளியிடுவது 'கோவிந்தன்' என்னும் பெயர்.

இவர்கள் சம்மானம் கேட்கிறார்கள். இப்போது யாசகம் கேட்பது போல் கேட்கவில்லை. தோற்றவனிடம் வென்றவன் கப்பம் கேட்பது போலச் சம்மானம் கேட்கிறார்கள். 'யாம் பெறு சம்மானம்' என்று கம்பீரமாய்க் கூறுவதைக் கேளுங்கள்.

'நாடு புகழும்படி நாங்கள் சம்மானம் பெறவேண்டும்' என்கிறார்கள். அணிமணிகள் துறந்து, கண் மை துறக்கக் கூந்தல் மலர் மறக்க, நோன்பு நோற்றார்கள் அல்லவா? 'நோன்பு முடிந்தபின் அணிமணிகளை யெல்லாம் நாங்கள் பெற்றுக் கொள்வோம்' என்கிறார்கள். 'அனைவரும் கொண்டாடும்படி நீ எங்களுக்கு அவற்றையெல்லாம் சம்மானிக்க வேணும்' என்கிறார்கள்.

நகைகளின் பெயர்களை இவர்கள் 'பட்டியல்' செய்து பேசுவதே எவ்வளவு அழகாய் இருக்கிறது!

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்

என்ற ஓசையின்பத்திலேயே இவர்களுடைய மகிழ்ச்சி இனிது புலனாகிறது.
        
இந்த நகைகளையும் வேறு நகைகளையும் கண்ணன் சம்மானித்தால் போதாது என்கிறார்கள். தலைவனும் இஷ்ட தெய்வமுமாகிய அவன் தன் கையால் தங்களுக்கு அணிய, தாங்கள் அணிந்து மகிழ வேணும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியே ஆடை உடுப்போம் என்கிறார்கள்.


சம்மானங்களில் எல்லாவற்றுக்கும் மேலாகச் சர்க்கரைப் பொங்கலை எவ்வளவு ரசமாய்க் குறிப்பிடுகிறார்கள் பாருங்கள்! 'அதன் பின்னே பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார' வழங்கவேணும் என்கிறார்கள். 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று விரதம் கிடந்தவர்கள் இப்போது ஆசை தீரச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேணும் என்கிறார்கள்.

கூடியிருந்து சாப்பிட வேணும் என்கிறார்கள். கண்ணனும் தாங்களுமாகக் கூடியிருந்து சாப்பிட வேணுமாம். பசிதீரச் சாப்பிடவேணும் என்று சொல்லவில்லை; ஆசைதீரச் சாப்பிட வேணும் என்று சொல்லுகிறார்கள். ஆம்; கண்ணனைப் பிரிந்து இருந்ததால் அதிகரித்திருந்த ஆசைதீர உண்ண வேணுமாம்.

உண்பதுகூட முக்கியமில்லை. எல்லாரும் கூடிக் களிப்பதுதான் இந்த விருந்தில் முக்கியமான அம்சம் என்பதை வற்புறுத்தி, 'கூடியிருந்து குளிர்ந்து' என்கிறார்கள்.

'முழங்கை வழிவார' என்று சொல்லிப் பிறகு உண்பதைச் சொல்லாமல் 'கூடியிருந்து குளிர்ந்து' என்று முடிக்கிறார்கள். கண்ணனைக் கண்குளிரக் கண்டதுமே பசி தீர்ந்ததால் உண்ண வேண்டிய தேவைகூட இல்லை!

உண்ணவும் மறந்தனரோ!

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

'நீங்கள் நோன்பிற்கு வேண்டியதைக் கேட்கிறீர்கள்;தருவோம்; நோற்ற பின்பு பெறும் பேறு யாது?' என்று கண்ணன் கேட்கிறானாம். அந்தக் கேள்விக்கு இவர்கள் சொல்லும் பதில் இந்தப் பாசுரம்.

நெய்யுண்ணாமலும், மலரிட்டு முடித்துக் கொள்ளாமலும், அணிகளால் அலங்காரம் செய்து கொள்ளாமலும், கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளாமலும் இருந்து நோன்பு நோற்றார்கள். விடியும் முன்பே எழுந்திருந்து பனி தலையில் வீழத் தெருவெல்லாம் நடந்து ஒருவரையொருவர் எழுப்பினார்கள். கண்ணனையும் துயில் எழுப்பினார்கள். பனி நீராடி விரதம் கொண்டாடத் துணிந்தார்கள். 

அத்தகைய வருத்தங்கள் எல்லாம் தீரத் தாங்கள் பெறும் சம்மானம் கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் அலங்கரிக்க, ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்வதும், அவர்கள் உண்பிக்க உடன் இருந்து உண்பதுமே ஆகும் என்கிறார்கள்.


'கூட இருந்து குளிர்ந்து' என்பதுதான் சம்மானத்தின் முக்கிய அம்சம்.



புல்லாணிப் பக்கங்களில்
திருத் திரு என்ற பெயருடன் எழுதிவரும் அன்பரின் எழுத்தோவியம் இது! சென்ற வருடம் ஜனவரி பதினொன்றாம் நாள் வெளியானது! ஒரு வைணவனின் பார்வையில், ஆண்டாளின் பாசுரத்தை அனுபவிக்கிற அழகே தனி தான்! அதனால் நன்றியுடன் இங்கே மீள்பதிவாக!

படித்ததும் பிடித்ததும் வகையில் இன்றைக்குப் பொருத்தமான அனுபவமாக!
*******


Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

 
“IT is in one’s own self that all the obstacles lie,

IT is in one’s own self that all the difficulties are found,

IT is in one’s own self that there is all the darkness and ignorance.


Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.


Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.

O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.



To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....



Always more light, more beauty, more truth!”

-The Mother

“Prayers and Meditations” 


 

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்....!

கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான்!!

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!

மன்னன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!!

மனக் கவலைகள் மறந்ததம்மா!

கவியரசர் கண்ணதாசனுடைய பாடல் வரிகளில்,இப்படி கண்ணன் பிறந்ததைக்கொண்டாடும் திருநாள் இன்று!


குழந்தைக் கண்ணனாக அவன் செய்த விஷமங்களைக் கேட்கையிலே, உள்ளம் மலரும்! கண்ணன் கதை கேட்பதென்றால் அதைவிட சந்தோஷமான அனுபவம் வேறென்ன இருக்க முடியும்!

ஆயர்பாடியில்,மாடு மேய்க்கப் போகிறேன் என்று கிளம்புகிறானாம் கண்ணன்! செல்லக் குழந்தை கஷ்டப் படுவானே என்று யசோதையின் தாயுள்ளம் கலங்குகிறது. மாடு மேய்க்கப் போக வேண்டாம் என்று குழந்தையைக் கெஞ்சுகிறாள்.

இந்த அதிசயக் குழந்தை, தாய்க்குத் தைரியம் சொல்கிறது! மா ஸுச: கவலைப்படாதே! உனக்குத் தெரிந்த எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு, என்னையே பற்றிக்கொள், உன்னை எல்லாத் தளைகளில் இருந்தும் விடுவிக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிற சாக்கில், கீதையைச் சொல்லப் போகிற குழந்தை, இங்கே அம்மாவுக்குச் சமாதானம் சொல்கிற அழகே அழகு. 'போக வேண்டும் தாயே ..தடை சொல்லாதே நீயே" என்கிறது.

தாயுள்ளம், எப்படியெல்லாம் குழந்தையிடம் கெஞ்சுகிறது என்பதைப் பாருங்கள்!குழந்தை எவ்வளவு பக்குவமாகத் தாய்க்குப் பதில் சொல்கிறது என்பதையும் பாருங்கள்!

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

யசோதை:
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
கண்ணன்:
காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கண்ணன்:
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)
கண்ணன்:
காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

யசோதை:
பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கண்ணன்:
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)


படிக்கும் போதே என்ன சுகமாக இருக்கிறது! அருணா சாயிராம் போன்ற திறமையான இசைக் கலைஞர் அனுபவித்துப் பாடும்போது, பரமசுகம்!!

பார்க்கலாம்! கேட்டு ரசிக்கலாம்! கண்ணனை நினைக்கலாம்!

'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே'
நாரணன் எம்மான் பாரணங்காளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே.

சென்ற வருடம் கிருஷ்ணா ஜெயந்தியன்று எழுதிய பதிவின் மீள் பிரசுரம் தான் இது! கண்ணன் கழலிணை  நினைந்து அவனிடம் அவனையே வேண்டிப் பெறுவோமாக!


