சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

"O India, land of Light and spiritual knowledge, wake up to your true mission in the world. Show the way to union and harmony."
-ஸ்ரீ அரவிந்த அன்னை.



புது வருடம் பிறக்கப் போவதற்கு முன்னாலேயே, வேண்டுதல்களும், அபிலாஷைகளும்  இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்து விடுகின்றன! கடவுளிடம், இந்தப் புத்தாண்டில் என்னென்ன வேண்டலாம், கேட்கலாம் என்ற பட்டியல் தயாராக ஆரம்பித்து விடுகிறது.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியே  ! எங்கும் நிறைந்தருளும் கடவுளே!


இந்தப் புத்தாண்டில் எல்லாக் காரியங்களும் வெற்றி பெற  வேண்டும், எண்ணியபடி எல்லாம் நடந்தேற வேண்டும்! எல்லா வளங்களும் பெருக வேண்டும்! 


உடல் நலம் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும்!  சுவற்றை வைத்துச் சித்திரம் என்பது போல, உடல் நலம் நன்றாக இருந்தால் தானே, மற்ற வேலைகளைச் செய்ய முடியும்!


ஆர்வத்தோடு விழையும் அனைத்தும் மெய்ப்பட வேண்டும்! எங்களது இல்லத்திலும், வாழ்க்கையிலும், உலகத்திலும் அமைதி நிலவ வேண்டும்!

இதையே உன்னிடம் வேண்டுகிறோம்!


கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், பட்டியலில் இன்னும் எது எதையோ சேர்த்துக் கொள்ள மறந்து விட்டோமே என்று, இன்னும் கொஞ்சம் வேண்டுதல்கள் சேர்ந்து கொண்டே போகும்! பட்டியல்கள் அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விடுவதுமில்லை!


ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. ஆறறிவு இல்லாத தாவரங்கள் கூட ஒளியை நோக்கி உயர்கிற தன்மையோடு இருக்கின்றனவே! ஆறறிவு படைத்த நாமும் அப்படி தெய்வீக ஒளியை வேண்டி உயர வேண்டாமா? 


ஒளியை நோக்கி உயரும் தன்மையைக் கொஞ்சம் மறந்துவிடுகிறபோது, இது வரை சாதித்தவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதே! இதற்கு நம்மைத் தவிர வேறு எவரைக் குற்றம் சொல்ல முடியும்?


மற்ற எல்லா வேண்டுதல்களையும்  விட, மிக முக்கியமான ஒன்று, ஒரு பிரார்த்தனையாக --

ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன்னைச் சரண் அடைகிறேன்.
அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.

இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்! ஒவ்வொரு அசைவிலும் செயலிலும், உனது திருவுள்ளப் படியே நடந்துகொள்கிற பக்குவ நிலையை அருள்வாய்.

பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை,எல்லா நேரங்களிலும் நீ என்னோடு  கூடவே  இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை, அனுபவித்து உணர்கிற வரமாக அருள்வாய்.

பாரத  தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது! தன்னுடைய கடமையை சரிவரச் செய்வதற்குத் தடையாக இருக்கும், உட்பகை வெளிப்பகை அனைத்தையும் அகற்றி, நல்லதொரு தலைமையை  இந்த தேசத்திற்கு அருள வேண்டும்!

சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்ய மயி, பரமே!


ஜனவரி முதல் தேதி!  புத்தாண்டின் முதல் நாள் மட்டுமில்லை. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் அடியவர்களுக்கு தரிசனம் தரும் நாளாகவும் தொடர்கிறது. தரிசன நாள் செய்தியாக, புத்தாண்டுப் பிறப்பன்று ஆசிரமம் செல்லும் அன்பர்களுக்கு, தரிசன நாள் செய்தி கிடைக்கும். கீழே அதைக் காணலாம்! நேரில் செல்பவர்களுக்கு, கடிதம் எழுதி வேண்டிக் கொள்பவர்களுக்கு  சமாதி மேல் வைக்கப் பட்ட மலர்களும் அருளாசியோடு கிடைக்கும்.  புத்தாண்டு, ஸ்ரீ அன்னையின் அருளாசியோடுதுவங்கட்டும்!


புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில் நம்பிக்கை ஒன்றே துணையாக!



ஃபிளெமிங், ஒரு ஏழை விவசாயி! ஸ்காட்லாந்து பகுதியில் டார்வேல் என்ற கிராமப் பகுதி, அன்றாட ஜீவனத்திற்கே மிகவும் கஷ்டம்!

ஒரு நாள்  யாரோ, அபாயத்தில் சிக்கி உதவி கேட்டுக் கூச்சலிடுவது கேட்டது.

போய்ப் பார்த்தபோது, ஒரு இளைஞன், புதைசகதியில் இடுப்பளவு சிக்கி, வெளியே வர முடியாமல் பயத்தோடு கத்தித்  தவித்துக் கொண்டிருந்ததை  அந்த  விவசாயி பார்த்தார். புதை சகதியில் இருந்து அந்த இளைஞனை மெல்ல விடுவித்து, தேற்றினார். அந்த விவசாயி, சரியான நேரத்தில் உதவிக்கு வராமல் இருந்திருந்தால், அந்த இளைஞன் கத்தி கத்தியே, பயம் பாதி சகதிக்குள் முழுகுவது மீதி என்று கதை முடிந்திருக்கும்.

மறுநாள், அந்த விவசாயியைத் தேடி, வண்ணச் சாரட் வண்டியில், ஒரு பெருந்தனக்காரர் வந்திறங்கினார். " என் பெயர் ரண்டால் ஃப் ! நேற்று நீங்கள் காப்பாற்றிய இளைஞன், என் மகன்!  அவனுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துப் போக வந்தேன், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்! என்னிடம் இருப்பதைத் தருகிறேன்." என்று தழுதழுத்தார்.

ஸ்காட்லாந்து மக்களே கொஞ்சம் பெருமிதமும், சுயகௌரவமும் பார்க்கிற  மக்கள். ஒரு உயிரைக் காப்பாற்றுவது மனிதனுடைய கடமை!  ஆபத்தில் இருப்பவன் எதிரியே ஆனாலும் காப்பாற்ற வேண்டும், அப்படியிருக்க செய்த உதவிக்குக் கைம்மாறு எதிர்பார்ப்பதா? அந்த விவசாயி, பணிவோடு பெருந்தனக்காரருடைய  உதவியை மறுத்தார். அந்த நேரம் ஒரு சின்னப்பையன்,   ஃபிளெமிங்குடைய மகன், அங்கே வந்தான்.  விவசாயி, அவனைத் தன்னுடைய மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார்.பிரபு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"இதையாவது கேளுங்கள்! இவனை நான் அழைத்துப் போகிறேன், நன்றாகப் படிக்க வைக்கிறேன்!  உங்களுடைய நல்ல குணம் இவனிடம் இருக்குமானால், நீங்களே பார்த்துப் பெருமிதப்படுகிற மாபெரும் மனிதனாக இவன் வருவான்!"


அதே மாதிரி, அந்தச் சிறுவன், லண்டனில் இருந்த பிரபுவோடு அனுப்பப் பட்டான். லண்டனில், செயிட் மேரி மருத்துவப் பள்ளியில் படித்துப் பெரிய மருத்துவராகவும், கண்டுபிடிப்பாளராகவும் உயர்ந்தான். பின்னால் சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் என்று உலகம் முழுக்க அறியப்பட்ட மருத்துவர். பெனிசிலின் தடுப்பு  மருந்தைக் கண்டுபிடித்தவர்.

ரண்டால் ஃப் பிரபுவின் மகன்,  முன்னால் ஸ்காட்லாந்து விவசாயியால் புதை சகதியில் இருந்து காப்பற்றப் பட்டவன், நிமோனியா காய்ச்சல் வந்து அவதிப்பட்டபோது, காப்பாற்றியது பெனிசிலின் தடுப்பு மருந்தால் தான்!

அப்படி, தகப்பன், மகன் இருவராலும் இரு வேறு தருணங்களில் காப்பாற்றப்பட்ட அந்த இளைஞனின் பெயர் வின்ஸ்டன் சர்ச்சில்! பின்னாட்களில் இங்கிலாந்துப் பிரதமராகவும் பதவி வகித்த, அதே வின்ஸ்டன் சர்ச்சில்!

சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கத் தீவீரமாகப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோதிலும், பெனிசிலின் கண்டுபிடிக்கப் பட்ட விதம்,  ஒரு தற்செயலான தருணத்தில் தான்! கிருமிகளால் ஏற்படும் நோய்கள், மரணத்திற்கு எதிராக மருந்தே இல்லை என்ற நிலையை மாற்றப் பிறந்த முதல் ஆண்டிபயாடிக் மருந்து  பெனிசிலின்! நடந்தது 1928 ஆம் ஆண்டு! அடுத்த ஆண்டில்,   ஃபிளெமிங் முழுமையான ஆராய்ச்சிக் குறிப்புக்களை வெளியிட்டார்,

ஒரு சிக்கலான தருணத்தில் தான் அதற்குத் தீர்வும் பிறந்தது!.

அதற்கும் பதினான்கு  ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சியாளனுடைய அத்தனை உபகரணங்களும், குறிப்புக்களும் தீயில் கருகிச் சாம்பலாயின. மறுநாள், அந்த அழிவைப் பார்த்து விட்டு, அந்த மனிதர் சொன்னார்,

"இந்த அழிவிலும் பெரிய வரம் இருக்கிறது. நம்முடைய எல்லா முட்டாள்தனங்களும் அழிக்கப் பட்டு விட்டன! ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, இனிமேல் நாம் புதிதாகத் தொடங்கலாம்!"

அதற்கடுத்த மூன்றாவது வாரம், அந்த கண்டுபிடிப்பாளர்,  தனது புதிய கண்டுபிடிப்பான  போனோக்ரா ஃப் (கிராமபோன்)-ஐ அறிமுகம் செய்தார்! அந்த விந்தை மனிதரின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!


வெற்றி, சாதனை என்பதெல்லாம், பேரிடர், சோதனை, சிக்கல்கள்   என்பதில் இருந்து தான் பிறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

இளம் பருவ சர்ச்சில், இன்னும் சிறிது நேரம் கவனிக்கப் படாமல் இருந்தால், முக்கிப் போயிருக்க வேண்டியது. பயம் ஆட்டிப் படைத்த நேரத்திலுமே கூட உதவி கோரிக் கூச்சல் எழுப்புவது ஒன்று தான் அந்த நேரத்தில் செய்ய முடிந்தது. அதைச் செய்தபோது, யாரோ ஒருவரது கவனத்தை ஈர்க்கவே வந்து காப்பாற்றுகிறார்.

