Showing posts with label உலகம் போற போக்கு. Show all posts
Showing posts with label உலகம் போற போக்கு. Show all posts

சண்டேன்னா மூணு! ஆடிட்டர் குருமூர்த்தி! திருமாவளவன்! News 18

தமிழக அரசியலில் நரேந்திர மோடிக்குப் பிறகு மிக அதிகமாக வெறுப்புடன் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது ஆடிட்டர் குருமூர்த்தி, H ராஜா இருவராகத் தான் இருக்கும்! தமிழிசையை மீம்ஸ் போட்டுக் கலாய்த்தார்களே தவிர, அவரை யாரும் சீரியசாக எப்போதும் எடுத்துக் கொள்ளவில்லை! விவரமாக அரசியல் பேசினால் வெறுப்பு வன்மத்தைக் கக்குவதும் கூட  திராவிடங்களின் இயல்புதானே!


Oct 21    இரு சட்டசபைத்  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் வருவதை ஒட்டி இங்கே சேனல்களில் பிஜேபி அதிமுக உறவில் விரிசலா உரசலா என்றே விவாதங்கள் போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கிற, அது பிஜேபியுடன் தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிற ஆடிட்டர் குருமூர்த்தியிடம் தந்திடிவி ஹரிஹரன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை நடத்தியிருக்கிறார். ஹரிஹரனுடைய கேள்விகள் சரியாக, கூர்மையாக இருந்ததா, ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய பதில்களை நேர்மையாக, நேரடியாக சொன்னாரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! ரகசியங்களை யாராவது வெளியில் சொல்வார்களா? அதுவும் தந்திடிவியில்? என்று சிரிக்காமல் ஹரிஹரனிடம் கேட்கிறார் என்ற ஒரு இடத்திலேயே சுவாரசியம் தொற்றிக் கொள்கிறது! வீடியோ 40 நிமிடம்


காமெராவோடு  மைக் நீட்டப்படுகிற இடங்களைத் தேடிப்  போகிற அரசியல்வாதியாக விசிகவின் திருமாவளவன் மாறி நீண்டகாலமாகிறது என்றாலும், எம்பியான பிறகு ஊடக வெளிச்சத்தில் அடிக்கடி கண்ணில் படுகிறார், எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக எல்லாவிஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்கிறார் என்பது தமிழக அரசியலுக்கு இப்போது வந்திருக்கிற புதிய சோதனை! அண்மையில்   அமெரிக்காவுக்குப் போன திருமா, முகநூலில் புகைப்படங்களையும்  கலாய்க்கப் படுவதையும் பார்த்த போது, எப்படி இருந்தவர் எப்படி ஆகி விட்டார் என்று பரிதாபம் தான் எழுந்தது. வீடியோ 41 நிமிடம் 


News 18 தமிழ்நாடு  சேனலை நான் அதிகம் பார்ப்பதில்லை. குணசேகரன் நெறியாளராக இருந்து நெறி தவறி நடத்தும் விவாதங்கள் ஒரு முக்கியமான காரணம் . காலத்தின் குரல் நிகழ்ச்சியை இப்போது செந்தில் நடத்துகிறார் என்பதால் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நெறியாளர் கடனே என்று மாரடிக்கிறார்! பங்கேற்கிறவர்கள் எப்போதும்போலக் கூவுகிறார்கள்! வீடியோ 52 நிமிடம்.

இந்த மூன்று விவாதங்களிலும் சில பொதுவான விஷயங்கள் வேறு வேறு விதமான குரல்களில் கிடக்கின்றன. ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினிகாந்தும் முதலாவது மற்றும் மூன்றாவது வீடியோ விவாதங்களின் பிரதானமான பேசுபொருளாக இருப்பது தற்செயல் அல்ல.

இதுதான் தமிழக அரசியலின், ஊடகங்களின்  யோக்கியதை என்பதைத் தனியாகக் கோடிட்டுச் சொல்ல வேண்டியதில்லை! ஆனால் உலகம் போகிற போக்கும் இவர்களுடைய போக்கும் ஒன்றாக இருப்பதே இல்லை!

