அமெரிக்க அதிபரின் மூன்றுநாள் இந்தியவிஜயம் வெளியுறவுக் கொள்கையில் மாறிவரும் சூழ்நிலைகள்,முன்னுரிமைகள், பிராந்திய பிரச்சினைகள் இவற்றில் இதுவரை இந்திய அரசும் அரசியல்வாதிகளும் கடைப்பிடித்து வந்த தெளிவற்ற நிலைபாட்டில் இருந்து ஒரு புதிய மாற்றத்தை சுட்டுவதாக இந்தச்செய்தி சொல்கிறது. முக்கியமாக நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் சீனாவின் அடாவடித்தனம் குறித்த, ஒரு தெளிவான பார்வயுடனான .மாற்றம். இந்திய அமெரிக்க வணிக உறவுகள் வலுப்படுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மூன்றுமே தனித்தனிக் காரணங்களுக்காகக் கவலைப்படுகிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது
அமெரிக்கசதிக்கு வீழ்ந்துவிடாதீர்-அறிவுரை என்று தலைப்பிட்டு தி இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தி, அதற்கு வாசகர் ஒருவரின் கமென்ட் இது " சீன அரசு எச்சரிப்பதைப் போல தலைப்பை இட்டிருப்பது அபத்தம். உள்ளே விரிவாக சீன பத்திரிகைகள் எச்சரிக்கை செய்கின்றதாக இட்டிருக்கிறீர். இந்தியா எச்சரிக்கை செய்வதற்கும் இந்து பத்திரிகை எச்சரிக்கை செய்வதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்..." இது ஒன்றே வெளியுறவுக் கொள்கை குறித்தான பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைச் சொல்வதாக இருக்கிறது.

இந்திய வெளியுறவுக் கொள்கை எப்படி எவரால் உருவாக்கப் பட்டது என்பதை அந்தப்பதிவில் கொஞ்சம் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். சாதாரணமாக வெளியுறவுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கைகளின் நீட்சியாகவே ஒவ்வொரு நாட்டின் பொருளாதார, பிரதேச நலன்களை முன்னிட்டே இருக்கும். இங்கே நேரு என்கிற கற்பனாவாதியின் கைகளில் சிக்கிக் கொண்டு கொள்கை எப்படிப் படாதபாடு பட்டது என்பதையும் அங்கேயே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.
நாடு விடுதலை அடைந்த தருணம், சுதந்திர இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தீர்மானித்தது நேருவும்,அவருடைய ஆல்டர் ஈகோ என்று கூட சொல்லலாம், வி கே கிருஷ்ண மேனனும் தான்! ஆங்கிலேய அரசின் அடிச்சுவட்டை ஒட்டிப் பணி செய்ய மட்டுமே தெரிந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்கு, போக வேண்டிய திசை எது என்பதை இந்த இரண்டு அதி மேதாவிகள் தான் தீர்மானித்துக் கொடுத்தார்கள்.
நேருவுக்கு உலக சரித்திரம் அத்துப்படி! சிறையில் இருந்த நாட்களில் மகளுக்கு உலக சரித்திரத்தைக் கடிதங்களிலேயே எழுதி சொல்லிக் கொடுத்தவர்! அந்த ஒரு தகுதி போதாதா? புத்தகங்களில் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்து, தன்னுடைய மகளுக்கும் கடிதங்களில் சொல்லிக் கொடுக்க முனைந்தவருடைய வாரிசுகள் புத்தகம், படிப்பின் வாசனை என்றாலேயே காததூரம் ஓடுகிற அளவுக்கு இருந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் கதை யை முன்னமே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.
சீனாவுடைய சாய்ஸ் எதுவாக இருக்கும்?இந்தியா அல்லது பாகிஸ்தான்?
இப்படி ஒரு கட்டுரை சென்ற செப்டம்பரில் எழுதப்பட்டதை இப்போது படித்துப் பார்த்தால் கொடுமையான காமெடியாகவே படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனா தன்னுடைய வஸ்தாத் உதார்களுடன் எவராலும் நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கப்படவில்லை என்பது சீனர்களுக்கும் புரிந்தே இருக்கிறது.சீனாவுடைய சாய்ஸ் எதுவாக இருக்கும்?இந்தியா அல்லது பாகிஸ்தான்?
சீனப் பொருளாதாரம் கொஞ்சம் தேக்கநிலையை நோக்கிப் கொண்டிருப்பதும், அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதிலும் அமெரிக்கர்கள் மிக ஊக்கத்துடன் சீனத்துப் பூனைக்கு மணிகட்டுவதில் மும்முரமாக இறங்கியிருப்பதாகவே தற்போதைய நிலவரம் இருக்கிறது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சுமார் 4 லட்சம் கோடி டாலர்களை சீனா முதலீடு செய்திருப்பதில் 2014 இன் கடைசியில் சுமார் 153 பில்லியன் டாலர்கள் குறைந்திருப்பது, அமெரிக்கர்களை பயமுறுத்துகிற ஆயுதமாக நாலைந்து ஆண்டுகளுக்கு முன் மிரட்டிப் பார்த்தது போல இல்லை என்கிறது இந்தச்செய்தி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் தன் நாட்டு மக்களுக்கு நாட்டின் நிலையை எடுத்துச் சொல்லும் ஸ்டேட் ஆப் தி யூனியன் உரையில் கூட சீனா குறித்த அமெரிக்க நிலை மிகத் தெளிவாக இருந்தது.
ஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக என்று மார்க்சிஸ்டுகள் வேண்டுமானால் கேள்வி எழுப்பலாம். ஆனால், நேரு காலத்தில் இருந்து தொடரும் அசமந்தத் தனத்திலிருந்து இந்த தேசம் விடுபடுவதை, மாற்றங்களைத் தடுக்க முடியாது. இது குறித்து வரும் நாட்களில் தொடர்ந்து பேசுவோம். நீங்கள் தயார்தானே?

என்ன தோன்றுகிறது என்பதைப் பின்னூட்டங்களாகச் சொல்ல முடிகிற நண்பர்கள் அவசியம் தேவை. அப்படி இருந்தால் தான் குறைகளைத் திருத்திக் கொள்ள முடியும். பயனுள்ள பதிவாக உங்களுடைய வாசிப்புப் பட்டியலில் இடம் பெறத் தகுதி உள்ளதாக இந்தப்பக்கங்களில் தொடர்ந்து எழுத மாற்றங்கள் செய்ய உதவியாக இருக்கும். கொஞ்சம் சொல்லுங்களேன்!