பொழுதைப் போக்க.....பொழுதுபோக்கு நாத்திகம்....!

கடவுள் இருக்கிறாரா அல்லது உண்மையிலேயே இல்லையா?

கடவுள் என்பது சில சுய நலமிகளால் கற்பிக்கப் பட்ட கற்பிதமா அல்லது தவறாகப் புரிந்து கொண்ட கோட்பாடா?

கடவுள் என்பது கற்பிதம் செய்யப் பட்ட மாயையா அல்லது உண்மையா?

இப்படி நிறையக் கேள்விகள், விவாதங்கள், சூடுபறக்க இணையப்பக்கங்களில் அவ்வப்போது நடப்பது தான்.  



சிறு வயதில் பட்டம் விட ஒரு சீசன், அப்புறம் பம்பரம் விட, கோலி விளையாட, நாகரீகம் வளர வளரக் கிட்டிபுல்லாக விளையாடியது கிரிக்கெட்டாகப் பரிணாமம் அடைந்தது, அப்புறம் சீட்டுக் கட்டு ஜமா என்று பல சீசன்கள் வந்து போவது போலவே, தமிழ் வலைப்பதிவுகளிலும், சாரு-ஜெமோ சண்டை ஒரு சீசன்.

அப்புறம் அவர்களை மாதிரியே தங்களையும் கற்பனை செய்துகொண்டு பதிவர்களுக்கு உள்ளேயே நடக்கும் காட்டா குஸ்தி, நீயா-நானா என்று அடித்துக் கொள்வதையெல்லாம் அடித்துக் கொண்டு விட்டு,அப்புறம் 
நீயும்-நானும் நல்ல ஜோடிதான் ரேஞ்சுக்கு டூயெட் பாடுவது இப்படிப் பல சீசன்கள் மாறி மாறி வரும்! கடவுளைப் பற்றிக் கதைப்பதும் ஒரு சீசன் தான்!

இப்படித்தான் நம்ம வால்ஸ் ரொம்பக் காண்டு கஜேந்திரன் கணக்கா, கடவுளைப் பத்திக் கவிதை, செத்த கடவுள், ஆன்மீகப்பயணம், அதுக்கு எதிர் வினை பாகம் ஒண்ணு, ரெண்டுன்னுட்டு
தொடர்ந்து கலக்கிட்டு, இப்ப வேற சப்ஜெக்டுக்குத் தாவியாச்சு! பம்பரம் விடற சீசன் போயி, வேற வெளையாடற மூடு வந்தாச்சு! தருமி ஐயா கடவுள் என்றொரு மாயைன்னுட்டு, உள்ளூர் நாத்திகன் சொல்றதைச் சொன்னா எவன் கேப்பான்னு சந்தேகம் வந்துச்சோ என்னவோ, அதுனால, வெளி நாட்டுல இருந்து இறக்குமதி பண்ணுவோம்னுட்டு ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதி, இப்ப ஓஞ்சுபோன புத்தகம் The God Delusion அதுலேயிருந்து நான் கண்டெடுத்த முத்துக்கள்னு, ஏற்கெனெவே ஏழு இடுகையை பிட்டு பிட்டா எழுதியாச்சு, இப்ப எட்டாவது பிட் எழுதியிருக்கார்.

இறக்குமதி பண்ண நாத்திகத்துலயாவது கொஞ்சம் புது விஷயம் இருக்கான்னு தேடிப்பாத்தாக்க, அங்க ஒண்ணும் காணோம்

.
இந்தப் புத்தகத்தைப் படித்து மண்டையை உடைத்துக் கொள்வதற்கு முன்னால், தமிழிலேயே, எழுத்தாளர் சுஜாதா "கடவுள் இருக்கிறாரா" என்ற கேள்விக்குக் கொஞ்சம் அறிவியல் கலந்த விடைகளைத் தேடும் விதமாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உண்டு அல்லது இல்லை என்று எந்த கட்சியையும் எடுத்துக் கொள்ளாமல், அறிவியல் பார்வையோடு எழுதப் பட்ட புத்தகம் அது. அதைப் படித்து விட்டு வாருங்கள், விவாதத்தைத் தொடரலாம் என்று முந்தைய பதிவு ஒன்றில் முடித்திருந்தேன்.

இப்போதும், ஒரு விஷயத்தைத் தீர்மானமாகப் பேசுவதற்கு முன்னால், அந்தப் புத்தகத்தை, தமிழில் தானே இருக்கிறது, ஒரு தரம் படித்துவிடும் படி மறுபடியும் சிபாரிசு செய்கிறேன்.

கடவுளைப் பற்றிய உண்மையை எடுத்த எடுப்பிலேயே சொல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக, கேட்பவருக்குப் புரிய வேண்டுமே என்று குறைபாடுகள் நிறைய இருந்தாலுமே கூட , சின்னச் சின்ன கதைகளாக, உதாரணங்கள் வழியாகக் , கடவுளைப் பற்றி சொல்வதால், கடவுளை இல்லையென்று சொல்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பொங்குகிறார்கள், குமுறுகிறார்கள், கோபப்படுகிறார்கள்.

இல்லை, இல்லவே இல்லை என்று மறுக்கிறார்கள். ஆத்திரம், கண்ணையும் அறிவையும் மறைக்கிறது! கதை வழியாச் சொன்னாக்க ஈசியாப் புரியுமேன்னு பாத்தாக்க, இவங்க கதை வழியா என்ன சொல்றாங்கன்றதையே பாக்காம, கதையில அது ஓட்டை, இது உடசல்னு கதையில மட்டுமே நின்னுடறாங்க!

ஆனா, ஆவன்னா என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லிக் கொடுப்பது, இவர்களுக்குக் கேலிக்குரியதாக இருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்ட பிறகு, ஆனா, இம்மன்னா மானா=அம்மா என்று படிக்கவேண்டியது இல்லை தான்! அதற்காக, ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு, ஒவ்வொரு எழுத்தாக எழுத்தைக் கூட்டிப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் மீது கோபம் கொண்டால் அது சரியாக இருக்குமா? எடுத்த எடுப்பிலேயே ஆசிரியர், முழுதாகச் சொல்லவில்லை என்பதற்காக, அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றோ, அவர் சொல்லிக் கொடுப்பதே வீண் என்றோ முடிவு செய்தால் அது சரியாக இருக்குமா?

ஒவ்வொருவருடைய புரிந்துகொள்கிற படித்தரத்திற்குத் தகுந்த ஆசிரியனாக, இறைவனே வந்து அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக் கொடுக்கிறான் என்று இந்தியத் தத்துவ தரிசனம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகள் ஒவ்வொன்றுமே நம்முடைய உணர்வின் புரிந்து கொள்ளும் படித்தரத்தைப் பொறுத்தது தான். உணர்வு விரிந்து விழிப்படைய, விழிப்படைய, புரிந்து கொள்வதும்,விரிவடைகிறது.

ஐன்ஸ்டீனுடைய சக்தியைப் பற்றிய சமன்பாட்டை நான்காம் வகுப்பில் இருந்துகொண்டு எனக்குப் புரியவில்லை, என்னுடைய வாத்தியான் ரொம்ப மோசம், வாத்தியானுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? சில கேள்விகள், பாடம் நடத்துகிற வாத்திகளுக்கே புரிவதில்லை, அப்படிச் சிலபேரும் வாத்தித் தொழிலில் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், பாடம் படிக்கும் பசங்களோடு சேர்ந்து கொண்டு, சிலபஸ் மோசம்! இதைப் போய்ச் சேர்த்தானே, அவன் இதை விட மோசம் என்று இவர்களுமே கூச்சல் போடுகிறார்கள்!

இப்படிக் கூச்சல் போடும்போது, குறைகள் இருந்தாலும், சொல்லப் படுகிற விஷயத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அதில் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம், அதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படி உயரலாம் என்வதை மறந்து விடுகிறார்கள்.


குறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை, அப்படி ஒரு கட்டாயமுமில்லை என்பதைப் பார்க்கத் தவறும்போது, மறுபடியும் ஆரம்பித்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவதை இவர்கள்உணர்வதில்லை.

Don't re-invent the wheel” என்று சொல்வார்கள். திரும்பத் திரும்ப ஆரம்பித்த இடத்திலேயிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிரவர்களுமே கூட, இப்படி கால விரயம் செய்கிறவர்கள் தான்! வ்வொரு முறை இப்படிக் கால விரயம் செய்யும் போதும், அடுத்த எட்டு என்பது எவ்வளவு நீண்டதாக, பல பிறவிகளுக்கும் அப்பால் என்று தள்ளி வைத்துவிடுகிறது என்பதை மட்டும் இவர்கள் உணரக் கூடுமானால்.......!