மீண்டும் சந்திப்போம்.                      

உலகம் போகிற போக்கும் ஒரு பதிவர் சந்திப்பும்!

.....


பொதுவாக, பதிவர்கள் சந்திப்பு, கூட்டம் என்று எதிலும் அவ்வளவாக நாட்டமில்லாத என்னிடம் சென்ற திங்களன்று (19/11/2012) கோவி கண்ணன் அலைபேசியில் பேசினார்.கோவாவில் இருந்து அப்போது தான் சென்னை திரும்பியிருந்தார். அன்றிரவு பாண்டியன் எக்ஸ்ப்ரெசில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை வந்து சேர்வதாகவும், மறுநாள் காலை எங்கே எப்போது சந்திக்கலாம் என்று கேட்டார் சொன்னேன்.

ஆக மறுநாள் 20/11/2012 செவ்வாய்க்கிழமை ஒரு  அறிவிக்கப்படாத அல்லது தம்பட்டமெதுவும் இல்லாத பதிவர்கள் சந்திப்பு, அதிகப்பேர் இல்லை ஜென்டில்மென், நாலே நாலு பேர் மட்டும் தான், காலை பதினோரு மணிக்கு ஆரம்பித்து மாலை நாலரை மணி வரைக்கும். கோவியார் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மிக அமைதியாக நடந்தது.மதுரை  அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றி  ஒய்வு பெற்ற பேராசிரியர் தருமி ஐயா, எனக்கு முன்பாகவே ஆஜராகிவிட்டார். பதிவர்கள் சந்திப்பு, அதுவும் மதுரையில் என்றால் தருமி ஐயா இல்லாமல் நினைத்துப் பார்க்கவே முடியாது. வேலைநாளாக இல்லாமல் இருந்திருந்தால் கார்த்திகைப்பாண்டியனும் ஆஜராகி இருப்பார். அவரில்லாமல் மதுரையில் பதிவர்கள் சந்திப்பது அனேகமாக இருக்காது! அப்புறம் நான், சிறிது நேரம் கழித்து, மதுரைப் பதிவர் ஸ்ரீதர் ரெங்கராஜ் என்று நாலே நாலுபேர் கூடி விவாதித்துத் தீர்த்தோம்!பதிவுகள், பதிவர்கள் என்று தொடங்கி சமீபத்திய நிலவரம் வரை ஒரு அலசல் கொஞ்சம் வேகமாகவே நடந்தது



நான்கு பேருமே எதிரெதிரான கருத்துக்களில் ஊன்றி நிற்பவர்கள் என்றாலும், வேறுபட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் அதுபோலவே சேர்ந்திருக்கவும் ஆயிரம் காரணங்களுண்டு என்பதில் எனக்கிருக்கும் நம்பிக்கை இந்த மாதிரியான சந்திப்புக்களில், தனிப்பட்ட உரையாடல்களில், எப்போதுமே பொய்த்ததில்லை. இந்த சந்திப்பைப் பற்றி, கோவி.கண்ணனே தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளட்டும் என்று காத்திருக்கிறேன்.

தருமி ஐயாவின் லேட்டஸ்ட் பதிவில் இர்விங் வாலஸ் எழுதிய தி மேன்  நாவலைப் பற்றி ஒரு பாரா எழுதிக் கொண்டிருப்பதை அவர்  சொன்ன போது, அந்த நாவலை பற்றிய என்னுடைய விமரிசனத்தை இந்தப் பக்கங்களில் பதிவு செய்திருந்தது நினைவுக்கு வந்தது அதில் சொல்லி ருந்த ஒரு பகுதி இங்கே

