சோனியாவுக்கு வந்த சோதனை.....!



நாற்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், காங்கிரஸ் கட்சியின் மீதான தன்னுடைய பிடியை இறுக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி தேர்தலை இந்திரா காண்டி பயன்படுத்திக் கொண்ட அதே மாதிரியான சூழ்நிலை இத்தாலிய மருமகள் சோனியாவுக்கும் இப்போது கொஞ்சம் வித்தியாசமான வகையில் ஏற்பட்டிருக்கிறது. இந்திரா, தன்னை டம்மியாக வைத்து சில மூத்த தலைவர்கள் பேக் சீட் ட்ரைவிங் செய்ய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகத்தில் கட்சியை இரண்டாக உடைக்கக் கூடத்தயங்கவில்லை. கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தனது கருப்பு ஆடு வி வி கிரியை வைத்து தோற்கடித்தார். கட்சியும் இண்டிகேட், சிண்டிகேட் என்று உடைந்தது.ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இந்திரா காண்டி செய்த அரசியல், அதனுடைய விளைவுகள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.



காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதினான்கு ஆண்டுகளில், இத்தாலிய மம்மிக்குத் தான் இன்னும் செல்லுபடியாகக் கூடிய காசுதான் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம். ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிற உன்னதமான தலைமை என்று தியாக சிகரமான இத்தாலிய மம்மிக்குப் பேர் இருந்தது!(!!) ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டில், அந்த பிம்பம் உடைபட்டுப் போய், எத்தைத் தின்றாலாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனதுதான் காங்கிரஸ் என்ற உண்மையும், தியாகசிகரத்தின் தலைமைக்கான சோதனையும் பல்லை இளித்துக் கொண்டு இப்போது முன்வந்து நிற்கிறது.

தாங்கள் சொல்வதற்குத் தலையாட்டுகிறவர்கள் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது இந்திரா காலத்தில் இருந்தே தொட்டுத் தொடரும் காங்கிரஸ் கலாசாரக் கருமாந்திரம்!ஆனால் இப்போது  அந்த கலாசாரக்  கருமாந்திரத்தை தொட்டு தொடர்வதற்குத் தேவையான எண்ணிக்கை அவர்களிடம் இல்லை. காரியம் ஆக வேண்டுமென்றால் கழுதை காலைக் கூடப் பிடிப்பதற்குக் காங்கிரஸ்காரர்கள் எப்போதுமே தயங்கியதில்லை. கருணாநிதியை சந்திக்க அந்தோணி வந்திருப்பது அந்த மாதிரித்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!


                                                                      
மம்தா மாதிரி வெளிப்படையாக எதிர்க்குரல் கொடுக்கும் நிலையில் திமுக இப்போது இல்லை. என்றாலும் கருணாநிதி திடீரென்று டெசோ புசோ என்று தமிழ் ஈழப் பிரச்சினையைக்கையில் எடுத்திருப்பதற்கும், ஜனாதிபதி தேர்தலில் திமுக எம்பிக்கள் ஆதரவைக் காங்கிரஸ் கொஞ்சம் விலை கொடுத்தாவது வாங்க வேண்டியிருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறதோ? அந்தோணி வந்தார், பேசினார், போனார் என்று ஒரு வரியில் முடிந்து விடுகிற விஷயமில்லையே இது!

இத்தாலிய மம்மிக்கு வந்திருக்கிற சோதனை, இந்திரா காண்டிக்கு வந்ததை விடக் கொஞ்சம் வித்தியாசமானது! 2014 பொதுத்தேர்தல்கள் வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை, வெடித்துக் கிளம்பிய ஒவ்வொரு ஊழலும்  கட்டாயமாக்கி இருக்கிறது. அம்மணியின் தலைமை, அதன் மீது கூட்டாளிகளுக்கு இருக்கும் நம்பிக்கை எல்லாம் சிதறுகாயாக உடைந்து போய்க் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், என்ன ஜகஜாலம் செய்தாவது, எத்தை விட்டுக் கொடுத்தாலும் சரி, காங்கிரசுக்குக் கொஞ்சம் ஒத்துப் போகிற ஒரு நபரை ஜனாதிபதியாக்கியே ஆக வேண்டும். அப்படி ஒன்று மட்டும் நிறைவேறி விட்டால், திடீர்த் தேர்தல், அதன் பின்விளைவுகள், ஊழல் குற்றத்தில் நிறையப்பேர் (அம்மணியும் உள்ளிட்டுத்தான்)  உள்ளே போக வேண்டிய அபாயம் எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளிப் போட்டுவிடலாம்! 

ஆசைகள் எல்லாம் குதிரைகளானால், இத்தாலிய மம்மி நினைப்பது கூட நடக்கலாம்!
                                                                          

இந்திய அரசியல் களத்தில் அதிக அதிகாரங்கள் இல்லாத வெறும் பெயருக்கு மட்டுமே அரசின் தலைவராக இருக்கும் ஜனாதிபதியை வருகிற ஜூலை மாதம் தேர்ந்தடுப்பதில் இத்தனை சிக்கல்களை, இத்தாலிய மம்மி சந்தித்தாக வேண்டியிருக்கிறது.கூட்டணி  தர்மங்கள் முடிந்து, கூட்டாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பங்கு சதையை, ஷைலக் மாதிரி டிமாண்ட் செய்கிற அளவுக்கு ஐமு கூட்டணி குழப்பம் பிளவு பட்டிருக்கிறது. கூட்டாளிகளைத்திருப்தி செய்வது ஒரு பக்கமிருக்க, வெளியே இருந்து வேறு நிர்பந்தங்களால் ஆதரவளிக்கிற முலாயம் சிங் யாதவ், மாயாவதி இவர்களைத் தவிர பிஜேபிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே எதை வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்கும் இடதுசாரிகள், இவர்களையும் கட்டி மேய்க்க முடியுமானால் இத்தாலிய மம்மி தான் நினைப்பதை சாதித்துக் கொள்ள முடியும்.