நமக்கு முன்னவர்கள் சொல்லி வைத்தது கொஞ்சம் அல்லது நிறையவே குறைகளோடுதான் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட , எந்த அளவுக்கு அதிலிருந்து பாடம் படிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கற்றுக் கொள்ள முடிந்தால், அடுத்த எட்டு எடுத்து வைப்பது, அடுத்த கட்ட வளர்ச்சி, மேலே மேலே உயர்வது என்பது இயல்பானதாகிவிடும். அது தான் பரிணாமத்தின் இயல்பான படிக்கட்டுமே கூட!

"பழைய கட்டுமானங்களை உடைப்பதற்கு முன்னால், அதனுடைய சாரம், படிப்பினைகளைக் கற்றுக் கொண்ட பிறகு செய்!" இப்படி ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை ஏற்கெனெவே ஒரு பதிவில் பார்த்திருக்கிறோம்.

நாத்திகம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் நண்பர்கள், அடிப்படையான ஒரு விஷயத்தையே மறந்து விட்டு, கூச்சல் போடுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் என்பதை, நிறையவே பார்த்தாயிற்று! இன்னமும் இப்படி வெற்றுக் கூச்சல் போட, ஆட்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.
ஸ்ரீ அரவிந்தர், சுருக்கமாக, நான்கே வரிகளில் சொல்கிற இந்த விஷயத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! போகும் திசை மறந்து போகாது! போய்க்கொண்டிருக்கிற வேகமும் குறையாது!

Because thou wert given at first imperfect conceptions about God, now thou ragest and deniest Him. Man, dost thou doubt thy teacher because he gave not thee the whole of knowledge at the beginning? Study rather that imperfect truth and put it in its place, so that thou mayst pass on safely to the wider knowledge that is now opening before thee.”

Sri Aurobindo
Thoughts and Aphorisms, Aphorism 470

"One of the greatest comforts of religion is that you can get hold of God sometimes and give him a satisfactory beating. People mock at the folly of savages who beat their gods when their prayers are not answered; but it is the mockers who are the fools and the savages". 


Sri Aurobindo

Thoughts and Aphorisms - 60

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்! அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?

என்றும் 

 
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றும் கண்ணதாசனால் பாடத் தான் முடிந்தது.

தன்னைக் கஷ்டப்படும்படி பிறப்பித்த கள்வனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று கறுவின ஒருவனிடத்தில் கண்ணனே முன்வந்து, இதோ வந்து விட்டேன்! உன் ஆசைப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று ஒப்புக் கொடுத்த கதையை -->

 
இரண்டு பகுதிகளாக -- ஒன்று மற்றும் இரண்டு படித்துத் தான் பாருங்களேன்!
அப்படியே உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதையும் கொஞ்சம் காதோடு வந்து சொல்லிவிடுங்கள்! தெரிந்து கொள்ள மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்!

கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!


இந்தச் சின்னப் பையன் என்ன என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போகிறானே, இத்தனை வயதாகியும் எனக்கு இதெல்லாம் ஒன்று கூடப் புரியவில்லையே என்று எண்ணிக் கொண்டே ஹரி மோகனுக்குக் கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. கண்ணனையே ஆர்வம் ததும்பியவனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இதைப் புரிந்துகொள் ஹரி மோகன். எந்த ஒரு செயலையும் மேலோட்டமாகவே பார்த்தால் அதன் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. நல்ல செயல்கள், நல்ல பழக்கங்கள் என்று செய்து வந்திருக்கிறாய், அதனால் புண்ணியம் கிட்டும் என்கிற நம்பிக்கை-ஆனால், அதை ஒரு வரட்டுத்தன்மையோடு கூடிய பழக்கமாகவே செய்து வந்ததால், உண்மையை விலக்கி விட்டு வெறும் சடங்கு என்ற அளவோடு நிறுத்திக் கொள்வதால் வரும் பின் விளைவு இது. உயிரில்லாத சடங்கு என்ன தரும்? உனக்கு மகிழ்ச்சி இல்லை. உன்னுடைய செயல்களினால் விளையும் உணர்ச்சிகளின் சக்தியைத் தடுக்க உன்னால் முடியவில்லை. உன்னுடைய இந்த சிறிய அகங்காரத்தைக் கூட உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லை."

"அதே மாதிரி இந்த செல்வரங்கமும் கூட எந்த தீய செய்கைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று செய்தானோ, அவைகளாலும் சந்தோஷமடையவில்லை. மாறாக, பழக்கங்களின் அடிமையாகவே இருப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல், இந்த வாழ்க்கையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்"

"இது தான் நல்வினை, தீவினை என்கிற இருவிதமான தளைகள். அறியாமையோடு கூடிய எண்ணப் பதிவுகளே இப்படிப் பந்த பாசம் ஆகிய விலங்குகளாக ஒருவனைக் கட்டிப் போட்டு வைக்கிறது. வேதனைப் பட வைக்கிறது. ஆனால் இதுவும் வேண்டியதே. செல்வரங்கத்தைப் பார்.

இந்த பயங்கரமான வேதனை தான், எது உண்மையான உறவு, எது நிலையானது, உண்மையானது என்பதைத் தேடச் சொல்லிக் கொடுக்கும். இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் ஒரு நேரம் வரும் போது சொல்லிக் கொடுக்கும்."

ஹரிமோகன் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்: "கண்ணா, நீ அழகாகத்தான் பேசுகிறாய். கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், உன்னை நிஜமாக நம்ப முடியவில்லை. சுகமும் துக்கமும், மனதின் ஒருவிதமான நிலைதான் என்கிறாய். இருக்கலாம், ஆனால் வெளிச் சூழ்நிலைகள் தானே அதற்குக் காரணமாய் இருக்கிறது? பட்டினியோடு இருப்பவன் மனது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? நோயாலும், வலியாலும் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனால் எப்படி, அதை மறந்து, உன்னைத்தான் நினைக்க முடியுமா? "

"முடியும் ஹரிமோகன், முடியும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உனக்குக் காட்டுவதற்காகத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இங்கே பார்" என்றான் கண்ணன். ஹரிமோகனுடைய கண் முன்னால் காட்சி மாறியது. செல்வரங்கத்தின் வீட்டில் அவன் இப்போது இல்லை. ஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு யோகி ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதைப் பார்த்தான். அவருடைய காலடியில், ஒரு பெரிய புலி அமைதியாகக் காவலுக்கிருப்பதைப் போல, காத்திருப்பதையும் பார்த்தவுடன், ஹரிமோகனுடைய உடல் நடுங்க ஆரம்பித்தது. புலியைப் பார்த்தவுடன், யோகியைப் பற்றியோ, பின்னணியில் தெரிந்த அழக்கான மலைச் சிகரம், சுகமான தென்றல் வீசும் இனிய சூழல் எதுவும் ஹரிமோகனுக்குப் புலப்படவில்லை. திரும்பி ஓடி விடலாம் என்று திமிறியவனை, கண்ணன் சிரித்துக் கொண்டே யோகியின் அருகாமையில் இழுத்துச் சென்றான்.

சின்னக் கண்ணனுக்கு இத்தனை பலமா?

சிறுவனின் பலத்தை வியந்து கொண்டே, அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்த ஹரிமோகனுக்கு சிலீரென்று ஒரு புதிய அனுபவம்..அந்த யோகியின் மனம் ஒரு புத்தகம் போலத் தன் முன் விரிவதைக் கண்டான். எங்கு பார்த்தாலும் கிருஷ்ணா, கோவிந்தா, ஹே மாதவா என்று நாம ஜபமாகவே இருக்கக் கண்டான். ஒரு பரபரப்புமில்லாமல், அன்புமயமான சூழலில் கண்ணனையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனுபவம், தனக்குள்ளும் ஊடுருவுவதைக் கண்டான். இத்தனைக்கும், அந்த யோகி பல நாட்களாகப் பட்டினி கிடப்பதாகத் தெரிந்தது. உடல் வெளுத்துச் சோர்வாகத் தென்பட்டாலும், யோகியின் மனதில் எந்த அலுப்பும் குறையும் இல்லாமல் இருப்பதையும் கண்டான்.

"கிருஷ்ணா, இது என்ன, இவர் சாப்பிட்டு பலநாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே. இவருக்கு யார் உணவளிப்பார்கள்? இவரோ அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படுவதாகவும் தெரியவில்லையே?"