அதே மாதிரி, பாக்டீரியாக்களால், நோயாளிகள் மரணமடைந்து கொண்டிருந்த நேரம், காரணம் என்ன என்பது புரிகிறது, ஆனால், மருந்து என்ன என்பது தெரியவில்லை! அதே சிந்தனையாக இருந்த  ஃபிளெமிங் கண்ணில், கிருமிகள்  இருந்த தகட்டில் ற்செயலாக, பூசனம் பிடித்த  ஒரு தகட்டில் இருந்த ஒரு விஷயம், கிருமிகளை அறவே காலி செய்து விட்டது படுகிறது. ஆக, இந்த நுண்ணுயிர்க் கொல்லியாக ஒன்று இருக்க முடியும், மருந்தாகப் பயன்பட முடியும் என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்த சோதனைகளில் உறுதிப் படுகிறது.

விபத்து எதிர்பாராமல் நடப்பது! அது விளைவிக்கும் சேதமும் கூட அப்படித்தான்!

ஆனால் ஒரு மனிதர், தான் அது வரை மேற்கொண்ட ஆராய்ச்சியில் உருவாக்கிய விஷயங்கள், குறிப்புக்கள் எல்லாமே எதிர்பாராத தீ விபத்தில் மொத்தமாகப் பறி கொடுத்த தருணத்திலும் கூடக் கலங்கவில்லை.
எல்லா முட்டாள்தனங்களும் தடையமே இல்லாமல் ஒழிந்தன என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். இனிமேல் புதிதாகத் தொடங்கலாம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்கிறார்! அவர் சந்தோஷப் பட்டுக் கொண்ட மாதிரியே, நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்துவருகின்றன.  


இதே மாதிரித் தான், மின்சாரத்தினால் எரியும் (ஒளிர்விடும்) பல்ப் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தாமஸ் ஆல்வா எடிசன் தொடர்ச்சியாகத் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தார். தோல்வி மாதிரியே முயற்சியும் தொடர்ந்தது. வெவ்வேறு விதமான இழைகள், அதில் கடைசியாக ஜப்பானிய மூங்கிலில் இருந்து தயார் செய்யப்பட இழைகளும் அடங்கும்! கடைசியாக டங்க்ஸ்டன் உலோக இழை பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைக்கும் உலகம் முழுவதும் டங்க்ஸ்டன் இழை கொண்ட குண்டு பல்ப் புழக்கத்தில் இருக்கிறது. இப்போது கூட, உங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது! ரீல் அல்ல! நிஜம் தான்!

சோதனை முடிவுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளை, எடிசன் எடுத்துக் கொண்ட விதமே அலாதி! " ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பத்தாயிரம் முறைகளில் இருந்து கற்றுக் கொண்டேன்!"


இங்கே துணுக்குகளாகப் பேசப்பட்டசம்பவங்கள் சொல்வது என்ன?

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை! அடுத்த படிக்கட்டு!

அதான் எனக்குத் தெரியுமே என்று "அறிவாளி" திரைப்படத்தில் முத்துலட்சுமி திரும்பத் திரும்பச் சொல்லி, டணால் தங்கவேலுவை வெறுப்பேற்றுகிற காமெடியாக மட்டும் பார்த்துவிட்டுப் போய்விடுவதால் எதையும் தெரிந்துகொள்ள முடிவது இல்லை.

வாழ்க்கையில் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சம்பவத்தையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் மட்டுமே அதன் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப் படுகிறது.

இன்றைக்குப் பொருளாதார மந்தம், ஒரு பக்கம் வளர்ச்சி என்பது, மற்ற விஷயங்களை வெகு பள்ளத்தில் தள்ளிவிடுவதாக ஆக்கிக் கொண்டிருக்கும் ஒழுங்கு முறை எதுவுமில்லாத போக்கு, வேலைவாய்ப்புக்கள் சுருங்கிக் கொண்டே போவது, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இப்படி ஏராளமானவற்றை ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. பார்க்கும் விஷயங்கள், அத்தனையுமே மன நிறைவைத் தருவதாக இல்லை. பல விஷயங்கள் மன நிம்மதியைக் குலைப்பது போலத் தான் இருக்கின்றன.

அதனால் என்ன? நமக்குப் பிடித்தமான விளையாட்டில், ஆர்வத்தோடு பங்குபெறும் பொது, இப்படி எதிர்மறையான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோமா? அங்கே நம்முடைய  அடுத்த மூவ் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும், அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனத்தை வைத்திருக்கிறோம் அல்லவா!

அதே மாதிரித் தான், எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும், சோதனையும், தன்னுள் ஏராளமான வாய்ப்புக்களைச் சுமந்து கொண்டு தான் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே, வருகிற வாய்ப்புக்களைத் தவறவிடக் கூடாது என்பதில் மட்டுமே நம்முடைய கவனம் இருக்கும்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், மிகப் பெரிய அழிவை ஜப்பான் சந்தித்தது. அணுகுண்டு வீசப்பட்டது மட்டுமல்ல, அவர்களுடைய தேசீயப் பெருமிதமே பெரும் சரிவைச் சந்தித்தது. தன்னை விடப் பெரிய வஸ்தாத் எவனுமில்லை என்று இறுமாப்போடு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒருவன், அவனுடைய  ஆணவத்தின் மீது, பெருமிதத்தின் மீது விழுகிற அடி மாதிரிக் கொடுமையான அனுபவம், பிரச்சினை வேறு ஒன்று இருக்க முடியுமா?

ஜப்பானிய மக்கள் துவண்டு விடவில்லை. தங்களுக்கு விழுந்த அடியை, வலியை ஏற்றுக் கொண்டார்கள். அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதி கொண்டார்கள்


அடித்துத் துவம்சம் செய்து விட்டு அப்புறம் தடவிக் கொடுப்பது போலப் பொருளாதார உதவிகளை, அமெரிக்கா செய்தது. உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கதவைத் திறந்தது.

ஆனால், ஆரம்ப காலங்களில் மேற்கத்திய மக்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பது, அவர்களுடைய ஆங்கில மொழி போலவே, ஜப்பானியர்களுக்குப் புரியவில்லை. தயாரித்து விற்பனை செய்த பொருட்கள் எல்லாம், தரக் குறைவாக, கேலிக்குரியவைகளாக இருந்தன.  

ஜப்பானிய மக்கள், அந்த ஏளனத்தையும் சகித்துக் கொண்டார்கள். சகித்துக் கொண்ட விதம், வேறு வழியில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாக இல்லை! தம்முடைய குறைகள் என்ன என்பதை, பதறாமல் சிந்தித்தார்கள். தயாரிப்பதில் ஏற்டும் குறைகள் என்ன என்பதை, தயாரிக்கப் படும் கட்டத்திலேயே கண்டுபிடித்து அங்கேயே சரி செய்தது மட்டுமல்ல, முன்னை விட இன்னும் அதிகம் பயனுள்ளதாக, ஒரு வளர் நிலை மாற்றத்தை, இயல்பான பண்பாடாகவே வளர்த்துக் கொண்டார்கள். ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே தரம் மிகுந்தது என்ற உத்தரவாதத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே சாதித்துக் காட்டினார்கள்.


இங்கே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் நம்மைத் திகைக்க வைக்கிற, முடக்கிப் போட்டுவிடுகிற சூழ்நிலைகள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருக்கும்! 2012  இல் உலகம் அழிந்து விடப் போகிறது  என்று ஒரு கற்பனை உலவிக் கொண்டிருக்கிறது அல்லவா, அதே மாதிரி! கொஞ்சம் நிதானித்துப் பார்த்தீர்களேயானால், இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரி அச்சம், பீதி ஏதோ வடிவத்தில் கிளப்பி விடப்பட்டுக் கடைசியில்  ஒன்றுமே இல்லாமல் போயிருப்பதைப் பார்க்க முடியும்! 


இத்தனைக்கும் ஆதார சுருதியாக இருப்பது நம்பிக்கை! நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கை! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது என்றோ எவனோ வேலையில்லாமல் எழுதி வைத்துப் போனதல்ல, கூடி வாழும்போது மட்டுமே மனிதர்களால் உன்னதமான தருணங்களை எட்டிப் பிடிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவது தான்!



நானும் நீங்களும் வேறுபட்டுத் தனித்தனியாக நிற்பதற்கு தனித்தனியாக ஆயிரம் ஆயிரம் காரணங்களைச் சொல்ல முடிகிற போது, நாம் ஏன் ஒன்றாக இருக்கமுடியாது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தையாவது கண்டுபிடிக்க முடியாதா என்ன! வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டு, பகைமையை, வெறுப்பை வளர்த்துக் கொண்டு போவது மிருகங்களுக்கு வேண்டுமானால்  இயல்பானதாக இருக்கலாம்.

மனிதர்களுக்கு......!

"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "



அறியாமையும்
, இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கைஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச்சொல்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அன்னை 




இது காமெடி டைம்! காங்கிரஸ் சானலில்!


பார்ப்பதற்கு அப்பாவியாக, ஐயோ பாவமே என்று தோன்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூட சிரிக்காமலேயே, அடுத்தடுத்து இரண்டு காமெடி ஷோ நடத்தியிருக்கிறார்! முதலாவது, தெலங்கானா பற்றியது! மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு தெலங்கானா மாநிலம் அமைப்பதில் கருத்தொற்றுமை ஏற்படும் வரை பொறுத்திருப்போம், அவசரப்பட மாட்டோம்  என்று உறுதி அளித்திருக்கிறாராம்!

ஜோக்கு! இது முதல் ஜோக்கு!

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியப்படி கருத்தொற்றுமை என்றால் என்ன என்று அவருக்கு மறந்துபோயிருக்கக் கூடும்! அல்லது பயத்தில் மன்மோகன் சிங் கண்ணை இறுக்க மூடிக் கொண்டிருந்திருக்கலாம்! இங்கே சென்னை சத்தியமூர்த்தி பவனில்,வேட்டியைக் கிழித்துக் கொண்டு, நாற்காலி வீசி அடிதடியில் கடைசியாக 'மேலிடம்' வந்து ஏற்படுத்தும் கருத்தொற்றுமை பற்றி எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்!

அடுத்த ஜோக்கு! இதை  எப்படி சிரிக்காமல் சொன்னார் என்பதற்காகவே மன்மோகன் சிங்குக்கும், ஏதோ சங்கங்கள் எல்லாம் சேர்ந்து சமாளிப்புத் தலைமகன், ஜோக் ஜுஜூபி விருதுகளை கொடுத்திருக்கலாம்!

வி பி சிங்குக்கு கிடைத்த மாதிரி இந்த சிங்குக்கும்...!

