தமிழக அரசியலில் நரேந்திர மோடிக்குப் பிறகு மிக அதிகமாக வெறுப்புடன் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது ஆடிட்டர் குருமூர்த்தி, H ராஜா இருவராகத் தான் இருக்கும்! தமிழிசையை மீம்ஸ் போட்டுக் கலாய்த்தார்களே தவிர, அவரை யாரும் சீரியசாக எப்போதும் எடுத்துக் கொள்ளவில்லை! விவரமாக அரசியல் பேசினால் வெறுப்பு வன்மத்தைக் கக்குவதும் கூட திராவிடங்களின் இயல்புதானே!
Oct 21 இரு சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் வருவதை ஒட்டி இங்கே சேனல்களில் பிஜேபி அதிமுக உறவில் விரிசலா உரசலா என்றே விவாதங்கள் போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கிற, அது பிஜேபியுடன் தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிற ஆடிட்டர் குருமூர்த்தியிடம் தந்திடிவி ஹரிஹரன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை நடத்தியிருக்கிறார். ஹரிஹரனுடைய கேள்விகள் சரியாக, கூர்மையாக இருந்ததா, ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய பதில்களை நேர்மையாக, நேரடியாக சொன்னாரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! ரகசியங்களை யாராவது வெளியில் சொல்வார்களா? அதுவும் தந்திடிவியில்? என்று சிரிக்காமல் ஹரிஹரனிடம் கேட்கிறார் என்ற ஒரு இடத்திலேயே சுவாரசியம் தொற்றிக் கொள்கிறது! வீடியோ 40 நிமிடம்
காமெராவோடு மைக் நீட்டப்படுகிற இடங்களைத் தேடிப் போகிற அரசியல்வாதியாக விசிகவின் திருமாவளவன் மாறி நீண்டகாலமாகிறது என்றாலும், எம்பியான பிறகு ஊடக வெளிச்சத்தில் அடிக்கடி கண்ணில் படுகிறார், எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக எல்லாவிஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்கிறார் என்பது தமிழக அரசியலுக்கு இப்போது வந்திருக்கிற புதிய சோதனை! அண்மையில் அமெரிக்காவுக்குப் போன திருமா, முகநூலில் புகைப்படங்களையும் கலாய்க்கப் படுவதையும் பார்த்த போது, எப்படி இருந்தவர் எப்படி ஆகி விட்டார் என்று பரிதாபம் தான் எழுந்தது. வீடியோ 41 நிமிடம்
News 18 தமிழ்நாடு சேனலை நான் அதிகம் பார்ப்பதில்லை. குணசேகரன் நெறியாளராக இருந்து நெறி தவறி நடத்தும் விவாதங்கள் ஒரு முக்கியமான காரணம் . காலத்தின் குரல் நிகழ்ச்சியை இப்போது செந்தில் நடத்துகிறார் என்பதால் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நெறியாளர் கடனே என்று மாரடிக்கிறார்! பங்கேற்கிறவர்கள் எப்போதும்போலக் கூவுகிறார்கள்! வீடியோ 52 நிமிடம்.
இந்த மூன்று விவாதங்களிலும் சில பொதுவான விஷயங்கள் வேறு வேறு விதமான குரல்களில் கிடக்கின்றன. ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினிகாந்தும் முதலாவது மற்றும் மூன்றாவது வீடியோ விவாதங்களின் பிரதானமான பேசுபொருளாக இருப்பது தற்செயல் அல்ல.
இதுதான் தமிழக அரசியலின், ஊடகங்களின் யோக்கியதை என்பதைத் தனியாகக் கோடிட்டுச் சொல்ல வேண்டியதில்லை! ஆனால் உலகம் போகிற போக்கும் இவர்களுடைய போக்கும் ஒன்றாக இருப்பதே இல்லை!
மீண்டும் சந்திப்போம்.

