Friday, November 06, 2009

சொன் ஃபில்! நல்லெண்ணங்களை விதைத்தல்!



நேற்று மாலை, வால்பையனுடைய விடுத்த அழைப்பை ஏற்றுத் தொடர்பதிவை எழுதி முடிக்க நள்ளிரவு ஆகிவிட்டது. அதற்கும் முன்னால், மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் முனைவர் நா.கண்ணன் நல்லதே எண்ணுக என்ற இழையைப் பற்றிய சிந்தனை நேற்றும் இன்றுமாக இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த சிந்தனையின் பாதிப்பு  முந்தைய பதிவில் என்னை அறியாமலேயே எதிரொலித்தது.

முனைவர் நா.கண்ணன், தென் கொரியாவில் இருக்கிறார். தமிழ்மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவர். கவனிப்பாரில்லாமல் அழிந்து வரும் மரபுச் செல்வங்களை, பழைய நூல்களை மின்னாக்கம் செய்து பாதுகாக்கும் உன்னதமான குறிக்கோளோடு செயல்பட்டு வருகிற, ஆரவாரமில்லாமல் உன்னதமான பணிகளைச் செய்துவரும் தன்னார்வலர்களின் குழுமம் இது! இதைப் பற்றி ஏற்கெனெவே  இந்தப்பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.

முனைவர் நா.கண்ணன், நல்லதே  எண்ணுக என்ற தலைப்பில் ஒரு விவாத இழையைத் தொடங்கி, இப்படி எழுதுகிறார்:

"இணையம் எனும் அவஸ்தை (reality) தோன்றிய காலத்திலிருந்து நான் கண்ட ஒன்று.மின்வெளி என்பது மனப்பரப்பே என்பது  தான். மனதில் காணும் அத்தனை காட்சிகளும் மின்கதிராய் மின்வெளியில் காணக்கிடைக்கிறது. மனப்பயிற்சி அற்றோருக்கு மின்வெளிப் பயிற்சி நல்ல வைத்தியமாகும். மின்வெளியில் நல்லது சிந்தித்தால் மானுடத்திற்கு நல்லவே விளையும்.

இதே கருத்தை முன்னிறுத்தி கொரியாவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் சொன்பில் என்பது. 

[வழக்கம் போல் ஆங்கிலத்தில் எழுதும்போது Sunfull என்று எழுதுகிறார்கள்!]  

இது பற்றிய சேதி"

நல்லதை நாடு கேட்கும்!

இப்படி ஒரு படத்தலைப்பை வைத்து எம் ஜி ஆர் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது என்று நினைவு. நாடு கேட்குமோ கேட்காதோ என்ற சந்தேகமோ என்னவோ, எம் ஜி ஆர் இந்தப் படத்தை எடுக்கவில்லை.ஆனால் 1991 இல் வெளியான திரைப்படப் பட்டியலில், இப்படி ஒரு திரைப்படம் வெளியானதாக ஒரு தகவல் இருக்கிறது. 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

இப்படித் திருவள்ளுவர் முதற்கொண்டு, எண்ணம்போல வாழ்வு என்று சித்தர்கள் நெறியும், நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்று உபநிஷதக் கருத்துக்களும் காலகாலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான்  இருக்கின்றன.

சமீபகாலத்தில், உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, எளிய முறை குண்டலினி யோகம், காயகல்பப் பயிற்சி என்று சொல்லிக் கொடுத்த வேதாத்திரி மகரிஷி, ஒருவருக்கொருவர் முகமன் கூறுவதாக, வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததும் உண்டு.

இப்படி நேர்மறையாக எண்ணவோட்டங்களை வளர்த்துக் கொள்வது, மனித வாழ்க்கையில் வெற்றிக்கு மட்டும் அல்ல, மன  நிம்மதியையும், ஒருமையையும் ஏற்படுத்துவதாக இருக்கும் என்று நார்மன் வின்சென்ட் பீல் என்ற நூலாசிரியர் தன்னுடைய     புத்தகத்தில் சொல்கிறார்.

இந்தச் சுட்டியில், புத்தகத்தின் சில பகுதிகளை இங்கேயே படிக்க முடியும்.
 