கூட்டணி தர்மம், குறைந்த பட்ச செயல் திட்டம் என்று காங்கிரசுக்கும் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கிற மாதிரி, கழகங்கள் இந்த வித்தையைக் காங்கிரசுக்கும் சொல்லித் தரக்கூடாதோ!

"காங்கிரசால் மட்டுமே சவால்களை எதிர்கொள்ள முடியும்!"

இப்படி, அடுத்துச் சொன்னது தான், ஜோக்கா, சாபமா என்று புரியவில்லை!  காங்கிரஸ் பிரதமர் நன்றாகவே குழப்பி விட்டார்! தேசத்தின் தலைவிதி காங்கிரசோடு  பின்னிப்  பிணைந்து இருக்கிறதாம்! 

ஆண்டவனே காப்பாத்து!

காங்கிரசைத் தொட்டுப் பதிவுகள் எழுதுவதில் எனக்கு அவ்வளவு விருப்பமில்லை என்றாலுமே கூட, ஒரு தலைமை, நிர்வாகம் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது, செயல்படக் கூடாது என்பதில், காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஒரு சிறந்த உதாரணம். அதனால் தான் காங்கிரஸ் கலாசாரத்தை வைத்து  எதை எதையெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது, எதெல்லாம் தவிர்க்கப் படவேண்டியது என்பதை இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்!

Consensus! கருத்தொற்றுமை!

டோனி மோர்கன் என்ற பதிவரை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்! இவருடைய பதிவுகள், பெரும்பாலானவை, கிறித்தவ சர்ச்சுக்களின் நிர்வாகம், நிதி, இயக்கம் சார்ந்தவை, சர்ச்சுக்களால்  ஸ்பான்சர் செய்யப் படுபவை  என்றாலுமே கூட, சில பதிவுகள், நிர்வாகம், மேலாண்மை, குறித்த விஷயங்களில் பொருந்தியும், சிந்திக்கத் தூண்டுபவையாகவும் இருக்கிறது.

இந்தக் கருத்தொற்றுமை என்ற வார்த்தையையே ரொம்பக் கெட்ட வார்த்தையாகப் பார்க்கும் விதத்தில், இவர் எழுதிய ஒரு பதிவு ஒன்றைப் படித்து விட்டு, நாட்டு நடப்பு, உலக நடப்போடு பொருந்தி வருகிறதா என்று பார்த்தபோது தான், மன்மோகன் சிங் பேசினது செம காமெடியாக இருந்தது.

எப்படி என்பதைப் பார்ப்போமா? டோனி மோர்கன், இந்தக் கருத்தொற்றுமை என்பது வெறும் கேலிக் கூத்து என்பதைக் குறைந்தது ஐந்து காரணங்களை வைத்தாவது சொல்லிவிட முடியும் என்கிறார். ஒவ்வொன்றாக, நம்முடைய சூழ்நிலைக்குப் பொருந்துகிற விதத்தில், அரசியலை அல்ல, நிர்வாகம், மேலாண்மை, தலைமைப் பண்பு, இந்தத் தலைப்புக்களை மையப்படுத்தி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாமல், பார்க்கலாமா?

கற்றுக் கொள்வதில் இரண்டு விதம், ஒன்று நம்முடைய சொந்த அனுபவங்களில் இருந்து. இரண்டாவது, அடுத்தவருடைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்வது. இதுவும் இரண்டு விதமாகப் பிரிந்து, எப்படி சரியாகச் செய்வது என்பதாகவும், எப்படிச் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்கும் இல்லையா?!


கருத்தொற்றுமை ஏற்பட சில அடிப்படைத் தேவைகள்! விதங்கள்!
கருத்தொற்றுமை என்பது அர்த்தமே இல்லாத வெற்று வார்த்தை! எப்படி என்றால்,

முதலாவதாக, கருத்தொற்றுமை என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு தருணத்துச் சூழ்நிலையோடு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.. மாற்றம் என்பது  ஒரு பக்குவ நிலை, அதற்குத் தயாராக இருக்கும் தைரியம் எல்லோருக்குமே இருப்பதில்லை. கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும்போதே, தேக்க நிலை வந்து விடுகிறது. Status Quo என்றபடிக்கு எப்படி இருந்ததோ அதே பழைய நிலையிலேயே நிற்றல் என்பது, கருத்தொற்றுமை என்பதன் முதல் கோணலாக, அவலட்சணமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கும்போதே, அங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி சந்தைக் கடை மாதிரி இரைச்சலும், கூச்சலுமாகிப் போய் விடுகிறது. தரங்கெட்ட விஷயங்களும், எதிர்மறையான போக்குகளும், கெட்ட எண்ணம் உடையவர்களுமே கூட சம வாய்ப்பு என்ற சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து, உண்மையான குறிக்கோளை எட்ட விடாமல் செய்துவிடுகிற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.

மூன்றாவதாக, தைரியமான முடிவுகளை, விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்கள் எடுபடாமல் போய்விடுகிறது. நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களைப் பேச முடியாமலேயே போய்விடுகிறது. நடுநிலை என்பது ஆகச் சிறந்தது எது என்று சீர்தூக்கிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது என்பதற்குப் பதிலாக, மதில் மேல் பூனை மாதிரி ரெண்டுங் கெட்டானான  நிலையை எடுப்பது தான் என்றாகிப் போய்விடுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இங்கே மதச் சார்பின்மை-செக்குலரிசம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கும் விதம்!

நான்காவதாக, கருத்தொற்றுமை ஏற்படுத்தச் செய்யும் முனைப்பு, பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே வளர்த்துக் கொண்டிருப்பதாக மாறிப்போய் விடுகிறது. ரு ஆரோக்கியமான விவாதம், அழுத்தமான கருத்தைப் பேசினால், எங்கே மற்ற தரப்பு விறைத்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், நடக்காமலேயே தவிர்க்கப் படுகிறது. அந்த நேரத்துக்கு, இரண்டு தரப்பையும் சமாதானமாகப் போகும்படிக்  கெஞ்சலாக,  விரிசலை பெயின்ட் அடித்து மறைத்துவிடலாம் என்கிற மாதிரியானதாக, நின்று விடுகிறது.

ஐந்தாவதாக,கருத்தொற்றுமை என்கிற பெயரில், இப்போதிருக்கும் நிலையை விட உயரத் தவிக்கும் கனவுகளின் சிறகுகளை முறிப்பதாக மட்டுமே நடக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக, ஆக்கபூர்வமாகச் சிந்திக்க முற்படுபவர்களை, கூட்டத்தோடு கோவிந்தா என்று போய்விடும்படி வற்புறுத்துகிறது. மறுப்பவர்களை வலுக்கட்டாயமாகப்  பேசாமல் இருக்கும்படி மிரட்டுகிற கட்டப்பஞ்சாயத்தாகவுமே பெரும்பாலான சமயங்களில் மாறிவிடுகிறது.

அரசியலாகட்டும், அல்லது பணிபுரியும் இடமாக இருக்கட்டும்! கருத்தொற்றுமை என்பது எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! தேக்கமடைந்து விடுவதை உங்கள் மீது திணிக்கிறதா? எதில் கருத்தொற்றுமை அவசியம் என்பதை விட்டு விலகி, சம்பந்தமே இல்லாமல், சந்தைக் கடையாகவும், சண்டைக்களமாகவும் ஆகி விடுகிறதா? மிகச் சொற்பமான அளவிலேயே சொல்லப் பட்டாலும், சொல்வதன் உண்மையை ஏற்றுக் கொள்ள முடிகிறதா, அல்லது கும்பலாகக் கூச்சல் போட்டே நல்ல விஷயம் கூட அம்பலமேறாமல் போய் விடுகிறதா? கூட்டமாகச் சொல்வது தான் சரி, அது சரி அது சரி என்று தலையாட்டிப் பொம்மைகளாக்குகிறதா அல்லது, தீர்க்கமாகச் சிந்திக்க இடம் இருக்கிறதா?

இந்த ஐந்து காரணங்கள் அத்தனையும்உங்களுடைய அனுபவத்தில், யோசித்ததில்  பொருந்துகிறதா? கூடுகிறதா? குறைகிறதா?

உங்களுடைய  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கேட்போம்!



ட்விட்டுக் குருவி! ட்விட்டுக் குருவி! சேதி தெரியுமா?



டிவிட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சர் திரு சசி தரூர்! 5,38,861 பேர்கள் சசி தரூர், ஜரூராக டிவிட்டுவதைப்  பின்தொடர்கிறார்கள் என்று சொல்கிறது இந்த செய்தி! அனேகமாக, இந்த அளவுக்கு டிவிட்டரில் ஒருத்தர், அதுவும் அரசியல்வாதி, அமைச்சர் ஒருத்தர் இந்த அளவுக்குப் பிரபலமாக இருப்பதே ஒரு ரெகார்ட் தான்! 


அதனால் தானோ என்னவோ, அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்கிறார் என்பதை விட, டிவிட்டரில் இவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, மனம் திறந்து பதில்களைச் சொல்வதை, மேலிடத்திற்கு எதிராகச் செய்யும் கலகம் என்று அடிக்கடி போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை!


போன செப்டெம்பரில் சோனியா காண்டி சிக்கன நடவடிக்கை என்று எகானமி வகுப்பில் பயணம் செய்ததை நக்கல் அடித்து இவர் அனுப்பிய ட்விட்டர் செய்தி மிகவும் பிரபலமானது! காட்டில் கிளாஸ் என்றும் புனிதப் பசுக்கள் என்றும் சோனியாவைத் தாக்குகிறார் என்று போட்டுக் கொடுத்தது ஒரு க்ரூப்! அசடு வழிந்து கொண்டு காங்கிரஸ் இந்த விமரிசனத்தை தாங்கிக் கொண்டது.


அக்டோபர் மாதம் அடுத்த ட்விட்டர் பாம் கிளம்பியது. "காந்தி வேலையே கடவுள் என்றார். அவருடைய பிறந்த நாளை விடுமுறையாக அறிவித்திருக்கிறோம் நாம்' என்று டிவிட்டரில் யாரோ கேட்ட  ஒரு கேள்விக்குப் பதில் சொன்னதை எதிர்த்தும் கோள்மூட்டும் கும்பல் ஒன்று சலசலப்பைக் கிளப்பியது.