"ஏன், நானில்லையா? பொறுப்பை என்னிடம் விட்டு விட்டான், அதுதான் கவலையில்லாமல் இருக்கிறான்."

"நன்றாயிருக்கிறது நீ பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் விதம். புலிகள், மிருகங்கள் நடமாடும் காட்டில் குடிக்கத் தண்ணீரோ, பசிக்கு உணவோ இல்லாமல் இங்கே ஒருவன் தவித்துக் கொண்டிருக்கிறான். நீயோ சர்வ சாதாரணமாக அந்தப் பொறுப்பு என்னுடையது என்று சொல்கிறாய்..ஆனாலும் ஒன்றுமே செய்யாமலிருக்கிறாய். கிருஷ்ணா, நீ மிகவும் கொடியவன்."

ஹரிமோகன் உணர்ச்சி மேலிடப் பேசுவதைக் குறுஞ்சிரிப்புடன் கேட்ட கிருஷ்ணன், "ஹரிமோகன், இப்போது ஒரு வேடிக்கையைப் பார்க்கிறாயா?" என்றான். அவன் பதில் சொல்வதற்கு முன்னமே, யோகியின் காலடியில் சாதுவாக அமர்ந்திருந்த புலி திடீரென்று எழுந்து தன்னுடைய வாலைச் சுழற்றியதில், பக்கத்தில் இருந்த எறும்புப் புற்று உடைந்து, ஆயிரக்கணக்கில் எறும்புகள், யோகியின் உடல் மீது பரவின. புற்று உடைக்கப் பட்டதில் கிளர்ச்சியடைந்து, அவை யோகியைப் பல இடங்களிலும் கடிக்க ஆரம்பித்தன.

திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஹரிமோகன் அதிர்ச்சியடைந்தான். ஆனால் அந்த யோகியோ, எறும்புகள் கடிப்பதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், நிஷ்டையில் இருந்தார். "ப்ரியமானவனே, நண்பா" என்று அவர் காதில் விழும் படி அந்த சிறுவன், மென்மையாக அழைத்தான். அந்தக் குரல், பிருந்தாவனத்தில் கோபிகைகளிடம், ராதையிடம் அன்பொழுகப் பேசுவது போலவே யோகியின் மனம் முழுதும் எதிரொலிப்பதை ஹரிமோகன் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தான். நிஷ்டை களைந்து, யோகி தன்னுணர்வு பெற்ற போதும் கூட, எறும்புகள் கடிப்பதைப் பற்றியோ, சுரீர் சுரீரென்று வலி உடலில் பரவுவதைப் பற்றியோ கவலைப்படாமல் இப்படி நினைப்பதை ஹரிமோகன் கண்டான்.

"இது என்ன புதிய அனுபவமாக இருக்கிறதே! என்னுடைய கிருஷ்ணன் ப்ரியமானவனே என்றழைப்பதைக் கேட்டேன்.எறும்பு கடித்தால் இப்படிக் கூட ஆனந்தமயமான அனுபவம் கிடைக்குமா என்ன!" யோகியின் நினைவு பரவசமாகி, உடல் ஆனந்த மிகுதியால் துள்ள, உடல் மேல் ஊர்ந்துகொண்டிருந்த எறும்புகள் தூரப் போய் விழுந்தன.

சில வினாடிகளில், அங்கே ஒரு எறும்பு கூட இல்லை. யோகியோ, ஏற்கெனெவே பட்ட ஒவ்வொரு கடியும், ஆனந்த பரவசத்தை ஏற்படுத்தக் கை கொட்டி ஆடுவதையும் சிரிப்பதையும் ஹரிமோகன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கிருஷ்ணா! என்ன மந்திரம் போட்டாய்? இது என்ன மாயம்?"

ச்யாமசுந்தரனான ஸ்ரீ கிருஷ்ணன் கை கொட்டி சிரித்துக் கொண்டேசொன்னான், "ஆமாம், இது மாயம் தான். என்னைவிடப் பெரிய மாயக் காரனோ, மந்திரவாதியோ எவருமில்லை.நானே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே மந்திரவாதி. இது சொன்னால் உனக்குப் புரியாது. இது பரம ரகசியம். பார்த்தாயல்லவா, இந்த யோகியை எறும்புகள் கடித்த வேதனையை உடல் முழுவதும் அனுபவித்த நிலையில் கூட, எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்! ஏதேதோ சொன்னாயே, பசி, தாகம், களைப்பு என்று, அதையெல்லாம் அவர் கொஞ்சம் கூட சட்டை பண்ணவில்லை என்பதையும் நன்றாகப் பார்த்தாயா? இன்னமும் கவனித்துப் பார், என்ன நடக்கிறதென்று."

யோகி மறுபடியும் நிஷ்டையில் அமர்ந்து விட்டார். அவரது உடல், பசி தாகத்தினால் வாடியிருந்தாலும், அவரை அது ஒரு விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை ஹரிமோகன் கண்டான்.

"நண்பா, பிரியமானவனே, இதோ நான் வந்து விட்டேன்." இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹரிமோகன் தனது பக்கத்தில் அந்த மாயக்காரச் சிறுவன் இருக்கிறானா என்று பார்த்துக் கொண்டான்.சிறுவன் அவனருகிலேயே இருப்பதைக் கண்டான். அவனைப்போலவே, அதே மோகனக் கண்ணன் எதிரே கையில் பெரிய தட்டு, குவளையுடன் வருவதைப் பார்த்தான். யோகியும் கண் விழித்துப் பார்த்து, முகமலர்ச்சியுடன் அவனை வரவேற்பதைக் கண்டான்.

"உன்னை ரொம்ப நேரம் பட்டினி போட்டு விட்டேனா? உனக்கு என மேல் கோபம் ஒன்றும் இல்லையே?'

"உன் மேல் கோபமா? எதற்கு? நீ வரும் போது, உன்னுடைய தரிசனமே எனக்கு உணவு. மற்ற நேரங்களில், உன்னை நினைத்துக் கொண்டிருப்பதே தாகம் தீர்க்கும் சாதனம். பசி தாகம் தீர்க்க நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?"

"உனக்காக சில விசேஷமான பலகாரங்களைக் கொண்டு வர எண்ணினேன். அதனால் தான் நேரமாகி விட்டது. இங்கே வந்து பார், என்னென்ன கொண்டு வந்திருக்கிறேனென்று?"

"கண்ணா, வா, இருவரும் சேர்ந்தே உண்போம்."

மாயக் கண்ணனும், யோகியும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். பரிகாசமாய்ப் பல கதைகள் பேசினர். ஹரிமோகன் இந்தக் கட்சியை மிகுந்த ஆச்சச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். உணவு உண்டு முடித்தவுடன், அந்த சிறுவன், மறைந்து விட்டான். தன் பக்கத்திலிருந்தவனிடம் ஏதோ கேட்க வாயெடுத்த ஹரிமோகன், பக்கத்தில் சிறுவன் இல்லாததையும், கானகம், மலை, யோகி, புலி எல்லாம் மறைந்து தான் மட்டும் வேறோர் இடத்தில், வேறோர் காலத்தில் இருப்பதையும் கண்டான்.

ஹரிமோகனுக்கு வியப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆயிற்று.

ஏனென்றால், அவன் தன்னுடைய வாழ்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன், அவனது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களோடு இருந்ததைக் கண்டான். ஒரு இயந்திர கதியில், அவன் சாத்திரங்களில் சொன்னபடி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து கொண்டிருந்தான். தான தர்மங்கள், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியது, உறவினர்களுக்கு, நண்பர்களுக்குச் செய்ய வேண்டியது இப்படி எதிலும் குறைவில்லை. ஆனால், அதில் உண்மையான அன்பு இல்லாதிருப்பதையும், செய்யப் பட்டவை எல்லாமே ஒரு சடங்கு, சம்ப்ரதாயத்திற்காகத்தான் என்பதைப் பார்த்தபோது தன்னைப் பார்த்தே அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் உயர்வான ஆன்மிகம் என்று நினைத்திருந்தது, வெறும் இயந்திரத்தனமான சடங்குகளாகக் குறுகிப் போனதையும், உண்மையிலிருந்து விலகி வெகு தூரத்தில் இருந்ததையும் பார்த்த போது ஹரிமோகனுக்கு துக்கம் மேலிட்டது. அந்த இடத்தை விட்டு விலகி இருந்தால் தேவலை என்று தோன்றியது. உடல் மட்டும் கீழே விழ, அவன் வேறு இடங்களில் அலைவதைப் பார்த்தான்.