நல்லதையே நினை, நல்லதையே பார், நல்லதையே செய் என்று சொல்வது இங்கே நிறையப்பேருக்கு ஏளனமாகப் படுகிறது. எதற்கும் பயனில்லாத வெற்று உபதேசங்கள்,  நம்பிக்கை என்பதே ஒரு விதமான மூடத்தனத்தை வளர்க்கும் முயற்சி, ஏதோ ஒரு ஈயத்தின் சதி, என்றெல்லாம் பேசுகிறவர்கள், ஏளனம் செய்கிறவர்கள் இங்கே இணையத்திலும் நிறைய இருக்கிறார்கள்.

எதையெடுத்தாலும் ஒரு எதிர்மறையான சிந்தனை, அவநம்பிக்கையை வளர்ப்பது, கூட்டமாக வந்து வார்த்தைகளில் குத்தி குதறுவது, மாற்றுக் கருத்து மீது கொஞ்சம் கூட சகிப்புத்தன்மையோ, புரிந்துகொள்கிற முயற்சியோ இல்லாத ஒருவிதமான இணைய வன்முறையை, வக்கிர மனங்களில் வெறுப்பை உமிழும் போக்கை, இங்கே தமிழ்ப்பதிவுகளில் பார்க்க முடிகிற மாதிரியே, கொரியாவிலும் இங்கே இருப்பது போலவோ இன்னும் கொஞ்சம் கூடுதலாகவோ இருக்கிறது.

இணையத்தில் அதிகரித்துவரும் இத்தகைய வக்கிரமான வன்முறை நிறைய உயிர்களையும் பலி கொண்டிருக்கிறது. நிறைய சேதத்தை, தன்னம்பிக்கை இழக்கச் செய்து கொண்டிருப்பதை அங்கே இணையத்தைப் பயன் படுத்துகிறவர்கள் கவலையோடு கவனித்ததோடு நின்று விடாமல், எதிர்மறைச் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுத்து, செயல்படுத்தியும் வருகிறார்கள்.

எப்படி? தடா, பொடா சட்டங்கள் மாதிரிக் கடுமையான சட்டங்கள் மூலமாகவா, என்றால் இல்லை. 


நாளும் ஒரு நல்ல சிந்தனையை எழுதுவது, படிப்பது, இந்த செய்தியைப் பரப்புவது என்று ஒரு தன்னார்வ இயக்கமாகவே கொரியாவில் நடத்தி வருகிறார்கள்! புரட்சிகரமான மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற மகத்தான உண்மையை,  நல்ல ஒரு சிந்தனையை, எண்ணத்தை, வாழ்த்துக்களைப்  பரிமாறிக் கொள்வது  மூலமாக நல்லதொரு தொடக்கமாக ஆரம்பித்திருக்கிறார்கள்.

சொன் ஃபில் என்ற வார்த்தை சுயிம்சே என்ற இயக்கத்தின் அடிப்படையில் ஆனது. உற்சாகமூட்டுவது என்று கூட அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஒரு நல்ல பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது  பலே, பேஷ், சபாஷ், ஆஹா என்றெல்லாம் உற்சாகப் படுத்துகிற ஒலி மாதிரி, கொரிய இசையில், தாளவாத்தியக் காரர், பாடுகிறவர்களையும் ரசிகர்களையும் உற்சாகப் படுத்துகிற முறைக்கு சுயிம்சே என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 

சொன் ஃபில் இயக்கத்தைப் பற்றி ஒரு சின்ன அறிமுகத்தை இங்கே பாருங்கள்:

1. Basic Concept of Sunfull

'Sunfull' means positive comments. It also means posting encouraging comments on the vicious posts to comfort the writer of original articles. It includes good words and deeds on the Web, stemming from a good heart and soul.

The Sunfull Movement aims to increase awareness of the impact that anonymous derogatory messages have on victims, although healthy criticism is sometimes necessary. Also, it aims to increase the practice of posting positive and encouraging messages on boards to change users' approach to online communications. Positive comments include posts that are: (1) complimentary, (2) encouraging, (3) comforting, (4) thankful, (5) apologetic and (6) forgiving.

2. The Background of Sunfull Movement: Chuimsae Movement

The Sunfull Movement is a social campaign to encourage people to take a harmonious approach to each other. It emphasizes that a positive comment will make the person who wrote it even happier rather than the writer of original article. People who write positive comments for others become happier than the people who receive them. It also teaches that people who bless others are blessed. In fact, it stems from the Chuimsae Movement.