இப்போது விசா வழங்குவதைக் குறித்து அவருடைய வெளிப்படையான ட்விட்டர் செய்தி கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. டூரிஸ்ட் விசாவில் ஒன்பது வருடத்திற்கு மேல் தீவீரவாதி ஹெட்லி இந்தியாவில் தங்கிஇருந்ததைக்  கிண்டல் செய்த மாதிரி இருந்த செய்தி, பானா சீனாவைச் சீண்டிப் பார்த்திருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, கொள்கை குறித்த விவகாரங்களைப் பொதுவில் போட்டு உடைக்கக் கூடாது என்று பேட்டி அளித்திருக்கிறார். எஸ் எம் கிருஷ்ணாவின் இந்த அறிக்கையே  செம காமெடி தான் என்றாலும், அவரால் நல்ல காமெடியனாகக் கூட இருக்க முடியவில்லை! செய்தியைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்!


"External Affairs Minister S M Krishna on Monday ticked off his junior minister Shashi Tharoor for publicly questioning new visa guidelines, saying if he had any "perceptions", those should be discussed within the "four walls" of the government.

"These (issues) are not to be discussed in public. If there are any perceptions, then I think it should be sorted out within the four walls of the ministry," Krishna told reporters when asked to react to Tharoor's comments on social networking site Twitter regarding tightening of visa regime.

Krishna underlined that "the business of government is far too serious" and "has to be conduced in a manner in which we decide."

While tweeting, Tharoor had wondered whether tightening of the visa norms for foreign nationals made any sense at all and if it would actually "protect" security.

பானா சீனா, ஒரு சப்பைக் கட்டு கட்டி அறிக்கை கொடுத்திருக்கிறார்!



கிழடுதட்டிப் போன காங்கிரஸ் கட்சியில், அவ்வப்போது சசி தரூர் மாதிரி இளம் ரத்தங்கள் கொஞ்சம் கலகலப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்! இந்த லிங்கில் போய்ப் பாருங்கள்! சசி தரூர் டிவிட்டரில் நடத்திய அத்தனை சாதனைகளையும் பார்க்க முடியும்!


******

ஒரு மனிதன் எதோ யோசனையில் நடந்துபோய்க் கொண்டிருந்தான்.


"நில்!" என்ற குரலைக் கேட்டு, திடுக்கிட்டு நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தபோது யாருமே கண்ணுக்குத் தெரியவில்லை.


"என்னை எதற்காக நிற்கச் சொல்கிறீர்கள்?"


"இன்னும் ஓரடி, இரண்டடி எடுத்து வைத்தால், அந்தச் சுவர் இடிந்து உன்மேல் விழுந்துவிடும்! அதற்காகத் தான் நிற்கச் சொன்னேன்"

அந்தக் குரல் சொல்லிக் கொண்டிருந்தபோதே, பக்கத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததையும், எச்சரிக்கைக்குக் கட்டுப் பட்டு நின்றிருக்காவிட்டால், சுவர் தன் மீதே விழுந்திருக்கும் என்பதையும் புரிந்து கொண்டான். இன்றைக்கு என்னுடைய அதிர்ஷ்டமான நாள் தான் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே மேலே நடக்க ஆரம்பித்தான்.


"நில்! இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், விபத்தில் சிக்கிக் கொள்வாய்!" என்று அதே குரல் மீண்டும் எச்சரித்தது. 

அடுத்த எட்டு எடுத்து வைக்கப் போன  அந்த மனிதன், தயங்கி நின்றான். வேகமாக வந்த ஒரு கார், அவனை உரசிக் கொண்டு போனது! காரோட்டி கதவு வழியாக எட்டிப் பார்த்து, "சாவுக் கிராக்கி! ஊட்டுல சொல்லிட்டு வந்தியா?" என்று திட்டி விட்டுப் போனான்.


அந்த மனிதன் திகைப்பு நீங்காதவனாக, "அங்கே யாரும் இருக்கிறீர்களா?குரல் மட்டும் கேட்கிறதே, நீங்கள் யார்? இங்கே என்ன நடக்கிறது?" என்று கூவினான்.


"நான் உன்னுடைய காவல் தேவதை  என்று வைத்துக் கொள்ளேன்!"


"காவல் தேவதை  என்றால்....?" என்று இழுத்தான் மனிதன்.


"சரியாப் போச்சு போ! தெய்வம், தேவதை  என்றால் என்னவென்றே தெரியாதா? அப்புறம் காவல் தேவதை  என்பதை உனக்கு எப்படிப் புரிய வைப்பது?" என்று அலுத்துக் கொண்டது அந்தக் குரல்.


"கோபம் கொள்ளாதே! நான் இந்த தெய்வம், கடவுள் இதையெல்லாம் கதைகளில், சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். அதிலிருந்தும் கூட ஒன்றுமே புரிந்ததில்லை. அதனால் தான் கேட்கிறேன்!"


"புதுமைப் பித்தன் கதைகளைப் படித்திருக்கிறாயோ?கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்? குறைந்த பட்சம் அந்தக் கதையைத் தொட்டு  ராஜ நாயஹம் எழுதிய பதிவையாவது....?"



"ம்ம்ஹூம்! எங்கே, பதிவுகளை படிப்பதை விட, பின்னூட்டங்களில் கும்மியடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது! இதில் எங்கே தேடிப் பிடித்துப் படிக்க?" என்றான் அந்த மனிதன்.


காவல் தேவதை கொஞ்சம் முனகிக் கொண்டு சொன்னது" உன்னை மாதிரி ஆசாமிகளைக் கரை சேர்ப்பது ரொம்பவுமே  கஷ்டம்!"


"அது சரி காவல் தேவதையே! காவல் என்கிறாய், தேவதை என்கிறாய்! இப்போது இரண்டு தடவை என்னைக் காப்பற்றியிருக்கிறாய், எல்லாம் சரி!
இப்போது ஒரு வாரத்திற்கு முன்னால் கல்யாணம் என்ற ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டேனே, அப்போது எங்கே போனாயாம்?"   என்றான் அந்த மனிதன்.

******
ஒரு மாண்புமிகு! மந்திரியோ, இல்லை ச.ம. உ  ஏதோ ஒன்று! சாலையோரத்தில் நடந்துபோய்க் கொண்டிருந்தார்! மருத்துவர் ஆலோசனை! தினசரி நாற்பத்தைந்து  நிமிடம் நடந்தே ஆக  வேண்டும்!  

திடீரென்று ஒருவன் துப்பாக்கியைக் காட்டி வழி மறித்தான்  "மரியாதையாக உன்னிடமிருக்கும் பணத்தைக் கொடுத்துவிடு! இல்லாவிட்டால்....!"

"மாண்புமிகு, கொஞ்சம் அதிர்ச்சியோடேயே கேட்டார். "நான் யார் என்று தெரிந்து தான் மிரட்டுகிறாயா? நான் இந்தத் தொகுதியின் மாண்புமிகு! தெரியுமில்லையா?"

அந்த மனிதன் உடனே சொன்னான். "அப்படியானால், நீ எங்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை மரியாதையாகக் கொடுத்து விடு!"





சண்டேன்னா மூணு! கதை கேளு! கதைகேளு!

சந்தேகம் இல்லே! சந்தேகம் இல்லே! உண்மையான வளர்ச்சி எதில் என்றால்........!


2009 இன் சந்தேகமே இல்லாத வளர்ச்சி எதில் என்று பார்த்தால், சோஷல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் இணையம் வழி வளரும் தொடர்புகள் தான்! கணினி அறிவு இருப்பவர்கள் தான் பங்குகொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, இன்றைக்கு  கணினிக் கைநாட்டான நான் கூடப் பதிவுகள் எழுதிக் குவிக்கிற அளவுக்கு, அதுவும் என் தாய் மொழியிலேயே என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது!

ட்விட்டர்,  ஃபேஸ்புக் என்று தொடர்ச்சியாகப் புதுப் புது வடிவங்களோடு, இத்தகைய சமூகத் தொடர்புகள் வளர்ந்து கொண்டிருப்பதைப் பற்றிய செய்திக் கட்டுரை இங்கே!  

இணையம் ஒரு பரந்தவெளி! இந்தப் பரந்தவெளியில், எந்த அளவுக்குப் பரந்த மனதோடு, மாற்றுக் கருத்து இருந்தாலுமே அதையும் மிக நாகரீகமாக மறுத்துச் சொல்வதிலும், அடுத்தவர் சிந்தனையோட்டத்தைப் புரிந்துகொள்ளவும், இணையம் வழி வளரும் தொடர்புகள், இணையம் வழி வரும் உறவுகளாகவுமே மாறுவதில் நமக்கும்பொறுப்பிருக்கிறது.

பதிவர் உண்மைத்தமிழனுக்கு அவரது வலைப் பதிவுகள் மீண்டும் கிடைத்து விட்டன. ஆனாலும், இந்த மாதிரி அனுபவத்தில் சுட்டுக் கொண்ட பிறகுதான் ஞானியாக வேண்டும் என்பதில்லையே! இந்த மாதிரிக் கணக்குகள் முடக்கப் படுவது, திரும்பப் பெறுவது ஒரு ரகம் என்றால், யாரோ ஒருவர் உங்களுடைய கணக்கை ஹாக் செய்வது,  அந்தரங்க விஷயங்கள், படங்கள், வங்கிக் கணக்குகள் முதலானவற்றைத் திருடுவதுமே அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருப்பது தான்.

உங்களுடைய கூகிள் பயனர் கணக்கை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்! 


பரந்த மனதோடு, அடுத்தவரைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை, மனம் நோகும் படி பின்னூட்டங்களோ, விமரிசனங்களோ இல்லாதபடி  பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உற்சாகப் படுத்துகிற வார்த்தைகளை எழுதுங்கள்!  இதை எழுதும் போது என் முகத்தை, மின்னெழுத்துக்களால் ஆன மாயக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே தான், எனக்காகவுமேஎழுதுகிறேன்! 


பரந்த மின்வெளியில் பாதுகாப்புடன் புத்தாண்டைத் தொடங்குங்கள்!
 oooOooo


 இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, நிர்வாகம், தலைமைப் பண்பு என்று பல தலைப்புக்களிலும் பேசியிருக்கிறோம்! எல்லாவற்றிலுமே ஒரே ஒரு அடிப்படைக் கேள்வி தான்! ஆதார சுருதியாக இருப்பதைப் படிக்க வருகிறவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்!

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தால் தான், எதற்காகப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பது லட்சியமாக, இப்போதிருப்பதை விட அடுத்த வளர்ச்சிக்கு இருப்பதே புரிய வரும்! எங்கே போக வேண்டும் என்பதில் கவனம், எப்படிப் போக வேண்டும் என்பதில் தெளிவு, தொடர்ந்து வரும்!