மிகவும் தாகமெடுப்பது போலத் தோன்றியது. தண்ணீரைத்தேடி வெகுதூரம் அலைந்த பிறகும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. தண்ணீரை குடிப்பது போல, தாகமெடுக்கும் போதெல்லாம் புழுதியையே உண்டுவந்ததைப் பார்த்தான். தாகம் தீர்வதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே போனதையும் பார்த்தான். எங்கு பார்த்தாலும், ஒரே புழுதி, புழுதிமயம். அட, ஆண்டவனே குடிக்கத் தண்ணீர் கூடத் தர மாட்டாயா?

அலுப்போடு, அவன் நகரத்தின் வேறொருஇடத்தில் இருப்பதைப் பார்த்தான். ஒரே வாழ்த்துமயமாக அந்த இடம் காட்சி அளித்தது. அட, அங்கே கம்பீரமாக அமர்ந்திருப்பது யார்? செல்வரங்கம், செல்வரங்கமே தான். அவனைச் சுற்றி ஒரு கூட்டமே காத்திருந்தது. ஒவ்வொருவருக்கும், கை நிறையப் பணம் அளிப்பதையும், அவர்கள் அவனை மனதார வாழ்த்திச் செல்வதையும் பார்த்த ஹரிமோகனுக்கு ஒரே வியப்பு! செல்வரங்கம் எப்போதிலிருந்து கொடை வள்ளல் ஆனான்? ஹரிமோகன் வாய் விட்டு, உரக்கச் சிரித்தான். அடக் கடவுளே!

பார்த்துக் கொண்டே இருக்கும் போதே, செல்வரங்கம் மனதில் இருந்த அத்தனையும் ஹரிமோகனுக்குத் தெரிந்தன. புகழுக்காக, நான்கு பேர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக, காசினாலே நிறையக் காரியம் கை கூடும் என்பதற்காகவே செல்வரங்கம் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதும், அவன் மனதில் பேராசையும், வஞ்சகமும் மண்டிக் கிடப்பதையும் ஹரிமோகன் பார்த்தான். ஒவ்வொன்றும் அவனுள்ளே பேயாட்டம் ஆடி, இன்னும் கொடு, எங்களுக்கு திருப்தி இல்லை, எங்களைத் திருப்தி செய் என்று தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதையும் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்கும் போது காட்சி மாறுவதை ஹரி மோகன் உணர்ந்தான்.

வெவ்வேறு நம்பிக்கைகள், அதன் பின்னே செல்லும் மனிதக் கூட்டங்கள், அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தமாதிரி உருவாக்கி வைத்திருந்த நீதி நெறிகள், தண்டனை முறைகள், ஸ்வர்க்கம், நரகம் இப்படிப் பலவிதமாய்ச் சொல்லப் படுவதையும் ஹரி மோகன் பார்த்தான். யார் யாரோ, அவனை இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றதையும், ஆனால் இந்த இடங்களைப் பற்றி முடிவாக எதுவும் சொல்லாமல் விட்டதையும் பார்த்துக் கொண்டே வந்த ஹரிமோகன் பழையபடி தன்னுடைய ஒட்டு வீட்டில், அதே அழுக்குப்பாய், தலையணையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான். அப்போது, இதுவெல்லாம் உண்மையில்லையா, வெறும் கனவு தானா- இந்த சந்தேகம் பெரிய கேள்வியாக எழ, "சியாமசுந்தரா, நான் பார்த்ததெல்லாம் நிஜமா?" என்றான்.

ஷ்யாமசுந்தரன் கருணையோடு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னான்,"இப்பொழுதே இரவு அதிக நேரம் ஆகிவிட்டது. இதற்கு மேலும் இங்கே என்னை நிறுத்திக் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தாயானால், அங்கே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கோள் மூட்டி, என் அன்னையிடம் தண்டனை வாங்கிக் கொடுக்க ஒரு பெரிய பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது. அனுபவங்களில் தெளிவு தானாகத் தான் வர வேண்டும். இருந்தாலும், சில உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். கேட்டுக் கொள்.

நீ பார்த்த ஸ்வர்க்கம், நரகம் எல்லாம் கனவுலகைச் சேர்ந்தவை. ஒரு அனுபவத்திற்கும் அடுத்ததற்கும்இடையில் ஒரு சின்ன இடைவேளை, குட்டித்தூக்கம் அல்லது கனவு மாதிரி.அதைத்தான் ஒரு மனிதன் இறந்தவுடன் ஸ்வர்கத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று தன்னுடைய கடந்த ஜன்மத்தின் பலன்களை அனுபவிக்கிறான் என்று சொல்கிறார்கள். உனையே எடுத்துக் கொள், உன்னுடைய முற்பிறவியில் சில அறநெறி உயர்வுகளைப் பெற்றிருந்தாய். ஆனால், உன்னுடைய இதயத்தில் அன்புக்கு இடமில்லாமல் போயிற்று. நீ கடவுளையோ, மனிதனையோ, நேசிக்கவில்லை. அதனால் தான், அந்தப் பிறவி முடிந்ததும், ஒரு இடைவேளை-அதில் உன் மனத்தின் உந்துதல்கள், அதன் விளைவுகளுக்கேற்றவாறு வசித்து வந்தாய். அதுவும் உனக்குப் பிடிக்கவில்லை-எனென்றால் உனது பிராணமய உணர்வு பொறுமையற்றுப் போயிற்று.அடிநாதமான அன்பு எனும் நீருக்காகத் தவித்தாய். புழுதிபடர்ந்த ஒரு நரகத்தில் வசிக்கப் போனாய்.

அதற்கப்புறம், உன்னுடைய புண்ணியங்களை அனுபவித்து முடிந்ததும் மறுபடி பிறந்தாய். அதிலும் கூட, ஒரு வரட்டுத்தனமான ஆசாரக் கோட்பாடுகளையும், கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்கிற சில தர்மங்களையும் செய்ததைத் தவிர, உதவி கேட்டு வந்த எவருக்கும் உள்ளன்போடு எதுவும் செய்யாமல் போனதன் காரணமாகத்தான், இந்தப் பிறவியில், உனக்கு இவ்வளவு தேவைகள், மனக்குறைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.இத்தனைக்குப் பிறகும், வழக்கமான புண்ணியங்களை தேடும் செயல்களையே தொடர்ந்து செய்ய விழைவாய் எனில், உன்னுடைய புண்ணிய பாவங்களாகிற இருபெரும் தளைகள், முன்னமே சொன்னேனே, அந்தக் கனவுலக அனுபவத்தால் இன்னமும் வேரோடு அற்றுப் போகவில்லை இன்னும் மீதமிருக்கிறது, மறுபடி மறுபடி கனவுக்கும் நிஜத்திற்கும் இடையில் அவஸ்தைப் பட்டேயாக வேண்டும். இந்த உலக வாழ்க்கையிலேயே, கனவுலகில் அல்ல, உன்னுடைய ஆசைகள், ஆர்வத்தின் பலனாலேயே அவை மறைய வேண்டும்.

செல்வரங்கத்தின் கதையைப் பார்- முந்தைய பிறவியில் பெரும் கொடையாளியாக இருந்ததால், ஏராளமானவர்களுடைய இதயபூர்வமான ஆசியினால், கோடிகளுக்கு அதிபதியாய்ப் பிறந்திருக்கிறான். ஆனாலும், அவனது மனம் இன்னும் பண் படுத்தப் படவில்லை. பூர்த்தி செய்யப் படாத கொடிய இயல்புகளைத் திருப்தி செய்யவே, கொடிய எண்ணங்களும், கொடிய செயல்களுடனும் பிறந்திருக்கிறான். மண்ணைக் கொத்தி, பக்குவப் படுத்துவது போல, இங்கே கொடுமையாகத் தெரிவது கூடப் பக்குவப் படுத்துகிற சாதனம் தான். மண் பக்குவமாய் இருந்தால் தான், விதை முளைக்கும்.அன்பாகிற தண்ணீர் விட்டு கவனமாகப் பார்த்துக் கொண்டால் தான், செடி வளரும், பூ பூக்கும்..

இப்போது கர்மவினையின் சட்டங்கள் கொஞ்சமாவது புரிகிறதா?

கர்மவினை என்பது-பரிசுகளோ, தண்டனையோ அல்ல.

