"கை" கொடுக்குமா? கழுத்தறுக்குமா? தேர்தல் வினோதங்கள்!

***இந்தப்பதிவை வெளியிட்டபிறகு, இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தை நடத்த அறிவாலயம் சென்ற காங்கிரஸ் ஐவர் குழு, திமுக தலைவரைச் சந்திக்காமலேயே திரும்பிவிட்டதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் மறுபடி பேசவிருப்பதாகவும் தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.




இது தினமணியில் இன்றைக்கு  வெளியாகி இருக்கும் ஒரு செய்திக் கட்டுரை. இந்தக் கட்டுரையில், முதுகெலும்பே இல்லாத காங்கிரசுக்குக் கூட, சீட்டுப்
பேரம் பேசுவதில் வந்திருக்கும் தைரியம், முன்னேற்பாடு பற்றிக் கொஞ்சம் சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. 

அதைவிட, பாமகவுக்கு ஒதுக்கியிருக்கும் சீட் எண்ணிக்கையை வைத்து, அதற்குக் குறைந்தபட்சம் பன்னிரண்டு சதவீத வாக்குவங்கியாவது இருக்க வேண்டுமே, இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது பாருங்கள்! அதுதான் முக்கியம்!
----------------------------------------------------
கோபத்தில் காங்கிரஸ்; தயக்கத்தில் திமுக!

அஜாதசத்ரு

First Published : 25 Feb 2011 03:22:39 AM IST

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன்
முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும்,
வெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது முதலே
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை திமுக தலைமை எதிர்கொள்வதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
. முதலில், ஐவர் குழுவின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் பத்திரிகைத்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகிய மூவர் மட்டும்தான் முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த திமுகவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் பேச்சுவார்த்தைக்கு வந்தது முதலாவது அதிர்ச்சியாக இருந்தது.

பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ப. சிதம்பரம் தனது கையில் பேசவேண்டிய விஷயங்கள் பற்றிய குறிப்புடன் வந்திருந்தது திமுக அணி சார்பில்
வந்திருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரை முருகன், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி.

பேச்சுவார்த்தைக்குப் புறப்படுவதற்கு முன்பே சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியது ஐவர் குழு. 

பெருவாரியான தொண்டர்களின் மனோநிலை இந்த முறை கூட்டணி ஆட்சிக்கான உத்தரவாதம் இல்லாமல் காங்கிரஸ் தேர்தல் களத்தில் இறங்கக்கூடாது என்பதுதான்.

""நாங்கள் ஏற்கெனவே கூட்டணியில் இருக்கிறோம். அன்னை சோனியா காந்தியே "எதிரிகளை மன்னிக்கலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்கக் கூடாது' என்று தன்னிடம் கூறியதாகக் கூறிய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸூடனான கூட்டணியை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதானே பாமக-வைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டும்?'' என்பது காங்கிரஸ் தரப்பில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.

"31 இடங்களை ஒதுக்குவது என்றால், அது ஏறத்தாழ 12% வாக்குகளுக்குச் சமம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு அவ்வளவு வாக்குகள் இருக்கிறதா?'' என்பது
இன்னொரு தொண்டரின் ஆவேசக் கேள்வி. இந்த மனக்குறைகளை உள்ளடக்கிய நிலையில்தான் ஐவர் குழு, திமுக தரப்பை சந்தித்துத் தனது கோரிக்கைகளைப் பட்டியலிட்டது.

234 தொகுதிகளில் திமுக குறைந்தது 140 தொகுதிகளிலாவது போட்டியிடுவது என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மீதமுள்ள 94 இடங்களில் பாமகவுக்கு 31 இடங்களையும் ஒதுக்கிவிட்ட நிலையில், இருப்பது வெறும் 63 இடங்கள்தான். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 9 இடங்களைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்கும் 15 இடங்கள் இல்லாவிட்டாலும் குறைந்தது 10 இடங்களை ஒதுக்கினாலும் மீதமிருப்பது 53 இடங்கள் மட்டுமே. கடந்தமுறை 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதலாக 5 இடங்களை அளித்து 53 இடங்களில் போட்டியிடச் செய்வதுதான் திமுகவின் திட்டம் என்று, திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகள் என்பது 5 மக்களவைத் தொகுதிக்குச் சமம். கடந்த மக்களவைத் தேர்தலின் அடிப்படையில் பார்த்தால், 15 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸூக்கு 90 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கைப்படி, ""ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 இடங்கள் என்று பெற்றுக்கொண்டாலும், காங்கிரஸூக்கு 78 இடங்கள் தரப்பட வேண்டும் என்பதுதானே நியாயம்?''

கடந்த தேர்தலில் இருந்த நிலையில் திமுக இப்போது இல்லை. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் ஆளும்கட்சியின் ஒரே கவசம் காங்கிரஸ் மட்டும்தான். ""இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும், நாங்கள் கூட்டணிக் கட்சி என்பதால் "கை' கொடுக்கும்போது, அதற்குத் தகுந்தாற்போல இடங்களையும் திமுக தரத்தானே வேண்டும்?'' என்கிற காங்கிரஸின் கோரிக்கை திமுக தலைமையை எரிச்சலூட்டாமல் என்ன செய்யும்?