கதைக்களம், டக்லஸ் டில்மன், கறுப்பு நிறம் ஒன்றினாலேயே இளப்பமாக, இரண்டாந்தரமாக நடத்தப் படுகிற நிலையை எதிர்த்து  எப்படி ஒரு மனிதனாக, ஆண்மையுடன் எதிர் கொள்கிறார் என்பது மிக சுவாரசியமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. மேன் என்று சொல்லும் போது ஆண் என்று மட்டுமல்ல ஆண்மையுள்ளவன் என்றும் ஒரு பொருள் இருக்கிறதல்லவா? Tne Man! ஆண்மையுள்ளவன் மட்டுமே ஆணாக இருக்க முடியும்!அந்த ஆண்மை இங்கே மிக அழகாக ஒரு கதையாக விரிகிறது.

கதையின் மொத்த சாராம்சமே கடைசியில் டக்லஸ் டில்மான் -அவரது வழக்கறிஞர் நேத்  ஆப்ரஹாம்ஸ் இருவருக்குமிடையிலான உரையாடல் – இந்தப் பத்தியில் அடங்கி விடுகிறது.

 



வழக்கறிஞர் நண்பர் சொல்கிறார்: ஒரு  கறுப்பனை அதிபராகப் பார்த்தபோது தேசமே அதிர்ச்சியோடு, பயத்துடன், ஒரு அவமானமாகப் பார்த்தது.இந்த ஒரு வருடத்தில் பார்த்துப் பழகிப் போய்விட்டதால் அதிர்ச்சி பயம், அவமான உணர்ச்சி குறைந்திருக்கிறது.ஒரு மனிதனாக, உங்களுடைய செயல்திறனை வைத்து மட்டுமே தீர்மானிப்பதென்பது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்.

இதே அளவுகோலின்படி, இன்றைக்கு நரேந்திர மோடி குறித்து ஆத்திரப் படுகிறவர்கள் ஆவேசப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்களுமே  கூடப் பழகிக் கொள்வார்கள், மோடியை அவரது செயல்களின் அடிப்படையில் மட்டுமே விமரிசனம் செய்வார்கள், புரிந்து கொள்வார்கள் வெறும் கற்பனையான பயம் பரப்புரைகளின் மீதல்ல என்று செய்திகள் கருத்துக் கணிப்புக்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என்று ஒரு எண்ணம் எழுந்தது.
                                     oooOooo


நேற்று முன்தினம் பதிவர் நண்பர் மாணிக்கம் சட்டநாதனை ஆன்லைனில் பார்த்ததும் ஹேங்கவுட்டில் அழைத்துக் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தேன். இவனுக்கு வேறு வேலையே இல்லை, எப்போது பார்த்தாலும் காங்கிரசையும் திமுகவையும் கடுமையாக விமரிசித்துக் கொண்டே இருக்கிறான் என்று ஒரு எண்ணம் நண்பர்களிடம் பரவலாக இருப்பதை அறிவேன்.அதைத் தொட்டுப் பேசிக் கொண்டிருந்தபோது, அப்படி ஒரு விமரிசன நிலைபாட்டை எடுப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன என்று கொஞ்சம் விரிவாக எடுத்துச் சொன்னேன்.

காங்கிரசும் திமுகவும் தங்கள் சுயநலத்துக்காக ஜனநாயக நடைமுறைகள், அரசு நிர்வாக இயந்திரங்கள் அத்தனையையும் சீர்திருத்த முடியாதபடி  அளவுக்கும் மீறியே சீரழித்து விட்டன. இந்தச் சீரழிவில் இருந்து மீள இன்னும் எத்தனை தலைமுறைகள் தேவைப்படுமோ தெரியாது என்பதை சொன்னபோது மனிதர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.அவருக்கு வேறொரு வேலையும் எனக்கு ஒரு திருமண வரவேற்புக்குப் போக வேண்டிய அவசரமும் சேர்ந்து வந்ததால், உரையாடல் முற்றுப்பெறாமல் நிற்கிறது.  
 
இப்போதைக்கு முற்றுப்புள்ளி இல்லை! கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் சந்திப்போமா? :-))))