Showing posts with label கொங்குநாடு. Show all posts
Showing posts with label கொங்குநாடு. Show all posts

இட்லி வடை பொங்கல்! #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும்!

இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறது.


தமிழ்நாட்டை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் ஜெய் ஹிந்த் சர்ச்சைப்புகழ் ஈஸ்வரன் கூட மாநிலத்தை மூன்றாகப் பிரிப்பது நல்லதுதான் என்று முன்பு பேசிய வீடியோ உலா வந்துகொண்டிருக்கிறது. 2015 ஆகஸ்ட் 17 தேதியிட்ட தினமலர் நாளிதழில் ஈஸ்வரன் அப்படிப் பேசிய  செய்தி வெளியாகி இருக்கிறது. 


இந்த 21 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த விஷயத்தை விரிவாக விளக்கியிருக்கிறார். என்னமோ ஸ்டாலின் அரசுக்கு விளையாட்டு காட்டத்தான் மத்திய அரசு தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்குகிறது என்பதெல்லாம் அதீத அலட்டல்.


ஊப்பீஸ் எதற்காகக் கதறுகிறார்கள் என்பது எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் விமரிசகர் ஸ்ரீராம் சேஷாத்ரி  முகநூலில் இப்படி எழுதுகிறார்:

திரு. முருகன் பதவி ஏற்கும்போது, அவர் biodata வில் கொங்குநாடு என்று இருந்தது. இன்று தினமலர் நாளிதழில் கொங்குநாடு பற்றிய headline வந்துள்ளது. பலர் என்னிடம் உங்கள் அபிப்ராயம் என்ன, இது நடக்குமா, அப்படி நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கேட்டனர். என் புரிதலை பகிர்கிறேன்.

முதலில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என்பது பல காலமாக எழும் கோரிக்கை, அதுவும் பாட்டாளி மக்கள் கட்சி வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமே. எப்படியாவது ஒரு மாநிலம் தங்கள் ஆட்சியின் கீழ் வராதா என்ற எண்ணம் மட்டுமே.

தென் தமிழ்நாடு, பொருளாதார ரீதியில் கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு வளரவில்லை, முக்கியமாக தொழில்சாலைகள், உள்கட்டுக்குமானம் போன்றவை கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு தென் தமிழ்நாட்டில் இல்லை. திருச்சிக்கு தெற்கே கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களில் இருந்த பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில் நசிந்து பல வருடங்கள் ஆகிறது, அதனை விரிவாக்க முயற்சி எந்த அரசாங்கமும் எடுக்கவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டத்தில் இருந்து தொழில்சாலைகளும் ஒன்று மூடப்பட்டன (sterlite ஒரு உதாரணம்) அல்லது புது தொழில்சாலை அல்லது சரக்கு துறைமுகம் வருவதை கிறிஸ்துவ மிஷனரிகள் தடுத்து வருகின்றன. 

இப்படி இருக்கையில், திமுக இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாகும் முயற்சியில் ஒன்றிய அரசு, ஜெய் ஹிந்து போன்ற சட்டசபை நிகழ்வுகளில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருகின்றன.

பாஜக அவர்களுக்கு வலுவான கொங்கு மண்டலத்தை மேலும்  ஸ்திரப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக, முருகன் அவர்களை மத்திய மந்திரியாகி, அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு பாஜகவின் தலைவராக்கி, மேலும் வானதி ஸ்ரீனிவாசன் அவர்களை முக்கியப்படுத்தி வருகிறது.இப்போது கொங்குநாடு என்ற முழக்கம் அரசியலாக இருந்தாலும், இந்த விதையை விதைப்பது கண்டிப்பாக பல விளைவுகளை ஏற்படுத்தும்

1. தமிழ்நாட்டில் நிர்வாகம் தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படும், இப்படி ஒரு பகுதி அதுவும் 40% மேல் வருவாய் கொடுக்கும் பகுதி பிரிந்தால், தமிழ்நாடு, முன்னேற தென் தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்து முனையவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

2. அரசியல் ரீதியாக கொங்கு மண்டலத்தில் திமுக வலுவாக இல்லாததனால், அங்கு அதிமுக பாஜக நேரடியாக அரசியல் செல்வாக்கு உள்ள கட்சியாக மாறும்

3. பிற மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டில், திமுக அதிமுக மட்டுமே வலுவான நிலை ஏற்படும்.

4. நிர்வாக ரீதியாக, சிறிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் சுலபமாக இருக்கும்

இந்த பிரிவு அரசியல் சட்டம் சார்ந்து, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால் உடனே நிகழுமா என்றால் மத்திய அரசாங்கம் முனைதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியும்.

இப்போது நமக்கு தெரியவேண்டிய ஒன்று, பாஜக இதனை திமுகவின் ஒன்றிய அரசின் கோஷத்துக்கு எதிர்வினையாக எடுத்துள்ளதா அல்லது நிஜமாகவே முயல்கிறதா என்பதுதான்.ஆனால் திமுக மத்திய அரசை சிறுமை படுத்துவதாக எண்ணி, ஒன்றிய அரசு என்று கிளப்பிவிட்டு, இந்த மாநில சீரமைப்புக்கு வழி வகுத்து விட்டதா என்றும் யோசிக்கவைத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே திமுகவினர் ஒன்றிய அரசு என்பதை சொல்ல முயலவில்லை கவனிக்கத்தக்கது 

ஒரு தெளிவான புரிதல் என்றே எனக்குப்படுகிறது. எது எப்படியானாலும், திமுகவின் வாய்ச்சவடாலில் கூட ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பதில் மகிழ்ச்சி.

மீண்டும் சந்திப்போம்.