The word, Chuimsae, is derived from an expression used by drummers to encourage singers, as well as to arouse the audience in the Korean traditional form of opera called "Pansori." It is equivalent to "There you go!" or "Attaboy!" The Chuimsae Movement also stresses that people should support others rather than stand in their way. The Sunfull Movement is an online version of the Chuimsae Movement which usually focuses on field-oriented activities.

'Chuimsae' is a Korean call of encouragement, used in a Korean traditional music form called Pansori (a traditional form of opera) where it is used by the drummer to express "Ulsoo", or "Cho-ta" to encourage the singer and arouse the audience."

முழுச் செய்தியையும் படிக்க, இங்கே.

இன்னொரு செய்தி இங்கே

முனைவர் நா. கண்ணன், இன்னும் சொல்கிறார்:

"Chuimsae geneன்றெல்லாம் பேசுகிறார்கள். நம்மவர்களோ நாட்சிகள் போல் இனவாதம் பேசி, மொழிவாதம் பேசி நம்மைப் பிரித்து சீரழிக்கும் எண்ணங்களைக் கூசாமல் பரப்பிய வண்ணம் உள்ளனர். Chuimsae gene என்றால் என்ன? நல்லதை எண்ணும் மரபணு. நல்லது எனும் போது கூடும் மனோநிலை. ஒருமைப்படும் மனது. நல்லதே எண்ணும் உள்ளம்.

இது எவ்வளவு தேவை மின்தமிழ் உலகிற்கு தற்போது!

நம் மொழியில் இல்லாத சொல்லா? பக்தி இயக்கம் என்பதே இந்த Chuimsae gene  ஐ ஒளிபடச்செய்வதுதான்.செய்வோம்."

நல்லது நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு, நல்ல எண்ணங்களைப் பரிமாறத் துவங்க  ஆரம்பிப்போம்!

சினிமா நடிகர்கள், நடிகைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பது. 
அழுகையும், ஒப்பாரியும், வன்முறையும் நிறைந்த தொலைக்காட்சி மெகா சீரியல்களைத் தவிர்ப்பது, நம்மூரில் பாதிக்கு மேல் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்.

வரப்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் என்று சொல்லி வைத்தாளே அவ்வைக் கிழவி,அதை மனதில் வைத்துக் கொண்டு, முதலில் நம்மைப் பண் படுத்திக் கொள்கிற  முயற்சியில் நமக்கு நாமே என்று இறங்கினால் மீதிப் பிரச்சினைகளும் கூடக் குறைந்து விடும்.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு

என்று ‘ஊக்கம் எந்த அளவுக்கு உள்ளதோ அந்த அளவுக்கே மனிதர்களின் உயர்வும் அமைகிறது’ என்று வலியுறுத்தும் குறள் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என அறிவுறுத்தியபின் மேலும் முன்னால்சென்று  
இன்னும் தீவிரமான ஒரு படிமத்தை அளிக்கிறது 

இதைப் படிக்க  வருகிற நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நண்பர்களுடன்,  இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! நல்ல எண்ணங்களை விதைப்பதில் உங்களுடைய பங்களிப்பும் இருக்கட்டும்!  

A good deed is sweeter to the heart than a sweet in the mouth. A day spent without doing a good deed is a day without a soul.

The Mother
Sri Aurobindo Ashram, Pondicherry
(16 October 1951 )  





பத்து இல்லைன்னா பத்தாதாமே!





என்ன இது? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!


இப்படி வடிவேலு டயலாக்ல எதுனாச்சும் எடுத்துவுடாதவங்கல்லாம் பதிவுலகத்தில் பிரபலம் ஆகவே முடியாதாமே, நெசந்தான் போல இருக்கு!


இன்னைக்குக் காலையில தான் பரிசல்காரன் பதிவுல, இப்படி ஒரு பின்னூட்டம் எழுதினேன்:"பத்து இல்லைன்னா பத்தாதுன்னு ஏதோ டூத்பேஸ்ட் விளம்பரத்துல வர சின்னப்பையன் மாதிரி, எங்க பாத்தாலும் பத்து'மயமாகிடப்போகுது! "


ஊழ்வினைவந்து உறுத்தூட்டும்னு சிலப்பதிகாரத்துல இளங்கோ அடிகள் அனுபவிச்சுத் தான் சொல்லியிருக்கார்னு இப்பத்தான் தெரிஞ்சது.