இல்லையென்றால், போன பதிவில் சொன்ன மாதிரி,

"உங்களுக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை, எங்கே போகவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை! ஆனால், நான் உங்களுக்காக அதைத் தெரிந்து சொல்ல வேண்டுமென்று  நினைக்கிறீர்கள்! என்னை பார்ப்பதற்கு முன்னால் என்ன நிலையில், தெளிவில்லாமல் இருந்தீர்களோ அதே நிலையில் தான் இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால், குறை சொல்வதற்கு ஒரு ஆள் கிடைத்தவுடன், என் மேல் குற்றம் சொல்கிறீர்கள் பாருங்கள் அதிலிருந்து தான் !"  என்றாகிவிடக் கூடும்!

என்ன நினைக்கிறீர்கள் என்பதை, நீங்கள் தான் சொல்ல வேண்டும்! சொல்வீர்கள்தானே?

 oooOooo

கதை கேளு! கதை கேளு!

மைகேல் மதன காமராஜன் படத்தில், டைட்டில் பாட்டிலேயே, முன்கதைச் சுருக்கத்தை சொல்லுகிற டெக்னிக் நினைவிருக்கிறதா? குறைந்தபட்சம் அந்த டெக்னிக்? ஐம்பதிலும் ஆசை வரும் என்று கூட ஒரு பாட்டு உண்டு! எண்பதைத் தாண்டிவிட்டால் ஏத்தம் வரும் போல! எண்பதைத் தாண்டி  ஏத்தத்தோடு அலைந்த ஒருத்தர் வேறு வழியில்லாமல், பதவியில் இருந்து ராஜினாமாசெய்திருக்கிறார்!

தெலுங்கானா விஷயத்தில்,ஆந்திரா பற்றி எரிந்து கொண்டிருக்கும்  நேரத்தில், ஆந்திர மாநில ஆளுநர் என் டி திவாரி பாவம் ரொம்பவே  "காய்ந்து" போயிருப்பார் போல! காய்ந்ததைக் கொஞ்சம் குளுமைப் படுத்திக் கொள்ள, என்னமோ செய்யப் போக அது என்னமோ ஆகிவிட்டது! மூன்று முறை உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்தவர்! உத்தராகண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட போது அதன் முதல் முதல் அமைச்சர்! பாராளுமன்றங்களின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்! மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ராஜீவ் காந்திக்குப் பின்னால், பிரதமர்  பதவிக்குக் கூட காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளராக முன்னிலையில் இருந்து, எப்படியோ நரசிம்ம ராவிடம் வாய்ப்பைஇழந்தவர்!

காங்கிரஸ் கலாச்சாரப்படி,  அடிமை விசுவாசி என்றால் வீட்டுக்கு அனுப்பவேண்டிய கிழடுகளுக்கும் உற்சாக டானிக், கவர்னர் பதவி தருவது! ரொம்ப வயதாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி,  2006 இல் ஒய்வு பெற விரும்பினாராம்! அடுத்த வருடமே காங்கிரஸ் அவரை ஆந்திர மாநிலத்தின் கவர்னராக்கி அழகு பார்த்தது! 

மானோடும் மயிலோடும்  ஓவராக ஆடினார் என்று வீடியோ ஆதாரங்களுடன் ABN செய்திச் சானலில் செய்தியை போட, கவர்னர் தரப்பு வேக வேகமாக மறுத்துப் பார்த்தது, நீதிமன்றத்திலும் வீடியோவை ஒளிபரப்புவதற்குத் தடை உத்தரவும் வாங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்னாலேயே ஆர்ப்பாட்டங்கள் அது இது என்று கிளம்பவே, மேலிடம் கழற்றி விட முடிவு செய்து விட்டது.. இன்றைக்கு யூட்யூபில் சூப்பர் ஹீரோ யார் என்று பார்த்தால்  என் டி திவாரி தான்! கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்!  சுமார் எட்டு நிமிடங்கள் தான்! என்ன நக்கல்!


ஆல் இன் ஆல் அழகு ராஜா!  கதையை அருமையான பாடலோடு சொல்லியிருக்கும் இந்த வீடியோவை வலையேற்றம் செய்திருப்பவரைப் பாராட்டியே ஆகவேண்டும்! ஐயே! வேறு வில்லங்கமான பிட்டுப் படம் இருக்கும் என்று நினைத்து ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!

ஞாயிற்றுக் கிழமை காலை, இப்படி அமர்க்களமான காமெடியோடு, இந்த வாரம் சண்டேன்னா மூணு!

அப்புறம், காங்கிரஸ் கட்சிக்கு இது 125 ஆவது ஆண்டு! 2009-2010 ஒரு ஆண்டு முழுவதும் விழா எடுத்து, காங்கிரஸ் கட்சியின் அருமை பெருமைகளைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் வைத்திருந்தார்கள். பாவம்! நம்மூர் அரசியல் வித்தகர் பானா சீனா கொளுத்தி போட்ட ஒரு அறிவிப்பில் ஆந்திரா கொழுந்து விட்டு எரிகிறது! பானா சீனாவுக்கு இன்னும் கொளுத்திப் போடுகிற ஆசை போகவில்லை போல! உள்துறை அமைச்சகத்தையும் பிரிக்க வேண்டுமாம்! சொல்வார்களே, ஆக்கமாட்டாதவன் இடுப்பிலே அம்பத்தெட்டு கருக்கறுவா! அந்தமாதிரி!


ஆளுநர் களைப்புத் தீர, ராஜ் பவனில் ராஜ லீலையை நடத்திக் கொண்டிருக்கிறார்! இதற்கெல்லாம் உதவியாக இருந்தது, ஆளுநரின் சிறப்பு அதிகாரி! Officer on Special Duty! என்று ABN சானல் சொல்கிறது! ஸ்பெஷல் டூட்டி என்பது  இது தான் போல இருக்கிறது !

இயக்குனர் ராஜசேகர்! இருக்கிறீர்களா? உங்களுக்கு அடுத்த படத்திற்குத் தலைப்பு ரெடி!

இது தாண்டா ஸ்பெஷல் டூட்டி!

காங்கிரசுக்கு மக்கள் சொல்ல வேண்டிய தகவல் ஒன்றே ஒன்று தான்!

விடுதலை அடைந்ததும் மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் இலக்கு எட்டி விட்டது, கலைத்து விட வேண்டியது தான் என்று ஆலோசனை சொன்னார்! இப்போது கூட காந்தியின் சொல்படி நடப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கலைத்துவிடுங்கள்!
 

வால் இருக்கிறது, சரி! தலை(மை) எங்கே?

நிர்வாகவியலைப் பற்றிய பதிவு ஒன்றில் படித்த சுவாரசியமான கதை!
அதாவது, கதை சொல்லி, ஒரு கருத்தை விளங்க வைப்பது!



பலூன் ஒன்றில் பறந்துகொண்டிருந்த ஒருவர்,  எங்கே பறந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படவே, உயரத்தைக் குறைத்து மெல்ல மெல்லக் கீழே இறங்க ஆரம்பித்தார். கீழே கூப்பிடு தொலைவில் ஒரு மனிதர் நடந்துபோய்க் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டுக் கூவினார்!

"ஹலோ! நான் எங்கிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?"

 "பலூனில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். தரையில் இருந்து சுமார் முப்பது அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்!"
என்று கீழே இருந்து அந்த மனிதர் பதில் சொன்னார்.பலூனில் பறந்து கொண்டிருந்தவர் சொன்னாராம், "நீங்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவராகத் தான் இருக்க வேண்டும்! அப்படித்தானே!"

கீழே இருந்தவர் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு , "ஆமாம்! எப்படிச் சரியாக கண்டுபிடித்தீர்கள்?" என்று கேட்டாராம்.

பலூனில் பறந்து  கொண்டிருந்த மனிதர் சொன்னார்:  "அதுவா! நீங்கள் சொன்ன எல்லாமே மிகவும் துல்லியமான விவரங்கள்! ஆனாலும், எவருக்குமே பயன்படாதவை. அதை வைத்துத் தான் சொன்னேன்"

"சரிதான்!" என்று ஒப்புக் கொண்டார் கீழே இருந்தவர். "நீங்கள் ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பவராகத் தான் இருக்க வேண்டும்!" என்று சொன்னார். பலூனில் பறந்து கொண்டிருந்த மனிதருக்கோ ஆச்சரியம், "அட ஆமாம்! அது எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறீர்கள்?"

"கண்டுபிடிப்பதற்கான காரணம் பெரிதாக ஒன்றுமில்லை! உங்களுக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை, எங்கே போகவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை! ஆனால், நான் உங்களுக்காக அதைத் தெரிந்து சொல்ல வேண்டுமென்று  நினைக்கிறீர்கள்! என்னை பார்ப்பதற்கு முன்னால் என்ன நிலையில், தெளிவில்லாமல் இருந்தீர்களோ அதே நிலையில் தான் இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால், குறை சொல்வதற்கு ஒரு ஆள் கிடைத்தவுடன், என் மேல் குற்றம் சொல்கிறீர்கள் பாருங்கள் அதிலிருந்து தான் !"



இந்த மாதிரிக் "கடி" களை நம்முடைய வாழ்க்கையில் பலமுறை பார்த்திருக்க முடியும்! கவனித்திருக்கிறீர்களா?


தலைமைப் பொறுப்பில், இப்படிப் பொறுப்பில்லாதவர்கள் அமர்த்தப் படும் சூழ்நிலைகளில். இந்த மாதிரித் தான் போகாத ஊருக்கு வழி கேட்கிற கதையாகிப் போய்விடுகிற துயரம் நேர்கிறது. இதை வெறும் கதையாக மட்டும் பார்க்காமல், இதில் இருக்கும் யதார்த்தத்தை, நம்மைச் சுற்றியுள்ள எதில் வேண்டுமானாலும் பொறுத்திப் பார்க்க முடியும்!

தகவல்கள் இருந்து மட்டும் என்ன பயன்? தகவலை வைத்து என்ன முடிவுக்கு வருகிறோம், என்ன செய்கிறோம் என்பது தெளிவாக இல்லாத போது அந்தத் தகவல் உபயோகமற்ற வெறும் குப்பையாகி விடுகிறது. 


தெளிவான பார்வையும், செயல் திறனும் உள்ள தலைவர்கள், நிர்வாகிகள், கிடைக்கும் எந்தத் தகவலையும் வீணாக்குவது இல்லை. 


தேவையே இல்லாமல், குப்பை சேர்க்கிற மாதிரித் தகவல்களை சேகரிப்பதோடு மட்டும் நின்றுவிடுகிறவர்கள், தலைவராகவோ, நிர்வாகியாகவோ இருக்க  லாயக்கற்றவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில், பல முறை பார்த்துக் கொண்டு வருகிறோம்.

அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, போக வேண்டிய திசை தெரிகிறதோ இல்லையோ, மாதத்திற்கு நூறு ஸ்டேட்மென்டுகளுக்குக்  குறையாமல் தயார் செய்வது மட்டும் தான் வங்கித் தொழில் என்று, புள்ளி விவரங்கள் மீது ஆசையோடு இருக்கும் புள்ளிராசா வங்கியை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இங்கே பார்த்திருக்கிறோம்!


புள்ளி விவரத்தின் மீது ஆசைகொண்ட அந்தப் பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொள்வோம். அதனுடைய தலைமை நிர்வாகியாக இருந்தவர், house magazine என்று ஊழியர்களோடு தொடர்பில் இருப்பதற்காக ஒரு பத்திரிக்கை வருமல்லவா, அதில், வெளிப்படையாகவே புலம்பினார். 'நம்முடைய வங்கியில் கடனுக்கு வட்டி மற்றவர்களோடு ஒப்பிடுகையில் குறைவு, சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவு,இப்படி எல்லா வகையிலும் மிகக் குறைவான விகிதத்திலேயே கட்டணங்கள் இருந்த போதிலுமே கூட, வாடிக்கையாளர்களோ , வருமானமோ அதிகரிக்கவே இல்லை. ஏனென்று தெரியவில்லை' என்று முதல் பக்கத்திலேயே, தலைமை நிர்வாகியின் செய்தி, உடன் பணியாற்றுகிறவர்களையும் சிந்திக்க வைப்பது, செயல்பட வைப்பது, என்பதற்குப் பதிலாகத் தோற்றுப் போனவன் புலம்பலாகவே இருந்தது.
அவரால் புலம்ப மட்டுமே முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், புலம்பல்கள் கேள்விகளாகவும், விடைகள் கண்ணெதிரிலேயே நிதரிசனமாகவும் இருந்தன.மாற்றத்தைச் சாதிக்க அவரால் முடியவில்லை, அவரைச் சுற்றியிருந்தவர்கள் விடவில்லை.அவர்களைச்   சரி செய்வதற்குக் கூடத் தலைமை நிர்வாகிக்கு தெரியவுமில்லை, திறமையுமில்லை!

அப்புறம்,புள்ளி ராசாவுக்குப் புள்ளி வருமா? வராதா?

இதில் என்ன புதிதாக இருக்கிறது? பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் இப்படித் தானே இருக்கின்றன என்று ஒதுக்கிவிடாதீர்கள்.

ஒரு தலைமை நிர்வாகி எப்படி இருக்கக் கூடாது என்பதை இந்த வங்கியின் தலைமை நிர்வாகிகள் பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்
.
 

இதே வங்கியின் இன்னொரு தலைமை நிர்வாகி! வழக்கம் போலவே அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப் பட்டு, ஸ்டேட் வங்கியில் இருந்து, இந்த  வங்கியின்  தலைவராக வந்தவர். ஸ்டேட் வங்கியின் பலம்  Professional Approach!. இவர் அங்கே வளர்ந்த சூழ்நிலையே வேறு. இங்கே இருந்த சூழ்நிலையே வேறு!

இங்கே இந்த  வங்கியில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்சாக இருப்பது மட்டுமே பெரிய தகுதியாக இன்றைக்கும் கூட இருக்கிறது..  தலைமைப்  பொறுப்பேற்க வந்து, பலருக்குப் பொருந்தாமலேயே ஆகிப்போன சந்தர்ப்பங்கள் இந்த வங்கியில் சர்வசாதாரணம்! ஸ்டேட் வங்கியில் இருந்த, தொழில் தெரிந்த நிர்வாகத்தைப் பார்த்துப் பழகினவருக்கு, இந்த வங்கியில் இருந்த நடைமுறைகள்  பொருந்தாமல் போனது. தலைமைப் பொறுப்பு வெறும் பதவியில் மட்டும் தான்! உருப்படியான மாற்றம், அதற்கான வழி வகை என்ன என்பதைப் பற்றிய சிந்தனையோ, செயல் திட்டமோ இல்லாத தலைமை நிர்வாகிகளில், அவரும் ஒருவர். பெயரளவுக்கு மட்டுமே சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டராக இருந்த இந்த மனிதர்  தென் தமிழ்நாட்டின் தலை என்று சொல்லக் கூடிய ஒரு நகரக் கிளைக்கு விஜயம் செய்தார்.

சுத்தம் செய்யப்படாமலேயே மேலும் மேலும் கழிவுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் பொதுக் கழிப்பறை போல இருந்த அந்த வங்கிக் கிளையைப் பார்த்து அருவருப்பு அடைந்து கமென்ட் எழுதினதோடுசரி!. கிளையின் விருந்தினர் பதிவேட்டில் இப்படி எழுதி வைத்தார்.

 .  
"இந்தக் கிளையைப் பேசாமல் இழுத்து மூடி விடலாம்!"  

இந்த விமரிசனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான செய்திகள் இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். அப்புறம், அந்தக் கிளையை சரி செய்யவோ, பரிந்துரைத்தபடி இழுத்து மூடிவிடவோ கூட அவரால் முடியவில்லை என்பது தான் மிகப் பெரிய நகைமுரண்!

இந்த நிகழ்ச்சி விவரணத்தில் நாம் உடனடியாகப் புரிந்துகொள்ளக் கூடியதில், முதலாவதாக, விமரிசனம் எழுதியவர் தலைமை நிர்வாகியாகவே இருக்க லாயக்கற்றவர்.

இரண்டாவதாக, அவர் விரும்பிய மாற்றம் என்ன என்பதைத் தானும் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல், உடன் பணியாற்றுபவர்களுக்கும் புரிய வைக்க உருப்படியான முயற்சி எதையுமே செய்யாமல், இப்படி மாற்றத்திற்காக உழைக்காமலேயே, 'மாற்றம் வேண்டும்' 'மாற்றம் வேண்டும்' என்று அரசியல் வாதிகள் மாதிரியே வெறும் உத்தரவுகள் மட்டுமே போடத் தெரிந்த வெத்துவேட்டு

இந்த மாதிரியான வெத்துவேட்டுக்கள்
, தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தையுமே பொட்டல் காடாக்க மட்டுமே தெரிந்தவர்கள்.


மூன்றாவதாக, இந்தப் பொதுத்துறை வங்கி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு முட்டாள்களின் சுவர்க்கம். தலைமை தாங்குவதில் வெற்றிடம் ஏற்படும்போது, அடுத்தடுத்துப் பொறுப்புக்களைச் சுமக்க முன்வரத் தயாராக இல்லாத தண்டங்களை மட்டுமே கொண்டது.



இது இந்த வங்கியில் மட்டும் தான் என்று பார்க்காமல், கொஞ்ச விரிவு படுத்திப் பாருங்கள்! அரசு, அதன் செயல்பாடுகள், அரசியல், அரசியல்வாதிகளுடைய குறுகிய புத்தி, இப்படி எல்லா வகையிலுமே இந்த தேசம் எப்படிப் பட்டவர்களுடைய கைகளில் சிக்கியிருக்கிறது, சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!

இப்போது ஆரம்பத்தில் பார்த்த கதைக்கே மறுபடி வருவோம்!

மேலே இருந்தவருக்கு எப்படிக் கேட்க வேண்டும் என்பதில் தெளிவோ, ஞானமோ இல்லை! கீழே இருந்தவராவது, கொஞ்சம் எங்கே போக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கலாமே! 

ஏன் அப்படி நடக்கவில்லை?

நெல்லைப் பயிரிடுவது மட்டும் போதாது! அவ்வப்போது களை எடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்! தவறும் போது, களைகள் மட்டும் தான் மிஞ்சும்!
பொறுப்பு எல்லோருக்குமே இருக்கிறது,  நம்மிடமிருந்தே
மாற்றத்திற்கான முதல் அடி தொடங்குகிறது! 

தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வதும், செயல் திறனை வளர்த்துக் கொள்வதும் ஐ ஐ எம் களில் சொல்லித் தரப்படுவது மட்டுமல்ல!
நம்மால் முடியும்! முதலில் எங்கெல்லாம் ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு, ஏமாற்றுகிறவனுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது முதல் படி!

என்ன செய்யப்போகிறோம் ?



கால் மாறாத கமகமக் கதைகள்! தேடல்! மாக்சிம் ரெட்டி!

தேடல் என்பது என்ன? எதைத் தேடுகிறோம்? தேடுவது எதற்காக? தேடியதை என்ன செய்யப்போகிறோம்?

"என் வலைப்பதிவுக்கு 'பாலியல்' 'காமக் கதை' ஆகிய குறிச் சொற்களைத் தேடி நிறைய பேர் வருவதாக feedjit காட்டுகிறது,  தினமலரில் 'தேவநாதனையும்',  புவனேஸ்வரியை'யும் நிறைய பேர் தேடி இருக்கிறார்கள். தேடல் என்பது இது தானோ !"



பதிவர் கோவி கண்ணன் தன்னுடைய பதிவில் கொஞ்சம் அலுப்போடு  எழுதியிருப்பது இது இரண்டாம் தடவை! அவர் அலுத்துக் கொள்வதிலுமே கொஞ்சம் நியாயம் இருக்கிறது! ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லிவிட்டு, நாம் அந்த நினைவே இல்லாமல் அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம்! ஆனால், நம்முடைய பதிவுகளுக்கு வந்து படிப்பவர்கள், அங்கேயே தேங்கி நின்று விடுவதைப் பார்க்கும் அனுபவம், கோவி கண்ணன் பதிவுகளைப் படிக்கும் வாசகப் பரப்பில் பதினாறில் ஒரு பங்கு கூட இல்லாத எனக்குமே, புவனேஸ்வரியைத் தேடி இங்கே  தினசரி வருகிற வாசகர்களைப் பார்க்கக் கிடைக்கிறது.

இன்றைக்குக் கூட  மதுரை ஐ பி முகவரியில் இருந்து ஒருவர் வேலை மெனக்கெட்டு, தமிலிஷில்  புவனேஸ்வரி குறித்த குறியீட்டுச் சொல்லில் இருக்கும் அத்தனை பதிவுகளையும் தேடி படித்திருக்கிறார், இத்தனைக்கும் அந்தப்பதிவில் புவனேஸ்வரி பெயர் தலைப்பில் மட்டும் தான் இருந்ததே தவிர, வேறு படமோ செய்தியோ இல்லை!
* வெள்ளிக்கிழமை பொழுது விடிந்த நேரத்திலுமே ஆறுமணிக்கே வந்து மறுபடி பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்!

அதில் ஒன்று என்னுடையது அக்டோபர் இருபத்தெட்டாம் தேதி, முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் எழுதிய புத்தகத்தைப் பற்றி எழுதியது.