பிரகாஷ் காரத்தினால் கைகாட்டப்பட்டு, இப்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் முகமது ஹமித் அன்சாரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால், முலாயம் சிங் யாதவ் ஆதரவளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இடது சாரிகள் ஆதரவும் மம்தாவின் ஆதரவும் வெவ்வேறு திசைகளில் பயணிப்பவை. இடது சாரிகளின் ஆதரவிருக்கும் வேட்பாளரை மம்தா ஆதரிக்க மாட்டார்.தவிர பிஜேபி, அன்சாரி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது என்பது இன்னும் கொஞ்சம் சிக்கல்.

முலாயம் சிங் யாதவ் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைப் பொது வேட்பாளராக அறிவிக்க இருப்பதாக செய்திகள் கசிகின்றன. கலாமை மறுபடி ஜனாதிபதியாக்குவதில் காங்கிரசுக்கு இருக்கும் தர்மசங்கடம் புரிந்துகொள்ளக் கூடியதே! சோனியாவைப் பிரதமராக விடாமல் தடுத்ததில் கலாமின் பங்கு, அவ்வளவாக அறியப்படாத ஒன்று தான் என்றாலும்,தாங்கள் சொல்வதற்குத்  தலையாட்டுகிறவராக கலாம் இருக்க மாட்டார் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. கலாமை ஏற்பதில் இடதுசாரிகளுடைய தயக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!

இவர்கள் இருவரை விட்டால், அப்புறம் எல்லோருக்கும் நல்லவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி! இவர் ஒருத்தர் விஷயத்தில் மட்டும் பிஜேபி, இடதுசாரிகள் ஆதரவு இருக்குமாம் என்பது இந்திய அரசியலின் நகைமுரண்! 

இவரை ஏற்றுக் கொள்வதில் யார் தயக்கம் காட்டுகிறார்களோ இல்லையோ, காங்கிரஸ் கட்சியே அவரை முன்னிறுத்துவதில் அக்கறை எடுத்துக் கொள்ளாது! அவரது சேவை வேறு திசைகளில் தேவையாம்!!

“Ansari seems to be the potential consensus candidate, given that Pranab Mukherjee seems to have the backing of all parties except the Congress,” a senior NCP leader told The Indian Express on Wednesday.

அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், அகாலிதளத்தின் பிரகாஷ் சிங் பாதல், கரன் சிங், பாரூக் அப்துல்லா என்று வேறு பெயர்களும் அடிபடுகின்றன.

ஆனால், இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும் காங்கிரஸ் கட்சி, தான் நினைக்கும் வேட்பாளரையே தன்னிச்சையாக அறிவிக்கும் என்றும் தகவல்கள் சொல்கின்றன.அது மட்டும் உறுதியானால், சோனியா ஒரு பலப்பரீட்சைக்குத் தயாராக இருப்பது போல ஒரு சித்திரம் எழுகிறது

இத்தனைக்குப் பின்னாலும் கிழிந்து பரிதாபமாகத் தொங்கும் சோனியாவின் தலைமை, எதிர்காலம் இருக்கிறது.

5 comments:

  1. இந்தியாவில் இன்னும் எதற்காக ஜனாதிபதி தேவைப்படுகிறார்? ஜனாதிபதி பதவியை ஒழிப்பதில் யாரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை - பொதுமக்கள் உட்பட.

    ReplyDelete
  2. வாருங்கள் தேவன்!

    உங்கள் கருத்துக்கு மிகச்வும் நன்றி.இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத நினைத்தேன். இரவு நேரமாகிவிட்டபடியால், கொஞ்சம் சுருக்கமாக.

    வாருங்கள் அப்பாதுரை!

    இங்கே அரசு, நிர்வாகம், நாடாளுமன்றம் இன்ன பிறவற்றால் கூடத்தான் எந்த உபயோகமுமில்லை!! இவைகள் எல்லாம் எதற்காக என்று யாராவது கவலைப்படுகிறார்களா என்ன? :-)))))).

    ReplyDelete
  3. //இவைகள் எல்லாம் எதற்காக என்று யாராவது கவலைப்படுகிறார்களா என்ன?
    அதுவும் சரிதான். தினசரி போராட்டங்களுக்கு நடுவில் பொதுப்பார்வை யாருக்கு வரப்போகிறது!

    ReplyDelete
  4. இப்போதைய நிலையில் பிரதம மந்திரியே தேவையில்லை என்று கூடத் தோன்றுகிறது. இதை ஜோக் மாதிரிச் சொன்னாலும் இன்றைய நிலைமை அதுதான்! ஆனாலும் அப்பாதுரையின் கேள்வி எனக்கும் உண்டு!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!