தீராத பக்கங்களில் பிடித்ததும் பிடிக்காததும் ஏழு என்று , மாதவராஜ் அவரை ஒரு சங்கிலிப் பதிவில் கோர்த்து விட்டதற்கு உடன்பட்டு எழுதிய பிடித்தவர், மிகவும் பிடித்தவர் என்று பதிவில், என்னையும் கோர்த்துவிட்டிருக்கிறார்!


ரொம்பவும் முன்னெச்சரிக்கையாக, "இப்ப நான் எனது நண்பர்களை இதில் சிக்க வைக்க வேண்டும், தலைப்பை மாற்றி விட்டதால் சிரமம் இல்லாமல் எழுதுவார்கள் என நம்புகிறேன்" என்றும் சொல்லிவிட்டு


4.கிருஷ்ணமூர்த்தி ஐயா(அவரே தான்) என்று இட ஒதுக்கீடும் செய்திருக்கிறார்!


பிடிச்சது, ரொம்பப் பிடிச்சது, பிடிக்காதது, சுத்தமாகவே பிடிக்கதுன்றதெல்லாம் என்னங்க? மாறிக் கொண்டே இருக்கும் அளவுகள், அபிப்பிராயங்கள் தானே! சிறுவயதில் பிடித்த விஷயங்கள், மீசை அரும்பும் பருவத்தில் மாறிப்போகும். தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நினைத்துக் கொளும்போதோ, அதுவரை பிடித்ததெல்லாம் பிடிக்காமல் மாறிவிடக் கூடும், இல்லையா?


எனக்குப் பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்ற கேள்வியே அடிப்படையில் தவறு என்ற நிலையை அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், அது எந்த அளவுக்கு சரியாக இருக்கும், சாத்தியமானதாக இருக்கும், மாற்றத்திற்கு நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம் என்ற அம்சங்களே தீர்மானிக்கின்றன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.


பத்து இல்லைன்னா பத்தாதாமே!


வாங்க, அது என்னென்னன்னுதான் கொஞ்சம் ஒரு கை என்ன ரெண்டு கைவிரலையும் நீட்டி எண்ணிப் பாத்துடலாம்!



1.அரசியலில் ---


எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனாவை அடுத்து ஆனா, கானாவை அடுத்துக் கானா என்று அடுக்குமொழி, எதுகை மோனை, அதையும் மூக்கினால் கரகரத்த குரலில் புரியாதபடி பேசுகிற தனித்தமிழ்வாணர்கள், செய்தித்தாளைப் புரட்டினால் கன்னித்தீவு கார்டூன் கதையைப் படிக்காமல் எப்படி இருக்க முடியாதோ, அந்த மாதிரித் தவிர்க்க முடியாதவர்களாகிப் போனார்கள்! அத்தனை உணர்ச்சி வெள்ளம்! முதிர்ச்சி இல்லாத இளம்பருவத்தில் பிடித்த அவஸ்தைகள் அவை!


எந்த வெள்ளமாக இருந்தால் தான் என்ன? வடிந்துதானே ஆக வேண்டும்?


வெள்ளிமூக்கு முளைத்தபிறகு, இது குதிரையல்ல, கழுதைதான் என்று தெரிந்து கொள்கிற நேரம் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறிய இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே வந்தபோது பிடிக்காமல் போனதும் இயற்கைதானே!


ஒரு நல்ல மாற்றாக உருவாகும் என்று நம்பி இணைந்த இடது சாரி இயக்கங்களுமே கூட, இந்த நச்சுச் சூழலில் நீர்த்துப் போனதையும் ஒரு ஓரத்தில் முனகலாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.


2.எழுத்தாளர்களில்---


என்னிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம், இது தான் என்று எல்லைகட்டிக் கொண்டு படிக்காமல், என் கைக்குக் கிடைக்கிற அத்தனை தலைப்புக்களிலும், எழுத்துக்களையும் படிப்பது ஒன்றுதான்! இருக்கிற ஒரே ஒரு நல்ல விஷயத்தையும், இப்படி சமயம் கிடைக்கும்போது தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி?


தமிழில் ஒவ்வொரு எழுத்தாளருமே, அவரவர்க்குக் கிடைத்த தளங்களில் முடிந்த வரை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்று ஒருவர் ஆங்கிலத்தில் துப்பறியும் சாகசங்கள் மாதிரித் தமிழிலும், தமிழர்கள் படித்து உய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த நாட்களில், லோகலைஸ் பண்ணி, உல்டா அடித்துக் கதைகள் எழுதியிருக்கிறார். லோகல் லைப்ரரியில் அவருடைய புத்தகங்களையுமே, கிடைத்தவரை படித்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா?