அவரை விதைத்தால் அவரை தான் விளையும். துவரை விதைத்தால் துவரை தான் விளையும். இந்த இயற்கை விதி புரிகிறதல்லவா-அதைப் போலத்தான், நல்ல செயல்களில் இருந்து நன்மை-கொடிய செயல்களில் இருந்து கொடுமை. அது தான் புண்ணியம்-பாவம். இந்த எளிய ஏற்பாடு எதற்காக என்றால், மனமும் இதயமும் சுத்தமாவதற்கும், கொடிய மிருகத்தன்மை அழிவதற்காகவும் இருக்கிறது. பொய்மையிலிருந்து தான் உண்மையைக் கண்டாக வேண்டும்.. இருட்டில் இருப்பவன்தான் வெளிச்சத்தைத் தேடியாக வேண்டும்.. பார்த்தாயா ஹரிமோகன்! எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் இந்த பூமி, எனது படைப்பில் ஒரு சிறு பகுதிதான். ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒரு உன்னதமான உண்மையைக் கண்டறிவதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள். நன்மை-தீமை, புண்ணிய- பாவம், இப்படி எதிர்மறையான இரட்டைத்தன்மைகளின் பிடியிலிருந்து விடுபடும் போதுதான் கர்மவினை- -அதன் விளைவுகளில் இருந்தும் விடுபட முடியும்.

நீயும் கூட இந்த விடுதலையை நோக்கித்தான் உன்னை அறியாமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறாய். இந்த முயற்சியில், உனக்கு உறுதுணையாக தெய்வீகம் துணையிருக்கும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் தான், நீ என் தோழனாக ஆக முடியும். விளையாட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன், எனக்கு விடுதலை இப்பொழுதே கொடு என்றெல்லாம் கேட்கக் கூடாது.

என்ன, சம்மதமா?”

ஹரிமோகன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். அவனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. எப்படிச் சொல்வது, என்ன சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணன்,அவனுடைய இனம்புரியாத யோசனையிலிருந்து எழுப்பினான்: "என்ன ஹரிமோகன், ஏதாவது புரிந்ததா?"

"புரியாமல் என்ன, கிருஷ்ணா? நீ ஏதேதோ பேசி என்னை நன்றாக மயக்கி விட்டாய். இப்போது எனக்கு, உன்னை மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும், என்னிடத்திலும் அன்பிருக்கிறது, அது உனக்காகத்தான் அதை உனக்குக் காண்பிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொரு ஆசை இல்லை." இப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவன், திடீரென்று ஒரு யோசனை கிளம்ப, "அடப் பொல்லாத பயலே! மறுபடியும் நீ என்னை ஏமாற்றி விட்டாய். என்னென்னவெல்லாமோ சொன்னாயே, தீயதை ஏன் படைத்தாய் என்பதற்கு ஒரு காரணமும் சொல்லாமல் விட்டு விட்டாயே?" இப்படிக் கேட்டுக் கொண்டே சிறுவனின் கரங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

சிறுவனோ வெகுலாவகமாகத் தன் கைகளை விடுவித்துக் கொண்டு, சற்றே எட்டி நின்று கொண்டான். ஒரு கள்ளச் சிரிப்புடன், "பார்த்தாயா? கொஞ்சம் இறங்கி வந்து உனக்குப் புரிய வைக்க வந்தால், ஒரே மணி நேரத்தில் அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டு விடலாம் என்று பார்க்கிறாயே! "

"அப்படி இல்லை கிருஷ்ணா......" ஹரிமோகன் சிறுவனை நோக்கி நகர்ந்து வந்தான்.

சிறுவனது முகத்தில் பொய்க்கோபம், அதையும் மீறிய சிரிப்புடன் சொன்னான்:

" நகர்ந்து போ ஹரி மோகன்! உன்னை எனக்குத் தெரியாதா? கொஞ்ச நேரம் முன்பு வரை, இந்தப் பயல் மட்டும் என் கையில் கிடைக்கட்டும், கட்டி வைத்து உதைக்கிறேன் என்று கருவிக் கொண்டிருந்தவன் தானே நீ! உனக்கே அது மறந்து போய் விட்டதா என்ன? அதற்கு பயந்து கொண்டுதானே, நான் உன்னிடத்திலிருந்து ஒரு நாலடி தள்ளியே நின்று கொண்டிருந்தேன்?"

ஹரிமோகன் இருட்டில் கைகளைத் துழாவியபடி, தேடி வந்துகொண்டிருந்தான். சிறுவனோ இன்னமும் தள்ளியே நின்று கொண்டு சொன்னான்:" இல்லை இல்லை. இந்த திருப்தி, விளையாட்டெல்லாம், உனக்கு அடுத்த பிறவியில் தான்."

இப்படிச்சொல்லிக் கொண்டே, நீண்ட இருட்டில் சிறுவன் ஓடி மறைந்து விட்டான்.

ஹரிமோகனுக்கு நடந்ததெல்லாம் கனவா, நிஜமா என்ற சந்தேகம் எழத் தனக்குத் தானே பேசிக் கொள்ளலானான்.

"அந்த வசீகரமான முகம், புன்சிரிப்பு, இது எதுவுமே கனவில்லை, நிஜம் தான் என்று தோன்றியது. சின்னப் பையனாக இருந்தாலும், என்ன அழகாகச் சொன்னான்? தன் முந்தின பிறவி, ஸ்வர்க்கம்-நரகம் இரட்டையைப் பார்த்தது இது எல்லாம் வெறும் கனவாக இருக்கவே முடியாது.

என்னுடைய ஷ்யாமசுந்தரன் என்னைத் தேடி வந்தான். என்னுடன் பேசினான்.ஐயோ, நான் தான் அவனிடத்தில் மரியாதை இல்லாமல் பேசினேன்...அவனைக் கட்டி வைக்கப் போகிறேன் என்றேன். அடிப்பேன் என்றேன். அவனைப் பொய்யன், பித்தலாட்டக்காரன் என்றெல்லாம் ஏசினேன். அது தெரிந்தும் என் பிரபு என்னைத் தேடி வந்தான், என்னோடு சமமாகப் பேசினான், சிரித்தான், பொய்க்கோபம் காட்டினான். கேள்விகளைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே, என் பிரபு என் கேள்வியிலேயே பதிலாக வந்து விட்டான். கிருஷ்ணா! கிருஷ்ணா!"

ஹரிமோகனுடைய மொத்தமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருந்தது

" கோவிந்தா! என் பிரபோ, உன்னை மறுபடி காண்பது எப்போது?"

ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மாத இதழான அகில இந்திய இதழில், [ஏப்ரல் 2002]
ஒரு கனவு என்ற தலைப்பில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஒரு வங்க மொழிக் கதையைத் தழுவியது. ஆசிரியர் விவரம் தெரியவில்லை. எப்போதோ படித்தது..மறுபடி கிடைத்தது, இதில் வரும் ஹரிமோகன் நான் தானோ என்ற சந்தேகம் கூட வந்தது. நானாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமே கதையை வாசித்து முடித்தபின் வந்தது.

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்!


ஹரி மோகனுக்கு, நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும், கோபமும் ஒருசேர எழுந்தன. பின்னே, ஏழை என்ன தான் செய்ய முடியும்? ஒரு ஒட்டு வீட்டில், கிழிந்த பாய், தலையணையில், அமர்ந்து பொருமிக் கொண்டிருந்தான்.

"என்ன நியாயம் இது? நினைவு தெரிந்த நாள் முதல் ஒருவருக்கும் நான் தீங்கு செய்ததில்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டவனும் இல்லை. பரம சாதுவாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்-ஆனாலும், கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்களையே அந்த கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டிருக்கிறான், கேட்டால், இது உன்னுடைய கர்ம வினை, முன் ஜென்மத்தில் நீ செய்த பாவங்களைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ கர்மவினை, புண்ணியம் பாவம் என்று சொல்வது எல்லாம், வெறும் பித்தலாட்டம் என்று தான் படுகிறது. அந்த விஷமக் காரக் கண்ணன், தன் மேல் எவரும் பழி சொல்லாமல் இருப்பதற்காகத் தான் கீதையில் இப்படி ஒரு பொய்யைச் சொல்லி வைத்திருக்கிறான்."

தூரத்தில் தெரிந்த கிருஷ்ணன் கோவிலை ஒரு முறை வெறித்துப் பார்த்து விட்டு மறுபடி தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்:

"அவன் சொல்கிறபடி, முந்தைய பிறவியில் நான் பெரும் பாவங்களைச் செய்திருந்தால், என்னுடைய இன்றைய இழிநிலை அதனால் தான் என்றால், இப்போதும் கூட அந்தத் தீவினைகளின் நிழல், நினைவுகள் என் நெஞ்சில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அவ்வளவு பெரிய பாவச் சுமை, ஒரு பிறவியோடு போயிருக்காது, மனம் கூட இந்த அளவு களங்கமற்றதாக இருந்திருக்காது...கர்ம வினை, பாவம், புண்ணியம் என்பதெல்லாமே சுத்தப் பொய்."

ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தையே எடுத்துக் கொள்ளலாமே..அவனுக்கு இன்றைக்கு இருக்கிற செல்வம், அந்தஸ்து, ஆள்பலம், செல்வாக்கு இதையெல்லாம் பார்த்தால், முந்தின பிறவியில் அவன் பெரிய ஞானியாகக் கூட இருந்திருக்க வேண்டும்.இப்போது அவனிடத்தில் அப்படி நல்ல விஷயங்கள் இருந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவனைவிட சுயநலக்காரனும், கிராதகனும் எவனுமே இல்லை."

"இந்த கர்மவினை, புண்ணியம் , பாவம் இதெல்லாம் இல்லவே இல்லை. அந்தப் பொல்லாத பயல் கிருஷ்ணனின் பசப்பு வேலை மட்டுமே. என்னை மாதிரி ஒன்றும் அறியாத அப்பாவிகளை மயக்க மட்டுமே ஏற்பட்டது."

"அடேய், பொல்லாத விஷமக்காரப் பயலே! கிருஷ்ணா! நீ பெரிய எத்தன். என் பக்கத்தில் வராத வரைக்கும் நீ பிழைத்தாய். நீ மட்டும் என் கையில் அகப்பட்டால், என்ன செய்வேன் தெரியுமா? உன்னைக் கட்டி வைத்து, என் ஆத்திரம் தீறகிற வரை உதைப்பேன். நீ எப்படிப்பட்ட பொய்யன் என்பதை இந்த ஊரே தெரிந்து கொள்கிற வரை உதைப்பேன், உன்னை விட மாட்டேன்."

"நீ மட்டும் என் கிட்ட வந்து பார்....உன்னை என்ன செய்கிறேன் என்று....."

இப்படி ஹரி மோகன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கே ஒரு ஒளிவட்டம் தோன்றியது.கருப்புத்தான், ஆனால் எவ்வளவு வசீகரம்! மயிற்பீலி அணிந்த ஒரு சிறுவன் ஹரி மோகன் அருகே நின்றான். இடையில் அவனது புல்லாங்குழல், கால்களை ஒய்யாரமாக வளைத்து நின்ற படியே, "இதோ வந்து விட்டேன்" என்றான்.

ஏனோ,ஹரி மோகனுக்குத் தன்னுடைய நினைப்பின் மீதே வெட்கம் ..இந்த அழகான குழந்தையையா கட்டிப் போட்டு உதைக்க வேண்டும் என்று எண்ணினோம்...தன் மோசமான நினைப்பின் மேல் எழுந்த பச்சாதாபம் ஒருபுறம், இந்த சிறுவன் முன்னால் காட்டிக் கொள்வதா என்கிற வெட்கம் ஒருபுறம்..சிறுவனிடம், "இங்கு எதற்காக வந்தாய்?" என்றான்.

"எதற்காகவா? நீ என்னைக் கூப்பிடவில்லை? என் கிட்ட வந்து பார் என்று நீ தானே கூப்பிட்டாய்..அதுதான் வந்து விட்டேன், நீ ஆசைப் பட்டபடி, கட்டி வைத்து உதைப்பாயோ, உதைத்தபிறகு கட்டிப் போடுவாயோ, செய்துகொள்."

கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், சிரித்துக் கொண்டே சிறுவன் சொன்ன வார்த்தையில் ஹரி மோகன் மயங்கி நின்றான். 'என்ன காரியம் செய்து விட்டேன், இந்த மோகனச் சிறுவனை அள்ளி அணைத்துக் கொஞ்ச வேண்டும் என்கிற நினைப்பில்லாமல், கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று நினைத்தேனே, எவ்வளவு பெரிய தப்பைச் செய்ய இருந்தேன்' அடிமனது அரற்ற, ஹரி மோகன் தலை கவிழ்ந்து நின்றான்.

"இங்கே பார் ஹரி மோகன், நான் தான் ஏற்கெனெவே வாக்குக் கொடுத்திருக்கிறேனே..'யே யதா மாம் ப்ரபத்யந்தே..எவரெவர் எந்த முறையில் என்னை அணுக முயல்கிறார்களோ அதே முறையில் நான் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவேன்' அதுதான், கோபமேலீட்டால், என்னை அடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாய்.... உன் ஆசைப்படியே நானும் உன்னிடம் அடிபட வந்திருக்கிறேன்......ஆரம்பிக்க வேண்டியது தானே?"

"குட்டிப்பையா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை"

இதோ பார் ஹரி மோகன்! எதற்காகத் தலை குனிந்து நிற்கிறாய்? என்னைக் கண்டு பயப்படாதவர்களை எனக்குப் பிடிக்கும். என் மேல் தோழமை கொண்டு, என்னைத் திட்டவும் அடிக்கவும் என்னோடு விளையாடவும் வருகிறவர்களை ரொம்பப் பிடிக்கும்.இந்த உலகத்தை எதற்காகப் படைத்தேன் என்று நினைக்கிறாய்? ஒரு விளையாட்டிற்காகத்தான். என்னோடு விளையாடத் தயாராக இருக்கும் தோழர்களையே நான் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் பார், அப்படிப்பட்ட தோழர்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை."

"எல்லோருக்கும் கோபம் வந்தால் அதை என்னிடத்தில் தான் கொட்டுகிறார்கள். அவர்கள் வேண்டுவதைஎல்லாம் நான் உடனே அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். செல்வம் வேண்டும், பதவி வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் இப்படி என்னிடத்தில் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சில பேருக்கு, உடனே மோட்சம் வேண்டும் இப்படி அவரவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் இயந்திரமாகவே என்னை நினைக்கிறார்கள். எனக்காகவே என்னை வேண்டுவார் ஒருவரும் இல்லை. எதையும் எதிர்பாராமல் என்னிடத்தில் அன்பு செலுத்துவார் எவரேனும் உண்டா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன்....சரி, அது கிடக்கட்டும், உனக்கும் எதோ என்னிடத்தில் வேண்டியிருக்கிறதல்லவா? கோபத்தில் என்னைக் கட்டி வைத்து அடிக்க ஆசைப் பட்டாய். இதோ நான் வந்து விட்டேன்."

ஹரிமோகன் கொஞ்ச நேரம் தயங்கிப் பிறகு சொன்னான்:" கிருஷ்ணா, மிகவும் அழகாகப் பேசுகிறாய். ஆனாலும், உன்னுடைய நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் புரியவே இல்லை."

உனக்குப் புரியும்படி சொல்கிறேன், கேட்பாயா?"

"நீயே சிறுவன், முளைத்து மூன்று இலை கூட விடாத சின்னப்பயல் எதை எனக்குப் புரிய வைக்கப் போகிறாய்? என்ன கற்றுக் கொடுக்கப் போகிறாய்?"

"என்னால் என்ன முடிகிறதென்று பொறுத்திருந்து தான் பாரேன், ?" வசீகரிக்கும் புன்னகையுடன் அந்த சிறுவன் ஹரிமோகனுடைய உச்சந்தலையை லேசாகத் தொட்டான்.

ஹரி மோகனுடைய உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. மூலாதாரத்தில் உறங்கிக் கிடந்த குண்டலினி ஐந்து தலை வெள்ளை நாகம் படமெடுத்து உயர்வது போல, மூண்டெழு கனலாக உச்சிக்கு உயர்ந்தது. தேகமே நான் என்ற நிலை விடுத்துத் தன் இயல்பான சூக்கும சரீரத்தில் இருப்பதைக் கண்டான். பக்கத்திலேயே, கண்ணனும் இருந்தான். இருவரும், ஒரு பெரிய மாளிகைக்குள் இருப்பதை ஹரிமோகன் அறிந்தான்.

என்ன இது, இது ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தின் வீடு அல்லவா?

ஒரு கவலையும் இல்லாமல் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகத் தான் நினைத்த அதே செல்வரங்கம், கிழடு தட்டி, விசனத்தோடு, கண்களில் நீர் வழிய வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போது, ஆட்சி அதிகாரத்தோடு எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த அதே செல்வரங்கம் தானா இது? ஏன், ஒரு கோழிக் குஞ்சைப்போல நடுங்கிக் கொண்டிருக்கிறான்?

இந்த நிலையிலும் ஹரிமோகனுடைய பயம் போகவில்லை. யாராவது வந்து பிடித்துக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நையப் புடைத்து விடுவார்களோ?