"ஒவ்வொரு முறையும் ஆட்சியைக் கைப்பற்றவும், குறைந்தபட்சம் ஆட்சியில் பங்கு பெற்று அதன் மூலம் கட்சியைத் தமிழகத்தில் மீண்டும் பலப்படுத்தவும்
கிடைத்த வாய்ப்புகளை, எங்கள் தலைமை நழுவவிட்டு விட்டது. இந்த முறையும் எங்களது முதுகில் ஏறி அவர்கள் வெற்றிக்கனியை எட்டிப் பிடித்து விட்டு, எங்களைத் தோளில் சவாரி செய்கிறோம் என்று நையாண்டி பேச விடுவதாக இல்லை'' என்பது காங்கிரஸ் தொண்டர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. தாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவதும், திமுக முன்பை விடக் குறைந்த இடங்களில் போட்டியிடுவதும்தான் கூட்டணி ஆட்சிக்கு வழிகோலும் என்கிற காங்கிரஸின் கணக்கு, திமுகவிடம் வைத்திருக்கும் கோரிக்கையில் தெரிகிறது.

"வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று அறிவிப்பு. மூன்றில் ஒரு பங்கு, அதாவது 78 இடங்கள். வெற்றிபெற்று அமைச்சரவை அமைத்தால் அதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள். குறைந்தபட்ச செயல்திட்டம். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு என்று பல நிபந்தனைகளைக் காங்கிரஸ் திமுகவுக்கு விதிப்பதாகவும், இதைக் கேட்டு திமுக தரப்பு விதிர்விதிர்த்துப்போய் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

முதல்வர் கருணாநிதி தில்லி சென்று, சோனியா காந்தியைச் சந்திக்கச் சில மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதுதான் வெளியில் வந்த செய்தி. கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த ராகுல் காந்தியும் தங்களது சந்திப்பின்போது இருக்க வேண்டும் என்று சோனியா விரும்பியதுதான் இந்தக்
காத்திருப்புக்குக் காரணம் என்பது பலருக்கும் தெரியாது. மேலும், காங்கிரஸின் கோரிக்கைகள் அனைத்துமே ராகுல் காந்தியின் ஒப்புதலுடன்தான்
வைக்கப் படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

"திமுக தரப்பு எங்களது கோரிக்கையை நிராகரிப்பதால் நஷ்டம் திமுகவுக்குத்தான். எங்களுக்கு இப்போதும் பதவி இல்லை. தனியாகப் போட்டியிட்டாலும் பதவி இல்லை, அவ்வளவுதானே. 1977-ல் நாங்கள் தனித்துப் போட்டியிட்டபோது 27 இடங்களிலும், 1989-ல் தனித்துப் போட்டியிட்டபோது 26 இடங்களிலும் வெற்றி பெற்றோம். 2001-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தமாகாவும் காங்கிரஸூமாக 30 இடங்களிலும், 2006-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது 34 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.  இந்த முறை மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டாலும் ஏறத்தாழ அதே இடங்களில் வெற்றிபெற முடியும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர்.

ஒருவேளை திமுக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் தயங்காது என்று தில்லியிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளும் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமானால், அதிமுகவுடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் தேமுதிகவேகூட அந்த அணிக்கு வரக்கூடும். ஏன், அதிமுகவே, காங்கிரஸூடன் கூட்டணி ஆட்சிக்குப் பச்சைக்கொடி காட்டக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.

"காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் சரி, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் சரி, பரஸ்பரம் இருக்கும் நட்புறவும் தோழமையும், திமுகவுக்கும்
காங்கிரஸூக்கும் கிடையாது.  தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் வேண்டாவெறுப்பாகத் கைகோத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மனத்தளவில் தொண்டர்கள் அதிமுக - காங்கிரஸ் உறவைத்தான் விரும்புகிறார்கள்'' என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஐந்து ஆண்டுகள் "மைனாரிட்டி' ஆட்சி நடத்திய திமுக, காங்கிரஸூக்கு அதிக இடங்களைத் தராமல் இருக்க "சதி' செய்கிறது என்கிற குமுறலும் கோபமும் காங்கிரஸôர் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. காங்கிரஸ் தலைமையும் திமுகவிடம் பல பிரச்னைகளில் கோபமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுக வகுக்கும் வியூகம்தான் என்ன?

நாளை: திமுகவின் தயக்கம்!

--------------------------------



நங்கவள்ளி: தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவில், தி.மு.க., அமைச்சர், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையிலேயே, அவர்களது கட்சி நடவடிக்கையை, "புட்டு புட்டு' வைத்தார். இது, மேடையில் இருந்த சேலம் மாவட்ட பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

இங்கே



கூட்டணி தர்மம் எல்லாம் காங்கிரசோடு மட்டும் தான் போல இருக்கிறது! பாமக வேறுவழி, போக்கிடம் இல்லாமல் சகித்துக் கொள்ள வேண்டியதுதான் போல!!

இதுவரை இருந்த இது இங்கே அது எங்கே என்ற கேள்விகளுக்கு  முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் காங்கிரசோடு திமுக இரண்டாவது கட்ட சீட் பேரத்தை இன்றிரவு நடத்துகிறது. ரொம்பவுமே சிலுப்பிக் கொண்டிருந்த தேதிமுக, அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது. மூன்றாவது அணி அல்லது ஒரு மாற்று ஏற்பாடுக்கு, ரிஸ்க் எடுக்க எவருமே தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தேர்தல் களம் ரெடியாகிறது!

என்ன செய்யப்போகிறீர்கள்? இன்னும் இலவசங்களில், வெற்று வாக்குறுதிகளிலேயே ஏமாந்து கொண்டிருக்கப் போகிறீர்களா?

விழித்துக் கொள்ளப் போகிறீர்களா? கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!!



1 comment:

  1. வேடிக்கையை பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!