இவ்வளவு மெனக்கெட்டுப் படம் பார்க்க வருபவர்கள், இணையத்திலேயே இன்னும் அதிகமாகப் பார்க்கலாமே, ஏன் இப்படிப் பதிவுகளில் குறியீட்டுச் சொற்களைத் தேடி வருகிறார்கள் என்று பார்த்தால், தேடல் என்பது இது தானோ என்று கோவி கண்ணன் அலுத்துக் கொண்டிருப்பது எவ்வளவு தவறானதோ, அதே மாதிரி அவர்களுக்கும் என்ன தேடுகிறோம், எதைத் தேடுகிறோம், எங்கே தேடுகிறோம்  என்ற தெளிவில்லாமலேயே தேடிக் கொண்டிருப்பது புரியும்!

அரசியல், கழிசடைகள், அயோக்கியர்களுடைய கடைசிப் புகலிடம் என்று யார் சொன்னது? 

இப்போதெல்லாம், அது தான் முதல் சாய்சாகவே  இருப்பது அம்மிணிக்கு இப்போது தான், காலம் கடந்து தெரிய வந்திருக்கிறது! கழகங்கள் காப்பு!

புவனேஸ்வரியைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் புண்ணியவான்களே! உங்களையும் ஏமாற்றக் கூடாது இல்லையா? புவனேஸ்வரி பாவம், விட்டு விடுங்கள்! அவர் ஒரு வழியாக ஜாமீனில் வெளியே வந்து, மூ. மு. கழகத்தில் சேர்ந்து, அரசியல் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்!



பதிலுக்கு மாக்சிம் ரெட்டி படம்  உங்களுக்காக!

வாரணம் ஆயிரம் படத்தில் அழகாகச் சிரித்து சூரியாவோடு பாட்டுப் பாடி ஆடினாரே அதே சமீரா ரெட்டி தான்! வாரணம் ஆயிரம் பட விமரிசனம் ஒன்றில் படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது-சமீரா ரெட்டியை காமெரா மிக அழகாகக் காட்டிய ஒரே படம்! அம்மிணி தெலுங்கில் என் டி ராமா ராவ் மகன் பால கிருஷ்ணாவோடு பல படங்களில் குத்தாட்டம் போட்டவர் தான்! இங்கே மாக்சிம் என்று ஒரு பத்திரிகையில், வந்த படம் உங்களுக்காக. அட்டைபடம் சொல்வது -Gentlemen, the class is in session!


oooOooo




ஜான் மாக்ஸ்வெல் என்பவர் எழுதிய , The 360° Leader என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை ஒரு வலைப்பதிவில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு தலைவனுக்குரிய குணங்களை, தலைமைப் பண்பைப் பற்றிய புத்தகம், அதில்  இருந்து சுவாரசியமான ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது. சென்ற பதிவில், ஆயிரம் உண்மையான நண்பர்களை, பின்தொடர்ந்துவருபவர்களைப் பற்றி, அப்படிப்பட்ட நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வது வெற்றிக்கான உத்தரவாதமாக எப்படி இருக்கும் என்பதை சேத் கோடின் பதிவைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையாகச் சொல்லியிருந்தேன் இல்லையா!


வெற்றிக்குப் பல படிகள், ஒன்று மட்டுமே போதுமானது அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் இந்த நூலில் ஜான் மாக்ஸ்வெல் சொல்கிறார். அவர் சொல்லும் ஒரு கதை இது.




ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.

எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை."

எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!"

வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச்  சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே  அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது.

உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்! காட்டில் வேட்டையாட வந்த ஒருவன்  கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்..

வான் கோழி பணால்! உசரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழேவந்தாயிற்று!

வான்கோழி படத்தைத் தேடும்போது கிடைத்த ஹோலிஸ்டிக் ஹீலிங் என்ற தலைப்பில் வான்கோழியை பற்றிய இன்னொரு சுவாரசியமான தகவலைப் பார்க்க 


உச்சிக்குப்போவது அவ்வளவு பெரிதான விஷயமில்லை! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். 

கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முடிவது தான்!

இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் ஜான் மாக்ஸ்வெல் சொல்லியிருப்பதாகப் படித்த போது, தலைமைப் பண்பு பற்றிய ஒரு சித்திரம் முழுமையடைந்து வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கே இதை எழுதுவது  தலைவர்களாக எல்லோருமே ஆகிவிட முடியும் என்ற கற்பனையை விதைப்பதற்காக இல்லை.தலைவனாக இருப்பதற்கு, இன்னொரு அடிப்படையான தேவை, ஒரு குறிக்கோளுடன் கூடிய குழுவை உருவாக்குவது தான்! குழுவாகச் செயல்படும் கூட்டுறவுமே மிகவும் அவசியம். 

ஒரு குழுவில், ஒரு தலைவனுக்குக் கீழே இருக்கும் நிலையிலும் தலைவனாவதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்வதே கூட, ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்துக்குச் செய்கிற மிகப்பெரிய உதவிதான்!

எம்ஜியார் பாட்டில் வருவது போல தனக்கொரு பாதையை வகுக்காமல் தன தலைவன் வழியிலே நடப்பான் என்பது கண்மூடித்தனமாகக் கேள்வியே கேட்காமல் பின்பற்றுவது, கொடி பிடிப்பதும், தீக்குளிப்பதும் அல்ல!

ஒரு சாதாரணமான மனிதனாக இருந்து கொண்டே, நம்மால் நம்பிக்கையை விதைக்க முடியும்! நம்மைச் சுற்றி உள்ளவர்களுடைய வாழ்க்கையில் தேவைப் படுகிற உந்து சக்தியாகவும், மகிழ்ச்சியைத் தருபவர்களாகவும் இருக்க முடியும்!

ஒரு நல்ல தலைவனுடைய தலைமைப் பண்பு அவன் எத்தனை ஆயிரம், லட்சம், கோடி நபர்களுக்குத் தலைமை தாங்குகிறான் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஜனங்களிடமிருந்து சுரண்டிக் கொழுப்பவன் ஒருபோதும் அவர்களுடைய தலைவனாக முடியாது.

ஒரு நல்ல தலைவன் என்பவன், தன்னிடமிருந்து நம்பிக்கை, எதிர் காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான கனவு, செயல் திட்டம், செயல்படுத்துவதில் உற்சாகம் என்று நல்ல விஷயங்களைக் கொடுக்கிறான். சமூகம் அவனிடமிருந்து ஒரு கனவை, ஆதர்சத்தை, நாளைய பொழுது நம்முடையதே என்ற தெளிவைப் பெறும்போது, அங்கே ஒரு நல்ல தலைவன் மட்டுமல்ல, ஒரு நல்ல சமுதாயமும் கூடவே உருவாகிறது!

வால் நீளமாக இருப்பது நல்லது!



சேத் கோடின் எழுதியிருக்கும் இன்றைய பதிவைப் படித்துவிட்டு யோசித்துப் பார்க்கும் போது , இதுவரை புதுவருடத் தீர்மானங்களைப் பற்றிப் பேசிய விஷயங்களுக்கு, ஒரு சுவாரசியமான திருப்பம் தெரிகிறது.  கொஞ்சம் உறுதியோடு செயல்படுத்த முடிந்தால், ஒரு திருப்புமுனையையே எதில்வேண்டுமானாலும்  ஏற்படுத்திவிட  முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று பளிச்சிடுகிறது!

கெவின் கெல்லி என்பவருடைய இந்தப் பதிவு, தன்னுடைய சிந்தனையைப் புரட்டிப் போட்டு விட்டது என்று சேத் கோடின் ஆரம்பிக்கிறார்.

ஆயிரம் நண்பர்ளை, உங்களைப் பின்தொடர்பவர்கள், உங்களுக்காக எது  வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்களாக உங்களால் பெற முடிந்தால், என்னென்னவோ சாதிக்க முடியும்!

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஆயிரம் என்னென்னவெல்லாம் சாதிக்கும்?

உங்களை உண்மையாகவே பின்தொடரும் இந்த ஆயிரம் பேர், நீங்கள் எது சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்பார்கள், நீங்கள் என்ன கனவுகளை விற்க முயற்சித்தாலும் தயங்காமல் வாங்கிக் கொள்வார்கள். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான் என்று பாட்டுப் பாடாமலேயே உங்கள் பின்னால் வரத் தயாராக இருப்பார்கள்.

ஆக எந்த ஒரு பெரிய சாதனை, முயற்சி, வெற்றி என்று சொல்லப்படுவதற்குப் பின்னால், இந்த மாதிரி ஆயிரம் உண்மையான பின்தொடர்ந்துவரும் நண்பர்களைச் சம்பாதிப்பதில் தான் ஆரம்பமாகிறது. ஆயிரம் என்பது ஒரு எண்ணிக்கை. இப்படிப்பட்டவர்களை உங்களோடு இணைத்துக் கொள்வதில் இருந்துதான், அவர்கள் நீங்கள் காட்டும் பாதையை ஏற்றுக்கொள்வதும், உங்களோடு கூட வருவதுமான வெற்றிப் பயணம் ஆரம்பிக்கிறது.

கெவின் கெல்லி தன்னுடைய பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார்:

"வால் நீண்டு கொண்டே போவது இரண்டு  விதமான தரப்பை ரொம்பவுமே மகிழ்ச்சியடையச் செய்யும். அதிர்ஷ்டக்காரர்களான சந்தையைக் கைப்பற்றுகிறவர்கள், சந்தையில் வாங்குகிறவர்கள் இப்படி இரண்டு தரப்பையுமே!"


வரப்புயர நீர்  உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!

இங்கே கெவின் கெல்லி சொல்வது தலை-வால் என்ற இரண்டு அம்சத்தைப் பற்றி! வேறு எதனோடும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இப்படி ஆயிரம் உண்மையான நண்பர்களைச் சம்பாதிப்பது, முடியக் கூடிய ஒரு விஷயம் தான்! ஒரு நாளைக்கு ஒன்று என்று ஆரம்பித்தால் கூட உங்களால், மூன்று வருடங்களுக்குள் இந்த இலக்கை எட்டி விட முடியும்.

அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகிற விதத்தில் உங்களுடைய தயாரிப்பு இருக்க வேண்டும்! இங்கே உதாரணத்துக்கு வலைப்பதிவுகளையே எடுத்துக் கொள்வோமே, அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வழியைக் காட்ட உங்களால் முடியும் என்றோ, அவர்களுக்கு பயன் படுகிறவிதத்தில் உங்களுடைய பதிவுகளை அவர்களை அடையாளம் கண்டு கொள்கிற மாதிரியோ ஆரம்பித்து, அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளவும் உங்களால் முடியுமானால், ஆயிரம் பேர் மட்டுமல்ல இன்னும் அதிகமாகவே உங்களைப் பின்தொடரத் தயாராக இருப்பவர்களாக மாற்ற முடியும்!