கல்கி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஆர்வி, பிவிஆர், பி எஸ் ராமையா, என்று என்னுடைய விருப்பப் பட்டியலில் அனேகமாக அத்தனை எழுத்தாளர்களுமே இருக்கிறார்கள்! சுஜாதாவை விட்டு விட முடியுமா? பாலகுமாரன், சீக்கிரமே அலுத்துப்போனார் என்றாலும் பட்டியலில் இருப்பவர் தான்!


பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான். நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்த புத்தகம், தி ஃபீவர், இப்போது நினைத்தால் கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை வெறுப்பேற்றுகிற புத்தகம் அது!


3.கவிதைகள், கவிஞர்கள்--


1980 ஆம் வருடங்களில் எங்களுக்குப் புதுவிதமான பைத்தியம் ஒன்று பிடித்திருந்தது. புதுக்கவிதை! மு.மேத்தா, வைரமுத்து, மீரா, இன்னும் நிறையப்பேர், புதிது புதிதாக புதிய வடிவங்களில் கவிதையாக கருத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள்! கணையாழி மாதிரி சிற்றிதழ்களுக்கு வாசகனாக்கி  வைத்த வேகம் கொண்ட மோகம் அது!தவமிருந்து படித்த பொற்காலங்கள் அவை! புதுக்கவிதைகளின் தோற்றமும் வரலாறும் என்று வல்லிக்கண்ணன் எழுதிய புத்தகத்தை எத்தனை முறை படித்து, நாங்களும் எப்படிப் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தோம் என்று இப்போது வர்ணிப்பது கொஞ்சம் ஓவர்!


ஒரு வாக்கியத்தில் இருக்கும் எட்டு அல்லது பத்து சொற்களை ஐந்து அல்லது ஏழு வரிகளில் உடைத்துப் போடுவதுதான் கவிதை என்றாகிப்போன பிறகு, இன்னமும் பிடித்திருக்கிறது என்று சொன்னால், பிடித்திருப்பது கவிதை அல்ல-பைத்தியம்!


4.பிடித்த நடிகர், நடிகை--


என்னிடம் இருக்கும் இன்னொரு நல்ல பழக்கம்,ஒரு திரைப்படம் பிடித்திருக்கிறது என்று தோன்றினால், அதை இரண்டாவது, மூன்றாவது தடவை பார்ப்பது மட்டும் தான்! சினிமா நடிகன், நடிகைக்கு எல்லாம் இதயத்திலோ, தெரு ஓரத்திலோ கோவில் கட்டுகிற அளவுக்குப் போய் விடுவதில்லை. அப்படிப்பட்ட முற்றிப்போன கேஸ்களைப் பக்கத்திலேயே அண்ட விடுவதில்லை.


தொழில் மட்டுமே நடிப்பு, நிஜ வாழ்க்கையிலும் அல்ல என்றிருப்பவர்களைப் பிடிக்கும்.. அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?!


5.செய்தித்தாட்கள், வார இதழ்கள்--


ஹிந்து, இன்றைக்கு என் பார்வையில் நம்பகத்தன்மை மிகவுமே குறைந்து போனாலும், பழக்கமாகி விட்ட படியால், சிறுவயதில் இருந்தே தொடர்ந்து படித்து வரும் நாளிதழ். தினமணியும், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழ்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த காலம் இருந்தது. இப்போது இல்லை.எகனாமிக் டைம்ஸ், தொழில் ரீதியாகப் படிக்க ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாளிதழ்.


அபத்தக் களஞ்சியம் ஆனாலும் சிறு வயதில் இருந்தே வீடுகளில் தவறாமல் வாசிக்கப்படும் பத்திரிகையான குமுதம் ஒருகாலத்தில் நான் விரும்பிப்படித்த பத்திரிகையாக இருந்தது, படிப்பதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகி விட்டன. அதே மாதிரி, ஆனந்த விகடன், கல்கி ஜூவி, என்று ஏராளமான இதழ்கள், இப்போது எதுவுமே என்னுடைய வாசிக்கும் பட்டியலில் இல்லை. நிம்மதியாக இருக்கிறது!