"கிருஷ்ணா, என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறாயா? செல்வரங்கத்தின் செல்வாக்கு உனக்குத் தெரியாதா? அவனுடைய வேலைக்காரர்கள் நம்மைப் பிடித்து நன்றாக உதைக்கப் போகிறார்கள் பார். நம்மைத் திருடர்கள் என்று சொல்லப் போகிறார்கள்."

சிறுவன் கலகலவென்று சிரித்தான்," சொல்லிவிட்டுப் போகட்டுமே. திருட்டுப் பட்டம் எனக்குப் புதிதா என்ன? அட, நீயேன் இப்படி நடுங்குகிறாய்? காவல்காரர்கள் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது நீ செல்வரங்கத்தின் மனத்திற்குள் என்ன ஓடுகிறது, ஏன் அவன் இப்படி இருக்கிறான் என்பதைப் பார்."

"அது எப்படி இன்னொருவர் மனதிற்குள்....." ஹரிமோகன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னாலேயே கிருஷ்ணன் விடையைச் சொல்லி விட்டான். "உனக்கு செல்வரங்கத்தின் செல்வாக்கு, ஆள்பலம் இவைதானே தெரியும், கொஞ்சம் என்னுடையதையும் பாரேன்."

செல்வரங்கத்தின் மனதை ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல, உள்ளிருக்கும் அனைத்தையும் பார்க்க முடிவதை ஹரி மோகன் உணர்ந்தான். செல்வரங்கத்தின் மனதில், பலவிதமான ஆசைகள், கோபங்கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். எவ்வளவு பணம் இருந்த போதிலும் போதாது, போதாது என்று கூக்குரலிடும் பேராசை அவனை ஆட்டிப் படைப்பதையும், அவன் பணத்திலேயே குறியாக இருக்கும் உறவு, நட்பு சுற்றத்தாரையும், அவர்களால் கிலேசத்துடனும், ஆங்காரத்துடனும் செல்வரங்கம் தளர்ந்து போய் இருப்பதையும், அவனது ஆசை மகள் நடத்தை தவறி, ஊர்ப்பழிக்கு அஞ்சி அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டு, அந்த சோகத்திலேயே அழுதுகுமுறிக் கொண்டிருந்த செல்வரங்கத்தப் பார்த்த பொது, ஹரிமோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தவறுகளை உணரவோ, அதற்கு வருத்தப் படவோ அவன் தயாராக இல்லை. நான் நான் என்ற மமதை, அவனை இறைவனை அழைப்பதைத் தடுத்துக் கொண்டிருந்தது. இடை இடையே, யம தூதர்கள், செல்வரங்கத்தை வந்து வந்து மிரட்டி விட்டுப் போவதையும், இத்தனைக்குப் பின்னாலும், உயிர் மேல் ஆசையால், செல்வரங்கம் ஒரு கோழிக் குஞ்சு துடிப்பதைப் போல பயத்தில் துடிப்பதையும் பார்த்தான்.

"கண்ணா, இவன் ரொம்ப சந்தோஷமாக, கவலையே இல்லாமல் இருக்கிறான் என்றல்லவா எண்ணி இருந்தேன்? என்ன ஆயிற்று இவனுக்கு?"

கண்ணன் சொன்னான், "என்னவோ செல்வரங்கத்துடைய செல்வாக்கு, ஆள் பலத்தைப் பற்றிப் பேசினாயே, இப்பொழுது என்ன சொல்கிறாய்? இவனுக்கு இருப்பதை விட செல்வாக்கும், பலமும் எனக்கிருப்பதை மறந்து விட்டாயா? நானும் ராஜாவாக, நீதிபதியாக, தண்டிக்கும் காவலனாக இருக்க முடியும். இந்த விளையாட்டு உனக்குப் புரிகிறதா?"

ஹரிமோகன் உரத்துக் கூவினான்," அடக் கடவுளே, இது எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் கொடூரமாக அல்லவோ இது இருக்கிறது, இதை ஒரு விளையாட்டு என்று லேசாக உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது?"

ஷ்யாமசுந்தரன் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்: "எனக்கு எல்லாவிதமான விளையாட்டும் பிடிக்கும். அடிக்கவும் பிடிக்கும், அடிபடவும் பிடிக்கும். உன்னைப் போல, செல்வரங்கத்தைப் போல எல்லோருமே, எதையும் மேலோட்டமாகவே பார்க்கப் பழகி இருக்கிறீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மையான தன்மையில் பார்க்கத் தெரிவதே இல்லை. எதனுள்ளும் இருக்கும் உண்மையை அறியக் கூடிய நுட்பமான பார்வை இல்லை. அதனால் தான், நீ ஒருவன் தான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருப்பது போலவும், செல்வரங்கம் போன்றவர்கள் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல், சந்தோஷமாக இருப்பதாகவும் தோன்றுகிறது. ஆண்டவன் கல்நெஞ்சுக்காரன், இரக்கமே இல்லாமல், உயிர்களை இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபப் பட்டு, என்னை அடிப்பதற்காகவே இங்கு அழைத்திருக்கிறாய் இல்லையா?"

"இதோ பார் ஹரி மோகன், நீ கஷ்டப் படுவதாகவும், செல்வரங்கம் சந்தோஷமாக இருப்பதாகவும் நினைத்தாய் அல்லவா? இப்போது செல்வரங்கம் மனதில் எத்தனை வேதனையை தேக்கி வைத்திருக்கிறான் என்பதையும் பார்த்தாய் அல்லவா? உண்மையில், ஆனந்தம், சந்தோஷம் என்பது மனதின் ஒரு நிலைதான். அதே மாதிரித் தான் வேதனை, துயரம் எல்லாம். மனதின் உரு மாற்றங்கள் தான் இந்த மகிழ்ச்சியும், வருத்தமும்.

உண்மை என்னவென்றால், ஒன்றுமே இல்லாத ஒருவன், துர்வினையே முதலாகக் கொண்ட ஒருவன் கூட, இடைஞ்சல்கள், ஆபத்துகள் மத்தியில், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

உன்னையே எடுத்துக் கொள், வரட்டுத் தனமான நல்வினைகளைச் சேர்ப்பதிலேயே நாட்களைச் செலவழித்து, கஷ்டங்களை நினைத்து வருத்தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாய். உன்னை மாதிரியே செல்வரங்கமும், வரட்டுத் தீவினைகளையே செய்து, மகிழ்ச்சியற்றிருப்பதையும் பார். அதனால் தான் நல்வினைகளால் நிலையற்ற கணப்பொழுதில் மறையும் சுகமும், தீவினைகளால் நிலையற்ற எளிதில் மறையும் துக்கமும், இன்னும் சில நல்வினகளால் நிலையற்ற துக்கமும், தீவினைகளால் நிலையற்ற சுகமும் கூட மாறி மாறி வருகின்றன. இப்படிப் பட்ட போராட்டத்தினால், நிலையான, உண்மையான ஆனந்தம் என்பதே கிடையாது, கிடைக்காது.

ஆனந்தமயமான இருப்பு என்னிடத்தில் இருக்கிறது. என்னிடம் வந்து, என் மேல் காதலால் உருகிக் கசிந்து, என்னைத் தேடி, என்னிடம் அன்பு கொண்டு நெருக்கி, என்னை வாட்டவும் துணியும் ஒருவனே என்னிடமிருந்து எல்லையற்ற மகிழ்ச்சியையும் பலவந்தமாகப் பறித்துக் கொள்கிறான். நானும் அவனிடத்தில் சந்தோஷமாகத் தோற்றுப் போகவும் தயாராக இருக்கிறேன்.

ஹரிமோகனுக்குத் தன்னிடத்தில் இருக்கும் குறை இன்னதென்று இன்னமும் புரியவில்லை. ஆனாலும், ஆர்வத்தோடு கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க ஆவலாகக் காத்திருந்தான்.

பதிவு கொஞ்சம் நீ....ண்டு விட்டது, நாமும் கண்ணன் பெயரைச் சொல்லிக் கொண்டே கொஞ்சம் காத்திருப்போமா?


கண்ணன் வந்தான்-மாயக் கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கணடதும் கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!

நெடுநாட்களுக்கு முன்னால், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடான All India Magazine இல் வெளியான ஒரு வங்க மொழிக் கதை. ஆசிரியர் பெயர் தெரியாது. இதன் தமிழ்ப் பதிப்பு 'அகில இந்திய இதழ்' என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2002 இதழில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்ததன் தழுவல்.