இப்படி உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். இந்த மாதிரி நண்பர்களை சந்தோஷப்படுத்துவதே கூட ஒரு சந்தோஷகரமான அனுபவமாகவும், வாழ்க்கைக்கு உயிரூட்டுவதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு செங்கல்லாகத் தான் அடுக்குமாடிக் கட்டடம் எழும்புகிறது. உண்மையான நண்பர்களைப் பெறுவதுமே கூட ஒவ்வொன்றாகத் தான் தொடங்குகிறது. சின்னச்சின்னத் துளிகளாகப் பொழியும் மழை, பெரு வெள்ளமாக மாறுகிறது!   பசுமை தழைக்க வழிசெய்கிறது! உயிர்கள் நிறைவு பெறுவதும், திருப்தியடைவதும் இப்படித்தான் ஆரம்பமாகிறது!

புது வருடத் தீர்மானங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்பது, உங்களுடைய உடனடித் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப் படும்போது தான், எதைத் தீர்மானிப்பது, எப்படிச் சாதிப்பது என்ற குழப்பம், ஏதோ ஒன்றுக்காக இன்னொன்றைத் தியாகம் செய்ய வேண்டிய சூழல் என்றெல்லாம்வருகிறது.

உண்மையான அணுக்கமான நண்பர்களை, ஒருவருக்கொருவர் உதவியாக, ஆதூரமாக, ஆதரவான வார்த்தைகளின் வழியாகவே பதிவுகளில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்கிறபோது, ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பை வளர்த்துக் கொண்டு, வசவுகள், காயம்பட்ட மனங்கள் என்று இருக்க வேண்டிய அவசியம் தான் என்ன? வாதங்கள் பிடிவாதங்களாக இறுகிப்போய் விடாமல், இளக்கம் வேண்டும்! இணையம்இதயங்கள் இணைவதற்காகவே! 

நல்ல எண்ணங்களை விதைத்தல், வெறும் கோஷமாகவோ உபதேசமாகவோ நின்று விடாமல், தமிழ்வலைப்பதிவுகளில் வளர வேண்டும் என்பது வெறும் ஆசையாக மட்டும் இருந்தால் போதுமா? வார்த்தைகளில் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே போதுமா?

செயல்படுத்தும் வாய்ப்பும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது! நம்மிடமிருந்தே  இந்த ஆயிரத்தில் ஒன்று ஆரம்பிக்கிறது!

சேத் கோடின் அதைத் தான் ஆயிரம் என்ன செய்யும் என்பதாகச்  சொல்கிறார்! முதலில் ஆயிரத்தைச் சம்பாதிக்க ஆரம்பிப்போம்!



சரியாப் பத்த வைக்கக் கூடத் தெரியலையே, பரட்டை! புது வருடத் தீர்மானங்க‌ள் பத்து!





சரியாப் பத்த வைக்கக் கூடத்  தெரியலையே, பரட்டை! புது வருடத் தீர்மானங்க‌ள் பத்து!


முதல்  மூணும் பாத்தாச்சு  இல்லையா! இப்ப மிச்சமிருப்பது என்னன்னு பாக்கலாம்!


புதுவருடத் தீர்மானம் நம்பர் நான்கு!


இனிமேல் தமிழில் வலைப்பதிவர் யாரையும் வாலைத் தொட்டு, தலையைத் தொட்டு எழுதுவதில்லை! இங்கே கற்றுக் கொள்ள வருபவர்களைவிட, க‌ற்றுக்கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பதும், நானும் அதில் சேர்ந்து ஒரு எண்ணிக்கையைக் கூட்டுவானேன் என்பது  மட்டுமே காரணம்.அல்ல.  


இணையம் என்பது மனிதர்களை, மனங்களை இணைக்கிற கருவியாக இருக்கும்போது, கற்றுக்கொள்ள உதவும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பை, அருவருப்பை வளர்க்கிற போக்குகளுக்குத் துணையாக ஆகிவிடக் கூடாது என்பதாலும் தான்!






நல்லதை நானும் கேட்பேன், என்னுடைய நண்பர்களும் கேட்பார்கள், இந்த நாடுமே கேட்கும் என்ற நிலையை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணங்களாக, நல்ல செயல்களாக ஆரம்பித்து வைப்பது நம்மிடம் இருந்தே தொடங்குகிறது!





புதுவருடத்தீர்மானம் நம்பர் ஐந்து !

சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு! ஏற்கெனெவே ஒரு பதிவில் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடிய பாலித்தீன் பைகளைத் தவிர்ப்பது, நமக்குத் தெரிந்த நண்பர்களிடமும் எடுத்துச் சொல்வது, தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பொம்மைகளையும் தவிர்ப்பது, அக்கம் பக்கத்தில் குப்பையைக் குறைக்கிறேன் என்ற பெயரில் தீ வைத்துக் கொளுத்துவதைத் தவிர்ப்பதும் முடிந்தவரை தடுப்பதும் பற்றிப்  பேசியிருக்கிறோம்.

அதே மாதிரிக் கொசுத் தொல்லை
! இங்கே அரசும் அரசியல்வாதிகளும் வெறுமே பேசிக்கொண்டு மட்டுமே இருப்பார்கள். அரசு மருத்துவ மனைகளில் சிக்குன்குனியா, மலேரியா என்று விதவிதமாய்ப் பரவிக் கொண்டிருந்தபோது அரசு அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்தது. அரசு மருத்துவர்கள் எப்போதும் போலப் பொறுப்பில்லாமலேயே நடந்து கொண்டார்கள். தேவையான மருந்துகள் இல்லை.

சுற்றுப்புறத்தை வியாதிகளைப் பரப்பும் கிடங்காக மாற்றிவிடாமல் இருப்பதில் விழிப்புணர்வைக் கொஞ்சமாவது ஏற்படுத்த முனைவது
. நமக்கு நாமே என்பது வெற்றுவார்த்தை தான்  என்ற அனுபவமிருப்பதால், தன்கையே தனக்குதவி என்பதை உணர்ந்து செயல் படுவது.

புதுவருடத் தீர்மானம் நம்பர் ஆறு!





ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று தீர்மானங்களை, இந்த ஆறோடு  முடித்துக் கொள்ள முடிந்தாலே  நல்லது தான்! நீளம் குறையும்! ஆனாக்க, பத்து இல்லைன்னாப் பத்தாதாமேன்னு தலைப்பே புது வருடத் தீர்மானங்கள் பத்து என்று என்றிருக்கும்போது, இன்னும் கொஞ்சம் சொல்லத் தானேவேண்டியிருக்கிறது!

இந்தத் தொடரும் பதிவைத் தொடங்கிய போதே
, சென்ற டிசம்பர் மாதம், ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடாக மாதம் தோறும் வெளிவரும் மின் இதழ் 





அதன் தலையங்கத்தைத் தொட்டுத் தான் ஆரம்பித்திருந்தேன்!

As the year draws to a close, we at Next Future wonder at what our personal achievements have been. Our main objective is to share some powerful thoughts with our readers. We constantly aspire that the views expressed in the magazine may inspire and motivate others to move closer and closer towards the light. And it is almost an ardent prayer on our part to use the magazine as a platform through which we can offer our best and highest, not just to those who share the moment with us, but to the One who is the source of all our effort and our inspiration.”



இப்படி அந்தத் தலையங்கத்தை எழுதிய குழு, இது வரை என்ன செய்திருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பற்றிய சுய அலசலாக, விமரிசனமாக எழுதியிருந்ததைப் படித்தபோது, அதே மாதிரி சிந்தனையோட்டம் எனக்குள்ளும் ஓட ஆரம்பித்தது.


What I am doing here? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? சிந்தனையின் மையப்புள்ளியாக இந்த ஒரு கேள்வி தான் இருக்கிறது.
7. ஒரு வங்கியில், வியாபாரத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஐந்தொகை எனப்படும் லாப நஷ்டக்கணக்கைப் பார்ப்பது போலவே, வாழ்க்கையின் சில தருணங்களில் நாம் யார், இங்கு எதற்காகப் பிறந்தோம், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது

8. வாழ்க்கையில் எதுவுமே நஷ்டக்கணக்காகவோ, மீள முடியாத திவால் நிலையாகவோ இருந்துவிடுவதில்லை, ஒவ்வொரு அனுபவமுமே, அது மிகக் கசப்பானதாக இருந்த போதிலுமே கூட, அடுத்தபடிக்கு உயர்த்தும் உன்னதமான தருணமாகவும் அனுபவமாகவும் இருக்க முடியும்

9. இதை வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கும் போதேஇதன் அனுபவங்களையும் ஒரு கட்டத்தில் அலசிப்பார்த்தாக வேண்டியிருக்கிறது

10. ஒன்றோ இரண்டோ, அல்லது பத்தோ, உண்மையான சாரம் என்னுடைய தீர்மானங்களில் மட்டும் இல்லை, வெறும்  எண்ணிக்கையில் மட்டும் இல்லைஒவ்வொரு அனுபவத்திலும் நான் என்ன கற்றுக்கொண்டு வருகிறேன் என்பதே ஒரே மையக் கருத்து

இதை வைத்து மட்டுமே என்னுடைய தீர்மானங்களும், தொடர்ந்து வரும் செயல்களும், விளைவுகளும் இருக்கும்! அதில் இருந்து அடுத்து வேறொன்றில் மையம் கொண்டு இதே தேடல்தொடரும்!



என்னவோ எதிர்பார்த்து, எப்படியோ முடித்திருப்பதில் ஒன்றிரண்டு நண்பர்களுக்குக் கொஞ்சம் சுவாரசியமே இல்லாமல் போய்விட்டதாகத் தோன்றலாம். கொஞ்சம் சொந்த அனுபவங்களைக் கவனிக்கப் பழகுங்கள்! வாழ்க்கை மிக அற்புதமானது 

முடிவே இல்லாததுபோல ஒரு பக்கம்,என்ன என்று கேட்பதற்குள் முடிந்து போய்விடுகிற இன்னொரு பக்கம் ஆக இரண்டு நிலைகளுக்கும் இடையில், அனுபவங்களே கடந்துபோகிற பாலங்களாக, கூடவே வருகிற துணையாக, சகபயணிகளை நேசிக்கும் இயல்பாக, நம்முடைய மனப்பக்குவத்திற்கு ஏற்றபடிமாறிமாறி வந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்!

'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

கவிஞர் கண்ணதாசனுடைய இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது, அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே நன்றாகப் புரியும்!