6.இசையமைப்பாளர்


இளைய ராஜா தான்! ரஹ்மான், ஹாரிஸ் என்று எவரெவரோ வந்தாலும் ராஜா ராஜா தான்! அவருக்கு முன்னால் ஜி.ராமநாதனைப் பிடிக்கும், எம் எஸ் விஸ்வநாதனைப் பிடிக்கும், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார் வேதா அவரையும் பிடிக்கும் !


7.திரைப்படப்பாடகர், பாடகி--


டி எம் எஸ் சுசீலா, பி பி ஸ்ரீநிவாஸ், ஜானகி, சந்திரபாபு, அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன், முஹம்மத் ரஃபி, கிஷோர் குமார், முகேஷ் என்று அன்றும் இன்றுமாக இன்னும் நீளமான பட்டியல் இருக்கிறது. எஸ் பி பாலசுப்ரமணியம் இவர்களில் தனித்து உயரமான இடத்தில் இருக்கிறார்!


8.தலைவர்கள்---


சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மகாத்மா காந்தி இருந்தார். வல்லபாய் படேல், லால் பஹதூர் சாஸ்திரி என்று உறுதியோடு செயல்படத் தெரிந்த தலைவர்கள் ஒரு பக்கம், இருபத்துநான்கு காரட் தங்கம் என்று இவர்களைச் சொல்ல முடிந்தால், இருபத்திரண்டு, இருபது, பதினெட்டு, பதினான்கு எனக் கொஞ்சம் கம்மியான தங்கங்களாக வேறு பலரும் இருந்தார்கள்.


இப்போதோ காக்கைப் பொன்னே எவ்வளவு பீற்றிக் கொள்கிறது!?


9.வலைக்குழுமங்கள்--


கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வலைக் குழுமங்களில் நான் இருந்திருக்கிறேன். வலைக் குழுமங்களில் ஒரு நல்ல கருத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரு வலைக் குழுமம் மின்தமிழ். தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கமாக வெளிவரும் இந்தக் குழுமத்தைப் பற்றி என்னுடைய பல பதிவுகளில் தொட்டுப் பேசியிருக்கிறேன்,


ஒரு தனி வலைப்பதிவராக, நம்மால் ஒரு எல்லைக்குட்பட்டுத் தான் செயல்பட முடியும், அதுவே ஒரு குழுவாக என்றால், நிஜமாகவே பல நல்ல விஷயங்களை நடத்திக் காட்ட முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மின்தமிழ் வலைக்குழுமம் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் இரண்டு வலைக் குழுமங்கள், இடது பக்கம் கூகிள் க்ரூப்ஸ் என்று இருக்கும் பகுதியிலேயே தொடர்புக்கான சுட்டி இருக்கிறது.




10..பதிவர்கள், பதிவுகள்--


தமிழில் கிட்டத்தட்ட நூறுக்கும் மேலான பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் கொஞ்சம் கம்மி தான், முப்பது! இது தவிர சில வலைக் குழுமங்கள், வலைத்தளங்கள் என்று ஒரு பரந்த வாசிப்பு இருக்கும் ஒரு வாசகனாக மட்டுமே என்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.


இதில் பிடித்த, அல்லது பிடிக்காதவை என்பது சொல்லப்படும் உள்ளடக்கத்தை வைத்து மட்டுமே வைத்து முடிவு செய்கிறேன். முனைவர் நா.கண்ணன் சொல்வது போல இங்கே நீங்களும் நானும் உரையாடிக் கொண்டிருப்பது ஒரு மின் வெளியில், மின்னெழுத்துக்களால் ஆன ஒரு உண்மைபோலத் தோன்றும் ஒரு மாயக் கண்ணாடி முன்னால் என்பதை நினைவு வைத்துக் கொண்டோமேயானால், இங்கே வெளிப்படுவது நம்முடைய சொந்த மன விகாரங்கள் தான் என்பது தெரியும்.


இதையும் கடந்து போக வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.


வால்பையன் திரு அருண் அழைப்புக்கு இது என்னுடைய பதில்! ஆர்வத்தோடு விவாதக்களங்களில் பங்கு கொள்ளும் துடிப்பான இளைஞருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதை!


வேறு எவரையும் சங்கிலியில் பிணைப்பதற்கு எனக்குத் தோன்றவில்லை!